குருவின் பங்களிப்பு

திங்கள், 14 ஜூலை, 2014

மாண்ட்ரியல், கனடா


பார்ப்பவரிடம் யோகம் வருகிறது, அது தான் தியானம்; காணும் காட்சியிலிருந்து பார்ப்பவரிடம் திரும்புவது. நீங்கள் தியானத்தில் அமரும் போது என்ன நடக்கிறது? பழைய அனுபவங்களும் மேலே வருகிறது; அவை வரும் காரணம் அப்படியே சென்று மறையத்தான். எனவே நீங்கள் தியானத்தில் அமரும் போது மனதில் உள்ள எல்லாப் பதிவுகளும் வரும், வந்த பின்னர் மறைந்து விடும், பிறகு நீங்கள் வெறுமையாக விடப்படுவீர்கள்! இந்த வெறுமை தான் விலை மதிப்பில்லாதது. இது தான் நிர்விகல்பம் எனப்படுகிறது – வெறுமை. இந்த வெறுமை தான் இதமளித்து உங்களை மேலே உயர்த்துகிறது. அதுதான் வேறு ஒரு பரிணாமத்திற்கான வாயில்.

வாழ்க்கையில் பல பரிமாணங்கள் உள்ளது. இந்த பல் பரிமாணத்தில் நுழைந்ததற்கு நன்றியுணர்வு கொள்ளும் நாள் தான் குரு பூர்ணிமா.

பார்ப்பவரிடம் திரும்புவதற்கு பல நுட்பங்கள் உள்ளன. வெறுமை தியானம், சுதர்ஷனக் கிரியா, சக்தி கிரியா போன்ற நுட்பங்கள் பார்ப்பவரிடம் திரும்புவதற்கு உதவுகிறது.(எல்லோரும் நிமிர்ந்து உட்காருங்கள், உங்கள் முதுகுத் தண்டை நேராக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மௌனமான உரையாடல் நிகழப் போகிறது. உங்கள் கண்களைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் மனதில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்,உங்களுக்கு விடையும் கிடைக்கும். வார்த்தைகளே இல்லாமல் உங்களுக்கு நான் பதிலுரைக்கப் போகிறேன்.)
உங்களுக்கு விடை கிடைத்ததா? உங்களில் எத்தனை பேருக்கு விடை கிடைத்தது? (அவையோரில் பலர் கைகளை உயர்த்துகிறார்கள்)

நன்று!

குரு பூர்ணிமா கதை ஒன்று சொல்கிறேன்.

வெகு காலத்திற்கு முன், நான்கு முதியவர்கள் விடை தேடிக் கொண்டிருந்தனர். முதலாமவர் துயரத்திலிருந்தார், தன் துயரத்திலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்பினார். இரண்டாமவர், முன்னேற்றத்தையும் வெற்றியையும் விரும்பினார், அதை எப்படிப் பெறுவது என்று தெரிந்து கொள்ள விரும்பினார்.மூன்றாமவர் வாழ்கையின் அர்த்தத்தை தேடினார். நான்காமவருக்கு எல்லா ஞானமும் இருந்தது, ஆனால் ஏதோ ஒன்று இல்லாமலிருந்தது, அது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை.

விடை தேடி அலைந்து கொண்டிருந்த இந்த நால்வரும், ஒரு இடத்தில் வந்து சேர்ந்தனர். அந்த இடத்தில ஒரு ஆலமரம்  இருந்தது. அந்த ஆலமரத்தின் கீழ் ஒரு இளைஞர் நல்ல விசாலமான புன்னகையுடன் அமர்ந்திருந்தார். தமக்குத் தேவையான விடைகளை இவர் தருவார் என்று இந்த நால்வருக்கும் திடீரென்று தோன்றியது. அதே நினைப்பு எல்லோருக்கும் உள்ளிருந்து எழுந்தது. இவர் நம்முடைய பிரச்சினைகளுக்கு விடை தருவார் என்று நால்வரும் அங்கே அமர்ந்தனர், அவர்களுக்கு விடையும் கிடைத்தது.

