குழந்தையைப் போல் ஆனந்தமாக இருக்க வேண்டும்

12 அக்டோபர் 2014  
                                   
குபெக், கனடா


ஒவ்வொருவருக்கும் தேடுதல் இருக்கிறது. அதுதான் ஆனந்தம். மக்கள் ஆனந்தம் அடையாமல் இருப்பதில்லை.ஆனால் அந்த ஆனந்தம் நீடிப்பதில்லை,சில நேரம் மட்டுமே இருக்கிறது. ஓரிரண்டு மணி நேரம் அல்லது ஓரிரண்டு நாட்கள் ஆனந்தத்தை உணர்கிறார்கள். ஆத்மாவின் இயல்பு எப்போதும் நீடிக்கும் ஆனந்தமே. எப்போதும் கசப்பாக மாறுவதில்லை.

நான் உங்களுக்கு ஒரு கதை சொல்ல விரும்புகிறேன். ஒரு கனவான் தன் வீட்டின் எதிரே உள்ள சாலையில் காணாமல் போன வீட்டு சாவியைத் தேடிக் கொண்டிருந்தார். தெரு விளக்கின் கீழே அதைத் தேடிக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த சிலர் அவருக்கு உதவி செய்வதற்காக வந்து அவர்களும் காணாமல் போன சாவியைத் தேடினார்கள். அதில் ஒருவர்,கனவானைப் பார்த்து, “நீங்கள் சாவியைத் தொலைத்த இடம் எது?” என்று கேட்டார். அந்த கனவான் “ என் வீட்டுக்குள் சாவி தொலைந்து விட்டது“ என்று சொன்னார். கேள்வி கேட்டவர் “ பின் எதற்காக தெருவில் வந்து தேடுகிறீர்கள்?” என்று அந்த கனவானை பார்த்துக் கேட்டார்.

ஒவ்வொரு குழந்தையும் ஆனந்தத்தின் பூங்கொத்து போன்றது. ஆனால் வளர வளர அந்த ஆனந்தத்தை நாம் எங்கோ இழந்து விட்டோம்.“நாம் பிறந்த போது கொண்டு வந்த கள்ளம் கபடில்லாத ஆனந்தமான நிலையை திரும்பப் பெறுவது எப்படி?” என்பதே கேள்வியாகும். உலகில் ஒவ்வொரு மனிதருக்கும் ஏற்படுகிற அனுபவம் இது. நாம் அனைவரும் மனதின் ஆழ்நிலையில் அளவிட முடியாத ஆனந்தத்தை உடையவர்கள். ஆனால் அதை வெளிஉலகில் தேடுகிறோம்.

நாம் குழந்தைகளாக இருந்த போது என்ன செய்தோம் என்பதை நினைவில் கொண்டு வாருங்கள். சத்தம் போட்டு விளையாடி மகிழ்ச்சி அடைந்தோம். ஒவ்வொரு குழந்தையிடமும் இப்படிபட்ட ஆனந்த நிலை உள்ளது. ஆனால் வளர வளர அதை இழந்து விடுகிறோம். ஒரு குழந்தை ஒரு நாளில் 400 முறை சிரிக்கிறது. அக்குழந்தை வாலிபனாக/பருவப் பெண்ணாக வளர்ந்தவுடன் ஒரு நாளில் 17 முறை மட்டுமே சிரிக்கிறார்கள். நன்றாக வளர்ந்த ஒரு மனிதன் எப்போதாவது மட்டுமே சிரிக்கிறார். அதுவும் எதிரில் உள்ளவர் சிரிக்கும் போது மட்டுமே பதிலுக்கு சிரிக்கிறார். இந்த நிலையை எப்படி மாற்ற முடியும் என்பதே நம் கேள்வியாகும். நாம் பிறந்த போது இருந்த கள்ளமில்லாத நிலையை எப்படி திரும்ப பெறமுடியும்? நம் முகத்தில் புன்முறுவலோடு இருப்பது எப்படி? இது தான் ஒவ்வொருவரின் தேடுதலாகிறது.

