ஜூலை 17, 2014
மொண்ட்ரியல் கனடா
கேள்வி - பதில்கள்
குருதேவ்! எதனால் ஒருவர் சில நேரங்களில்
அதே இனத்தை சேர்ந்தவர்களால் ஈர்க்கப்படுகின்றார்? ஏன் ஓரின அல்லது ஈரின சேர்க்கை பேசக்கூடாததாக
கருதப்படுகிறது?
உலகில் பல பாகங்களில் இப்போது அது பேசக்கூடாத ஒன்றாக கருதப்படுவது இல்லை. கடந்த
காலத்தில் அது அவ்வாறாக இருந்தது. மக்கள் அவ்வாறான பாலின விருப்பங்களுக்காக மரண தண்டனை
பெற்றிருக்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவராலும் உருவாக்கப்பட்டவர்கள்
என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் அந்த இருவருடைய குணங்களையும் கொண்டிருப்பீர்கள். பெண்மை மற்றும் ஆண்மை இரு சக்திகளால் உருவாக்கப்பட்ட உங்களுக்குள் சில சமயங்களில்
ஆண்மையும் சில சமயங்களில் பெண்மையும் ஆதிக்கம் செலுத்துவதால் தான் இம்மாதிரியான மாற்றங்கள்
தோன்றுகின்றன. சிலர் மிக நேர்மையாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால்
ஐம்பது வயது அல்லது அதற்குப் பின் அதே பாலினத்தை சேர்ந்தவர்களால் ஈர்க்கப்படுவதை கண்டு
கொள்ளுகிறார்கள். அதன்பின் அவர்கள் மிகவும் குழப்பமடைகிறார்கள். அவர்கள் மனம் தாறுமாராகின்றது.
அவர்களால் அதை கிரகித்துக் கொள்ள முடிவதில்லை.
இதற்கு மாறுபாடானதும் உண்மையே. அவர்கள் முதலில் இருந்து ஓரின சேர்க்கையில் ஈடுபட்டிருப்பார்கள்.
ஆனால் சில நேரங்களில் அவர்களுடைய விருப்பங்கள் மாறும் என்பது தெரியாது. ஆகவே ஒருவரை அவருடைய வாழ்நாள் முழுவதற்கும்
ஒரு முத்திரை குத்தி அவரை மிகவும் கெட்டவராக நினைக்க வைக்கக் கூடாது. நீங்கள் உங்களுக்கே
ஒரு முத்திரை ஏற்படுத்தினாலும் அதை சந்தோஷமாக செய்யவும். ஆனால் மற்றவர் எவரையும் முத்திரை
குத்தி அவர் மீது குற்றம் சுமத்த வேண்டாம், ஏனென்றால் இவை அனைத்தும் அவருக்குள் இருக்கும்
சக்தியின் விளையாட்டு மற்றும் வெளிப்பாடே ஆகும். நீங்கள் உடலை வைத்து அடையாளம் காணும்
முறைக்கு மேலாக வர வேண்டும் என்று நான் விரும்புகின்றேன், ஏனென்றால் நீங்கள் பாலினமற்றவர்.
உங்கள் உடலுக்குத் தான் பாலினம் உள்ளது. ஆனால் உங்கள் நினைவுக்கு பாலினம் கிடையாது.
நினைவின் இயல்பே அன்பு. அதனால் தான் உடலின் பாலினம் எதுவாக இருக்கும்போதும்,
நம்முடைய நினைவு அந்த திசையில் செல்லுகிறது. ஒருவர் தம்மையோ மற்றவர்களையோ பழிப்பது
தவறானது. நீங்கள் வீசும் ஒளி என்பதை புரிந்து கொள்ள வேண்டியது தேவை. நீங்கள்
வெறும் சதை, எலும்பு மற்றும் இரத்தம் அல்ல. நீங்கள் ஒளி. இதை நீங்கள் புரிந்து கொள்ளும்
பொது நீங்கள் உங்களிடம் ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்குள்
சாந்தம் பிறக்கும். மற்றும் உங்களையே நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளுவீர்கள்.
தங்களுடைய பாலியலை கண்டு கொள்ளும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பிடிவாதமாகவும்
மனஅமைதி கெட்டும் இந்த சமுதாயம் முழுவதையும் வெறுக்கத் தொடங்குகின்றனர். நாம் மனதில்
ஏற்படும் இத்தகைய தீவிர எதிர்மறையான போக்குகளில் இருந்து வெளியே வந்து “ நாம் வெறுமனே
இந்த உடல் மட்டும் அல்ல ஆனால் விட்டு விட்டு பளிச்சிடும் சந்தோஷம் மற்றும் நினைவு”
என்று உணர வேண்டும்.ஓரினச் சேர்க்கை சில காலங்களுக்கு முன் எண்ணியிருந்ததைப் போல ஒரு நோய் அல்ல
என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் இன்று அது ஒரு போக்கு என்று காண்கின்றனர்.
