ஆசைகளின் வட்டம்

செவ்வாய்க்கிழமை, 14 அக்டோபர், 2014 

க்விபெக், கனடா


(நம்பிக்கையின் மூலம் வலிமை பெறுதல் என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி)

கேள்வி – பதில்கள்

ஆசைகளை வெல்வது எப்படி ?

குருதேவர்: இதுவும் ஒரு ஆசை தான். “ஒரு ஆசை நிறைவேறிய பின்பு அந்த ஆசை தோன்றிய இடத்துக்கே அழைத்துச் செல்கிறது“ என்பதைத் தெரிந்து கொள். ஆசை தோன்றுவதற்கு முன் இருந்த மன நிலையைக் கற்பனை செய்து பார். ஆசை தோன்றி அது நிறைவேறிய பின்பு அந்த வட்டத்துக்குள் சுழன்று நீ ஆசை தோன்றிய இடத்துக்கே செல்கிறாய்.

தினசரி வாழ்க்கையிலும், துக்கமான சமயங்களிலும் இறைவனுடன் தொடர்பை நிலை நிறுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் ?

குருதேவர்: இறைவனுடன் தொடர்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பமே, நீ மீண்டும் மீண்டும் இறைவனோடு இணைந்திருப்பதை காட்டுகிறது. இதை நீ ஒரு வழக்கமாக்கி கொள். நீ தூங்கி எழுந்தவுடன் இறைவனோடு இணைந்திருப்பதை உணரலாம். தூங்கப் போவதற்கு முன்பு உனக்கு அன்று கிடைத்த எல்லாவற்றுக்காகவும் இறைவனுக்கு நன்றி சொல். இதை வாய் விட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உனக்குக் கிடைக்கும் எல்லாமே இறைவன் தந்தது என்பதை உணர்ந்து இயல்போடு இரு. இறைமை என்பது மிகவும் எளிய விழிப்புணர்வாகும். இறைத்தன்மை நம்முடைய இயல்பான குணமாகும். எந்த நேரத்தில் நீ மிகவும் ஓய்வாக வீட்டில் இருப்பது போல் உணர்கிறாயோ அப்போது இறைவனோடு இணைந்திருக்கிறாய் என்பதை அறிந்து கொள்.

இதற்கு மிகவும் தேவையானது முழுமையான திருப்தி. எப்போது முழு மனதோடு திருப்தி அடைகிறாயோ, அப்போது இறைவனோடு இருக்கிறாய் என்று அர்த்தம். தற்சமயத்தில் வாழ்வது முழுமையான திருப்தி என்பதை தெரிந்து கொள். தற்சமயம் முழுமையான திருப்தியைக் கொடுக்கும். நாளை என்றால் ஆசை, திட்டமிடுவது, மேலும் மேலும் தேவைகளைப் பற்றி சிந்திப்பது. எனவே தற்சமயத்தில் முழு திருப்தியோடு சாந்தமாக இரு. நீ முழு திருப்தியும், முழுமையான அமைதியும் அடையும் நேரங்களை அதிகமாக்கிக் கொள்வது உன்னைப் பொறுத்திருக்கிறது. சில சமயம் எந்த வித முயற்சியுமில்லாமல் உன்னால் அப்படி இருக்க முடிகிறது. அதனால் தான் பழங்கால ஞானிகள், அவர்களுக்குக் கிடைத்த அனைத்தையும் இறைவனின் பரிசாக நினைப்பதாகச் சொன்னார்கள்.

“கர்வா சௌத் “ பண்டிகையின் முக்கியத்துவம் என்ன? அதற்கு பின்னால் உள்ள கதை என்ன ? திருமணமான பெண்கள் மட்டும் தான் அதைக் கொண்டாட வேண்டுமா? அன்றைய தினம் தியானம் செய்வது நல்லதா ?

குருதேவர்: இந்தியாவில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை இருப்பது போல ஒவ்வொரு வாரமும் ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கர்வாசௌத் அன்று திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். அதைப் பற்றி பல கதைகள் உண்டு. அந்த கதைகளைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அந்தக் காலத்தில் பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருந்ததாகத் தெரிய வருகிறது. சூரியனைப் பார்த்து இன்று நீ மறைய வேண்டாம் என்று சொன்னால் சூரியன் அன்று மறையாமல் இருந்ததாக சொல்கிறார்கள். பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள். இப்படி பல கதைகள் உள்ளன. கதைகள் பலரை ஊக்குவிப்பதற்காக சொல்லப் பட்டன. ஒரு பெரிய நல்ல காரியத்துக்காக சொல்லப்பட்டன. எனவே கர்வா சௌத் என்பது இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு இன்றியமையாத பண்டிகையாகும்.

