ஏன் நல்லவர்கள் துன்புறுகின்றார்கள்?

வெள்ளிக்கிழமை, 12 டிசம்பர், 2014,

பெங்களூரு, இந்தியா



(உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

இது நல்லவர்களுக்கான காலமில்லை என்று அடிக்கடி கூறப்படுகின்றது. சமுதாயத்தில் தீயவர்கள் வெற்றியடைவதையும், பிறரை ஆதிக்கம் செலுத்தி உயர்வதையும் காண்கின்றோம். மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்வது போல காணப்படுகின்றார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்?

ஆம், நீங்கள் கூறுவது சரியே. அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வது போல காணப்படுகின்றார்கள். ஆனால் இது தாற்காலிகமானது தான். பாருங்கள், ஒருவர் மிகவும் துன்புற வேண்டுமாயின், அவர் முதலில் மிக உயரத்திற்கு சென்று, அங்கிருந்து வீழ்வது தான். தவறான செயல்கள், அல்லது தவறான நோக்கங்கள் இவைகளுடன் உயரே செல்பவர்கள் இறுதியில் மிகுந்த துன்பகரமான முடிவை அடைவார்கள். அவர்களால் இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாது. பகலிலும் நிம்மதி இல்லை. உயர்விலிருந்து அவர்களது வீழ்ச்சி மிகவும் கூர்மையானது, அவர்களை முற்றிலும் தகர்த்து விடும். நீங்களோ உங்களில் திருப்தியாக உணர்ந்து நிம்மதியாக உறங்குகின்றீர்கள்.

நல்லவர்கள் துன்புற்றுக் கொண்டே இருக்கின்றார்கள், கடினமான காலத்தையே சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூறமுடியாது.கடினமான காலங்களை சந்திப்பது, அறியாமையாலோ அல்லது முட்டாள் தனத்தினாலேயோ கூட இருக்கலாம். ஒருவர் நான் நல்லவன் உயர்ந்தவன் என்று கூறி, தீயில் கையை வைத்தால் அவன் நிச்சயம் தீப்புண்ணை அடைவான். தீயில் கையை வைத்தால் உடனேயே அது சுடும். பின்னர் அல்ல.

சில சமயங்களில் இந்தப் பிறவியில் நீங்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை அல்லது தீயது எண்ணவில்லை ஆனால் துன்புருகின்றீர்கள் என்று தோன்றலாம். இந்தக் கேள்வி சாதரணமாக எழக்கூடியது தான். நம்முடைய வாழ்வினை பற்றிய புரிதல் மிகக் குறைவானது ஆகும். வாழ்க்கை என்பது இந்த 50 அல்லது 60 ஆண்டு காலம் மட்டுமல்ல. பின்னோக்கிப் பார்த்தால், முட்செடிக்கு எங்கேயோ விதையிட்டிருக்கின்றீர்கள்,அதன் பயனை இப்போது அனுபவித்து கொண்டிருக்கின்றீர்கள்.

இரண்டு விதமான கர்மாக்கள் இருக்கின்றன.
1. உடனடியாக பலன் தரக்கூடிய கர்மாக்கள்
2. பிற்காலத்தில் பலன் தரக்கூடிய கர்மாக்கள்

உதாரணமாக, தீயில் கையை வைத்தால் உடனடியாகச் சுடும். நாளையோ அல்லது பின்னரோ அல்ல. ஒரு மாங்காய் விதையை விதைத்தால் அது மரமாக பத்து ஆண்டுகள் ஆகும். பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே, கடின உழைப்பிற்கு பின்னரே அதன்  பயனை அடைய முடியும். அது போன்றே சில கர்மாக்கள் உடனடியாகப் பலன் தரும், சில கர்மாக்கள் பலன் தருவதற்கு சிறிது காலம் ஆகும். ஆயினும், நீங்கள் எதிர் கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையும்  அல்லது துன்பமும் உங்களுடைய செயல்கள் மற்றும் முற்பிறவிக் கர்மாக்களினாலேயே என்று எண்ணாதீர்கள். சில இப்பிறவியில் உங்கள் முட்டாள் தனத்தினாலேயோ அறியாமையினாலேயோ கூட நிகழலாம்.
முற்பிறவி வினைகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள தினமும் சாதனா மேற்கொள்ள வேண்டும். அது நிச்சயம் கடந்து போன கர்மாக்களின் பாதிப்பினை ரத்து செய்யும். அத்துடன் நாம் புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும்.