வெறும் சக்தி தான் அந்த பத்திரத்தை ஏற்கின்றது. சிலநேரங்களில் நீங்கள் பெண்ணாக இருந்தாலும்
உங்களுக்குள் ஆண்மை சக்தி ஆதிக்கம் செலுத்துகிறது. சில நேரங்களில் நீங்கள் ஆணாக இருந்தாலும்
உங்களுக்குள் பெண்மை சக்தி ஆதிக்கம் செலுத்துகிறது. அனைத்துமே சாத்தியம்.
குருதேவ்! நாம் யோகா,மூச்சு பயிற்சி
மற்றும் மற்ற வேத பயிற்சிகளை பற்றி பயிலுகின்றோம். மற்ற மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில்
என்ன சொல்லப்படுகிறது? நம்முடைய ஆன்மீகத்திற்கு பங்களிக்க அவர்களிடம் ஏதாவது உள்ளதா?
இந்த பயிற்சிகள் ஒரு மதத்திற்கு மட்டும் உரித்தானவை போன்றது அல்ல. இந்து என்பது
ஒரு மதம் அல்ல. மக்கள் பல்லாண்டுகளாக பயிற்சி
செய்து வரும் ஒரு வாழும் முறை ஆகும். மதத்தின் மூலத்திற்கு சென்றால் நிச்சயமாக ஆராய்ந்து
பார்க்க ஏதாவது இருக்கும்.எப்போதுமே நீங்கள் இணையானவற்றை பார்க்கலாம். துரதிருஷ்டவசமாக
பெரும்பாலான ஒழுங்கு படுத்தப்பட்ட மதங்கள் அவைகளிடம் இருந்திருக்கும் புராதன பயிற்சிகளை
மறந்துவிட்டன. தற்போது மிகுதி இருப்பவை வெறும் சின்னங்கள், அதிகாரம் மற்றும் சடங்குகளே.
அனைத்து மதங்களிலும் பிரார்த்தனை செய்வதும் பாடுவதும் உள்ளன. மௌனம், விரதம் மற்றும்
எப்போதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டிருக்காமல் இருப்பது ஆகியவை அனைத்து மதங்களிலும்
உள்ளன, பயிற்சி செய்யப்படுகின்றன.
மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்னும் நோக்கத்துடன் நான் இந்து மதம் கிறுத்துவ
மதம் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன். இந்த இரண்டிலும் 33 பொதுவான் பயிற்சிகள் உள்ளன.
இதேபோல் இந்து மற்றும் இஸ்லாம் மதங்களுக்கு இடையிலும் பொதுவான பயிற்சிகள் உள்ளன. மதங்களை
ஒப்பிட்டு படித்து பார்த்தால், அனைத்து மதங்களிலும் பொதுவானவையும் உள்ளன, வேறுபாடானவையும்
உள்ளன என்பதை நீங்கள் பார்க்கலாம்.வேறுபாடுகள் அவற்றை உயர்ந்ததாக ஆக்கவே உள்ளன. எனவே
நாம் வேறுபாடுகளை கொண்டாட வேண்டும். அனைத்தும் ஒன்றாகவே இருக்கவே வேண்டும் என்று நாம்
சொல்லக் கூடாது.
கிறுத்துவ யோகாப்பியாசங்களை தொடங்கியுள்ளதாக மக்கள் கூறுவர். நான் இதை கொள்ளை
என்று கூறுவேன். அவர்கள் இம்மாதிரியான செயல்களை செய்யக்கூடாது. கடந்த காலத்தில் யாரோ
ஒரு ரிஷி யோகா பயிற்சிகளை கண்டு பிடித்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். அதை ஒப்புக்கொள்ளுவதை
விடுத்து, அதை மாற்றி நாங்கள் கிறுத்துவ யோகா பயிற்சி செய்கிறோம் என்று சொல்லுவார்கள்.
யோகா என்பது யோகா. இந்து யோகா என்பதோ கிறுத்துவ யோகா என்பதோ இஸ்லாமிய யோகா என்பதோ கிடையாது.
நீங்கள் அதற்கு ஒரு வண்ணம் தீட்ட முற்பட்டால் அது அந்த குறிப்பிட்ட ஞானத்திற்கு ஏற்படுத்தும்
அவமரியாதை ஆகும். அது கொள்ளை அடிப்பது, அதை செய்யக் கூடாது.