உணவு உண்ணுவதைத் தவிர்த்து உபவாசம் இருப்பதும், பிரார்த்தனை செய்வதும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை. இது எல்லா மதங்களிலும் வழக்கத்தில் உள்ளது. உலகின் எல்லா பழைய கலாசாரங்களிலும், உண்ணா விரதமும் பிரார்த்தனையும் இணைந்திருப்பதை காண முடிகிறது. உண்ணாவிரதம் இருந்து நீ எந்தக் கடவுளையும் திருப்தி செய்யத் தேவையில்லை. உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்ற விரதம் உதவுகிறது. உடலிலிருந்து நச்சுப் பொருட்கள் வெளியானவுடன் நம் சிந்தனை ஆக்க பூர்வமான விஷயங்களில் ஈடுபடும். நம் உடலில் நச்சுப் பொருட்கள் அதிகமிருந்தால், நம் கணையத்தில், கல்லீரல் மற்றும் குடலில் நச்சு பரவியிருந்தால், நம் சிந்தனை தெளிவில்லாமல், குழப்பமாகவும் எதிர்மறையாகவும் இருக்கும். எனவே பண்டிகை நாள்களில் உண்ணா விரதத்தைக் கடைப்பிடித்து உடலையும் மனதையும் தூய்மைப்படுத்திக் கொள்வது வழக்கத்தில் இருந்தது. கடவுளைத் திருப்திப் படுத்துவதற்காக அல்ல.
விரதமிருக்க சில விதிகள் உண்டு. ஆனால் மக்கள் இதை முறையாக பின்பற்றுவதில்லை. விரதத்தின் போது மக்கள் சில பொருட்களைத் தவிர்த்து மாற்று பொருட்களை உண்ணலாம் என்று நினைக்கிறார்கள். வழக்கமான உணவைத் தவிர்த்து பழங்கள், உலர் பழங்கள், கொட்டைகளை உண்ணலாம் என்றூ நம்புகிறார்கள். இது தவறு. இது விரதமாகாது.

சிலர் விரதத்தின் போது இனிப்பு மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கு மட்டும் உண்கிறார்கள். இது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வது. சிலர் நாள் முழுதும் ஒன்றும் உண்ணாமல் அடுத்த நாள் சூரியன் உதிப்பதற்கு முன்பே வயிறு நிறைய உண்பார்கள். நாள் முழுதும் உண்ணாமல் சூரியன் மறைந்த பின் வயிறு நிறைய உண்பார்கள். இது மிகவும் தவறான விரத முறையாகும். விரதம் விஞ்ஞான பூர்வமாக இருக்க வேண்டும். விரதத்தின் போது பழச்சாறுகள், மற்றும் பழங்கள் மட்டும் உண்டால், உடலில் சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். முன்பு உண்டு ஜீரணமாகாமல் குடலில் இருக்கும் உணவுப் பொருட்கள் நன்றாக ஜீரணமாகும். நாள் முழுதும் உண்ணாமல் பின் இரவு நேரத்தில் உண்பது உடலுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும். ஏனென்றால் உணவை ஜீரணிக்கத் தேவையான பொருட்களை சுரக்கும் சுரப்பிகள் இரவு நேரத்தில் வேலை செய்வதில்லை. நேரம் கழித்து உண்பவை ஜீரணமாகாது. எனவே அந்தப் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். பல மக்கள் விஞ்ஞான விதிகளுக்கு எதிராக விரதமிருக்கிறார்கள். விரதத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் எல்லா மதத்தினருமே (யூதர்கள், கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், இந்துக்கள்) தவறான முறையில் விரதமிருக்கிறார்கள். எல்லா விதமான கலாசாரங்களை பின்பற்றும் மக்களும் விஞ்ஞான முறையோடு விரதம் இருக்க வேண்டும்.

