தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

வெள்ளிக்கிழமை 5 டிசம்பர், 2014           

பெங்களூர், இந்தியா

அரேபியாவிலிருந்த ஒரு அரசன், வேறு நாட்டிலிருந்து ஒரு அபூர்வமான காய்கறியை வரவழைக்க சொன்னான். ஏனென்றால் அந்தக் காய் அவனுடைய நாட்டில் விளைவதில்லை. அந்தக் காயை சமைத்து பரிமாறச் சொன்னான். அரசனுக்கு அந்தக் காய் மிகவும் பிடித்துவிட்டது. கூட இருந்த தன் அமைச்சரிடம் அதை சொன்ன போது, அமைச்சனும் இது வரை உண்ட காயிலேயே இந்தக் காய் தான் சிறந்தது என்று சொல்லி, அரசன் சொன்னதை ஒப்புக் கொண்டான். அரசனுக்குப் பிடித்த காய் ஒவ்வொரு நாளும் சமைக்கப்பட்டது.

ஐந்தாவது நாள், அரசன் “இந்தக் காயை என் கண்ணால் கூடப் பார்க்க விரும்பவில்லை. ருசியை சகிக்க முடியவில்லை. நாறுகிறது.“ என்று சொன்னான். அமைச்சனும் இந்தக் காய் நன்றாகவே இல்லை. ருசியே இல்லை என்று சொல்லி அரசன் சொன்னதை ஆமோதித்தான். யாராவது நீ சொல்வதை ஏற்றுக் கொண்டால், நீ அமைதியாக இருக்கிறாய். அதே போல் அரசனின் கருத்தை அமைச்சன் ஒப்புக் கொண்டதால், அரசன் தன் கோபம் தணிந்தான். ஆனால் அமைச்சனை பார்த்து, 
“ஏன் அன்று இந்தக் காயின் ருசியை மிகவும் பாராட்டினாய்?‘ என்று கேட்டான். அமைச்சன், “அரசே, நான் உங்கள் வேலைக்காரன். அந்தக் காயின் வேலைக்காரனல்ல” என்று விடையளித்தான். “நான் உங்களுக்கு அடி பணிந்தவன். அந்தக் காய்க்கு அல்ல. அது நன்றாக இல்லை என்று, நீங்கள் சொன்னால் அது நன்றாக இல்லை என்று அர்த்தம்“ என்று சொன்னான்.இதே போல் வாழ்க்கையில் நாம் பல விஷயங்களுக்கு அடிபணிந்தவர்களாக இருக்கிறோம். எனவெ எந்த விஷயங்களுக்கு, யாருக்கு அடிபணிந்திருக்கிறோம் எதை விரும்புகிறோம் எதில் சரியான கவனம் செலுத்துகிறோம்“ என்று பார்ப்பது அவசியம். அதில் சரியான மாற்றம் செய்து கொள்ளவேண்டும்.

இந்த நாட்டில், ஒரு நல்ல பிரதம மந்திரி, நேர்மையானவர் இருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக, அவர் இந்த நாட்டுக்கு அடிபணியாமல், (நாட்டு நலனைக் கவனிக்காமல்) வேறு இடத்துக்கு அடி பணிந்திருந்தார். ஆகவே நம் நாடு மிகவும் பின் தங்கிவிட்டது. ஊழலுக்குப் பின்னால் ஊழல் நடந்து வந்தது. நேர்மையான மனிதர் தலைமை பொறுப்பிலிருந்த போதிலும், அவர் நாட்டுக்கு (நாட்டு மக்களுக்கு) அடிபணியாமல், வேறு யாருக்கோ அடிபணிந்திருந்தார். 

