வாழ்க்கையை ஓர் கொண்டாட்டமாக்குதல்

வியாழக்கிழமை, 25 ஜூன், 2015,

கோடா கொலம்பியா


(கொலம்பியா பாராளுமன்றத் தலைவர்  உலகெங்கும், முக்கியமாக கொலம்பியாவில்  வாழும் கலை நிறுவனத்தின் மூலம் அளித்த அமைதி பணியினை கௌரவிக்கும் விதமாக  பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு அந்நாட்டின் தலை சிறந்த விருதினை வழங்கினார். அந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள்  அளித்த உரை கீழே தரப்பட்டுள்ளது.)

ஆழ்ந்த ஞானம் மட்டுமே கொண்டாட்டத்தை தரமுடியும். உணர்வை நாம் அனைவருக்கும் தர வேண்டும். சரியான இடத்தில், சரியானவற்றை செய்து கொண்டு இருக்கிறோம் என்னும் திருப்தியுடனும் நல்லதே உங்களுக்கு நடக்கும் என்னும் நம்பிக்கையுடன் இருங்கள். நமக்கு தேவையான அனைத்தும் கவனித்துக் கொள்ளப்படும் என்னும் ஆழ்ந்த நம்பிக்கை இருக்க வேண்டும். வாழ்க்கையில் சவால்கள் ஏற்படும், ஒவ்வொரு சவாலும் உங்களை வலுவானவராக்கி உள்ளிருந்து ஒளி வீசச் செய்யும்.

ஒரு வைரம் வெட்டித் துண்டாக்கப்படும். அவ்வாறு வெட்டப்பட்ட வைரமே அதிகமான ஒளி வீசும். அது போன்றே தங்கம் நெருப்பிலடப்படும் போது அதிகமாக பிரகாசிக்கும்.கரும்பினை நசுக்கும் போது அதிக இனிப்புடன் சாறு வெளி வருகின்றது. நசுக்கப்படும் கரும்பு அது " நான் கசப்பான சாறைத் தருவேன்" என்று கூறுவதில்லை. அது போன்றே நம் வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும். அவையனைத்தும் மிகச் சிறியவையே என்று அறிந்து கொள்ளுங்கள். பெரிய கோணத்திலிருந்து அவற்றை காணுங்கள். வாழ்க்கை மிகப் பெரியது, இது மட்டுமே உங்கள் வாழ்க்கையல்ல பல பிறவிகள் எடுத்திருந்திருக்கின்றோம், வருங்காலத்திலும் பல பிறவிகள் உண்டு. அத்தகைய பரந்த கோணத்திலிருந்து காணுங்கள்.

எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் திருப்தியுடன் இருக்கின்றீர்களோ அந்த அளவு உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழும். உங்களில் எத்தனை பேர் அற்புதங்களை அனுபவித்திருக்கின்றீர்கள்? (பலர் கையுயர்த்துகின்றனர்)

யாரேனும் அற்புதங்களை அனுபவித்திருக்கவில்லையெனில் கவலைப்படாதீர்கள். உங்களுக்கும் நிகழும்.அதுதான் இந்த பாதையின் சிறப்பு, எல்லாமே ஏராளமாக இருக்கும். இந்த மார்க்கத்திலேயே தொடர்ந்திருந்து இந்த நறுமணத்தை பலருக்கும் அளியுங்கள். எனது கொலம்பியா பயணம் மிகவும் சிறப்பாக அமைந்தது. கொலம்பியா நேற்று ட்விட்ரில் இந்தியாவை ஏற்றுக் கொண்டுள்ளது. 
தைவான்,சீனா ஜப்பான் ஆகிய நாடுகளில் ஏன் இந்தியாவில் கூட பலருக்கு கொலம்பியா என்றொரு நாடு இருக்கிறது என்று தெரியாது. நமக்கு ஏராளமான பொறுப்புக்கள் உள்ளன. 

அனைத்துப் பொறுப்புக்களையும் புன்முறுவலுடன் ஓர் இறகு போன்று லேசாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணரின் படத்தில்,அவர் மயிலிறகு கிரீடத்தை அணிந்திருப்பதை பாருங்கள். அது எதைக் குறிக்கின்றது தெரியுமா?  ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகம் முழுவதற்கும் பொறுப்பேற்றுக் கொள்கின்றார், ஆயினும் அது அவர் தலையில் பாரமாக இருப்பதில்லை. அந்தப் பொறுப்பு, ஓர் இறகு போன்று வண்ணமயமாக லேசாகவே உள்ளது என்பதையே குறிக்கின்றது. சாதரணமாக பொறுப்புக்கள் ஒருவரை பளுவானவராக ஆக்கும் ஆனால் ஞானம் பெற்ற வாழ்வில் பொறுப்புக்கள் ஓர் இறகினை போன்று லேசாகவே இருக்கும். அதிகப் பொறுப்புக்கள் ஏற்றுள்ளவரை பாருங்கள், 
எப்போதும் சோகமாகவே காணப்படுவர். பொறுப்புக்கள் லேசானவையாக ஏற்றுக்கொள்ள படும் போது அவை உங்கள் முகத்தில் ஓர் புன்முறுவலை ஏற்படுத்தும்,அதுதான் வாழும் கலை.

உங்கள் பிரச்சினைகளை என்னிடம் விட்டு விடுங்கள். உங்கள் பிரச்சினைகளை தந்து விடும்போது, நீங்கள் லேசாக உணருகின்றீர்கள். பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருக்கின்றவர்கள், உங்கள் நாடுகளுக்கு திரும்ப சென்று அங்கு ஆனந்த அலைகளை உருவாக்குங்கள். அடுத்த ஆண்டு மிக நன்றாக இருக்கும். அதற்கடுத்த ஆண்டாகிய 2017இல் உலக மெய்யுணர்வில் பெரும் மாற்றத்தை காணலாம். பலரது வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்படும். இந்த ஆண்டும்,அடுத்த ஆண்டும் இதற்காக நாம் உழைக்க வேண்டும். சில சிறிய சவால்கள் ஏற்படலாம், ஆனால் பெரிதாக எதுவும் இல்லை. நம் அனைவருக்கும் நன்றாக செயல்பட்டு 2017 ஐக் கொண்டாடும் ஆற்றல் உள்ளது. இந்த ஆண்டிலேயே பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் மக்கள் சர்வ தேச யோகா தினத்தைக் கொண்டாடினர்.உலகில் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சுமார் 2 மில்லியன் மக்கள் யோகா மற்றும் தியானம் பயிற்சி செய்தனர். இது ஓர் மிகப் பெரிய படியாகும்.

யோகாவின் அற்புதம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூன், 2015

நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள்.



(யோகா - ஓர் புதிய பரிமாணம் என்னும் இடுகையின் தொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது.)

இந்த உலகம் ஏன் இருக்கின்றது?

உங்களுக்குக் கேட்க வேறெந்த கேள்வியும் இல்லை என்றே எண்ணுகிறேன்! இந்த உலகம் ஏன் இருக்கின்றது? எனக்குத் தெரியவில்லை. இந்த உலகம் ஏன் இருக்கின்றது என்னும் கேள்விக்குப் பதிலாக நான் ஏன் இருக்கிறேன் என்று நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். அதற்கு என்னிடம் விடை இருக்கின்றது. இந்த உலகம் மேலும் மேன்மையாவதற்காகவே நீங்கள் இருக்கின்றீர்கள்.

வாழ்க்கையை கொண்டாடவே இருக்கின்றீர்கள், வாழ்க்கையை பற்றிப் புகார் கூறிக்கொண்டோ, வருந்திக்கொண்டோ இருப்பதற்கு அல்ல. ஏன் இந்த உலகம் இருக்கின்றது? ஏன் இவ்வளவு அதிகமான வேற்றுமைகள் இருக்கின்றன? இது உண்மையில் கேள்வியல்ல, வியப்பாகும். வியப்பிற்கும்  கேள்விக்கும் இடையே உள்ள வேறுபாடு உங்களுக்குத் தெரிந்திருக்கும். வியப்பு  விடையை எதிர் பார்ப்பதில்லை.அது ஆச்சரியம்."விஸ்மையோ யோக பூமிகா" அதிசயம் யோகாவின் முன்னுரையாகும். எனவே, இப்போது  ஏன் இத்தனை வேற்றுமைகள் உள்ளன என்பதை பற்றி அதிசயித்துக் கொண்டிருக்க விட்டு விடுகிறேன். இந்த வியப்புணர்வு உங்களை யோகாவின் அற்புதங்களுக்கு அழைத்துச் செல்லும்.