ஆயுர்வேதத்தில் விரத முறைகளைப் பற்றிக் குறிப்பு இருக்கிறது. சில பழங்கள், பழச்சாறுகள், நீர், எலுமிச்சைச் சாறு இவைகளை மட்டுமே உண்ணா விரதத்தின் போது உண்ணலாம். உங்களால் முடியுமென்றால் ஓரிரண்டு நாட்கள் நீர் மட்டும் அருந்தி உண்ணா விரதமிருக்கலாம். இதைப் பற்றிய விவரங்களை மக்களிடையே பரப்ப வேண்டும்.

ரம்சான் மாதத்தில் பகல் முழுதும் உணவு எடுக்காததால் உடலில் பித்தம் அதிகரிக்கும்.மாலையில் அதிக அளவில் உண்கிறார்கள். இது தவறு. மாலையில் எளிதில் ஜீரணமாகும் பச்சைக் காய்கறிகள், பழங்களை மட்டும் உண்ண வேண்டும். ஜீரண உறுப்புகளுக்கு இரவில் ஓய்வு கொடுக்க வேண்டும். நவராத்திரியின் போது விரதமிருக்கும் இந்துக்களில் சிலர் ஜிலேபி உண்கிறார்கள். இனிப்புகளையும் உண்கிறார்கள். வேக வைத்த உருளைக்கிழங்கை (ஸ்டார்ச்) உண்கிறார்கள். அது தவறு. பழம் மற்றும் பழச் சாறு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் வாழும் கலையில் இருந்து கொண்டு இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதில் முரண்பாடுகள் இருப்பதாக உணர்கிறேன். விசேஷமாக “சிவ” அல்லது “ராம்” மந்திரங்களை உச்சரிக்கும் போது அப்படி உணர்கிறேன். துரதிஷ்டவசமாக இஸ்லாமிய மதம் கெட்ட பெயரைப் பெற்றிருக்கிறது.

குருதேவர்: இஸ்லாமிய மதத்தின் சரித்திரத்தை நீ அறிய வேண்டும். அது எப்படித் தோன்றியது ? அந்த சமயத்தில் அதன் போதனைகளில் என்ன எழுதியிருந்தது? காலப்போக்கில் அதில் எப்படிப் பட்ட மாற்றங்கள் வந்தன என்பதை நீ அறிய வேண்டும். அப்போது என்ன சொல்லப்பட்டது? எதற்காக சொல்லப்பட்டது? தற்காலத்தில் அதில் எதை கடைப்பிடிக்க முடியும்? எதை கடைப் பிடிக்க முடியாது? அந்த காலத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிக அதிகமாக இருந்தது. அதனால் ஒரு ஆண் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதித்தார்கள். இப்போது அதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே போல், ஒரு சமயம் முகமது நபி கம்பியுள்ள இசைக் கருவிகளை தூக்கி எறியச் சொன்னார். இசைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்று எந்த நாட்டில் இசைக்குத் தடை விதித்திருக்கிறார்கள் என்று சொல். இஸ்லாமிய நாடுகளில் இசைக்குத் தடை விதிக்கப்படவில்லை. ஆனால் சில தீவிர வாத இஸ்லாமியர்கள் “ இசை மற்றும் நடனத்தில் ஈடுபடுவது இஸ்லாமிய மதத்துக்கு எதிரானது. எனவே இஸ்லாமியர்கள் இசை, நடனத்தில் ஈடுபடக் கூடாது” என்று சொல்கிறார்கள்.

இரண்டாவதாக, இஸ்லாம் மதப்படி மனிதர்களின் முகத்தை புகைப்படம் எடுக்கக் கூடாது. இப்படி செய்வது மதத் துரோகமாக கருதப்படுகிறது. நீ சொல் புகைப்படம் எடுக்காமல் பாஸ்போர்ட் எப்படிக் கிடைக்கும்? அது நடக்கவே நடக்காது. என்னை பஹ்ரைன் நாட்டுக்கு அழைத்திருந்தார்கள். பஹ்ரைன் மன்னர் அவருடைய அரண்மனையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக என்னை அழைத்திருந்தார். அங்கு பல இஸ்லாமிய தலைவர்களுடன் உரையாடும் போது, அவர்கள் மதப்படி ஹஜ் யாத்திரையின் போது காபாவை (கறுப்புக் கல்) புகைப்படம் எடுப்பது மறுக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். இன்று பலர் தங்கள் கைபேசியில் உள்ள கேமராவின் மூலம் படம் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் காபாவின் புனிதக் கல்லை மட்டுமல்லாமல் தங்களையும் சேர்த்து செல்ஃபி படம் பிடித்துக் கொள்கிறார்கள்.

