ஞானமும் ஓர் செல்வமே

வியாழக்கிழமை, 12 நவம்பர் 2015,

பிரான்க்பர்ட், ஜெர்மனி

பகுதி 1:


பூஜா  என்பது என்ன?

பு என் சொல் முழுமை என்பதை குறிக்கிறது. ஜா என்றால் முழுமையிலிருந்து பிறந்தது என்று பொருள். ஆகவே பூஜா என்றால் முழுமையிலிருந்து பிறந்த ஒன்று என்னும் பொருளாகிறது. பூஜையிலிருந்து உங்களுக்குக் கிடைப்பது முழுமையும் திருப்தியும். பூஜை செய்வது, சூழலில் ஓர் நுண்ணிய அதிர்வலையை ஏற்படுத்தி நேர்மரையினை எடுத்து வருகின்றது. தீபாவளி ஓர் ஒளித் திருவிழா. புத்தர்,"அப்போ தீபோ பவ" என்று கூறியிருக்கிறார் அதாவது உங்களுக்கே நீங்கள் ஒளியாகிறீர்கள்.வேதங்கள் மற்றும் உபநிஷதங்கள்". அனைவரும் விளக்குகளே சிலர் ஏற்றப் பட்டிருக்கின்றீர்கள், சிலர் ஏற்றப்படவில்லை ஆனால் ஒவ்வொருவரிடமும் ஒளி  வீசும் சாத்தியக் கூறு உள்ளது " என்று கூறுகின்றன.

எனவே, தீபாவளி இருளை அகற்றுகின்றது.இருளை அகற்ற விளக்கு மட்டும் போதாது. சமுதாயம் முழுமையும் வெளிச்சமாக வேண்டும். ஓர் குடும்பத்தில் ஒருவர் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதாது. ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மகிழ்ச்சியற்று இருந்தால் கூட, மற்றவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே ஒவ்வொரு வீடும் ஒளியூட்டப்பட வேண்டும்.

இரண்டாவதாக, வாழ்வில் நாம் எடுத்துவர வேண்டியது இனிமை. இனிப்புக்களை மட்டும் பிறருக்கு வழங்காமல் இனிமையையும் சேர்த்து வழங்குங்கள். உங்களுக்கு ஏதேனும் கசப்புணர்வு இருந்தால் அழுத்தம் இருந்தால், உங்கள் மனதில் இறுக்கம் இருந்தால், பட்டாசுகளைப் போன்று அவற்றை வெளியே வெடித்துத் தள்ளுங்கள். புதிய வாழ்வைத் துவக்குங்கள், அதைக் கொண்டாட்டமாகுங்கள் என்றே தீபாவளிப் பண்டிகை உங்களுக்கு நினைவுறுத்துகின்றது. அமாவாசையன்று தீபாவளி கொண்டாடப்படுகின்றது. நாம் பெண் கடவுளான லக்ஷ்மியைப் பிரார்த்திக்கின்றோம்.தேவி லக்ஷ்மி செல்வத்தினை வழங்கும் தெய்வமாக பிரதிபலிக்கின்றார். இந்தியாவில், கடவுள் ஆணாக மட்டுமின்றி  சில சமயங்களில்  பெண்ணாகவும் குறிப்பிடப்படுகின்றார். ஓர் வெண்மையான ஒளி பல நிறங்களைப் பிரதிபலிப்பது போன்று ஒரே தெய்வம் பல சுவைகளைக் கொண்டுள்ளது. இன்று நாம் லக்ஷ்மி தேவியைப் பூஜித்து, பழமையான ரிக்வேத மந்திரங்களை ஜபித்து, நேர்மறையான அதிர்வலைகளையும் நிறைவான செல்வத்தையும் அடைவோம்.

தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேராஸ் என்றழைக்கப் படுகின்றது. பழங்காலத்தில் செல்வங்களை திரட்டி இந்த தினத்தில் இறைவனின் முன் சமர்ப்பிப்பதுண்டு.இப்போதெல்லாம் மக்கள் சாதரணமாக தங்கள் செல்வத்தை வங்கியிலோ அல்லது பாதுகாப்புப் பெட்டகத்திலோ மறைத்து வைக்கின்றனர். ஆனால் முற்காலத்தில்,தந்தேராஸ் தினத்தில் அனைத்து செல்வங்களையும் முன்புறமாக வைத்து, கண்டு நிறைவினை உணர்ந்திருக்கின்றனர்.செல்வம் என்பது வெறும் பொன்னும் வெள்ளியும் மட்டுமல்ல, ஞானமும் கூட. எனவே அவ்வாறு கொண்டாடப்பட்டது. அனைவரும் உங்களது ஞானத்தினை நெஞ்சாரக் கண்டு மகிழ்ந்து நிறைவாக உணர வேண்டும்.

தந்தேராஸ் ஆயுர்வேதத்தின் தினமும் கூட மூலிகைகளும் ஒரு வகையில் செல்வமேயாகும். மூலிகைகளும் செடிகளும் செல்வமாகும். தீபாவளி தினத்தன்று தான் மனித இனத்திற்கு அமிர்தம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, இன்று  நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்து நடுநிலையில் உணர்ந்து, வாழ்வில் முன்னோக்கிச் செல்லுங்கள். எப்போதெல்லாம் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணருகின்றோமோ அப்போதெல்லாம் மேலும் அதிகமாக வந்து சேர்கின்றது. பைபிளில்," யாருக்கு இருக்கின்றதோ, அவருக்கே அதிகமாக அளிக்கப்படும், இல்லாதவருக்கு இருக்கும் மிகக் குறைவானதும்  எடுக்கப்பட்டு விடும்" என்று வசனம் உள்ளது.பழங்காலத்திலிருந்தே மிகுதியானதை  உணரவேண்டும் என்னும் எண்ணம் இருந்து வந்திருக்கின்றது. மிகுதியானது என்பது உள்ளத்தின் உள்ளிருந்து துவங்கி வெளிப்புறத்தில் தெரிகிறது. ஆகவே உங்களுக்கு ஏராளமான ஆசீர்வாதம் இருக்கின்றது. இந்த உணர்வுடனேயே செல்லுங்கள்.

மனதிலுள்ள கோபத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு?

ஒரு நாள் இறந்து விடுவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புன்னகையுடன் இறக்க விரும்புகிறீர்களா அல்லது கோபத்துடன் செல்ல விரும்புகிறீர்களா? நிச்சயமாக  ஓர் விமானத்திலோ ரயிலிலோ குப்பையை எடுத்துச் செல்ல விரும்ப மாட்டீர்கள். உங்கள் பெட்டியை அடுக்கும் போது, குப்பையையும் சேர்த்து வைத்துக் கொள்வீர்களா என்ன? எனவே,"நான் குப்பையை எடுத்துச் செல்ல விரும்பவில்லை" என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதைத் துறந்து விட்டு மகிழ்ச்சியாகச் செல்லுங்கள். ஒவ்வொரு குற்றவாளியும் ஒரு பாதிக்கப்பட்டவரே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையின் பொருள் என்ன?

தெரிந்தவர் கூற மாட்டார், கூறுபவருக்கு தெரியாது. இந்தக் கேள்வியே வாழ்வில் முன்னேறிச் செல்ல உதவும் ஒரு வாகனம் ஆகும். புனிதமான ஒன்றினைப் பாதுகாத்து வைத்துக் கொள்வது போன்று இந்தக் கேள்வியையும் உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் உங்களுக்கு விடை கிடைக்கும். அதற்கு முன்னர் வாழ்க்கையை மதிக்கத் துவங்குங்கள்.

நானும் என் துணைவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்தானா  என்று எவ்வாறு  நான் அறிந்து கொள்வது?

மிகவும் எளிதான ஒன்று இது. உங்கள் துணைக்கு  ஒரு வாரத்திற்கு எரிச்சலூட்டுங்கள். அவர் அல்லது அவள், அப்போதும் உங்களை நேசித்தால் சரியான துணை என்று கண்டறியுங்கள். ஒரு வாரத்திற்கு மட்டும், அவர்களிடம் தெரிவிக்காமல்  அவர்களுக்கு பிடிக்காத அனைத்தையும் செய்யுங்கள்!

