ஆக்கிரமிப்பு பலவீனத்தின் அறிகுறியாகும்.

திங்கள் கிழமை, 21 மார்ச் 2016,

பெங்களூரு, இந்தியா



எவ்வாறு ஒரே நேரத்தில் சரியாகவும் அன்பாகவும் இருப்பது?

சரியாக இருத்தல் என்பதற்கு  கடுமையாக இருக்க வேண்டும் என்ற பொருள் இல்லை. அன்புடன் இருப்பதன் பொருள்  அனைத்தையும் அவற்றின்  போக்கிலேயே விட்டு விட வேண்டும் என்பதுமில்லை. அன்புடன் இருத்தல் மெத்தனம் அல்ல அது போன்று நீதியுடன் இருத்தல் கடுமையும்  அன்று. துரதிர்ஷ்டவசமாக இன்று நாம் நீதியுடன் இருந்தால் கடுமையாகி விடுகிறோம். தேவையில்லை. அவ்வாறிருக்கவும் கூடாது. கடுமை என்பது நமது நமது பலவீனத்தையும்  நமது வலிமையின் மீதே ஏற்படும் சந்தேகத்தையும் காட்டுகிறது. இது விசித்திரமாக இருக்கிறதல்லவா? வலிமையுள்ளவர்கள் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன் இருப்பார்கள் என்று கருதுகிறீர்களா? இல்லை ! தங்களுக்கு சக்தியில்லை, அல்லது சக்தியை இழந்து விட்டோம் என்று எண்ணுபவர்களே ஆக்கிரமிப்பு உணர்வுடன் இருக்கின்றனர். இதைச் சற்று ஆழ்ந்து காணுங்கள். எப்போது ஆக்கிரமிப்பு உணர்வுடன் கடுமையாக இருக்கிறீர்கள்? எதையோ உங்களால் எளிதாக செய்ய முடியாதபோதுதான். எளிதாகக் காரியங்கள் நடந்தால் அவ்வாறு இருப்பீர்களா?

உங்களுடைய ஆற்றலின் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லாத போது, உங்களுக்கு ஆக்கிரமிப்பு மனப்பான்மை ஏற்படுகிறது. புரிவது கடினம் என்று எனக்குத் தெரிகிறது.
டெல்லியில் பல்வேறு விஷயங்கள் நடந்தபோது, ஒருவர் என்னிடம் "குருதேவ் ! எவ்வாறு இவ்வளவு சாந்தமாக இருக்கிறீர்கள்? நாங்கள் அனைவரும் பதட்டத்துடன் இருக்கிறோமே? " என்றார். அனைத்தும் நல்லமுறையில் நடக்கும் என்று எனக்குத் தெரியும். அனைத்தும் நடக்கும் என்று அறியும் போது பதட்டம், அல்லது கவலை, அல்லது துன்பம் அல்லது மகிழ்ச்சியற்ற நிலை இவை எல்லாம் எதற்காக ஏற்பட வேண்டும்?

உங்களுக்குள் இருக்கும் சக்தியை அறியும் போது நீங்கள் பதற மாட்டீர்கள். சக்தியுள்ளவர்கள் வலுச்  சண்டையிடமாட்டார்கள். யார் அவ்வாறு செய்வார்கள்? ஓர் நபர் அல்லது பலர் அல்லது நிலைமை, உங்களுடைய  கட்டுப்பாட்டினை மீறிச் சென்று விட்டதாக எண்ணும் போது அல்லது ஏதேனும் சாத்தியமில்லை என்று உணரும் போது அல்லது நிலைமையை சமாளிக்கும் திறனில்லாதவராக நீங்கள் இருப்பதை அறியும்போது, நீங்கள் ஆக்கிரமிப்பு உணர்வுக்கு ஆளாகின்றீர்கள். இதைப் பற்றிச் சற்று சிந்தியுங்கள். பெரும்பாலும் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன் இருப்பவர்களை வலிமையுள்ளவர்களாக கருதுகிறீர்கள். உண்மையில் அவ்வாறு அல்ல.!

இறுதியில் உலகமே அழியும் போது , நாம் இங்கிருந்து என்ன பயன்?