அதனால் தான் இஸ்லாமியக் கட்டடங்களில், மசூதிகளில் மனித முகமுள்ள சிலைகளையோ, ஓவியங்களையோ காண முடியாது. ஆனால் தற்காலத்தில் அப்படி இருக்க முடியுமா? சில இமாம்கள் தொலைக் காட்சிப் பெட்டிகளுக்கு எதிராக (டெலிவிஷன்) ஃபட்வா விதித்திருக்கிறார்கள். அவர்கள் மக்களிடம் சாத்தான் டெலிவிஷன் பெட்டிக்குள் புகுந்திருப்பதாக சொல்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் 5000 வீடுகளிலிருந்தவர்களை தங்கள் டெலிவிஷன் பெட்டிகளை ஒரு பொது இடத்துக்குக் கொண்டு வந்து குழி தோண்டிப் புதைக்கச் சொன்னார்கள். கல்லை விட்டெறிந்து அதற்குள் புகுந்திருந்த சாத்தானை விரட்டச் சொன்னார்கள். ஏனென்றால் மனித முகத்தைப் பார்ப்பது இஸ்லாமிய மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது.

எனவே இன்றைய காலகட்டத்தில் இஸ்லாம் என்ன நிலையில் இருக்கிறது? இஸ்லாம் மதத்தின் நோக்கம் என்னவாக இருந்தது? இரண்டுக்கும் இடையில் இருக்கும் தூரம் அதிகமாகி விட்டது.
இஸ்லாமிய மதக் கொள்கைப்படி, இஸ்லாமிய மதத்தைச் சேராதவர்கள், அல்லாவை நம்பாதவர்கள் உயிரோடு இருக்க உரிமையற்றவர்கள் என்று சொல்கிறார்கள். அதனால் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிர வாதிகள் இஸ்லாம் மதத்தைத் சேராதவர்களை கொன்று குவிப்பதில் ஈடுபடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களில் ஒரு பிரிவான சூஃபி இனத்தை சேர்ந்த புனிதர்களும் கெட்டவர்கள். ஏனென்றால் அவர்கள் இசையை விரும்புகிறார்கள். மந்திரங்களை ஜபிக்கிறார்கள். ஒரு சூஃபி புனிதர் இறந்த பின் அவர் உடல் அடக்கம் செய்த இடத்தில் சமாதி கோயில் கட்டுவது இஸ்லாமிய மதத்துக்கு எதிரான செயலாகக் கருதுகிறார்கள். முகமது நபியின் சமாதியையும் அவ்வாறே அழித்து விட்டார்கள். ஏனென்றால் இஸ்லாமிய மதப் படி சமாதி கோயில் கட்டக் கூடாது. எனவே ஷியா பிரிவினரையும் தங்கள் மதத்தில் சேர்ப்பதில்லை. ஏனென்றால் ஷியா பிரிவினர் சமாதி கோயில் கட்டி வழிபடுவதை நம்புகிறார்கள். சமாதி கோயில்களை கௌரவிக்கிறார்கள்.

