சனிக்கிழமை,
14 ஜூன் - 2014
கேள்வி - பதில்
குருதேவ்,
ஒரு யோகிக்கு இந்த உலகம் ஒரு கடுந்தவ சூழல், ஒரு போகிக்கு தனிமை ஒரு கடுந்தவச்
சூழல். கடுந்தவத்தை விஞ்சி வாழ்கை இருக்க முடியுமா?
குருதேவ்: கடுந்தவம்
நம்மை உறுதியாக்குகிறது. ஒரு
யோகி காட்டில் தனியாக இருந்தாலும் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். ஆனால் அவர் ஒரு
கூட்டத்தில் இருக்கும் போது, மக்கள் அவரை இடித்தும், நசுக்கியும், காலைப் பிடித்து
இழுத்தும், வலி ஏற்படுத்தி தொந்திரவு செய்தாலும் கூட, அவர் கோபப்படாமல் சாந்தமாய்
இருந்தால், அவர் வெற்றி பெற்று விட்டார். ஒரு
யோகிக்கு தனியாக இருப்பது வெகு எளிது. ஆனால் கூட்டத்துக்கு நடுவே வசதியாகவும்
மகிழ்ச்சியாகவும் இருப்பது கடுந்தவம் மற்றும் ஒரு திறமை. அந்தத் திறமை அவசியம். அதைப் போல,
ஒரு போகி கூட்டத்துக்கு நடுவே மகிழ்ச்சியாக இருப்பார். ஆனால் அவர் மனத்தாழ்ச்சி
அடைந்து தனியே இருப்பாரானால், அவர் கூட்டத்தில் இருக்கும் போதும் அவர் மகிழ்ச்சியாக
இருக்க மாட்டார். இது ஏன்? ஏனென்றால் அவருக்கு உள்ளே நிறைவில்லை. உங்களுடன் நீங்களே மகிழ்ச்சியாக இருக்க முடியாதபோது,
மற்றவர்களுடன் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? அதனால் தான், கொஞ்சம் நேரம் மௌனத்தில் இருந்தால், கொஞ்சம்
நேரம் உங்களுடனேயே இருந்தால், உங்களுக்குள் ஒரு நிறைவு ஏற்படுகிறது. பின்னர்,
மற்றவர்களுடைய கவனத்திற்காக, அவர்கள் புகழ்வதற்காக நீங்கள் ஏக்கம் கொள்ள மாட்டீர்கள்.
குருதேவ்,
எனக்கு ஒரு காதலி இருக்கிறாள், நாங்கள் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்புகிறோம்.
ஆனால் அவளுக்கு செவ்வாய்த் தோஷம். இதனால் என்னுடைய பெற்றோர்கள் எங்கள் திருமணத்தை
எதிர்கிறார்கள். நான் என்ன செய்வது என்று தயவு செய்து சொல்லுங்கள்.
குருதேவ்: உங்கள் பெற்றோர்களுக்கு அதில் நம்பிக்கை இருந்தால், அதில் உறுதியாக இருந்தால்,
பிறகு விதைத்ததைத் தானே அறுக்க முடியும். நீங்கள், ‘இறைவன் எல்லாவற்றையும்
விஞ்சியவன், எனக்கு இறை மீது ஆழ்ந்த பக்தி உள்ளது, அவர் என்னை இதிலிருந்து
காப்பாற்றுவார்’, என நினைத்தால் அது வேறு. எனவே
நீங்கள் அனைவரின் சம்மதத்தோடு இதை நீங்கள் செய்ய வேண்டும். ஒரு
யாகமோ அல்லது ஒரு நற்காரியமோ செய்யும் முன், முதல் விஷயம் எல்லோருடைய சம்மதத்தை பெறுவது. தொடக்கத்தில், இந்தச் செயலை செய்ய எல்லோருக்கும் சம்மதமா?’ என்று பொதுவாகக்
கேட்பார்கள். எல்லோருக்கும் சம்மதமென்றால், எல்லோரும் பங்கு கொள்வார்கள்.
நீங்கள் எல்லோரும், ஒன்றாக அமர்ந்து சூழலை அலசி பிறகு முடிவு எடுங்கள். ‘இறைவனின்
கருணை எல்லாவற்றையும் விட மேலானது, பக்தியும், பிரார்த்தனையும் பிரச்சினையிலிருந்து நம்மைக் காப்பாற்றும்,’ என்று நினைத்தால், எல்லா கிரகங்களின்
விளைவும் நேர் செய்யப்படும்.
மேலும்,
‘ஓம் நமசிவாயா’, ஜெபிப்பதன் மூலம் எல்லாம் சரியாகிவிடும். ஒரு
ஜோதிடரை பார்த்ததாக நேற்று பூனாவில் என்னிடம் ஒருவர் கூறினார். ‘உன்னுடைய கிரக
நிலைப்படி நீ நிறைய அவஸ்தைப்பட வேண்டும். எப்படி நன்றாக இருக்கிறாய்?’ என்று அந்த
ஜோதிடர் அவரிடம் கேட்டாராம். கடவுளின் கருணையால் தனக்கு எல்லாம் நன்றாக நடப்பதாக
ஜோதிடருக்கு பதிலுரைத்தாராம். பக்தி, கருணை மற்றும் ஆசீர்வாதம் எல்லாவற்றையும் விட
மேலானது; இது முற்றிலும் உண்மை.
