பரமானந்தம்

வெள்ளிக்கிழமை 30 ஜனவரி, 2015

பெங்களூர், இந்தியா


கேள்வி – பதில்கள்

ஆன்மீக சாதனைகள் செய்வது கடவுளை சந்திப்பதற்காக என்று நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அது என் இலட்சியமல்ல. நான் என் வாழ்க்கையிலும், என் வேலையிலும் சிறந்தவனாக இருக்க விரும்புகிறேன். அதற்கு ஆன்மீகம் எப்படி உதவ முடியும்? எல்லா விதமான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் ஆன்மீகம் ஏன் ஒரு பொதுவான தீர்வைச் சொல்கிறது?

பார்! நீ பசியோடு இருக்கும்போது, பசியை தணிக்க ஒரே வழி உண்பது மட்டுமே.உனக்குத் தாகமாக இருக்கிறது தாகத்தைத் தணிக்க ஒரே வழி தான் உள்ளது. திரவப் பொருள்களை குடிக்க வேண்டும். ஆனால் எந்த வகையான திரவம் என்பதை நீ தேர்ந்தெடுக்க முடியும்.உனக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. நீர், பழரசம், பால் முதலியன. திரவம் மட்டுமே உன் தாகத்தைத் தணிக்க வல்லது. அதே போல் வாழ்க்கையை சிறப்பாக வாழ, ஆன்மீகம் தேவை. உண்மையில் ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்பது ஆன்மாவின் இயல்பான குணங்களை குறிக்கிறது. அதாவது அன்பு, அமைதி,ஆனந்தம்,கருணை,வாக்குறுதியை நிறைவேற்றுவது மற்றும் புரிந்து கொள்ளுதல்.  இவைகளே ஆன்மாவின் இயல்பான குணங்களாகும். நீ மனதைக் காத்து வளர்க்க வேண்டும். 

நல்லுணர்வுகளை வளர்க்க வேண்டும். அறிவைக் கூர்மையாக்க வேண்டும். உன் நடத்தை சிறப்பாக இருப்பதற்கு வேண்டிய எல்லாமும் செய்யவேண்டும். எனவே ஆன்மாவைப் போற்றி வளர்க்கும் எல்லாவற்றையும் ஆன்மீகம் என்று சொல்லலாம்.முறையான ஓய்வு,ஞானம் தேடுதல்,விரிவடைந்த பார்வை – இவைகளும் ஆன்மீகத்தின் ஒரு பகுதி தான். நாகரீகமான ஆனந்த மயமான வாழ்வுக்கு மேல் சொன்ன அனைத்தும் அவசியம்.

வாழ்க்கையின் செயல்களின் நோக்கமும் ஆனந்தமாக இருப்பது தான். ஏன் மற்றவர்களுக்குத் தொண்டு செய்கிறாய்? அப்படிச் செய்வது உனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சேவை செய்யும் போது உனக்கு மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்வின் எல்லாச் செயல்களுமே மகிழ்ச்சியை நோக்கியே உள்ளன. மேலும் மகிழ்ச்சி,மகிழ்ச்சி என்று மனம் சொல்லும். ஆன்மாவில் ஒன்றியிருப்பதே பரமானந்தம் எனப்படும். எல்லோரும் உன்னைச் சேர்ந்தவர்கள். நீ எல்லோரையும் சேர்ந்தவன் என்ற உணர்வு வரும்போது இது ஏற்படும். வாழ்வில் வெற்றியடைய சில நன்மதிப்புகள் தேவை. நீ நேர்மையாக நடக்க வேண்டும். தொலை நோக்குப் பார்வை வேண்டும். உனக்கு சக்தி அவசியம். சுறுசுறுப்பு தேவை. ஆன்மீகம் ஒன்று மட்டுமே இவையனைத்தையும் தர வல்லது.

நீ ஆரோக்கியமாக இருந்தால் உன் பார்வை சிறப்பாக இருக்கும். நீ நன்றாகச் சாப்பிடலாம். உன் வாக்குவன்மை அதிகரிக்கும் தெளிவாக கேட்க முடியும். நன்றாக ஓட முடியும். இவை எல்லாமே ஒன்றைப் பொறுத்திருக்கிறது.(ஆரோக்கியத்தைப்  பொறுத்திருக்கிறது).அதே போல் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் சிறப்பாக்குவது ஆன்மீகம் மட்டுமே.

