உங்கள் விழிப்புணர்வு விரிவடைதல்

புதன்கிழமை 12 நவம்பர் 2014.

பெங்களூரு, இந்தியா

(உண்மை, காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கும் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

சில சமயங்களில் ஞான செய்தியினை நினைவில் கொள்வது கூட பாரமாக உள்ளது. மீண்டும் நினைவு கூர்ந்து கொள்ளும் மனன நிலையில் ஏற்கும் ஞான செய்தியினை எவ்வாறு நிதித்யாசா என்னும்  முழுமையான உட்கிரகித்தல் நிலைக்கு எடுத்து செல்வது ?

குருதேவ்: இந்தக் கேள்வியினைக் கேட்டு ஏன் உங்கள் சுமையினை அதிகரித்துக் கொள்கின்றீர்கள்? (சிரிப்பு) இளைப்பாறுங்கள். மௌனமாக இருங்கள். ஞானத்தின் நோக்கமே மட்டுப்படுத்தப்பட்ட புரிதல் மற்றும் கருத்துக்களிலிருந்து, விரிவாக்கப்பட்ட விழிப்புணர்வு நிலைக்கு மனதை எடுத்து செல்வது ஆகும்.

மனம் ‘ஆம்’ என்று ஏற்றுக் கொள்ளும்படி செய்வதே ஞானத்தின் நோக்கம் ஆகும். நீங்கள் ஞானச் செய்தியினை கவனித்துக் கொண்டிருக்கும் போதே மனம் முதலில் ஆம் என்று ஏற்கும்.பிறகு மனம் விரிவடைந்து மௌனமாகும்.பின்னரே நீங்கள் "ஒ!ஆம் அது தான்" என்று கூறுகின்றீர்கள். அறிவின் பணி உங்களை ஆம் என்று கூற வைப்பது.

 
அறிவு ஏற்றுக்கொண்டு ஒய்வு எடுக்கும் போது விரிவடைந்த ஓர் விழிப்புணர்வு உங்களுள் எழுகின்றது. நீங்கள் உங்களது உண்மையான இருப்பு விழிப்புணர்வன்றி வேறில்லை என்பதை உணர்ந்து கொள்கின்றீர்கள். பின்னர் அந்த நிலையிலிருந்து மேலும் விரிவடைந்து சுயமே எங்கும் நிறைந்துள்ளது என்பதை உணருகின்றீர்கள்.அனைத்தும் சுயமே என்று உணருகின்றீர்கள்.ஆகவே, தனிப்பட்ட விழிப்புணர்வு நிலையிலிருந்து, "நான் இருக்கின்றேன்" என்னும் உணர்விலிருந்து விரிவடைந்த" அனைத்தும் இருக்கின்றன" என்னும் நிலைக்கு நகர்ந்து செல்கின்றீர்கள். இதுதான் ஞானத்தின் மூலம் விரிவடையும் நமது விழிப்புணர்வின் பொங்கி வழியும் ஓட்டம்.

குருதேவ், அத்வைதா ஞானவழியை பின்பற்றும் போது எவ்வாறு கடவுளரிடம் நமது நம்பிக்கையை காத்து வைத்துக் கொள்வது?

குருதேவ்: அத்வைதா என்பது அனைத்தும் ஒன்றாலேயே (ஒரே தெய்வம் அல்லது ஒரே உயர்வான விழிப்புணர்வு என்று  குறிக்கும்) ஆக்கப்பட்டு அதனாலேயே ஒளியூட்டப்படுவது என்பதை அறிவது ஆகும். பல்வேறு கடவுளர்களை மதித்து வழிபடுதல் என்பது, பல்வேறு வண்ணங்களையும் அலை வரிசைகளையும் கொண்ட ஒரே வெள்ளையான ஒளிக்கதிர் என்பதை புரிந்து வெளிப்படுத்துதல் போன்றது ஆகும். சூரியனின் ஒளிக்கதிர்கள் ஒரே விதமான ஒளியை உடையவைதாம். ஒரே மூலத்தினின்று எழுபவைதாம். ஆனால் ஒரு முப்பட்டைக் கண்ணாடி வழியாக கடந்து செல்லும் போது அல்லது ஒரு நீர்த்துளியின் வழியாகக் கடந்து செல்லும் போது பலவேறு நிறங்களை காட்டுகின்றது. இந்த நிறங்கள் போன்றதே பலவேறு கடவுளர்களும் என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
இதன் விளைவாக அடிப்படையான ஒற்றுமையை அறிந்து கொள்வீர்கள்.அதுதான் அறிவின் வேலை. அதனால் தான், நமது வேத நூல்களில் "இதுவும் உண்மை அதுவும் கூட உண்மை "  என்று கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு அறையிலுள்ள மரச் சாமான்களைக் காணும் போது அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டுள்ளன என்று கூறுகின்றோம். ஆயினும் ஒரே மரத்தால் செய்யப்பட்டிருந்தாலும் கதவு நாற்காலி அல்ல நாற்காலி ஜன்னல் அல்ல. இந்தப் புரிதல் தான் த்வைதா. அத்வைதாவும் த்வைதாவும் நல்ல இணக்கத்துடனேயே இருக்கின்றன.