"நான் உன்னதமானவன், நற்குணவான், ஆகவே நல்லவைகளே எனக்கு நடக்க வேண்டும் " என்று எண்ணாதீர்கள். இல்லை. செயல்படுவதற்கு முன், சமயோசிதமும் புத்திசாலித்தனமும் இருக்க வேண்டும். அறிவினைப் பூட்டி வைக்காதீர்கள், சாமர்த்தியமாக பயன்படுத்துங்கள்.

என்னுடைய வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தோன்றுகின்றது. என்ன செய்வது?

உங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தும் போது வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தோன்றுகின்றது. எனக்கு என்ன நிகழும்? எனக்கு என்ன வேண்டும்?  எனக்கு இது வேண்டும், அது வேண்டும், எப்போது கிடைக்கும்? என்றெல்லாம் எப்போதும், எண்ணிக் கொண்டிருந்தால், வாழ்க்கை அர்த்தமற்றதாகவே தோன்றும். பிறருக்கு எதையேனும் தருவதற்காகவே, சமுதாயத்திற்கு எதையேனும் திரும்பத் தருவதற்கே, மேலும் இந்த உயர்ந்த உண்மையைக் கண்டறிவதற்காகவே இங்கு வந்திருக்கின்றீர்கள் என்று அறிந்து கொண்டால், வாழ்க்கை அர்த்தமுள்ளதாகி விடும்.
இன்பசெறிவு மற்றும் இன்பம் இழப்பு இரண்டுமே வாழ்க்கையை அர்த்தமற்று உணருவதற்குக் காரணம் ஆகும். உங்கள் பார்வையை அதினின்று விடுவித்து ”நான் பிறருக்கு என்ன செய்யக் கூடும்? நான் யார்?” என்று எண்ணத் துவங்கினால், உங்களுள்ளிருந்து அன்பும், மகிழ்ச்சியும் பெருக்கெடுக்கும், அனைத்து மதிப்புக்களும் வாழ்வில் இயல்பாகவே பெருகும். இது உங்களுக்கு ஒரு நல்ல காலமாற்றத்தை ஏற்படுத்தும்.

குருதேவ், நான் ஒரு நோயாளி. இதினின்று வெளி வர விரும்புகின்றேன்.என்ன செய்வது?

வெளிவர வேண்டும் என்னும் வலுவான விருப்பத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். ஒழுங்காக தியானமும் பிராணாயாமமும் செய்யுங்கள். இங்கு டாக்டர் நிஷா மணிகண்டனை கலந்து ஆலோசியுங்கள். அவர் உங்களது உணவு மற்றும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பவற்றுக்கு வழிகாட்டுவார். நிறைய கான்செர் நோயாளிகளுக்கு,மருத்துவர்கள் ஆறு மாதமே உயிர் வாழ்வார் என்று நிர்ணயித்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் இங்கு ஆஸ்ரமத்திற்கு வந்து, சுதர்சனக்ரியா பயிற்சி செய்து தங்களது உடல் நலனைத் திரும்பப் பெற்று, கான்சர் நோய் என்று கண்டுபிடிக்கப் பட்டு இருபது ஆண்டுகள் ஆகிய பின்னர் இன்றும் உயிருடன் இருக்கின்றனர்.

மருந்து மாத்திரையில் மட்டுமே நம்பிக்கை வைக்காதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நிலையான விழிப்புணர்வு உங்களுக்குள் இருக்கின்றது என்னும் நம்பிக்கை வையுங்கள். அதுவே ஒரு சிறிய திசு முழு வளர்ச்சியடைந்த குழந்தையாக தாயின் கர்ப்பப் பையில் வளரச் செய்யும் சக்தி வாய்ந்தது. வளர்ச்சிக்குப் பொறுப்பான அது, நிச்சயம் உடலைப் பழுது பார்த்துக் குணமடையச் செய்யவும் வல்லது.

குருதேவ், வைட்டமின் D மற்றும் வைட்டமின் B12 குறைபாட்டிற்கு என்ன காரணம்? பல பெண்களுக்கு இப்பிரச்சினை ஏற்படுகின்றது . மருந்துகளைத் தவிர வேறென்ன தீர்வு உள்ளது?

