காலம் அனைத்தையும் நகர்த்தும், உங்களால் காலத்தை நகர்த்த முடியும்

புதன்கிழமை, 31 டிசம்பர் 2014,

பாத் அண்டோகஸ்ட் ஜெர்மனி



அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

2015: ஒரு நாளுக்கு இரு முறை (2) வெறுமையடையுங்கள் (0) ஒன்றாவதற்கு (1) ஐந்திற்கு அப்பாற்பட்ட ஒன்றுடன் (5) புரிந்ததா? இவ்வுலகம் பஞ்ச பூதங்களின் இணைப்பு, இந்த பஞ்ச பூதங்களுக்கு அப்பாற்பட்டது ஆத்மா, எனவே ஆத்மாவுடன் இணையுங்கள் !!

காலத்தை வணங்குகின்றேன், ஏனெனில் அது மனதை விட உயர்ந்தது.காலமே மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.காலமே ஏழையை இளவரசனாக்குகின்றது, இளவரசனை ழையாக்குகின்றது. காலம் முட்டாளை புத்திசாலியாக்குகின்றது, காலமே ஒரு புத்திசாலியின் மூலம் முட்டாள்தனமான விஷயங்களை நிகழ வைக்கின்றது. காலம் நட்புக்களை உருவாக்கி, நட்புக்களை பிரிக்கின்றது.  அமைதியை ஏற்படுத்தும் காலமே போரையும் உருவாக்குகின்றது.காலம் மனதை விட உயர்ந்தது. எனவே அதை நான் வணங்குகின்றேன். காலத்தை விட பெரியது ஒன்று இருக்கின்றதா? ஆம், அதுதான் ஆத்மா. காலம் அனைத்தையும் நகர்த்துகின்றது, ஆனால் நீங்கள் காலத்தை நகர்த்த முடியும், அதுதான் ஆத்மாவின் சக்தி.

காலத்தை விட சிறந்தது ஒன்று உண்டா? ஆம் அதுதான் ஆத்மா. ஆத்மா காலத்தையும் நகர்த்தும், அது காலத்திற்கும் அப்பாற்பட்டது. உங்கள் மனதின் கீழ் நீங்கள் இருக்கும் வரையில் நீங்கள் காலத்தின் கட்டாயத்தில் உள்ளீர்கள். ஆனால் நீங்கள் உங்களது ஆத்மாவை அறியும் போது ஐம்பூதங்களுக்கும் அப்பாற்பட்டு காலத்தையே நகர்த்துகின்றீர்கள். நான் கூறிய இந்த சில சொற்களை நீங்கள் ஆழ்ந்து அறிந்தால், அவை உங்களுக்கு மேலும் அர்த்தமுள்ளதாகும்.ஞானத்தில் ஆழ்ந்து வசித்தால்,அது உழ்மூழ்கி, அனுபவமாகும்.மேலும் அதிகப் பொருட்பயனை தரும்.

எனவே, காலம் அனைத்தையும் நகர்த்துகின்றது, ஆனால் நீங்கள் காலத்தை நகர்த்த முடியும். அதுதான் ஆத்ம சக்திஅது சுதந்திரமாக கிடைக்கும் தான், ஆயினும் அணுக முடியாதது. எப்போது மனதிலிருந்து விடுபடுகின்றோமோ அப்போது தான் அதை அணுக முடியும்.

ஆகவே # 2015 என்பது: ஒரு நாளுக்கு இரு முறை (2 ) வெறுமையடையுங்கள் (0) ஒன்றாவதற்கு (1)  ஐந்திற்கு அப்பாற்பட்ட ஒன்றுடன் (5). மிக நன்றாக இருக்கின்றதல்லவா? இந்தப் புத்தாண்டில், நாம் அனைவரும் நம்மில் நம்பிக்கையை உருவாக்குவோம். நல்லது மட்டுமே எனக்கு நடக்கும் என்னும் நம்பிக்கை.மேலும் உலகெங்கும் நல்லதே நடக்கும் என்னும் இந்த நம்பிக்கையை சமுதாயத்தில் ஏற்படுத்துவோம்.நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கையை மக்கள் சமுதாயத்தில் இழக்கும்போதுதான் அவர்களது மனவலிமை குறைகின்றது. ஆனால் நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கை சமுதாயத்தில் இருந்தால், மக்களின் மனவலிமை மேலே உயரும். நல்லவை மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் உங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆகவே இந்த இரண்டு பரிமாணங்களையும் 2015 ஆம் ஆண்டு நம் வாழ்வில் உயிர்ப்பிப்போம். இது உங்களது புத்தாண்டு  தீர்மானமாக இருக்கட்டும்:  உங்களுக்குள்ளும், சமுதாயத்திலும், உலகெங்கிலும் நம்பிக்கையை உருவாக்குதல்

உறவுகளின் முறிவு மிக்க வேதனையை அளித்திருந்தால்,அதற்கு காரணம் அவ்வுறவுகள் மிக்க இன்பத்தினை தந்திருக்கும். அடங்காத ஆசையே அதிக வேதனையை அளித்து, தற்போதுள்ள உணர்ச்சிக்குவியலுக்குள் விட்டு வைத்திருக்கின்றது. தவறு செய்பவர்கள் உயரும் போது நீங்கள் உங்களது தைரியம்,நிர்ணயம்,அறநெறி, இவற்றை இழக்கின்றீர்கள். உங்களது பிடிப்பினை இழந்து, ஒடிந்து விடுகின்றீர்கள்.அப்போது தான், அவர்கள் உயர்வது கீழே வீழ்வதற்காகவே  என்று நீங்கள்  நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். தீய சக்திகள் வீழ்ந்தே ஆகவேண்டும், அதுவே அவர்களது இறுதியான இலக்கு. ஆனால் வீழ்வதற்கும் சற்றே உயர வேண்டும்,அப்போது தான் உண்மையில் வீழ்ந்து உடைய முடியும். ஆகவே அவர்கள் உயர்ந்து பெரிதாக கீழே வீழ்ந்து விடுகின்றார்கள்.   இந்த உண்மையை நீங்கள் அறிந்து கொண்டால், எதுவுமே உங்களை அசைக்க முடியாது. எந்த நிகழ்வும் உங்களைப் பாதிக்காது, எந்த அதிர்ச்சியும் அணுகாது, எந்த மனமுறிவும் ஏற்படாது. உங்களுடைய மனஉறுதி இந்த நம்பிக்கையினால் வலுப்பெறும்.

ஒவ்வொரு நிகழ்வும்,சில அறிவு செய்திகளையும், உணர்ச்சிகளையும் ஏற்படுத்தும். பெரும்பாலும், நிகழ்வுகள் உணர்ச்சிகளுடன் கூடிய  சில படிப்பினைகளை கற்பிக்கும். ஆனால் சாதரணமாக நாம் என்ன செய்கின்றோம்? நிகழ்வுகளிலிருந்து படிப்பினைகளை ஏற்காமல், உணர்ச்சிகளை மட்டுமே மேலெடுத்துச் செல்கின்றோம். அந்த உணர்ச்சிகளே நம்மை ஒரு தழும்பு அல்லது ஏக்கமாக முற்றுகை இட்டுக் கொண்டிருக்கின்றன. உண்மையறிவு கற்றுக் கொள்ளப்படாமல் உணர்ச்சிக் குவியலே மிஞ்சுகின்றது. நேர்மறையாயினும், எதிர்மறையாயினும் தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் அது உங்களை தொல்லைப்படுத்த போகின்றது. மகிழ்ச்சிகரமான அனுபவத்திற்கு  வலுவான ஏங்கினால், தற்போது அதிக வலி இருக்கும். ஏனெனில் மகிழ்ச்சிகரமான அனுபவம் தீவிரமான ஏக்கத்தை உங்களுக்குள் உருவாக்கி ஒரு பெரிய குழப்பத்தில் வைத்திருக்கும். நான் கூறுவது தெளிவாக இருக்கிறதா?

அறிவாளி என்ன செய்வான்? படிப்பினையை அறிந்து, கடந்த கால உணர்ச்சிகளை விட்டு விலகி விடுவான். கோபம், ஏமாற்றம் வெறுப்பு இவற்றை விடுத்து, படிப்பினையை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை யாராவது ஏமாற்றினால்,அந்த அனுபவத்திலிருந்து  படிப்பினையை எடுத்துக் கொள்ளுங்கள். ஏமாற்றும் போது என்ன செய்தீர்கள்,ஏமாற்ற அனுமதித்து எவ்வாறு புத்தியின்றி இருந்தீர்கள் என்பது போன்ற படிப்பினையை அறியுங்கள், கோபம், ஏமாற்றம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றை பிறர் மீது எடுத்துச் செல்ல வேண்டாம்.

படிப்பினையை விடுத்து உணர்ச்சிகளை மட்டுமே எடுத்துச் செல்வது புத்திசாலித்தனமல்ல. உணர்ச்சிகளை விடுத்து, படிப்பினையை எடுத்துச் செல்வதே நிகழ்வுகளால் பாதிக்கப்படாமல், களங்கப்படாமல், போலியற்ற புன்னகையுடன் உங்களை வாழச் செய்யும். உங்கள் உற்சாகத்தை உயர்வாகவே வைத்திருங்கள். இப்போதே!இப்போதே!!(நிகழும் தருணத்தில் என்னும் பொருள்பட விரல்களைச் சொடுக்கி) வாழ்க்கை என்பது இனிமையான இனிமையற்ற விஷயங்களைக் கொண்டது, நீங்கள் விரும்புபவை விரும்பாதவைகளைக் கொண்டது,  இவைகளின் கலவையே வாழ்க்கை.

புத்தாண்டு தினத்தன்று  உணவு மேஜையில் குழந்தை இனிப்பு பழவகையையே மட்டுமே உண்ண விரும்பும். இல்லை, சூப், சாலட் பிற உணவு வகைகளையும் உண்ண வேண்டும். ஒரு தாய்க்கு சமச்சீர் உணவினை எவ்வாறு குழந்தைக்குத் தர வேண்டும் என்பது தெரியும். குழந்தைக்கு இனிப்பு பழவகை மட்டுமே விருப்பம் என்பதால் அதை மட்டுமே ஊட்ட மாட்டாள், அவ்வாறு செய்தால் அவள் சிறந்த தாய் அல்ல. அது போன்றே இயற்கை சூப்,சாலட், நூடுல்ஸ், புளிப்பு, காரம், இனிப்பு அனைத்தையும் தருகின்றது.(சிரிப்பு) இயற்கை பல்சுவை உணவினை அளிக்கின்றது. அறிவாளி அனைத்தையும் மகழ்வுடன் ஏற்றுக் கொள்வான். நீங்கள் ஆலிவ்வை சுவைப்பீர்கள், அதையே ஒரு குழந்தைக்குக் கொடுத்தால் அது துப்பி விடும்.எனவே, காலப் போக்கில் பல்வேறு சுவையினை ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்கின்றோம். 