அநீதியை எவ்வாறு கையாள்வது?

பொறுமை மற்றும் விடாமுயற்சியுடனேயே அநீதியைக் கையாள வேண்டும். கோபம் கூடாது, விடாமுயற்சி தேவை. கோபத்துடன் எதைச் செய்தாலும் எப்போதுமே பின்னர் வருந்துவோம்.

எதற்கு நான் முன்னுரிமை அளிக்க வேண்டும்?- தொலை தூரத்தில் இந்தியாவிலிருக்கும் என் குடும்பதிற்கா அல்லது ஐரோப்பாவில் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கும் எனது தொழில் வாழ்க்கைக்கா?


திறந்த மனதுடன் நீங்கள் அவர்களுக்குக் கிடைக்கும்படியான  நிலையில்  இருங்கள். ஒரு வேளை  உங்களது பெற்றோர் உடல்நலமின்றி இருந்தாலோ, தீவிரமாக உங்களது தேவையை உணர்ந்தாலோ நீங்கள் அங்கு செல்லும் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். நலமுடன் வசதியாக இருந்தால், நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையை தொடர விரும்பினால் அவ்வாறே செய்யுங்கள். ஒன்றுடன் ஒன்று மோத வேண்டாம். சில சமயங்களில் மனம் மோதலில் ஈடுபடும். அங்கு சென்றால் இங்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று தோன்றும். எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

தந்தேராஸ் தினத்தில் நிறைவாக உணருங்கள்

திங்கள்கிழமை, 9 நவம்பர் 2015,

பெங்களூரு, இந்தியா 



அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இன்று தந்தேராஸ் தீபாவளி இன்று துவங்குகின்றது. தந்தேராஸ் அன்று நீங்கள் மிக நிறைவாக, அனைத்தையும் அடைந்திருப்பதாக உணருகின்றீர்கள். நிறைவிலிருந்து நிறைய வளருகின்றது. எனவே அனைவரும் திருப்தியுடனும் நிறைவாகவும் உணருகின்றனர்.  



நமக்கு தேவையானதெல்லாம் ஏற்கனவே நமக்குக் கிடைத்துவிட்டதாக உணர்ந்து நடங்கள். இதுவே தந்தேராஸ் செய்தியாகும். நமக்கு எது வேண்டுமோ அது நடக்கும். நமக்கு நிறையவே வந்து கொண்டேயிருக்கும். எப்போதெல்லாம் வெற்றி கிடைக்கின்றதோ ஓர் அருளினால் தான். விளையாட்டில், லாட்டரியில், படிப்பில், போட்டியில் அல்லது அரசியலில் எதில் வெற்றியானாலும், அது அருளினால் மட்டுமே நிகழ்கின்றது. அதை மறந்து ஒருவன் தான் எனும் அகந்தையில் மூழ்கினால் வீழ்ச்சி ஏற்படுகின்றது. எனவே எப்போதெல்லாம், எங்கெல்லாம் வெற்றி ஏற்பட்டாலும் அது அருளினால் மட்டுமே என்பதை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள்.

குருதேவின் தீபாவளிச் செய்தி

வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2015,

பெங்களூரு இந்தியா


நமது வாழ்க்கை ஒரு விளக்கை போன்றது. ஒரு விளக்குக்கு ஆக்சிஜென் தேவையாக இருப்பதை போன்று நமக்கும் வாழ ஆக்சிஜென் தேவை. ஓர் கண்ணாடிக் கூண்டில் உங்களை அடைத்து வைத்தால், அதில் ஆக்சிஜென் இருக்கும் வரையில் தான், உயிர் வாழ்வீர்கள். அது போன்று ஓர் விளக்கை கண்ணாடி கூட்டில் மூடி வைத்தால் அது ஆக்சிஜென் இருக்கும் வரையில் தான் எரியும். எனவே நிச்சயமாக விளக்கிற்கும் நம் வாழ்விற்கும் ஒற்றுமை இருக்கின்றது.அந்த ஒற்றுமைதான் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு அடிப்படையானது ஆகும். நீங்கள் விளக்கை போன்றவர் என்று உங்களுக்கு நினைவுறுத்துவதற்கேயாகும்.