நீங்கள் அழிய மாட்டீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களில் ஏதோ ஒன்று எப்போதும் நிலைத்திருக்கும். சமுத்திரத்தில் நீர் எப்போதும் இருக்கும். அலைகள் எழுந்து விழும் முறை எப்போதும் நிலைத்திருக்கும். அலைகள் வீழ்ந்தெழுவது போன்றது நமது உடல். நமது ஆத்மா சமுத்திர நீர் போன்றது. எப்போதும் நிலைத்திருக்கும். இந்த வேதாந்தம் உங்களுக்கு பிடிக்கவில்லையெனில், இயற்பியலைப் படியுங்கள். அறிவு இயற்பியலை உண்மையென ஏற்றுக் கொள்ளும். அதிர்ஷ்டவசமாக இயற்பியல் வேதாந்தத்திலுள்ளதையே கூறுகிறது. அல்லது வேதாந்தம் இயற்பியலிலுள்ள கருத்தையே தான்  கூறுகிறது.

உலகக் கலாசாரத் திருவிழா பற்றி தாங்கள் ஆனந்தமடையந்தீர்களா?

நானே ஆனந்தம். நான் ஆனந்தமடைய எதுவும் தேவையில்லை. நான் எந்த நிகழ்வின் மூலமும் ஆனந்தமடைய வேண்டுமென்பதில்லை. உலகக் கலாசாரத் திருவிழா நன்கு நடைபெற்றது. நகரெங்கும் உண்மையில் உலகெங்கும் அது பேசப்படுகிறது. எல்லா இடங்களிலும் மக்கள் நிகழ்ச்சி நடந்த விதம் பற்றிப்  பேசுகின்றனர். எவ்வாறு நிகழ வேண்டுமோ அவ்வாறே நிகழ்ந்தது. முதல் நாள் சிறு மழைத்துளிகள், இரண்டாம் நாள் பலத்த காற்று மூன்றாம் நாள் வெப்பம் என அனைத்து இயற்கைக் கூறுகளும் தங்கள் பங்கினை செய்தன.! ஆலங்கட்டி மழை கூடப் பெய்தது. எனவே மூன்று நாட்களில் அனைத்து பருவ காலங்களையும் கண்டோம்.

3.5 மில்லியன் மக்களை எதிர்பார்த்தோம், ஆனால் 3.75 மில்லியன் மக்கள் வந்திருந்தனர்.188 நாடுகளில் மக்கள் நிகழ்ச்சியினைக் கண்டு களித்தனர்.  உலகக் கலாசார திருவிழாவினைக் காணாத நாடு என்று உலக நாடுகளில் எதுவுமே இல்லை. முதல் நாளன்று ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியில் 1.9 மில்லியன் மக்கள் நிகழ்ச்சியைக்  கண்டனர். இப்போது சற்று ஆழ்ந்து ஞானத்திற்குச் செல்வோம். இந்த செயல் நிகழ்வுகள் முடிந்து விட்டன. இனி நாம் ஞானத்தில் ஆழ்ந்து செல்ல வேண்டும். இன்னும் அதிகமான தியான ஞான பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ஆழ்ந்த தியானங்கள் செய்வோம். ஏனெனில் அதுவே உண்மையான விஷயம். அந்த நிலையிலேயே  நாம் அனைவரும் மிகுந்த ஆனந்தத்துடன் இருப்போம் !

புன்னகையுடன் இருக்க வேண்டுமென்று நீங்கள் கூறும் போது, எனக்குப் பிரச்சினைகள் உள்ள நேரத்தில் என்னால் புன்னகையுடன் இருக்க முடியவில்லை. எவ்வாறு உங்களால் எனக்கு உதவ முடியும்?

எது உங்களது புன்னகையைத் தடுக்கிறது தெரியுமா? உங்களது ஆசையே ! ஏதோ ஒன்றை அடைய விரும்புகிறீர்கள், அது வேண்டும்,வேண்டும் என்று எண்ணிக் கொண்டேயிருக்கிறீர்கள் அதுவே உங்களைத் துன்பமடைய செய்கிறது. ஒரு நிமிஷம் விழித்தெழுந்து,"எனக்குக் கவலையில்லை" என்று கூறுங்கள். ஆசையை விட்டு "இது எனக்கு வேண்டாம்" என்று என்னும் அடுத்த நொடியிலேயே உங்களுக்குள் ஏதோ எழுந்து வரும் அதுவே  புன்னகை ! எனக்கு எதுவும் வேண்டாம், எது தேவையோ அது எனக்குக் கிடைக்கும் என்று எண்ணுங்கள்.