வாழ்க்கையில் அளிக்கப்பட்டுள்ள சமச்சீர் உணவினை பாராட்டி ஏற்றுக் கொள்வதற்குரிய தருணம் வந்து விட்டது. பல்வேறு தினுசுகள் தட்டில் உள்ளன. அவற்றை அனுபவியுங்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய தட்டு உணவு உங்களுக்கு அளிக்கப்படுகின்றது. எனவே கெட்டுப் போன பழைய உணவினை உண்ணாதீர்கள். உங்களுடைய புதிய காலண்டரில் பழைய தேதிகளை நிரப்பாதீர்கள். 31 செவ்வாய்கிழமை என்று இருக்கும் பழைய காலண்டரையே வைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த ஆண்டு அது புதன்கிழமை.


புத்தாண்டு வியாழக்கிழமையில் துவங்குகின்றது.ஹிந்தியில் வியாழக்கிழமை குருவார் என்று அழைக்கப்படுகின்றது. அதாவது குருவின் தினம். இப்புதிய ஆண்டு ஞானம் தரும் ஆண்டு.வியாழன் துவங்கும் இந்த ஆண்டில் பழைய காலண்டரை வைத்துக் கொள்ளாதீர்கள். அது சரியாகாது. உங்களை புதுப்பித்துக் கொண்டே இருங்கள். காலத்துடன் பொருத்திக் கொள்ளுங்கள், காலத்தினைப் பிடியுங்கள், காலத்தினை நகர்த்துங்கள்.எவ்வாறு  பொருத்திக் கொள்வீர்கள், எதைப் பிடித்துக் கொள்வீர்கள் எதை நகர்த்துவீர்கள் என்பதை உங்களுக்கே விட்டு விடுகின்றேன்.(சிரிப்பு) சிந்தியுங்கள்!!

அன்பு தான் பதில்

சனிக்கிழமை 13 டிசம்பர் 2014

பெங்களூர் – இந்தியா


கேள்வி பதில்கள்

பாச பந்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?

ஏன் பாச பந்தத்திலிருந்து விடுபட விரும்புகிறாய்? ஏனென்றால் உனக்கு வலியை கொடுக்கிறது. அது உனக்கு வலியைக் கொடுக்காத போது அதிலிருந்து விடுபட விரும்பமாட்டாய். பாசபந்தம் உனக்கு வலியைக் கொடுக்கக் காரணம் அதோடு அஞ்ஞானமும் இணைந்திருக்கிறது. பாச பந்தத்திலிருந்து விடுபட முயலாதே. அதைக் கைவிட்டு நடுநிலையிலிருக்கக் கற்றுக் கொள். இப் படைப்பில் உன் வாழ்வை பற்றிய அறிவை விரிவாக்கிக் கொள். அப்படிச் செய்யும்போது பாசபந்தத்திலிருந்து விடுபட முயற்சிக்க தேவையில்லை. தானாகவே விலகி விடும். உங்களில் எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட அனுபவம் வந்திருக்கிறது? எத்தனை பேருக்கு க்ஷண நேரத்தில் பந்தத்திலிருந்து விடுபட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறது? கைகளை உயர்த்துங்கள். பார்வையாளரில் பலர் கைகளை உயர்த்துகிறார்கள்.) சிறு குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய் மிகவும் பிடிக்கும். இனிப்பை குழந்தைகளுக்கு முன் வைத்தால், உடனே அதை எடுத்துத் தின்ன விரும்புவார்கள். ஆனால் வளர வளர உங்களுக்கு இனிப்பு மற்றும் விளையாட்டுப் பொருள்களில் இருந்த மோகம் (ஏக்கம்) தானாகவே விலகி விடுகிறது. இந்த ஏக்கத்திலிருந்து விடுபட எந்த முயற்சியும் தேவையாக இருக்க வில்லை. பாசபந்தத்திலிருந்து விடுபடுவது இயல்பாக நடக்கும் நிகழ்வாகும்.

ஞானத்தில் முதிர்ச்சி அடைந்து நீ மலரும் போது, உனக்குள் ஒரு விரிவு உதயமாக துவங்குகிறது. அப்போது வாழ்க்கையில் சின்னச் சின்ன (தேவையற்ற) விஷயங்களில் நீ சிக்கிக் கொள்ள மாட்டாய். இல்லாவிட்டால், யாராவது உன்னை சரியாக நடத்தாமல் அவமானத்துக்கு ஆளாக்கும் போது, நீ காயப்பட்டு நீண்ட நாட்கள், மாதக்கணக்கில், உன் இதயத்தில் காழ்ப்புணர்ச்சியோடு இருப்பாய். உனக்குள் “அந்த மனிதர் என்னைத் தவறாக நடத்தியதை, அவமானப்படுத்தியதை எப்போதும் மறக்க மாட்டேன்” என்று சொல்லிக் கொள்வாய். அப்படிப்பட்ட சிந்தனையோடு, உனக்கு நீயே ஏன் தீங்கு விளைவிக்க நினைக்கிறாய்? இப்படி நாம் பலமுறை நடந்து கொள்கிறோம். மனதில் காழ்ப்புணர்ச்சியோடு இருப்பது பெருமை என்று கர்வம் கொள்கிறோம். இது முட்டாள் தனம்.

மக்கள் பலவிதமாகப் பேசுவதை, பல்வேறு விதமான நடத்தை உள்ளவர்களாக, வேறு வழிகளில் காரியம் செய்வதை, தங்கள் உணர்ச்சிகளை பல வழிகளில் வெளிப்படுத்துவதை நீ கவனிக்க வேண்டும். அதனால் அவர்கள் இதயத்தில் அன்பு இல்லை என்று நினைக்க வேண்டாம். அப்படி அல்லவே அல்ல. அவர்களுடைய அன்பை நீ பார்க்க முடிவதில்லை அல்லது சரியான முறையில் அன்பை வெளிப்படுத்த அவர்களுக்குத் தெரியவில்லை.அவர்களுடைய கண்ணோட்டத்தில் பார். மாமியார் மருமகள் எவ்வளவு சண்டை போட்டாலும் அவர்களுடைய சண்டை முடிந்து விடும். எல்லாவற்றையும் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார். சில வாரங்களுக்கு முன் ஒரு இளம்பெண் அவளுடைய குடும்ப பிரச்சினை பற்றிப் பேச வந்தாள். அவள் என்னிடம் “ குருதேவா ! என் மாமியார் என்னிடம் மிகக் கடுமையாக நடக்கிறார். அடிக்கடி கோபித்துக் கொள்கிறார்” என்று சொன்னாள். அவளிடம் “ ஏன் அப்படி நடக்கிறது?” என்று கேட்டேன். 

அதற்கு அந்தப் பெண் “ அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எது செய்தாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க முயற்சிக்கிறார் “ என்று சொன்னாள். நான் அதைக் கேட்டு, “ சொல் ! உன் தாய் உன்னிடம் அப்படி நடந்து கொண்டதில்லையா? “ என்று கேட்டேன்.அவள் பதில் சொன்னாள். ஆமாம் குருதேவா ! அவளும் (அந்தப் பெண்ணின் தாய்) அப்படி நடந்து கொண்டதுண்டு. பல முறை சிறு விஷயங்களுக்காக சண்டை போட்டிருக்கிறேன்.
உன் தாயோடு சண்டை போடும் போது அது உன் இதயத்திலிருந்து வருவதில்லை. எத்தனை நாள் சண்டை போட்டாலும், அடுத்த நாள் சமாதானமாகி விடுகிறாய். அவளிடம் அன்போடு நடந்து கொள்கிறாய். இல்லையா? உன் மாமியாருக்கும் உன் தாயின் வயதாகிறது. அவள் உன்னிடம் ஏதாவது சொன்னால், நீ ஏன் காயப் படுவதுபோல் உணர்கிறாய்? அந்தப் பெண் இதைக் கேட்டு, “குருதேவா! எப்போதும் நான் இப்படி நினைத்ததில்லை“ என்று சொன்னாள். எனவே உன் எண்ணப் போக்கில் சிறிது மாற்றம் ஏற்படுத்திக் கொள். சின்ன விஷயங்களை மறந்து வாழ்க்கை நடத்து.
“ ஓ ! அவள் என்னிடம் மோசமான வார்த்தைகளை சொன்னாள். என்னை சரியாக நடத்தவில்லை “ என்று நினைத்து சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்தி சிக்கிக் கொள்ளாதே.

பார் யாராவது உன்னை மோசமாக நடத்தி, உன் மனதை காயப்படுத்தினால், அவர்கள் மன உளைச்சலோடு இருக்கிறார்கள். அறியாமல் அப்படிச் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள். அவர்களுக்குள் இருக்கும் காயத்தினால் நீ ஏன் காயப்படுகிறாய்? மனதை விரிவாக்கி, பரந்த கண்ணோட்டத்தில் எல்லாவற்றையும் பார். எல்லோரையும் அன்பால் வெல்ல முடியும். எந்த சூழ்நிலையையும் அன்போடு ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை நீ அறிவாய். இவ்வுலகில், வாழ்க்கையில் அன்பால் அடைய முடியாதது எதுவும் இல்லை. இப்போது இந்த விஷயத்தை மேலும் நீட்ட வேண்டாம். “குருதேவா! அன்பால் தாலிபானை வெல்ல முடியுமா ? என்று கேட்காதே. அவர்களை எதிர்கொள்ள 4 வழிகள் உண்டு.
·         சாம  -  மென்மையாக பேசி சம்மதிக்க வைப்பது
·         தான  - அக்கறையாகப் பேசி வேண்டிக் கொள்வது
·         பேத  -  பயமுறுத்துவது
·         தண்ட – தண்டிப்பது

வீட்டில் ஏன் சின்ன விஷயங்களில் சிக்கி மாட்டிக் கொள்கிறாய்? மாமியாரை வெறுப்பதால் உனக்கு என்ன கிடைக்கும்? குறைந்தபட்சம் உன் கண்ணொட்டத்தை விரிவாக்கி பரந்த நோக்கில் பார். என் ஆலோசனையைக் கேட்டு அந்த இரண்டு பெண்களும் இப்போது ஒருவருக்கொருவர் நன்றாகப் பழகி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எல்லா பிரச்சினைகளும், ஒன்றுமே இல்லாதது போல் தீர்ந்து விட்டன. அவள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனிக் குடித்தனம் செல்வதாக இருந்தாள். நல்ல வேளை! அப்படி ஏதும் நேராமல் குடும்பம் பாதுகாக்கப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கதை அல்ல. நாடு முழுதும், பல்லாயிரக் கணக்கான குடும்பங்களில் இப்படிப்பட்ட பிரச்சினை ஏற்படுகிறது. அதுவும் ஆசியா கண்டத்தில், குறிப்பாக இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறது.

