புதன்,
23 ஜூலை
2014,
பாத் அன்டகாஸ்ட், ஜெர்மனி
(அறியாமை,
சுய பச்சாதாபத்தோடு சந்திப்பு ஆகிய பதிவுகளின் தொடர்ச்சி)
கேள்வி
- பதில்கள்
அன்பான
குருதேவ், குடும்ப வன்முறை மற்றும் அதை பற்றிய ஞானத்தைப் பற்றியும் தயவு செய்து பேச முடியுமா? தன
வலியை பொறுத்தே தனது செயல்கள் இருக்கும் என்று இல்வாழ்க்கை துணை நினைக்கும் போது, ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் கடமை இவற்றின் பங்கு தான் என்ன?
குருதேவ்: கேளுங்கள், இரண்டு பேர் சேர்ந்து
வாழ்ந்தால், அவர்களுக்கிடையே விவாதங்கள் நிச்சயம் இருக்கும். எவ்வளவு தான் பொருத்தமான ஜோடியாக இருந்தாலும் எல்லா நேரத்திலும் ஒரே
மாதிரி எண்ணங்கள் ஏற்படாது. கருத்து வேறுபாடு இருக்கும். இருவரும் இனிமையாக
பேசிக்கொண்டே இருந்தால், சர்க்கரை வியாதி தான் வரும்
(சிரிப்பு). சில நேரம் புரிதல் இன்மை வரும், அப்படிவர வேண்டும். ஒருவர் வருத்தம்
கொண்டால் அடுத்தவர் அமைதியாக இருக்க வேண்டும்; மாறி மாறி வருத்தம் கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் இருவரும் வருத்தப்பட்டால், அது பிரச்சினை. ‘நீ வருத்தப்பட்டதால்,
நான் அதைவிட அதிகம் வருத்தப்படுவேன்’, என்று போட்டி போட்டால் அது பெரும்
பிரச்சினை. ஒருவர் எரிச்சல்பட்டால், அடுத்தவர் அமைதியாக இருக்க வேண்டும்.
அவர் அடுத்த முறை எரிச்சல்பட்டுக் கொள்ளலாம். விருப்பப்பட்டால் இரண்டு மடங்கு
எரிச்சல் படலாம், ஆனால் அதே நேரத்தில், அதே இடத்தில் அல்ல. ஒரு மோசமான நாளுக்கு
பதிலாக இன்னொரு மோசமான நாளை சேர்க்கலாம், ஆனால் தொடர முடியாத அளவு அந்த நாளை
பயங்கரமாய் ஆக்கி விட வேண்டாம். வருத்தப் படவோ எரிச்சல் படவோ இருவரும் மாறி மாறி முறை
வைத்துக் கொண்டு செய்யுங்கள். இதுதான் அடிப்படை விதியாக இருக்க வேண்டும். யாராவது
வருத்தப்பட்டால், அவருக்கு ஆதரவாய் இருங்கள்.
இப்போது குடும்ப வன்முறை என்பது கோபத்தினாலும், மதுவினாலும் நடக்கிறது. எந்த
சண்டையும் இல்லாமலேயே குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபின் மனைவியை அடிப்பது
அடிக்கடி நடக்கிறது. மது அருந்தியவருக்கு என்ன செய்கிறோம் என்பது தெரிவதில்லை. உலக
அளவில் இது ஒரு பெரும் பிரச்சினை, குறிப்பாக வளரும் நாடுகளில். குடித்துவிட்டு
வரும் ஆண்கள் தம் மனைவியை அடிக்கிறார்கள். ‘என்னை மன்னித்து விடு, அது நானல்ல,
நான் குடித்த மது தான்’ என்று
மறுநாள் சொல்வார்கள். இது நல்லதல்ல. திருமணம் என்பது கொடுக்கல் வாங்கல், அல்லது இணங்கிப் போவது.
‘நான் இப்படித் தான்
செய்வேன்’, என்று அடம் பிடிக்கக்கூடாது. உங்கள் ஆசைகளையும் விருப்பங்களையும்
ஒதுக்கி வைத்து விட்டு மற்றவருக்கு என்ன வேண்டும் என்று கேட்க வேண்டும். இரண்டிற்கும் இடையே ஏதோ ஒரு
இடத்தில் இணங்கிப்போக வேண்டும். இணங்கிப் போகவில்லை என்றால், பிறகு விவாதம்
தான். விவாதம் இருந்தால் அங்கு சண்டை இருக்கும்.
