அதிக ஆய்வு வேண்டியதில்லை - தன்னிச்சையாக வாழுங்கள்.

செவ்வாய்கிழமை, 16 பெப்ரவரி, 2016,

பெங்களூரு -  இந்தியா


 சில சமயங்களில் விஷயங்களை என்னுடைய கடந்த கால அனுபவங்களின்  அடிப்படையில் நிறம் மாறி காண்கின்றேன். எவ்வாறு நடுநிலையில் இருப்பது?

 நான் நடுநிலையில் இல்லை என்று உணரும் தருணத்திலேயே நீங்கள் அதிலிருந்து வெளி வந்து விடுகிறீர்கள். இந்தக் க்ஷணத்தில் நீங்கள் களங்கமற்றவர். நடந்தவற்றிலிருந்து வெளியேறிவிட்டீர்கள்.

மிக அதிகமாக எதையும் ஆராய்ந்து கொண்டிருக்கக் கூடாது. ஒரு வேலை உங்களுக்கு அதிகமான அளவு ஒய்வு நேரம் இருக்கின்றது போலும் !  நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகப் பணி செய்து கொண்டிருந்தால் இவ்வாறெல்லாம் ஆய்வு செய்ய நேரம் ஏது? செயல் தன்னிச்சையானது. சில சமயங்களில் நீங்கள் தவறான செயல்களைப் புரிந்து, அதன் பயன்களை அனுபவித்து பின்னர் முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றீர்கள் அல்லவா?

குருதேவ், எவ்வாறு பக்தியுடன் பணி புரிவது? ஓர் குறிப்பிட்ட பயனை விரும்பி நான் செயல்படுவதாக எண்ணுகிறேன். எவ்வாறு இதை மாற்றிக் கொள்வது?

நீங்கள் பக்தி / முழு ஈடுபாட்டுடன் செயல் புரிவதாகவே கருதிக் கொள்ளுங்கள். ‘கட்டாயம்’ ‘ வேண்டும்’ என்னும் சொற்களையெல்லாம் அப்புறப் படுத்துங்கள். இயல்பாக  இருங்கள்.
நீங்கள் ஏற்கனவே இப்பாதையில் இருக்கின்றீர்கள். இப்பாதையில் முழு ஈடுபாடு என்பது ஆழமாகப் பதிந்திருக்கின்றது. அன்பு உங்கள் ஸ்வபாவம். அதிலிருந்து ஒரு போதும் நீங்கள் வெளியேற முடியாது. பக்தி என்பது மேன்மையான அன்பு அல்லது அதன் உண்மையான வடிவில் உங்களுக்குள்ளேயே இருக்கின்றது. அது இல்லையென்று எண்ணினாலோ அல்லது அடைய வேண்டும் என்று நினைத்தாலோ அது நடக்கப் போவதில்லை. அனாவசியமாக உங்களை நீங்கள் சிரமப் படுத்திக் கொள்கின்றீர்கள். அது ஏற்கனவே இருக்கின்றது ! உங்கள் இல்லத்திற்குள்ளேயே இருந்து கொண்டு நான் என் இல்லத்திற்குச் செல்ல விரும்புகிறேன் என்று கூறுவது போன்றதாகும். அன்பானவரே ! விழித்தெழுங்கள் ! நீங்கள் பிரமையில் இருக்கிறீர்கள். உங்கள் வீட்டிலேயே தான் இருக்கின்றீர்கள். இளைப்பாறுங்கள் !

வேதங்களின் சாரம் என்ன?

படைப்பின் சாரமே வேதங்கள். படைப்பிலுள்ள - நிகழ்காலம், கடந்த காலம், வருங்காலம் அனைத்தும் விதை வடிவில் வேதங்களில் உள்ளன. சாரத்தின் சாரம் என்ன என்று கேட்டு விடாதீர்கள் ! வேதங்களே சாரம் என்றுதான் அழைக்கப் படுகின்றன. "சாரவத் விஸ்வதோ முகம்" அதாவது வேதங்கள்  பன்முகத் தன்மையுடையவை. பல்வேறு பரிணாமங்கள் கொண்டவை , இருப்பின் சாரம்.

குருதேவ், இன்று அறிவியலில் புவியீர்ப்பும் ஓர் அலையே என்று கண்டுபிடித்துள்ளனர். புவியீர்ப்பு மற்றும் பருப்பொருள் பற்றி வேதங்கள் என்ன கூறுகின்றன?
பருப்பொருளும் ஆற்றலும் ஒன்றேயாகும். பருப்பொருள் கண்ணுக்குத் தெரிவது, அது ஆற்றலிருந்து வேறுபட்டதல்ல. பருப்பொருள் ஓர் மாயை, ஆற்றலே உண்மையானது என்று வேதங்கள் கூறுகின்றன. ஏதேனும் உண்மையானது என்றால் அது ஆற்றலே. பிரம்மனே ஆற்றல். உலகம் அதன் உருவம். பொருளின் பெயரும் உருவமும் தாற்காலிகமானவை. நிலைபேறுடையது ஆற்றலே.