நாம் நம் மனதை எப்படி கையாள்கிறோம் என்பதே மகிழ்ச்சியின் திறவுகோல். இடைவிடாமல் நாம் நம் யோக சாதனைகளை செய்ய வேண்டும். நாம் நம் மனதை அடக்கி, ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஓய்வெடுக்கப் பழக வேண்டும். நாமனைவரும் நம் கண்ணோட்டத்தை சற்று விரிவாக்கிக் கொண்டால், அது நம் வாழ்வில் பெரிய நன் மாற்றங்களைக் கொண்டு வரும். நாம் நம் வாழ்வில் மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாமல், நம்மைச் சுற்றியிருக்கும் மற்றவர்கள் வாழ்விலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர முடியும்.

நாம் பொதுவாக நம் வாழ்வில் நிகழும் சின்னச் சின்ன விஷயங்களில் மாட்டிக் கொள்கிறோம். நாம் வருத்தப் படுவது மட்டுமல்லாமல் நம்முடன் இருப்பவர்களும் வருத்தப்படக் காரணமாக இருக்கிறொம். இது அறிவற்ற செயல். (அஞ்ஞானம்) இதைப் புரிந்து கொள்ள நீ மகா பண்டிதனாக இருந்து பல அரிய நூல்களைப் படிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு நாளும் சற்று நேரம் தியானம் செய். நல்ல விஷயங்களைக் கேட்டு அறிந்து கொள். கற்றுக் கொண்டவைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து அதன் படி நடந்து கொள்.

குருதேவா! நேபாளத்தில் சிவ பெருமானை பசுபதிநாத் என்ற வடிவில் வணங்கி வருகிறார்கள். பசுபதி என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன ?

பசு என்றால் ஹிந்தி மொழியில் விலங்கு என்று அர்த்தம். அப்படி என்றால் கட்டப்பட்டது அல்லது பாசத்தால் கட்டப்பட்டிருப்பவர் என்று பொருள். பாசம் என்றால் கயிறு என்று அர்த்தம். அப்படி என்றால் நீ கட்டுண்டு இருக்கிறாய். ஏதோ உன்னைத் தடுக்கிறது.எட்டு விதமான பாசம் இருக்கிறது. அதில் 8 விதமான விலங்குகள் கட்டப்பட்டிருக்கின்றன.

ஆங்கில மொழியில் “ மனிதன் ஒரு சமூக விலங்கு “ என்று ஒரு பழமொழி இருக்கிறது. எனவே ஒவ்வொரு மனிதனும் ஒரு வித பாசத்தினால் கட்டுண்டு இருக்கிறான். உதாரணமாக பேராசை, உறவுகளோடு இருக்கும் பந்த பாசம். சிவபெருமான் 8 விதமான பாசத்தால் (கயிறுகளால்) கட்டப் பட்டிருக்கும் இப்படைப்பின் தலைவர். அவர் இவ்வுலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தலைவராவார்.

நேபாளத்தில் விலங்குகளை பலியிடும் வழக்கம் உள்ளது. கோவிலுக்குச் சென்று அப்படி எதுவும் செய்யாதே. அது கடவுளுக்கு விருப்பமாகாது. நீங்கள் அது பற்றி அறிந்திருந்தீர்களா? கடவுளை மகிழ்விக்க ஒரு உயிரைக் கொல்வது மகா பாவமான செயலாகும். பலியிடுவது அறியாமையால் செய்யப்பட்டு வரும் வழக்கம். விலங்குகளின் வதையை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கொல்வதை தடுத்த வாழும்கலை ஆசிரியர்களையும், தன்னார்வலர்களையும் பாராட்டுகிறேன். விலங்குகளை பலியிடுவதை நிறுத்துவதற்காக அவர்கள் மிக நல்ல காரியத்தில் ஈடுபடுகிறார்கள். 40% லிருந்து 60% வரை விலங்குகள் பலியிடப்படுவது குறைந்திருப்பதாக அறிந்தேன். நீங்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு உயிரை உருவாக்கத் தகுதியில்லாத போது ஒரு உயிரைக் கொல்ல அவர்களுக்கு உரிமை கிடையாது. ஒரு அப்பாவி ஆட்டுக்குட்டிக்கு நீ உயிர் கொடுக்க முடிந்தால், அதன் உயிரைக் கொல்லவும் உரிமை பெறலாம். ஆனால் அதற்கு உயிர் கொடுக்க முடியாத நீ அதை பலியிடக் கூடாது. இவ்வுலகில் ஒவ்வொரு உயிரினமும் வாழ (தன் உயிரைக் காத்துக் கொள்ள) உரிமை பெற்றது. கடவுள் உயிர் பலியால் மகிழ்ச்சியடைவார் என்று நம் முன்னோர்களின் வாக்கில், நமக்கு கிடைத்திருக்கும் பண்டைய நூல்களில் எதிலுமே சொல்லப்படவில்லை.     

பரிணாம வளர்ச்சியின் அடையாளம்

சனிக்கிழமை - 13 டிசம்பர், 2014

பெங்களூர், இந்தியா


(கீழே வருவது “அன்பு தான் விடை“ என்ற பதிப்பின் தொடர்ச்சி)

குருதேவா! சிறந்த தியானம் செய்பவனாவது எப்படி ?

பார்! சிறந்த தியானம் செய்பவர், மோசமான தியானம் செய்பவர் என்றேல்லாம் கிடையாது. எனக்கு என்ன கிடைக்கும் என்று இடைவிடாது சிந்திப்பதை விட்டு, நிகழ்காலத்தில் வாழ்ந்து மகிழ்வோடு இரு. பொது நிகழ்ச்சிகளில் எப்படி பங்கேற்பது, சமுதாயத்துக்கு எப்படி நன்மை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்.

நமக்கு ஏதாவது கிடைத்தால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். மற்றவர்கள் நம்மிடம் அன்பு செலுத்த வேண்டும். நம்மை மதிக்க வேண்டும், நம்மை எப்போதும் ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இப்படி விரும்புவதை நாம் கைவிட வேண்டும். இந்த நிலையிலிருந்து வெளியே வந்து, சமூகசேவையில் உன் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்.  மகிழ்ச்சியோடு இருப்பாய். ஆழ்ந்த தியானத்தை அனுபவிப்பாய். வாழ்க்கை இனிமையாகவும், வளமாகவும் இருக்கும்.

நாம் ஒன்றை பெறும்போது மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் கொடுப்பதிலும் மகிழ்ச்சி அடைய முடியும். உங்கள் தாத்தா பாட்டிகளை பார்த்திருக்கிறீர்களா? தங்களிடம் இருப்பதை பிள்ளைகள், பேரக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஒரு தாய் தன் பிள்ளைகளுக்காக பல தின்பண்டங்களை செய்து கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறாள். உணவு படைப்பதில் மகிழ்ச்சி அடைகிறாள். இந்த விதமான மகிழ்ச்சி மேலும் சிறந்தது.

வாழ்க்கையில் நாம் பெறுவதில்/அடைவதில் உள்ள மகிழ்ச்சியை பற்றி சிந்திக்காமல் நம்மிடம் உள்ளவற்றை மற்றவர்களுக்குக் கொடுத்து பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியை நாட வேண்டும்.அது ஒரு தாய்க்கு கிடைக்கும் மகிழ்ச்சியைப் போன்றது. ஒரு பாட்டிக்கு தன் பேரக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடானது. இது சிறப்பான மகிழ்ச்சியாகும்.

யோகி என்பவர் யார்? யோகியின் வாழ்க்கை முறை என்ன?

யோகி என்பவர் ஒரு குழந்தை. யோகி மீண்டும் மீண்டும் குழந்தையாகிறார். 3 மாதத்திலிருந்து 3 வயது வரை ஒரு குழந்தை வளரும் போது கவனித்தால், அது ஏறக்குறைய எல்லா யோக ஆசனங்களையும் செய்கிறது. அது உங்களுக்கு ப்ராணாயாமம் கூட சொல்லிக் கொடுக்கும். ஒரு குழந்தையைக் கவனித்தாலே போதும். யோக ஆசிரியர் தேவையில்லை. அதே போல் எல்லா மிருகங்களும் ஏதாவது யோக ஆசனத்தைச் செய்கின்றன.

யோகி என்பவர் முடிவில்லாத ஒன்றோடு (இன்ஃபினிடி) தொடர்பு கொண்டவர். யோகி யாரையும் தன்னை சேராதவர் என்று நினைக்க மாட்டார். யோகி என்பவர் பல திறமைகளுடையவர். வளைந்து கொடுக்கக் கூடியவர். சிலருக்கு உடல் நெகிழ்வாக இருக்கும். ஆனால் மனம் மிகவும் இறுக்கமாக இருக்கும். இறுக்கமான மனநிலையில் இருப்பவரால் இனிமையானவராக இருக்க முடியாது. 

அவரால் மற்றவர்களோடு இயல்பாக தொடர்பு கொண்டு பழக முடியாது. மற்றவர்களுடைய புதிய கருத்துகளை அவரால் ஒத்துக் கொள்ள முடியாது. ஆனால் ஒரு யோகி தன் கருத்துகளில் பிடிவாதமாக இருக்க மாட்டார். அதே சமயம் குழப்பமான மனநிலையிலும் இருக்க மாட்டார். மனதில் பட்டதை நேராக சொல்வார். அவர் மிகவும் பலம் வாய்ந்தவர். மென்மையானவராகவும் இருப்பார். ஒரு குழந்தையின் கள்ளங்கபடமற்ற நிலையில் இருப்பார். யோகி என்பவர் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். அவர் ஒரு குழந்தையை போல் இருப்பார். குழந்தைத்தனமான காரியம் செய்ய மாட்டார். அவர் ஒரு குழந்தையைப் போல் எளிமையானவர். மிக அறிவோடு செயல்படுவார். யோகி விவேகத்துடன் இருப்பவர். நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவார்.