குருதேவா! நட்புக்கு காலாவதியாகும் தேதி இருப்பது போலுள்ளது.(எக்ஸ்பைரி டேட்). என் பள்ளி நண்பர்கள் யாரும் என்னை இப்போது தொடர்பு கொள்வதில்லை. காலாவதி தேதி இல்லாத உறவு ஏதாவது இருக்கிறதா?

உன் ஆத்மாவுடன் உனக்கு இருக்கும் உறவுக்கு காலாவதி தேதி கிடையாது. மற்றவர்களோடு நீ நட்பாக இருப்பாயானால், உனக்கு முன்னால் வரும் எல்லோரிடமும் நீ நட்போடு  பழகுவாய். உன்னுடைய நட்புக்கு காலாவதி தேதி கிடையாது. அதற்கு உருவான தேதியும் கிடையாது. (மானுஃபாக்சரிங் டேட்)

குருதேவா! “சாதிப்பதால் நீ அதிக உற்சாகமடையும் போது நடுநிலைமையை இழக்க நேரிடும்” என்று சொன்னீர்கள். நாங்கள் குறைவாக சாதிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்பது தெளிவு. சாதனையாளனாக, அதே சமயம் நடுநிலைமையில் இருப்பவனாக விளங்க என்ன வழி ?

அதை நீ தான் கண்டறிய வேண்டும்.

3 “C” க்கள் உனக்கு உதவும் என்று சொல்வேன்.
1.   கான்டெக்ஸ்ட் டு லைஃப் – வாழ்க்கையின் சந்தர்ப்பத்தைப் புரிந்து நடப்பது. வாழ்க்கையின் பெரிய நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் போது, உனக்கே ஆச்சரியமாக இருக்கும். உனக்குள் மாற்றங்கள் ஏற்படத் துவங்கும்.கோடிக்கணக்கான நட்சத்திரங்களை உள்ளடக்கிய பேரண்டத்தில் (பிரபஞ்சத்தில்), சூரிய மண்டலம் ஒரு புள்ளியை விட சிறிதாக உள்ளது. இந்த சூரிய மண்டலத்தின் பகுதியான பூமி ஒரு மிகச் சிறிய கிரகம் தான். இந்த பூமியில் 700 கோடி மனிதர்கள் வாழ்கிறார்கள். நீ அதில் ஒருவனாக இருக்கிறாய். பிரபஞ்சத்தில் நம் பங்கு  மிகவும் சிறியது. (அற்பமானது)

உன் பார்வை விரிவடையும் போது, நீ ஒன்றுமில்லை என்பதை உணர்வாய். ஒரு சிறு மணல் துளி போன்றவன்.அதையும் விடச் சிறியவன். நீ இந்த பூமியில் ஒரு அற்பமானவன் என்று புரிந்து கொண்டால், உனக்குள் ஓரு பெரிய மாற்றம் நிகழும். பிரபஞ்சத்தில் உன் சந்தர்ப்பத்தைப் புரிந்து கொண்டால், அது உன்னை நடு நிலைமையில் வைக்கும்.வாழ்க்கையில் அவ்வப்போது  சாதிப்பதால் கிடைக்கும் வெற்றிகளால் நீ கர்வமடைய மாட்டாய். நடு நிலைமையை இழக்கமாட்டாய்.

2.   கம்பாஷன் – கருணை
நீ சாதித்த வெற்றிகளுக்கு பலர் காரணமாக இருந்திருப்பார்கள்.அவர்களுக்கு நன்றியுடன் இருந்தால் நடுநிலைமையில் இருப்பாய். பந்தயத்தில் ஒருவன் வெற்றியடைய, அவன் பின்னால் பலரின் ஒத்துழைப்பு இருக்கும். இது மிகவும் இன்றியமையாதது

3.   கமிட்மென்ட் – மன உறுதி
மனஉறுதி வலிமையாக இருந்தால்,நடு நிலைமை தவற மாட்டாய். ஒவ்வொரு சிறு வெற்றியையும் உன் பாதையில் இருக்கும் படிகளாகப் பார்ப்பாய்.

