வெள்ளிக் கிழமை, 25 ஜூலை
2014,
பாத் அண்டோகஸ்ட் ஜெர்மனி
(உங்களை பிறர் சாதகப்படுத்திக்
கொள்வதை தடுத்து நிறுத்துங்கள் என்னும் பதிவின் தொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது).
அன்புள்ள
குருதேவ், உலகப் பொருளாதாரச் சிக்கல் விரைவில் தீர்ந்து விடுமா? உலகெங்கும் ஊழல் குறைந்து,
புதியதோர் உலகம் என்னும் நமது கனவு மெய்யாகுமா?
குருதேவ்: ஆம்,
நீங்கள் செயல்படத் துவங்கினால் இது நடக்கும். இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து
வருகின்றது. மோசடிக்கு மேல் மோசடி நிகழ்ந்தது, ஊழல் கூரையை தொட்டு அதற்கும் மேலே கூடச்
சென்றது. மக்கள் மாற்றம் என்பது நிகழ இயலாத ஒன்று, இவ்வாறே தான் இனி இருக்கும் என்று
கூட எண்ணினார்கள்.
நமது வாழும் கலையை சார்ந்த பல தன்னார்வத் தொண்டர்கள் மாற்றத்தை ஏற்படுத்தக்
கடும் பணியாற்றினார்கள். (ஒரு வண்டு குருதேவ் பேசிகொண்டிருக்கும் இடத்திற்கு ஜன்னல்
வழியாக வருகின்றது. விரட்ட முற்படுபவர்களிடம் குருதேவ், "பரவாயில்லை, அதுவும்
இங்கு இருக்கட்டும் என்று கூறுகிறார். அது பறந்து சென்று விடுகின்றது. அப்போது அவர்,
சரி, அது சென்று விட்டது. இப்போது அது இந்தப் பாடங்களை அறிவதற்கு முன்கூட்டிய காலம்
போலும், அடுத்த பிறவியில் அல்லது ஓரிரு ஜன்மங்களுக்குப் பின்னர் அது நமது கூட்டத் தொடருக்கு
வரும் என்று கூறித் தனது பேச்சைத் தொடருகின்றார்)
ஆயிரக்கணக்கான எங்களது தொண்டர்கள்,
வீடு வீடாகச் சென்று மகிழ்ச்சி நிலை மதிப்பீட்டாய்வு செய்தார்கள். எங்களது அனைத்து
சுவாமிகளும், ‘’இந்தியாவின் மேன்மைக்கு வாக்களியுங்கள்’’ எனும் இயக்கத்தில் பங்கேற்றனர்.
அது மாபெரும் இயக்கம் ஆகும். இன்று ஒரு அதிக அளவு மாற்றம் ஏற்பட்டு, நிலையான அரசாங்கம்
உருவாகி இருக்கின்றது. முடிவுகளை எடுக்கும் திறன் வாய்ந்த அரசு இது. முந்தைய அரசில்,
ஒவ்வொரு துறையிலும் ஐந்து முதல் ஏழு வரையிலான அமைச்சர்களை கொண்ட ஒரு கவுன்சில் அமைக்கப்பட்டிருந்தது.
