விழித்தெழுந்து நிகழ் தருணத்தில் இருங்கள்

வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2016,


 பெங்களூரு, இந்தியா

அர்ஜுனன், நடுங்கிக்  குலுங்கிக் கொண்டிருந்தான். ஸ்ரீ கிருஷ்ணர் புன்முறுவலுடன், " ஞான ஒளி பெற்ற சிறந்த அறிவாளியைப் போன்று பேசு.  உன்னைப் பற்றியே நீ வெட்கப்பட வேண்டிய  உன்னுடைய நிலையினைப் பார். சற்றும் துன்பம் அடையத் தேவையில்லாத ஒன்றைப் பற்றி நீ துன்புற்றுக் கொண்டிருக்கின்றாய். உன்னுடைய  துன்ப நிலை  ஞானத்தைச்  சுட்டிக்  காட்டவில்லை.  இப்போது இங்கே இரு " என்று கூறினார். ஏசுநாதரும் இதையே " எனக்கு முன்னர் வந்தவர்களெல்லாம் கொள்ளைக்காரர்கள், திருடர்கள் என்று கூறினார். இவ்வாறு கூறியதில்   அவர் சுட்டிக்காட்டிய பொருள் என்ன? முன்னர் வந்த வர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள் அல்லது திருடர்கள் என்பதில்லை. அவர்கள் மக்கள்  மனதைத் திருடி விட்டனர் என்றே பொருள். அதனால் மக்கள் நிகழ் தருணத்தில் இருக்கவில்லை. மனம் கடந்த காலத்திலேயே கட்டுண்டு கிடக்கின்றது. இந்த க்ஷணத்தில் இருங்கள். இயேசு " நீங்கள் இப்பொழுது இங்கில்லாத மோசஸையும் மற்றவர்களையுமே  எண்ணிகொண்டு  அவர்களையே  புகழ்ந்து கொண்டிருக் கிறீர்கள். பின்னால் எப்போதோ வரப்போகும் தேவதூதனை எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். அவர்களது  தீர்க்க தரிசனத்தை  நிறைவேற்றவே  நான் வந்திருக்கின்றேன்" என்று கூறினார். விழித்தெழுந்து  நிகழ் தருணத்தில் இருங்கள்.

நமது இருப்பு மீழ் சுற்றானதா? எப்போதுமே இருளிலிருந்து  ஒளிக்கும், ஒளியிலிருந்து இருளுக்கும் சென்று கொண்டிருப்போமா?

ஆம். பிறப்பு இறப்பு எனும் மீழ் சுழற்ச்சியில்  அதுவே  நிகழும். பின்னர் அதனைத் தாண்டி விடக்கூடும். அதுவே  விடுதலை(முக்தி).  வெளியே ஓடி விட்டபின்னர்  அது விளையாட்டுத்தான்.  அது ஓர் தீவிரப் பிரச்சினை கிடையாது. ஓர் விளையாட்டு தான், உங்களுடைய சொந்த விளையாட்டு.

ஓர் பெரும் பிரச்சினை மற்றும் போர் என்று கருதப்படுவது ஞானம் பெற்ற பின்னர் ஓர் விளையாட்டாகவே தோன்றுகிறது. எதனாலும் உங்களுடைய நிறைவைக் குறைக்க முடியாது, ஏனெனில் மண்ணில் சிறிது விளையாடுவது உங்களை மிக அழுக்காக்கி விடாது அதனைக் கழுவிக் குளித்து களைந்து விடலாம் என்பதை  நீங்கள் அறிவீர்கள். ஈரமாவதற்கு  யாருமே துன்புறமாட்டார்கள். உங்கள் கால்களை நீரில் அமிழ்த்தினால் "ஒ! என் பாதங்கள் நனைந்து விட்டனவே!" என்று பதற மாட்டீர்கள். நீரிலிருந்து பாதங்களை வெளியே எடுத்து விட்டால் உடனேயே அவை காய்ந்து  விடும்.ஆனால்  இந்த முதிர்ச்சியை அடைவதற்கு சிறிது  காலம் எடுக்கும்.

வேதங்களில் சோம ரசம் ஏற்படுத்தும்  போதையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றது. போதை ஞான ஒளியிலிருந்து வேறுபட்டதா?

ஆம். சோ ரசம் என்பது  ஆழத்தில்  ஒரு மாறுபட்ட நிலையை உருவாக்குகிறது,  அது உங்களைப் பேரின்பத்தில் ஆழ்த்துகிறது. அவ்வளவு தான்.  இதற்கு மேல் கூற எதுவுமில்லை.

என் வாழ்க்கையில் அனைத்து பரப்புக்களிலும்  அஷ்ட வக்கிர கீதை ஓர் பெரும் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. நமது மெய்யுணர்வில் எந்த நிலை இத்தகைய ஞான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது?

எனக்குத் தெரியாது. அது பல நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது  என்பது  உறுதி. தூங்குவதற்கு முன்னர் கூட நீங்கள்  ஞானச்  செய்தி ஒன்றினைக் கேட்டுக்கொண்டே தூங்கலாம்.  தூக்கத்தில் கூட மெய்யுணர்வில் ஏதோ ஓர் நிலையில் அது உட்கிரகிக்கப் படுகின்றது.

