வியாழக்கிழமை, அக்டோபர் 13 , 2014,
குபெக், கனடா
குருதேவ்,
நான் வாழ்க்கை துணையை எவ்வாறு தேடுவது?எல்லா வழிகளிலும் தேடிவிட்டேன் ஆனால் அதிர்ஷ்டம்
இல்லை. எவ்வாறு வித்தியாசமாகத் தேடுவது?
குருதேவ்: நான் இதில் வல்லுநர் அல்ல. இக்கேள்வியை நீங்கள், பல உறவுகளைக் கொண்டு பின்னர் வெற்றிகரமாக
ஒருவருடன் வாழும் நபரை கேட்க வேண்டும். அவர்,
உங்களுக்கு சிறந்த அறிவுரையைக் கூற முடியும். ஆனால் ஒரு விஷயம் என்னால் கூற முடியும். துணையை தேடி கொண்டிருந்தால், அவரது வாழ்க்கையில் நீங்கள்
பங்குகொள்ள வேண்டும். நீங்கள் வாழ்க்கை துணையிடம் இருந்து ஏதேனும் அடைய வேண்டும்
என்றும், உங்கள் துணை உங்களிடமிருந்து ஏதேனும் அடைய வேண்டும் என்றும் விரும்பினால்
அந்த "அடைய விரும்பும்" உணர்வானது உங்கள் இருவரையும் பிரித்து விடும்.
ஆனால் உங்களது முழு நோக்கமும் ஒருவருக்கொருவர்
ஆதரவு, வழிகாட்டுதல்,மற்றும் பங்களிப்பு
என்று இருந்தால், அத்தகைய உறவு எப்போதும் நீடிக்கும்.
ஞானம்
என்பது என்ன? சாதாரண மனிதன், ஒரு ஞானியை எவ்வாறு கண்டு பிடிப்பது?
குருதேவ்: அதை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. உணர்ந்தறிய வேண்டும். அன்பை நீங்கள் விவரிக்க முடியாது.
அன்பு என்பது உடலில் சுரக்கும் என்ட்றோபின்
அல்லது ஒக்சிடோசின் என்று விவரிக்க முடியாது,
உங்கள் இதயம் அதை உணர வேண்டும். வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அது ஒவ்வொருவரிடமும் உள்ளது.
இயல்பாக ஒவ்வொருவரிடமும் சிறிதும் மறைக்கப் படாமல் இருப்பிலேயே ஏற்படுத்தப் பட்ட ஒன்று
ஆகும்.
நான் பாலியல்
ஆசைகளை எவ்வாறு தடுப்பது ?
குருதேவ்: உயர்ந்த
நிறைவின் மூலம்.எவ்வாறெனில், குழந்தைகள் பஞ்சு மிட்டாய், சாக்கலேட்டுகள் இவற்றுக்கு
ஆசைப்படுகின்றன. ஆனால் வளர்ந்த பின்னர் அவர்களுக்கு அத்தகைய விருப்பங்கள் இருப்பதில்லை.
அது போன்று பிராணாயமம் போன்றவையும், வாழ்வில் உயர்ந்த இலக்குகளும் இதற்கு உதவும். அதிக பணிகள் இருக்கும் போது பாலியல் உணர்வுகள் ஒரு பிரச்சினையாக
எழாது. தேர்வு நேரத்தில் பாலியல் எண்ணங்கள்
தோன்றுகின்றனவா என்று ஒரு மாணவனை கேளுங்கள். இல்லை என்றே கூறுவான். தேர்வு
நடக்கும் அந்த மாதம் முழுவதும், அவன் மனம் வெற்றி பெற வேண்டும் என்னும் இலக்குடன் அதிலேயே
ஆழ்ந்திருக்கும். ஒரு நொடி கூட வேறு சிந்தனை ஏற்படாது. புத்தகங்களிலேயே மூழ்கியிருப்பான்.
