சனிக்கிழமை - 13 டிசம்பர், 2014
பெங்களூர், இந்தியா
(கீழே வருவது “அன்பு தான் விடை“ என்ற பதிப்பின் தொடர்ச்சி)
குருதேவா! சிறந்த தியானம் செய்பவனாவது எப்படி ?
பார்! சிறந்த தியானம் செய்பவர், மோசமான தியானம் செய்பவர் என்றேல்லாம் கிடையாது.
எனக்கு என்ன கிடைக்கும் என்று இடைவிடாது சிந்திப்பதை விட்டு, நிகழ்காலத்தில் வாழ்ந்து
மகிழ்வோடு இரு. பொது நிகழ்ச்சிகளில் எப்படி பங்கேற்பது, சமுதாயத்துக்கு எப்படி நன்மை
செய்யலாம் என்று சிந்தித்துப்பார்.
நமக்கு ஏதாவது கிடைத்தால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். மற்றவர்கள் நம்மிடம் அன்பு
செலுத்த வேண்டும். நம்மை மதிக்க வேண்டும், நம்மை எப்போதும் ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
இப்படி விரும்புவதை நாம் கைவிட வேண்டும். இந்த நிலையிலிருந்து வெளியே வந்து, சமூகசேவையில்
உன் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணிப் பார். மகிழ்ச்சியோடு இருப்பாய். ஆழ்ந்த தியானத்தை அனுபவிப்பாய்.
வாழ்க்கை இனிமையாகவும், வளமாகவும் இருக்கும்.
நாம் ஒன்றை பெறும்போது மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் கொடுப்பதிலும் மகிழ்ச்சி
அடைய முடியும். உங்கள் தாத்தா பாட்டிகளை பார்த்திருக்கிறீர்களா? தங்களிடம் இருப்பதை
பிள்ளைகள், பேரக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஒரு தாய் தன் பிள்ளைகளுக்காக பல தின்பண்டங்களை செய்து கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறாள். உணவு படைப்பதில் மகிழ்ச்சி அடைகிறாள். இந்த விதமான மகிழ்ச்சி மேலும்
சிறந்தது.
வாழ்க்கையில் நாம் பெறுவதில்/அடைவதில் உள்ள மகிழ்ச்சியை பற்றி சிந்திக்காமல்
நம்மிடம் உள்ளவற்றை மற்றவர்களுக்குக் கொடுத்து பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியை
நாட வேண்டும்.அது ஒரு தாய்க்கு கிடைக்கும் மகிழ்ச்சியைப் போன்றது. ஒரு பாட்டிக்கு தன்
பேரக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடானது. இது சிறப்பான
மகிழ்ச்சியாகும்.
யோகி என்பவர் யார்? யோகியின் வாழ்க்கை முறை என்ன?
யோகி என்பவர் ஒரு குழந்தை. யோகி மீண்டும் மீண்டும் குழந்தையாகிறார். 3 மாதத்திலிருந்து
3 வயது வரை ஒரு குழந்தை வளரும் போது கவனித்தால், அது ஏறக்குறைய எல்லா யோக ஆசனங்களையும்
செய்கிறது. அது உங்களுக்கு ப்ராணாயாமம் கூட சொல்லிக் கொடுக்கும். ஒரு குழந்தையைக் கவனித்தாலே
போதும். யோக ஆசிரியர் தேவையில்லை. அதே போல் எல்லா மிருகங்களும் ஏதாவது யோக ஆசனத்தைச்
செய்கின்றன.
யோகி என்பவர் முடிவில்லாத ஒன்றோடு (இன்ஃபினிடி) தொடர்பு கொண்டவர். யோகி யாரையும் தன்னை சேராதவர் என்று நினைக்க மாட்டார். யோகி என்பவர் பல திறமைகளுடையவர்.
வளைந்து கொடுக்கக் கூடியவர். சிலருக்கு உடல் நெகிழ்வாக இருக்கும். ஆனால் மனம் மிகவும்
இறுக்கமாக இருக்கும். இறுக்கமான மனநிலையில் இருப்பவரால் இனிமையானவராக இருக்க முடியாது.