குருதேவ், காசியைப் (தற்போது வாரணாசி) பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். ஒருவர் காசியில் உயிர் துறந்தால் அல்லது அவரது அஸ்தி சாம்பல், கங்கையில் கரைக்கப்பட்டால், அந்த ஆத்மா மோக்ஷம் அடையும் என்று கூறப்படுகின்றது. இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை?

குருதேவ்: அவ்வாறில்லை.வருணா மற்றும் ஆசி என்னும் இரண்டு நதிகள் சந்திக்கும் இடம் என்பது ஆகும். காசி உண்மையில் வெளியே எங்கும் இல்லை, நமது உள்ளேயே இருக்கின்றது.  ஆக்ஞசக்ரா (மனித உடலில் உள்ள ஆறாவது மனோதத்துவ மைய சக்தி) என்பது தான் ஈடா பிங்களா மற்றும்  சூக்ஷ்ம நாடிகளின் (மனித உடலிலுள்ள ஆற்றல் தடங்கள்) சந்திப்பு புள்ளி. ஒருவரது ப்ராணா சூக்ஷ்ம நாடியின் வழியாக செல்லும் போது ஒருவர் மோக்ஷம் அடைகின்றார். ஒவ்வொருவரும் காசிக்கு செல்வது உயர் துறந்து மோக்ஷம் அடைவதற்கு மட்டுமே என்று பொருள் புரிந்து கொள்ளக் கூடாது. காசி எங்குள்ளது? நெற்றியில் இரு புருவங்களுக்கிடையே ஆக்ஞசக்ரா என்னும் பகுதியில் அதாவது வருணா - (ஈடா நாடி) மற்றும் ஆசி (பிங்களா நாடி) சந்திப்பில் உள்ளது. ஒருவரது பிராணா மரண காலத்தில் இந்தப் பகுதியில் சீராக நிலை பெற்றிருந்தால் அவர் மோகஷம் அடைவார். இதைத்தான் முதுமொழிகள் உண்மையில் தெரிவிக்கின்றன.

காசி என்பதற்கு மற்றொரு பொருளும் உள்ளது. அறிவு நிரம்பி வழியும் இடம் என்பதும் அதன் பொருளாகும். பண்டைய காலத்தில் கல்வியும் அறிவும் செறிந்த இடமாக அது விளங்கியது. இந் நகரின் ஒவ்வொரு வீதியிலும் வேத நூல்களின் சாரத்தை விவாதித்துக் கொண்டும், விளக்கிக் கொண்டும் இருந்த அறிஞர்கள் வசித்து வந்தனர். அக்காலத்தில் மக்கள் கங்கை நதிக்கரையில் தற்போது நிகழ்வது போன்று சீட்டு விளையாடிகொண்டு இருக்கவில்லை. இப்போதிருப்பதை போன்று நதியும் அசுத்தமாக இருந்ததில்லை. மாமிச உணவு உட்கொள்ளுவது, பசுக்களை வதை செய்வது என்பதெல்லாம் அக்காலத்தில் இல்லை. அக்காலத்தில் காசி நகரத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அறிவுசெறிவு மற்றும் அறிவார்ந்த சொற்பொழிவுகள் ஆகியவை நிரம்பி புகழ் பெற்றதாக இருந்தது .கிளியும் மைனாவும் கூட அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடும் அளவுக்கு நகரம் அறிவுச் செறிவுள்ளதாக இருந்தது. எனவே இத்தகைய சூழலில் ஞானியர் அளிக்கும் அறிவார்ந்த  செய்திகளைக் கேட்டே ஒருவன் மோக்ஷம் அடையக்கூடும் என்னும் நிலை இருந்தது.

கடந்த மூன்று நான்கு நாட்களாக நீங்கள் அனைவரும் இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். உயர்ந்து மகிழ்ந்து உணரவில்லையா? இச்சூழல் மிகவும் வித்தியாசமாக உள்ளது.அனைவரும் மகிழ்ச்சியுடன் தியானம் செய்து சேவையில் ஈடுபட்டு வருகின்றீர்கள். எங்கெல்லாம் மக்கள் இவற்றை செய்து வருகின்றார்களோ அவையெல்லாம் ஞான மையங்கள் ஆகின்றன. எனவே தான் காசியைப் பற்றி இவ்வாறெல்லாம் கூறப் பட்டுள்ளது. ஆனால் வேறு இடங்களில் இறக்கும் மக்கள் மோக்ஷம் அடைய மாட்டார்கள் என்பது இல்லை. இங்கு கர்நாடகாவில் இறந்த பலர் கூட மோக்ஷம் அடைந்திருக்கின்றார்கள்.(சிரிப்பு)