குருதேவா! மதத்தையும், ஆன்மீகத்தையும் ஒரு வாழைப் பழத்தின் தோலுக்கும், உள்ளிருக்கும் பழத்துக்கும் ஒப்பிட்டு விளக்கினீர்கள். பழத்தைக் காப்பதற்காக அதன் மேலிருக்கும் தோலுக்கு  அவசியம் இல்லையா ?

சரியான மதத்துக்கு ஒரு இடம் உண்டு. மதமே இருக்கக்கூடாது என்று சொல்ல நான் கம்யூனிஸ்ட் மற்றும் நாத்தீகன் அல்ல. ஆனால் உள்ளே பழம் இல்லாத போது, தோல் இருந்து என்ன பயன் ? உள்ளே ஒரு பயனும் இல்லாமல், மனித நேயப் பண்புகள் இல்லாமல், கருணை இல்லாமல், அன்பில்லாமல், ஒருவரை ஒருவர் சார்ந்தவர் என்ற உணர்வில்லாமல், சடங்குகளை மட்டும் பின் பற்றி, மேலோட்டமான அடையாளங்களைக் கொண்ட மதங்கள், உலகில் பல மோதல்களுக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாக உள்ளன. அப்படிப்பட்ட மதங்கள் உபயோகமற்றவை. அது தான் நான் சொன்னது.

மதங்களுக்குரிய இடம் உண்டு. அது இருக்கட்டும். உங்கள் திருமணம் உங்கள் மத வழக்கப்படி நடக்கிறது. பெயர் சூட்டும் விழா மத வழக்கப்படி நடக்கிறது. இறந்த பின் உடல் மத வழக்கப்படி அடக்கம் செய்யப்படுகிறது. ஆனால் மதங்கள் ஆன்மீகத்தை விழுங்க விடக்கூடாது. ஆன்மீகத்தின் அடிப் படையான அன்பு, கருணை, ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் பண்பு, பணிவு முதலியவற்றை மதங்கள் அழிக்க விடக் கூடாது. இந்த நற்பண்புகளையே ஆன்மீகம் என்று சொல்கிறோம்.

குருதேவா! உலகைத் துறப்பது பற்றி புத்தர் சொன்னதன் நோக்கம் என்ன? நாம் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமென்ற பொருளில் சொன்னாரா?

நீ எப்போதும் சந்தர்ப்பத்தை கவனிக்க வேண்டும். நீ புத்தரைப் பற்றி, அவர் என்ன சொன்னார் என்று பேசும் போது, யாருக்கு அப்படிச் சொன்னார். அந்தக் காலத்தில் சமுதாயம் எப்படி இருந்தது என்பதை மறக்கக் கூடாது. அதே போல் நீ ஏசு கிறிஸ்துவைப் பற்றியோ, முகம்மது நபியைப் பற்றியோ அல்லது மற்ற தீர்க்கதரிசிகளைப் பற்றிப் பேச விரும்பினால், அவர்கள் பேசிய சந்தர்ப்பத்தை மறக்கக் கூடாது – எப்போது? எந்த இடத்தில்? என்ன சொல்லப்பட்டது? யாருக்குச் சொல்லப்பட்டது?

புத்தரின் காலத்தில் இந்தியா மிக உயர்ந்த நிலையில்  இருந்தது. உலகத்தின் செல்வமனைத்தும் இந்தியாவில் இருந்தது. அந்தக் காலத்தில் இந்தியா மிகவும் வளர்ச்சியடைந்த நாடாக விளங்கியது. மக்களிடம் எல்லா செல்வங்களும் இருந்தன. பொன், பொருள், செல்வம் மிகுதியாக இருந்தது.
200 ஆண்டுகளுக்கு முன் லார்ட் மெக்காலே,இந்தியாவிலிருந்து லண்டனுக்குத் திரும்பிச் சென்றபின், ராணி எலிஸபெத்துக்கு கடிதம் எழுதினார். “நான் இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து பார்க்கும் போது, எங்குமே ஒரு பிச்சைக்காரனைக் கூட பார்க்க முடியவில்லை. ஒரு திருடனைக்  கூட பார்க்க முடியவில்லை. அத்தனை செல்வ வளத்தை இந்த நாட்டில் கண்டேன். மக்கள் நல்லொழுக்கத்தோடு, உயர் பண்புகள் வாய்ந்தவர்களாக, தர்ம நெறிப்படி வாழ்கிறார்கள். என் கருத்துப் படி, இந்தியாவின் முதுகெலும்பான ஆன்மீகத்தையும், கலாசார பாரம்பரியத்தையும் உடைத்தாலன்றி, அந்த நாட்டை நாம் எப்போதும் வெற்றி கொள்ள முடியாது.

