வெள்ளிக்கிழமை, 7 நவம்பர், 2014
பெங்களூரு, இந்தியா
குருதேவ்,
தனக்கும் தன் எண்ணத்திற்கும் இடையே உள்ள தொடர்பைத்
துண்டித்து விடுவதே யுக்தி என்று தாங்கள் கூறினீர்கள். எண்ணம் என்னுடையது என்று நம்மை உணரச் செய்வது எது?
சமஸ்க்ரிதத்தில்
இது தடாத்மா என்று அழைக்கப்படுகின்றது.
நீங்கள் ஒரு திரைப்படத்தை பார்க்கும் போது அப்படத்துடன் உங்களை அடையாளப்படுத்தி கொண்டு, கதாநாயகனுக்கோ கதாநாயகிக்கோ ஏதேனும் நிகழ்ந்தால் நீங்களும் அழ ஆரம்பிக்கின்றீர்கள் அல்லவா?
கிராமங்களில் அவ்வாறு நிகழுவதுண்டு. திரைப்பட கதாநாயகனை வில்லன் தாக்கினால், திரையின்
மீது கற்களையும் செருப்புக்களையும் மக்கள் வீசுவதுண்டு. சமயங்களில் தியேட்டர் உரிமையாளர்,
வந்து," இது திரைப்படம், தயவு செய்து திரையின் மீது செருப்புக்களையும் கற்களையும்
வீசாதீர்கள் திரை பாழாகிவிடும்" என்று வேண்டிக் கொள்வார்.
இதுதான் அடையாளம். மனம் காண்பவற்றுடன் தன்னை அடையாள படுத்திக்கொள்கின்றது. அது போன்று நீங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது புத்தியுள்ளவராக
இருந்தால் அது திரைப் படம் என்று தெரிந்து கொள்வீர்கள். கதாநாயகனை வில்லன் தாக்கும்
போது டெலிவிஷனின் மீது கற்களை வீசமாட்டீர்கள். உணர்ச்சிகளும் எண்ணங்களும் வந்து போகின்றன. எண்ணங்களுடன் உங்களது வலுவான தொடர்பு உங்களைக் கூண்டில் அடைக்கின்றது. அடையாளம் என்பது தான்
அந்தக் கூண்டு. அனைத்தும் எண்ணங்கள் என்று அந்த அடையாளத்திலிருந்து பிரித்துக் கொள்வதே
விடுதலை.அனைவருமே இதை ஓரளவுக்குச் செய்கின்றோம். எழும் ஒவ்வொரு எண்ணத்தினையும்
செயல்படுத்துவதில்லை. அனைத்து எண்ணங்களையும் உங்களுடையதாக கொண்டால் பித்துப் பிடித்து
விடும். ஆயினும் பல எண்ணங்களை நாம் நமது சொந்தமாகக் கருதுகின்றோம். அந்த எண்ணமே
நாம் என்றும் கருதிக் கொள்கின்றோம். நீங்கள் தியானத்தில் அமர்ந்திருக்கும்
போது நீங்கள் உங்கள் எண்ணங்களுக்கு சாட்சியாக, இவையெல்லாம் கடந்து செல்லும்
எண்ணங்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். பல எண்ணங்களில் இருந்து நம்மை துண்டித்துக்
கொண்டு கடந்து செல்லும் மேகம் போன்று ஆகின்றோம்.
அத்தகைய மேகம் போன்ற நிலை ஏற்படும் போது சில உணர்ச்சிகளையும் அது தூண்டுகின்றது. எண்ணங்களும் உணர்ச்சிகளும் இணைந்தவை.
ஒரு கெட்ட எண்ணம் தோன்றும் போது அது சில கெட்ட
உணர்ச்சிகளை தூண்டுகின்றது. அந்த உணர்ச்சிக்கு நீங்கள் சாட்சியாகும்போது அது ஒரு
நிமிஷமே நிலைத்துப்பின் மறைந்து விடுகின்றது. அதனுடன் உங்களை அடையாளபடுத்திக் கொண்டால் அது நீடித்திருக்கின்றது.
நிலைத்து நிற்க முடியாது, ஆனால் சற்று அதிக நேரம் நீடித்திருக்கும்.
குருதேவ்,
விரும்பும் ஒருவர் திருமணத்தின் பொருட்டு சமயத்தை
மாற்றிக் கொள்ளும்படி கேட்டால் என்ன செய்வது?