குடும்ப வன்முறைக்கு மற்றொரு காரணம் மன அழுத்தம். மன
அழுத்தத்தோடு மக்கள் இருக்கும் போது ஒரு சமயம் இல்லாவிட்டால் அடுத்த சமயம் சண்டை வெடிக்கும். மன
அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி என்று மக்களுக்குத் தெரிய வேண்டும்.மேலும்,
ஒவ்வொருவருக்கும், வாழ்க்கையில் ஏதாவது ஒரு இலக்கு இருக்க வேண்டும். கணவன் மனைவி
இருவரும், ஏதாவது பெரிதாக உபயோகமாக செய்ய தங்கள் சக்தியை ஒரு முகப்படுத்தினால்,
ஒருவரை ஒருவர் சந்தேகிக்கவோ, பழி சொல்லவோ அல்லது விரட்டவோ மாட்டார்கள். அடுத்தவரின்
குற்றத்தை பெரிதாக்கி குற்றம் சுமத்திக் கொண்டிருக்க மாட்டார்கள். எனவே
அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு பெரிய இலக்கு இருந்து அதற்காக ஓய்வில்லாமல் வேலை
செய்யும் போது,
எல்லாம் தன்மையாக நடக்கும்.
இரண்டு கோடுகளும் இணையாக ஒரு இலக்கை நோக்கி முன்னே ஓடினால்,
இரயில் தண்டவாளத்தை போல கடைசிவரை இணைந்தே இருப்பார்கள். ஆனால் ஒருவர் மீது ஒருவர்
மட்டுமே தங்கள் எண்ணத்தைக் குவித்தால், ஏதோ ஒரு சந்திப்பில் ஒருவரை ஒருவர்
மீறுவர். எனவே இணைந்து வாழும் இருவர், மற்றவரிடமிருந்து விட்டால் போதும்
என்று ஓடும் அளவுக்கு ஒருவரை ஒருவர் சலிப்பூட்டக் கூடாது. உறவை உயிர்ப்பாகவும் ஆனந்தமாகவும்
வைத்துக் கொள்ள ஆன்மீகமும் ஞானமும் அத்தியாவசியமானது. பெரிய மனம் நிச்சயம்
வேண்டும், விசாலமான பார்வையும் நிச்சயம் வேண்டும். மேலும் அடுத்தவருக்கு உள்ள
இடத்தை அவருக்கு அளிக்க வேண்டும். பிறகு குடும்ப வன்முறை நிகழாது.
அன்பு குருதேவ், என் குடும்பத்தை பற்றி கவலையாய் உள்ளது. பொய்,
புரட்டு மற்றும் பணம் ஆகிய இருட்டு உலகில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களுடன் உள்ள
தொடர்பை முழுமையாக துண்டித்துவிட்டேன், ஆனால் மனதிற்கு வேதனையாய் இருக்கிறது. என்
பேச்சை யாரும் கேட்கவில்லை, பின் விளைவுகள் அவர்களுக்கு மோசமாய் இருப்பதைக் காண
முடிகிறது. இதைப் பார்ப்பது மிகக் கடினம். எனக்கு ஏதேனும் அறிவுரை உள்ளதா?
குருதேவ்: முதலில், அவர்களிடமிருந்து துண்டித்துக் கொள்ளாதீர்கள்.
அவர்களை பற்றி உங்களுக்கு கவலையும் இல்லை, அவர்களிடமிருந்து விலகியும்
இருக்கிறீர்கள் என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாதீர்கள். அந்த எண்ணம் அவர்களுக்கு
எந்த உதவியும் செய்யாது. உதவி செய்வது உங்கள் உடன் பிறந்த குணம், நீங்கள் உதவி செய்யவும் விரும்புகிறீர்கள்.
ஏதோ ஒரு காரணத்திற்காக இந்தக் குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்
ஏதோ ஒரு இணைந்த கர்மா இருக்கிறது, எனவே அவர்களுக்கு என்ன முடியுமோ அந்த அளவு உதவி
செய்யுங்கள். அதற்காக அங்கேயே தினமும் இருந்து அவர்கள் சொல்வதெல்லாம் கேட்டு
எல்லாவற்றிலும் ஈடுபடுவது அல்ல. ஒரு நட்பான உறவை மேற்கொள்ள வேண்டும். நீங்கள்
செய்ய விரும்புபவற்றிற்கு இடையே அந்த இதயபூர்வமான நட்பு குறுக்கிடாது. உங்கள்
வாழ்கையை நீங்கள் வாழுங்கள் அவர்கள் வாழ்கையை அவர்கள் வாழட்டும், ஆனால் அவர்களுடன்
நீங்கள் இதயபூர்வமான உறவு கொள்ளலாம். உங்களுக்கு பிடிக்காதவற்றை அமைதியாக
மறுத்துவிட்டு, முடியும்போதெல்லாம் அவர்களுக்கு உதவலாம். நம் உணர்வை
சொல்வதிலும் நம்முடைய செயல்களிலும் இந்த திறனைத் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த உலகம் முட்டாள்தனமான, பைத்தியக்காரத்தனமான, மனம் குலைந்த மக்களால் நிரம்பியிருக்கிறது. உக்ரைனில் என்ன செய்தார்கள் என்று
பாருங்கள், அவ்வளவு பயணிகள் இருந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். ஈராக்,
காசா, இஸ்ரேல் - இங்கெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? எல்லாவற்றையும்
விட்டுவிட்டு வேறு ஒரு கிரகத்திற்கு சென்று விட முடியுமா? இல்லை! இந்த மக்களுடன் தான் இந்த கிரகத்தில் தான் வாழ்ந்தாக வேண்டும்.