விவேகத்துடன்  நடந்து கொள்வதாக நினைக்கும் சிலர் நிலைமையின் முக்கியத்துவத்தைப் புரிந்து நடப்பதில்லை. உணர்ச்சிவசப்பட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத மக்களால் அறிவு பூர்வமாகச் செயல்பட முடியாது.யோகி என்பவர் விவேகத்துடன், நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நடுநிலையில் செயல்புரிவார். யோகி என்பவர் அன்போடு பழகுவார். நடு நிலைமையில் இருப்பவர். காதல் வயப்படுபவர்கள். நடு நிலையிலிருந்து தவறுவார்கள். நடு நிலையில் உறுதியாக இருப்பவர்களில் முகத்தில் அன்பு வெளிப்படுவதில்லை. ஆனால் ஒரு யோகி அறிவோடும் (தலை), அன்போடும் (இதயம்) இணைந்து செயல்படுவார். நடு நிலையில் உறுதியாகவும் அதே சமயம் அன்போடும் பழகுவார். 

ஒரு மனிதனுக்கு வேண்டிய எல்லா சிறந்த பண்புகளும் யோகியிடம் இருக்கும். ஏனென்றால், யோகி தன் ஆத்மாவுடன் நிலைத்திருப்பவர். இந்த உலகில் உள்ள அனைத்தோடும் தொடர்பு கொண்டவர். நம் எல்லோருடனும் தொடர்பு கொண்டவர். ஏனென்றால் நாமனைவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டவர்கள்.

குருதேவா! குருவிடம் இருக்கும் பந்தத்தை கைவிடுவது எப்படி? மிகவும் காயமடைந்து வலியை உணர்வது போலிருக்கிறது.

நீ குருவை உன் சொத்து போல் வைத்திருக்க முடியாது. அது உனக்கு வலியை கொடுக்கும். குரு எல்லோருக்கும் சொந்தமானவர். கைவிரலில் எண்ணக் கூடிய சிலருக்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல. எங்கு அன்பு தீவிரமாக இருக்கிறதோ, அங்கு தாபமும் தீவிரமாக இருக்கும். தாபம் வலியை கொண்டு வரும். இந்த வலி சிறிது வித்தியாசமானது. வலியிலும் சிறிது இனிமையிருக்கும். இப்படிப்பட்ட தொடர்பு கடவுளிடம் இருப்பதும், குருவிடம் இருப்பதும், இந்த உலகமனைத்துடனும் இருப்பதும் ஒன்றே. நாமனைவரும் இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக பார்க்க விரும்புகிறோம். மற்றவர்களுக்கு ஞானத்தை கொடுத்து அவர்கள் வாழ்க்கையில் ஆக்கபூர்வமான நன் மாற்றங்களை கொண்டு வர உதவுபவர் தான் குரு.ஒருவர் தன் வாழ்வில் சிறந்த மாற்றங்கள் ஏற்படுவதை அனுபவிக்கும் போது தான் குரு தன் வாழ்வில் வந்திருப்பதை உணர்ந்து, குருவின் மேல் மதிப்பு வைத்து அவரை நாடிச் செல்வார். ஆனால் சிலர் இதற்கு எதிரான கருத்தைச் சொல்வது வழக்கமாக இருக்கிறது. அவர்கள் சொல்வது. முதலில் நீ ஒருவரை குருவாக மதிக்க வேண்டும். அதன் பின்பே உன் வாழ்வில் நன் மாற்றங்கள் ஏற்படும்.

எப்படி உன் குருவுக்கு நன்றியை தெரிவிப்பாய்? உன் வாழ்வில் குரு ஏற்படுத்திய மாற்றங்களை மற்றவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட உதவுவது தான் நீ குருவுக்கு தெரிவிக்கும் நன்றியாகும். நீ உண்மையில் 10 பேர்களுடைய வாழ்வில் நன் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினால், அந்த விருப்பம் கண்டிப்பாக நிறைவேறும். எனவே அன்பும் தாபமும் ஒரே காசின் இரண்டு பக்கங்களே. நம்முடைய உருவாக்கும் திறன் மலர இரண்டுமே அவசியம்.இறைவன் மேல் நாம் கொண்டிருக்கும் தாபம், நம்மை நல்வழியில் செல்ல உதவும். குடி, மற்றவர்களை குறை கூறுவது போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து நம்மை தூர விலக்கி விடும். எதிர் மறை குணங்களை தவிர்த்து, இறையன்பு என்ற அமிர்தத்தில் நாம் மூழ்கும் போது, தாபமும் அதோடு வலியும் தோன்றுவது இயல்பு.

குருதேவா! நேபாளத்திலிருந்து நாங்கள் (விவசாயிகள்) ஆசிரமத்துக்கு வந்திருக்கிறோம். இயற்கை உர விவசாயத்தை பற்றி விளக்குவீர்களா ?

ஆம்! நாமனைவரும் இயற்கை உர விவசாயத்தையே பின்பற்ற வேண்டும். மற்றவர்களையும் அப்படி செய்யத் தூண்ட வேண்டும். ஆசிரமத்திலுள்ள விவசாயத் துறையைச் சேர்ந்தவர்களை உங்களுடன் சேர்ந்து விரிவாகப் பேசச் சொல்கிறேன். அவர்கள் உங்களுக்குப் பல செயல் முறைகளை பற்றி விளக்கி சொல்வார்கள். உங்களுக்குத் தெரியுமா? இயற்கை உரத்தால் நாம் இங்கு 6 அடி நீள சுரைக்காயை விளைவித்திருக்கிறோம். நாம் இரசாயன உரத்தைத் தவிர்த்து இயற்கை உரத்தை மட்டும் பயன்படுத்தினால் இப்படி விளைவிக்க முடியும். ஆசிரமத்தில் எந்த விதமான இரசாயன உரமும் பயன்படுத்துவதில்லை. நல்ல விளைச்சலுக்கு இயற்கை உரமே சிறந்தது.

குருதேவா ! நம் வாழ்க்கையில் முன்னேற்றம் கர்ம வினையைப் பொறுத்ததா ? அல்லது நாம் எந்த சாதியில், எந்தக் குடும்பத்தில் பிறந்தோம் என்பதைப் பொறுத்ததா? (உதாரணமாக பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர்)

உன் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றம் உன் கர்ம வினையை பொறுத்தது. பார்! இப்படிப்பட்ட பிரிவுகள் சமூக அளவில் உலகம் முழுதும் பின்பற்றப்படுகின்றன. உலகில் எல்லா நாடுகளிலும் நீ அறிவில் சிறந்தவர்களைக் காணலாம். (அவர்களை பிராமணர்களாக வைத்துக் கொள். பிறப்பால் மட்டுமே ஒருவர் பிராமணராக முடியாது) வியாபாரத் துறையில் இருப்பவர்களை வைசியர் என்று எண்ணலாம். எல்லா நாடுகளிலும் பாதுகாப்புத் துறை இருக்கிறது. (படைவீரர்கள், காவல்துறை….) இவர்கள் க்ஷத்திரியர்கள்.அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்,தொழிலாளர்கள் பலர் இருக்கிறார்கள். பல தொழிற்சங்க அமைப்புகள் இருக்கின்றன. இவர்கள் அனைவரையும் சூத்திரர்கள் என்று வைத்துக்கொள்.

(குறிப்பு: மேற் சொன்ன எதுவுமே பிறப்பால் வந்தது அல்ல.)

குருதேவா! மகிஷாசுரனை தேவி “ஹூம்” என்ற சப்தத்தினால் அழித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு என்ன அர்த்தம்?

ஒரு ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து அதே போல் சத்தமிடு. உனக்குள் என்ன நடக்கிறது என்று பார். உன் சோம்பேறித்தனம், ஜடத்தன்மை எல்லாமே போய்விடுவதை உணரமுடியும், மகிஷாசுரன் சோம்பேறித்தனம், ஜடத்தன்மை முதலிய குணங்கள் உடையவன்.

உங்கள் மகிழ்ச்சி உங்கள் பொறுப்பு

வெள்ளிக்கிழமை,12 டிசம்பர் 2014,

பெங்களூரு, இந்தியா

மனித உடலின் மையப் பகுதி, சூரிய பின்னல் அமைப்பு போன்ற நரம்புகள் ஆகும். அதுவே புவியீர்ப்பு மையமும் ஆகும். யோகிகளின் உடலில் இத்தகைய சூரியப் பின்னல் மிகப் பெரியது. தியானம் செய்யாதவரின் உடலில் இது ஒரு சிறிய நெல்லிக்காயின் அளவு சிறியதாக இருக்கும். ஆனால் முறையாக தியானம் செய்தால் அதன் அளவு பெரிதாகிக் கொண்டே வந்து ஒரு முழு நிலவின் அளவில் இருக்கும். நமது அத்தனை உணர்ச்சிகளும் இந்த சூரியப் பின்னலிலேயே சேமிக்கப்பட்டிருக்கும். இந்தப் புள்ளியிலிருந்தே உங்களது உணர்வுத் தோன்றல்கள் எழும். விஞ்ஞானிகளும் இந்தக் கருத்தையே கூறுகின்றார்கள்.

நமது முன்னோர்கள் இந்த சூரியப் பின்னலுக்கு பத்மநாபா என்று பெயரிட்டிருந்தனர். அதாவது, இந்த சூரியப் பின்னல் முற்றிலும் மலர்ந்த தாமரையை போன்றது என்னும் பொருள் ஆகும். விஷ்ணு பகவானின் உருவத்தை பார்த்தீர்களானால் அவரது தொப்புளிலிருந்து மலர்ந்து எழும் தாமரையிலிருந்து பிரம்மன் உதயமாவதைக் காண்பீர்கள்.

இது எதைக் குறிக்கின்றது? விஷ்ணு பகவான் யோகா நித்திரையில் இருப்பதையும்,அப்போது மலர்ந்து எழும் தாமரையிலிருந்து உதயமாவது பிரம்மா என்றும் குறிக்கின்றது.