எனவே இப்படிப் பட்ட கருத்து வேறுபாடுகளால், இஸ்லாமிய மதத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. இஸ்லாமிய மதச் சட்டப்படி திருடுபவர்களின் கைகளை வெட்டி விட வேண்டும். ஒரு குழந்தை ஒரு பொருளை திருடிவிட்டால், கைகளை வெட்டுவதை கற்பனையில் பாருங்கள். திருடுபவரின் கைகளை வெட்டுவது சரியாகுமா? ஒரு குழந்தையின் கைகளை வெட்டலாமா? இசையை அனுமதிக்கக் கூடாது. புகைப்படம் எடுக்கக் கூடாது. இப்படி சட்டங்களை இன்றைய காலகட்டத்தில் பின்பற்ற முடியுமா? எத்தனையோ விதமான மக்கள் இவ்வுலகில் வாழ்கிறார்கள். எல்லோரையும் அனுசரித்து வாழ வேண்டும். தீவிரவாத இஸ்லாமியரின் கொள்கைகளால் மற்ற எல்லா இனத்தவர்களோடும் முரண்பாடுகள் / பிரச்சினைகள் உருவாகின்றன. இஸ்லாமிய மதப்படி மற்றொரு கருத்து இருக்கிறது.நாம் பல்வேறு வகையான இனத்தவர்களை உருவாக்கியிருக்கிறோம். பல்வேறு வகையான ஞானம் உள்ளது. இவற்றையெல்லாம் நாம் கௌரவிக்க வேண்டும். மதிக்க வேண்டும். இது முகமது நபியால் சொல்லப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில் ஒரு ஆசிரியர் வாழும் கலைப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். சுதர்சன கிரியா பயிற்சிக்கு முன்பு நாம் “ஓம்” மந்திரத்தை மூன்று முறை சொல்கிறோம். வகுப்பிலிருந்த ஒருவர் “ஓம்” என்று சொல்ல மறுத்தார். ஏனென்றால் அப்படிச் சொல்வது அவருடைய மதக் கொள்கைக்கு எதிரானது என்றார். ஆசிரியர் அவரைப் பார்த்து,“உன் மதம் அவ்வளவு வலுவிழந்ததா நீ “ஓம்” சொல்வதால் உன் மதத்தை விட்டு விலக்கப்படுவாயா? “ என்று கேட்டார். “ நான் அப்படி நினைக்கவில்லை. நான் “ஹாலுலூயா” என்றும் “அல்லா ஹூ அக்பர்” என்றும் அல்லது “புத்தம் சரணம் கச்சாமி” என்று சொன்னாலும் என் மதத்தைப் பின் பற்ற முடியும். என் மதத்துக்கு உரிய கௌரவத்தை நான் அளிக்கிறேன் “ என்று சொன்னார். இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த பயிற்சி பெற வந்தவருடைய கண்கள் திறந்தன. (அவர் ஆசிரியரின் சொற்களை ஏற்றுக் கொண்டார்) “ஓம்” என்று சொல்வதால் உனக்கு ஒரு நஷ்டமும் வராது. லாபமே கிடைக்கும்.

அதே போல் கிற்ஸ்த்மஸ் கரோல் பாடுவதால் நீ கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப் பட மாட்டாய். கிறிஸ்தவப் பாடலை நீ பாடுவதால் உன் கடவுள் உன் மேல் கோபமடைய மாட்டார். அதே போல் நீங்கள் பஜனை பாடுவதால் உங்கள் கடவுள் உங்களை தண்டிக்க மாட்டார். “சிவா” என்றால் என்ன எது மிக அழகாக இருக்கிறதோ, அன்பே உருவானதோ, நன்மை அளிக்கிறதோ அதை “சிவா” என்றழைக்கிறோம். “நாராயணா” என்றால் என்ன ? நம் நரம்பு மண்டலத்தில் உள்ள சக்தியை, படைப்பின் சக்தியை “நாராயணா” என்றழைக்கிறோம். ஜீவன்களில் ஒளி விடும் உயிர் சக்தியை “நாரயணா” என்று சொல்கிறோம். நரம்பு மண்டலம் (நர்வஸ் ஸிஸ்டம்) என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்த “நர” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. “நரர்” என்றால் மனிதர்கள் என்றும் அர்த்தமாகிறது.

இந்த அழகான, பிரமிப்பூட்டுகிற, ஆச்சரியமான நரம்பு மண்டலத்தில் குடியிருப்பவரை “நாராயணன்” என்று சொல்கிறோம். நரம்பு மண்டலமில்லாத மனிதனைக் கற்பனை செய்து பாருங்கள். அப்படிப் பட்ட மனிதன் உயிரோடு இருக்க முடியாது. நரம்பு மண்டலம் வேலை செய்வதால் மட்டுமே நீ உன்னை வெளிப்படுத்த முடிகிறது. இந்த பிரபஞ்சம் முழுவதிலும் இருக்கும் சக்தியையே (தன்னை உணர்ந்து வெளிப்படுத்திக் கொள்ளும் சக்தியையே) “நாராயணன்” என்று சொல்கிறோம். மற்ற மொழிகளில் பாடுவதோ, மற்ற கலாசாரங்களைப் பின்பற்றிப் பாடுவதோ, எந்த இனத்தவரின் கடவுளுக்கும் எதிரானது அல்ல. அப்படி நினைப்பது தவறாகும். ஆனால் தீவிர மதவாதிகள் அவ்வாறு நினைக்கிறார்கள். மற்றவர்களுக்கும் அவ்வாறே பயிற்சி அளிக்கிறார்கள். நீ மற்ற மதத்தினரின் கடவுள்களின் பெயரைச் சொல்வதால் உன் மதத்துக்கு துரோகம் செய்வதாக நம்ப வைக்கிறார்கள்.