ஆன்மீகத்தில் விருப்பமில்லாத நண்பர்கள், அதிர்ச்சிகளுக்கு ஆளாகும் போது அவர்களுக்கு நாம் எவ்வாறு உதவ முடியும்?

இந்தக் கேள்வியை உங்களுக்கே நான் விட்டு விடுகின்றேன். நீங்கள் பல வழிகளைக் கண்டறிந்து அவையனைத்தையும் உபயோகியுங்கள். எது பயன்பட்டாலும் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். ஒரு சமயம், நான் ஒரு வாழும்கலை ஆசிரியரை நக்சலைட்டுகளிடம் பேசுமாறு அனுப்பி வைத்தேன்.  துப்பாக்கிகளுடன் இருந்த நக்சலைட்டுகளிடம் ஆசிரியர் சென்று பிராணாயாமம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவர்கள்," ஏன் செய்யவேண்டும்? எங்களுக்கு அதனால் என்ன கிடைக்கும்? என்று கேட்டனர். ஆசிரியர்," நீங்கள் படபடப்பாக இருக்கிறீர்கள் அல்லவா? பயமும் இருக்கிறது. இதை செய்தால் உங்கள் வலிமை கூடும் என்று பதிலுறுத்தனர். அவர்கள் "ஒ அப்படியா? சரி கற்றுக் கொள்கிறோம்" என்று கற்க முன்வந்தனர். பிராணாயாமம் கற்றுக்கொண்ட பின்னர் அவர்கள் துப்பாக்கிகளை மீண்டும் எடுத்துக் கொள்ளவேயில்லை. இவையெல்லாம் கற்பிக்கும் திறன்கள்.
யோகா செயல் திறன். “யோகஹ  கர்மாசு கௌஷலம் இதுதான் பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது. யோகா என்பது செயலில் திறன்.

சாதரணமாக, என்  மனம் எங்கும் அலை பாய்ந்து கொண்டிருக்கின்றது. அது ஓரிடத்தில் நிலைத்து நிற்ப்பதில்லை. என்னால் தியானம் செய்ய முடியவில்லை" என்று மக்கள் கூறுவதுண்டு. இப்போது நீங்கள் 20 நிமிஷங்கள் தியானம் செய்தீர்கள். உங்களை அமைதிப்படுத்தியது அல்லவா? மனதை அமைதிப்படுத்தத் தேவையானது அந்த சிறிய செயல் திறன் தான்.மனதில் எந்த எண்ணமும் இன்றி ஆழ்ந்த தியானத்திற்கு செல்வது அவ்வளவு கடினமானது அல்ல. உங்களுக்குத் தேவையானது  செயல் திறனேயாகும்.

சூரிய வணக்கம் சமயம் சார்ந்தது என்னும் சர்ச்சை வேதனையை ஏற்படுத்துகிறது. சூரிய நமஸ்காரத்தின் போது மந்திரங்கள் ஜபிக்கப்படவில்லை எனிலும் அது ஒரு அழகான யோகா அல்லவா?

நமஸ்காரம் என்னும் சொல்லுக்கு இரண்டு பொருட்கள் உள்ளன. ஒன்று வழிபாடு மற்றொன்று வாழ்த்து. நீங்கள் ஒருவரைச் சந்திக்கும் போது, நமஸ்கார் என்று கூறுகின்றீர்கள். அவரை வாழ்த்துகிறீர்கள் என்பது பொருள், அவரை வழிபடுகிறீர்கள் என்பது அல்ல. நான் கூறுவது புரிகிறதா? அச்சொல் வழிபாடு மற்றும் வாழ்த்து இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது இந்தியாவில் இது ஒரு பெரும் வாக்குவாதமாகி விட்டது. ஏனெனில் அது சமயச் சாயலை அதிகப்படியாக கொடுக்கக் கூடும்.

அது போன்று, பல்வேறு விதமான மந்திரங்களும் ஒலி அதிர்வலைகள் தாம். ஒலி அதிர் வலைகள் உடலின் பல பகுதிகளில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, ஒருவர் அழுத்தத்தில் இருக்கும் போது, அவரிடமிருந்து என்ன ஒலி எழுகின்றது? ஹூம் என்பது தான். இந்த ஹூங்காரம் ஓர் மந்திரம். தேவி பாகவதத்தில் ஒரு கதை உள்ளது. அசுரர்கள் தாக்குவதற்கு முனைந்த போது, தெய்வத்தாய் எழுந்து ஹூம் என்ற ஒலியினை எழுப்பினாள். அனைத்து அசுரர்களும் அழிந்து சாம்பலாகி விட்டனர்.

இந்தக் கதையின் பொருள் என்ன? அதிக அளவு எதிர்மறை மனதில் எழும்போது, நமது உடலுக்குள்ளேயே கட்டமைக்கப்பட்ட ஓர் இயந்திர நுட்பம் உள்ளது. அது ஹூம்காரம் ஆகும். ஆழ்ந்து ஓர் மூச்செடுத்து ஹூம் என்றால் எதிர்மறைகள் அகன்று விடும். ஆகவே இந்த ஒலிகளுக்கு அவைகளுக்கே உரித்தான அதிர்வலைகள் உள்ளன. அது நமது அமைப்பிற்கு முக்கியமானது ஆகும். யாருக்கேனும் தடையிருந்தால், அவர்கள் அதை செய்ய வேண்டியதில்லை.

குருதேவ்,உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றனவா? அவ்வாறு ஏற்பட்டால், அவற்றை எவ்வாறு கையாளுகிறீர்கள்?

நீங்கள் அந்த எண்ணங்களே அல்ல, அன்பானவரே! எண்ணங்கள் என்பவை வரும், போகும். அவை வட்டமிட்டுத் திரிந்து கொண்டேயிருக்கும். நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகின்றேன். யாரையாவது கொல்ல வேண்டும் என்னும் எண்ணம் எப்போதாவது தோன்றியிருக்கின்றதா? " இல்லை, அது எனக்கு இயற்கையானது அல்ல" என்றே கூறுவீர்கள். அவ்வாறாயின் ஏன் யாரோ ஒருவருக்கு அந்த எண்ணம் தோன்றுகிறது? ஓர் எதிர்மறை எண்ணத்தினை நீங்கள் அடையும் போது மற்ற அனைவரும் அதே போன்ற எண்ணத்தினையே அடைவார்கள் என்று நினைக்கின்றீர்கள்.

குழந்தையாக இருந்தபோது,எந்த விதமான எதிர்மறை எண்ணங்களும் உங்களுக்கு ஏற்பட்டதில்லை. கவலைகள், பயங்கள் இருந்தாலும் யாரையும் கெட்ட விதமாக எண்ணியதில்லை.அல்லவா? அதை நீங்கள் அனுபவித்தறிந்திருக்கின்றீர்கள்.மூன்று வயதுக் குழந்தையாக இருந்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். உலகம் உங்களுக்கு அப்போது எப்படி இருந்தது? ஒரு சிறிய உலகம். எதிர்மறை ஏதேனும் இருந்ததா என்ன? ஏன்?


எதிர்மறை என்பது எலேக்ட்ரானை போன்றது. அது வெளிவட்டத்திலேயே இருக்கிறது. உங்கள் இருப்பின் உள்ளகத்தில் அனைத்தும் நேர்மறையே ஆகும். எந்த எதிர்மறை எண்ணமும் உங்களுடையது அல்ல. அவை வந்து  சுற்றிக் கொண்டிருக்கின்றன, அவைகளைப் பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள்.

யோகா : ஓர் புதிய பரிமாணம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூன், 2015, 

நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடுகள்


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் வாழும் கலையும், முதல் சர்வதேச யோகா தினத்தினை கொண்டாடும் விதமாக நியூ யார்க் லிங்கன் சென்டரில் ‘யோகா ஓர் புதிய பரிமாணம்’ என்னும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தனர். யோகாவின் வளமான பாரம்பரியம் மற்றும் ஆழமான மதிப்புகள் ஆகியவற்றை உயர்த்திக் காட்டும் வகையில், ஆன்மீக விவாதம், நடனம், இசை மற்றும் குருதேவ் தலைமையில் ஒரு வழிகாட்டுதல் தியானம் முதலானவை அந்த இனிய மாலைப்பொழுதில் நடைபெற்றன. குருதேவ் அவர்களின் உரை கீழே தரப்பட்டுள்ளது.