நமது நாட்டில் தீபாவளிப் பண்டிகை பழம்பெரும் காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது.  வாழ்க்கை ஒரு விளக்கைப் போன்றது, எப்போதுமே அது விளக்குடன் தொடர்பு கொண்டதாகவே இருந்து வருகின்றது. நமது ஆத்மா ஓர் ஒளி, ஒளியுடனேயே தொடர்பு கொண்டதாக இருக்கின்றது.  அதனால் தான் ஒருவர் மரணம் அடையும் போது ஓர் விளக்கினை அவரது தலைப்பக்கத்தில் ஏற்றி வைப்பது வழக்கம். ஓர் குழந்தை பிறந்தவுடனேயே  வீட்டில் விளக்கேற்றி வைப்பார்கள். ஆகவே விளக்கு நமது வாழ்க்கையுடன் தனித்துவம் வாய்ந்த உறவினைக் கொண்டதாகும். 

வெளிச்சத்தை கொண்டுவர ஒரு விளக்கை மட்டும் ஏற்றினால் போதாது. நமது சமுதாயத்திலுள்ள அனைத்து விளக்குகளையும் ஏற்றவேண்டும். (மக்கள் ஞானம் மற்றும் ஆனந்தத்துடன் ஒளிவீச வேண்டும் என்ற பொருள்). அப்போது தான் நாம் சமுதாயத்தை முன்னேற செய்யமுடியும். சமஸ்க்ருதத்தில் சங்கச்சத்வம் என்றால், நாம் அனைவரும் இணைந்து நடப்போம், அனைவரின் வாழ்விலும் ஒளியும் மகிழ்ச்சியும் நிலவட்டும் என்பதே பொருளாகும். இது தான் தீபாவளியின் தனித்துவம் வாய்ந்த செய்தி. 

தீபாவளியன்று ஓர் விளக்கல்ல, ஆயிரம் விளக்குகளை ஏற்றுகிறோம். இருட்டினை அகற்ற ஒரு விளக்கு மட்டும் போதாது. ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட வேண்டும். தீபாவளியன்று ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றி அனைவரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். அதனால் தான் அது தீபாவளி என்று அழைக்கப்படுகிறது. பழமையான இதிகாசங்களாகிய ராமாயணம் மகாபாரதம் இவற்றுடனும் தீபாவளிக்கு வலுவான தொடர்பு உள்ளது. மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ள பல நிகழ்வுகள் தீபாவளிப் பண்டிகையுடன் தொடர்புள்ளவை. ராமாயணத்தில், ஸ்ரீராமர் 14 ஆண்டுகள் வனவாசத்தினை முடித்து விட்டுத் திரும்பும் போது, நகரில் அனைவரும் விளக்குகளை ஏற்றி கொண்டாடியதாக கூறப்பட்டுள்ளது. பொருள் என்னறால், ஞான ஒளி உள்ளிருந்து தோன்றியவுடன் நம்மை சுற்றி உலகெங்கும் வெளிச்சம் ஏற்படுகிறது. உலகம் முழுமையும் அந்த ஞானத்தினால் பிரகாசிக்கின்றது. வாழ்க்கையில் ஆன்மீக ஞானத்தின் தனித்துவம் வாய்ந்த முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டும் பொருட்டு தீபாவளியை கொண்டாடுகிறோம். புத்தர் பெருமான்,"ஆப்பஹ் தீபோ பவஹ்" என்று கூறுகிறார். வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்ததுடன் தீபாவளியை கொண்டாடி விட்டதாக எண்ணக்கூடாது. உண்மையில் ஞானத்துடன் ஒளிவீச வேண்டும், அப்போது தான் பிறருடைய வாழ்க்கை பாதையில் வெளிச்சம் ஏற்படுத்த முடியும்.இதை தான் புத்தர் கூறியுள்ளார். அனைவரும் சீராகத் தியானம் செய்யவேண்டும்.