நாங்கள் அனைத்து தோரணைகளையும் ஏற்றுக்கொள்ளுகிறோம் ஆனால் "ஓம்" சொல்ல
மாட்டோம். நீங்கள் ஏன் ஓம் சொல்லக் கூடாது? நீங்கள் ஆப்பிள் என்று சொல்லுவீர்கள் மற்ற
அனைத்து கெட்ட வார்த்தைகளையும் சொல்லுவீர்கள். ஆனால் நிரந்தர அமைதி, பரிசுத்தம், சாந்தம்,நிபந்தனையற்ற
அன்பு ஆகிய பொருள்களை கொண்ட, ஓம் என்னும் வார்த்தையை சொல்ல மாட்டீர்கள்? ஓம் என்னும்
வார்த்தை குறிப்பது இவை அனைத்தையும் தான். அது ஒரு முழுமையான அதிர்வலை. அந்த அதிர்வலை
முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில் உருவாகி உச்சந்தலையை நோக்கி முன்னேறும். நீங்கள் ஏன்
ஓம் சொல்லக்கூடாது? ஓம் என்னும் ஒலி உங்களுடைய மதத்தை விட்டுவிட செய்யுமா?. ஒரு வார்த்தையை
உச்சரிப்பதனால் உங்கள் மதத்தில் இருந்து நீங்கள் வெளியேற்றப்பபட்டு விடுவீர்கள் என்னும்
அளவிற்கு உங்கள் மதம் வலுவற்று இருக்கின்றதா?
உங்கள் நம்பிக்கை எவ்வளவு வலுவற்று உள்ளது என்பதை இது காட்டுகின்றது. ஓம் என்பது
யோகப்பயிற்சியின் கையெழுத்து. அதை நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒரு ஆப்பிள் மின்னணு கடைக்கு சென்று "எனக்கு ஒரு கணினி தேவைப்படுகிறது.
ஆனால் அந்த ஆப்பிள் சின்னம் அதில் இருக்கக் கூடாது. அதை எடுத்து விடுங்கள். அது ஒரு
கடிக்கப்பட்ட ஆப்பிள், முழுவதும் கூட அல்ல. எனக்கு இந்த பாதி கடித்த ஆப்பிள் சின்னம்
உள்ள கணினி தேவையில்லை" என்று கூறினால், அதை அவர்கள் ஒப்புக்கொள்வார்களா? நீங்கள் ஒரு ஐபோன் கடைக்கு சென்று "அந்த ஐபோனை
எடுத்து விடுங்கள். நான் என்னுடைய போனை அங்கே வைக்கிறேன்" என்று சொல்ல முடியுமா?
அது கொள்ளை அடிப்பதாகும். நீங்கள் அம்மாதிரியான செயல்களை செய்யக் கூடாது. அறிவின் மூலத்திற்கு ஒப்புதல் அளிக்கவும்.
எல்லையற்ற பேரின்பத்தைத் தேர்ந்தெடுக்க
இயலும்போது நாம் ஏன் மற்றவர்களுக்கு உதவி புரியவேண்டுமென்று சங்கடப்பட வேண்டும்?
நீங்கள் பேரின்பத்தை கண்டுகொண்டீர்கள் என்றால் உங்களால் அதை அனைவருடனும் பகிர்ந்து
கொள்ளாமல் இருக்க முடியாது. பகிர்ந்து கொள்ளவில்லையென்றால் அதனை கண்டு அறிந்ததின் பொருள்
என்ன?செலவு செய்யவில்லையென்றால் வங்கிக்கு சென்று ஏராளமான பணம் பெறுவதன் பயன் என்ன?
செலவழிக்காமல் பணம் சம்பாரிப்பதில் அர்த்தம் இல்லை. அதேபோல் நாம் ஞானம் பெறும்போது அதனை பகிர்ந்துகொள்ள
வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, "என்னைத் தனியே விட்டுவிடுங்கள்;
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்" என்று சொல்வதில்லை.
நீங்கள் மற்றவர்களை
தொலைபேசியில் அழைத்து,"நான் இந்த அற்புதமான திரைப்படத்தைப் பார்த்தேன். அந்த
மகிழ்ச்சியை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்" என்று சொல்ல ஆசைப்படுகின்றீர்கள்.
மகிழ்ச்சி அல்லது பேரின்பத்தின் இயல்பு எப்போதுமே பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். உங்களால்
பகிர்ந்துகொள்ள இயலவில்லையென்றால், அதனால் நீங்கள் மகிழ்ச்சியை இழக்கின்றீர்கள் என்றால்
அது பேரின்பமே அல்ல.