ஆஹா! (சர்வதேச யோகா தின) கொண்டாட்டம் தொடர்கின்றது.சாதரணமாக, பலூன்கள், மதுபானம், அதிக உணவு வகைகள்,ஆகியவற்றுடனேயே கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனால் இந்தக் கொண்டாட்டம் வித்தியாசமாக உள்ளது. இந்தக் கொண்டாட்டத்தில் மக்கள் வெறும் வயிற்றுடன் வந்தார்கள். உலகெங்கும் மக்கள் காலை விரதத்துடன் வந்து யோகா செய்து மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள். எனவே இந்தக் கொண்டாட்டம் ஓர் வித்தியாசமான கொண்டாட்டம். பலூன்கள் இல்லை, மாசு இல்லை அனைவரும் கொண்டாட்ட மனஅலையுடன் ஒன்றிணைந்து வந்திருக்கின்றனர்.

உண்மையான கொண்டாட்டம் உள்ளிருந்தே துவங்குகின்றது. அது ஒப்பனைக் கொண்டாட்டமல்ல, ஆழமாக உள்ளிருந்து எழுவதாகும், மேலும் யோகா ஒரு முறைசாராக் குடும்ப ஒன்றுகூடுதல் போன்ற சூழலை ஏற்படுத்துகின்றது. இங்கு நீங்கள் அனைவரும் குடும்பம் போன்று ஒன்றியிருக்கின்றீர்கள் அல்லவா? நிமிஷநேரம் எடுத்துக் கொண்டு, அருகில் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரை நாம் முகமன் கூறி வாழ்த்தலாமா? செய்யலாமா? சொற்களை விட அதிர்வலைகளின் மூலம் நாம் அதிகம் வெளிப்படுத்துகின்றோம். நமது இருப்பின் ஆழத்திலிருந்து நமது தொடர்புகள் நிகழ்கின்றன. யோகா அதனுடன் இணைகின்றது.

நாம் இரண்டு மணி நேரத்திற்கு காதல் பற்றி பேசிக் கொண்டிருக்கலாம். அதை பெரிதாக நீங்கள் உணரமாட்டீர்கள். ஆனால் குழந்தையின் அல்லது ஒரு சிறிய நாய்க்குட்டியின் ஒரே ஒரு பார்வை  அன்பினை க்ஷணநேரத்தில் உங்களுக்குத் தெரிவிக்கும். உண்மையான தொடர்பு உள்ளிருந்தே எழுகின்றது. இது இரண்டு தனி மனிதருக்கிடையே அல்லது சிலருக்கிடையே மட்டும் நிகழ்வது அன்று. இது நமக்கும் இந்தப் படைப்பு முழுமைக்கும் இடையே நிகழ்வதாகும். அதுவே யோகா. யோகா என்பது சில உடற்பயிற்சிகள் அல்ல. அதையும் தாண்டி மேலானது. நமது வாழ்க்கையில் நல்ல தரத்தினை எடுத்து வருவது. நமது விழிப்புணர்வினை விரிவுபடுத்தி, நமது அறிவினைக் கூர்மையாக்கி, நமது உள்ளுணர்வுத் திறனை ஊக்குவிப்பது ஆகும். நாம் ஆறாவது அறிவு என்னும் பரிசினைப் பெற்றவர்கள். அதை வாழ்வின் களேபரங்களில் இழந்து கொண்டு வருகிறோம். 35 ஆண்டுகளுக்கு முன்னர் நான் யோகவினை பற்றிப் பேசும் போது, மக்கள்," இது எங்களுக்கானது அல்ல, வேறு வகையானவர்க்களுக்கானது ஆகும்’ என்று கூறியதுண்டு.

பொது மக்களிடையே யோகா சாதாரணமானவர்களுக்கு உகந்ததல்ல என்னும் எண்ணம் நிலவி வந்தது. உங்களில் எத்தனை பேர் பழமையான இந்த கலைக்கு எதிர்ப்பினைக் கண்டிருக்கின்றீர்கள்? (கூட்டத்தில் சிலர் கை உயர்த்துகின்றனர்). யோகா என்பது ஐக்கியம். ஒன்றிணைவு என்பதைக் குறிக்கும் யோக் என்னும் சொல் யோகாவிலிருந்து வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? யோகா நமது இதயம்,மனம், உடல், மற்றும் ஆத்மாவினை இணைக்கின்றது.சுற்றியிருப்பவர்களுடன் நம்மை இணைக்கின்றது.

யோகாவில் நீங்கள் ஆழ்ந்து முன்னேறிச் சென்றால், யோகா முட்டாள்தனமானது என்று கூறுவீர்கள். ஆச்சர்யமாக இருக்கிறதா? அதிர்ச்சியாக இருக்கிறதா? (கூட்டத்தில் அனைவரும் ஆம் என்று கூறுகின்றனர்.) இது உண்மையானதே.ஏனெனில் இரண்டு என்பதே கிடையாது. வெவ்வேறாக இரண்டு பொருட்கள் இருந்தால் தான் அவற்றை நீங்கள் இணைக்க முடியும். ஆனால் எதுவுமே தனித்தனியாக இல்லாத போது ஒன்றிணைப்பு என்பது எவ்வாறு நிகழும்? ஒருமைப்படுத்துதல்  என்பதே ஓர் மாயை. இதுவே ஞான யோகா. இரண்டு என்பதே  இல்லை, நாம் அனைவரும் ஒன்றே. ஒருங்கிணைத்தல் என்பது முயற்சியைக் குறிக்கிறது. வலது கையை இடது கையுடன் இணைக்கவேண்டுமெனில் அது முயற்சியினைக் காட்டுகிறது. ஆனால் விழித்தெழுந்து பாருங்கள்! அவையிரண்டும் உங்களது கைகள். அவை ஏற்கனவே ஒன்றாகவே இருக்கின்றன. என் கைகள் இரண்டையும் நான் ஒருமைப்படுத்துகின்றேன் என்று நீங்கள் கூற முடியாது. அவை ஏற்கனவே இணைந்திருக்கின்றன. இதுவே ஞான யோகா.

பக்தி யோகா என்பது வேறொன்றும் இல்லை, அனைத்தும் என்னில் ஓர் பகுதி அனைத்தின் மீதும் ஆழ்ந்த பெருமதிப்பும் ஆழ்ந்த அன்பும் உள்ளதே பக்தி யோகா. பின்னர் வருவது கர்ம யோகா. முழு ஆர்வத்துடன் முழு கவனத்துடன் எதையும் செயல்படுத்துவதே கர்ம யோகா. நாம் வாழ்வில் பல பங்குகளை வகிக்கின்றோம். ஒவ்வொரு பங்கையும் ஆர்வம்,பொறுப்பு, கவனம் அக்கறையுடன் வகிக்கின்றோமா? இது கர்ம யோகா.

ஹத யோகா என்பது நீங்கள் உணரும் ஆற்றலை தாண்டி நீட்டிச்செல்வது ஆகும்.இவையனைத்தும் யோகாவின் பல்வேறு விதங்கள் ஆகும். நாம் அனைவரும் ஒன்றே. இதையே குவாண்டம் இயற்பியல் மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ் ஆகியவை கூறுகின்றன. குவாண்டம் இயற்பியல் நிபுணரைக் கேட்டால், "அனைத்தும் அலைகளே" என்றே கூறுவார். அதையே தான், ஞான யோகாவும் கூறுகின்றது. வாழ்வில் இரண்டும் தேவை. அதாவது  குவாண்டம் இயற்பியல் பற்றிய ஒரு புரிதலும் (முழுமை) மற்றும் பாரம்பரிய வேதியியல் (சார்பியல்) ஆகிய இரண்டையும் பற்றிய புரிதல் தேவை.  

இந்தத் துறையில் ஒரு பெரிய குழப்பம் உள்ளது. பலர் என்னிடம் "இத்தகைய சிறப்பு மிக்க ஞானம் செறிந்த இந்தியா கடந்த சில நூற்றாண்டுகளாக பிற்போக்காக இருப்பது ஏன்? என்று கேட்டதுண்டு. இது ஏனெனில்,குவாண்டம் இயற்பியல் மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ் இரண்டுக்குமிடையே ஒரு குழப்பம் இருப்பது தான். நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், இரண்டிற்கும் அததற்கு என்று தனி இடம் உள்ளது. இரண்டுமே அத்தியாவசியமானவையாகும். பாருங்கள், இந்த அரங்கத்தில் அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டிருக்கின்றது. இதுதான் குவாண்டம் மெகானிக்ஸ் அதே சமயம் கதவு தரை அல்ல, தரை கூரையல்ல, கூரை சோபா அல்ல, இதுவே பாரம்பரிய வேதியியல். இரண்டிற்கும் அதற்குறிய இடம் உள்ளது. இரண்டுமே உண்மை. ஆனால் ஒரு தனித்தன்மை உண்டு. அதை காண்பதே விவேகம். 

