வாழ்க்கையை ஞானக் கண்கள் மூலம் பார்!

ஞாயிற்றுக்கிழமை 30 நவம்பர், 2014

டில்லி, இந்தியா


(தெற்குஆசிய நாடுகளின் பிராந்தீய ஒத்துழைப்பு சங்கம் (SAARC) வாயிலாக, புற்றுநோய் மருத்துவர்களின் கூட்டமைப்புடன் வாழும் கலை சேர்ந்து “ப்ரேரணா” என்ற திட்டத்தை குருதேவர் ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார். “ப்ரேரணா” என்பது புற்று நோயால் வாடும் மக்களுக்காகத் துவக்கப்பட்ட சிறப்புத் திட்டமாகும். புற்று நோய் மருத்துவர்களின் கூட்டமைப்பு மாநாட்டில் குருதேவர் ஶ்ரீஶ்ரீ ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

இங்கு கூடியிருக்கும் மருத்துவர்களோடு கலந்து பேசுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எல்லோரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரித்து மிகச் சிறப்பாக பணியாற்றுகிறீர்கள். உங்களில் பலர் புற்று நோயாளிகளை பராமரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் உங்களையும் பராமரித்துக் கொள்ள வேண்டும்.“ப்ரேரணா” என்ற திட்டத்தை துவங்க நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நோயாளி குணமடைய அவருடைய வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இது மிகவும் அத்தியாவசியமானது.
வாழ்க்கையை நீங்கள் ஞானக் கண்களோடு பார்க்கும் போது, எதிர்மறை உணர்வுகள் மிக எளிதாக நீங்கி, நீங்கள் ஆத்மபூர்வமாக புன்னகையோடு இருக்க துவங்குவீர்கள். சமீபத்தில் நான் அமெரிக்க உளவியல் சங்கம் வெளியிட்ட கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதன்படி நீங்கள் எட்டு வாரம் தியானம் செய்தபின் உங்கள் மூளையின் கட்டமைப்பு மாறுதல் அடைகிறது. சாம்பல் நிற செல்கள் அதிகரிக்கின்றன. எட்டு வார தியானத்தால் இப்படிப்பட்ட நன்மாற்றம் அடைவதைப் பார்க்க முடியும் போது, மக்கள் தியானம் செய்வதால் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது.

மற்றொரு ஆராய்ச்சியினபடி, 1950 களில் மனநிலை மருத்துவமனைகளிலிருந்தவர்களின் பதட்ட 
நிலை எப்படி இருந்ததோ, தற்போது பள்ளி மாணவர்களிடமும் அப்படிப்பட்ட பதட்ட நிலை காணப்படுகிறது. இது ஒரு அபாயகரமான விஷயம். மக்களிடையே அதிக மன உளைச்சலும், கவலையும் காணப்படுகிறது. ஒரு 20 வயது இளைஞன், “எனக்கு வாழவே பிடிக்கவில்லை” என்று சொல்கிறான். அந்த வயதில் வாழ்க்கையைப் பார்க்கவே இல்லை. அதற்குள் வாழப் பிடிக்கவில்லை என்று தற்காலத்து இளைஞர்கள் பலர் சொல்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருக்க இயலாது. ஐந்தாறு ஆண்டுகளில் எல்லா பிரச்சினைகளுக்குள்ளாவார்கள். இப்போது “ஸ்கிசோஃப்ரினியா” என்ற மனநோய் மாணவர்களிடையே வெகுவாக பரவியிருக்கிறது. புத்திசாலி மாணவர்களுக்கு மன உளைச்சலை தாங்க முடியாமல் என்னவோ ஆகிவிடுகிறது. அவர்கள் “பைபோலார்” மற்றும் “ஸ்கிசோஃபிரினியா” நோய்க்கு ஆளாகிறார்கள். நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன். 25 – 30 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கிசோஃபிரினியா அல்லது பைபோலார் என்ற நோய் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? (பார்வையாளர்கள் “இல்லை” என்று சொல்கிறார்கள்.)

இப்போது பெரிய மற்றும் சிறு நகரங்களில் இந்த நோய்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். சமுதாயத்தில் எல்லோருடைய நலத்தையும் பராமரிப்பது அவசியம். தற்போதைய வாழ்க்கை முறைகளைப் பற்றி கவனித்து மக்களின் நல்வாழ்வுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். “இதற்கெல்லாம் காரணம் மன உளைச்சலே என்பதை நாமனைவரும் அறிவோம்”
மன உளைச்சல்? ஒரு விளக்கப்படி நிறைய காரியம் செய்ய வேண்டியிருக்கும் போது அதற்கு வேண்டிய சக்தி இல்லாமல் சக்தி குறைவாக இருக்கும் போது மன உளைச்சல் வரும். இன்றைய காலகட்டத்தில் வேலை பளுவை குறைப்பதென்பது முடியாது.நேரம் எல்லோருக்கும் ஒன்றே தான். அதை நாம் அதிகப்படுத்த முடியாது. நம் சக்தியை அதிகப்படுத்தி வேலையை முடிப்பது ஒன்றே சாத்தியமாகும். நம் சக்தியை அதிகரிக்கப் பல வழிகள் உள்ளன.