குருதேவரைக் காண வேண்டும் என்று விருப்பம் இருந்தாலும் “எனக்கு கவலை இல்லை. காண வேண்டுமென்பதில்லை” அந்த விருப்பம் தான் உங்களை துன்புறுத்திக் கொண்டிருந்தால், அந்த ஆசையையும் உதைத்துத் தள்ளுங்கள். அப்போது நீங்கள் முற்றிலும்  இளைப் பாறி அமைதியுடன் இருப்பதை உணருவீர்கள்.  ஏற்கனவே நான் கூறிய படி, நம்மை தடை செய்வது மூன்று விஷயங்கள்

1. தான் எனும் அகந்தை
2. ஆசைகள்
3. அறிவு

இந்த மூன்றையும் சற்று உறைய வைத்து அப்போது தியானம் எவ்வாறு நிகழ்கின்றது என்று பாருங்கள்." இந்த மூன்றையும் உறைய வைக்க விரும்புகிறேன்" என்னும் நோக்கமே உடனடியாக ஓர் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

தான் எனும் அகந்தை, ஆசைகள், அறிவு என்னும் மூன்று விஷயங்கள் நமக்குத் தடையாக இருப்பதாகக் கூறினீர்கள். ஒவ்வொரு நொடியும் நாம் இறந்து கொண்டிருப்பதாக பொருள் கொள்ளலாமா?

இல்லை. இந்த மூன்றும் நீங்கள் என்னும் இடத்தைப் புலப்படாமல் செய்கின்றன. நீங்கள் பரந்து விரிந்த வெற்றிடம். சக்தியின் இருப்பிடம். அது இந்த மூன்றினால் தெளிவற்றதாக ஆகி பரந்து விரிந்த உங்களையே உங்களுக்கு புலப்படாமல் செய்கிறது. இம்மூன்றையும் சற்று நேரத்திற்கு உறைய வைக்கும் போது தியானம் நிகழ்கிறது.  ஓர் வகையான தியான நுட்பம். மூன்றையும்  என்றென்றும்  உறைய வைக்க முடியாது.

ஓர் குறிப்பிட்ட சமயத்தின் அங்கமாக நான் இருக்க விரும்பவில்லை. அதற்குப் பதிலாக அனைத்து சமயங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வேடிக்கை பார்க்க விரும்புகிறேன்.


உங்களுக்கு அது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் எந்த சமயத்தையும் கேலி செய்யாதீர்கள். சரியா? அப்போது நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். நாம் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. வேடிக்கை என்பது வேறு விஷயம். அனைத்து சமயங்களிலிருந்தும் நல்லனவற்றை ஏற்றுக் கொண்டு ஆன்மீக வழியில் இருங்கள். அதுவே வாழும் கலை.

பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்குள்ளும் பாசம் இருக்கிறது


வியாழக்கிழமை, 3 மார்ச் 2016, 

பெங்களூரு



(நிலையான ஆற்றலின் நித்திய மூலம் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

குருதேவ், முன்னொரு காலத்தில் கண்டங்களும் அவற்றின் கலாச்சாரமும் ஒன்றாகவே இருந்து வந்தன. உலகக் கலாசாரத் திருவிழாவில் அனைத்துக் கலாச்சாரங்களையும் ஒன்றாக எடுத்து வருவதற்கான நோக்கம் என்ன? அனைத்துக் கண்டங்களும் திரும்பவும்  ஒன்றாகப் போவதில்லையே?