அவரால் மற்றவர்களோடு இயல்பாக தொடர்பு கொண்டு பழக முடியாது. மற்றவர்களுடைய புதிய கருத்துகளை
அவரால் ஒத்துக் கொள்ள முடியாது. ஆனால் ஒரு யோகி தன் கருத்துகளில் பிடிவாதமாக இருக்க
மாட்டார். அதே சமயம் குழப்பமான மனநிலையிலும் இருக்க மாட்டார். மனதில் பட்டதை நேராக
சொல்வார். அவர் மிகவும் பலம் வாய்ந்தவர். மென்மையானவராகவும் இருப்பார். ஒரு
குழந்தையின் கள்ளங்கபடமற்ற நிலையில் இருப்பார். யோகி என்பவர் ஆழ்ந்த ஞானம்
உள்ளவர். அவர் ஒரு குழந்தையை போல் இருப்பார். குழந்தைத்தனமான காரியம் செய்ய
மாட்டார். அவர் ஒரு குழந்தையைப் போல் எளிமையானவர். மிக அறிவோடு செயல்படுவார். யோகி விவேகத்துடன்
இருப்பவர். நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவார்.
விவேகத்துடன் நடந்து கொள்வதாக நினைக்கும்
சிலர் நிலைமையின் முக்கியத்துவத்தைப் புரிந்து நடப்பதில்லை. உணர்ச்சிவசப்பட்டு நிலைமையைக்
கட்டுப்படுத்த முடியாத மக்களால் அறிவு பூர்வமாகச் செயல்பட முடியாது.யோகி என்பவர்
விவேகத்துடன், நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நடுநிலையில் செயல்புரிவார். யோகி என்பவர் அன்போடு பழகுவார். நடு நிலைமையில் இருப்பவர். காதல் வயப்படுபவர்கள். நடு நிலையிலிருந்து தவறுவார்கள். நடு நிலையில் உறுதியாக இருப்பவர்களில் முகத்தில் அன்பு
வெளிப்படுவதில்லை. ஆனால் ஒரு யோகி அறிவோடும் (தலை), அன்போடும் (இதயம்) இணைந்து செயல்படுவார்.
நடு நிலையில் உறுதியாகவும் அதே சமயம் அன்போடும் பழகுவார்.
ஒரு மனிதனுக்கு வேண்டிய எல்லா சிறந்த பண்புகளும் யோகியிடம் இருக்கும். ஏனென்றால்,
யோகி தன் ஆத்மாவுடன் நிலைத்திருப்பவர். இந்த உலகில் உள்ள அனைத்தோடும் தொடர்பு கொண்டவர்.
நம் எல்லோருடனும் தொடர்பு கொண்டவர். ஏனென்றால் நாமனைவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு
கொண்டவர்கள்.
குருதேவா! குருவிடம் இருக்கும் பந்தத்தை கைவிடுவது எப்படி? மிகவும் காயமடைந்து
வலியை உணர்வது போலிருக்கிறது.
நீ குருவை உன் சொத்து போல் வைத்திருக்க முடியாது. அது உனக்கு வலியை கொடுக்கும்.
குரு எல்லோருக்கும் சொந்தமானவர். கைவிரலில் எண்ணக் கூடிய சிலருக்கு மட்டுமே
சொந்தமானவர் அல்ல. எங்கு அன்பு தீவிரமாக இருக்கிறதோ, அங்கு தாபமும் தீவிரமாக இருக்கும்.
தாபம் வலியை கொண்டு வரும். இந்த வலி சிறிது வித்தியாசமானது. வலியிலும் சிறிது இனிமையிருக்கும்.
இப்படிப்பட்ட தொடர்பு கடவுளிடம் இருப்பதும், குருவிடம் இருப்பதும், இந்த உலகமனைத்துடனும்
இருப்பதும் ஒன்றே. நாமனைவரும் இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக பார்க்க விரும்புகிறோம்.
மற்றவர்களுக்கு ஞானத்தை கொடுத்து அவர்கள் வாழ்க்கையில் ஆக்கபூர்வமான நன் மாற்றங்களை
கொண்டு வர உதவுபவர் தான் குரு.ஒருவர் தன்
வாழ்வில் சிறந்த மாற்றங்கள் ஏற்படுவதை அனுபவிக்கும் போது தான் குரு தன் வாழ்வில் வந்திருப்பதை
உணர்ந்து, குருவின் மேல் மதிப்பு வைத்து அவரை நாடிச் செல்வார். ஆனால் சிலர்
இதற்கு எதிரான கருத்தைச் சொல்வது வழக்கமாக இருக்கிறது. அவர்கள் சொல்வது. முதலில் நீ
ஒருவரை குருவாக மதிக்க வேண்டும். அதன் பின்பே உன் வாழ்வில் நன் மாற்றங்கள் ஏற்படும்.