எனவே ஆக்க பூர்வமான ஏதாவது பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
இன்பம் முதலில் உங்களை அதை நோக்கி ஓடச் செய்யும், பின்னர் அதை விட்டு ஓடச் செய்யும்.
இதுதான் அதன் இயல்பு.முதலில் ஆசையுடன் அதை நோக்கிச் செல்வீர்கள், பின்னர் அதை விட்டு
விலகி ஓட விரும்புவீர்கள், ஏனெனில் அதைச் சமாளிக்க முடியாது. யோகா தான் உங்களை நடு நிலையில்
வைத்து நிலைநிறுத்தும்.நீங்கள் நிலையாக, மையத்தில் இருந்தால் இன்பம் கிடைத்தால் அனுபவிப்பீர்கள்,
இல்லையெனில் கவலைப்பட மாட்டீர்கள் ஏனெனில் அது உங்கள் மனதை ஆக்கிரமிப்பதில்லை.. ஏக்கம் உங்களைத் துன்புறுத்துவதில்லை.
எவ்வாறு
பொய் சொல்லுவதை நிறுத்தி என் பெற்றோருடன் திறந்த மனதுடன் இருப்பது?
குருதேவ்: நீங்கள்
ஏற்கனவே பொய் கூறுவதில் களைப்படைந்து விட்டீர்கள். அதனால் தான் அதை நிறுத்தவேண்டும் என்று விரும்புகின்றீர்கள். நல்லது. சரியான வழியில்
வந்து விட்டர்கள். ஒரு காலகட்டத்தில், கடவுளே! இதை இனி என்னால் சமாளிக்க முடியாது" என்னும் நிலை ஏற்படும், ஏனெனில் அதிக அளவில் பொய் கூறி முன்பு என்ன கூறினீர்கள்
என்பதே உங்களுக்கு மறந்து போகும் நிலை ஏற்படும். உண்மை என்பது விடுதலையும் ஆறுதலும் அளிக்கக் கூடியது ஆகும். எப்போதும்
எல்லோரிடமும் உண்மையைக் கூற முடியாது. அறிவும் பாகுபடுத்தும் திறனும் தேவை. உலகின் சில
பகுதிகளில் மக்கள் "நான் உண்மையுடன் இருக்க வேண்டும், அனைத்தையும் கூறி விட வேண்டும்" என்னும் உணர்வுடன் வாழ்கின்றார்கள். ஆயினும் உங்களது கருத்துக்கள் எவ்வளவு தூரம்
உண்மையானவை என்பது தெரியாது.
இங்கு கனடா ஆஸ்ரமத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகக் கூறுகின்றேன்.
ஒரு முதிய தம்பதி தங்கள் மகளுடன் இங்கு வந்திருந்தார்கள். அந்த மகள் பல தொலைகாட்சி
நிகழ்ச்சிகளைப் பார்த்தவள். அந்த நிகழ்ச்சிகள் ஒன்றில், ஒரு குழந்தை "என் தந்தை
என்னை இங்கே தொட்டார், என் தாய் இதைச் செய்தாள்" என்றெல்லாம் கூறியிருக்கின்றது. திடீரென்று இப்பெண்ணுக்கு தன்னுடைய தந்தையும் தனது இரண்டாவது வயதில் தன்னைத் தவறாகத்
தொட்டு அணுகியதாக எண்ணம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெற்றோர் மனம் உடைந்து உண்மையில் தந்தைக்கு
தற்கொலை செய்து கொள்ளும் அளவு மனத்துயர் ஏற்பட்டது. ஆனால் அப்பெண்ணோ "நீங்கள்
இவ்வாறு செய்யவில்லை என்று நிரூபித்துக் காட்டுங்கள்" என்று கூறிக்கொண்டு இருக்கின்றாள். பெற்றோர் அழுது கொண்டே என்னிடம் வந்தனர். அத்தந்தை "என்னால்
இவ்வாறெல்லாம் நினைக்கக் கூட முடியுமா" என்று கதறினார்.