குருதேவ், ஆன்மீக தேடல் என்றால்
என்ன? என் ஆனந்தத் தேடல் என்பது பொருள் சார்ந்த உலகத்திலிருந்து ஆன்மீகத்திற்கு மாறவில்லை
என்பதை நான் உறுதி செய்துகொள்ள விரும்புகின்றேன்.
ஆனந்த தேடல் என்பது உங்கள் கவனம் முழுவதும் உங்கள் மீது மட்டுமே இருப்பதாகும். அதன் போக்கு,"பிச்சையெடு; கடன் வாங்கு அல்லது
திருடு.மற்றவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை; ஆனால் நான் வசதியாக இருக்கவேண்டும்"
என்பதாகும். ஒழுக்கம் பற்றியோ, மற்றவர்களை பற்றியோ, மற்றவர் சொல்வதை பற்றியோ எதைப்
பற்றியும் கவலைப்படாமல் உங்களுக்கு எது மகிழ்ச்சி தருகின்றதோ அதனை செய்வதாகும். தர்க்கம்,
பகுத்தறிதல் என்று எதைப்பற்றியும் நினைக்காமல் முழு கவனத்தையும் உங்கள் மீதே கொண்டிருத்தல்
இன்பத் தேடல் ஆகும்.அது நிச்சயம் உங்களை மேம்படுத்தாமல் பெரும் சங்கடத்தில் ஆழ்த்தும்.
சில சமயங்களில் எனக்கு இயல்பு வாழ்க்கையை
விட்டு விலகி ஆசிரமத்திலேயே தங்கி விடலாம் என்று தோன்றுகின்றது. நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் இயல்பான வாழ்க்கை வாழ வேண்டுமென்றே
நான் விரும்புகின்றேன். இந்த உலகம் முழுவதையுமே ஆசிரமமாக மாற்ற வேண்டுமென்று நான் விரும்புகின்றேன்.
உலகத்தை விடுத்து ஆசிரமத்திற்கு வர வேண்டுமென்று விரும்புகின்றீர்கள்.ஆசிரமம் என்றால் என்ன? அன்பு, அக்கறை, எண்ணத்திற்கும் வயிற்றிற்கும் சிறிது
உணவு ஆகியவை கிடைக்கும் இடமே ஆசிரமம். நீங்கள்
உங்கள் வீடுகளையே ஆசிரமங்களாக மாற்றலாம். மற்றவர்களை
உங்கள் வீட்டிற்கு வரவேற்று சிறிது உணவும், நல்ல ஞானமும் அளியுங்கள். இதையே நீங்கள் அதிக அளவில் செய்தால் ஒவ்வொரு வீடும்
ஆசிரமம் ஆகும். ஆசிரமத்தில் இருப்பவர்களும் வெளியே சென்று அவர்கள் இருக்கும் இடங்களிலேயே
மையங்கள் அமைக்க வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். அவர்கள் வீடுகளை ஆனந்தம், அறிவு
மற்றும் அன்பின் கலங்கரை விளக்கங்களாக மாற்றவேண்டும். நானும் இடத்தில் தங்கி இருப்பதில்லை.
கண்டங்களுக்கிடையே பயணம் செய்து கொண்டிருக்கின்றேன்.
நீங்கள் உங்களுக்கென்று பொறுப்புகள்
இருக்கும் போது அவற்றை விட்டு விட்டு இங்கே வந்து தங்கி இருக்க வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் கொஞ்ச காலத்திற்கு இங்கே வந்து
தங்கி சேவை செய்வதற்கு வரவேற்கப்படுகின்றீர்கள். உங்கள் வசதிக்காக மட்டும் என்றில்லாமல்
ஆசிரமத்தில் இருப்பதால், சிறப்பாகச் செயல்பட முடியும் சமுதாயத்திற்கு சிறந்த பங்களிக்க
முடியும் என்றால் பரவாயில்லை. ஆசிரமம் சோம்பேறிகளின் இடமாகவோ, அனைத்தையும் விட்டு ஓடி
வந்து நேரத்தை வீணாக்கி மற்றவர்களையும் தொந்தரவு செய்பவர்களின் இடமாகவோ இருப்பதை நான்
விரும்பவில்லை.
ஆசிரமம் என்பது தனக்கென்று எதையும் விரும்பாமல், இந்த சமுதாயத்திற்கு நிறைய
செய்ய நினைப்பவர்களின் இடமாகும். இங்கே வந்து சற்று ஒய்வு எடுத்த பின்னர் திரும்ப சென்று சமுதாயத்திற்கு
வேலைகளை செய்பவர்களுக்கே இந்த இடம். நீங்கள் இந்த உலகத்திற்கும் சமுதாயத்திற்கும் எதாவது
செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் இருந்தால், சரி இது உங்களுக்கு உரிய இடம். உங்களுடைய
தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.