எப்படி உன் குருவுக்கு நன்றியை தெரிவிப்பாய்? உன் வாழ்வில் குரு ஏற்படுத்திய மாற்றங்களை மற்றவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட உதவுவது தான் நீ குருவுக்கு தெரிவிக்கும்
நன்றியாகும். நீ உண்மையில் 10 பேர்களுடைய வாழ்வில் நன் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினால்,
அந்த விருப்பம் கண்டிப்பாக நிறைவேறும். எனவே அன்பும் தாபமும் ஒரே காசின் இரண்டு பக்கங்களே. நம்முடைய உருவாக்கும் திறன்
மலர இரண்டுமே அவசியம்.இறைவன் மேல் நாம் கொண்டிருக்கும் தாபம், நம்மை நல்வழியில் செல்ல
உதவும். குடி, மற்றவர்களை குறை கூறுவது போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து நம்மை தூர விலக்கி
விடும். எதிர் மறை குணங்களை தவிர்த்து, இறையன்பு என்ற அமிர்தத்தில் நாம் மூழ்கும் போது,
தாபமும் அதோடு வலியும் தோன்றுவது இயல்பு.
குருதேவா! நேபாளத்திலிருந்து நாங்கள் (விவசாயிகள்) ஆசிரமத்துக்கு வந்திருக்கிறோம்.
இயற்கை உர விவசாயத்தை பற்றி விளக்குவீர்களா ?
ஆம்! நாமனைவரும் இயற்கை உர விவசாயத்தையே பின்பற்ற வேண்டும். மற்றவர்களையும்
அப்படி செய்யத் தூண்ட வேண்டும். ஆசிரமத்திலுள்ள விவசாயத் துறையைச் சேர்ந்தவர்களை உங்களுடன்
சேர்ந்து விரிவாகப் பேசச் சொல்கிறேன். அவர்கள் உங்களுக்குப் பல செயல் முறைகளை பற்றி
விளக்கி சொல்வார்கள். உங்களுக்குத் தெரியுமா? இயற்கை உரத்தால் நாம் இங்கு 6 அடி நீள
சுரைக்காயை விளைவித்திருக்கிறோம். நாம் இரசாயன உரத்தைத் தவிர்த்து இயற்கை உரத்தை மட்டும்
பயன்படுத்தினால் இப்படி விளைவிக்க முடியும். ஆசிரமத்தில் எந்த விதமான இரசாயன உரமும்
பயன்படுத்துவதில்லை. நல்ல விளைச்சலுக்கு இயற்கை உரமே சிறந்தது.
குருதேவா ! நம் வாழ்க்கையில் முன்னேற்றம் கர்ம வினையைப் பொறுத்ததா ? அல்லது
நாம் எந்த சாதியில், எந்தக் குடும்பத்தில் பிறந்தோம் என்பதைப் பொறுத்ததா? (உதாரணமாக
பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர்)
உன் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றம் உன் கர்ம வினையை பொறுத்தது. பார்! இப்படிப்பட்ட பிரிவுகள் சமூக
அளவில் உலகம் முழுதும் பின்பற்றப்படுகின்றன. உலகில் எல்லா நாடுகளிலும் நீ அறிவில் சிறந்தவர்களைக்
காணலாம். (அவர்களை பிராமணர்களாக வைத்துக் கொள். பிறப்பால் மட்டுமே ஒருவர் பிராமணராக
முடியாது) வியாபாரத் துறையில் இருப்பவர்களை வைசியர் என்று எண்ணலாம். எல்லா நாடுகளிலும்
பாதுகாப்புத் துறை இருக்கிறது. (படைவீரர்கள், காவல்துறை….) இவர்கள் க்ஷத்திரியர்கள்.அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்,தொழிலாளர்கள் பலர் இருக்கிறார்கள். பல தொழிற்சங்க
அமைப்புகள் இருக்கின்றன. இவர்கள் அனைவரையும் சூத்திரர்கள் என்று வைத்துக்கொள்.
(குறிப்பு: மேற் சொன்ன எதுவுமே பிறப்பால் வந்தது அல்ல.)
குருதேவா! மகிஷாசுரனை தேவி “ஹூம்”
என்ற சப்தத்தினால் அழித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு என்ன அர்த்தம்?
ஒரு ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து அதே போல் சத்தமிடு. உனக்குள் என்ன நடக்கிறது
என்று பார். உன் சோம்பேறித்தனம், ஜடத்தன்மை எல்லாமே போய்விடுவதை உணரமுடியும், மகிஷாசுரன்
சோம்பேறித்தனம், ஜடத்தன்மை முதலிய குணங்கள் உடையவன்.