ஜோதிஷ சாஸ்திரத்தில் நவகிரகங்கள்   என்னும் ஒன்பது கிரகங்கள் பற்றிக் கூறப் படுகின்றன. அறிவியல் கூற்றுப் படி ஒன்பதுக்கும் மேற்ப்பட்ட கிரகங்கள் உள்ளன. மேலும் ஏன்  சூரியன் மற்றும் சந்திரன் கிரகங்கள் என்று அழைக்கப் படுகின்றன? இது அறிவியல் பூர்வமானதா?

சூரியன் மற்றும் சந்திரன் நிச்சயமாக பூமியைப் பாதிக்கின்றன. சந்திரன் சூரியனின் ஒளியையே பிரதிபலித்தாலும் அதன் ஆற்றல் நீர் மற்றும் மனம் இவற்றைப் பாதிக்கின்றது. இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது. ஒருவருக்குப் பித்துப் பிடிக்கும் போது ஆங்கிலத்தில் லூனடிக் என்று அழைக்கப்படுகிறார். - ( லூனார் என்னும் ஆங்கிலச் சொல் சந்திரனைக் குறிக்கும் ). அது போன்று பல ஆற்றல்கள் செயல்படுகின்றன. படைப்பு முழுவதும் நுண்ணுயிர் தொடர்புடையது. பருவநிலை கிரகங்கள்  இணைப்பு என்று மட்டுமே எண்ண  வேண்டாம்.   அண்ட ஆற்றல் எங்காவது மற்றும் எப்படியோ இந்த கிரகங்களுடன் தொடர்பானது  என்று ஜோதிஷ சாஸ்திரம் விவாதிக்கிறது.

படைப்பும் நுண்ணியலும் ஒன்றோடொன்று இணைந்தவை. உதாரணமாக உயிரோட்ட ஆற்றல் பறவைகள், கிரகங்கள், தானியங்கள், மற்றும் மனித உடலின் சில பகுதிகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. உதாரணமாக சனியின் ஆற்றல் காகத்துடன் இணைந்தது. காகத்தின் அதிர்வு, சனி கிரகம், எள் விதை, மனித  உடலில் பற்கள்  இவையனைத்தும் இணைந்தவையாகும். ஏராளமான ஆய்வுகள் இதைப் பற்றிச் செய்யப் பட்டிருக்கின்றன. வருங்காலத்திலும் மக்கள் ஆய்வு செய்ய வரவேற்கப் படுகின்றனர்.
அது போன்றே ஆடு, செவ்வாய் கிரகம், கொண்டைக் கடலை ஆகியவை தொடர்புடையவை. கல்லீரலும் கொண்டைக் கடலையும் தொடர்புடையவை என்பதை  நாம் அறிவோம். மயிர், நகங்கள், பற்கள் ஆகியவற்றுக்கு எள்  நிச்சயம் உதவும் . உதாரணமாக ஆயுர்வேதத்தின் படி, சிறிது நல்லெண்ணையைக் கொப்பளித்தால் வாய்ப்புண், பயோரியா போன்ற பிரச்சினைகள் தீரும்.

பண்டைய கால மக்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். அக்காலத்தில் ஆழ்ந்த ஆய்வு செய்யப் பட்டு, அல்லது உள்ளுணர்வால் அறியப் பட்டவை. இவை தற்கால அறிவியல் நிபுணர்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. நிரூபிக்கப் பட வேண்டும் இல்லையெனில் மறுக்கப் படவேண்டும். தவறு என்றால் அதை மறுத்து நிரூபிக்க வேண்டும். சரியென்று கருதினால் அதையும் நிரூபித்துக் காட்ட வேண்டும் ! மயிர், நகம் மற்றும் பற்கள் இவையெல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பது மிக சுவாரஸ்யமான விஷயம் அல்லவா? உண்மையில் எல்லாமே எல்லாவற்றுடன் தொடர்புடையவை. சில அதிக நேரிடையாக தொடர்புள்ளவை.

சில குறிப்பிட்ட மூலிகைகள் உடலின் குறிப்பிட்ட பகுதிகளுக்குப் பயன் தரும். ஆயுர்வேத மெட்டீரியா மெடிக்கா என்பது  கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வேதங்களில் காணப்படுகின்றன. உலகிலேயே கவிதை வடிவிலுள்ள ஒரே மெட்டீரியா மெடிக்கா இதுவேயாகும். எனவே, வைத்தியர்கள் ஆயுர்வேத மருத்துவர்கள் ஆகியோர் எளிதாக மனப்பாடம் செய்து உடல் உறுப்புக்களையும் அவற்றின் தாக்கத்தையும் பற்றி அறிந்தனர். இந்தப் பாடல்களைக்  கேட்பது மிக அற்புதமாக உள்ளது. எவ்வாறு அவை கவிதையாக எழுதப் பட்டன என்பதும் அதிசயிக்கத் தக்கதே. இந்தக் கவிதைகள் புலப்படாத மெய்யுணர்வின் ஓரத்திலிருந்து ஆழமாக வெளிப் பட்டவையாகும். ஆகையால்தான் இது உள்ளுணர்விலிருந்து தோன்றிய ஞானமாகக்  கூறப் படுகிறது. உள்ளுணர்விலிருந்து தோன்றுவது சரியாகவே இருக்கும்.