குருதேவ்,
அன்பிற்கினியவர்களை இழந்து விடுவோமோ என்ற பயத்தை வெல்வது எப்படி?
குருதேவ்: உங்களுக்கு
வேறு வேலை ஏதும் இல்லாமல் சும்மா இருந்தீர்களென்றால், எப்படியாவது இந்த பயம்
வந்துவிடும். அன்பிற்கினியவரை இழந்து விடுவோமோ என்ற பயம், அல்லது ஏதாவது வியாதி
வந்து விடுமோ என்ற பயம், அல்லது இறந்து விடுவோமோ என்ற பயம்; இப்படி பல வகையான பயம்
உங்களை ஆட்கொள்ளும்.
பயத்தை
முறிக்கும் மருந்து அன்பும் தொண்டும் தான். தொண்டு
செய்வதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் போது, எதைப் பற்றியும் நினைக்க
உங்களுக்கு நேரம் ஏது? பயம், வெறுப்பு மற்றும் அன்பு இவை எல்லாம் ஒரே சக்தியின்
வெவ்வேறு வடிவங்களே. எனவே அந்த சக்தியை நீங்கள் அன்பில் செலுத்தினால், அது பயமாகவோ
வெறுப்பாகவோ மாறாது. எனவே, உங்களுக்கு நேரமே இல்லாதவாறு ஏதேனும் சுயநலமில்லாத
தொண்டில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுவது உதவும்.
குருதேவ்,
நீங்கள் ‘கொண்டாட்டத்தை இறைவன் விரும்புகிறார்’ என்ற புத்தகத்தை
எழுதியிருக்கிறீர்கள். ஆனால். கொண்டாட்டத்தின் பின்னே சென்றீர்களென்றால்
துயரம் தான் வரும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அது சரியா?
குருதேவ்: ஆம் அது சரி. நீங்கள் கொண்டாட்டத்தை பின்
தொடர்ந்தால் உங்களை துயரம் தான் பின் தொடரும், நீங்கள் ஞானத்தை பின் தொடர்ந்தால்
உங்களை கொண்டாட்டம் பின் தொடரும்.
குருதேவ்,
சில சமயம் என் நாட்டின் மீதான காதல், உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்துக்கு
முரணாகத் தெரிகிறது. பெரிதுக்காக சிறிதைத் துறக்கலாமா?
குருதேவ்: இந்த இரண்டிற்கும் இடையே எந்த முரண்பாட்டையும் நான்
காணவில்லை. ஒரே சமயத்தில் நாட்டையும் விரும்பலாம், மனித சமதாயத்தின் மீது
அன்பாகவும் இருக்கலாம். நீங்கள்
இரண்டையும் செய்யலாம். எப்படி
ஒரு குடும்பஸ்தர் தன் குடும்பத்திற்கும் சேவை செய்துகொண்டு தன் நாட்டிற்கு சேவை
செய்வது இயலுமோ அப்படித்தான் இதுவும். சமூக
சேவை செய்வதால், வீட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்பதல்ல. அது சரியல்ல. நீங்கள்
இரண்டையும் செய்ய வேண்டும், நீங்கள் குடும்பத்தையும் கவனிக்கலாம், சமூகத்திற்கும்
சேவை செய்யலாம். இப்போது, உங்கள் குடும்பத்திலுள்ள ஒருவர் காரணமேயில்லாமல்
அதிருப்தியாய் இருந்தால், நீங்கள் என்ன செய்ய முடியும். ஆனால் யாரும் அதிருப்தி
அடையும்படி நீங்கள் எதையும் செய்யாமலிருக்க வேண்டும்.
அதைப்
போலவே நீங்கள் நாட்டிற்கும் சேவை செய்யலாம், உலக குடும்பத்தின் ஒரு பகுதியாகவும்
இருக்கலாம். யாரையும் வெறுப்பது தேசப்பற்று அல்ல. மற்றவர்களை எதிர்ப்பது
தேசப்பற்று அல்ல. நீங்கள் யாருக்கும் எதிரானவர் அல்ல, அதே நேரம் நாட்டையும்
காக்கலாம், அதன் வளர்ச்சிக்காக உழைக்கலாம். இது தான் தர்மம். மகாபாரதத்தில்
கூட, எதிரிகளை வெறுக்க சொல்லி ஸ்ரீ கிருஷ்ண பகவான் பாண்டவர்களிடம் சொல்லவில்லை.
வெறுப்பைப் பற்றி அவர் பேசவேயில்லை. ஸ்ரீ
கிருஷ்ண பகவான் கூறினார், ‘யுத்யாஸ்வ விகதா-ஜ்வராஹ்.’ வெறியின்றி
போர் புரிதல்.
வெறியோடு,
சுர வேகத்தில் போர் புரிந்தால் உங்கள் மனம் சலனமடையும். சாந்தமான மனதுடன் போர்
புரிய வேண்டும்.அவர் கூறினார், ‘யோகஸ்த குரு கர்மணி’’. (அதன் பொருள்: யோகத்தில்
நிலையாய் இருந்து நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். பற்றை ஒழித்து
விட்டு வெற்றி தோல்விகளை கருத்தில் கொள்ளக் கூடாது. இந்த உறுதிப்பாடுதான் யோகம்).
இப்படிப்பட்ட
உயர்ந்த தத்துவங்களை உருவாக்கி பின்பற்றி உலகின் மற்ற பகுதிகளுக்கு உதாரணமாய்
இருந்தது இந்தியா.