ஒரு புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் நமது பெங்களூரு
ஆசிரமத்திற்கு சமீபத்தில் வந்திருந்தார். கண்களைத் திறக்கும் ஒரு உரை
நிகழ்த்தினார். மருந்துப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களின் வற்புறுத்தலால்,
எத்தனை எத்தனை சோதனை பிரயோகங்கள் நடைபெறுகிறது என்று கூறினார். ஒரு குறிப்பிட்ட
மருந்தின் சோதனைப் பிரயோகத்தின் முடிவு அறிக்கையில் திருத்தம் செய்து அதை பொது
உபயோகத்திற்கு உகந்தது என்று அனுமதித்த முதன்மை மருத்துவ அதிகாரியைப் பற்றி
கூறினார். ஆனால் அந்த மருத்துவ அதிகாரி தான் இறக்கும் தருவாயில், மோசமான பக்க
விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அந்த மருந்தை மோசடி செய்து அனுமதி வழங்கியதற்கு
மிகுந்த வருத்தம் தெரிவித்தார். அந்த மருந்து இன்னும் உலக அளவில் மக்களுக்கு
அளிக்கப்பட்டு வருகிறது. இதைப் போன்ற பல மருந்துகள் இன்னும் புழக்கத்தில் உள்ளது.
இது போல பல நிகழ்வுகளை கூறிய அவரை, இங்கு ஒரு நாள் உரை
நிகழ்த்த அழைக்கலாம். அமெரிக்காவிலும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையிலும் உள்ள
பெரும்பாலான அறுவை சிகிச்சை நிபுணர்கள் இவருடைய மாணவர்களே. ஓய்வு பெற்ற அவர்
இத்தகைய மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிரானவர். வேலை செய்யும் போது இந்த நிறுவனங்கள் செய்யும்
தொந்திரவுக்கு அளவே இல்லை, தொழிலையே அழித்துவிடுவார்கள் என்கிறார். ஆனால் இப்போது தாம் ஓய்வு பெற்று விட்டதால் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக
பேசலாம் என்கிறார்.
இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மக்களின்
ஆரோக்கியத்தை பாழாக்குகின்றன. வெண்ணை உண்டால் கொலஸ்டிரால் அதிகமாகி இதயத்திற்கு
கேடு விளைவிக்கும் என்று ஒரு முழு தலைமுறையே இதைப் பற்றி யோசித்து வருகிறது. நமது
ஆசிரமத்தில் இருக்கும் ஒரு வயதான சுவாமிஜிக்கு சற்றே இருதயக் கோளாறு இருந்தது.
இவருக்கு கொலஸ்டிரால் அதிகமாகி விட்டது அதனால் இவர் வெண்ணையே சாப்பிடக் கூடாது
என்று ஆங்கில மருத்துவர் கூறிவிட்டார். ஆனால் ஆயுர்வேத மருத்துவர் இவர் வெண்ணை
சாப்பிட வேண்டும் என்கிறார். புகழ்பெற்ற டைம் பத்திரிகையில், வெண்ணை நல்லது ஆனால்
செயற்கை வெண்ணை தான் (டால்டா
அல்லது மார்கரைன்) தான் நல்லதல்ல என்று இப்போது எழுதியிருக்கிறார்கள். செயற்கை
வெண்ணையைத் தான்
வெண்ணைக்கு பதிலாக பயன்படுத்தி வந்தனர். அந்த ஆராய்ச்சி எல்லாம் தவறு.
அதே போல, இந்தியாவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி
வந்தனர். ஆனால், இந்த மருத்துவ நிறுவனங்களின் தவறான ஆராய்ச்சியும் அதைக் கொண்டு
அவர்கள் செய்த பிராசாரமும், தேங்காய் எண்ணெய்க்கு பதில் பாமாலின் எண்ணெய்யை
உபயோகப்படுத்தச் சொன்னது. பாமாலினை விட குளிர் முறையில் எடுக்கப்பட்ட தேங்காய்
எண்ணெய் தான் சரி என்று இப்போது கூறுகிறார்கள். கடந்த நூற்றாண்டில் உபயோகப்படுத்தப்பட்ட
இரசாயனங்கள் உடலுக்கு கேடு விளைவிப்பது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது. இப்போது
மரபணு மாற்ற விதைகளையும் விளை பொருட்களையும் பயன்படுத்தச் சொல்கிறார்கள். இதைத்
தயாரிக்கும் நிறுவனத்தின் ஊழியர்களே அதை உண்பதற்குத் தயாராயில்லை. இதற்கு என்ன
பொருள்? மான்சாண்டோ நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் அலுவலக உணவகத்தில் மரபணு மாற்ற
உணவுப் பொருட்களை உண்ண மறுத்துவிட்டனர்.