உலகத்தின் கலாசாரங்கள் ஒன்றாக ஆகத் தேவையில்லை. அவ்வாறு ஆனால் அது ஒரு பெரிய முட்டாள்தனம். உலகம் பன்முகத் தன்மையுடனேயே இருக்க வேண்டும். கற்பனை செய்து பாருங்கள், உலகம் முழுவதிலும் ஒரே வகையான காய் மட்டுமே, உதாரணமாக காரட் அல்லது உருளைக் கிழங்கு மட்டுமே இருக்குமென்றால் நீங்கள் அதைத் தொடக் கூட விரும்ப மாட்டீர்கள். இயற்கை பன்முகத் தன்மையையே விரும்புகிறது. அது பல்வேறு விதங்களில் தன்னை வெளிப்படுத்துகின்றது. அதை நாம் பாதுகாக்க வேண்டும். இயற்கையின்  பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

கலாசாரம் என்பதும் இயற்கையின் பரிசேயாகும். இயற்கை உணவு, இசை, மொழி போன்ற பல்வேறு விதமான கலாசார விஷயங்களை நமக்கு அளித்துள்ளது.  உலகெங்கும் மக்கள் ஒரே மொழியைப் பேசினால் அது எவ்வளவு சலிப்பானதாக இருக்கும் என்று யோசியுங்கள்! அனைவரும் ஒரே மாதிரியிருந்தால் அதுவும் மிகவும் சலிப்பானதாக இருக்கும். மங்கோலியா சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அர்ஜேன்டினா, ஆப்ரிக்கா என பல்வேறு நாட்டு மக்களாக நாம்  பல்வேறு விதமாகத் தோற்றமளிக்கிறோம். இவ்வாறு அனைத்து கலாச்சாரங்களும் ஒன்றாகக் கூடும்போது அதை நாம் கொண்டாடுவதற்கு ஒரே கலாச்சாரமாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை. உலகக் கலாசாரத் திருவிழா என்பது பன்முகத் தன்மையினைக் கொண்டாடி, மேம்படுத்தி, மரியாதை செய்வதாகும்.

இவ்வுலகில் நிகழ்ந்த  அனைத்துப் போர்களும் உலகம் முழுவதும் ஒரே கலாசாரம், அல்லது ஒரே சமயம் இவற்றினைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கேயாகும். மத்திய கிழக்கு நாடுகளில் அது ஓர் பெரும் பிரச்சினை. தூரக் கிழக்கு நாடுகளில் வேறொரு கதை. ஜப்பான் இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு விதமான இனங்கள் ஒன்றாக அமைதியாக வசித்து வருகின்றன. 

உலகக் கலாசாரத் திருவிழா உலகத் தலைவர்களுக்கு மற்றும் உலக சமூகங்களுக்கு ஓர் செய்தியினை அனுப்புகின்றது. அது என்னவெனில், நாம் ஒருவரையொருவர் சகித்துக் கொண்டு மட்டுமில்லை, அப்பன்முகத் தன்மையினைக் கொண்டாடுகிறோம் என்பதே அது. சகிப்புத் தன்மை என்பதற்கு எதிர்மறையான தாத்பரியம் உள்ளது. ஏதோ ஒன்றை நீங்கள் விரும்பவில்லையெனில் சகித்துக் கொள்கின்றீர்கள்.பிடிக்காததை  சகித்துக் கொள்கிறோம். அவ்வாறு ஏற்படும் சகிப்புத்தன்மை ஓர் பெரிய விஷயமாக கருதப்படுகிறது ! உலகக் கலாசாரத் திருவிழா சகிப்புத் தன்மையைப் பற்றி யதல்ல. அது  உலகின் பல்வேறு கலாசாரங்களையும் மரியாதையுடன் கொண்டாடி  களிப்படைதலைக் குறிக்கின்றது.
மேலும் வேறொரு கலாச்சாரத்தினை நாம் மதித்துப் பாராட்டுவது என்பது , உங்களுடைய சொந்தக் கலாசாரத்தை தொலைத்து விடுதல் என்னும் பொருள் ஆகாது. 

இந்தியக் கலாசாரத்தை நீங்கள் பாராட்டினால் ஐரோப்பிய கலாச்சாரத்தினை விட்டு விடுவது என்பதில்லை. எதையும் இழப்பதில்லை. மேலும் அதிகமான புகழையே சேர்க்கின்றீர்கள். மதிப்பதற்கும் ரசிப்பதற்கும் உங்களுடையதாகவே  ஆக்கிக்கொள்வதற்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான அழகான விஷயங்கள் உள்ளன.