எத்தனை பேர் இதைக் கேள்விப் பட்டிருக்கின்றீர்கள்? (பலர் கை உயர்த்துகின்றனர்) இதன் ரகசியம் என்னவென்றால், யோகநித்திரையில் இருக்கும் போது, உங்களது நாபி பகுதி (தொப்புள் பகுதி ) மலர்ந்து, ஏராளமான படைப்பு திறனை ஏற்படுத்துகின்றது. விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்களோ அதை நமது அறிவுமிக்க முன்னோர்கள் பல அழகான அடையாள கதைகளுடன் ஏற்கனவே கூறிவிட்டனர். சாதரணமாக மக்கள், ஏதேனும் ஒன்று உருவாக்கப்பட்ட பின்னரே அதை வளர்த்து, பராமரிக்க முடியும் என்று கருதுகின்றனர்.ஆனால் இந்தக் கதையில்,போஷித்து வளர்க்கும் விஷ்ணு, படைக்கும் பிரம்மா எழும் முன்னரே தோன்றிவிட்டதாகக் கூறப்படுகின்றது. ஒன்று உருவாதற்கு முன்னரே பராமரிக்கும் துறை தோன்றிவிட்டது! இது உச்ச வினையின் அடையாளம். படைப்பு உண்மையில் பின்னரே ஏற்பட்டது.

நமது முன்னோர்களும் ரிஷிகளும் மிகச் சிறந்த அறிவாளிகளாக இருந்திருக்கின்றனர். இன்று மக்கள் இத்தகைய கதைகளை கேட்டு அவற்றில் மறைந்திருக்கும் அடையாளங்களை அறியும் போது அவற்றின் ஆழத்திலும் அழகிலும் மிகவும் வசீகரிக்கப்படுகின்றனர்." காலம்காலமாக இந்நாட்டில் மிகுந்த அறிவும், திறனும் இருந்திருக்கின்றன" என்றே எண்ணுகின்றனர். " தன்னைப் பராமரிப்பவரிடமிருந்தே படைப்பு தோன்றியது" என்று அடையாளபூர்வமாக கூறியிருக்கின்றனர். 

குருதேவ், உணர்வுபூர்வமாக தவறாக நடந்து கொள்பவர்களை எவ்வாறு கையாள்வது?

உடல் ரீதியாக தவறாக நடந்தால், நீங்கள் அவர்களிடமிருந்து விலகி இருக்கலாம். உணர்ச்சி ரீதியாக என்றால், அப்போது அது உங்கள் முழுப் பொறுப்பாகி விடுகின்றது.அனுமதியின்றி யாரும் உங்களை உணர்ச்சி பூர்வமாகக் கையாள முடியாது.மகிழ்ச்சியின்றி இருக்க வேண்டாம் என்று நீங்கள் எண்ணினால், யாரும் உங்களை மகிழ்ச்சியின்றி ஆக்க முடியாது. என்ன நடந்தாலும் சரி, என்னுடைய மனநிலையையும் உற்சாகத்தையும் உயரே வைத்து புன்முறுவலுடனேயே இருப்பேன், என்னவானாலும் சரி,  பிறருடைய தந்திர உபாயங்களில் சிக்கிக் கொள்ளமாட்டேன் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். அவ்வளவுதான். இதிலிருந்து வெளியேற ஒரே ஒரு சங்கல்பம் போதும்.

குருதேவ், நிபந்தனைகள் நிறைந்த இவ்வுலகில் நிபந்தனையின்றி எவ்வாறு அன்பு செலுத்துவது  ?

அன்பு செலுத்த முயற்சிக்காதீர்கள். அன்பு என்பதை வற்புறுத்தி செலுத்தமுடியாது. அது இயலாத செயல்.தளர்வாக விட்டு இயல்பாக இருங்கள். இந்த உலகத்தில் வரையறைகள் உண்டு என்று தெரிந்து கொள்ளுங்கள். மக்களுக்கு வரையறைகளும் விருப்பு வெறுப்புக்களும் உண்டு. எல்லா விதமான மக்களுடனும் வாழ்ந்தாக வேண்டும். வாழும் கலையில் அது ஒரு முக்கியக் கோட்பாடு: மக்களையும் சந்தர்ப்பங்களையும் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள்.

மக்களுடைய எண்ணங்களும்,அபிப்பிராயங்களும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன. நண்பர்கள் எதிரிகளாகவும், எதிரிகள் நண்பர்களாகவும் மாறுகின்றனர். ஒருவருடன் நட்பாக இருக்கின்றீர்கள், திடீரென்று எந்தக் காரணமும் இன்றி அவர் உங்களுக்கு எதிரியாகி விடுகின்றார். யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத போதிலும், உங்களுக்கெதிராக மாறி விடுகின்றனர். சில சமயங்களில் கொஞ்சம் கூட தெரியாத யாரோ உங்களுக்கு உதவுவார்கள். எதுவும் பெரிதாக அவர்களுக்கு நீங்கள் செய்யாத போதிலும் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.அதே சமயம், யாருக்கு மிகவும் உதவி செய்து கவனித்தீர்களோ அவர்கள் எதிரியாகி விடுவார்கள். இவ்வாறு உங்களுக்கு நிகழ்ந்திருக்கின்றதல்லவா? (பலர் கை உயர்த்துகின்றனர்)

நட்பும் பகைமையும் கர்மா என்னும் ஆழ்ந்த தத்துவத்தில் வேலை செய்கின்றன. உங்கள் காலம் நன்றாக இருந்தால், உங்கள் எதிரிகள் கூட நண்பர்களாவர். உங்கள் காலம் சரியில்லையென்றால், நெருங்கிய நண்பர்கள் கூட உங்களைத் தவறாக புரிந்து கொண்டு எதிரிகள் போன்று நடந்து கொள்வர். ஒரு பரந்த  கண்ணோட்டத்தில், இதைப் பார்த்தால், உள்மன பலம் உங்களுக்குள் மலர்ந்து, எந்த சந்தர்ப்பத்திலும் புன்முறுவலுடன் இருப்பீர்கள்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், வெளிநாடுகளில் யோகா மற்றும் தியான வகுப்புக்களை நடத்தும் போது அவற்றை மக்கள் அதிகமாக மதிக்கவில்லை. இந்தப் பயிற்சிகளை செய்பவர்கள் பைத்தியக் காரர்கள் என்றே கருதினர். உடலெங்கும் விபூதியுடன் ஒரு காலில் நிற்பது, சிரசாசனம் செய்வது போன்றவையெல்லாம் இயல்புக்கு மாறாகவே அவர்களுக்குத் தோன்றின. அவ்வளவு வெறுப்பு இருந்தது. யோகா என்பது சாதாரண மனிதனுக்கு உகந்தது அல்ல சமுதாயத்தில் கௌரவமானவர்கள் யோகா செய்ய மாட்டார்கள் என்றே கருதப்பட்டது. அக்காலத்தில் யோகா பொது மக்களிடையேயும், அரசுகளிடமும் அங்கீகாரத்தைப் பெறவில்லை. 

நாட்டு மக்களின் மற்றும் அரசின் அங்கீகாரம் இன்றி எந்த சமய, அல்லது ஆன்மீகப் பாரம்பரியமும் நீண்ட நாள் பிழைத்திருக்க முடியாது. பல ஆண்டுகள் கிறுக்குகளே யோகா செய்வார்கள் என்று மக்கள் எண்ணியிருந்தார்கள். யோகா மற்றும் ஆன்மீகப் பயிற்சிகளை பற்றிய பயமும் மக்களிடையே இருந்தது. இத்தகைய எண்ணப் போக்கினை கவிழ்ப்பதற்கு பல ஆண்டுகள் ஆயின. நமது ஆசிரியர்கள் இடம்விட்டு இடம் சென்று யோகா மற்றும் தியானம் பற்றிய செய்தியினை பரப்பினர். உலகெங்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இதற்காக பணிபுரிந்தனர்.

சுவாமி பரமஹம்ச யோகானந்தாஜி அக்காலத்தில் தியானம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிப் போக்கினை துவக்கினார். அவருக்குப் பின்னர் மகரிஷி மகேஷ் யோகிஜி ஆன்மீக வளர்ச்சிக்கு மகத்தான பங்களித்தார். மேல்நாடுகளில் மிகப் பிரபலமாக இருந்த ஹிப்பி அலையினால்  போதைப் பொருட்களுக்கு அடிமையாயிருந்த மக்களைக் காக்கப் பெரும் பூர்வாங்க பணியினை செய்தார். சிறிது சிறிதாக மேலும் மேலும் மக்களை ஊக்குவித்து, யோகா மற்றும் தியானம் மூலம் நிவாரணமும், மகிழ்ச்சியும் அடைய வழிசெய்தார். ஆனால் அவர் காற்றில் (யோக ஆற்றல் மூலம்) மிதக்கச் செய்தல் போன்றவற்றைப் பேசத் துவங்கியதும் மக்கள் பயந்து இப்பயிற்சிகளிருந்து எச்சரிக்கையாக பின்வாங்கினர். பின்னர் 1980களில் மக்களின் மனநிலை மீண்டும் மாறி, யோகாவில் விருப்பம் கொண்டனர். இக்காலகட்டத்தில் பல யோகப்பயிற்சி நிலையங்கள் தோன்றின. எனவே காலப் போக்கில் மனப்பாங்கு மாறத் துவங்கியது.

இன்றுள்ள நடப்பு முற்றிலும் வேறானது, 152 நாடுகளில் மக்கள் தீவிரமாக யோகா மற்றும் தியானப் பயிற்சி செய்து வருகின்றனர். கூடுதலான மக்கள் இப்பயிற்சிகள் மூலம் மகிழ்ச்சி காண்கின்றனர். இன்று அனைத்துப் பெரிய விளம்பரங்களிலும் யாரோ ஒருவர் யோகாசனத்திலோ அல்லது கண் மூடித் தியானத்திலோ அமர்ந்திருப்பதைக் காண்பீர்கள். மக்களின் அபிப்பிராயங்கள் மாறி விட்டன. முந்தைய நாட்களில் யோகாவும் தியானமும் சாதாரண மனிதனுக்கு உகந்தது அல்ல என்ற எண்ணம் நிலவி வந்தது. அதனாலேயே இந்த அறக்கட்டளைக்கு வாழும் கலை என்று பெயரிட்டேன். அது ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது. யோகா பயிற்சி என்று எங்களால் கூற முடியவில்லை. இங்கு வாழும் கலையின்  பயிற்சியில் யோகா ஒரு பகுதியே ஆகும். இந்த முழு செயல்முறையும் உங்களை நீங்கள் அறிந்து கொள்வதற்கு உருவாக்கப்பட்டதாகும். வெறும் யோகாவை விட இது இன்னும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.


