எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது

திங்கள்கிழமை 25 மே 2015                   

பெங்களூர், இந்தியா


(“குரு நிச்சயமாக வேண்டும்“ என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி)

ஒருமுறை ஆசிரமத்துக்கு வந்து பாருங்கள். இறந்தவர்கள் கூட உயிர்பெற்று மகிழ்ச்சியடைவார்கள். இங்கு வந்து ஒருவர் பூமியில் சொர்க்கத்தை எப்படி அனுபவிக்க முடியும் என்று பாருங்கள். வாழ்நாள் முழுதும் நீங்கள் தேடிக் கொண்டிருந்தது இங்கு எளிதாக, வசதியாக உங்கள் மடியில் இருப்பதை காண்பீரகள். எனவே இந்த மாயத்தை, இங்கு ஒரு முறையாவது வந்து அனுபவியுங்கள். ஒரு முறை நீங்கள் உண்மையான ஞானத்தை அனுபவித்தால், நம் வாழ்க்கை உண்மையிலேயே எவ்வளவு அழகானது என்பதை உணர்வீர்கள்.

உலகத்தைப் பழி சொல்லாதீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களை சபிக்க வேண்டாம். அவர்கள் அனைவருமே கடவுளின் அற்புதமான படைப்பின் ஒரு பகுதி தான். எல்லாவற்றிற்குமே ஒரு நோக்கம் இருக்கிறது. இங்கு இருக்கும் எல்லாமே, உன்னை வலுவானவனாக்கும். அவை/ அவர்கள் உனக்கு நட்பானவர்கள் ஆனாலும் சரி, எதிரியாக இருந்தாலும் சரி. பூக்களின் பாத்திகளும் இருக்கும். அதன் முட்களும் இருக்கும். இரண்டுமே உன் ஆத்மாவை மலரச் செய்யும். உன்னை கவனித்துப் பார். உன் அனுபவத்தை கவனமாகப் பார். மற்றவர்களுடைய சீரற்ற பேச்சில் சிக்காதே. பின்பு உன் அனுபவம் உண்மையாகவும், ஆழமாகவும் இருக்கும்.

கண்களைத் திறந்து பார். எல்லா இடங்களிலும் நல்ல மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள். நீ பார்க்கும் சில பொல்லாத மனிதர்கள் கூட அன்புள்ளம் படைத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் பொல்லாதவர்களல்ல. துரதிஷ்டவசமாக,அதிர்ஷ்டம் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. அதனால் தான் தவறான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். என் பார்வையில் நீ உலகத்தைப் பார்த்தால், நீயும் உலகத்தில் இருக்கும் நல்லவற்றை மட்டுமே பார்ப்பாய். எல்லோரும்/எல்லாமே நம்மை சேர்ந்தவர்கள் / நம்மைச் சேர்ந்தவை.

கேள்வி – பதில்கள்

குருதேவா! மற்றவர்களை, கெட்ட வார்த்தைகளால் முறைகேடாகப் பேசும் என் வழக்கத்தை எப்படி நிறுத்த முடியும்?

ஒவ்வொரு முறையும் கெட்ட வார்த்தை உன் வாயில் வரும் போது 20000 ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும் என்று நினைவில் வைத்துக் கொள். ஒவ்வொரு கெட்ட வார்த்தைக்கும் நீ 20000 ரூபாய் தொலைக்க போகிறாய். 20000 ரூபாய் மிகக் குறைந்த பணம் என்று நீ நினைத்தால் அதை ஒரு லட்சம் ரூபாயாக்கி கொள். உனக்கு எங்கிருந்தோ ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கப் போகிறது. நீ கெட்ட வார்த்தை பேசி அதைத் தொலைக்க போகிறாய் என்று கற்பனை செய்து கொள். ஒவ்வொரு கடுமையான, முறைகேடான வார்த்தைக்கும் உன் அதிர்ஷ்டத்தை இழக்கிறாய் என்று நினைவு படுத்திக்கொள். மேலும் மற்றவருடைய முறைகேடான கெட்ட வார்த்தைகளை நீ கேட்கும் போது உன் அதிர்ஷ்டம் கூடுகிறது. (சிரிப்பு) சமஸ்கிருத மொழியில் ஒரு பழமொழி உள்ளது. ததாது ததாது காலி;; காலி மந்தோ பவந்து. உங்களில் எத்தனை பேர் இந்த பழ மொழியை கேட்டிருக்கிறீர்கள்?

“காலி“ என்ற வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன. ஒன்று கடுமையான, முறைகேடான வார்த்தை. இரண்டாவது அர்த்தம் செல்வம். மூன்றாவது அர்த்தம் சுழற்சி. இந்தப் பழமொழியில் பொருள் பின்வருமாறு.முறை கேடான வார்த்தையை பேசுகிறவன் செல்வ வளத்தை அடையட்டும். நீ மற்றவருடைய முறை கேடான வார்த்தையை கேட்கும் போது உன்னுடைய எதிர்மறையான கர்ம வினைகள் ஒழிந்து விடும். எனவே நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்மறையான கர்மவினைகள் ஒழிந்தால், எல்லா வகையான செல்வ வளங்களும் தொடரும்.