குருதேவ் இன்று தொழில் என்பது மிகச் சிக்கலானதாக உள்ளது. ஓர் அலுவலகத்தில் எடுக்கப்படும் முடிவுகளால் ஏன்  தங்கள் செலாவணிப் பணத்தின்  மதிப்பு வீழ்ந்து விட்டது என்பது கூடத் தெரியாத பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு பாதிக்கப் படுகிறது. இந்த அமைப்பிலிருந்து விலகி சுதந்திரமாக இருப்பது எப்படி?

உண்மையில் அது சாத்தியமில்லை. அனைத்துமே செலாவணிப் பணத்துடன் தொடர்பு கொண்டது. அல்லவா? நீங்கள் ஓர் விவசாயியாக இருந்து, உங்களது உணவு தானியங்களை நீங்களே விளைவித்துக் கொண்டாலும், உரம் வாங்க, மற்றும் தானியங்களை விற்க என அனைத்திற்கும் நீங்கள் நாணய முறையைச் சார்ந்திருக்க நேரிடும்.

உலகப் பொருளாதாரத்தினை மேலாண்மை செய்பவர்கள் சற்றுக் கருணையுடன் இருக்க வேண்டும் என்றே நான் கூறுவேன். அவர்கள் தங்களுடைய பணவசதியை மட்டுமே கவனித்துக் கொண்டு பூமியிலுள்ள மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் கழுத்தறுக்கும் தொழிலதிபர்களாக இருக்கக் கூடாது. அவர்கள் உலகப் பொருளாதாரத்தில் விளையாடுவது வேதனைக்குரியது. நல்லவர்களும் இருக்கிறார்கள், ஆனால் பலர் நேர்மையற்று சுய நல நோக்கத்துடன் பூமியின் மக்களை மிகவும் பாதிக்கின்றனர்.

குருதேவ், சரணாகதியில் பொறுப்புத் துறப்பு உள்ளது போலத் தோன்றுகிறது. அது உண்மையா?

இல்லை ! இரண்டும் இணைந்து செல்ல வேண்டும். சரணாகதியடைந்து, பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அல்லது பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு சரணாகதியடைந்து விட வேண்டும். எவ்வாறு? தொலைக்காட்சி பார்க்கும் போது ஒரே நேரத்தில் காட்சியைக் கண்டு கொண்டே கேட்பது போன்று .சரணாகதியடைந்த பின்னர் முழுப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளுங்கள். பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, உங்களை விட மிகப் பெரிய ஒன்று உள்ளது என்பதையுணர்ந்து அதற்கு சரணடைந்து விடுங்கள். உங்கள் பொறுப்பை நிறைவேற்ற தேவையான ஆற்றல் அனைத்தையும் அளிக்கும்படிப் பிரார்த்தனை செய்யுங்கள்.

பொறுப்பு மற்றும் சரணடைதல் ; நோக்கம் மற்றும் சரணடைதல் இவை ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டதல்ல. உண்மையில் இரண்டும் சேர்ந்தே செல்லும். சங்கல்பமின்றி சரணடைய முடியாது.  சரணடையாமல் சங்கல்பம் (நோக்கம்)முழுமையற்றே இருக்கும்.

குருவிடம் சீடனுக்கு எதிர்பார்ப்பு இருந்தால் அவை என்னவாக இருக்க வேண்டும்? குருவிற்கு சீடனிடம் எதிர்பார்ப்பு இருந்தால், அவை என்னவாக இருக்கும்?

அந்தக் கணக்கை நீங்களே போட்டுப் பாருங்கள்!. சிரத்தையுடன், உறுதியுடன் சரணடைந்து ஞானத்தை வேண்டுங்கள். உண்மையில் குருவிற்கு எதிர்பார்ப்பு எதுவுமிருக்காது. உதாரணமாக ஓர் பள்ளியின் முதல்வர் மாணவர்கள் பல நிலைகளில் - நர்சரி, முதல், இரண்டாம், அல்லது மூன்றாம் வகுப்புக்களில் உள்ளனர் என்பதை அறிவார். அவரிடம், இந்தக் குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டால் என்ன கூறுவார்? அவர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு வகுப்புக்கு வர வேண்டும். சிரத்தையுடன் படிக்க வேண்டும் என்றே கூறுவார் அல்லவா? நிச்சயமாக முதல் வகுப்பு குழந்தை ஐந்தாம் வகுப்பு கவிதையினை மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டும் என்று கூற மாட்டார். நீங்கள் இங்கிருக்கின்றீர்கள் அல்லவா? இங்கிருப்பது, பணி புரிவதற்காகவே.