தவறான அபிப்பிராயம் என்பது பெரிய பிரச்சினை. ஆனால் காலம் அதைக் கவனித்துக் கொள்ளும். அதனால் தான், நான் ஆசிரியர்களிடம் எப்போதுமே "கற்பித்தல் மற்றும் புறக்கணித்தல்" பற்றிக் கூறுவேன். ஒரு முக்கியமான முன்னேற்றம் என்னவென்றால், பிரதமர் ஸ்ரீ நரேந்தர மோடிஜி யோகாவை பிரபலப்படுத்த பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். முயற்சிகளினால், ஐக்கிய நாட்டு சபை ஆண்டிலேயே நீண்ட நாளான 21 ஜூன் சர்வ தேச யோகா தினம் என்று அறிவிக்கப்பட்டது. இது யோகாவிற்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கௌரவம் என்று எண்ணுகின்றேன். ஆனால் இது மட்டும் போதாது. முக்கியமானது என்னவென்றால், ஒவ்வொரு நாட்டின் தலை வாசலையும்  யோகா அடைந்து, மேலும் மேலும் அதிக மக்கள் அதனால் பயன் பெறவேண்டும்.

ஏன் நல்லவர்கள் துன்புறுகின்றார்கள்?

வெள்ளிக்கிழமை, 12 டிசம்பர், 2014,

பெங்களூரு, இந்தியா



(உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

இது நல்லவர்களுக்கான காலமில்லை என்று அடிக்கடி கூறப்படுகின்றது. சமுதாயத்தில் தீயவர்கள் வெற்றியடைவதையும், பிறரை ஆதிக்கம் செலுத்தி உயர்வதையும் காண்கின்றோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்வது போல காணப்படுகின்றார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்?

ஆம், நீங்கள் கூறுவது சரியே. அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வது போல காணப்படுகின்றார்கள். ஆனால் இது தாற்காலிகமானது தான். பாருங்கள், ஒருவர் மிகவும் துன்புற வேண்டுமாயின், அவர் முதலில் மிக உயரத்திற்கு சென்று, அங்கிருந்து வீழ்வது தான். தவறான செயல்கள், அல்லது தவறான நோக்கங்கள் இவைகளுடன் உயரே செல்பவர்கள் இறுதியில் மிகுந்த துன்பகரமான முடிவை அடைவார்கள். அவர்களால் இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. பகலிலும் நிம்மதி இல்லை. உயர்விலிருந்து அவர்களது வீழ்ச்சி மிகவும் கூர்மையானது, அவர்களை முற்றிலும் தகர்த்து விடும். நீங்களோ உங்களில் திருப்தியாக உணர்ந்து நிம்மதியாக உறங்குகின்றீர்கள்.

நல்லவர்கள் துன்புற்றுக் கொண்டே இருக்கின்றார்கள், கடினமான காலத்தையே சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூறமுடியாது.கடினமான காலங்களை சந்திப்பது, அறியாமையாலோ அல்லது முட்டாள் தனத்தினாலேயோ கூட இருக்கலாம். ஒருவர் நான் நல்லவன் உயர்ந்தவன் என்று கூறி, தீயில் கையை வைத்தால் அவன் நிச்சயம் தீப்புண்ணை அடைவான். தீயில் கையை வைத்தால் உடனேயே அது சுடும். பின்னர் அல்ல.

சில சமயங்களில் இந்தப் பிறவியில் நீங்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை அல்லது தீயது எண்ணவில்லை ஆனால் துன்புருகின்றீர்கள் என்று தோன்றலாம். இந்தக் கேள்வி சாதரணமாக எழக்கூடியது தான். நம்முடைய வாழ்வினை பற்றிய புரிதல் மிகக் குறைவானது ஆகும். வாழ்க்கை என்பது இந்த 50 அல்லது 60 ஆண்டு காலம் மட்டுமல்ல. பின்னோக்கிப் பார்த்தால், முட்செடிக்கு எங்கேயோ விதையிட்டிருக்கின்றீர்கள்,அதன் பயனை இப்போது அனுபவித்து கொண்டிருக்கின்றீர்கள்.

இரண்டு விதமான கர்மாக்கள் இருக்கின்றன.
1. உடனடியாக பலன் தரக்கூடிய கர்மாக்கள்
2. பிற்காலத்தில் பலன் தரக்கூடிய கர்மாக்கள்

உதாரணமாக, தீயில் கையை வைத்தால் உடனடியாகச் சுடும். நாளையோ அல்லது பின்னரோ அல்ல. ஒரு மாங்காய் விதையை விதைத்தால் அது மரமாக பத்து ஆண்டுகள் ஆகும். பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே, கடின உழைப்பிற்கு பின்னரே அதன்  பயனை அடைய முடியும். அது போன்றே சில கர்மாக்கள் உடனடியாகப் பலன் தரும், சில கர்மாக்கள் பலன் தருவதற்கு சிறிது காலம் ஆகும். ஆயினும், நீங்கள் எதிர் கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையும்  அல்லது துன்பமும் உங்களுடைய செயல்கள் மற்றும் முற்பிறவிக் கர்மாக்களினாலேயே என்று எண்ணாதீர்கள். சில இப்பிறவியில் உங்கள் முட்டாள் தனத்தினாலேயோ அறியாமையினாலேயோ கூட நிகழலாம்.
முற்பிறவி வினைகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள தினமும் சாதனா மேற்கொள்ள வேண்டும். அது நிச்சயம் கடந்து போன கர்மாக்களின் பாதிப்பினை ரத்து செய்யும். அத்துடன் நாம் புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும்.

"நான் உன்னதமானவன், நற்குணவான், ஆகவே நல்லவைகளே எனக்கு நடக்க வேண்டும் " என்று எண்ணாதீர்கள். இல்லை. செயல்படுவதற்கு முன், சமயோசிதமும் புத்திசாலித்தனமும் இருக்க வேண்டும். அறிவினைப் பூட்டி வைக்காதீர்கள், சாமர்த்தியமாக பயன்படுத்துங்கள்.

என்னுடைய வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தோன்றுகின்றது. என்ன செய்வது?

உங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தும் போது வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தோன்றுகின்றது. எனக்கு என்ன நிகழும்? எனக்கு என்ன வேண்டும்?  எனக்கு இது வேண்டும், அது வேண்டும், எப்போது கிடைக்கும்? என்றெல்லாம் எப்போதும், எண்ணிக் கொண்டிருந்தால், வாழ்க்கை அர்த்தமற்றதாகவே தோன்றும். பிறருக்கு எதையேனும் தருவதற்காகவே, சமுதாயத்திற்கு எதையேனும் திரும்பத் தருவதற்கே, மேலும் இந்த உயர்ந்த உண்மையைக் கண்டறிவதற்காகவே இங்கு வந்திருக்கின்றீர்கள் என்று அறிந்து கொண்டால், வாழ்க்கை அர்த்தமுள்ளதாகி விடும்.
இன்பசெறிவு மற்றும் இன்பம் இழப்பு இரண்டுமே வாழ்க்கையை அர்த்தமற்று உணருவதற்குக் காரணம் ஆகும். உங்கள் பார்வையை அதினின்று விடுவித்து ”நான் பிறருக்கு என்ன செய்யக் கூடும்? நான் யார்?” என்று எண்ணத் துவங்கினால், உங்களுள்ளிருந்து அன்பும், மகிழ்ச்சியும் பெருக்கெடுக்கும், அனைத்து மதிப்புக்களும் வாழ்வில் இயல்பாகவே பெருகும். இது உங்களுக்கு ஒரு நல்ல காலமாற்றத்தை ஏற்படுத்தும்.

குருதேவ், நான் ஒரு நோயாளி. இதினின்று வெளி வர விரும்புகின்றேன்.என்ன செய்வது?

வெளிவர வேண்டும் என்னும் வலுவான விருப்பத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். ஒழுங்காக தியானமும் பிராணாயாமமும் செய்யுங்கள். இங்கு டாக்டர் நிஷா மணிகண்டனை கலந்து ஆலோசியுங்கள். அவர் உங்களது உணவு மற்றும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பவற்றுக்கு வழிகாட்டுவார். நிறைய கான்செர் நோயாளிகளுக்கு,மருத்துவர்கள் ஆறு மாதமே உயிர் வாழ்வார் என்று நிர்ணயித்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் இங்கு ஆஸ்ரமத்திற்கு வந்து, சுதர்சனக்ரியா பயிற்சி செய்து தங்களது உடல் நலனைத் திரும்பப் பெற்று, கான்சர் நோய் என்று கண்டுபிடிக்கப் பட்டு இருபது ஆண்டுகள் ஆகிய பின்னர் இன்றும் உயிருடன் இருக்கின்றனர்.

மருந்து மாத்திரையில் மட்டுமே நம்பிக்கை வைக்காதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நிலையான விழிப்புணர்வு உங்களுக்குள் இருக்கின்றது என்னும் நம்பிக்கை வையுங்கள். அதுவே ஒரு சிறிய திசு முழு வளர்ச்சியடைந்த குழந்தையாக தாயின் கர்ப்பப் பையில் வளரச் செய்யும் சக்தி வாய்ந்தது. வளர்ச்சிக்குப் பொறுப்பான அது, நிச்சயம் உடலைப் பழுது பார்த்துக் குணமடையச் செய்யவும் வல்லது.

குருதேவ், வைட்டமின் D மற்றும் வைட்டமின் B12 குறைபாட்டிற்கு என்ன காரணம்? பல பெண்களுக்கு இப்பிரச்சினை ஏற்படுகின்றது . மருந்துகளைத் தவிர வேறென்ன தீர்வு உள்ளது?