வாழ்வில் எது தாற்காலிகமானது எது நிரந்தரமானது நாம் எதைச் செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் கண்டறிந்து கொள்வதே விவேகம்.

இவற்றையெல்லாம் கேட்ட பின்னர், நீங்கள் “கடவுளே! இவையெல்லாம் மிகக் கடினமானவையாக தோன்றுகிறதே" என்று எண்ணலாம். சற்றே இளைப்பாறுங்கள்! யோகா ஓர் விளையாட்டு. யோகா அடக்கம் மற்றும் நகைச்சுவை இரண்டையும் அளிப்பது. இரண்டுமே உங்கள் இயல்பு.அடக்கமும், நகைச்சுவையும் இல்லையெனில் இந்த உலகம் மிகக் கடினமானதாக இருக்கும். இதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? அனைத்துப் போர்களும் தான் எனும் அகந்தை,அடக்கமின்மை,நகைச்சுவையற்ற நிலை இவற்றால் எழுவதுதான். ஒருவரின் ஓர் சிறிய சொல்,ஓர் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. சிறிய விஷயங்கள் பெரும் அழிவை ஏற்படுத்தி விடுகிறது. ஏனெனில் நகைச்சுவை உணர்வு இல்லை. யோகா ஓர் விளையாட்டில்லை ஆனால் அதே சமயம், விளையாட்டுகள் நிறைந்தது.

நான் இயல்பாக இருக்கின்றேனா? நான் என்னுடனும், என்னை சுற்றி இருப்பவர்களுடனும் தொடர்பு கொள்கின்றேனா அல்லது என் சுய உருவத்தினை பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றேனா? பிறர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றே எண்ணிக் கொண்டிருக்கின்றேனா? என்று இன்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஆரம்ப காலத்தில் நாங்கள் யோகாவினைக் கற்றுக் கொடுக்கத் துவங்கிய போது இது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. மக்கள் ரகசியமாக யோகா செய்ய வந்து,"நான் யோகா செய்வதை யாரிடமும் கூறிவிடாதீர்கள்,ஏனெனில் அவர்களுக்கு புரியாது. நான் ஏதோ பைத்தியக்காரத்தனமாக செய்து கொண்டிருப்பதாக எண்ணி விடுவார்கள்“ என்று கூறியதுண்டு. அதிர்ஷ்டவசமாக அத்தகைய வெறுப்புணர்வு இன்று மறைந்து விட்டது.

முன்னுதாரணங்கள் மாறிவிட்டன.ஐநா சபை 21 ஜூன் சர்வதேச யோகா தினம் என்று அறிவித்தத்தை அடுத்து, யோகாவை பற்றி சரியாகத் தெரியாமல் இருந்தவர்களும் கூட அதை முயன்று பார்க்க முன்வந்துள்ளனர். உங்களை மகிழ்விக்கும் உங்கள் உற்சாகத்தினை அதிகரிக்கும், உங்களை வலிமை,துடிப்பு மற்றும் சக்தி வாய்ந்தவராக ஆக்கும் ஒன்றினை ஏன் நீங்கள் செய்யக் கூடாது? இது வெறும் உடற்பயிற்சியல்ல. மக்களுக்கு சரியான புரிதல் இல்லாததால் இதனை உடற்பயிற்சியாக மட்டுமே கருதுகின்றனர். இன்று காலை, ஐநாவில் யோகாவும் தியானமும் செய்த போது, பலர் முதல் முறையாக செய்தனர். மிகவும் நன்றாகவே உணர்ந்தனர். அது மனதில் சிறந்த தெளிவை ஏற்படுத்தியதால், பலர் "ஒவ்வொரு ஒப்பந்தப் பேச்சு வார்த்தைக்கும் முன்னரும் நாம் தியானம் செய்து கொள்ள வேண்டும்" என்று கூறினர். ஒப்பந்தங்கள், பேச்சு வார்த்தைகள், உரைகள், நிகழ்த்தும்போதும் அழுத்தம் ஏற்படுகின்றது. நம்மை அழுத்தத்திலிருந்து முற்றிலும் விடுபடச் செய்வது யோகாவேயாகும்.

கடந்தகால நினைவுகளை விட்டு விடுங்கள்

சனிக் கிழமை, 13 ஜூன்,2015

பெங்களூரு, இந்தியா


குருதேவ், தாங்கள் நிகழ் தருணத்திலேயே ஆனந்தம் உள்ளது என்று கூறுகின்றீர்கள். ஆனால் என்னை நிகழ்காலத்தில் முற்றிலுமாக இருக்கவிடாமல் கடந்த கால சில நிகழ்வுகள் பிடித்து வைத்துக் கொள்கின்றன. விருப்பம் இருந்தாலும் பல சமயங்களில் என்னால் முழுவதுமாக நிகழ் தருணத்தில் இருக்க முடிவதில்லை. நான் என்ன செய்வது?

நீங்கள் தலையைப் பின்புறமாக திருப்பி வைத்துக் கொண்டு முன்னோக்கி நடக்க வேண்டும் என்று முயற்சி செய்தால் அது எப்படி சாத்தியமாகும்? சற்றுக் கண் விழித்துப் பாருங்கள். எது நடந்ததோ அது நடந்து முடிந்து விட்டது. ஒவ்வொரு கணமும் வாழ்க்கை புதியதே ஆகும்.இப்போதுள்ள, இந்த க்ஷணத்திலுள்ள வாழ்க்கையின் மீது கவனம் செலுத்துங்கள். "ஒ! ஏன் இவ்வாறு நடந்தது? ஏன் அவ்வாறு  நடக்கவில்லை?"  என்றெல்லாம் கேள்வி கேட்பதை விட்டு விடுங்கள். கடந்த காலத்தை திரும்பத் திரும்ப எண்ணிப் பார்ப்பதில் எந்த லாபமும் இல்லை. போகட்டும் விடுங்கள்!

குருதேவ், முக்கியமாக என் மனைவியாக இருக்கும் போது அதிலும் அவள் கவனிக்காமலோ அல்லது புரிந்து கொள்ளாமலோ இருக்கும் பட்சத்தில் எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கலாம் ?

எனக்கு இந்த விஷயங்களில் அனுபவம் இல்லை! (சிரிப்பு ) நான் எவ்வாறு பதில் கூற முடியும்?  வீட்டின் அதிகாரியாக அவள் இருப்பதால், நீங்கள் அவளை அனுசரித்து செல்வது நல்லது என்று கூறுவேன். அவள், வீட்டின் பிரதமர் போன்றவள். நீங்கள் என்ன செய்ய முடியும்? ஏதோ ஓர் வழியில் நீங்கள் அவளுடன்  பேசி, புரிந்துகொள்ள வையுங்கள்.உங்களுக்கு தெரியவில்லையெனில், பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதைப் பற்றி ஒரு சிறிய கதை உண்டு. ஒருவரின் மனைவி அவர் சொல்வதற்கு முற்றிலும் எதிர்ப்பதமாகவே அனைத்தையும் செய்து வந்தாள். அவர்," இன்று இரவு உணவுக்கு குழம்பு வேண்டாம் என்று கூறினால் குழம்பு மட்டுமே இரவு உணவுக்குத் தருவாள். இன்று நீலநிறச் சட்டை அலுவலகத்திற்கு அணிய விருப்பமில்லை என்று கூறினால் மற்ற அனைத்து சட்டைகளையும் துவைக்கப் போட்டு விட்டு, அந்த நீலநிறச் சட்டையை மட்டுமே இஸ்திரி போட்டு வைப்பாள். அவர் வெளியில் உணவருந்த வேண்டாம் என்று நினைக்கும் தினத்தில், நிச்சயமாக வெளியில் சென்று உண்ண வேண்டும் என்று வற்புறுத்துவாள். இவற்றால்  அந்த கனவான் மிகவும் மனவருத்தம் அடைந்தார்.