அந்த ஆலமரத்தின் கீழே புன்னகையுடம் அமர்ந்திருந்த அந்த இளைஞர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஆனாலும் அவர்களுக்கு விடை கிடைத்தது. காட்சியிலிருந்து காண்பவருக்கு, ‘நான் தான் அந்த ஒளி’, மற்றும் அதுதான் குரு. இருள், துயரம், தனிமை மற்றும் குறைபாடுகளை நீக்கி  ஏராளத்தை அளிப்பவர் எவரோ அவரே குரு என்று பொருள். ஏனென்றால் குறைபாடு என்பது மனதில் உள்ளது. எனவே குரு என்பவர் அந்தக் குறைபாடுகளை நீக்கி விடுதலையை தருபவர்.
இதுதான் குருபூர்ணிமாவின் முதல் கதை. அந்த நாள் பௌர்ணமி நாளாக இருந்தது, அப்படித்தான் அந்த குரு பாரம்பரியம் தொடங்கியது. இந்த நான்கு முதியவர்களும் குருவாகினர். அவர்கள் எல்லோருக்கும் அவர்கள் கேட்டது கிடைத்தது. துயரம் மறைந்து, ஏராளமும் மகிழ்ச்சியும் வந்தது. தேடல் முடிவுக்கு வந்தது, ஞானம் கொண்டவருக்கு குரு கிடைத்து தன்னை வெளிப்படுத்தி ஒரு தொடர்பைக் காண முடிந்தது. அந்த நான்காவது மனிதரிடம் எல்லாம் இருந்தது, அவருக்கு ஞானமும் இருந்தது ஆனால் தொடர்புபடுத்திப் பார்க்க குரு இல்லை. எனவே குருவுடனான உள்ளத் தொடர்பு நிகழ்ந்தது. அதனால் தான் ஆதிசங்கராசாரியார் கூறினார், ‘மௌன வியாக்ய ப்ரகதிதா, பர, ப்ரம்ஹ தத்வம் யுவனம்.’

(பொருள்: பரப்ரம்ஹத்தின் உண்மையான இயல்பை தன் மௌன நிலை மூலமாக விளக்கிய தக்ஷினாமூர்தியை (முதல் குரு) நான் வணங்கித் துதிக்கிறேன்)

இந்தக் கதையில் ஆசிரியர் இளையவர், ஏனென்றால் ஆன்மா இளமையானது, ஆனால் மாணவர்கள் முதியவர்கள். இதில் பல உருவகங்கள் உள்ளன. தேடல் உங்களை முதுமையடைய செய்கிறது. இந்த உலகப் பொருட்களை, அல்லது விடுதலையை, அல்லது எதையும் தேடுவது உங்களை முதுமை அடையச் செய்கிறது. எனவே சீடர்கள் முதியவர்களாகவும் ஆசான் இளமையாகவும் இருக்கிறார்கள். ஆலமரத்தின் பொருளென்ன? ஆலமரம் தானாக வளர்கிறது. அதற்கு யாருடைய அக்கரையும் பாதுகாப்பும் தேவையில்லை. தண்ணீரே இல்லாத ஒரு கருங்கல்லின் பிளவுக்கு இடையே ஆலம் விதை விழுந்தால் கூட, அங்கேயும் தானே வளரக் கூடியது ஆலமரம். அது வளர்வதற்கு சிறிது மண் மற்றும் சிறிது தண்ணீர் போதும். சில நேரம் அதுவும் தேவையில்லை.
இரண்டாவதாக, ஆலமரம் எப்போதும் பிராணவாயுவை தருகிறது. சூரியன் இருந்தாலும் இல்லையென்றாலும் பிராணவாயுவை 24 மணி நேரமும் தரக் கூடியது ஆலமரம். இந்தியாவில், ஐந்து மரங்கள் (பஞ்ச விருக்ஷங்கள்) மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இவற்றை மக்கள் சுற்றி வந்து வணங்குவர். தங்கள் வாழ்நாளில் இந்த ஐந்து மரங்களில் ஒன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. இந்த ஐந்தில், கொடுத்துக் கொண்டேயிருக்கும் ஆலமரத்தை, குரு தத்துவத்திற்கு உருவகப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது யாருக்காவது குருவாக இருந்து அது எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். எப்படி ஒருவர் ஒருமுறையாவது தாயாக இருந்து பார்க்க வேண்டுமோ அப்படியே ஒரு குருவாகவும் இருந்து பார்க்க வேண்டும். அதற்காக, ‘நான் தான் குரு’, என்று சொல்லிக் கொள்வதல்ல. தான் தான் குரு என்று யாராவது கூறினால் அது நல்லதல்ல. குருவாக இருப்பது, அந்த வெறுமையில் காலியிடத்தில் இருத்தல், ஒளியோடு ஒன்றி இருத்தல்.
இந்த ஞானம் இல்லாமலிருந்தால் உங்கள் வாழ்கை எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் இன்று எண்ணிப்பார்க்க வேண்டும். நீங்கள் எங்கே இருந்திருப்பீர்கள்? சற்றே கற்பனை செய்து பாருங்கள், ‘இந்த ஞானம் இல்லாமலிருந்தால், தியானம் இல்லை, தினசரி பயிற்சி இல்லை, சத்சங்கம் இல்லை, நான் எங்கே இருந்திருப்பேன்?’