வேளாண்மையில் பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் பயன் படுத்துதலே இதற்குக் காரணம். இவை மண்ணை ரத்தசோகை (குறைந்த இரும்புச் சத்து) உள்ளதாக ஆக்குகின்றது. சூரிய ஒளியில் வைட்டமின் D கிடைக்கின்றது. பெரும்பாலான நேரம் உட்புறமாகவே இருந்தால் மருந்து மாத்திரைகள் உண்ண நேரும். கனிம உணவிலிருந்து (Inorganic food) கரிம உணவிற்கு (organic food) மாற வேண்டும்.தவிர MSG (Mono Sodium Glutamate என்னும் பதனப் பொருள்) தவிர்க்கப்பட வேண்டும். இது மாகீ நூடுல்ஸ் போன்றவற்றில் நறுமணசுவையை அதிகப் படுத்தும் பொருட்டு பயன்படுத்தப் படுகின்றது. இன்று பல உணவுப் பொருட்களில் இது சேர்க்கப்படுகின்றது. இது உடலில் தங்கி, சூரிய ஒளி உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றது. முடிந்தவரையில் தொகுக்கப்பட்டுப் பதனப் படுத்தப் பட்டுள்ள உணவினைத் தவிர்க்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் இவை நிராகரிக்கப் பட்டு விட்டன ஆனால் இந்தியாவில், இன்னமும் உபயோகத்திலுள்ளன. இன்னும் நிறைய மக்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கரிம உணவினை (organic food) உண்ணுங்கள்.

குருதேவ்,நாம் சிவ பெருமான்,பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோரை துதித்து பக்திப் பாடல்களை பாடுகின்றோம். ஆனால் நம் நாட்டில் மக்கள் சிவனைத் துதித்துக் கொண்டே பான்க் (சிவனை மகிழ்விக்கும் என்ற தவறான கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்  ஒரு வித இந்திய போதைப் பொருள்) உட்கொள்கின்றனர். மேலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் 16000 பெண்களை திருமணம் செய்து கொண்டார் என்றும் கதைகள் உள்ளன. இவற்றையெல்லாம் எவ்வாறு புரிந்து கொள்வது?

சிவ பெருமான் பான்க் எடுத்துக் கொண்டாரேயானால், பாற்கடலில் தோன்றிய விஷத்தையும் உட்கொண்டார். அப்படியானால் நாமும் விஷத்தை உட்கொள்ளலாமா?அப்போது பான்க் உட்கொள்ள உயிருடன் இருப்போமா? இவற்றையெல்லாம் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.சிவ பெருமான் ஒரு போதும் பான்க் எடுத்துக் கொண்டதேயில்லை.முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது, சிவதத்துவம் (மிக மிக அடிப்படையான படைப்பில் யாவற்றிலும் வியாபித்துள்ள உருவாக்கம்) ஒவ்வொரு உயிரிலும் உள்ளது. பான்க் போன்ற போதைப் பொருள்,சிவபெருமானின் பேரின்பத்திற்கு எதுவும் செய்ய இயலாது. ஏனெனில், சிவன் இத்தகைய அற்ப தாக்கங்களுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவர். ஆனால் சிவ நாமத்தை பாடுவது நமக்கு ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை உயர்த்தும்.

பல பெண்களுடன் கிருஷ்ணர் நடனமாடிக் களித்திருந்த முழு கதையினையும் படிக்கவில்லை என்று தெரிகிறது. நீங்கள் ஸ்ரீமத் பாகவதம் படித்து இருந்தால், இந்த ராசலீலாவை (இறைவன் ஒரு பொழுதுபோக்கு பொருள்) அவரது தனது 14வது வயதில் நடத்தினார் என்று தெரிந்து கொள்வீர்கள். அனைவருக்கும் விருப்பமானவர், அனைவருடனும் விளையாடுபவர். அவ்வழிகளைப் பின்பற்ற வேண்டாம், ஆனால் தன்னுடைய வாழ்க்கையின் மூலம் அவர் தந்த ஞானத்தினை நன்றாக உறிஞ்சிக் கொள்ளுங்கள். ஸ்ரீகிருஷ்ணரைப் போன்று இருப்பது மிகக்கடினம், ஏனெனில் அவர் யோகேஸ்வரர். (யோகிகளுக்கெல்லாம் உயர்ந்தவர்) குளித்துக் கொண்டிருப்பவர்களின் ஆடைகளை மறைத்து வைத்துத் தப்பிக்க முடியும்! (சிரிப்பு)


பொழுது போக்கின் மூலம் மனித உணர்ச்சிகளின் பல்வேறு வண்ணங்களையும் சாரத்தையும் வெளிக் கொணர்ந்தவர். ஸ்ரீ கிருஷ்ணரின் குணாதிசயங்களை புரிந்து கொள்வது முற்றிலும் இயலாத விஷயம். எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் சரியாகவும் முழுமையானவராகவுமே தோன்றுவார்.