இந்தியாவில் உருக்குலைந்த கணவர்கள் சங்கம் என்று ஒன்று உண்டு என்பதைக் கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? சில காலத்திற்கு முன்பு நான் பெண்ணுரிமைகள் பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதியிருந்தேன். இந்த சங்கத்தின் உறுப்பினர் ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவர்,"குருதேவ்! என் இவ்வாறு பெண்களிடம் பாரபட்சமாக இருக்கின்றீர்கள்? ஆண்கள் மீது சற்று கருணை காட்டுங்கள்! நாங்கள் இந்தக் காரணத்தாலேயே உருக்குலைந்த கணவர்கள் சங்கம் என்று ஒரு சங்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம்." என்று எழுதியிருந்தார். அது போல இந்தக் கனவானும் அச்சங்க உறுப்பினராக இருந்திருக்கலாம். மன உளைச்சல் காரணமாக பலர் அமைதியின்றி தனியாகவே நடைப்பயிற்சி செய்வார்கள். அது போன்று ஒரு நாள் இந்தக் கனவான் சாலையில் நடந்து கொண்டிருந்தார். அங்கு தற்செயலாக ஒரு துறவியை சந்தித்தார்.  துறவி, " என்னவாயிற்று?" என்று கேட்டார். கனவான், "துறவியே! நானிருக்கும் நிலையை நீங்கள் எவ்வாறு அறிவீர்கள்? நீங்கள் எப்போதுமே ஆனந்தமாக பேரின்ப நிலையிலேயே இருக்கின்றீர்கள்" என்று பதில் கூறினார். பின்னர் துறவியிடம் கனவான் தனது கதையைக் கூறினார். முழுக் கதையையும் கேட்ட பின்னர் துறவி கனவான் காதில் ஒரு மந்திரத்தைக் கூறி, இதை முயற்சி செய்து என்ன நடக்கிறது என்று பார்" என்று கூறினார்.

அம்மனிதர் திரும்பச் சென்று, துறவி கூறியதைச் செய்தார். ஆறு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் துறவியைச் சந்தித்தார். இந்த முறை, கனவான், மிகுந்த மகிழ்ச்சியுடன் "துறவியே! உங்கள் மந்திரம் மிக நன்றாக வேலை செய்தது" என்று கூறினார்.அச்சமயம் வேறொருவர் அங்கு இவர்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரும் துறவியிடம்,அது என்ன மந்திரம் என்று எனக்கும் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டார். துறவி, "இந்த மாதிரியான சூழ்நிலையில், எப்போதுமே உனக்கு என்ன வேண்டுமோ அதற்கு எதிரானதையே கேள். உனக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்காதே. என்ன கேட்கிறாயோ அதை விரும்பாதே" என்று கூறினார். முதலில் இவ்வறிவுரையை ஏற்ற கனவான் அதையே ஆறு மாதங்கள் தினமும் செய்திருந்தார்.குழம்பு வேண்டாம் என்றால் அந்தக் குழம்பு தான்  கட்டாயம் வேண்டும் என்று கேட்டிருந்தார். நீலநிறச் சட்டை வேண்டுமென்றால் அது வேண்டவே வேண்டாம் என்று மனைவியிடம் கூறியிருந்தார். அவர் நிலைமையை சமாளித்து பிரச்சினையின் ஆணிவேரைக் களைந்திருந்தார். இது ஒரு திறன். யோகா இத்தகைய திறனை எடுத்து வரும். தொடர்பில் சிறந்த திறமையை அளிக்கும். இந்த அளவு கற்றுக் கொண்டாலும் பல பிரச்சினைகளை சமாளிக்கலாம். யாரும் என்னை புரிந்து கொள்வதில்லை என்று பலர் குறைப்பட்டு கொள்வதைக் கேட்டிருகின்றோம். உண்மையான பிரச்சினை என்னவென்றால், உங்களை சரியாக வெளிப்படுத்த நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்பதேயாகும். உங்களால் பிறரைப் புரிந்து கொள்ள வைக்க முடியவில்லை. இதுதான் சாரம்.

என்னால் என் பணியின் காரணமாக தினமும் ஒழுங்காக பயிற்சி செய்ய முடிவதில்லை. ஆனால் சீராக செய்ய வேண்டும் என்னும் விருப்பம் உள்ளது. நான் என்ன செய்வது ?

சரி ! நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பணிக்கு செல்ல வேண்டுமென்பதால், பல் தேய்க்காமல் சென்று விடுவீர்களா? ஏராளமான வேலைகள் இருந்தாலும் பல் தேய்க்காமல் செல்வீர்களா? எனக்கு ஏராளமான பணிகள் உள்ளன. இன்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தேன். அதிகப் பணி இருப்பதால் தண்ணீர் குடிக்காமல் இருந்து விடுவீர்களா? இன்று அதிக வேலையிருக்கிறது என்பதால் எழுந்தவுடன் பான்ட் சட்டை மட்டும் மாற்றிக் கொண்டு பணியிடத்திற்குச் சென்று விடுவீர்களா? கழிப்பறைக்குக் செல்ல மாட்டீர்களா? ஒருநாள் பல் தேய்க்காவிட்டால் யாரும் உங்கள் அருகில் கூட உட்கார முடியாது. எனவே தினமும் பல் தேய்க்க வேண்டியது அவசியம். இது பல் சுத்தம். அதே போல், பிராணாயாமம் மற்றும் தியானம் செய்வது மனச் சுத்தம்.

மனதை அழுத்தங்களிலிருந்து விடுவித்து மகிழ்ச்சியான மனதுடன் பணிக்குச் செல்ல ஒவ்வொரு நாளும் சில நிமிஷ நேரம் ஒதுக்குவது நல்லது. இதற்கென்று நேரம் ஒதுக்குங்கள். வழக்கத்திற்கு வந்தவுடன் பயிற்சி, உங்கள் தினத்தின் ஒரு பகுதியாகி விடும். எவ்வளவு அவசரமாக இருந்தாலும் 10 நிமிட நேரத்தை ப்ராணாயமம், தியானம் செய்ய ஒதுக்குவேன் என்று உறுதியெடுத்து கொள்ளுங்கள். இந்த ஒழுங்கிற்கு நீங்கள் வருவது தான் முக்கியம். ஒரு நாளில் ஒரு முறை பயிற்சி செய்தாலும் போதும். அப்படி ஒரு நாள் தவறி விட்டாலும் பரவாயில்லை. அதைப் பற்றி அதிகக் கவலைப்படாதீர்கள். அடுத்த நாள் செய்யுங்கள். ஆனால் செய்வதற்கு நேரமில்லை என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒவ்வொருவருக்கும் 24மணி நேரம் உள்ளது.சாதாரணப் பணியிலிருப்பவருக்கும் 24மணி நேரம் தான், பிரதமருக்குக் கூட 24 மணி நேரம் தான் உள்ளது. இருவருமே நேரம் போதவில்லை என்றே கருதுகின்றனர். நமக்கிருக்கும் நேரத்தில் நம்மால் எவ்வளவு செய்ய முடிகிறது என்பதுதான் நமது திறனின் அளவுகோல்.

முதலில் பயிற்சி செய்து விட்டுப் பின்னர் தியானம் செய்ய வேண்டுமா அல்லது மாறாகவா? தயவு செய்து வழிகாட்டுங்கள்?

பயிற்சிகளை முடித்து விட்டுப் பின்னர் தியானம் செய்வது நல்லது.காலையில் எழுந்தவுடனேயே   தியானம் செய்து விட்டு பின்னர் பயிற்சிகளையும் செய்யலாம்.இரண்டுமே சரிதான். இரண்டு முறைகளையும் முயன்று, எது உங்களுக்குப் பொருந்தி வருகிறது என்று பாருங்கள். பிரம்ம முஹுர்த்தத்தில் (அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையில்) தியானம் செய்வது நல்லது. அதற்காக உங்கள் தூக்கத்தை துறந்து விட்டு அந்த நேரத்தில் தியானம் செய்வதற்காக எழ வேண்டும் என்பதில்லை.

குருதேவ், எவ்வாறு ஒருவர் கடந்தகால உடலுறவு நினைவுப் பதிவுகளைளிருந்து வெளி வருவது?

அதிலிருந்து வெளிவர வேண்டும் என்னும் முயற்சியே அதை மேலும் கடினமானதாக (அந்த உணர்வை அல்லது நினைவுப்பதிவை ஆழமானதாக )ஆக்கும். சற்று அதிகப் பிராணாயாமம் செய்து இளைப்பாறுங்கள். அப்போது படிப்படியாக நீங்களாகவே அந்த எண்ணங்களைக் கடந்து அவை உங்களை தொல்லை செய்யாமல் இருப்பதைக் காண்பீர்கள். பின்னர் வரவே வராது.

அன்பு நிபந்தனையற்றது என்றால், ஏன் நாம் அன்புக்குறியவர்களிடமிருந்து எதையேனும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்?

எதிர்பார்ப்புக்கள் இயல்பானவை. அவை எழும் போது, அத்தகைய எதிர்பார்ப்புக்கள் உங்களுடைய சந்தோஷத்தை குறைப்பவையே என்னும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். ஞானத்தில் நீங்கள் வளரும் போது, இத்தகைய பதிவுகள், தாமாகவே வீழ்ந்து,பெரிய, அழகான உங்களை, உண்மையில் காண்பீர்கள்.

நீ உன் எண்ணங்கள் அல்ல


சனிக்கிழமை, 13 ஜூன் 2015

பெங்களூர், இந்தியா


(கடந்த காலத்தை விட்டுவிடு என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி)

கேள்வி - பதில்கள்

என் எண்ணங்களின் (தோன்றுமிடம்) நானாக இருந்தால், அந்த மூலத்துக்கும், ஆன்மாவுக்கும் வித்தியாசம் இருக்கிறதா? அது இரண்டும் ஒன்றே என்றால் கெட்ட எண்ணங்கள் ஆன்மாவை பாதிக்குமா?

பார்! உனக்கு அந்த எண்ணம் நல்லது அல்லது கெட்டது என்று எப்போது தெரிகிறது?அந்த எண்ணம் வந்த பின்பே அது உனக்கு புரிகிறது. எண்ணம் தோன்றுவதற்கு முன், உன்னால் அதை தடுக்க முடியாது. அதை புரிந்து கொள்ளவும் முடியாது. அந்த எண்ணம் தோன்றி உடனடியாக மறைந்து விடும். எண்ணத்தை நீ ஒரு சாட்சி போல் பார்த்தால், சுலபமாக மறைந்து விடும். அதை அசை போட்டால், உன்னிடமே இருக்கும். எண்ணங்கள் தோன்றி மறையும் இயல்புடையவை. ஆனால் அந்த எண்ணங்களுக்குக் காரணமாக இருப்பது உன் ஆன்மா தான் நீ.  ஒரு வானத்தை போல் இருக்கிறாய். எண்ணங்கள் மேகம் போன்றவை, ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடியும். வானில் மேகங்கள் தோன்றி மறைகின்றன. இருந்தாலும் மேகங்களால் அளவிடற்கரிய வானத்தைத் தொட முடியுமா? முடியாது. கண்டிப்பாக முடியாது.

நீ விமானத்தில் போகும் போது, மேகங்களை விட உயரத்தில் பறக்கிறாய். அப்போது மேகங்களால் வானத்தை தொட முடியாது என்பதை  உணர்கிறாய்.ஆகாயம் ஒரு மாற்றமும் இல்லாமல் உள்ளது. மனதில் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. தியானத்தின் போது இது தான் நிகழ்கிறது. ஒரு சாட்சியாக எண்ணங்கள் வந்து போவதை நீ கவனிக்கிறாய். எண்ணங்களை பிடித்து வைக்க தேவையில்லை. அப்படி செய்வது முட்டாள் தனமாகும். நல்ல எண்ணங்களானாலும், கெட்ட எண்ணங்களானாலும் அவை தோன்றி மறைகின்றன. எண்ணங்களுக்கு அப்பால் மிக உயரத்தில் இருக்கிறாய். இதை விஹங்க வழி என்று சொல்வார்கள். எண்ணங்களைக் கடந்து மிக உயரத்தில் இருந்து அவை வந்து போவதை கவனிப்பது என்று பொருள்.

குருதேவா! இந்த உடலில் நான் இருக்கும் போதே உங்களோடு கலந்துவிட முடியுமா அல்லது அப்படி கலக்க நான் இந்த உடலைத் துறக்க வேண்டுமா?

இல்லை. அப்படி செய்யாதே. உடலைத் துறப்பதை  பற்றி நினைத்துக் கூடப் பார்க்காதே. இப்படிப் பட்ட விஷயங்களை யார் உனக்குச் சொன்னார்கள்? எப்போதும் நாம் ஒன்றாக தான் இருக்கிறோம். ஒன்றாக சேர்வதற்காக உடலைத் துறக்க வேண்டும் என்ற தவறான சிந்தனை வேண்டாம். இது முட்டாள் தனமாகும். இந்த உடல் எப்படி இருந்தாலும் ஒன்றாக கலக்க முடியாது. இவை தனித் தனியாகத் தானிருக்க முடியும். மூச்சின் நிலையைக் கவனித்தால் நாம் ஒன்றாக இருப்பதை உணரலாம்.இன்னும் ஆழ்ந்து சென்று சூட்சுமமான இருப்பின் நிலைகளுக்கு சென்று பார்த்தால், எல்லாமே நம் மனதில் தோன்றி விரிவடைவதைக் காண முடியும். எனவே முட்டாள்தனமான காரியம் செய்யாதே. தியானத்தில் ஈடுபடு. சேவை, சாதனை, சத்சங்கத்தை வழக்கமாக்கி கொள். விரைவிலேயே உன்னுள் அன்பும் மகிழ்ச்சியும் ஊற்றெடுப்பதை அனுபவத்தில் பார்க்கலாம். உனக்கு ஆழ்ந்த திருப்தி ஏற்படும்.

குருதேவா! ஒரே கோத்திரத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்ளலாமா?

நான் இந்த முறை ஹரியானா சென்றிருந்த போது, விஞ்ஞானிகளும் பொது மக்களும் என்னை சந்திக்க வந்தார்கள். இந்த விஷயத்தை பற்றி பல ருசிகரமான தகவல்களைச் சொன்னார்கள். பசுக்களின் பற்றி ஆராய்ச்சி நடத்தி (ஜீனியாலஜி),இந்த வகை பசுக்களின் மூதாதையர்கள் எங்கிருந்து வந்தன என்று கண்டுபிடித்தார்களாம்.

ஹரியானாவில் ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. அதனால் தான் அவர்களுக்குப் பிறக்கும் சந்ததியர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக சொன்னார்கள். இந்த ஆண்டில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில், ஹரியானாவை சேர்ந்தவர்கள் பத்தில் ஒன்பது மெடல்களை பெற்றதாகச் சொன்னார்கள். கோத்திர விதிகளை பின்பற்றி திருமணம் செய்வதால் மட்டுமே, விளையாட்டு போட்டிகளில் அவர்கள் குழந்தைகள் சிறந்து விளங்குவதாக நம்புகிறார்கள். மூன்று தலைமுறைக்கு தாய் வழி கோத்திரத்திலும் திருமணம் செய்ய மாட்டார்கள். அதனால் அங்கு பிறக்கும் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கின்றன. இவ்வழக்கம் நம் நாட்டில் பண்டைய காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வந்தது. மிருகங்களை வளர்ப்பதிலும் இதை நாம் பின் பற்ற வேண்டும்.

மிகவும் நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் கூடாது என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞான ரீதியாக இது சரி என்று தோன்றுகிறது. கோத்திர வழக்கம் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப் படுகிறது. அதே சமயம் இப்படிச் செய்யவே கூடாது என்று பிடிவாதம் பிடிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். பஞ்சாப்,ஹரியானாவில் பின்பற்றப்படும் கோத்திர வழக்கத்துக்கும், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கோத்திர வழக்கத்துக்குமிடையே வித்தியாசங்கள் இருக்கக் கூடும். கோத்திர விதிகளைப் பின்பற்றி முடிந்த வரையில் ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யாமலிருப்பது நல்லது.

குருதேவா! வேறு ஜாதியினர் திருமணம் செய்து கொள்வது பற்றி சொல்லுங்கள். என் நண்பன் ஒரு முகமதியப் பெண்ணைக் காதலிக்கிறான். திருமணம் செய்து கொள்ள ஜாதி பார்ப்பது அவசியமா?