காலம்காலமாக காசி முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகின்றது, ஏனெனில், அறிவார்ந்த ஞானியர் வாழ் மையமாக அது திகழ்ந்தது. நாடெங்கிலும் இருந்து அறிஞர்கள் காசிக்கு வந்து ஞானம் தேடி, விவாதங்களில் ஈடுபடுவார்கள். அதுவே அதன் புகழ். ஆனால் இன்று நகரில்  துரதிர்ஷ்டவசமாக 15 - 20 பேர் தாம் அத்தகையோர் உள்ளனர். இதை காணும் போது மிகுந்த எனக்கு மிக வருத்தமாக உள்ளது. நான் சிறுவனாக இருந்த போது, புகழ் பெற்ற பல அறிஞர்கள் காசியில் இருந்தது எனக்கு நினைவுள்ளது. இன்று மிகச் சிலரே காணப்படுகின்றனர்.

குருதேவ், நம் நாட்டில் 33000 இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் இடங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் பசுக்கள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. பசுக்களை காத்துப் பராமரிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வழி காட்டுங்கள்.

குருதேவ்: பசுக்களைக் காப்பது நமது புனிதமான கடமை ஆகும். நானும் இதை பற்றி மிகுந்த கவலை கொண்டுள்ளேன். நம் நாட்டின் பாரம்பர்யத்தையும் பண்பாட்டினையும் காக்க விரும்பினால் பசுக்களை காக்க நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டியது தேவையாகின்றது. நீங்கள் கிராமங்களுக்கு சென்று உள்நாட்டுப் பசுக்களை காப்பதன் அவசியத்தைப் பற்றி அறிவுறுத்துங்கள். பால் தராவிடினும் பசுவின் சிறுநீர் வயல்களில் பயிர்களுக்குப் பயன்படும். விவசாயிகள் பசுவின் சிறுநீரை உரமாக பயன்படுத்த கற்பிக்கப்பட வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்திற்கு உரமாக ஒரு பசுவே போதுமானது. செயற்கையான ரசாயன உரங்களை வாங்குவதை நிறுத்துமாறு விவசாயிகளைக் நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். இத்தகைய உரங்கள் வாங்கும் பணத்தில் மூன்றில் ஒரு பகுதியினை மட்டுமே செலவு செய்தால், ஒரு பசுவினை வளர்க்க முடியும், அதன் மூலம் ஆரோக்கியமான பயிர்கள் விளையும் நிலத்தினையும் அடைய முடியும்.

காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு என்ன? ஐம்பது ஆண்டுகளாக நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து விட்டன. போர்தான் இதற்குத் தீர்வா? ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூட உண்மைக்காகப் போராடினார். காஷ்மீர் பிரச்சினை அகங்காரத்தின் விளைவா?

குருதேவ்: உலக வரலாற்றில் 288 ஆண்டுகள் மட்டுமே உலகம் அமைதியாக இருந்திருக்கின்றது. அதாவது 8% காலம் மட்டுமே. இவ்வாறு தான் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள். எப்போதுமே மோதல்கள் இருந்து வந்திருக்கின்றன. இந்திய பாகிஸ்தான் பிரச்சினையில், மக்களோடு மக்கள் தொடர்பு மிகத் தேவையானது. அந்த வழியில் தான் முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தியாவுக்கு எதிராக செயல்பட பயிற்சியளிக்கப்பட்ட தீவிரவாதிகள் இப்போது அவர்களுக்கே எதிராகத் திரும்பி விட்டார்கள். இதை அவர்கள் புரிந்துணர வேண்டும். போர்த்தந்திரத்தை விடுத்து, தெற்காசியாவை வறுமையிலிருந்து விடுவிக்க வேண்டும். வறுமையை எதிர்த்துப் போராட வேண்டும், இந்தியாவை எதிர்த்து அல்ல. இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து வறுமையை ஒழிக்க செயல்பட வேண்டும்.  

இன்று கஷ்மீரிலுள்ளவர்களிடம் யாருக்கெல்லாம் பாகிஸ்தான் பகுதிக்குச் செல்ல விருப்பமோ அவர்களெல்லாம் செல்லலாம் என்று கூறினால் யாரும் போக மாட்டார்கள். பாகிஸ்தான் பகுதி காஷ்மீர் மக்கள் மகிழ்வுடன் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தியக் காஷ்மீரிகளைக் காட்டிலும் பாகிஸ்தான் பகுதிக் காஷ்மீரிகள் வறுமையுடனேயே இருக்கின்றனர்.ஆசாத் காஷ்மீரிகள் மெத்தையையே கண்டிராதவர்கள். குளிரூட்டப்படும் வசதி உணவு மேஜைகள் நாற்காலிகள் இவற்றை அறியாதவர்கள்.மிக வறிய நிலையிலேயே உள்ளனர். இங்குள்ள மக்களை காணும்போது உண்மையில் எத்துணை வேறுபட்டிருக்கின்றனர் என்பதை அறிகின்றார்கள்.