இன்று இந்த இடத்துக்கு வருவதற்கு முன் ஈராக்கில் நடந்த தற்கொலை கார் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தைப் பற்றி செய்தித்தாளில் படித்தேன். மக்கள் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட மனித வெடிகுண்டு (தற்கொலைப் படை) வெடிக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. பலர் உயிரிழக்கிறார்கள். அமைதியின் பெயரால் பல வன்முறைச் சம்பவங்கள் பாகிஸ்தானில் நிகழ்கின்றன.

இஸ்லாம் என்றால் அமைதி என்று அர்த்தம். ஆனால் இன்று இஸ்லாம் என்ற பெயரில் மிக அதிகமாக, கற்பனை செய்ய முடியாத வன்முறைச் செயல்கள் நடைபெறுகின்றன.

ஈராக்கில் யஸ்டி இனத்தவர்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக தங்கள் கலாசாரத்தைப் பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். தற்சமயம் அவர்கள் பல கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள். பெரிய அளவில் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் அல்லாவுக்கு எதிரானவர்கள் என்று பிரசாரம் செய்யப் படுகிறது. அது உண்மை என்றால் எல்லாம் வல்ல அல்லா அவர்களை ஏதாவது செய்திருப்பார். (இத்தனை ஆண்டுகள் வாழ விட்டிருக்க மாட்டார்) அவர்களை டினாசௌர் என்ற மிருக வர்க்கத்தை அழித்தது போல் அழித்திருப்பார். கடவுளுக்காக நாம் அந்தக் காரியத்தை செய்யத் தேவையில்லை. கடவுளை அவருடைய வேலையை செய்யவிடுவோம். நம் வேலையை செய்வோம்.மதத்தின் பெயரால் இவ்வளவு வன்முறைகள்  நடைபெறுவது மிகவும் துரதிஷ்டவசமாகும். எனவே மதங்களுக்கிடையே  உள்ள தடுப்பு சுவர்களை உடைக்க வேண்டும்.

இஸ்லாமிய மதத்தில் பல சிறந்த விஷயங்கள் உள்ளன. உதாரணத்துக்கு எல்லோரும் சமம் என்று நம்புவது. எல்லோரும் இணைந்து பிரார்த்தனை செய்வது. – பிரார்த்தனையில் எல்லா மக்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த சிறந்த விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, பிரிவினை வாதம், வன்முறை, பல்வேறு இனங்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகள் முதலிய விஷயங்களைக் கைவிட வேண்டும். என் மதம் உயர்ந்தது,மற்ற மதங்கள் தாழ்ந்தவை என்ற கருத்து சரியானதல்ல. நான் சொல்கிறேன். இஸ்லாமியர்களில் பல ஞானிகள் உள்ளனர். இந்த பூமியில் பல நல்ல இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். சில தீவிர மதவாதிகளால், வன்முறையாளர்களால் இஸ்லாமிய மதத்துக்கு மிகவும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இது துரதிஷ்டவசமானது.

முகமது நபியின் மனைவி பாத்திமா என்றும் புர்கா அணிந்ததில்லை. ஹிஜாப் என்ற உடையையும் அணிந்ததில்லை. அவருக்கு எல்லா விதமான (ஆண்களுக்குச் சமமாய்) அதிகாரங்களும் கொடுக்கப் பட்டது. பிற்காலத்தில் பெண்களுக்கிருந்த அதிகாரம் (உரிமைகள்) ஆண்களால் பறிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். தற்காலத்தில் பெண்களை அடிமையாக நடத்தக் கூடாது.