வெறும் இந்த உடம்பல்ல நாம், இந்த உடம்பை விட நாம் பெரியவர்கள். இந்த உடம்பு பெரிய பலூனில் கட்டப்பட்டிருக்கும் வெறும் ஒரு சிறிய கல். இந்த உடம்பு என்னில் ஒரு சிறிய அங்கம் என்பதைத் தான் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த உடம்பைக் கிள்ளினால் வலிக்கிறது; உடம்பிற்கு பசிக்கிறது, அதற்குத் தாகம் எடுக்கிறது. இதெல்லாம் இந்த உடம்பில் நடக்கும் சாதாரண வேலைகள், ஆனால் நம்முடைய சுயத்தின் மற்றும் வாழ்கையின் விரிந்து பரந்த வீச்சை உணராமல் நாம் இதில் மட்டுமே எப்போதும் சிக்கியிருக்கிறோம்.

நம் வாழ்கையின் இலட்சியத்தைக் காணவில்லை. ஏனென்றால், இந்தச் சிறிய கூட்டை (உடம்பை) மட்டுமே பற்றிக் கொண்டு அதைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறோம். ‘நான் அந்த ஒளி’, என்று பார்க்க விழையுங்கள், அதுதான் குரு என்பது. குரு என்றால் இருளை,துயரத்தை, தனிமை மற்றும் குறைபாடுகளை நீக்கி, ஏராளதைத் தருபவர், ஏனென்றால் குறைபாடு என்பது மனதில் இருக்கிறது. எனவே குரு என்பவர் குறைபாட்டை நீக்கி விடுதலையை அளிப்பவர்.
எனவே, இன்றைய விழாவின் ஒரு பகுதியாக குரு பூஜை செய்வோம்! வழக்கமாக, குரு பாரம்பரியத்தைக் காட்டும் ஒரு படம் இருக்கும், ஆனால் அது மிகவும் குறைவானதாகவே கருதுகிறேன். குரு தத்துவத்தை உணர அந்தப் படம் கூடத் தேவையில்லை. ஒளி உதிப்பதைக் குறிக்கும் வெறும் குரு பாதுகை மட்டுமே போதும்.

மத்திம காலத்தில் வந்த ஒரு பெரும் யோகி கூறியிருக்கிறார், ‘யார் அமுதம் அருந்துவர்? யாருக்கு குரு இருக்கிறாரோ அவரே. வாழ்க்கையில் குரு இல்லாத ஒருவர் தாகத்துடனேயே இருக்கிறார், அவர் வாழ்க்கையில் சாரம் இல்லை; அவருக்கு உண்மையான ஆனந்தம் தெரியாது. ஆனால் குருவை உடைய ஒருவன், திரும்பத் திரும்ப அமுதம் அருந்துகிறான்’. பேரானந்தம் என்பது நமக்குள்ளேயே இருக்கிறது என்பதை குறிக்கிறது இது. உங்களுக்கு குரு இருந்தால், அந்த ஞானம் இருந்தால், உங்களுக்கு உள்ளே இருக்கும் பேரானந்தத்தை மறுபடி மறுபடி அடைய முடிகிறது. அது இல்லையென்றால், நீங்கள் தாகத்துடனேயேதான் இருந்தாக வேண்டும்.

சிவன் பார்வதி மாற்றிய வேறொரு கதை சொல்கிறேன்.

பார்வதி தேவி வெகுவாக சஞ்சலம் கொண்டிருந்ததனால்,அமைதி வேண்டி அவர் சிவ பெருமானிடம் வந்து, ‘இறைவா, நான் என்ன செய்வது?’ என்றார். சிவா பெருமான் ‘அனாஹதே பத்ர கர்னே’ என்ற நுட்பத்தை அளித்தார். உங்களுக்கு உள்ளே மிக ஆழத்திலிருந்து எழும் சங்கீதம் உங்கள் இதயப் (அனாஹதம்) பகுதியில் இருக்கிறது. ஆழ்ந்த தியானத்தின் மூலமாக அந்த ஓசையைக் கேளுங்கள் (பத்ர கர்ணே). உங்கள் புலன்களை எல்லாம் மூடிவிட்டால், உங்களுடைய அடி ஆழத்திலிருந்து வரும் ரீங்காரம் உங்கள் காதுகளில் வரும், அதைக் கேளுங்கள். 

ஒரு மின் விசிறியிலிருந்து அல்லது ஒரு ஓடையிலிருந்து வரும் அந்த இடைவிடாத ஓசையைக் கேளுங்கள். நயாகரா போன்ற நீர் வீழ்ச்சிகளின் அருகே சென்றால் அந்த சப்தம் நிற்பதே இல்லை. அந்த ஓசை தொடர்ச்சியானது. பரப்பிரம்மத்திடம் செல்ல அந்த ஓசையில் முழுதும் நனைய வேண்டும். அதைப் போலவே பஜனை ஓசையில் முழுதும் நனையுங்கள். ஏன் ஒரே வரி திரும்பத் திரும்பப் பாடப்படுகிறது தெரியுமா? ஏனென்றால் எதையும் பகுத்து ஆராயும் உங்கள் மனம் அமைதியடையத் தான். அந்த ஓசையில் நனையும் போது , நீங்கள் இறைவனை நோக்கி முன்னே செல்கிறீர்கள். இது ஒரு இரகசியம்.