குருதேவா! கணக்குப் பாடத்தின் போது எனக்குத் தூக்கம் வருகிறது. இதற்கு என்ன காரணம் ? என் மனதை ஒருமுகப்படுத்தி கணக்குப் பாடத்தைக் கேட்க நான் என்ன செய்யலாம் ?

உனக்கு கணக்குப் பாடத்தில் விருப்பமில்லை என்பதே இதன் காரணமாகும்.அதனால் தான் தூக்கம் வருகிறது. மேலும் மதிய உணவுக்குப் பின்பு சற்று தூக்கம் வரும். எனவே கணக்குப் பாடத்தை நன்றாகப் புரிந்து கொள்ள, நீ அமர்ந்து பல கணக்குகளைப் போட்டு விடை கண்டுபிடிக்க வேண்டும். நீ பேப்பர் பேனாவை எடுத்துக் கொண்டு கணக்கு போட அமரும் போது உனக்குத் தூக்கம் வராது. நீ உட்கார்ந்து படிக்கும் போதும் உனக்குத் தூக்கம் வரக்கூடும்.யாராவது பேசுவதைக் கேட்கும் போதும் உனக்குத் தூக்கம் வர வாய்ப்புள்ளது. நீயே கணக்குப் போடும் போது உனக்குத் தூக்கம் வராது.
மேலும் காலை வேளையில் உன் மனம் தெளிவாக (உற்சாகமாக) இருக்கும் போது கடினமான பாடங்களைப் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள். மாணவர்களின் படிக்கும் வழக்கத்தைப் பார்க்கும் போது, இரு வேறு வகையானவர்களைப் பார்க்கலாம்.
·         காலையில் சீக்கிரம் எழுந்து படிப்பவர்கள்
·         இரவு நீண்ட நேரம் விழித்திருந்து படிப்பவர்கள்
முதலில் நீ எந்த வகையைச் சேர்ந்தவன் என்று பார்க்க வேண்டும். இரவு நேரம் விழித்திருந்து படிப்பவர்கள் கூட 1 மணி 2 மணிக்குப் பின் விழித்திருக்கக்கூடாது.எனக்கு எப்படி தெரியுமென்றால், நானும் இரவு நீண்ட நேரம் விழித்திருந்து படித்ததுண்டு. எனவே இது நம் பழக்கத்தைப் பொறுத்தது. சிலர் விடியற்காலையில் எழுந்து படிப்பதை விரும்புகிறார்கள். அப்போது எல்லாமே புதிதாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.

நீங்கள் உண்ணும் உணவில் கவனம் தேவை ஸ்டஃப்ட் பரோட்டாவை (உருளைக் கிழங்கு, முள்ளங்கி அல்லது வெந்தயக் கீரை அடைத்த) சாப்பிட்டுவிட்டு, ஒரு டம்ளர் லஸ்ஸியையும் (கெட்டித் தயிரால் தயாரித்த பானம்) அருந்தினால் தூக்கம் நிச்சயமாக வரும். எனவே எளிய சத்தான உணவை உண்ண வேண்டும். பச்சைக் காய்கறிகளையும், சாலட் வகைகளையும் நம் உணவில் நிறைய அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாதம் சப்பாத்தி முதலிய தானிய வகை உணவையும், இனிப்புப் பதார்த்தங்களையும் மிகக் குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கம் உனக்கு தூக்கம் வராமல் படிக்க உதவும்.

குருதேவா! நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஞானம் எங்கிருந்து வருகிறது ?

நீ தியானத்தில் இருக்கும் போது, உன் ஆழ்மனதில் நுழைய முடியும். அங்கிருந்து நாம் ஞானத்தை டவுன்லோட் செய்ய முடியும்.

குருதேவா! பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியினர் திரு நரேந்திர மோதியின் ஒரு ஆண்டு கால ஆட்சியின் செயல்திறனை மதிப்பிடுகின்றனர். நீங்கள் அரசுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் ?

நான் ஒரு மதிப்பெண்ணும் கொடுக்கப் போவதில்லை. யார் வேண்டுமானாலும் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்து மதிப்பெண் கொடுக்கட்டும். எது மிகவும் முக்கியம்? நாட்டின் வளர்ச்சிக்கு எல்லோருடைய பங்கும் இருக்க வேண்டும். ஒரு அரசாலோ, ஒரு தனி நபராலோ என்ன சாதிக்க முடியும்? நாட்டு மக்கள் விழிப்புணர்வு பெற்று, அறிவோடு நடந்து கொள்ளும் வரை எதையும் அடைய முடியாது. நாமனைவரும் நாட்டு முன்னேற்றத்துக்காக இணைந்து உழைக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஆன்மீக வழியில் செல்வதால் வரும் நன்மைகளை எடுத்துச் செல்ல வேண்டும். நம் வாழ்வை நல்ல முறையில் நேர்மையாக நடத்தி, வளமோடு வாழ முடியும் என்பதை மக்கள் அறிய வேண்டும். அப்போது தான் நாடு முன்னேற்றமடையும். நிச்சயமாக பல துறைகளில் நிறைய முன்னேற்றத்தைக் காண்கிறோம். நாட்டின் முன்னேற்றத்தை ஒரு குறைவான காலகட்டத்தில் மட்டும் மதிப்பீடு செய்ய முடியாது. இது ஒரு நீண்ட காலம் தொடர வேண்டிய செயல் முறையாகும்.