உலகக் கலாசாரத் திருவிழாவில் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய அம்சங்கள் பற்றிக் கூறுங்கள்.

ஏராளமாக உள்ளன. மர்மங்கள் வர்ணிக்கப்படுவதில்லை. அவற்றை வாழ்ந்தறிந்து பார்க்க வேண்டும். மிக அற்புதமான விஷயங்கள்  நுண்ணிய அளவில் நிகழ்ந்தன, அவை இப்பூமிக்கு பலனளிக்கப் போகின்றன.

சுமார் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த அரசாங்கமும் சுற்றுச் சூழலைப் பற்றிப் பேசவில்லை. நாம் பேசினோம். அரசுகள் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசின, இப்போது அதன் நிலை மாறி விட்டது. சில பத்தாண்டுகளுக்கு முன்னர் யாருமே ஆனந்தம் என்பதைப் பற்றிப் பேசியதில்லை, அது விசித்திரமானதாகக் கருதப்பட்டது. மக்கள் பொதுவாக பொருளாதாரம் அதிகாரம் இவற்றைப் பற்றியே பேசி வந்தனர். இன்று, உலகளாவிய உள்துறை ஆனந்தம் என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்தை மதிப்பிடும் அளவுகோலாகி விட்டது. இது மெய்யுணர்வு நிலையினை மாற்றி வருகின்றது.

உலக யோகா தினத்தில் 2 மில்லியன் மக்கள் பங்கேற்றனர். உலகின் மூன்றில் ஓர் பகுதி மக்கள் யோகாவினை பாராட்டுவார்கள் என்பதை சில பத்தாண்டுகளுக்கு முன்னர் கற்பனை செய்திருப்பீர்களா? இல்லை. இவ்வாறு நிகழும் என்று  முந்தைய தலைமுறையினர் சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் எனக்குத் தெரியும்! தெரியாது என்று கூறுவது தவறாகும், ஆனால் அது பொதுவாக நம்பமுடியாததாகவே இருந்தது.

குருதேவ், பாதயாத்திரை முடிந்து இப்போது தான் திரும்பியிருக்கிறோம். வாழ்வில் முதன்முறையாக என்னால் பிறருக்காகப் பிரார்த்தனை செய்ய முடிந்தது என்பதை உணர்ந்தறிந்தேன். நான் எங்கு சென்றாலும் என்னால் பிறருக்காக வாழ்வது என்பது சாத்தியமாகுமா?

ஆம். அதற்காக உங்களுடைய தேவைகளையும் வசதிகளையும் ஒதுக்கித் தள்ளவேண்டுமென்பதில்லை. பாத யாத்திரையின் நோக்கமே உங்கள் இதயத்தைத் திறந்து முற்றிலும் உங்களுக்குத் தெரியாத மக்களுடன் எவ்வளவு ஆழமாகத் தொடர்பு கொண்டுள்ளீர்கள் என்பதைக் காண்பதேயாகும். அவர்கள் மொழி உங்களுக்குத் தெரியாது, உங்கள் மொழி அவர்களுக்குத் தெரியாது. ஆயினும் ‘ஆஹா எவ்வளவு நெருங்கிய தொடர்புடன் உணர்கிறோம்’ என்பதை அறிந்து கொள்கிறீர்கள்.

மகிழ்ச்சியான மக்கள் உங்களை துரத்தி வந்து கொண்டிருப்பதைக் காண்கின்றேன். நான் மட்டும் உங்களுடன் தொடர்பற்ற ஒருவனாகவே உணருகின்றேன். தங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றேனா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?

நான் செல்லும் காரின் பின்னாலேயே ஓடி வருவது போன்ற பிறர் செய்யும் செயல்களை நீங்களும் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. நீங்கள் இயல்பாக இருங்கள். ஒரே காற்றை சுவாசிக்கிறோம், ஒரே சூரிய ஒளியில் இணைகின்றோம் ஒரே பூமியில் இருக்கின்றோம் . ஆழமான உள் நிலையில் நாம் அனைவரும் ஒருவரேயல்லவா?  இது என் காற்று என்று  நீங்களோ அல்லது நானோ உரிமை கொண்டாட முடியுமா? முடியாதல்லவா? ஆகவே நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இணைந்தவரே.