ஒரு குழந்தையைப் போல் ஆனந்தமாக இருப்பதைத் தடுப்பவைகள் மூன்று விஷயங்களே.
·         இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற தப்பான முடிவு (ப்ரஜுடிஸ்)
·         பாதுகாப்பின்மை (இன்செக்யூரிடி)
·         மன அழுத்தம்.(ஸ்ட்ரெஸ்)

இந்த மூன்றைத் தவிர நான்காவதாக ஒன்றும் இல்லை என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு ஏதாவது கிடைத்தால் என்னிடம் சொல்லுங்கள். இப்போது நாம் இந்த மூன்று விஷயங்களையும் ஒழிக்க வேண்டும். மன அழுத்தத்தை நாம் மூச்சின் மூலம் (ப்ராணயாமம்) போக்கிக் கொள்ளலாம். பல வகையான மூச்சுப் பயிற்சிகள் மூலம் நாம் நன்றாக ஓய்வெடுத்து இழந்த சக்தியைப் பெற முடியும். மனஅழுத்தம் என்றால் என்ன என்று நீங்கள் கேட்கும் போது, எனக்குத் தெரியாது என்று சொல்வேன். ஆனால் மன அழுத்தமுள்ளவர்களை பார்க்கிறேன். அதை ஆராய்ந்து பார்க்கும்போது, அப்படிப்பட்டவர்கள் நிறைய செய்ய விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான சக்தியும் நேரமும் அவர்களிடம் இல்லை.

இப்போது நீ உன் தேவைகளை குறைத்துக் கொண்டு சக்தியை பெருக்கிக் கொள்ள வேண்டும். இதில் உன் தேவைகளைக் குறைத்துக் கொள்வது சாத்தியமில்லை. ஆனால் உன் சக்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். எனவே 15, 20 நிமிடங்களில் செய்யக் கூடிய மூச்சுப் பயிற்சிகள், ப்ராணயாமம், தியானம், யோக சாதனைகள் மூலம் நீ உன் சக்தியை அதிகரித்து கொள்ள முடியும். 6 லிருந்து 8 மணி நேரத் தூக்கத்தில் கிடைக்கும் சக்திக்குச் சமமாக 20 நிமிட மூச்சுப் பயிற்சியில் உனக்கு சக்தி கிடைக்கும். தூக்கத்தினால் உனக்குக் கிடைக்கும் ஓய்வு உன்னை மந்த நிலையில் வைக்கிறது. மற்றொரு வகையான ஓய்வு உன்னை விழிப்புணர்வில் வைக்கும். உன் சக்தி அதிகரிக்கும். அப்படிப்பட்ட ஓய்வை தியானம் அளிக்கிறது. 

தியானம் செய்வது என்றால் அமர்ந்து எதைப் பற்றியாவது சிந்திப்பது அல்ல. சிந்தனையின் ஊற்று வரை செல்வது தியானம். எனவே முதலாவதாக மன அழுத்தத்தைக் குறைத்து முற்றிலும் நீக்கி விடுவது தியானத்தின் பலனாகும்.

இரண்டாவதாக தப்பான முடிவுகளை மனதிலிருந்து நீக்க வேண்டும். நம்மிடம் பல வகையான தப்பான அபிப்பிராயங்கள் உள்ளன. தலை முறை இடைவெளி தப்பான அபிப்பிராயங்களைத் தோற்றுவிக்கிறது. இளைஞர்கள் முதியவர்களோடு அமர்ந்து தங்கள் பிரச்சினைகளை இதய பூர்வமாக பகிர்ந்து கொள்வதில்லை. தலைமுறை இடைவெளி உள்ளது. இது உலகம் முழுதும் உள்ள ஒரு பிரச்சினையாகும். தன் வயதொத்தவர்களிடம் மட்டுமே மக்கள் கலந்து பழகுகிறார்கள். தன்னை விட வயதானவர்களோடும், தன்னை விட வயதில் குறைந்தவர்களோடும் பழகுவதில்லை.

பணக்காரர் / ஏழை , உயர்ந்த ஜாதி / தாழ்ந்த ஜாதி, இவர்களிடையே தப்பான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ஆண் / பெண் இவர்களிடையேயும் தப்பான அபிப்பிராயம் வர வாய்ப்பு உண்டு. மதம், மொழி, கலாசார வேறுபாடுகளால் தப்பான எண்ணங்கள் மனதில் பதிந்திருக்கின்றன. இந்த தப்பான முடிவுகளிலிருந்து விடுபட்டு எல்லோரையும் தன்னைச் சேர்ந்தவர்கள் என்று நினைப்பதே அறிவாளிகளின் அடையாளமாகும். உலகில் வாழும் எல்லா மனிதர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற நம்பிக்கை மன அழுத்தத்தை விலக்கும்.

இப்படிப்பட்ட எண்ணம் மக்களிடையே இருக்கும் போது போர் நிகழ வாய்ப்பில்லை. குற்றங்கள் நிகழாது. இன்று உலகில் நாம் காணும் பல பிரச்சினைகள் தலை தூக்காது. பாருங்கள்! எவ்வளவு பேர்கள் வன்முறை மற்றும் போரால் உயிர் இழக்கிறார்கள். இதற்குக் காரணம் மக்களிடையே பரந்த மனப்பான்மை இல்லாமையும், அறிவின்மையுமே ஆகும்.

