டிசம்பர் 31, 2014
அண்டோகஸ்ட், ஜெர்மனி
ஸ்ரீ ஸ்ரீயின் புத்தாண்டு செய்தி
பெரும்பாலான மக்கள் "ஓ! மற்றுமொரு ஆண்டு கடந்து விட்டதே" என்று உணர்ந்து சற்று தடுமாறும் நேரம் புத்தாண்டு தினம். நாம் வெகு விரைவாக செல்லும் காலத்தின் ஓட்டத்தினை எண்ணி சில நிமிடங்கள் வியக்கின்றோம் பிறகு மீண்டும் வேலையில் ஆழ்ந்து விடுகின்றோம். இதில் வேடிக்கை என்னவென்றால் ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்ந்து நடக்கின்றது.
நாம் ஆச்சரியப்படும் இந்த தருணங்களின் உள்ளே ஆழ்ந்து செல்வோமானால் காலத்தின் நிகழ்வுகள் அனைத்திற்கும் சாட்சியாக நம்மிடையே ஒரு அம்சம் உள்ளது என்பதை உணர்கின்றோம். நம்முள்ளே இருக்கும் இந்த சாட்சி மாறாதது. இங்கிருந்து தான் நாம் காலம் கொண்டு வரும் மாற்றங்கள் அனைத்தையும் உற்று நோக்குகின்றோம். வாழ்வில் கடந்து விட்ட நிகழ்வுகள் அனைத்தும் கனவாக மாறி விட்டன. நிகழ்காலத்தில் வெளிப்படும் வாழ்க்கையிலும் இந்த கனவு போன்ற தன்மையினை அறிந்து கொள்வதே ஞானம் ஆகும். இதனை அறிந்து கொள்வது உள்ளிருக்கும் மாபெரும் சக்தியை வெளிக் கொண்டு வருகின்றது. அதன் மூலம் நீங்கள் சம்பவங்களாலும், சூழ்நிலைகளாலும் பாதிக்கப்படாமல் இருக்க இயலும். அதே சமயம் சம்பவங்களுக்கென நம் வாழ்வில் ஓர் இடம் உள்ளது. நாம் அவற்றிலிருந்து பாடம் கற்று பின் மேலே தொடர்ந்து செல்ல வேண்டும்.
இந்த ஆண்டில் ஏற்பட்ட பெரும் முன்னேற்றங்களில்,இந்தியாவின் பொதுத்தேர்தல் சமூக மற்றும் அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஊழல் மற்றும் தவறான ஆட்சி முறைக்கு எதிராக வாக்களிப்பதில் மக்கள் தீவிரமாக ஒன்றிணைந்தனர். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டிற்கு ஒரு நிலையான பெரும்பான்மை அரசு கிடைத்துள்ளது. இந்த மாற்றம் உலக அரங்கில் இந்தியாவின் நிலையை பலப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளுடன் நம் உறவுமுறை முன்பிருந்ததைவிட மேலும் சிறப்படைந்துள்ளது. நம் பிரதமர் நரேந்திர மோடியின் விண்ணப்பத்தை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச யோகா தினத்தினை சமீபத்தில் அறிவித்துள்ளது. சில மாதங்களுக்குமுன் வெற்றிகரமாக முடிந்த செவ்வாய்கிரகப் பணி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சிறப்பினை வெளிப்படுத்தியுள்ளது.
உலகெங்கும் பயங்கரவாதக் குழுக்களின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் பற்றிய செய்திகளும் வீடியோக்களும் இந்த ஆண்டின் கதி கலங்க வைக்கும் முன்னேற்றமாகும். முன்பு இஸ்லாமாபாத்தில் வாழும் கலை மையத்தினை எரித்த டேஹ்ரேக் - இ- தலிபான் என்னும் அதே கூட்டம் இப்பொழுது பேஷ்வாரில் 130 பள்ளிக் குழந்தைகளைக் கொன்றுள்ளது. இராக்கில் யெசிடி சமூகத்தினரின் இனப்படுகொலையில் உயிர் பிழைத்தவர்கள் சிக்கியுள்ள சின்ஜர் மலை மற்றும் எர்பில் பகுதிகளில் நம் தன்னார்வத் தொண்டர்கள் நிவாரணப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்னல்களுக்கிடையில் நம் தொண்டர்கள் ஏறக்குறைய 120 டன் உணவுப்பொருட்களை விமானங்கள் மூலமாக அளித்துள்ளனர். 200 பெண்களை மீட்டுள்ளனர். செய்ய வேண்டியவை நிறைய உள்ளன.
நீங்கள் உள்நோக்கி செல்லும் போது உங்களுக்குள் இருக்கும் சாட்சிபாவமான அம்சம் வளர்கின்றது. அதனால் நீங்கள் சம்பவங்களால் பாதிக்கப்படாமல் இருக்கின்றீர்கள். அவ்வாறில்லாமல் உங்கள் மனம் வெளிநோக்கிச் செல்லும்போது உங்களுக்குள்ளிருக்கும் செயல்புரிபவர் மிகுந்த திறமையோடு சூழ்நிலைகளுக்கேற்ப செயல்படுகின்றார்.
எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் நாம் சிறந்த உலகத்தை உருவாக்கும் முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். நாம் நம்முள்ளே நிலையாக இருந்தால்தான் இயலும். உங்களுக்குள் செயல் புரிபவரும் இருக்கின்றார். சாட்சியும் இருக்கின்றார். நீங்கள் உள்முகமாக செல்லும்போது உங்கள் சாட்சிபாவ அம்சம் வளர்ந்து நீங்கள் சம்பவங்களால் பாதிக்கப்படாமல் இருக்கின்றீர்கள். நீங்கள் வெளிமுகமாகச் செல்லும்போது உங்களுக்குள்ளிருக்கும் செயல்புரியும் அம்சம் சூழ்நிலைக்குத் தக்கவாறு செயலாற்றும் திறமையில் வளர்ச்சியடைகின்றது.
முற்றிலும் எதிர்மறையான இரண்டு அம்சங்களுமே தியானம் செய்வதன் மூலம் ஊக்குவிக்கப் படுகின்றன. நீங்கள் உங்களுக்குள்ளே நெருங்கி வரும்போது உங்கள் செயல் இந்த உலகில் சக்தி வாய்ந்ததாகின்றது. அதே சமயம் இந்த உலகில்அத்தகைய சரியான செயல் உங்களை உங்கள் ஆன்மாவிற்கு அருகாமையில் கொண்டு செல்கின்றது. புத்தாண்டு நெருங்கும் இந்த வேளையில் நாம் அசைக்க முடியாத ஆன்ம சக்தியை கொண்டிருப்போம் என்ற தீர்மானத்தை மேற்கொண்டு சிறந்த உலகத்தை நோக்கிச் செல்வோம். காலம் மக்களை மாற்றக் கூடியது. ஆனால் காலத்தை மாற்றக்கூடிய மக்களும் இருக்கின்றனர். நீங்கள் அவர்களுள் ஒருவராக இருப்பீர்களாக. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.