யோக வசிஷ்டா கூட மிக அழகானது.அதையும் நீங்கள் கேட்க வேண்டும். இறைவன், வாழ்க்கை மற்றும் மெய்யுணர்வு பற்றிய கோட்பாடுகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு உண்மை என்பது பரந்த வான்வெளியினைப் போன்று உங்களில் மலரும். இறைவனுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, சாத்தான் இவை பற்றியெல்லாம் பேசும் அறிஞர்கள் மற்றும் சமய வல்லுனர்கள் ஆகியோர் அனைவரும் யோக வசிஷ்டாவினைக் கவனமாகக் கேட்டறிய வேண்டும். உலகெங்கும் இருக்கும் விஞ்ஞானிகள் இந்த இறை ஞானத்தினை மிகவும்  விரும்புவர். இது யாராலும் மறுக்க முடியாத ஒன்று ஆகும். இந்த மெய்ஞானப் பரப்பில் நீங்களும் ஓர் அங்கமாவீர்கள். நீங்கள் கடவுளின் ஓர் அங்கமாகி  அதிலிருந்து  தப்ப முடியாத நிலை ஏற்படும்.

ஆசை,  புத்தி மற்றும் ஈகோ ஆகிவையே தெளிவற்ற நிலையை ஏற்படுத்துகின்றன.உங்கள் ஆசைகளை ஓர் பத்து நிமிட நேரத்திற்கு உறைநிலைக்கு எடுத்துச் சென்றால் என்ன ஆகிறது? ஒன்றுமில்லாத நிலை ஏற்படுகிறது. அறிந்து கொள்ள வேண்டும் என்றலையும் புத்தியை சில நிமிடங்களுக்கு உறைய விடுங்கள் அப்போது ஒன்றுமில்லாத நிலை ஏற்படும். எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணங்களை உறைய விடுங்கள் அப்போது என்ன ஏற்படுகிறது. ஒன்றுமேயில்லாத நிலை தோன்றுகிறது. இது மிக எளிதானது. இதை விட எளிதாக எதுவுமே இருக்க முடியாது.

விஞ்ஞானிகள் யோகா வசிஷ்டாவினை மிகவும் விரும்புவர் ஏனெனில் அது உங்களைப் படிப்படியாக அழைத்துச் செல்கிறது. புத்தி மோசமானது அதை உறைய  விடு என்று கூறுவதில்லை, புத்தியை விடப் பெரிதான ஒன்றுள்ளது, ஆகையால் புத்தியை உறைய விடு என்று கூறுகிறது. இது போதும் என்று கருதுகிறேன்.

எப்போது உயிர் இப்பூமிக்கு வருகிறது? கருத்தரிக்கும் போதா அல்லது அதற்கும் முன்னதாகவா?

கருத்தரிக்கும் போது தான். கருத்தரிக்கும்போது உயிர் நுழைகிறது. மற்றொரு சாத்தியக்  கூறு கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் ஏற்படுகிறது. அபூர்வமான வேறொரு சாத்தியம் பிறக்கும் போது ஏற்படுகிறது. எனவே மூன்று சாத்தியக் கூறுகள் உள்ளன. கர்ப்பம் தரிக்கும் போது பெரும்பாலும் உயிர் நுழைகிறது. ஐந்தாவது மாதத்தில் ஓர் ஆத்மா அகன்று வேறொரு ஆத்மா நுழையலாம் அது போன்றே பிறக்கும் காலத்திலும் ஏற்படலாம். ஒருவர் ஓர் காரினை வாங்கி ஒன்பது மாதங்களில் வேறொருவருக்கு விற்பது போன்று அந்த சாத்தியக்கூறும் உள்ளது.

உடல் தோன்றி வளரத் துவங்கிய பின்னரே மனம் வளர்கின்றது, ஆனால் மனமே உடலை உருவாக்குகிறது என்றும் அறிகிறோமே?

மெய்யுணர்வு தான் முதலாவது;  பின்னர் அது உடல் உருவாக உதவுகிறது. மெய்யுணர்வு என்பது வெறும் ஊக்கியாகவே உள்ளது. அதனுடைய இருப்பினாலேயே உடல் வளர்கின்றது.

இறைவன் இறைவி ஆகிய இருபாலினரின் வடிவத்தைப் பற்றிக் கூற முடியுமா? இரு வடிவங்களுமே  நம்மிடம் இருப்பதை உணர முடியுமா?


நிச்சயமாக. தாய் மற்றும் தந்தை இருவரின் அம்சங்களும் உங்களிடம் உள்ளன.  சிவன் மற்றும் சக்தியின் பிரதிநிதியாகவே இருக்கின்றீர்கள். இவ்விரண்டும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் கண்டறியும்போது முழுமையாக உணருவீர்கள். இந்த சமநிலையை உணரும் போது நிறைவாகவே உணருவீர்கள். இந்த கண்டறிதலுக்கு முன்னர் நீங்கள் மற்றவர்களுடன் சகவாசத்தைத்  தேடிக் கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேறிச் செல்லும் போது ஏதோ ஒரு கால கட்டத்தில் சிவனும் சக்தியும் நம்முள்ளேயே இருப்பதை அறியும் இந்த ஞானம் தானாகவே மலர்ந்து விடுகிறது. நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை !!