மந்திரம் ஏன் ரகசியமாக வைக்கப்படுகிறது


அக்டோபர்  - 17 -  2013 பெங்களுரு, இந்தியா.



கே: குருதேவ்! மந்திரம் ஏன் அவ்வளவு ரகசியமாக கொடுக்கப்படுகிறது? வெளிப்படையாக கொடுக்கப்பட்டால் மந்திரம் அதன்  சக்தியை  இழந்து விடுமா? 

குருதேவ்:  தெரியுமா, உங்கள் மனதிற்குள் உங்களை எதாவது தொந்தரவு செய்து கொண்டிருந்தால், அதை   நீங்கள் வெளிப்படுத்தி விட வேண்டும் என்று உளவியல் கூறுகின்றது. அதை நீங்கள் வெளிப்படக்கூடிய  நிலைக்கு கொண்டு வந்துவிட   வேண்டும்.  பிறகு நீங்கள் அதிலிருந்து விடுபட்டிருக்கலாம், 

மந்திரம் நமக்கு உள்ளேயே  இருக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம். நாம் அதை வெளிப்படக்கூடிய   நிலையில் வைக்க விரும்புவதில்லை. நாம் அந்த மந்திரம் நம் மனதிலேயே இருக்க வேண்டும் என்றும் நம் மனம்  ஆழ்ந்து செல்ல வேண்டும் என்றும் விரும்புகின்றோம். எனவே உங்களுடைய  மனம் ஆழ்ந்து செல்லுவதற்காக, நீங்கள் அந்த மந்திரத்தை வெளிப்படக்கூடிய   நிலையில் அல்லாது   ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அதனால் தான் அது ரகசியமாக கொடுக்கப்படுகிறது. ஒரு ரகசியம் உங்கள் இதயத்திலும் மற்றும் உள்ளுணர்விலும்     மிக ஆழமாக தங்கி விடுகிறது.      

எனவே மந்திரம் என்பது நமது மனத்தை நம்முடைய உள்ளுணர்வுகளுக்குள் செலுத்தக் கூடிய ஒரு வாகனம் ஆகும். அதனால் தான் அது ரகசியமாக வழங்கப்படுகிறது.  அவ்வாறு எனக்கு  வழங்கப்படும்   மந்திரம் வெளிப்படையான பொதுவான மந்திரமாக   இருந்தாலும், அது என்னுடைய மந்திரம், நான் அழ்ந்த தியான நிலைக்கு செல்லுவதற்காக அதை ஒரு ரகசியமாக வைத்து கொள்ளுவேன். புராதன காலத்தில் இருந்து இதுவே இதன் பின் உள்ள கருத்து.  இது அந்த அளவு அறிவியலானது.

அனைவராலும் சப்தத்துடன் உச்சரிக்ககூடிய மகாமந்திரங்களும் உள்ளன. ஆனால் தனிப்பட்ட மந்திரம் என்பது ஒருவர் ரகசியமாக வைத்திருக்க வேண்டியது. அதைத்தான் நாங்கள் உங்களுக்கு சஹஜ் சமாதி தியானப் பயிற்சியில்  வழங்குகின்றோம். நீங்கள் அதை உங்களுக்கு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். அது   வெளிப்படக்கூடிய நிலையில்   வைத்துக் கொள்ளகூடாது.  ஆனால் "ஓம் நமசிவாயா" மற்றும்  "ஓம்"  போன்ற மந்திரங்ககளை சப்தமாக உச்சரிக்கலாம். அவை அதிர்வுகளை மேம்படுத்தும். 

கே: குருதேவ்! பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் ஸ்வதர்மா மற்றும் பரதர்மா பற்றி பேசுகிறார். ஆனால்  மகாபாரத காலத்தில் சனாதனதர்மம் தவிர வேறு மதம் ஏதும் இல்லையே. தயவு செய்து இது பற்றி விளக்க முடியுமா?        

குருதேவ்: மதமும் சம்பிரதாயமும் வேறு. தர்மம் வேறு.  இவை இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். சம்பிரதாயம்   என்றால் மரபுகள் அல்லது பாரம்பரியங்கள் ஆகும்.  தர்மம் வேறு எந்த மொழியிலும் மொழி பெயர்க்க இயலாதது. அது ஒரு தனி மனிதனின் இயற்கை. மொழி பெயர்க்க வேண்டியிருப்பின்,  ஒருவரின் நேர்மையான இயற்கை என மொழி பெயர்க்கலாம். எனவே தர்மம் என்பது உங்ககளின் உள்ளார்ந்த போக்குகள் மற்றும் உடன்பிறந்த குணங்கள் ஆகும். கிருஷ்ண பகவான் " ஸ்வதர்மேநிதனம்ஸ்ரேயாஹ்"  என்று சொல்லும்போது, நீங்கள் உங்களுடைய உள்ளார்ந்த போக்குகளுடனும் உடன்பிறந்த குணங்களுடனும் இருக்க வேண்டும் என்றும் மற்றவர்களை பின்பற்ற வேண்டாம் என்றும் சொலுகிறார். இயற்கையாக இருப்பதும், உங்களுடைய இயல்பாக இருப்பதும் தான்  ஸ்வதர்மா ஆகும்.       

கே: குருதேவ்! ஆத்மா மற்றும் பரமாத்மா என்பவை என்ன? இரண்டுக்கும் இடையே  உள்ள  உறவு   என்ன ? மேலும்  பிரம்மா, விஷ்ணு, சிவா  இவர்கள் யார்?    

குருதேவ்: ஆரம்பத்தில் வெறும் சக்தி மட்டுமே என்றார்கள்.  அந்த ஒரு சக்தி,  ஒரு  தெய்வீக ஒளி, " நான் தனியாக இருக்கிறேன், நான் பலமடங்காக பெருக வேண்டும்" என்று எண்ணியது. நான் ஒன்று, நான் பலவாக மாற வேண்டும்(எகோஹம்பஹுச்யம்) என்று பராசக்தியின் வடிவத்தை ஏற்றுக்கொண்டது. பிறகு அதில் இருந்து மூன்று சக்திகள் வெளி வந்தன. அவையே, பிரம்மா விஷ்ணு மற்றும் மஹேஷ். படைக்கும் உந்து சக்தி, பாதுகாப்பளிக்கும் உந்து சக்தி மற்றும் அழிக்கும் உந்து சக்தி. மூன்று விதமான சக்திகளே  பிரம்மா விஷ்ணு மற்றும் மஹேஷ். அதனால்   தான் ஆரம்பத்தில் "ஓம்கார்" என்னும் ஒரே ஒலி  இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஓம்காரமே பிறகு 'ஆ'  ' ஊ '  'ம்'   என்றானது. 'ஆ'  'ஊ '  'ம்' ஆகிய மூன்றும் சேர்ந்ததே ஓம்காரம் என்று நாம் நினைத்துக் கொண்டிருகிறோம். இல்லை. ஓம் ஒரு ஆரம்பமே. மற்றும் இந்த ஒரு உந்து சக்தி தான் மூன்று வெவ்வேறான உந்து சக்திகளாக அல்லது தேவதைகளாக  விரிவாக்கப்பட்டது.       

ஆகையினால், பல்வேறு படைப்புகள் இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு பரமாத்மா அல்லது ஒரு தெய்வம் பலவாக பெருக்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரே ஒரு அமீபியாசிஸ் இருந்ததாகவே அனைத்து விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். ஒரு அமீபியாசிசில் இருந்து இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் உண்டாயின. 

கே: குருதேவ்! இந்த உலகில் எல்லாமே மாறுகின்றன என்று கூறி இருக்கிறீர்கள். அறிவும் அவ்வாறே நேரத்துக்கு நேரம் மாறுகின்றதா என நான் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். நாம் பல ஆண்டுகளாக அதே பகவத் கீதையைத் தான் படித்துக் கொண்டு இருக்கின்றோம். அது இன்னமும் பொருத்தமானது தானா? 

குருதேவ்: அறிவு பலதரப்பட்ட நிலைகளில் புரிந்து கொள்ளக் கூடியது. பலதரப்பட்ட உணர்வு நிலைகளில் அறிவு பல தோற்றங்களை வெளிப்படுத்தும். அறிவு மாறுவது இல்லை, ஆனால் உங்களுடைய உள்ளுணர்வு வெளிப்படும் போதும் மற்றும்   மலரும் போதும் அது உயர்ந்த பொருளைக் கொடுக்கும்.

கே: குருதேவ்! தற்போதுள்ள உலக அரங்கில்,அமெரிக்கா பொருளாதார உயர்வெழுச்சியை அடைந்த நிலையானது, மற்ற உலக நாடுகளையும் பாதிக்கின்றது. எல்லா நாடுகளும் ஏதேனும் கர்மாவால் பாதிக்கப்பட்டுள்ளனவா?

குருதேவ்: அமேரிக்கா இராக்குடன் போர் செய்யப் போனதன் மூலம் ஒரு தவறான முடிவை எடுத்து விட்டது. ஒவ்வொரு நாளும் நூறு கோடி டாலர்கள் பல ஆண்டுகள் செலவு செய்தது. ஐந்தாறு ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் நூறு கோடி டாலர்கள் செலவு செய்து கொண்டே வந்தது. மக்களை மொத்தமாக அழிக்க வல்ல ஆயுதங்களை, அவை இல்லவே இல்லாத இராக்கில் தேடி, பத்தாயிரம் கோடி டாலர்களை இராக் போரில் செலவிட்டது என்றால் உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா?

ஆனால் இந்த நெருக்கடி நிலையில் இருந்து அமெரிக்கா வெளியே வரும் என்று நான் உறுதி கூறு கின்றேன். அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால் அமெரிக்கா வேறொரு போரில் ஈடுபடத் துவங்கக் கூடாது. பேச்சு வார்த்தை என்பதுதான் சரியான வழி.

இராக் கேடான நிலையிலிருந்து மிகக் கேடான நிலைக்குச் சென்று விட்டது. இன்று இராக் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒவ்வொரு நாளும் குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. தினமும் மக்கள் கொல்லப்படுகின்றார்கள். இதுவா ஜனநாயகம்? இதுவா மக்கள் ஒவ்வொருவரும் விரும்பி வரவேற்கும் புதிய மாற்றம்? இவை தாம் பாடங்கள். நாம் கவனித்துப் பார்க்க வேண்டிய பல பெரிய கேள்விகள் உள்ளன.

அமெரிக்கா தனது படைவீரர்களைப் பெருமளவில் இழந்து விட்டது. போருக்குச் சென்ற வீரர்கள் பலர், உணர்வதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கின்றார்கள். இப்போரினால் யாருக்கும் லாபமில்லை.உலகிற்கு லாபமில்லை, அமெரிக்காவிற்கும் லாபமில்லை, இராக்கிற்கு நிச்சயமாக எந்த லாபமுமில்லை. இவ்வாறின்றி பேச்சு வார்த்தை நடந்திருந்தால், இந்தியா போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்யும் நிலையில் இருந்திருக்கும்.பல தவறான புரிதல்களை சரி செய்திருக்கும். எதுவானாலும், அது நடந்து முடிந்த விஷயம். கடந்த கால தவறில் இருந்து படிப்பினையை அறிய வேண்டும்.அமைதிக்கு விடை ஆயுதங்களோ அல்லது போரோ அல்ல. உண்மையில், அமைதியை ஏற்படுத்துவது தான் போரின் நோக்கம். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாகவே நடந்து வருகின்றது.

கே: குருதேவ்! சில சமயக் கோட்பாடுகள், ஆத்மாவையும், ஆவியையும் வேறுபடுத்தி காட்டுகின்றன. இறப்புடன் ஆத்மா அகற்றப்படுவதாகவும், ஆவி மறு உருவெடுப்பதாகவும், கூறப்படுகின்றது. அதிலும், அகந்தையுள்ள மனிதனுக்கே மறு பிறவி என்றும் கூறப்படுகின்றது. வேதங்களின் கருத்து விளக்கம் என்ன?

குருதேவ்: வேதக் கருத்து, அறிவியல் கோட்பாடான வெப்ப இயக்கியல் / தெர்மோடைனமிக்சை ஒட்டியது ஆகும். அதாவது சக்தி/ஆற்றல்  என்பதை ஆக்கவோ அழிக்கவோ முடியாது  என்பது ஆகும். உடல் ஐந்து மூலத் தத்துவங்களாக (பஞ்ச பூதங்கள்) இப்பூமிக்கே திரும்பச் செல்லுகின்றது. உயிர் அதாவது சக்தி / ஆற்றல் ஆன்மீக வடிவில் தங்கிவிடுகின்றது.உடலில் இருந்த போது ஏற்பட்ட எண்ணப் பதிவுகளுக்கு ஏற்ப அவ்வுயிர்  வேறொரு தகுந்த உடல் வழியாக மீண்டும் வருகின்றது.

இன்று  மறு பிறவி என்பது எந்த சந்தேகத்துக்கும் இடமில்லாமல் நிலை நிறுத்தப் பட்டு விட்டது. உலகில் பல மருத்துவ மனைகளில், முற்பிறவி எண்ணப் பதிவுகளை சிகிச்சை முறையாக பயன்படுத்தி மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கின்றனர். எனவே, மறுபிறவி உள்ளதா இல்லையா என்னும் கேள்விக்கு விடை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப் பட்டு விட்டது.எனவே நான் மறுபிறவி உண்டு என்று கூறுகின்றேன். எனக்கு அது தெரியும். எனவே நான் அதிகாரபூர்வமாகக் கூறுகின்றேன். ஆனால் அதை உங்களுக்கு நிரூபித்துக் காட்ட இயலாது.ஆனால் உறுதியாக பிறவிகள் உண்டு.

கே: குருதேவ்! மந்திரங்களை 108 முறை ஜபிப்பதன் காரணம் என்ன? அவசரமாக 108 முறை ஜபிப்பதை விட 10 முறை ஆழ்ந்த கவனத்துடன் மெதுவாக ஜபிப்பது மேலல்லவா?

குருதேவ்: ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்திருக்கின்றது.மெதுவாக ஆழ்ந்த கவனத்துடன் ஜபிப்பது மிக நல்லது. அவசரமாக என்றாலும் பரவாயில்லை. செய்கின்றீர்களே! கட்டாயம் செய்யுங்கள்.

ஏன் 108 தடவைகள்? ஏனெனில்,ஒன்பது கிரகங்கள் உள்ளன. பன்னிரண்டு விண்மீன் குழுக்கள் உள்ளன. இந்த ஒன்பது கிரகங்களும், பன்னிரண்டு விண்மீன் குழுக்களை சுற்றி வரும்போது 108 விதமான மாறுதல்கள் ஏற்படும். இந்த மாற்றங்களில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் மந்திரங்களில் உள்ள நேர் மறை அதிர்வுகளால் அவற்றைச் சரியாக ஆக்க முடியும்.

கே: குருதேவ்! வாழ்வின் இறுதியில் இரண்டு கேள்விகள் கேட்கப் படும் என்று கூறி இருக்கின் றீர்கள். அவை எவ்வளவு அன்பைக் கொடுத்தீர்கள்? எவ்வளவு அறிவைப் பெற்றீர்கள் என்பன. நான் எப்போதுமே அன்பை பெற்று  அறிவை கொடுத்திருக்கின்றேன். என்னுடைய விதி என்னவாக இருக்கும்?

குருதேவ்: இவ்வளவாவது புரிந்து கொண்டீர்களே! இத்தனை காலம் அறிவினை அளிப்பதில் மகிழ்ந்திருக்கின்றீர்கள். இனிமேல் அன்பை அளித்து அறிவினைப் பெறுங்கள். இதுவரை எவ்வளவு அன்பைப் பெற்றீர்களோ அதை விட அதிகமாகப் பிறர் மீது இனி அன்பை பொழியுங்கள். அவ்வளவு தான். வாகனம் இப்போது ‘ U ’ வளைவை எடுத்து விட்டது. இதுவரை தவறாகச் சென்று கொண்டிருந்தது, ஓட்டுனர் அத் தவறை உணர்ந்து விட்டதால் செல்லும் திசையை மாற்றி விட்டார்.

நாம் ஞானத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று இதனால் பொருள் ஏற்படுகின்றதா என்ன? இல்லை. பகிர்வதை நிறுத்தாதீர்கள். தொடர்ந்து அறிவை பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது வரை எதை அடைந்தீர்களோ அதை   பிறருக்குக் கொடுத்து விடுங்கள்.அறிவினை அன்புடன் சேர்த்துப்  பிறருக்குக் கொடுங்கள் அறிவினைப் பகிரும்போது உங்கள் அகந்தை மேலோங்க வேண்டாம். இந்த அறிவு பிறருக்குத் தேவை என்பதை உணர்ந்து கொண்டு அந்நோக்கத்துடன் பிறருக்கு அளியுங்கள்.

பிரம்மச்சரியத்தின் உண்மையான பொருள்


அக்டோபர்  15 - 2013 - பெங்களூர் - இந்தியா 




கே: குருதேவ், சங்கராச்சாரியார் ஒரு அரசனின் உடலில் புகுந்து அதன் மூலம் வாழ்வின் இன்பங்களை எல்லாம் அனுபவித்ததாக சொல்லப்படுகின்றது. பிறகு அவர் எப்படி பிரமச்சாரியாக கருதப்பட முடியும்?

குருதேவ்: அது உணர்வு சம்மந்தமானது. உள்ளுணர்வின் தன்மையே பிரம்மச்சரியம் ஆகும்.பிரம்மா என்றால் முடிவில்லாதது என்று பொருள். ‘'சாரியா' என்றால் நகர்ந்து செல்லுதல் என்று பொருள். எல்லையற்ற ஒன்றினுள் செல்வதே பிரமச்சரியம்.  எல்லையற்றதை அடையாளம் கண்டு கொள்வதும் அதனை உணர்வதும் தான் பிரமச்சரியம். அது ஒரு நிகழ்வு. அது தானாக நிகழ்வது. அப்படியென்றால் நீங்கள் பேரின்பத்தை உணர உடல் சார்ந்த இன்பம் தரும் செயல்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் பேரின்பம் ஏற்கெனவே உள்ளது. பேரின்பம் இருப்பதனால் உடல் சார்ந்த செயல்கள் பற்றி ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?   இத்தகைய ஒரு நிலையே பிரம்மச்சரியம் ஆகும். உடலானது அதற்கான சுழற்சிகளில் செல்லும் தன்மையுடது ஆனால் நம் உள்ளுணர்வு அவற்றில் பங்கு பெறாமலும் சிக்கிக் கொள்ளாமலும் வாழ்வதே உண்மையான திறன்.  

கே: குருதேவ், யாகங்களில் ரிஷிகள் வேண்டி அழைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றனர். இதற்கான மிகச் சரியான முறை எது? நீண்ட காலத்திற்கு முன் வாழ்ந்தவர்கள் எப்படி இன்று இருக்க முடியும்?  

குருதேவ்: உள்ளுணர்வு என்றும் அழிவதில்லை. மனமும் அழிவதில்லை. உண்மையில் எதுவுமே எப்போதும் அழிவதில்லை, வடிவம் மட்டுமே மாறுகின்றது.   பருப்பொருள் ஆக்கப்படுவதுமில்லை; அழிவதுமில்லை. ஆற்றலும் அதே போன்றது தான். உள்ளுணர்வில் ரிஷிகளின் ஆற்றல் அடங்கியுள்ளது. இது உங்களுக்குள் பல மனநிலைகள் அடங்கியுள்ளதை போன்றது. நீங்கள் திரைப்படத்திலோ அல்லது நாடகத்திலோ நடிக்கும் போது வெவ்வேறான மனநிலைகள உருவாக்குகின்றீர்கள் நடிகர்கள் சமயங்களில் வெவ்வேறு மனநிலைகளை வெளிப்படுத்துகின்றனர். ஒரு நடிகர் கோபம், சீற்றம், வீரம்,பயம் போன்ற மன நிலைகளை வெளிப்படுத்துகின்றார்.  ஆக, நாம் இதுபோன்ற எல்லா உணர்சிகளையும் வெளிப்படுத்த முடியும். எப்போது   வேண்டுமானாலும் அவற்றை நடித்துக் காட்ட முடியும். எல்லா மனநிலைகளும் மனதினுள் அடங்கியுள்ளன. மனம் தன் விருப்பபடி எந்த நேரமும் எந்த மனநிலையை வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அதே போல் உள்ளுணர்வின்  உயர்ந்த நிலையில் அதன் வெவ்வேறு தன்மைகளையும் திறன்களையும்   வெளிப்படுத்தக் கூடிய தூண்டுதல்கள் அடங்கியுள்ளன. அவை வேண்டுதல்களால் அழைக்கப்பட்டு வழிபாடு செய்ய இயலும்.  

கே: குருதேவ், யாகத்தீயிலே நெய் விடுவதன் சிறப்பு என்ன?  

குருதேவ்: நெய் அடிப்படையில் எண்ணையே ஆகும்.அது உருக்கப்பட்ட வெண்ணை.  பாலின் இறுதி உற்பத்திப் பொருள். ஆனால் யாரும் யாகங்களில் எண்ணெய்  விடுவதாக நான் கேள்விப்பட்டதில்லை (சிரிப்பு) .

பல விதமான இயந்திரங்கள்  உள்ளன. சிலவற்றிற்கு பெட்ரோலும் சிலவற்றிற்கு டீசலும் தேவைப்படும். அது போல யாகங்கள் நெய் மூலமாகவே இசைவு பெருகின்றன. எண்ணையினால் அல்ல. யாராவது ஒருவர் யாகத்தில் நெய் ஊற்றும் போது என்ன ஆகின்றது என ஆராய்ச்சி செய்யலாம். நெருப்பிலே ஊற்றப்பட்ட நெய் ஆவியாக மாறி எந்த மாதிரியான வாயுவை உற்பத்தி செய்கின்றது என ஆராய்ச்சி செய்யலாம். நெய் உபயோகிப்பதற்கு கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்க வேண்டும். இது தெரிந்து கொள்ளப்பட வேண்டிய சுவாரசியமான ஒன்று. மேலும்,   யாகத்திற்கு எல்லா விதமான கட்டைகளோ அல்லது மரப் பட்டைகளோ உபயோகிக்கப்படுவதில்லை.அரச மரத்தில் இருந்து எடுக்கப்படுகின்ற சமித்துக்கட்டை என்று அழைக்கப்படும் கட்டைகளே யாக நெருப்பில் பயன்படுத்தபடுகின்றன. எனவே அரசமர கட்டைகளும் நெய்யும் சேர்ந்து எரியும் போது என்ன மாதிரியான விளைவுகளோ அல்லது அதிர்வுகளோ ஏற்படுகின்றன, நாம் பார்க்க வேண்டும். அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒருவருக்கு இது ஒரு சிறந்த  ஆராய்ச்சிப் பொருள் ஆகும். வேதியல் பொறியியல் துறையிலிருப்பவர்கள் இதனை கண்டு பிடிக்கலாம்.  

கே: குருதேவ், ஆழ்ந்த பாவ நிலைக்கு செல்லும் போது உங்களுக்கு உண்மையில் என்ன நிகழ்கின்றது?  

குருதேவ்: எனக்கு தெரியவில்லை. அவ்வளவு தான் நான் சொல்ல முடியும்.  

கே: குருதேவ், நான் செய்யாத ஒரு பாவத்திற்காக மக்கள் என்னை குற்றம் சாட்டுகின்றனர். நான் என்ன செய்வது?  

குருதேவ்: நீங்கள் அதை செய்யாமலே மக்கள் நீங்கள் செய்ததாக நினைக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். அவ்வாறில்லாமல் நீங்கள் அதை செய்திருந்தால் மறுக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள்.  

மௌனத்தினால் நமக்கு என்ன கிடைக்கிறது?

அக்டோபர் 4, 2013 - பெங்களூரு, இந்தியா



ஆழ்ந்த மௌனமும் ஆனந்தமான கொண்டாடமும் தான் நவராத்திரி என்பது! உலகாய விஷயங்களிலிருந்து வெளிவந்து மற்றொரு உலகிற்கு செல்வதற்கான நேரம் இது.

கேள்வி - பதில்கள்

கே: குருதேவ், தசமஹாவித்யாக்களை (இறைவியின் பத்து விதமான பிரபஞ்ச வடிவங்கள்) நவராத்திரியின் போது வழிபடுகிறார்கள். இவையெல்லாம் என்ன, தினசரி வாழ்வில் இவற்றின் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: பத்து மஹாவித்யாக்கள் இருக்கின்றன. இதை பற்றி முழுமையாக எனக்கும் தெரியாது. புத்தியைக் கொண்டு நாம் படித்து புரிந்து கொள்ளும் வித்யா (ஞானம்) ஒரு அளவுக்குட்பட்டதே. மௌனத்திலும், தியானத்திலும் நமக்கு கிடைப்பது மகாவித்யா (பெரும் ஞானம்).

நம் முயற்சியின் மூலம் கிடைக்கும் ஞானம் அபர வித்யா எனப்படுகிறது.முயற்சி இல்லாமல், மௌனத்தின் மூலமும் உள்ளுணர்வாலும் நமக்குக் கிடைப்பது மகாவித்யா. அவித்யா (அறியாமை) துடைத்தெறியும் போது கிடைப்பது மகாவித்யா. அவித்யாவை துடைத்தெறிய நீங்கள் மாகாவித்யாவையும் பயன்படுத்தலாம். இந்த இரண்டும் இருக்கிறது.

கே: குருதேவ், ஒருவர் நண்பரா எதிரியா என்பதை உறுதியாய் சொல்ல முடியாது, எனவே தன்னை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். அது சுயநலமாகாதா?

குருதேவ்: இல்லை, அது சுயநலமாய் இருப்பதல்ல. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு வழிகாட்ட ஒரு பெரும் சக்தி இருக்கிறது என்பதை தெரிந்திருப்பதே அது. உங்களுடைய நேரம் நன்றாக இருக்கும் போது, உங்கள் வாழ்கை அந்த பெரும் சக்தியின் கையில் அல்லது இறைவனின் கையில் இருக்கும், அது உங்கள் வாழ்கையை ஆள்கிறது. இதைத் தான் நாம் பார்க்க வேண்டும். அந்த ஒரு சக்தி மட்டுமே உங்களிடம் நண்பராக, எதிரியாக எல்லோருமாக வருகிறது. அந்த ஒரு சக்தியே வெவ்வேறு வடிவங்களில் உங்கள் முன் இருப்பதை உணரும் போது நீங்கள் உங்களுடனேயே அமைதியில் இருப்பீர்கள்.

கே: குருதேவ், சாதனைகள் (பயிற்சிகள்) வேண்டிய பலனை அளிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு இராக்ஷசன் பயிற்சி செய்தாலும் வரம் கிடைக்குமா?

குருதேவ்: இது முற்காலத்தில் நடந்துள்ளது. இராவணன் அவ்வளவு தவம் செய்திருந்தான். பல இராக்ஷசர்கள் கடும் தவத்தின் மூலம் வலிமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், அகங்காரத்தினால் கொஞ்சம் தவறுகள் செய்து விட்டார்கள். அதனால் தான் அவர்கள் முழுதுமாக வெற்றி பெற முடியவில்லை.

கே: இறுதி இலக்கின் மீது சில சமயம் மிகுந்த கவனம் அளிப்பதாக உணர்கிறேன். அதாவது மோக்ஷத்தின் மீது, எனவே நான் அந்த பயணத்தை மறந்து விடுகிறேன், அதாவது வாழ்கையை. என்ன செய்வது?

குருதேவ்: தளர்வாய் இருங்கள் போதும்! இது வாழ்வில் ஒரு பகுதி. வாழ்கை என்பது அன்பு, சக்தி, உற்சாகம் மற்றும் விடுதலை. விடுதலை தான் மோக்ஷம். சில இடங்களில் மோக்ஷம் இறுதி அல்ல. வாழ்கை முழுதும் வேறு வேறு நிலைகளில் மோக்ஷம் இருக்கிறது. மோக்ஷம் என்றால் விடுதலை, மற்றும் வேலையிலிருந்து விடுதலை. வேலையில்லாமல் இருப்பதிலிருந்து விடுதலை பெறுவதும் அத்தியாவசியம் தான். சோம்பேறியாக அமர்ந்திருந்து விட்டு, பிறகு ஏதாவது வேலை செய்யும் போது நீங்கள் மகிழ்ச்சியாய் உணர்கிறீர்கள். அந்தச் சக்தியை உணர்கிறீர்கள். எனவே எல்லாம் இருக்கிறது. தளர்வாய் இருங்கள் போதும்!

கே: குருதேவ், நான் இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்திருப்பதால் எனக்கு சமஸ்க்ருதம் தெரியாது. சமஸ்க்ருதத்தை நன்றாக புரிந்து கொள்ள சில வகுப்புகளில் கலந்து கொள்ளலமா?

குருதேவ்: நீங்கள் நிறைய புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.உண்மையில், ஆங்கில மொழியிலேயே நிறைய சமஸ்க்ருத வார்த்தைகள் இருக்கிறது. மாதங்களின் பெயர்கள் கூட சமஸ்க்ருதத்தில் தான் இருக்கிறது. நவம்பர், டிசம்பர், ஜனவரி போன்ற மாதங்கள் எல்லாம் சமஸ்க்ருத வார்த்தைகளே. (நவம்பர் – நவ அம்பர் (ஒன்பதாவது வானம்), டிசம்பர் – தச அம்பர் (பத்தாவது வானம்). எனவே நிறைய புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை! செய்ய வேண்டியதெல்லாம், அந்த மந்திரங்களின் அதிர்வுகளை அனுபவித்து தளர்வாக வேண்டும், பிறகு தியானம் நிகழ்கிறது.

நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால் பல வாய்புகள் உள்ளன. கற்றுக் கொள்ள பல வழிகள் உள்ளன. ஆனால், அடிப்படையில் வெவ்வேறு இந்திய மொழிகள் பேசுபவர்கள் கூட வேத சாகைகளை புரிந்து கொள்வதில்லை. யாருமே அதை புரிந்து கொள்வது இல்லை. அதன் அதிர்வுகள், அதன் நாதம், அதன் உச்சரிப்பு அவை தான் முக்கியம். மிக முக்கியம்.

அதில் புலமை பெற வேண்டும் என்று விரும்பினால், சிறப்பாக செய்யலாம். கூகுளில் அதன் பொருள் கிடைக்கும். ஆனால் அதில் கிடைக்கும் வார்த்தைகளின் அர்த்தங்கள் முழுமையானது அல்ல. அதை மனதில் கொண்டு படிக்க வேண்டும். அது முழுதுமாக சரி இல்லை, முழுதுமாக தவறுமல்ல.

கே: குருதேவ், சாதனைகளில் (பயிற்சியில்) ஒரு குறிப்பிட்ட அனுபவம் பெறுவதுதான் இலக்கா? என்னுடைய பயிற்சிகளில் இதுவரை நான் எந்த அனுபவமும் பெறவில்லை. இது பற்றி நான் கவலையாய் இருக்கிறேன்.


குருதேவ்: இல்லை, கவலை வேண்டாம்! காட்சியிலிருந்து காண்பவருக்கு செல்லும் அந்த 
அனுபவம் தான் முக்கியம். அனுபவங்கள் கிடைத்தால் கிடைக்கும். இல்லை என்றால் கவலை வேண்டாம்! அது பரவாயில்லை. அனுபவங்கள் எல்லா நேரமும் மாறிக்கொண்டே இருக்கும்.

தெய்வீகத்தை அறிந்து கொள்ளுதல்


அக்டோபர்  03 2013 பெங்களூர்,  இந்தியா 



கே: குருதேவ், உண்மையான அன்பின் அறிகுறிகள் என்ன? அதன் வடிவம் என்ன?  அதை நாம் அடையாளம் கண்டுகொள்வது எப்படி?  

குருதேவ்: உண்மையான அன்பு என்பது ராமருக்கும் பரதருக்கும் இடையேயான   அன்பினை போன்றது. பகவான் கிருஷ்ணருக்கும், ராதாவிற்கும் இடையேயான அன்பு மற்றும் பகவான் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையேயான  அன்பினை போன்றது. அது ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடையேயும் கணவன் மனைவிக்கும் இடையேயான அன்பினை போன்று தூய்மையானது. இங்கே குறிப்பிடப்படுவது இருவருக்கிடையே உள்ள உறவு முறையினால் நிலவும் அன்பு.  

ஆனால் இதற்கெல்லாம் மேலாக, ஒரு வகையான அன்பு உள்ளது. அந்த அன்பின் உருவகமே நாம் அனைவரும் ஆவோம். நாம் அனைவரும் அன்பு என்ற ஒன்றினால் ஆக்கப்பட்டவர்கள் என்பதே நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதாகும்.  இந்த உண்மையை அறிந்து கொள்வதே பரமபக்தி (அதாவது மிக உயர்ந்த  எல்லை கடந்த அன்பு அல்லது பக்தி) என்று சொல்லப்படுகின்றது. "எதுவுமே எனக்கு சொந்தமில்லை. என்னிடம் இருப்பவை எல்லாமே இறைவா உனக்கு சொந்தமானவை. உன்னிடம் இருப்பவை எல்லாம் எனக்குச் சொந்தம்." என்ற இந்த உணர்வு நம் உள்ளிருந்து எழுவதே அதன் பொருள். அதுவே உண்மையான அன்பு. அதனால் நீங்கள் மற்றவரின் பணப் பையை எடுத்து வைத்துகொண்டு உங்களுக்கு சொந்தமானவை  எல்லாம்  எனக்குச்  சொந்தம் என்று சொல்லி விடாதீர்கள் . (சிரிப்பு)

கே:  குருதேவ், அன்பிற்கு எல்லை கிடையாது என்று சொல்லி இருக்கின்றீர்கள்.  திருமணம் என்பது அன்பின் இறுதி நிலையா?  

குருதேவ்:  (சிரிப்பு) எனக்குத் தெரியாது. எனக்கு திருமணம் ஆகவில்லை. திருமணம் என்பது நீங்கள் கேட்பது போல் அன்பின் இறுதி நிலை என்பதாக இருக்கக்கூடாது. அப்படியில்லாமல் திருமணம் என்பது ஒருவர் மீது மற்றோருவருக்கான அன்பு என்பதில் துவங்குவதே சரியானது. அப்போது இல்லையென்றாலும், திருமண வாழ்க்கை  நடைபெறும் காலத்தில் அன்பு மலர்ந்தாலும் நல்லதே.  

கே: துணி வெளுப்பவன் ஒருவனின் தவறான வதந்தியை மதித்து ராமர்  சீதா தேவியை நாடு கடத்தி காட்டிற்கு அனுப்பினார். அதோடு மட்டுமன்றி சீதா தேவி   தீக்குளித்து தன் கற்பினை நிரூபிக்கும்படி செய்தார். இந்த நிகழ்ச்சியின் போது  சீதாப் பிராட்டி தூய்மையானவர் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் ராமர் ஏன்  சீதைக்குத் துணையாக  நிற்கவில்லை?  

குருதேவ்:  நான் இன்று ராமபிரானின் வழக்கறிஞராகி அன்று அவர் செய்தவற்றிற்கு  விளக்கம் தரப் போவதில்லை. ராமர் செய்த அனைத்திற்கும் ஏன் அவ்வாறு  செய்தார் என்று நிச்சயமாக அவருக்குத் தெரிந்திருக்கும். ராமர் செய்த  அனைத்தையும்  பின்பற்ற வேண்டுமென்பதில்லை. ராமர் பல நல்ல விஷயங்களை சொல்லி இருக்கின்றார். நாம் அவற்றை நம் வாழ்வில் கடைபிடிப்போம். 

ராமர் ஏன் சீதையை தீக்குளிக்கச் செய்தார்? எனக்கும் இதே சந்தேகம் உள்ளது?   (சிரிப்பு) வாழும் கலை பயிற்சியின் கொள்கைகள் ராமருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்கு நாம் உதை பந்தாக இருக்க  வேண்டாம் என்று அவருக்கு யாரும் சொல்லி இருக்கமாட்டார்கள்.  

ஒருவேளை இதனால் தான் ராமர் 'பாரா கலா சம்பூர்ணா' (12 தெய்வீகத் தன்மைகள்  அல்லது அசாதாரண பண்புகளைக் கொண்டவர் என்று கருதப்படுகின்றார்.  பகவான் கிருஷ்ணர் மட்டுமே' சோலா கலா சம்பூர்ணா அதாவது இறைவனின் அவதாரத்தின் மொத்தமான 16 தெய்வீக குணங்கள் அல்லது அசாதாரண பண்புகளை கொண்டவர்) என்று கருதப்படுகின்றார், இருந்தாலும் ராமனின் வாழ்க்கை மிகவும் அற்புதமானது; அவரது குணங்கள் பின்பற்றத்தக்க சீறிய உதாரணங்களாக திகழ்பவை.  

ராமபிரானுக்கும் வசிஷ்ட முனிவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் யோகவசிஷ்ட  மகாராமாயணம் என்றழைக்கப்படுகின்றது. நீங்கள் அனைவரும் அதனை படிக்க வேண்டும். தன்னுடைய வாழ்க்கையின் மூலமாக ராமர் ஒரு சாதாரண மனிதன் தன் மானுட வாழ்வில் சந்திக்கும் இன்னல்கள் அனைத்தையும்  காட்டியுள்ளார். இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது  ராமரின் வாழ்க்கையானது ஒவ்வொரு மனிதனும் உண்மையாகவே தன் வாழ்நாளில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்  கடந்து செல்லும் நிலையை குறிப்பதாகவே உள்ளது.  

சாதாரண மனிதன் மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பான். பிறருடைய பாராட்டுதல்களையும் இகழ்தலையும்  பெரிதும் மதிப்பான். தன் வரைமுறைகளைப் பற்றி பெரிதும் அக்கறை கொள்வான்.  எல்லோருடைய வாழ்க்கையிலும் பொதுவாக காணப்படும் இந்த குணங்களே ராமரின் கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளன.  

நீங்கள் ராமாயணத்தில் இன்னும் ஆழ்ந்து சென்றால், ராமபிரான் நம் அனைவருக்குள்ளும் இருக்கும் தெய்வீக ஒளியினை குறிக்கின்றார் என்பது புரியும்.    ஆத்ம தத்துவம் எனப்படும் நம் ஆன்ம ஒளியைக் குறிப்பவரே ராமர். அவ்வாறு ராமரை நம் ஆன்மாவாகப் பார்க்கும்போது பல விஷயங்களை நாம் வேறு கோணத்தில் பார்க்க இயலும். முனிவர் வேத வியாசரால் இயற்றப்பட்ட அத்யாத்ம  ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது இதுவே. ராமபிரானை வெறும் அரசனாக மட்டுமே பார்க்காதீர்கள். எந்த நிலை அல்லது எந்த கோணத்திலிருந்து நீங்கள் பார்க்கின்றீர்கள் என்பதை பொறுத்து நீங்கள் ராம பிரானின் அரிய குணங்களை காண்பீர்கள்.

ஒருமுறை ராமபிரான் அனுமாரிடம் "நீ என்னை எவ்வாறு பார்க்கின்றாய் என்று கேட்டார். அதற்கு அனுமன், 'தேக - புத்தயாதவ - தாசா' என்று பதில் சொன்னார்.  அதாவது என்னை நான்  உடலாக கருதும்போது (என் அறிவு உடலளவில் வரையருக்கப்பட்டிருக்கும் போது) நான் என்னை உங்கள் சேவகனாக பார்க்கின்றேன. 'ஜீவன்  புத்யத்வம் - அம்ஷ' அதாவது நான் என்னை ஜீவனாகக் கருதும் போது  (அறிவு ஆன்மாவின் நிலைக்கு உயர்த்தப்படும் போது) நான் என்னை உங்களின் ஒரு பாகமாக பார்க்கின்றேன் என்று சொன்னார். அனுமன் மேலும், 'ஆத்ம புத்யத் வமேவ  -  ச' என்று சொன்னார். அதாவது, "நான் என்னை என் உள்ளுணர்வாக பார்க்கும் போது தங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என்பதை பார்க்கின்றேன். நானாக இருப்பது எதுவோ அதுவே நீங்கள் ஆவீர். நீங்களாக இருப்பது எதுவோ அதுவே நான்." ஆகவே ராம பிரானை அறிந்துகொள்ள மூன்று வெவ்வேறு நிலைகள் உள்ளன.  

அதே போல ராமபிரானை இந்தியாவின் ஒரு சரித்திர நாயகனாகப் பார்த்தால் இந்தியாவில் மட்டுமன்றி அயல் நாடுகளிலும் அவர் ஒரு மரியாத புருஷோத்தமராக (மானுடர்களுள் மிக உயர்ந்தவராகவும் நேர்மையானவராகவும்) மதிக்கப்படுவதை  பார்க்கலாம். ஒரு பக்தனின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது அவரை இறைவனாகவே பார்ப்பீர்கள். அவர் இறைத்தன்மையை முழுமையாக உள்ளடக்கியிருப்பதை அறிவீர்கள். அவரை உங்கள் உள்ளுணர்வாகவே பார்க்கும் போது உங்களுக்கும் அவருக்குமிடையே எந்த வேறுபாடும் இல்லை.  

ராமர் வெறும் சரித்திர நாயகன் மட்டும் இல்லை அனைத்துமே பரபிரம்மன் என்னும் ஒரே ஒளியினால் ஆக்கப்பட்டவை. அதுவே ராம தத்துவம் என்று அழைக்கப் படுகின்றது. அப்போது நீங்கள் உங்கள் ஆன்மாவையே ராமனாகப் பார்ப்பீர்கள்.   நீங்கள் ராமரை ஒரு மானுடனாகப் பார்க்காமல் இந்த படைப்பில் தெய்வீக ஒளியின் சின்னமாக பார்ப்பீர்கள். ஆக, எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் ராமரின் தனி குணாதிசயங்களைக் கண்டு அவற்றை உள்வாங்கி அக்குணங்களை நீங்களும் பெறுவீர்கள்.  

கே: குருதேவ், நம் தலைவர்கள் பெண்களைத் தங்கள் பாதுகாப்பிற்காக  மிளகுப்பொடி மற்றும் மிளகாய்ப் பொடிகளை எப்போதும் கையில் கொண்டு  செல்லும்படி ஆலோசனை சொல்லி இருக்கின்றனர். மிளகாய்ப் பொடி வைத்திருப்பதாலும்  கராத்தே கற்றுக் கொள்வதாலும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா?  பாதுகாப்பை அளிப்பது அரசாங்கத்தின் கடமை அல்லவா?  தங்கள் பாதுகாப்பிற்கென பெண்கள் என்ன செய்ய வேண்டும்?    

குருதேவ்:  முதலில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கை வேண்டும். எல்லா இடங்களிலும் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் தவறானவர்கள் என்ற எண்ணத்துடன் நீங்கள் சென்று கொண்டிருந்தால் அந்த பயம் என்னும் வலையிலேயே சிக்கிக்கொண்டு விடுவீர்கள். அதுவே ஒரு வித நோய் போல் ஆகிவிடும். இந்த சமுதாயத்தில் இன்றும் நல்லவர்களும் உயர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

எல்லா காலங்களிலும் சாத்தான்கள் (தவறிழைப்பவர்கள்) இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். நாம் அவர்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.  தனியாக எங்கும் சுற்ற வேண்டாம் என்பதே என்னுடைய அறிவுரை. எப்போது வெளியில் சென்றாலும் இரண்டு அல்லது நான்கு பேர் கொண்ட குழுவாகச் செல்லுங்கள். பகலில் செல்லும் போதும் பாதுகாப்பான  இடங்கள் எவை பாதுகாப்பு அற்றவை எவை என தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் மட்டுமின்றி உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இந்த பாதுகாப்பின்மை இருக்கின்றது.  வாஷிங்டனில் பாதுகாப்பான பகுதி என்று ஒரு பகுதி உள்ளது. அதற்கு சில மீட்டர்கள் தள்ளி உள்ள இடம் பாதுகாப்பற்றது என்று கருதப்படுகின்றது.  

பாதுகாப்பற்ற இடத்தில் உள்ள சொத்தின் விலை பாதுகாப்பான இடத்திலுள்ள சொத்தின் விலையை விட  மூன்றில் ஒரு பங்காகும். ஒவ்வொரு நாட்டிலும் சில இடங்கள் பாதுகாப்பானவையாகவும் சில இடங்கள் பாதுகாப்பு அற்றவையாகவும் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் துப்பாக்கியுடன் அலைகின்றனர். பல விதமான மன நோயாளிகள் உள்ளனர்.  

கடவுளின் கருணையினால் இத்தகைய தீவிரமான பயங்கரமான சூழ்நிலைகள் நம் நாட்டில் இன்னும் உண்டாகவில்லை. ஆனால் நிச்சயமாக முன்பிருந்ததை விட  சூழ்நிலை மோசமாகி உள்ளது. அதனால், பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். இதனோடு கூட பெண்கள் குடிப்பழக்கத்திற்கு எதிராக வலிமையோடு போராட வேண்டும். மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும்.

ராமராஜ்யத்தை (நேர்மையும் நீதியுமுள்ள சமுதாயம்) உருவாக்க மகாத்மா காந்திக்கு மூன்று கனவுகள் இருந்தன. முதல் படி மதுவும் போதைப் பொருட்களுமற்ற சமுதாயம், மது அருந்துதல் இல்லாத ஒரு விடுதலையான சமுதாயம்.

இரண்டாவது படியாக, இறைச்சியும் பிற அசைவ உணவுகளையும் தவிர்க்கும் சமுதாயம் ஏற்படப் பரிந்துரை செய்தார். சரியான உணவுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். 

இன்று இந்தியா உலகநாடுகளுக்கு மாட்டு இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றது.. இந்தியாவில் பசுக்கள் மிக அதிக அளவில் வதை, படுகொலை செய்யப்பட்டு, ஆவற்றின் இறைச்சி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இது நமது நாட்டுக்கு மிகப் பெரிய அவமரியாதை. நமது நாட்டின் பண்பாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் அவமரியாதை.