புத்தருடைய காலமும் பொற்காலமாக இருந்தது. பொருட் செல்வம் மிகுந்திருந்தது. மக்கள் செல்வ வளத்தில் மூழ்கி இருந்தார்கள். எனவே புத்தர் அவர்களை அழைத்து, “விழித்துக் கொள்ளுங்கள். பொருட் செல்வமளிக்கும் சுகத்தை மிஞ்சிய ஒன்று உள்ளது” என்று சொன்னார். அக்காலத்தில் மக்கள் ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டிருந்தார்கள். முட்டாள்தனமான சின்ன சின்ன காரணங்களுக்காக போர் செய்வது வழக்கமாக இருந்தது. எனவே புத்தர் அவர்களை அழைத்து “இப்படிச் செய்வதை விட்டு விடுங்கள். வாழ்க்கையில் உலக சுகத்தை மிஞ்சிய ஒன்று உள்ளது” என்று சொன்னார்.

உண்மையான அனுபவமின்றியே, மக்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்தார்கள். தத்துவங்கள் அவர்களிடம் இருந்தன. கடவுளை அறியாமலேயே, கடவுளைப் பற்றிப் பேசி வந்தார்கள்.புத்த பகவான் அவர்களிடம், “வாருங்கள்! நான் உங்களுக்கு ஒரு எளிமையான விஷயத்தைப்  பற்றிச் சொல்வேன்” என்றழைத்தார். அவர்கள் மறந்துவிட்ட தியான நிலைக்கு படிப்படியாக எடுத்துச் சென்றார்.

புத்தர் என்றும் ஒரு புதிய மதத்தை ஆரம்பிக்க வில்லை. ஒரு இந்து துறவியாகவே வாழ்ந்தார். துறவிகளின் விதிகள்படி வாழ்ந்து, துறவியாகவே உயிர் துறந்தார். புத்தரின் மறைவுக்குப் பின்னர், அவர் கற்பித்த தத்துவங்களை மக்கள் தனி மதமாக ஏற்றுக் கொண்டார்கள். அதுவே புத்த மதம். உபநிஷதங்களிலுள்ள அனைத்தையுமே புத்தர் மக்களுக்குச் சொல்லி வந்தார். தத்துவத்தில் ஒரே ஒரு வித்தியாசம் மட்டும் இருந்தது. அது அனாத்மவாதம். அவர் தத்துவப்படி ஆத்மா என்பது இல்லாத ஒன்று. ஆத்மா என்று எதுவும் இல்லை. நான் ஆத்மாவைத் தேடிப்பார்த்து, எனக்கு அது கிடைக்கவில்லை. இருப்பதெல்லாம் வெற்றிடம் மட்டுமே” என்று புத்தர் சொன்னார்.

எல்லாவற்றிலுமுள்ள வெறுமையைப் பற்றி புத்தர் அதிகம் பேசினார். “எல்லாமே ஒன்றுமில்லாத வெறுமையே” என்று அவர் சொன்னார்.

11 கேள்விகளுக்கு, புத்தர் எப்போதும் விடையளிக்கவில்லை. அந்தக் கேள்விகளில் கடவுளைப் பற்றிய கேள்வியும் ஒன்று.கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு புத்தர் பதிலளிக்கவில்லை. அவர் கடவுளை எப்போதும் மறுக்கவில்லை.அதே சமயம் அந்த உரையாடலில் அவர் புக விரும்ப வில்லை. அக்காலத்தில், மக்கள் மனதில் பல கருத்துக்கள் வழங்கி வந்தன. ஒவ்வொருவரும், அதை அறியாமலேயே, தங்களுக்குத் தெரியும் என்று நினைத்தார்கள். புத்தர் வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. வாழ்க்கையில் துன்பத்தை நீக்க, உங்களுக்கு ஒரு எளிமையான வழியைச் சொல்ல நான் வந்திருக்கிறேன்” என்று அவர் சொன்னார். அவர் தியானம் பற்றியும், விடுதலை பற்றியும் பேசினார்.