அவர்கள் தவறான முடிவினை எடுத்தால் யாருமே அதற்குப் பொறுப்பேற்க மாட்டார்கள். கூட்டு
முடிவுகளையே எடுத்து வந்தனர். ஊழலை மறைப்பதற்காக ஒவ்வொரு துறையிலும் முடிவுகள் எடுக்கவென்று
அமைச்சர் குழு அமைக்கப்பட்டிருந்தது, அது முடிவுகளை எடுத்ததே இல்லை. நாடு மிகவும்
பாதிக்கப்பட்டிருந்தது. தொழில் வளர்ச்சி பத்து சதவீதத்திலிருந்து 2.5 சதவீதம் என்று
கீழே இறங்கிவிட்டது. ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தன்னார்வத் தொண்டர்களின் சிறந்த
பணியினால் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்தது. ஆனால் நாங்கள் எந்தக் கட்சிக்கு அவர்கள்
வாக்களிக்க வேண்டும் என்று கூறியதே இல்லை. அவ்வாறு செய்வது எனது நெறிமுறையன்று என்று
நான் எண்ணினேன், நான் முற்றிலும் கட்சி சார்பற்று இருந்தேன், ஆயின் அது எனக்கு கத்தி
முனையில் நடப்பது போன்றது ஆகும். எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறாமல்
மக்களை மாற்றம் உருவாக்க வைக்க வேண்டும், அது எளிதான செயல் அல்ல. இந்தக் கட்சிக்கு,
அல்லது அந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறினால் நானும் அவர்களை போன்று அரசியல்வாதியாகி
விடுவேன். அது நான் முற்றிலும் விரும்பாத ஒன்று ஆகும். மக்களை ஊக்குவித்து விழிப்படைய
செய்ய வேண்டும். நாம் அனைவருக்கும் பொதுவானவர்.
நான் எப்போதுமே நான் அனைவருக்கும்
பொதுவானவன் என்று கூறி வருகின்றேன். ஒரு கட்சி அல்லது ஒரு கொள்கை என்பது அல்ல, ஒரே
இனம், ஒரே சமயம் ஒரே சமூகம் என்பதே என் சொல். இதையும் தாண்டி, நான் ஒரு நாட்டைச் சேர்ந்தவன் அல்ல, இவ்வுலகையே சார்ந்தவன்
என்று கூறவே விரும்புகின்றேன்.
எப்போதெல்லாம்,கிரீஸ்,இத்தாலி
மற்றும் ஐரோப்பிய நாடுகளை போன்று உங்களது நாட்டில் ஊழல் பிரச்சினை இருக்கின்றது போலத்
தோன்றுகிறதோ, அப்போதெல்லாம், அனைவரையும் ஒன்று திரட்டி, மக்களுக்கு புரிதலை ஏற்படுத்துங்கள்.
மனிதநேய உணர்வுகள் மேம்படும் போது தான் இதைச் செய்ய முடியும். மனிதப் பண்புகளின் உயர்வு,
விழிப்புணர்வு இவையின்றி பிரச்சினை தீராது. தென் அமெரிக்காவில் வன்முறை ஒரு பிரச்சினையாக
உள்ளது. அர்ஜென்டினா கால்பந்து போட்டியில் தோல்வியுற்று அதன் பொருட்டு வீதிகளில் கலவரம்
மூண்டது. இதன் விளைவாக பலர் காயம் அடைந்தனர். அடடா! அது விளையாட்டு! யார் வெற்றியடைந்தால்
என்ன?
வெற்றியடைந்தாலும்,தோல்வியடைந்தாலும் விளையாட்டு மகிழ்ந்து அனுபவிக்கவே ஏற்பட்டுள்ளது
ஆகும். விளையாட்டை நீங்கள் போர் அல்லது சண்டை போன்று எடுத்துக் கொண்டால், கொண்டாட்டங்களுக்கு
நீங்கள் போலீசை கொண்டு வர வேண்டும். இங்கு ஜெர்மனியில் கூட இது போன்று
நிகழ்ந்துள்ளது. எப்போதெல்லாம் விளையாட்டுக்கள் நிகழ்கின்றனவோ மக்கள் ஒருவரையொருவர்
அடித்துக் கொள்கின்றனர். வன்முறையில் ஈடுபடுகின்றனர். மனிதப் பண்புகளின் குறைபாடே இதற்குக்
காரணம். நான் வெற்றி பெறுவேன் அல்லது பிறரை
வெற்றியடைய வைப்பேன் என்னும் மனப்போக்கை கைக்கொள்ளுங்கள். அப்போது எப்போதுமே நீங்கள்
வெற்றி அடைவீர்கள்.