·         நாம் உண்ணும் உணவு
ஆரோக்கியம் அளிக்கும் உணவை உண்பது அவசியம். தெற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் (சார்க்) பெரும்பாலான மக்கள் ஆரோக்கியம் தரும் உணவை உண்பதில்லை. அவர்கள் உண்ணும் உணவில் போதிய ஊட்டச் சத்து இருப்பதில்லை. பொதுவாக நாம் உருளைக் கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய் மற்றும் வெங்காயத்தை உண்கிறோம். அவ்வளவு தான். உருளைக்கிழங்கில் மாவுப் பொருள் (ஸ்டார்ச்) உள்ளது. நாம் உண்ணும் சப்பாத்தியிலும் ஸ்டார்ச் உள்ளது. பருப்பு வகைகளிலும் ஸ்டார்ச் உள்ளது. இவை சரிவிகித உணவாகாது. தினசரி உணவில் நாம் ஊட்டச் சக்தி தரும் பொருள்களை சேர்த்துக் கொள்வதில்லை. மக்களிடையே ஊட்டச்சக்தி கொடுக்கும் சரி விகித உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

·         நல்ல தூக்கம்.
போதிய அளவு தூக்கம் உங்களுக்கு சக்தியைக் கொடுக்கிறது. மருந்துகளை விட தூக்கத்தினால் அதிக உதவி கிடைக்கிறது. என்னால் மருந்துகளின் சக்தியைக் குறைவாக மதிப்பிட முடியாது. இருந்தாலும் ஒரு நோயாளிக்கு மருந்து மட்டும் கொடுத்து அவரைத் தூங்கவிடாமல் செய்தால், அவர் எடுத்துக்கொண்ட மருந்து வேலை செய்யாது.எனவே தூக்கம் மிகவும் அத்தியாவசியமான தேவையாக உள்ளது. இப்போது பலர் தூக்கமின்மை (இன்சோம்னியா) என்ற நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். தேவையான அளவு தூங்க முடியாமல் பலர் அவதிப்படுகிறார்கள். கெட்ட கனவு காண்பது பலருக்கு வழக்கமாகி விட்டது. யோக சாதனைகள் மூலம் ஒருவரை தேவையான அளவு தூங்க வைக்க முடியும். தூக்க மாத்திரை சாப்பிடாமல் வேண்டிய அளவு தூங்க யோகப் பயிற்சிகள் உதவும். சில குறிப்பிட்ட யோகாசனங்களைச் செய்து தியானம் செய்தால் உங்களுக்குத் தேவையான அளவு நல்ல தூக்கம் வரும். யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டு, தொடர்ச்சியாக செய்து வருவது, உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும்.

·         சுகாதாரம்
தெற்கு ஆசிய நாடுகளில் சுகாதாரப் பழக்க வழக்கங்களை பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. சுகாதாரப் பழக்கத்தின் அவசியத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாழும் கலை இக்காரியத்தை 5 எச் திட்டம் மூலம் செயல்படுத்தி வருகிறது. ஹெல்த், ஹைஜீன், ஹோம்ஸ், ஹார்மனி இன் டைவர்சிடி, ஹ்யூமன் வேல்யூஸ் என்று இத்திட்டத்தை ஆங்கில மொழியில் அழைக்கிறோம். தமிழில் இதன் பொருள். ஆரோக்கியம், சுகாதாரம், அனைவருக்கும் வீடுகள், வேற்றுமையில் ஒற்றுமை, மனிதாபிமான மதிப்புகள் என்று சொல்கிறோம்.