எல்லோருமே தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அறிவாளிகள் மற்றவர்கள் செய்யும் தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக் கொள்கிறார்கள். தங்கள் வாழ்வில் அப்படிப்பட்ட தவறு நிகழாமல் தவிர்த்துக் கொள்கிறார்கள். உன் அறிவு கூர்மையாக இருந்தால், மற்றவர்கள் செய்யும் தவறை நீ செய்யமாட்டாய். அப்படி இல்லாதவர்கள் மற்றவர்கள் செய்யும் தவறை உணராமல், அதே தவறை செய்து சோதனைக்கு ஆளாகிறார்கள். எச்சரிக்கையாக இருப்பது அறிவாளியின் அடையாளம். அறிவாளி மற்றவர்கள் செய்வதையும் கவனித்து அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார். சமஸ்கிருதத்தில் அருமையான குறள் இருக்கிறது. “நான் பொல்லாதவர்களை முதலில் வணங்குவேன். ஏனென்றால் அவர்கள் நஷ்டப்பட்டு,எதை செய்யக் கூடாது என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதன் பின் நல்லவர்களை வணங்குவேன். ஏனென்றால் அவர்கள் நமக்கு நல்வழி காட்டுகிறார்கள்.

எனவே, நீயும் முதலில் பொல்லாதவரை வணங்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் தவறான வழியில் சென்று பள்ளத்தில் விழுந்து, நீ இந்த வழியில் வந்து பள்ளத்தில் விழாதே என்று உனக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். நாம் வாழ்க்கை வாழும் போதே பாடம் கற்றுக் கொள்ள முடியும். பாடம் கற்றுக் கொண்ட பின்பே, வாழ்க்கையைத் துவங்குவேன் என்று சொல்ல முடியாது. வாழும் போதே பாடம் கற்றுக் கொள். பாடம் கற்றுக் கொள்ளும் போதும் வாழ்க்கை தொடரும்.

துடிப்போடு, எச்சரிக்கையாக விழிப்புணர்வோடு இருக்கும் க்ஷணத்திலும், யாரிடத்திலிருந்தாவது, ஏதாவது நிகழ்சியிலிருந்தாவது பாடம் கற்றுக் கொள்ளலாம். சமஸ்கிருதத்தில் மற்றொரு பழமொழி உள்ளது. இதன் அர்த்தம் பின் வருமாறு. “சிங்கம் சோம்பேறியாக இருப்பதாலும், பாம்பு மற்றவரைக் கண்டு பயப்படுவதாலும், அறிவாளிகளுக்கிடையே கருத்து வேற்றுமை உள்ளதாலும், இந்த பூமியில் ஆனந்தம் நிலவுகிறது.”

கற்பனை செய்து பாருங்கள். சிங்கம் சுறுசுறுப்பாக வேட்டையாடினால், காட்டையழிக்க நிறைய சமயம் தேவையில்லை. அதுவும் ஆண் சிங்கம் வேட்டையாடச் செல்வதேயில்லை. பெண் சிங்கம் வேட்டையாடி, பல வாரங்களாக ஒன்றுமே செய்யாமல் சோம்பிப் படுத்திருக்கும் ஆண் சிங்கத்துக்கு உணவளிக்கிறது. எனவே சிங்கத்தின் சோம்பேறித்தனம், மற்ற காட்டு விலங்குகளுக்கு வரம் கிடைத்தது போலுள்ளது.

அதே போல் பாம்பு நம்மைப் பார்த்து பயப்படுவதால், நாம் உயிர் பிழைத்திருக்கிறோம். உலகில் கருத்து வேற்றுமைகளிலிருப்பதால் பல கலாசாரங்களைக் காண முடிகிறது. உலகம் வாழ்வதற்கு ஒரு சிறந்த இடமாக உள்ளது. இல்லாவிட்டால், உலகில் பன்முகத்தன்மை இருக்காது. எல்லோரும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதை கற்பனை செய்து பாருங்கள். மக்களும் ஒரே உணவகத்துக்கு சென்று, ஒரே வகையான உணவைக் கேட்டு உண்பதை கற்பனையில் பாருங்கள். பல்வேறு கருத்துக்கள், விருப்பங்கள் இந்த உலகை வாழ்வதற்கு ஒரு சிறந்த இடமாக்கியுள்ளது. இது காலம் காலமாக வழங்கி வரும் ஞானமாகும். இது எந்தக் காலத்துக்கும், எந்த இடத்துக்கும் பொருந்தும்.