உங்களுடைய ஐந்து வயது மகன் அல்லது
மகளுடன் நீங்கள் விளையாடும் போது எப்போதுமே நீங்கள் வெற்றி அடைகின்றீர்களா? உங்கள்
குழந்தைகளை வெல்வதில் மகிழ்ச்சி ஏற்படுகின்றதா என்ன? இல்லை. நீங்கள் விட்டுக் கொடுத்து
அவர்கள் வெல்லும் போது தான் நீங்கள் மகிழ்ச்சி அடைகின்றீர்கள். அவர்களது மகிழ்ச்சியே
உங்களது மகிழ்ச்சி. இத்தகைய பரந்த மனப்பான்மை எப்போதும் இருக்க வேண்டும். நீங்கள் கூறுவீர்கள்,
"இந்த முறை உன்னை வெற்றியடைய செய்கின்றேன், அடுத்த முறை நான் வெல்வேன்"
அப்போது ‘வெற்றி: வெற்றி’ என்னும் நிலை உருவாகும்.எப்படியானாலும் நீங்கள் மகிழ்ச்சியாக
இருப்பீர்கள். இதுவே உங்கள் மனப் போக்காக இருக்க வேண்டும். தற்போது நாம் விளையாட்டைப்
போர் போன்றும், போரை விளையாட்டுப் போன்றும் கருதுகின்றோம். போர் விளையாட்டாகவே ஆகிவிட்டது.
பன்னாட்டு கால்பந்துக் கழகக் கூட்டமைப்பு
மாநாடு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் நான் உரை நிகழ்த்த இருக்கின்றேன். இன்று
என்னை ஒருவர்," கால்பந்துக் கழகக் கூட்டமைப்பில் ஏராளமான மோசடிகளும் சில ஊழல்
குற்றச் சாட்டுக்களும் உள்ளனவே? இதில் உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார். அதற்கு
நான்," நல்லது, அதற்காகவே நான் அங்கு செல்கின்றேன்" என்று விடையளித்தேன்.(சிரிப்பு)
சிலர் ஊழல் இருப்பதால் நான் மாநாட்டிற்கு
செல்ல வேண்டாம் என்று கூறினார்கள். நோயாளிகள் இருக்குமிடத்தில் தான் வைத்தியருக்கு
வேலை இருக்கும். அது போன்று பன்னாட்டு கால்பந்துக் கழகக் கூட்டமைப்பு ஊழலின்றி இருந்தால் அங்கு சென்று பேசவேண்டிய தேவையே இருக்காது. நெறிமுறைகள் மிகுந்திருக்கும் இடத்தில்
நெறிமுறைகள் பற்றிய மாநாடு தேவை இல்லை. எங்கு நெறிமுறைகள் அரித்து அழிக்கப் படுகின்றதோ
அங்கு தான் நெறிமுறைகளை மீட்டு எடுக்க வேண்டும். ஒரு மயானத்தில் வைத்தியருக்கு வேலை
இல்லை. எங்கு மக்களை குணப்படுத்தப்பட முடியுமோ அங்கு தான் வைத்தியருக்குப் பணி உள்ளது.
நம் அனைவருக்கும் அப்பணி உள்ளது.
நாம் அனைவரும் மக்களைச் சென்றடைய வேண்டும். அதற்குச் சிறந்த வழி மகிழ்ச்சி நிலை மதிப்பீட்டுப்
படிவம் தான். வீடு வீடாக சென்று இரண்டு நிமிட காலம் கேட்டுப் பெற்று இம்மதிப்பீடு செய்யுங்கள்.
அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்களா என்று கேளுங்கள். இல்லையென்றால், பெரும்பாலான நேரமா அல்லது சில நேரங்களிலா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மகிழ்வற்ற நிலைக்கு காரணம் என்ன: பொருளாதார நிலையா,
உறவுகளா அல்லது உடல் நிலையா என்று கேளுங்கள். இவையாவும் இன்றி வேறேதேனும் இருந்தால்
கேட்டுக் குறித்துக் கொள்ளுங்கள். இறுதியில் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று
கேளுங்கள். ஒரு மதிப்பீட்டுக் ஆய்வை யாரும் மறுக்க மாட்டார்கள். யாரேனும் ஓரிருவர்
ஆட்சேபித்தால் விட்டு விடுங்கள்.