அதற்கு
நீங்கள் "என்னுடையதை நான் பின்பற்றுகின்றேன், உன் சமயத்தை நீ பின்பற்றலாம்
"என்று கூறுங்கள். சில சமயங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் சில சமயங்கள்
தாம் மட்டுமே சிறந்தது மற்றவை தீங்கானவை என்று கூறுகின்றன. இது கடினமானது. அத்தகைய சமயங்கள் விஷயத்தில் நீங்கள் அனைத்து சிந்தனை வடிவங்கள்
மற்றும் வழிபாடுகளை ஏற்றுக் கொள்ளும் சமயத்திற்கு மாறுகின்றேன் என்று கூற வேண்டும்.
இது மிக எளிதானது. உங்களது சமயம் என்னுடையது மட்டுமே சரியானது மற்றவையெல்லாம் மோசம்
என்று கூறினால் அது உங்களைக் கட்டுப்படுத்துகின்றது. உங்களது சமயம்,அனைத்து வழிகளும்
சரியே என்று கூறினால் அதை நீங்கள் பின்பற்றலாம். பரந்த மனப்பான்மையுள்ள வழியே சிறந்தது.
அநேக சாத்தியக் கூறுகளும் நல்லிணக்கமும் அதனுள் இருக்கின்றன.
நேற்று பெங்களூரில் படித்துக் கொண்டிருக்கும் யாஸ்தி இனத்தைச்
சேர்ந்த ஐந்து பையன்கள் என்னைக் காண வந்திருந்தார்கள். இனத்தின் நிலை பரிதாபகரமாகவும், வேதனைக்குரியதாகவும் உள்ளது. அந்த இனத்தை சார்ந்த மக்கள் கடந்த 40-50 ஆண்டுகளில்
23 மில்லியனிலிருந்து ஒரு மில்லியனாக குறைந்துள்ளனர். சதாம் ஹுசைனின் காலத்தில் ஓரிடத்திலிருந்து
மற்றொரு இடத்திற்கு ஓட வேண்டியதாயிற்று. சற்று வேறுபட்டிருக்கும் அவர்களது நம்பிக்கையின்
காரணமாக அவர்கள் நாஸ்திகர் என்று கருதப்பட்டதால் முழு உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்
படவில்லை. சமயத்தின் பெயரால் பல கொலைகள் நிகழ்ந்து அது ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகிவிட்டது.
வாழும் கலை, யாச்திகளுடன் பணி புரிந்து வருகின்றது. 550 குடும்பங்களைத்
தத்து எடுத்துக் கொண்டிருக்கின்றோம். 90 டன் உணவுத் தானியங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அளித்த இரண்டு ஹெலிகாப்டர்களின்
மூலம் அவை சின்ஜார் மலைக்கு அனுப்பப்பட்டு விட்டன. அங்குள்ள புனித ஆலயத்தில் 9000
பேர் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். மிகக் குளிரான
அந்த இடத்தில் கூடாரங்கள், உணவு, நீர் எதுவும் இல்லை. இது வரையில் வாழும் கலை மட்டுமே
அவர்களுக்கு உணவு அளித்து உதவிக் கொண்டிருக்கின்றது. பிற நிறுவனங்களும் இதில் இணையும்
என்று எதிர்பார்க்கின்றோம்.
குர்டிஸ்தானில் பணி புரியும் ஆசிரியர்கள் தன்னார்வத் தொண்டர்கள்
ஆகியோரைப் பற்றி நான் மிகவும் பெருமை கொள்கின்றேன். அங்கு ஷியாக்கள், கிறிஸ்தவர்கள், யாச்திக்கள். நமது தொண்டர்கள் அங்கு கூடாரங்கள்
அமைத்து அவர்களனைவரையும் கவனித்துக் கொள்கின்றனர்.
சின்ன விஷயங்கள் உங்களைத் துன்புறுத்தும் போது, அதாவது மாமியார் மாமனார் கணவர்/மனைவி, அண்டை வீட்டுக்காரர் இவர்கள்
ஏதாவது கூறியதை நினைத்து வருந்தும் போது, அழிந்து கொண்டிருக்கும் இந்த இனத்தவரை எண்ணிப்
பாருங்கள். அவர்கள் சமயம் மாற வேண்டும் இல்லையெனில் கொல்லப்படுவார்கள். ஆயினும் அவர்கள்
தங்கள் நம்பிக்கையை பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அதனாலேயே குளிர் மிகுந்த
மழைப் பகுதிக்குச் சென்று விட்டார்கள். அவர்களை அவர்களது சமயப் பற்றிற்காக நாம்கௌரவிக்க வேண்டும்.