யோகா சூத்திரங்களில் பதஞ்சலி மகரிஷி, "முர்தா ஜ்யோதிஷி சித்த தரிசனம்" (விபூதி பாதா#32) உங்களுக்குள் இருக்கும் தெய்வீக ஒளியினை நீங்கள் கண்டறிந்தவுடன் முழுமையடைகின்றீர்கள், பல சித்திகள் விழித்தெழும். உங்கள் புத்தி சுத்திகரிக்கப்பட்டு ஒளி வீசும். ஆகவே இந்த தீபாவளி தினத்தன்று உங்களுக்குள் இருக்கும் ஞானதீபத்தை ஏற்றுங்கள். திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இருங்கள். உங்களை சுற்றியிருப்பவர்களிடம் மகிழ்ச்சியைப் பரப்புங்கள். கடந்தகால அனைத்து பிரச்சினைகளையும் எதிர்மறைகளையும் ஒதுக்கி விட்டுவிடுங்கள்.அனைவருடனும் ஒத்திசைவுடன் இருங்கள். அனைவரிடமும் இனிமையாகவும் மென்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.

தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பது நமது மனதை நிகழ்காலத்திற்கு எடுத்து வருவதற்காகவே. உங்கள் மனம் பல்வேறு ஆசைகள் வெறுப்புகள் இவற்றால் தொந்தரவடையும் போது உங்கள் தலை வெடித்து விடும் போலிருக்கின்றதல்லவா? நீங்கள் பட்டாசுகள் வெடிக்கும் போது அவை வெளிப்புறத்தில் வெடித்து உள்ளே மனதில் ஏதோ ஒன்றினை சரிசமப்படுத்துகின்றது. மின்சார வசதியற்ற முற்காலத்தில் குழந்தைகள் வேடிக்கை விளையாட்டுக்காக பட்டாசுகள் வெடித்து மகிழ்வதுண்டு. மின்வசதியுள்ள தற்காலத்தில் பட்டாசுகள் வெடிக்கத் தேவையில்லை. நிறைய பட்டாசுகளுக்குப் பதிலாக மின்விளக்குகளை ஏற்றுங்கள். அது காற்றில் மாசு ஏற்படுவதை தடுக்கும்.


ஓரிரண்டு பட்டாசுகள் வெடித்தால் பரவாயில்லை. அவை மிகுந்த ஓசையுடனும் புகையுடனும் இருக்கக்கூடாது. பறவைகளும் விலங்குகளும் அவற்றால் பாதிப்படையும். அவற்றுக்கு அதிர்ச்சியும் பயமும் ஏற்படும். எனவே தீபாவளியன்று பட்டாசுகளை தவிர்த்து விடுங்கள். தவிர்க்கவே முடியவில்லையெனில், சில மத்தாப்புக்களை மட்டும் கொளுத்துங்கள். அனைவரையும் தொல்லைக்குள்ளாக்கும் சப்தம் அதிகமான பட்டாசுகளை வெடிக்கத் தேவையில்லை. இவற்றால் பறவைகளும் விலங்குகளும் மிகவும் பயந்து விடுகின்றன. மேலும் பொரித்த தின்பண்டங்களை தீபாவளியன்று உண்பதும் தேவையில்லாததாகும். ஆரோக்கியமான சத்தான உணவை உட்கொண்டு அதை பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் பரந்த முடிவில்லாத இயல்பினை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வில் நீங்கள் பெற்றுள்ள அனைத்திற்கும் ஆழ்ந்த நன்றியுடன் இருங்கள். எங்கும் ஒளியூட்ட விளக்குகளை ஏற்றுங்கள். அத்துடன் நீங்களும் ஓர் அழகான விளக்கு என்பதை நினைவுறுத்திக் கொண்டு மகிழ்ச்சி மற்றும் ஞானத்தை பரப்புங்கள். உங்களிடம் வரும் ஒவ்வொருவரும் சந்தோஷ ஒளியினை பெறவேண்டும் யாருமே வருந்தக்கூடாது. இதற்குத்தான் நீங்கள் பிரார்த்தனை செய்யவேண்டும்.