மூன்றாவது பாதுகாப்பின்மை. மக்கள் ஏன் பாதுகாப்பில்லாமல் இருப்பதாக உணர்கிறார்கள் ? என்னைக் காக்க யாரும் இல்லை என்று நினைக்கிறார்கள். என்னை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கவலைப் படுகிறார்கள்.

நான் சொல்வது இது தான். இவ்வுலகில் நிறைய அன்பும் கருணையும் உள்ளது. நமக்குத் தேவையானவற்றை, நமக்குத் தேவையான நேரத்தில் தருவதற்கு அன்பே உருவான மேலான சக்தி ஒன்று இருக்கிறது.

வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது, கடந்த காலத்தில் நீ எத்தனை முறை பாதுகாப்பில்லாமல் உணர்ந்திருக்கிறாய்? அந்தக் காலம் எப்படி கடந்து சென்றது என்பதை நினைத்துப் பார். இன்று அந்தப் பிரச்சினை இல்லாமல் எப்படி முழுமையாக உணர்கிறாய். கடந்து போன நிகழ்ச்சிகளை நினைக்கும் போது நீ அப்போது பாதுகாப்பில்லாமல் உணர்ந்ததில் ஒரு அர்த்தமுமில்லை. நீ கவலைப்பட்டு வீணாக உன் நேரத்தை விரயம் செய்திருக்கிறாய் என்று புரிந்து கொள்வாய். இல்லையா? கடந்த 20 ஆண்டுகளில் பாதுகாப்பில்லாமல் உணர்ந்து எவ்வளவு நேரத்தை விரயம் செய்திருக்கிறாய் என்று எண்ணிப் பார். எத்தனை முறைகள் அப்படி நேர்ந்திருக்கிறது? எத்தனை நாட்களை ஒன்றும் செய்யாமல் வீணடித்திருக்கிறாய்? எவ்வளவு நேரத்தையும் சக்தியையும் இழந்திருக்கிறாய்? அது மட்டுமல்ல. (கவலையால்) உடலில் எவ்வளவு விஷப் பொருட்களை உருவாக்கியிருக்கிறாய்? பாதுகாப்பற்ற உணர்வால் உன் உடல் நலம் பாழ்பட்டிருக்கிறது.

எனவே நீ மூன்று விஷயங்களில், நீ கவனத்தை செலுத்த வேண்டும்.

·         தப்பான முடிவுகளைத் தவிர்த்து உலக மக்கள் அனைவரையும் ஒரே குடும்பமாகப் பார். இந்தக் கருத்தை எல்லோரும் ஒத்துக்கொள்ளும் போது போர் வராது. குற்றம், வன்முறை மற்றும் நாம் இன்று எதிர் கொள்ளும் பல பிரச்சினைகள் ஏற்படாது. இன்று உலகில் வன்முறை பெரிய அளவில் உள்ளது. உலகத்தில் வன்முறை நிகழக் காரணம் இந்த அறிவு இல்லாத நிலை தான். கடந்த கால அனுபவங்களை நினைவு கூர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக எண்ணுவதில் அர்த்தமில்லை என்பதைப் புரிந்து கொள்.
·         உலகில் பல நல்ல மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை அறிந்து கொள். அவர்கள் எப்போதும் உனக்கு உதவுவார்கள்.
·         ஒரு பெரிய சக்தி உன்னை வழி நடத்தி உதவி செய்யும். பாதுகாப்பற்ற நிலையிலிருந்து வெளியே வா. மன அழுத்தத்தை நீக்கி, பாதுகாப்பற்ற நிலை உண்மை அல்ல என்று அறியும் போது, தவறான முடிவுகளிலிருந்து விடுதலை பெற முடியும். பின் உன்னுள் ஒரு சிறு குழந்தை போல் ஆனந்தம் பெருக்கெடுக்கும். ஆனந்தம் ஏற்கனவே உன்னுள் இருந்தது. மேற் சொன்ன மூன்று விஷயங்களால் அது மறைவாக இருந்தது. அதை புரிந்து கொண்ட பின் ஆனந்தமான நிலையை நீ உணர்கிறாய்.

தியானம், யோக சாதனைகள் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் வாயிலாக மன அழுத்தத்தை நீக்கி விடு. சரியான அறிவால் தவறான முடிவுகளை தவிர்த்து விடு. உன் கடந்த கால அனுபவங்கள் மூலம், இறைவன் மேல் நமபிக்கை (தன்னம்பிக்கை) வைத்து பாதுகாப்பின்மையை வென்று விடு.