அவர்கள் ஏன் சமயம் மாற வேண்டும்? அத்தகைய கட்டாய மத மாற்றத்தால் 23 மில்லியன் ஒரு மில்லியனாகக்
குறைந்து விட்டது. பார்சிக்கள் ஜைனர்கள் போன்று யாச்திக்கள் ஒரு அமைதியான இனம் ஆகும்.
இந்தியா பார்சிக்கள் ஜைனர்கள், சீக்கியர்கள் அனைவரையும் தன்னுள் வசிக்க வைத்திருக்கின்றது. ஒவ்வொரு இனத்தவரும் இந்நாட்டின்
ஒரு பகுதி அனைவரும் அமைதியாக வாழ்கின்றனர். எவ்வாறு? ஏனெனில் நாம் வசுதெய்வ
குடும்பகம் (ஓர் குடும்பம்). இதைத்தான் அனைத்து நாடுகளும் அனைத்து இனங்கள்
மற்றும் அனைத்து சமயங்கள் ஆகியவையும் பின்பற்ற வேண்டும். ஒருவர் ஷியா, சுன்னி, ப்ரோடேஸ்டண்ட், கத்தோலிக்கர், பிராமணர், தலித் என்னவாயினும் சரி,
அனைவரும் ஒரே குடும்பம்.
உலகின் அமைதியான பகுதிகளில் அமைதி மாநாடுகள் நிகழ்கின்றன. ஆனால்
எங்கு மோதல்கள், போர் நிகழ்கின்றனவோ அங்கு அமைதி மாநாடுகள் தேவைப்படுகின்றன. அதைத்தான்
நாம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றோம்.அடுத்த வார இறுதியில் 18 முதல் 21 நவம்பர்
வரையில் நான் இராக் செல்கின்றேன். அங்கு ஓர் அமைதி மாநாடு நிகழ உள்ளது. அதில் மக்கள்
ஒன்றிணைவார்கள் என்று நம்புகின்றேன். குர்டிஸ்தான் பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கு வாழும் கலை மகிழ்ச்சிப் பயிற்சி கற்பிக்கப்பட்ட போது (முதல் பயிற்சியினை 35 பேர் எடுத்துக் கொண்டனர்) ஷியா,சுன்னி, குர்ட்
அராபியர் போன்ற பல்வேறு இன மக்கள் அதில் பங்கேற்றனர்.
அப்பயிற்சி முடிந்த போது, அனைவரும் "இதுதான் எங்களுக்குத் தேவை என்று கூறினர்.
வலைத்தளத்தில் இடப்பட்டிருக்கும் அவர்களது அனுபவங்களை நீங்கள்
படித்துப் பார்க்கலாம். வற்புறுத்தி என்னுடன் ஸ்கைப் மூலம் பேசினார்கள். அவர்கள்
"குருதேவ், இந்த ஞானச் செய்தி இங்கு மிகவும் தேவை, நீங்கள் எங்களது மாநிலத்திற்கு கட்டாயம் வர வேண்டும். ஆண்டுகளுக்கு
முன்னரே இந்த ஞானச் செய்தி எங்களுக்குக் கிடைத்திருந்தால் எங்களது வரலாறே வேறு விதமாக
அமைந்திருக்கும் என்று கூறினார்கள். இதை நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியதிருக்கின்றது. அப்போதே
மக்களுக்குப் பரந்த மனப்போக்கு இருந்திருந்தால் இன்று அவர்கள் இன்று கடந்து சென்று
கொண்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.கவலைப்பட வேண்டும் என்றிருந்தால் என்னைப் போன்று பெரிய விஷயத்திற்குக்
கவலைப்படுங்கள்! ஒரு நொடியாவது இத்தகைய பெரிய விஷயங்களை எண்ணிக் கவலைப்பட்டால் அற்ப
விஷயங்களில் மூழ்கி விடாமல் மேலெழுவீர்கள்.