35 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுக்கு என்ன தோன்றியது? உலகத்திற்கான  உங்களுடைய  பார்வை அப்போது என்னவாக இருந்தது?

நான், " இந்த ஆஸ்ரமம் மிகச் சிறியதாக இருக்கிறது, அதிக அளவில் மக்கள் இங்கு வருவார்களே”  என்று எண்ணியதுண்டு. அக்காலத்தில் இந்த ஆஸ்ரமத்தில் அதிகம் பேர் கிடையாது. அப்போது அவர்களெல்லாம், என்னை விழித்துப் பார்த்து, குருதேவர் என்ன பேசுகிறார்? விசித்திரமாக இருக்கிறதே என்று கருதுவதுண்டு. உலகிற்கு நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. அக்கறை இருப்பதால் பகிர்ந்து கொள்ளுதல் என்பது மட்டுமே வாழும் கலையின் நோக்கம். இப்பூமியின்  மீது அக்கறை உள்ளது, மக்களின் மீது அக்கறை உள்ளது.

வாழும் கலை நதிக்கரையில்  பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தரும் மாபெரும் நிகழ்ச்சியினை நடத்துவதன் மூலம் யமுனை நதியை மாசு படுத்துகிறது என்று அண்மையில் ஒரு அரசு சாரா நிறுவனம், நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த ஆண்டின் மிகப் பெரிய வேடிக்கை  இதுவே என்று நான் எண்ணினேன். " நாங்கள்” சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதா? நீதி மன்றத்தின் பணி வழக்கை விசாரிப்பது என்பதால் விசாரணை நடத்தி, " இத்தனை காலம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? மேடை அமைக்கப்பட்டு, பிற ஏற்பாடுகள் செய்யப் பட்ட பின்னர் நீங்கள் நீதி மன்றத்திற்கு வருகிறீர்களே " என்று கண்டித்தது. தவிர, இதற்கு மேற்பட்டு யாராலும் நதியை மாசுபடுத்த முடியாது. ஏற்கனவே நதி அழிந்து விட்டது. அனைத்து சாக்கடைகளும் அங்கு ஒன்று சேர்வதால் நதி அதிகபட்ச மாசு அடைந்து விட்டது. அந்த இடத்திற்கு பறவைகள் வருவதில்லை, நீரில் மீன்கள் இல்லை.
அந்த இடத்தைப் பார்ப்பதற்காக நாங்கள் சென்ற முதல் நாளன்று நாங்கள் மூக்கை மூடிக்கொள்ள வேண்டிய அளவு துர் நாற்றம் வீசியது. அங்கு நின்று மூச்சுக் கூட விட முடியவில்லை. 

நாங்கள் பணியினைத் துவங்கிய பின்னர் 100,000 டெல்லி தன்னார்வத் தொண்டர்களின்   வீடுகளில் நொதி ((மூலப்) பொருள்களில் மாற்றம் உண்டாக்கி தான் மாறாமல் இருக்கும் வேதியல் பொருள்: ENZYME ) தயாரிக்கப்பட்டன. அவற்றை நதி நீரில் சேர்த்த பின்னர், எருமைகள் நீர் அருந்த அங்கு வரத் துவங்கின. அதற்கு முன்பு ஓர் விலங்கு கூட அங்கு வந்தது கிடையாது. இன்று நொதி பெருமளவிற்கு நாற்றத்தைக் குறைத்து, நீர் உயிர் பெறத் துவங்கியிருக்கிறது. ஓர் மரத்தைக் கூட நாங்கள் தொடவில்லை. அங்கு ஏற்கனவே இல்லாத எதையும் நாங்கள் அங்கு எடுத்து வரவில்லை. அனைவரும் அமரும் வகையில் நிலத்தை சற்று சமப் படுத்தியிருக்கிறோம் அவ்வளவு தான்.

தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்று விட்டோம். சரி பார்க்கப்பட்ட எல்லா ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. எந்த சட்டத்தையும் நாங்கள் மீறவில்லை. இடத்தையும் மாசு படுத்தவில்லை. அந்த நதியை மாசு படுத்த எதுவுமேயில்லை, அந்த அளவு ஏற்கனவே அது அசுத்தமாக உச்சநிலை மாசுடன் இருந்தது.  அதை தலை கீழாக  மாற்றவே முடியும் அதுதான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் மிக அழகான விஷயம்  என்னவெனில் வாழும் கலையைச் சேர்ந்த யாரும் இதனால் அமைதி இழக்கவில்லை. அனைவரும் தங்களது 100 சதவீத முயற்சியை மகிழ்ச்சியுடன் அளித்துப் பணி புரிந்து கொண்டிருந்தனர். 

டெல்லி மாநகரம் உலக மக்களை வரவேற்கத் தயாராக இருந்தது.அதுவே உலக வழக்கம். தனி மனித வாழ்க்கையிலும் ஏன் ஒருவர் உங்களை எதிர்க்கிறார் என்று ஆச்சரியப்படுவீர்கள். நெருங்கிய ஒரு நண்பர் உங்களுக்கெதிராக ஏன் திரும்பி விட்டார் என்று நீங்கள் ஆச்சரியப் பட்டிருக்கிறீர்களல்லவா? ஏன் இவ்வாறு செய்கிறார் என்று அதிசயித்திருக்கிறீர்கள் அல்லவா? அது போன்று நீங்கள் அவ்வளவாக உதவி செய்திருக்காத ஏதோ ஒரு நபர் உங்களுக்கு நெருக்கமானவராக ஆகி விடுகிறார். உங்களுக்கு உதவ முன்வருகிறார்கள். உங்களுக்குத் தேவையான நேரத்தில் தெரியாத ஒரு நபர் உங்களுக்கு உதவுகிறார். இப்பிரபஞ்சத்தில் வித்தியாசமான ஓர் சட்டம் நிலவுகிறது. அதை நீங்கள் அறிந்து கொண்டால் எதுவும் உங்களை அமைதியிழக்கச் செய்யாது. எதுவும் உங்களை வருத்தமடையச் செய்யாது. உள்ள சமநிலையுடன் ஆனந்தத்தைப்  பேணிப் பாதுகாக்கலாம்.

நிகழ் தருணமே ஞானத்தின் நுழைவாயில்

புதன் கிழமை, 2 மார்ச் 2016,

பெங்களூரு ,இந்தியா


 குருதேவ், தாங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா ?

பார்க்க எப்படி நான் இருக்கிறேன்? சந்தோஷமாகக் காணப்படுகின்றேனா? நீங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். மிகத்  தொலைவிலிருந்து பல சிரமங்களை ஏற்றுப் பயணம் செய்து இங்கு வந்திருக்கின்றீர்கள். எவ்வாறு நான் சந்தோஷமின்றி இருப்பேன்? உலகெங்குமிருந்து பலமணி நேர விமானப் பயணம் செய்து இங்கு வந்தடைந்திருக்கின்றீர்கள். நீங்களனைவரும் சௌகரியமாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

மனித உடலும் குதிரை முகமும் கொண்ட ஹயக்ரீவரிடமிருந்தே ஞானம் பிறந்தது என்று வேதங்களில் கூறப் பட்டுள்ளது. புனித நூல்களில் குதிரையின் முக்கியத்துவம் என்ன?

குதிரை அஷ்வா என்றழைக்கப் படுகிறது. ஸ்வா என்றால் நேற்று அல்லது நாளை. அஷ்வா என்றால் இப்போது (நிகழ் தருணம்) சமஸ்க்ருதத்தில்  இப்போது என்பதற்கும் குதிரை என்பதற்கும் ஒரே சொல்தான். அந்த அஷ்வா என்னும் சொல்லுக்கு இரண்டு பொருட்கள் உள்ளன.
1. இப்போது (நிகழ் தருணம்)
2. குதிரை
அனைத்து ஞானமும் நிகழ் தருணத்தில் ஏற்படுபவை என்பதற்குப் பதிலாக 