வேளாண்மையில் பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் பயன் படுத்துதலே இதற்குக் காரணம். இவை மண்ணை ரத்தசோகை (குறைந்த இரும்புச் சத்து) உள்ளதாக ஆக்குகின்றது. சூரிய ஒளியில் வைட்டமின் D கிடைக்கின்றது. பெரும்பாலான நேரம் உட்புறமாகவே இருந்தால் மருந்து மாத்திரைகள் உண்ண நேரும். கனிம உணவிலிருந்து (Inorganic food) கரிம உணவிற்கு (organic food) மாற வேண்டும்.தவிர MSG (Mono Sodium Glutamate என்னும் பதனப் பொருள்) தவிர்க்கப்பட வேண்டும். இது மாகீ நூடுல்ஸ் போன்றவற்றில் நறுமணசுவையை அதிகப் படுத்தும் பொருட்டு பயன்படுத்தப் படுகின்றது. இன்று பல உணவுப் பொருட்களில் இது சேர்க்கப்படுகின்றது. இது உடலில் தங்கி, சூரிய ஒளி உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றது. முடிந்தவரையில் தொகுக்கப்பட்டுப் பதனப் படுத்தப் பட்டுள்ள உணவினைத் தவிர்க்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் இவை நிராகரிக்கப் பட்டு விட்டன ஆனால் இந்தியாவில், இன்னமும் உபயோகத்திலுள்ளன. இன்னும் நிறைய மக்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கரிம உணவினை (organic food) உண்ணுங்கள்.

குருதேவ்,நாம் சிவ பெருமான்,பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோரை துதித்து பக்திப் பாடல்களை பாடுகின்றோம். ஆனால் நம் நாட்டில் மக்கள் சிவனைத் துதித்துக் கொண்டே பான்க் (சிவனை மகிழ்விக்கும் என்ற தவறான கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்  ஒரு வித இந்திய போதைப் பொருள்) உட்கொள்கின்றனர். மேலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் 16000 பெண்களை திருமணம் செய்து கொண்டார் என்றும் கதைகள் உள்ளன. இவற்றையெல்லாம் எவ்வாறு புரிந்து கொள்வது?

சிவ பெருமான் பான்க் எடுத்துக் கொண்டாரேயானால், பாற்கடலில் தோன்றிய விஷத்தையும் உட்கொண்டார். அப்படியானால் நாமும் விஷத்தை உட்கொள்ளலாமா?அப்போது பான்க் உட்கொள்ள உயிருடன் இருப்போமா? இவற்றையெல்லாம் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.சிவ பெருமான் ஒரு போதும் பான்க் எடுத்துக் கொண்டதேயில்லை.முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது, சிவதத்துவம் (மிக மிக அடிப்படையான படைப்பில் யாவற்றிலும் வியாபித்துள்ள உருவாக்கம்) ஒவ்வொரு உயிரிலும் உள்ளது. பான்க் போன்ற போதைப் பொருள்,சிவபெருமானின் பேரின்பத்திற்கு எதுவும் செய்ய இயலாது. ஏனெனில், சிவன் இத்தகைய அற்ப தாக்கங்களுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவர். ஆனால் சிவ நாமத்தை பாடுவது நமக்கு ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை உயர்த்தும்.

பல பெண்களுடன் கிருஷ்ணர் நடனமாடிக் களித்திருந்த முழு கதையினையும் படிக்கவில்லை என்று தெரிகிறது. நீங்கள் ஸ்ரீமத் பாகவதம் படித்து இருந்தால், இந்த ராசலீலாவை (இறைவன் ஒரு பொழுதுபோக்கு பொருள்) அவரது தனது 14வது வயதில் நடத்தினார் என்று தெரிந்து கொள்வீர்கள். அனைவருக்கும் விருப்பமானவர், அனைவருடனும் விளையாடுபவர். அவ்வழிகளைப் பின்பற்ற வேண்டாம், ஆனால் தன்னுடைய வாழ்க்கையின் மூலம் அவர் தந்த ஞானத்தினை நன்றாக உறிஞ்சிக் கொள்ளுங்கள். ஸ்ரீகிருஷ்ணரைப் போன்று இருப்பது மிகக்கடினம், ஏனெனில் அவர் யோகேஸ்வரர். (யோகிகளுக்கெல்லாம் உயர்ந்தவர்) குளித்துக் கொண்டிருப்பவர்களின் ஆடைகளை மறைத்து வைத்துத் தப்பிக்க முடியும்! (சிரிப்பு)


பொழுது போக்கின் மூலம் மனித உணர்ச்சிகளின் பல்வேறு வண்ணங்களையும் சாரத்தையும் வெளிக் கொணர்ந்தவர். ஸ்ரீ கிருஷ்ணரின் குணாதிசயங்களை புரிந்து கொள்வது முற்றிலும் இயலாத விஷயம். எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் சரியாகவும் முழுமையானவராகவுமே தோன்றுவார்.

தவறு செய்வது மனித இயல்பு , மன்னிப்பது தெய்வ இயல்பு

வியாழக்கிழமை, 10 டிசம்பர்,

பெங்களூரு, இந்தியா

ஏதேனும் கெட்ட பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்னும் தூண்டுதல் உங்களுக்கு இருந்தால் ஆழ்ந்த பிரார்த்தனை அதனை செய்யும். 

தெய்வீகம் அறநெறிக்கு அப்பாற்பட்டது என்று ஸ்ரீ கிருஷ்ணரை பொருத்தவரையில் கருதப் படுகின்றது. உண்மையில், இவ்வுலகில் அறநெறியின் சம்பந்தம் என்ன ?

குருதேவ்: அறநெறியின் அடிப்படை என்னவென்றால்,எதை பிறர் உங்களுக்குச் செய்யக்கூடாது என்று கருதுகின்றீர்களோ அதைப் பிறருக்கு நீங்கள் செய்யாதீர்கள். உங்கள் கணவர் வேறொருவருடன் ஊர் சுற்றக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் அதை செய்யாதீர்கள். அவ்வளவு தான்.

ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருந்தான். அதைத் தவறு என்று அவன் எண்ண வில்லை. அவன், பரஸ்பர சம்மதத்துடனேயே அதை செய்தோம்" என்று கூறினான். நான் அவனிடம், உன்னுடைய சகோதரனின் மனைவி வேறொருவருடன் சுற்றிக் கொண்டிருந்தால் எண்ண செய்வாய்?" என்று கேட்டேன். அவன் "காலை உடைப்பேன்" என்று கூறினான். சகோதரனின் மனைவி சகோதரனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நீ விரும்பினால் எவ்வாறு நீ அதையே பிறருக்கு செய்வாய்? என்று கேட்டேன். இந்த உறவு வருங்காலத்தில் பயனுள்ளதானால் சரி, அவ்வாறில்லாத போது ஏன் ஒரு குடும்பத்தை உடைக்கின்றாய்? என்று கேட்டேன்.அவனுடைய மனதை அக்கேள்வி சுண்டி இழுத்து, அவன் தான் செய்தது தவறு என்று அறிந்து கொண்டான்.

உங்களுக்கோ, உங்களுடைய நெருங்கிய உறவினருக்கோ எது செய்யப்படக் கூடாது என்று எண்ணுகின்றீர்களோ, அதை நீங்கள் பிறருக்கு செய்யக் கூடாது. உங்களுடைய மகள் அல்லது மகனிடம் ஒருவர் தவறாக நடந்து கொள்ளக்கூடாது என்று நீங்கள் விரும்பினால் எவ்வாறு வேறொருவருடைய மகள் அல்லது மகனிடம் நீங்கள் தவறாக நடந்து கொள்ளக்கூடும்? 

மது அருந்தி விட்டு வாகனங்களை பிறர் ஓட்டக் கூடாது என்று நீங்கள் எண்ணினால் எவ்வாறு அதையே நீங்கள் மட்டும் செய்யலாம்? உங்களுடைய செலவத்தை ஒருவர் கொள்ளையடிக்கக் கூடாது, உங்களை ஏமாற்றக் கூடாது என்று எண்ணினால் நீங்கள் பிறரை ஏமாற்றக் கூடாது.
ஒரு வேலை யாரேனும் போலிக் கையெழுத்திட்டு ஏமாற்றினால்," ஒ நான் ஆன்மீகவாதி, போலிக் கையெழுத்திட்டால் என்ன? இதெல்லாம் ஒன்றுமேயில்லை, இதெல்லாமே மாயை " என்று எண்ண மாட்டீர்கள். உங்களுடைய பாக்கெட்டில் கையைவிட்டால், "நாம் அனைவருமே ஒன்று, ஏன் ஒருவர் தான் என்னும் அகந்தையுடன்  இருக்க வேண்டும்?" என்று கூறுவீர்களா? இது அறிவினை தவறாகப் பயன்படுத்துவதாகும். அறநெறிக்கு புறம்பான செயலுக்கு அறிவுத்திறன் பயன்படுமானால் அது தவறு ஆகும். உங்களுக்கு பிறர் எதைச் செய்யக் கூடாது என்று கருதுகின்றீர்களோ, அதைப் பிறருக்கு நீங்கள் செய்யாமல் இருப்பதே அறநெறி ஆகும்.

யாரேனும் தவறு செய்தால், அதையே பிடித்துக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் மூலம் தவறு நிகழ்ந்துவிட்டால், பிறருடைய தவறுகளை மன்னிப்பது  போல உங்களை  நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களையும் மன்னித்துப் பிறரையும் மன்னியுங்கள், பிறருடைய மற்றும் உங்களுடைய தவறுகளை மென்று கொண்டிருக்காதீர்கள். பிறருடைய தவறுகளை மென்று கொண்டிருந்தால் உங்களுக்குக் கோபம் வரும். உங்களுடைய தவறுகளை நினைத்து மென்று கொண்டிருந்தால், குற்ற உணர்வினால் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். இரண்டுமே நல்லதல்ல. ஆன்மிகம் இவற்றிலிருந்து உங்களை விடுவிக்கும்.

தவறுவது, மனித இயல்பு. நீங்களும் தவறு செய்கின்றீர்கள். உங்களுடையதோ பிறருடையதோ தவறுகளையே எண்ணி மறுகிக் கொண்டிருக்காதீர்கள். மன்னித்து மறந்து விடுங்கள். நீங்கள் தவறு செய்தால் மன்னிப்புக் கேட்டு நகர்ந்து செல்லுங்கள். அதிலேயே உழன்று கொண்டிருக்காதீர்கள்.
உங்கள் மீதே நீங்கள் வருத்தம் கொண்டால் எளிதாகப் பிறர் மீது கோபம் ஏற்படும். பிறர் மீது கோபம் கொண்டால் உங்களைப் பற்றியே நீங்கள் வருந்துவீர்கள். இரண்டுமே உகந்ததல்ல.