குருதேவ்,
எந்தெந்த நிலைகளில் வன்முறையின் மூலம் ஒரு பிரச்சினையை தீர்க்கலாம்? சாம, தான தண்ட
பேத? (சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ள
நான்கு வழிகள்)
எதுவும்
பயனற்றுப் போனால் இறுதியில் மகாபாரதம். உண்மையில் வேறெதுவும் பயனற்றுப் போனால்
மட்டுமே இது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஒரு முழுமையான உதாரணம் கொடுத்தார். அவர் மூன்று முறைகள்
கெளரவருக்கும் பாண்டவருக்கும் இடையே மத்யஸ்தம்
செய்து வைப்பதற்காகச் சென்றார். ஒரு தடவை அல்ல மூன்று தடவைகள். மக்கள் " ஸ்ரீ
கிருஷ்ண பகவான் ஒரு போர் நிகழப்போவது உறுதி என்று அறிந்தும் ஏன் மூன்று முறை சென்று
துரியோதனனை பாண்டவருக்கு இடம் அளிக்குமாறு யாசித்தார்? ஏன் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு
முயற்சித்தார்? என்று கேள்வி கேட்கின்றனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் ஓர் உதாரணத்தை முன்வைத்தார். அது என்னவென்றால்,
மனிதப்பிரயத்தினத்தில் செய்யக் கூடுமென்பதை அதன் பயனைப் பற்றிக் கவலைப்படாமல் கட்டாயம்
செய்ய வேண்டும் என்பதே ஆகும்.
பகவத்கீதையில், உங்கள் ஆத்மா உங்கள் நண்பனும், எதிரியும் என்று கூறப்பட்டுள்ளது.பகை
மற்றொருவரின் நடவடிக்கை யல்லவா?? பகைக்கு
நாமே காரணம் ஆவோமா என்ன?
ஆம்,
பகைமை என்பது மனதில் எழும் ஒரு உணர்ச்சி.
வேறொருவர் நம்மை அவரது எதிரியாக எண்ணினால் அது அவரது நடவடிக்கை, நம்முடையது அல்ல. அது
அவரது தலைவலி நம்மை பொருத்தவரையில் நாம்
யாரையும் எதிரியாகக் கருதக் கூடாது. ஒருவர் எதிரியைப் போல தோன்றினால் உடனே அதற்குத்
தகுந்தபடி செயல்படுங்கள். உடனே அவரைக் கட்டித்தழுவிக் கொள்ள வேண்டுமென்றோ அவரை உங்களது
உடமையாக்கிக் கொள்ள வேண்டுமென்றோ நான் கூறவில்லை. ஒரு எதிரி துப்பாக்கியுடன் வந்தால்
நீங்களும் அதற்குத் தகுந்தபடி தயாராகவே இருங்கள். கல்லும் செங்கலும் எடுத்துத் தாக்க
வந்தால் அதற்கு தகுந்தாற் போன்று நடவடிக்கை எடுங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அறிவினைப் பயன்படுத்துங்கள். உணர்ச்சிகளின் அளவில் யாரையும் எதிரியாகக் கருதுவதில்
பயன் எதுவும் இல்லை. யாரையும் எதிரியாக உணராதீர்கள்.
மகிழ்ச்சியை
எவ்வாறு பராமரிப்பது? தேர்வு முடிவுகளைப் பெறும்போது
100% மகிழ்ச்சி 0% க்கு வந்து விடுகின்றது?
அறிவின்
பலத்தினால் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம். வருத்தம் வரலாம். வருத்தம் வந்தடையாத
ஒரு மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம். ஏசுநாதர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ண பகவான், இவர்களுக்கெல்லாம்
எவ்வளவு துன்பம் வந்தன? அறிவின் வலிமை உங்களுக்கு இருந்தால், துன்பம் உங்களைத் தொடாது. தியானம் பயில்வதற்கு முன்னர், ஒரு பிரச்சினை நிகழ்ந்தால் நீங்கள்
அதிலேயே புதைந்து போய் விட்டீர்கள் அல்லவா? ஆனால் இப்போது அறிவினை அடைந்து சிறிது தியானம்,
பிராணாயாமம் இவை செய்த பின்னர், 0% நிலையை அடைந்தாலும், அதிலிருந்து எழுந்து முன்னேறிச்
செல்கின்றீர்கள் அல்லவா? நீங்கள் மீண்டும் குதித்தெழுகின்றீர்கள். அவ்வளவு தான்.