இவ்வாறு பலரிடம் நிகழ்கின்றது. நமது நினைவில் சிலவற்றை திணித்துக்
கொண்டு நமக்கு அவை நிகழ்ந்து விட்டதாகவே எண்ணுகின்றோம். பாதிக்கப்பட்டவராகவே கருதி கொள்கின்றீர்கள்.அவ்வாறு பாதிக்கப்பட்டவராக இருப்பது ஒரு மகிமை என்றும் நினைத்து கொள்கின்றீர்கள். ஏனெனில் அத்தகையோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போற்றப்படுகின்றனர்.
இந்த தம்பதியின் மகளான அந்த இளம் பெண்ணும் அவ்வாறே தன்னுடைய மனதில் ஒரு கற்பனை எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றாள். இது உண்மையாக வே நிகழ்ந்திருந்து ஒரு குழந்தை அதை நினைவில் வைத்துக்கொண்டிருந்தால் அது வேறு விஷயம். ஆனால் அவ்வாறு கற்பனை செய்து கொள்வது அதுவும் இரண்டு வயதில் நிகழ்ந்ததை என்பது எவ்வாறு
சரியாகும்? ஆறு அல்லது ஏழு வயதில் அவ்வாறு நிகழ்ந்ததை நினைவு கொள்வது என்றாலும் சரி. மகிழ்ச்சியான ஒரு குடும்பம் இவ்வாறு துன்புற்று சிதைவது வேதனையான
ஒரு விஷயம். நமது கருத்துக்கள் பல சமயங்களில் சரியானதாக இருக்காமல் போகலாம்.
அன்புள்ள
குருதேவ், பாட்டும் நடனமும் ஆற்றலை சமநிலைப்படுத்தும் வழிகள் ஆகும்.பாப், ஜாஸ் ராக் & ரோல் பாடல்களைக் கேட்பது தவறாகுமா?
குருதேவ்: இல்லை.
தவறு என்பதில்லை.ஆனால் அவை அதிக ஒலியை
ஏற்படுத்தக் கூடியவை. நரம்பு மண்டலத்திற்கு கடினமானவை. மேலும் அவை முதல் சக்கிரத்தை
ஊக்குவிக்க கூடியவை. ஆகையால் சந்தேகமின்றி செயலற்ற சோம்பல் நிலையிலிருந்து வெளிக்கொண்டு
வருகின்றது. ஆனால் நுட்பமான, சீரியதான நரம்பு
மண்டலம் உங்களுக்கு இருந்தால், இந்தப் பாடல்களின் ஒலி நாராசமாக இருக்கக் கூடும். எவ்வாறு மேன்மையான கணினிக்கு, குளிரூட்டப்பட்ட தரமான சூழல்
தேவையோ அது போன்று நமது நரம்பு மண்டலத்திற்கும் தேவை. அதிக அளவிலான ரஜசிக் அல்லது நாராசமான ஒலியை நரம்பு மண்டலத்தினால்
ஏற்றுக் கொள்ளமுடியாது. அதிக ஒலியுள்ள ராக் இசை நிகழ்ச்சியை ஒரு பத்து நிமிடங்கள்
நின்று ரசிக்கலாம், பின்னர் அங்கிருந்து சென்று விடலாம் என்று தோன்றும். வீட்டிற்கு
திரும்பி வந்ததும் உங்கள் உடல் முழுவதும் பதறும். இதை எத்தனை பேர் அனுபவித்து உணர்ந்திருக்கின்றீர்கள்?
(பலர் கை உயர்த்துகின்றனர்) எத்தனை பேர்
! நான் ராக் இசை நிகழ்ச்சிக்கே சென்றதில்லை. ஆயினும் நாம் எங்கிருந்தாலும் ஆடிக்கொண்டே
இருக்கின்றோம் !!