குருதேவா! நான் வேதாந்தம் படிக்கிறேன். நியாய சாஸ்திரம் பற்றிச் சொல்வீர்களா? (தர்க்க சாஸ்திரம், காரண சாஸ்திரம்)

நியாயம் என்றால் அறிவதற்கான வழி முறை என்று அர்த்தம். உன் அறிவு, மற்றும் அந்த அறிவை பெற உதவிய வழி முறை சரியானதா? இல்லை தவறானதா? இது அறிவார்ந்த விவாதமாகும். நியாய சாஸ்திரத்தில் 16 கொள்கைகள் இருக்கின்றன. உன் கருத்து சரியா என்று பார்க்க பல வகையான நியாயங்கள் உள்ளன. நியாய சாஸ்திரம் இவற்றை பற்றிச் சொல்கிறது.பள்ளியிலிருந்து  நாமறிந்த வரை, கலீலியோ தான் பூமி சூரியனைச் சுற்றி வருவதாகச் சொன்னவர்.ஆனால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே, மக்கள் சூரியன் நடுவில் இருப்பதையும், மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருவதாக நம்பினார்கள். நீ கோவிலுக்குச் சென்று நவகிரகங்களைப் பார்த்தால், அதில் சூரியன் நடுவிலும், மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றியமைந்திருப்பதையும் காண முடியும்.

பூமி உருண்டை என்ற உண்மையை பல காலம் முன்பே இந்தியர்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, இந்தியர்களின் பஞ்சாக்கத்தில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் இயக்கத்தை மிகவும் துல்லியமாக கணித்திருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வரப்போகும் கிரகணங்களைப் பற்றிய விவரங்களையும்,குரு பெயர்ச்சி எப்போது நிகழும் என்ற கணிப்புகளையும் நமக்குத் தந்திருக்கிறார்கள். அவை இப்போது கணிப்புப்படி நிகழ்வதை நாம் காண்கிறோம். ஆம். மேற்கத்திய நாடுகளில் கலீலியோ இதைக் கண்டு பிடித்தார். அப்படிச் சொன்னதற்காக மரண தண்டனை பெற்றார். இந்தியாவில் மக்கள் பல காலமாக அறிந்திருந்தார்கள். வான சாஸ்திரத்தை ககோளம் என்று குறிப்பிட்டார்கள். கோளம் என்றால் உருண்டை என்று அர்த்தம். அதன்படி இந்தப் பிரபஞ்சம், மற்றும் கிரகங்கள் யாவும் உருண்டை வடிவில் உள்ளன. 

கிரகங்களின் இயக்கம் பற்றியும் அறிந்திருந்தார்கள். சரித்திரத்தை திரும்பவும் எழுத வேண்டும். சூரிய உதயத்தின் போது சூரியன் எழுவதைப் பார்க்கிறீர்கள். சூரியன் எழுவதோ, அஸ்தமனத்தின் போது கீழே செல்வதோ இல்லை. அது பூமியின் சுழற்சியால் ஏற்படும் ஒரு தோற்றம் மட்டுமே. அதேபோல் சில விஷயங்கள் விபத்து போல் நிகழ்கின்றன. ஒரு காகம் மரத்தில் உட்காரும் போது, ஒரு மாம்பழம் கீழே விழுவதைக் காண்கிறோம். பழம் கீழே விழ காகம் தான் காரணம் என்று சிலர் நினைக்கக் கூடும்.அந்தப் பழம் ஏற்கனவே நன்றாகப் பழுத்து விட்டதால், விழுந்திருக்கலாம். காக்காய் உட்கார்ந்ததால், அது கீழே விழுந்தது என்று நாம் தவறாக நினைக்கிறோம். இதை காகதலிய நியாயம் என்றழைப்பார்கள். இது நியாய சாஸ்திரக் கொள்கைகளில் ஒன்றாகும். நாம் காண்பது சரியா? தவறா? என்று புரிந்து கொள்ள பல முறைகள் உள்ளன.