குதிரையிடமிருந்து வந்தது என்று கூறினார்கள். ஹயக்ரிவா என்பதில் ஹயா  என்றால் தலை என்பது பொருள். உங்கள் தலை நிகழ் தருணத்தில் இருந்தால் உங்கள் உள்ளேயிருந்து ஞானம் பிறக்கும். அனைத்து வாழும் கலை ஆசிரியர்களும் இதனை அனுபவித்திருப்பார்கள். அல்லவா? உங்களிடம் பயில்பவர்கள் என்ன கேள்விகள் கேட்கப் போகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாது, ஆனால் அவைகளுக்கு உங்களால் விடையளிக்க முடியும். எங்கிருந்து அந்த ஞானம் வருகிறது? நிகழ் தருணத்தில் நீங்கள் இருக்கும் போது , கடல் போன்ற பாரம்பரிய ஞானத்துடன் நீங்கள் தொடர்பு கொண்டு அதனை உடனடியாக பதிவிறக்கம் செய்கின்றீர்கள். அவ்வளவு தான்

சந்தியாவந்தனத்தின் போது, நான் பிரம்மன் என்று கூறுகிறோம். ஆனால் அதன் பிறகு திசை வணக்கம் செய்கிறோம். இதன் பொருள் என்ன?

இவையெல்லாமே மனதை விடுதலையாக்கி வைத்துக் கொள்வதற்குத்தான். தொல்லை செய்யும் அனைத்து விஷயங்களிலிருந்தும்  நமது மனதை விடுவித்து கொள்ள வெவ்வேறு திசைகளையும் வணங்குகிறோம். விருப்பமிருந்தால் செய்யுங்கள், விருப்பமில்லையெனில் செய்யாதீர்கள் !  நம்மை விடுவித்துக் கொள்வதற்கான பயிற்சியே இது. அவ்வளவு தான் என்னால் கூற முடியும். இதை ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தாத கடந்த கால மனிதர்களைப் பற்றி என்னால் எதுவும் பேச முடியாது. உங்கள் மனதை நன்கு அறிந்து அதனைக் காத்துக் கொள்ளுங்கள் என்று மட்டுமே என்னால் கூற முடியும்.

நாம் திரும்பத் திரும்ப நமக்கு நாமே நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய ஓர் மிக அழகான விஷயம் க்ஷமா (நிகழ் தருணத்தில் செயல் படுதல்) க்ஷமா என்பதன் பொருள்  உள்ளிலிருந்து பூரண அமைதி மற்றும் நடுநிலையில் இருத்தல் என்பதாகும். எப்படியென்றால்," என்ன வந்தாலும் சரி, இந்த மன அமைதி என்னும் என்னுடைய செல்வம் என்னை விட்டுப் போகாது, அது என்னில் பகுதியாகும்" என்பது போலாகும்.


க்ஷமா என்று உங்களுக்குள்ளேயே இருக்கும் செல்வத்தை எப்போதும் நீங்கள் எடுத்துச் செல்கின்றீர்கள். அந்த நினைவு எழுந்தவுடனேயே அமைதியின்றி  சலசலத்துக் கொண்டிருக் கும் மனம் உடனேயே எளிதாக அடங்கி விடும். வெளிப்படையாகத் தெளிவாகத் தெரியும் அசல் கண்ணாடி க்ஷமா . இன்று அது தெளிவாகத் தெரியவில்லையெனில் அது தூசி படிந்துள்ளது என்பதே காரணம். ஆனால் அது சரியாகி விடும். அனைத்து ரீங்காரமும் செயல்பாடுகளும் கண்ணாடி மீது படிந்துள்ள தூசியைப் போன்றது. கண்ணாடி  வெளிப் படையாகத் தெரியக் கூடியது சுத்தமானது என்று நினைவில் கொள்ளும்போது தெளிவு பிறக்கும். தியானத்தில் அதனை அறிவீர்கள். நீங்கள் தியானநிலையில் அமரும் போது, உள்ளே ஆழமாக, அப்பழுக்கற்று தீண்டப்படாமல் , வீணாகாமல்  அப்படியே இருக்கும் அமைதியே  நீங்கள் என்பதைக்  கண்டறிவீர்கள்