பலர் என்னிடம், இப்போது தான் முதல்
முறையாக ஒருவர் தம்மிடம் வந்து "மகிழ்ச்சியாக இருக்கின்றாயா உன் மகிழ்வுக்கு நான்
என்ன செய்ய வேண்டும்" என்று தம்மை கேட்டிருப்பதாக கூறியிருக்கின்றனர். அத்தகைய
கவனிப்பும் அக்கறையுமே பலரை மேன்மையாக உணர வைத்திருக்கின்றது. அவர்களது வாழ்வும் மேம்பட்டிருக்கின்றது.
இதுதான் தேவையானது. நாம் அனைவரும் இத்தகைய பணியினைச் செய்ய வேண்டும். ஏற்றுக் கொள்கின்றீர்களா?
ஆம்.....
இடைநிலைப்
பள்ளியில் நான் ஆசிரியராகப் பணி புரிகின்றேன். 15 வயது சிறுமியர் நாளைக்கே கூட நாம்
இறந்து விடலாம், அதனால் இன்றே இன்பங்களை அனுபவித்து விட வேண்டும் என்று கூறுகின்றனர்.
மதுவும் பாலியல் உறவும் முக்கியமானவை என்றும் கூறுகின்றனர்.தங்களைக் கவனித்துக் கொள்வதே
இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
குருதேவ்: இது இடந்தவறி வைக்கப்பட்ட கருத்து ஆகும். எப்படியானாலும்
இறக்கப் போகின்றாய், ஏன் குடித்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்? இறக்கப் போகின்றாய், ஏன் பாலியல்
உறவு கொள்ள வேண்டும்? என்று நீங்கள் மறுபுற கருத்தை முன்வைக்க வேண்டும். இளம் பருவத்தினர்
தாங்கள் விரும்பியதை செய்ய ஏதேனும் காரணத்தை அல்லது கருத்தை எடுத்துக் கொண்டு வருவார்கள்.
நீங்கள் தாம் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அவர்களிடம் “நாளை அவர்கள் இறக்கப் போவதில்லை.
நீண்ட நாள் வாழ்ந்திருப்பார்கள். உடல் நலமின்றி வாழ்ந்திருப்பது நல்லதன்று என்று கூறுங்கள்.
பெற்றோர் குழந்தைகளுக்குக் கற்பித்து வழிநடத்த வேண்டும். அவர்களை இங்கு அழைத்து வாருங்கள்.
உலகெங்கிலும் இளம்பருவத்தினர்
பாலியல் உறவு,போதைப் பொருட்கள், மது இவையின்றி உருவாக்குவது மிகுந்த சிரமமானதாகி விட்டது.
இது ஒரு மிகப் பெரிய சவால்.ஒவ்வொரு நாளும், பல தாய்மார்களும்,தகப்பன்களும் குழந்தைகள்
கெட்ட சகவாசத்தினால் நெறிதவறி செல்வது பற்றி
என்னிடம் கூறி அழுது கொண்டிருக்கின்றார்கள். ஒருவேளை எங்களது பள்ளிகள் உலகெங்கும் இயங்க
வேண்டும் என்று எண்ணுகின்றேன்.
பெற்றோர் என்னும் முறையில், உங்களது
குழந்தைகளுக்கு சரியான சகவாசம் இருக்கின்றதா என்று நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள்
குழந்தைகளின் அனைத்து நண்பர்களையும் உங்கள் வீட்டுக்கு அழைத்து நல்ல முறையில் அவர்களிடம்
பேசுங்கள். உங்கள் குழந்தைகளை விட அவர்களது நண்பர்கள் உங்கள் சொல்லுக்கு மதிப்பு தருவார்கள்,
நல்லதொரு மாமா அல்லது அத்தையாகுங்கள். அவர்களுக்கு நல்ல கதைகள் கூறுங்கள், அவர்களுடன்
கூட விளையாடுங்கள், ஏதேனும் சேவை முயற்சியில் அவர்களை ஈடுபடுத்துங்கள். பெற்றோர் இவை
அனைத்தையும் செய்ய வேண்டும்.