கேள்வி பதில்கள்

ஆயுர்வேதத்தின்படி, ஆர்கானிக் உணவே (இயற்கை உரத்தால் விளைவிக்கப்பட்ட தானியங்கள், காய்கறி, பழங்கள்), நம் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்று நமக்குத் தெரியும். நம் ஆசிரமத்தில் ஏன் ஆர்கானிக் உணவைப் பரிமாறக் கூடாது?

ஆசிரமத்தில் விளைவிக்கப்படும் எல்லா உணவுப் பொருட்களும் இயற்கை உரத்தால் விளைந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா காய்கறி, பழங்கள், பால், நெய் எல்லாம் ஆர்கானிக் உணவை சேர்ந்தவையே. போதிய அளவு இவை கிடைக்காத போது, வெளியிலிருந்து மற்ற தானியங்கள் தருவிக்கப்படுகின்றன.

நம் விவசாயிகளுக்கு ஆர்கானிக் உணவின் சிறப்பை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்குமிடையே (மக்கள்) இருக்க வேண்டிய தொடர்பில் துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறது. பல விவசாயிகள் என்னிடம்“தாங்கள் விளைவித்த ஆர்கானிக் உணவுப் பொருட்களை மக்கள் வாங்க முன்வருவதில்லை“ என்று சொல்வதை கேட்டிருக்கிறேன். அதே சமயம், பல மக்கள் என்னிடம் வந்து தங்களுக்கு விருப்பமான ஆர்கானிக் உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை என்று சொல்வதையும் கேட்டிருக்கிறேன். வாழும் கலையில் தொண்டர்கள் மூலம் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தத் துவங்கியிருக்கிறோம்.

தற்சமயம் பெண்கள் மீது பல கொடுஞ்செயல்கள் நிகழ்கின்றன. பெண்களுக்கு மரியாதை தருவதில் நம் நாடு முதலிடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பின்பு பெண்கள் மீது ஏன் கொடுமை இழைக்கப்படுகிறது?

மதச்சார்பின்மை (செகுலரிஸம்) என்ற பெயரால், நாம் நம் கலாசாரத்தை பின்பற்றுவதில்லை. நம் மதத்தின் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. நம் கல்வித்திட்டத்தில் வழங்கி வந்த தார்மீகக் கல்வி, மற்றும் நன்னெறிகளை, (கல்வித் திட்டத்தை தூய்மைப்படுத்துவதாக நினைத்து) அறவே நீக்கி விட்டோம். எனவே நம் இளைய தலைமுறையினர் முற்றிலும் சுயநலவாதிகளாக மாறி விட்டார்கள். மற்றவர்கள் நலனை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இது ஒரு காரணம்.
இரண்டாவது காரணம் பெண் குழந்தைகளை கருவில் கண்டுபிடித்து அழிக்கும் வழக்கம். பல மாநிலங்களில் 100 ஆண்களுக்கு 65 பெண்களே இருப்பதாக தெரிகிறது. இது ஒரு அபாயகரமான நிலையாக மாறப்போகிறது. ஆண் பெண் விகிதம் அதிகமாக இருக்கும் சமுதாயத்தில் வாழ முடியாது. கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிவதைத் தடுக்க வேண்டும். ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந்தாலும் என்ன வித்தியாசம்? ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ சமமாகப் பாவித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு வந்து, இதைப் புரிந்து கொண்டு,பெண் குழந்தை பிறப்பதை தடுக்க கருவை அழிக்கக் கூடாது. இப்படிச் செய்தால் தான், ஆண் பெண் விகிதம் அபாய நிலையிலிருந்து பாதுகாப்பான நிலைக்குத் திரும்பும்.