இந்திய மக்களான நாம் பல்வேறு வித்தியாசமான பழக்கங்களை உடையவர்கள். இந்தியாவில் பல மொழிகளும், 600 வகையான பேச்சு வழக்கங்களும் தற்போது உள்ளன. நாம் பல்வேறு மதங்களை பின் பற்றுகிறோம். எனவே நாமனைவரும் அமைதியாக ஒற்றுமையாக வாழ்வது மிகவும் அவசியம். எனவே மேற்கூறிய 5 எச் திட்டத்தின் மூலம் மக்களுக்குத் தேவையான சேவைகளை செய்கிறோம். நாம் சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருந்து, மக்களைக் கொடிய நோய்கள் வராமல் தடுத்து காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியம். குளிர் காலத்தில் சிலர் தங்கள் வீடுகளின் கதவுகளைத் திறந்து வைப்பதில்லை.இதனால் உள்ளிருக்கும் காற்று மிகவும் அசுத்தமாகி விடும்.பல வீடுகளில் காற்றோட்டம் இருப்பதில்லை. “புற்று நோய் வருவதற்கான காரணங்களில் ஒன்று, அந்த நபர் போதுமான அளவு சுத்தமான காற்றை சுவாசிப்பதில்லை” என்று ஒரு பெயர் பெற்ற புற்று நோய் மருத்துவர் சொன்னதைக் கேட்டேன். நீங்கள் நன்றாக சுவாசித்து, போதிய அளவு ஆக்ஸிஜன் உடலில் செல்லும் போது, உடலில் உள்ள நச்சுப்பொருள்கள் வெளி வருகின்றன. அப்போது உடல் பல நோய்களிலிருந்து தன்னைத் தானே குணப்படுத்தி கொள்ளும் ஆழ்ந்த மூச்சு எடுத்து விடும் பழக்கத்தால் புற்று நோய் வராமல் காத்துக் கொள்ள முடியும். ப்ராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), தியானம் மற்றும் யோகப் பயிற்சிகள் செய்ததாலும், உணவுப் பழக்கங்களில் தேவையான மாற்றங்கள் செய்ததாலும், நோயிலிருந்து குணமடைந்த நூற்றுக் கணக்கான புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். பலருக்கு கீமோ தெராபி அவசியமாக இருக்கவில்லை. ஏனென்றால் அவர்களுடைய பயிற்சிகளால், அவர்களுடைய உடல் தன்னைத் தானே நோயிலிருந்து காத்துக் கொள்ளும் வலிமை பெற்றது.

·         மூச்சு விடுதல்

சரியான முறையில் மூச்சை இழுத்து விடுவதால் உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கும். தூய்மையான புதிய காற்று அவசியம். சில சமயம் பெரிய நகரங்களில் சாலையில் செல்லும் போது, அங்கிருக்கும் காற்று பெட்ரோல், டீசல் புகையால் மாசுபட்டிருப்பதை உணரலாம்.. இதைத் தவிரவும் தற்போது எலெக்ட்ரோ மாக்னடிக் அலைகளும் நம் உடலை பாதிக்கின்றன. (செல்ஃபோன், ரேடியோ, டி.வி. அலைகள்) 9 மணி நேரம் டி.வி பார்த்தால் கண்டிப்பாக நோய் வாய்ப்படுவீர்கள்.