இந்த நிறுவனங்களுக்கு பணம், பணம், பணம் மட்டுமே அவர்களுடைய
கவலையெல்லாம். மக்கள் இறந்தால் கூட அதை பொருட்படுத்த மாட்டார்கள். வட அமெரிக்காவில்,
இதைப் போன்ற மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், போதை மருந்து நிறுவனங்கள் மற்றும்
துப்பாக்கி விற்பனை செய்யும் நிறுவனங்கள் மிக அதிகம். ஐரோப்பாவில் அவ்வளவு இல்லை.
அமெரிக்காவில் மளிகைக் கடைகளின் எண்ணிக்கையை விட துப்பாக்கி விற்கும் கடைகளின்
எண்ணிக்கை அதிகம். இரண்டு துப்பாக்கி விற்கும் கடைகளுக்கு ஒரு மளிகைக் கடை என்ற
விகிதத்தில் இருக்கிறது. இதற்காக வேலை செய்ய பெரிய குழுக்கள் இருக்கின்றன. இந்தக்
குழுக்கள் சமூகத்தின் ஆரோக்கியத்தை பாழாக்குகிறது, யோகா மற்றும் தியானம் போன்றவை
எல்லாம் குப்பை என்று கருதுகிறது. மேலும் அதிக மக்களுக்கு யோகா மற்றும் தியானத்தை
தெரியப் படுத்தி அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுத்த வேண்டும். ஓரு
முழு தலைமுறையே வெண்ணை கெடுதலானது என்று கருதி வெண்ணையின் சுவையை அனுபவிக்கவில்லை.
ஒரு புதியவரின் முகத்தில் எப்படி இறைவனை காண்பது?
குருதேவ்: உண்மை இதற்கு
நேர்மாறானது. உங்களுக்கு பரிச்சயமான முகத்தில் இறைவனை காண முடியாது. ஏனென்றால் ஒரு
புதியவரைப் பற்றிய நல்லது கேட்டது உங்களுக்குத் தெரியாது, எனவே இறைவன் அவரிடத்தில்
இருக்கக் கூடும் என்று நினைக்கலாம். அவரைப் பற்றிய தீயகுணங்கள் ஏதும் அறியாததால்,
அவரிடம் இறைவனை காண்பது எளிது. உங்களுக்கு பரிச்சயமானவரின் தீய குணங்களையும், பலவீனங்களையும் நீங்கள்
அறிவீர்களென்பதால் அவர் முகத்தில் எப்படி இறைவனை காண்பது என்று கேட்பீர்கள். ‘மற்றவர்களிடம் இறைவனைப் பார்ப்பதை
விட்டுவிட்டு உங்களிடமே இறைவனைக் காணுங்கள்.’ என்று நான் கூறினால், ‘என்னிடமே இறைவனைப்
பார்க்க முடியவில்லை.’ என்பீர்கள். ‘எதைபற்றியும் கவலை வேண்டாம், ஒரு கம்யூனிஸ்டாக மாறி இறைவனை எங்கும் பார்க்க
வேண்டாம்.’ என்று நான் சொல்ல வேண்டிவரும். எனவே இது உங்கள் தேர்வு!
இறைவன் என்றால் என்னவென்று சொல்வீர்கள்? இறைவன் என்றால்
அன்பு. அடுத்த மனிதர் அன்பால் உருவாக்கப்பட்டிருப்பதை உங்களால் பார்க்க
முடியவில்லையா? அறிமுகமான
ஒருவரை விட ஒரு புதியவரிடம் இறைவனை பார்ப்பது எளிது. அறிமுகம் வெறுப்பை
உண்டாக்கும் என்ற பழமொழியை நீங்கள் கேட்டதில்லை? ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை.
பல நேரங்களில் மக்கள் நடுநிலைமையோடு இருக்கிறார்கள். எவ்வளவு அதிகம் மற்றவர்களிடம்
நெருங்குகிரீர்களோ அந்த அளவு அவர் அருமையானவராகவும் அன்பானவராகவும் இருப்பதைக்
காண்பீர்கள். அறிமுகம் வெறுப்பை உண்டாக்கும் என்பதும் ஓரளவு உண்மை தான்.