எல்லா இடத்திலும் நல்லவர்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். பலமுறை மற்றவர் தம்மை ஏமாற்றி விடுவாரோ என்ற பயமிருக்கும். எனவே இது போன்ற சமயத்தில், நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கலந்து பேசி ஆலோசிப்பது நல்லது. காதலிக்கத் துவங்கும்போது, சரியாக பார்க்க மாட்டாய். தெளிவாகச் சிந்திக்க மாட்டாய்.எது சரி? எது சரியல்ல? என்று பார்க்க முடியாது. எனவே உன் தாய் தந்தையரைக் கேட்டுச் செய்வது நல்லது. எந்த மதமோ, ஜாதியோ, நீ திருமணம் செய்து கொள்ள விரும்புபவர் நல்லவராக, இதயபூர்வமாக விரும்புபவராக, நற்குணங்கள் படைத்தவராக இருக்கவேண்டும். உன் மதத்தை,ஜாதியை சேர்ந்தவர் கெட்ட வழக்கமுள்ளவராக இருந்தால், குடிப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தால், திருமணத்தால் என்ன பயன்? நற்பண்புகள் உடையவராக, மரியாதைக்குரிய குடும்பத்திலிருந்து வந்தவராக பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

எஞ்சிய வாழ் நாட்களை நான் ஆசிரமத்தின் வந்து சேவையில் கழிக்க விரும்புகிறேன். தற் சமயம் ஒரு பள்ளியில் ஹிந்தி மொழி கற்பிக்கிறேன். ஆசிரமம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. நான் இங்கு சேவைக்காக வரலாமா? எனக்கு வழி சொல்லுங்கள்.

இங்கு ஆசிரமத்தில் மனித வளத்துறை (எச்.ஆர்.டி) இருக்கிறது. நீ வேலை தேடிக் கொண்டிருந்தால் அவர்களைப் பார். நான் இந்த உலகம் முழுவதையும் என் ஆசிரமாகக் கருதுகிறேன். என்னை பொறுத்தவரை ஆசிரமம் என்பது நான்கு சுவர்களுக்குள் உள்ளதல்ல. ஆசிரமம் என்றால் என்ன? ஆசிரமம் என்றால் இந்த மூன்றும் எளிதில் கிடைக்கும் என்று பொருள்.
·         ஆசிரமத்தில் உன் மன நிலையை மேம்படுத்தும் ஞானம் பற்றிக் கேட்டு அறிந்து கொள்ளலாம். உரையாடலாம்.
·         நல்ல உணவு கிடைக்கும்.
·         நல்ல ஓய்வு கிடைக்கும்.

இப்போது சொல். இந்த மூன்றையும் உன் வீட்டிலேயே அடையக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த முடியாதா? யாராவது உன் வீட்டுக்கு வரும்போது அவர்களோடு அமர்ந்து ஞானம் பற்றி உரையாட முடியாதா? அப்படிச் செய்தால், அது உன் வீடு ஆசிரமாக ஆவதற்கு முதல் அடையாளமாகும்.

இரண்டாவதாக, வீட்டுக்கு வருபவர்களுக்கு உணவு கொடுக்காமல் இருக்கிறாயா? இந்தியாவில் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு சுவையான உணவு படைக்கும் வழக்கம் உள்ளது. இது உன் வீடு ஒரு ஆசிரமம் என்பதற்கான இரண்டாவது அடையாளம்.

மூன்றாவதாக, உன் வீட்டின் சூழ்நிலை வருபவர்களுக்கு மனஅமைதி மற்றும் ஆக்க சக்தி அளிப்பதாக இருக்க வேண்டும். வருபவர்கள் ஆழ்ந்த ஓய்வை அனுபவித்து, ஆறுதலோடு திரும்ப வேண்டும். உலகில் உள்ள அனைத்து இல்லங்களும் ஆசிரமமாக வேண்டுமென்று விரும்புகிறேன். மக்கள் வம்பு பேசுவதை கைவிட்டு ஞானம் பற்றி அறிந்து கொண்டு, வாழ்க்கையைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நான் யார்? வாழ்க்கை என்றால் என்ன? என்று சிந்திக்க வேண்டும். மூன்று விஷயங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. இதயத் தூய்மை, மனத் தெளிவு, நேர்மையான செயல். நம்மால் வாழ்க்கையில் மூன்றையும் கடைப்பிடிக்க முடியாதா? இவைகளை நீ பின்பற்றும் போது உன் வீடு ஆசிரமாக மாறிவிடும்.

ஆசிரமத்திலிருந்து, பெங்களூர் செல்லும் வழியில் பசுமாடுகள் குப்பைத் தொட்டியிலிருக்கும் குப்பைகளை உண்பதைக் காண்கிறேன். இதற்கு என்ன செய்யலாம் ? இந்தப் பிரச்சினை நாடு முழுதும் இருப்பதாக நினைக்கிறேன்.

நீ சொல்வது சரி. இந்தப் பிரச்சினை நாடு முழுதும் உள்ளது. இங்கு ஆசிரமத்தில் குப்பைகளை மாற்றும் துறைக்கு சென்று அவர்களுடைய பணிகளைப் பார்க்க வேண்டும். சுற்றி வாழ்பவர்களுக்கு ப்ளாஸ்டிக் பொருள்களை மற்ற குப்பைகளோடு சேர்த்து போடக்கூடாது, ப்ளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது என்று எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இங்கு ப்ளாஸ்டிக் பொருள்களை டீசலாக மாற்ற ஒரு யந்திரத்தை வைத்திருக்கிறோம்.தொண்டர்கள் அக்கம் பக்கத்திலிருக்கும் ப்ளாஸ்டிக் பொருள்களை சேகரித்து இந்த யந்திரத்தில் கொடுத்து தேவையான எரிபொருளாக மாற்றுகிறார்கள். அதேபோல் சமையல் அறையில் நறுக்கிய காய்கறிக் குப்பைகளையும், மீதமான உணவுப் பொருள்களையும் எரி வாயுவாக (பயோ காஸ்) மாற்றுகிறோம். ஒவ்வொரு நாளும் 400 – 500 கிலோ காய்கறிக் குப்பைகள் சேர்கிறது. இதனால் உருவாக்கப்படும் எரிவாயு சமைப்பதற்காக பயன்படுகிறது.இந்தத் தொழில் நுட்பங்களை ஒவ்வொரு கிராமத்திலும் சிறிய அளவில் துவங்க முடியும். குப்பைகளை உபயோகப்படுத்த முடியும். சுற்றுச் சூழல் மாசு படுவதை தடுக்கமுடியும். ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெறமுடியும்.இது மிகவும் முக்கியம்.

பசுக்களை கண்ட இடங்களில் மேய விடக்கூடாது. ப்ளாஸ்டிக் பைகளை குப்பையோடு சேர்த்துப் போடக்கூடாது. மற்ற உலோகங்கள், கனிவளப் பொருள்களையும் பொது இடங்களில் போடக் கூடாது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இப்படி செய்வதே மகத்தான தொண்டாகும். நீ யோக சாதனையால் பெற்ற சக்தியை நல்ல காரியத்துக்காக, சமூக நலத்துக்காக செலவிட வேண்டும். வீடு வீடாகச் சென்று பொது இடங்களில் குப்பை போடக்கூடாது என்று சொல்லி, சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

குருவின் ஒரு பகுதி

திங்கள்கிழமை, 8 ஜூன், 2015,

பெங்களூரு, இந்தியா


(தியானம் வெளிப்படுத்துதலை அளிக்கின்றது என்னும் இடுகையின் தொடர்ச்சி)

குருதேவ், ஏன் தனிமையில் பயம் கொள்கிறோம்? ஏன் எப்போதும் ஒருவருடன் கூட இருப்பதை விரும்புகிறோம்?

இவ்வாறு உணருவதற்கு காரணம் என்னவென்றால்,உங்களுக்குள் ஆழ்ந்து சென்றிருக்கவே இல்லை. சுயத்தினை சந்திக்கவே இல்லை. உள்ளிருக்கும் உண்மையான சுயத்தினை நீங்கள் விழிப்புணர்வுடன் அறிந்து கொள்ளும் கணத்தில் அனைத்து பயங்களும், எதிர்மறைகளும் உடனே மறைந்து விடும். எவ்வாறு ஒருவர் தனது உண்மையான சுயத்தினை சந்திப்பது? உங்களது பாத்திரங்களை சில நிமிஷங்களுக்கு ஒருபுறமாக ஒதுக்கி விட்டு, "நான் யார்" என்று எண்ணிப் பாருங்கள். இக்கேள்வியை கேட்டுக் கொண்டே இருங்கள். இடைவிடாமல் இந்தக் கேள்வியை உங்களையே நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி விடுவீர்கள். அப்போது நீங்கள் உண்மையை அறிந்து கொள்வீர்கள். அவ்வாறு நிகழும் போது,எந்த விதமான விரோதம், எதிர்மறை மற்றும் வெறுப்பு ஆகியவற்றுக்கும் இடமே இல்லை. சில க்ஷணங்களில் அவை மறைந்து விடும். ஆகவே இந்தக் கேள்விகளை உங்களையே கேட்டுக் கொண்டே இருப்பது மிக நல்லது. விரும்பினால் தினமும் சில நிமிஷ நேரத்திற்கு இதை செய்யலாம். தனிமையில் அமர்ந்து, "நான் யார்?" என்று கேட்டுக் கொண்டே இருங்கள். மனம் மௌனமாகி, அமைதியடைவதையும், மகிழ்ச்சியும் ஆனந்தமும் உங்களை நிரப்புவதையும் உணர்ந்தறிவீர்கள்.