இது எல்லாம் ஒரு கனவு என்று கூறப்படுகிறது. யாருடைய கனவில்  நான் இருக்கிறேன்? நான் உங்கள் கனவிலா அல்லது நீங்கள்  என்னுடையதிலா?அல்லது நாங்கள் இருவரும் ஒரு பொதுவான கனவில் இருக்கின்றோமா? அதை கனவு என்றால், அதன் விதிகள் மற்றும் வடிவங்கள் யாவை?

குருதேவ்: கனவு என்றால் என்ன? அது ஒரு நினைவின் பதிவு. விழிப்புணர்வுடன் இந்தக் கணத்தில் பார்த்தால் கடந்து சென்ற அனைத்துமே கனவு தான். அனைத்தும் கடந்த கால நினைவுகளே. மனதிலுள்ள எண்ணப் பதிவுகளே ஆகும். வேறொன்றுமில்லை! எனவே அனைத்தும் மனதில் ஏற்படும் எண்ணப் பதிவுகளே ஆகும். நீங்கள் பார்ப்பது, கேட்பது, நுகர்வது ருசிப்பது தொடுவது அனித்தும் விழிப்புணர்வில் பதிவுகளாகின்றன. ஒருவருடைய கனவில் ஒருவர் வருவது ஒன்றும் பிரச்சினையில்லை. உங்களுக்கும் கூட கனவுகள் தோன்றலாம்.

ஒருவரை அவதாரம் என்று கருதுவதன் அடிப்படை என்ன? ஸ்ரீ கிருஷ்ணரை இந்து சமயம் தவிர பிற சமயங்களில் அவதாரமாகக் கருதுவதில்லையே?

குருதேவ்: முதலில் அவதாரம் என்றால் என்ன என்று நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அவதாரம் என்றால் தெய்வீகம் இறங்கி வருதல், எங்கெல்லாம் நீங்கள் ஞானத்தை காண்கின்றீர்களோ அங்கெல்லாம் தெய்வீகத்தின் வருகையை காண்கின்றீர்கள். வடிவமற்றதை ஒரு வடிவத்தில் காண்பது ஆகும். ஸ்ரீமத் பாகவதத்தில் இறைமை அன்னபட்சிகளிடமும், தீயிலும் மரங்களிலும் எல்லா விலங்குகளிடமும் இறங்கி வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்தப் படைப்பே இறைமையின் வெளிப்பாடன்றி வேறில்லை. எங்கிருந்தெல்லாம் இந்த ஞானச் செய்தியினை அடைகின்றீர்களோ அதனை நீங்கள் அவதாரம் என்று அழைக்கலாம். தத்தாத்ரேயா முனிவர் 24 வகையான வாழ்கை வடிவங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார். அன்னப் பறைவையிடமிருந்து ஞானம் பெற்ற அவர் அதனை விஷ்ணுவின் ஒரு வடிவமாகக் குறிப்பிடுகின்றார்.

இறைவன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் இருக்கின்றார் என்பதை அறியுங்கள். மிக மலிவாகக் கிடைக்கும் ஒரு பொருள் இறைமையே ஆகும். அது பூமி, நீர், நெருப்பு காற்று ஆகாயம் அனைத்திலும் உள்ளது. எல்லாமே ஒரே அதிரவளையால் உருவாக்கப்பட்டது. அதை பிரம்மன், இறைமை கடவுள் என்று எந்தப் பெயரிலும் அழைக்கலாம். அத்தகைய இறைமை ஒருவர் மூலம் கணம் அளித்து, அன்பினைத் தூண்டும் போது அவரை அவதாரம் என்று கருதுகின்றோம்.

கற்பனையுலகில் சஞ்சரிக்கும் பழக்கம் கொண்ட நான் அதை ஒரு பாதுகாப்புப் பொறி முறையன்று அறிந்து கொண்டேன். அந்த கற்பனையுலகில் எந்தக் குறைகளுமே இல்லை. நான் தியானம் செய்யும் போது கூட இது நிகழ்கின்றது. இதை எவ்வாறு கடந்து செல்வது?

குருதேவ்: எப்போது அது கற்பனை என்று அறிந்து கொண்டீர்களோ அப்போதே அதிலிருந்து வெளியே வந்து விட்டீர்கள். அதிலேயே நீங்கள் அமிழ்ந்திருந்தால்,அதையே உண்மை என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள். கற்பனையுலகம் என்று அதற்குப் பெயரளித்தவுடனேயே நீங்கள் கரை சேர்ந்து விட்டீர்கள்.அதில் மூழ்கி விடவில்லை.கவலைப்படாதீர்கள். கனவுகள் காண்பது நல்லதே பெரிதாகக் கனவு காணுங்கள். ஆனால் உண்மையின் பிடியிலிருந்து விலகி விடாதீர்கள்.இரண்டு கால்களும் தரையில் இருந்தால் நடனம் நிகழ முடியாது. ஒரு கால் உறுதியாகத் தரையிலும், மற்றொரு கால் உயரே காற்றிலும் இருந்தால் தான் அது நடனம்.

வாழ்க்கையிலும், நடைமுறையில் யதார்த்தத்தினை விட்டு விலகி விடக்கூடாது. அதே சமயம், வெவ்வேறு விதமாக, பெரிதாக, சிறப்பானதாக, சில சமயங்களில் சாத்தியமற்றதாக கனவு காணுங்கள். முற்றிலும் சாத்தியமற்றதாகக் கனவு கண்டால், நீங்கள் உங்களுக்கு உண்மையாக இல்லை என்பதாகும். முற்றிலும் சாத்தியமற்றது என்று நீங்கள் கருதி, அதே சமயம் முற்றிலும் சாத்தியமானதும் கூட, என்னால் செய்ய முடியும் என்று நீங்கள் கருதும் அந்தக் கனவைக்  கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள்.

சிவபுராணத்தில், சிவனை வழிபடுபவர்கள் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப் படுவர் என்று கூறப்பட்டுள்ளது. இது லஞ்சத்தின்  ஆரம்பமா?

குருதேவ்: இல்லவே இல்லை. ஊழல் / லஞ்சம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கோ உங்களுக்கு நெருக்கமானவருக்கோ எது நிகழக் கூடாது என்று எண்ணுகின்றீர்களோ அதைச் செய்வது ஆகும்.சிவ பூஜையையும் ஊழலையும் நீங்கள் இணைக்க முடியாது. மனம் நிறைவடையும் போது ஏற்படும் ஒரு உணர்வே பூஜை ஆகும்.உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் வாசலுக்கு சென்று வரவேற்கின்றீர்கள். உங்கள் மனதிற்கினிய ஒருவர் வரும்போது ரயில் நிலையத்திற்கோ விமான நிலையத்திற்கோ ஓடிச் சென்று நீங்கள் வரவேற்பதில்லையா ? இது கட்டாயத்திற்குச் செய்கின்றீர்களா? நீங்கள் அவர்களை ஒரு வாடகை காரில் வருமாறு கூறலாம், அனால் நீங்கள் உங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு சென்று அவர்களை வரவேற்று வீட்டிற்கு அழைத்து வருகின்றீர்கள். ஏன் அவ்வாறு செய்கிறீர்கள்? என்ன உணர்வு? அதை லஞ்சம் என்று கூற முடியுமா என்ன? ஆகவே பூஜை என்பது மன நிறைவின் வெளிப்பாடு.

புராணங்களில் பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. அனைத்து புராணங்களுக்கும் சார்பளிக்கும் வழக்கறிஞர் அல்ல.பல புராணங்கள் வெளிப்பாடுகளின் வழி முறையாகும். புராணம் என்பதன் பொருள் வெளிப்பாட்டின் புது வழி என்பதாகும். ஹிந்தியில் புராணா என்னும் சொல்லுக்கும் சமஸ்ரிதத்தில் புராணா என்னும் சொல்லுக்கும் முற்றிலும் மாறுபட்ட பொருள் ஆகும். ஹிந்தியில் புராணா என்றால் பழமையான என்று பொருள், சமஸ்க்ரிதத்தில் புராணா என்பது புதிய அல்லது நவீனமான என்னும் அர்த்தத்தில் கூறப்படும் வெளிப்பாட்டு வழிமுறை. அதை லஞ்சம் என்று கூறாதீர்கள். உங்களுக்கு அருள் செய்ய நீங்கள் உடைக்கும் ஒரு தேங்காய்க்காக காத்திருக்கும் அளவுக்குக் கடவுள் முட்டாள் அல்ல.

நீங்கள் செய்யும் அனைத்தப் பூஜைகளும் உங்களது நிறைவை வெளிப்படுத்தும் பொருட்டே செய்யப்படுபவை ஆகும், கடவுளை மகிழ்விக்க அல்ல. உலகில் இது உலகில் நிலவி வரும் ஒரு தவறான கோட்பாடு என்றே நான் கருதுகின்றேன்.கடவுளை மகிழ்விக்கவே நாம் அனைத்தையும் செய்வதாகக் கருதுகின்றோம்.இது ஒரு தவறான புரிதல் ஆகும். மக்கள் விரதம் இருந்து கடவுளை மகிழ்விப்பதாக எண்ணிக் கொள்கின்றனர். நீங்கள் விரதம் இருப்பது, உங்கள் உடலை சுத்தப் படுத்திக் கொள்வதற்காகவே.கடவுளை மகிழ்விக்க விரதம் தேவையில்லை. இது தவறான கருத்து.

குருதேவ், அரசனிடமிருந்து குரு விலகி இருக்கக் கூடாது அல்லது குருவிடமிருந்து அரசன் விலகி இருக்கக் கூடாது, இவையிரண்டில் எது சரியானது ?

குருதேவ்: குருவின் பார்வையிலிருந்து காணும் போது அனைவரும் ஒன்றே,அவரவர் ஏற்றிருக்கும் பங்கே வேறுபட்டது என்பதாகும். முதலாவதாக, நாம் அனைவரும் தெய்வீக ஒளியின் பகுதியே ஆவோம். ஒரே மனித இனம். ஒரே ஒரு பங்குடன் நிறுத்திக் கொள்ளமுடியாது. ஏற்றிருக்கும் ஒவ்வொரு பங்கும் ஒரு கோட்டைப் போன்றது, அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் அனைத்துப் பாத்திரங்களையும் சிறப்பாகச் செய்ய வேண்டும். ஒருவர் தன்னுடைய ஆசிரியரிடம் செல்லும் போது ஒரு மாணவனாகவே செல்ல வேண்டும். குருவைப் பொறுத்த வரையில், செல்வந்தரோ, ஏழையோ, முட்டாளோ, புத்திசாலியோ அனைவரும் சமமே.