அமெரிக்காவில் பெற்றோர்கள் வேலைக்காக வெளியில் செல்லும் போது, குழந்தைகளை டி.விக்கு முன் அமர்த்தி விட்டுச் செல்வது வழக்கம். மூன்று நான்கு வயது குழந்தைகள் பல மணி நேரம் டி.வி. பார்ப்பது சகஜமாகி விட்டது. அவர்கள் பார்ப்பவை எல்லாம் மூளையில் பதிந்து எப்படிப்பட்ட மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்? பள்ளிக் குழந்தைகளுக்கு இதனால் கவனக் குறைவு என்ற நோய் வந்திருக்கிறது. (ஆங்கிலத்தில் அடென்ஷன் டிஃபிஷியென்ஸி ஸிண்ட்ரோம் என்று பெயர்). நம் வாழ்க்கை முறையைக் கவனித்து மன உளைச்சலை நீக்க / குறைக்க என்ன செய்ய வேண்டும்? எப்படி ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம் என்று சிந்திக்க வேண்டும்.
இயற்கை நமக்களித்திருக்கும் அழகான கருவியான இந்த உடலுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்குவது அவசியம். நாம் நம் உடலுக்கு மரியாதை அளிக்க வேண்டும். மனதுக்கும் மரியாதை செய்ய வேண்டும். உங்களுடைய எதிர்மறை எண்ணங்கள் மனதின் ஆழத்தில் புதைத்திருந்தால்,அது உடலில் புற்று நோயை வளர்க்கும். கோபம், பொறாமை,பேராசை முதலிய எதிர்மறை குணங்களை மனதில் வைத்திருக்கும் போது, வெளியில் சொல்ல முடியாது. இப்படிப்பட்ட எதிர்மறை சக்திகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் செய்யும் பயிற்சிகளும், ஞானமும் உதவும்.
வாழ்க்கையை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்!! கோபமும் பொறாமையும் மறைவதை பார்க்கலாம். எதைப் பார்த்துப் பொறாமைப்படுகிறாய்?உலகில் 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் போதுமான வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கையை ஞானக் கண்கள் மூலம் பார்க்கும் போது எல்லா எதிர்மறை உணர்வுகளும் எளிதாக நீங்கி விடும். உங்களால் ஆத்மபூர்வமாக புன்னகை செய்ய முடியும். வாழும் கலையின் நோக்கம் உலகில் வாழும் அனைவருடைய முகத்திலும் புன்னகையை காண்பதுதான். உன்னுடைய குறுகிய எல்லையிலிருந்து வெளியே வந்து, பல்வேறு விதமான பார்வையில் இவ்வுலகத்தைப் பார்க்கும் போது, உன் வாழ்க்கையில் ஒரு நல்ல வித்தியாசத்தை அனுபவிக்க முடியும்.
வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்சினை வரும் போது (அதை நீ பெரிய பிரச்சினையாக நினைக்கக் கூடும்) அதில் நீ சிக்கிக் கொள்கிறாய். விழித்துக் கொள். இதை விட பெரிய பிரச்சினைகளை மக்கள் எதிர் கொள்கிறார்கள். உன் உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. உன்னால் அவர்களுக்கு உதவி செய்ய முடியும். தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்யத் துவங்கு. இப்படி செய்யும் போது, உன் பிரச்சினை எவ்வளவு சிறியது. நீ நினைத்தது போல் அது ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்பதை நீ புரிந்து கொள்வாய். உன் பிரச்சினை அவ்வளவு மகத்தானது அல்ல என்று நீ அறியும்போது, அதற்குத் தீர்வு காண, உனக்கு வேண்டிய சக்தியும் உற்சாகமும் தானாகவே கிடைக்கும். மனதுக்கு சற்று பயிற்சி தேவை. சில மணிநேரங்களில் நாம் மக்களுக்குப் பயிற்சி அளிக்கமுடியும். மக்களின் பார்வையை ஆக்கபூர்வமான திசையில் திருப்பி, அவர்களுடைய மனதைக் கையாள, வாழ்க்கைமுறை மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள உதவும் சில குறிப்புகளை இப்பயிற்சிகளின் மூலம் சொல்லிக் கொடுக்க முடியும்.
நாம் ஒருவருடைய வாழ்க்கை முறையை மாற்ற முடியாது. அதை அவர்களே (நல்வழியில்) மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு மருத்துவர் மருந்து கொடுப்பதை போல குறிப்புகளை அளிக்கலாம். ஆனால் அதைப் பின்பற்ற அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அதே மாதிரி அவர்களுடைய மன உளைச்சல் நீங்க வழி மட்டுமே சொல்ல முடியும். விழித்துக் கொள். மக்கள் உன்னை விட பெரிய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு உன் உதவி தேவைப்படுகிறது. உன்னால் அவர்களுக்கு உதவ முடியும். இந்த திசையில் சென்று உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்.
முல்லா நசிருதீன் பற்றிய கதை ஒன்று உள்ளது. ஒரு தடவை முல்லா பல உறுப்புகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல் முழுதும் கட்டுப் போடப் பட்டிருந்தது. அவரைப் பார்க்க அவருடைய நண்பர் ஒருவர் வந்தார். முல்லா, இப்போது எப்படி இருக்கிறாய்? என்று விசாரித்தார். “நான் நன்றாக இருக்கிறேன். சிரிக்கும் போது மட்டும் வலிக்கிறது“ என்று முல்லா சொன்னார். முல்லாவின் நண்பர், “இந்த நிலையில் உன்னால் எப்படி சிரிக்க முடிகிறது?“ என்று கேட்டார். “இப்போது நான் சிரிக்காவிட்டால், வாழ்க்கை முழுதும் சிரித்ததே இல்லை என்றாகி விடும்“ என்று முல்லா விடையளித்தார். எந்த சூழ்நிலையிலும் சிரிக்கலாம் என்று மனதில் திடமாக இருப்பதே ஞானம் எனப்படும்.
வாழ்க்கையை ஒரு போராட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு சவாலாக எடுத்துக் கொள். வாழ்க்கையை வருத்தம் என்று கருதாதே. பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியே வாழ்க்கை எனப்படும். அதை நான் ஞானம் என்று சொல்கிறேன்.இந்த ஞானம் நம்மிடம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் சிலரே அதை அறிந்திருந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் இந்த ஞானத்தை உபயோகித்து விட்டு, தங்கள் பிள்ளைகளிடம் சொல்லிச் சென்றார்கள் ஆனால் இவ்வுலகிலுள்ள மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. இப்போது இந்த ஞானத்தை எல்லா மக்களோடும் பகிர்ந்து கொள்ளும் நேரம் வந்திருக்கிறது என்று நினைத்தேன். இந்த மூச்சு, யோகம் மற்றும் தியான பயிற்சிகளை கற்று எல்லோரும் பயன் பெற வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.