குருதேவ், தர்மத்தின்படி, வெவ்வேறு ஜாதி மற்றும் வெவ்வேறு சமய கலப்புத் திருமணம் தவறானதா?

இல்லை. வேறு ஜாதி வேறு சமயம் ஆகியவற்றுக்கிடையே உள்ள திருமணம் என்பது இங்கு முக்கியமே அல்ல. முக்கியம் என்றால் பொருத்தம் மட்டும் தான்.உணர்ச்சி மிகுதியால், ஒருவரிடம் நீயில்லாமல் என்னால் வாழவே முடியாது என்று கூறாதீர்கள். உணர்ச்சி மிகுதியில் அவ்வாறு கூறினால் மிக விரைவிலேயே, “உன்னுடன் என்னால் வாழ முடியாது" என்று கூறுவீர்கள். அது கவிழ்ப்பது போன்றாகி விடும். அதனால், இந்த விஷயங்களில் மூத்தவர்களின் ஆலோசனையை கேட்டுக் கொள்ள வேண்டும்.

நான் ஒருவரை உண்மையாகவே விரும்புகிறேனா அல்லது அது வெறும் கவர்ச்சியா என்று எவ்வாறு தெரிந்து கொள்வது?

காலம் உங்களுக்குத் தெரிவிக்கும். அவர்கள் உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்கள் மீது மிக அதிகமான கோரிக்கைகளை திணிக்கும் போது நீங்கள் அவரை எந்த அளவு மதிக்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

குருதேவ், உங்கள் அழகு மற்றும் கவர்ச்சியின் ரகசியம் என்ன?

ஆங்கிலத்தில் "அழகு காண்பவரின் கண்களில் உள்ளது" என்று கூற்று உண்டு.யார் காண்கின்றாரோ அவரது கண்களிலேயே அழகு அமைந்திருக்கின்றது. உங்கள் மனம் சந்தோஷமாக, அமைதியாக இருக்கும்போது நீங்கள் மகிழ்ச்சியினை சுற்றியிருக்கும் உலகில் காண்கின்றீர்கள்.பார்ப்பவரெல்லாம் நல்லவராக தோன்றுகிறார்கள். மனதில் எதிர்மறைகளும், வெறுப்பும் நிறைந்திருக்கும் போது ஒவ்வொருவருமே எதிரியாகத் தோன்றுகிறார்கள். அனைத்துமே கண்ணோட்டத்தை பொறுத்தது தான். ஆஸ்ரமத்திற்கு வருவது நிச்சயமாக ஒருவரது உள்ளக் காட்சியினை மாற்றுகின்றது. அவ்வாறு நிகழவில்லையெனில், என்னிடம் அல்லது உங்களிடம் ஏதோ சரியில்லை. நீங்கள் வளர்ந்து வாழ்வில் முன்னேறுவதைக் காண்பது மட்டுமே எனது பணி. ஆன்மீகம் ஆனந்தத்தைத் தரவில்லையெனில் ஏன் அதை நோக்கி வருகின்றனர்? அது ஒரு சுமையாக இருந்தால், ஏன் அதை ஏற்றுக் கொள்கின்றனர்? நிச்சயமாக ஆன்மீகத்திலிருந்து நன்மை கிடைக்கிறது. அதனால் பலர் அதைப் பயிற்சி செய்கின்றனர். இயற்கை அதை இவ்விதமாக வடிவமைத்துள்ளது.

எவ்வாறு நான் நல்லறிவின் மீது இணக்கம் மற்றும் பற்றுக் கொள்வது?

உங்களுக்கு ஏற்கனவே அவை இருப்பதை உங்கள் கேள்வியே சுட்டிக் காட்டுகிறது. ஏற்கனவே இருப்பதை ஏன் தேடிக் கொண்டிருக்கின்றீர்கள்? நல்லறிவின் மீது இணக்கம் இல்லையென்று எண்ணினால், அதை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆனால் அது ஒருபோதும் நிகழப் போவதில்லை. உங்களுக்குள் சில விஷயங்கள் இருப்பதாக நீங்கள் கருதிக் கொள்ள வேண்டும். சில விஷயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும். சிலவற்றை நாம் முற்றிலும் நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அனைத்தும் தெரிந்திருக்க முடியாது. சிலவற்றை காரணம் கண்டு புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, யாரேனும்," இது விஷம், இதைக் குடிக்காதீர்கள்" என்று கூறினால் நீங்கள்," இது விஷம் என்று எப்படித் தெரியும்? உண்மையிலேயே விஷம் தானா என்று குடித்து பார்க்கிறேன்" என்று கூறமுடியாது. அந்த வித்தியாசத்தை கூற நீங்கள் உயிருடன் இருக்க மாட்டீர்கள். (சிரிப்பு) நான் கூறுவது புரிகிறதா?எனவே, சிலவற்றை நீங்கள் உண்மையென்று ஏற்றுக் கொண்டு விட வேண்டும், வேறு சில நீங்கள் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். சிலர் அவர்களைப் போன்றே இருப்பவர்களிடம் மட்டுமே பேசி பழகுவதாகக் கூறுகின்றனர். அது சரியல்ல என்றே நான் எண்ணுகின்றேன். ஒரே மாதிரியான எண்ணங்கள் நடத்தையுடையவர்களிடம் பழகி என்ன பயன்? உங்களைப் போன்று இல்லாதவர்களிடம் வித்தியாசமான எண்ணப் போக்கு, நம்பிக்கைகள் உள்ளவர்களிடம் பழகுவதே அதிக அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது.அது உங்கள் திறன்களை மேம்படுத்தி, உங்கள் மனதை  புதிய விஷயங்களுக்கு எடுத்துச் செல்லும். ஒரே விதமான சிந்தனை அமைப்புகள் மற்றும் கொள்கைகள் கொண்ட இந்த திடமான அடிப்படைவாத அணுகுமுறை.

நம் நாட்டில் ஒரு பொதுவான பின்தங்கிய அடையாளம் மற்றும் ஆச்சாரமாக உள்ளது. ஒருவர் சில கொள்கைகளை பின்பற்றி, அவ்வாறில்லாத மற்றவர்களிடமிருந்து தனித்து ஒதுங்கி, நம் நாட்டில் கம்யுனிஸ்டுகள் போன்று உள்ளனர். ஒரு கம்யுனிஸ்ட் தன்னுடைய கொள்கைகளில் பிடிப்புடன் இருந்தால் பிற சமய அல்லது கொள்கைவாதிகளிடம் பேச ஏன் அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? பெரும்பாலும் அவர்கள் தங்கள் கொள்கைகளை ஏற்காதவர்களிடமிருந்து விலகி ஓடி விடுகின்றனர். இது ஒரு விதமான கொள்கை அடிப்படையிலான தீண்டாமை என்றே நான் கூறுவேன். சமய அல்லது ஆன்மீகவாதிகள் என்று தங்களை கருதிக் கொள்ளும் சிலர் கூட இவ்விதமே நடந்து கொள்கின்றனர். கடவுள் நம்பிக்கையற்ற ஒருவரை சந்திக்கும் போது ஒதுங்கி விடுகின்றனர். இது ஒருவரது நம்பிக்கைகளில் வலிமை என்பதை விட அந்த மனிதரின் பலவீனம் என்ற அடையாளத்தையே காட்டுகிறது. நமது எண்ணங்கள், நம்பிக்கைகள் இவற்றில் நாம் நன்கு நிறுவப் பட்டிருக்கும்போது, நாம் தலை நிமிர்ந்து சுதந்திரமாக நடக்க வேண்டும்.

குருதேவ், நாங்கள் எவ்வாறு தங்களுடைய தலைசிறந்த படைப்பாக ஆக முடியும்?


நீங்கள் ஏற்கனவே அவ்விதமாகத்தான் இருக்கிறீர்கள்! நீங்கள் குருவின் ஒரு பகுதி, நீங்கள் குருவின் அமைதியினை எங்கும் சென்று பரப்பவேண்டும்.