இத்தகைய நிலைமை அண்மையில் 10 -15 ஆண்டுகளாக தான் எழுந்துள்ளது மக்களுடைய உணவுப் பழக்கங்கள் சரியாகவும், தூய்மையாகவும் இருந்தால் அவர்களது மனங்களில் வன்முறை எண்ணங்கள் ஏற்படாது. ஆனால் மக்கள் மது அருந்தி அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டிருந்தால், இத்தகைய இடையூறுகள் சமுதாயத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். 

உலகத்தை விடுங்கள், நமது நாட்டில் நமது வீட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.சமீபத்தில் ஒரு தந்தை தனது மகளையே மானபங்கப்படுத்தியதாக செய்தி வந்துள்ளது. இந்நிலை வெட்கப்பட வேண்டியதும் கவலைக்குரியதும் ஆகும். நாம் சமுதாயத்தில் ஒரு பெரிய ஆன்மீக அலையை ஏற்படுத்த வேண்டியது மிகத் தேவை. சிலர், சமயம் என்ற பெயரில் பல தவறுகள் செய்கின்றார்கள். அண்மையில், ஒரு ஆன்மீகத் தலைவர், ஆன்மிகம் என்னும் போர்வையில் பல தவறுகள் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அத்தகைய தவறுகளை செய்யும் ஒருவர் ஆன்மீகத் தலைவராக இருக்க முடியாது. சிலரது சுயலாபத்திற்கும், பேராசைக்கும் ஆன்மிகம் தவறகப் பயன்படுத்தப்படுகின்றது.

சரியான சான்றிதழ் இல்லாத பல போலி டாக்டர்கள் சில இடங்களில் தங்களுடைய தொழிலைத் துவங்கி, மக்களுக்கு மருந்துகளைப் பரிந்துரை செய்து பணம் சம்பாதிக்கின்றார்கள். அது போன்று சிலர் போலியாக தங்களை ஆன்மீகத் தலைவர்களாக உருவகப்படுத்திக் காட்டுகின்றார்கள். ஆன்மீகத்தில் சட்ட திட்டங்களோ, கட்டுப்பாடோ இல்லையென்பதால், யார் வேண்டுமானாலும் இதில் நுழைந்து, மக்களுக்கு நன்மை செய்வதைவிட தங்களுடைய சுய லாபத்திற்காகவே  தவறாக பயன்படுத்திக் கொள்ளுகின்றார்கள்.

கே: மகாத்மா காந்தி நாட்டிற்கு அளித்த பதினோரு கொள்கைகளை விவரித்துக் கூற முடியுமா?

குருதேவ்: முதலாவது அஹிம்சை, இரண்டாவது சத்யா - உண்மை, பிறகு அஸ்டேய- திருடாமை, அடுத்து பிரம்மச்சர்ய - துறவு, அடுத்து அபரிக்ரஹ அதாவது உடைமை அற்று இருத்தல், அடுத்து சரீர்ஷ்ரமா - உடலுழைப்பு, பின்னர், அஸ்வத - சுவை நீங்குதல். மகாத்மா காந்தி உங்களுடைய சுவை அரும்புகளே அடக்க முடியாத சபலங்களுக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். சுவைக்காக இல்லாமல் வாழ்வதற்காக உணவருந்த வேண்டும்.எது சுவையானது என்று பார்க்காமல் எது நல்லது என்று கவனியுங்கள். பல சமயங்களில் மிகுந்த சுவையான உணவு உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்காது. பல சமயங்களில் சுவையற்ற சில உணவு வகைகள் உடலுக்கு நன்மை தரக் கூடியதாக இருக்கும். அடுத்தது சர்வத்ரபயவர்ஜனா அதாவது பயமற்ற நிலை. எதற்கும் பயப்பட வேண்டாம்.
அடுத்தது, சர்வ தர்மா சமன்த்வா அதாவது எல்லா சமயத்தவரையும் சமமாகக் கருதுதல். சில மதத்தவர் தங்களுடைய அருட்போதகரை நம்பினால் சுவர்க்கத்திற்கு செல்லுவீர்கள் என்று கூறுவார்கள். வேறு சில மதத்தவர் தங்களுடைய மதத்தை நம்பினால் கடவுள்  பல நற்பரிசுகள் வழங்குவார் என்று கூறுவார்கள்.ஆனால், வேதசமயம் எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் அனைவரையும் சமமாகக் கருத வேண்டும் என்று கூறுகின்றது.

அடுத்தது , ஸ்வதேசி அதாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப் படும் பொருட்களை பயன் படுத்துதல். உலகளவில் எண்ணங்களும் உள்ளூர் பொருட்களைப் பயன் படுத்துதலும் என்றிருக்க வேண்டும்.

அடுத்து, ஸ்பர்ஷ்பாவனா அதாவது தீண்டாமையை ஒழிக்க வேண்டும்.அக்காலத்தில் தீண்டாமை அதிக அளவில் நிலவி வந்தது. இவை தாம் பதினோரு கொள்கைகள்.

கே: பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்," அநித்தியம் அசுகம் லோகம் இமம் ப்ரப்ய பாஜஸ்வ மாம் " என்று கூறுகின்றார். இவ்வுலகம் அநித்தியம் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. ஏன் அசுகம் (துன்பமானது) என்று கூறப் படுகின்றது?

குருதேவ்: எது தாற்காலிகமானதோ அது துன்பமானது. அநித்தியம் என்றால் நிரந்தரமாக இல்லாதது என்று பொருள். பாருங்கள், ஒரு பதவியை அடைவதற்கு முன்னர் ஒருவன் அதை அடைய கவலைப்படுகிறான்.அதை அடைந்த பின்னர் அதை தக்க வைத்துக் கொள்ளக் கவலைப்படுகின்றான். அப்பதவி விலகும் காலத்தில் துன்பம் அடைகின்றான்.

ஆகவே, பதவியை அடையும் முன்னரும், அதை பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் போதும் துன்பம் தான். பதவி போய்விடுமோ என்னும் பயமும் துன்பத்தையே அளிக்கின்றது. அது போய் விடும் போது அதைப் பற்றிய நினைவுகள் துன்பம் அளிக்கின்றது. அதனால் தான் அசுகம் என்று கூறப்படுகிறது. தாற்காலிகமான எதிலும் சுகம் கிடையாது. உங்களுக்குள்ளேயே இருக்கின்றது. தாற்காலிகமான , விரைந்து செல்லக்கூடிய, மாறுகின்ற எதிலும் மகிழ்ச்சியைத் தேடாதீர்கள். எது மாற்ற மில்லாததோ அதிலேயே நிறைவும் மகிழ்வும் உள்ளன.

கே: அறியாமையின் காரணம் என்ன? அதை எவ்வாறு நீக்குவது?

குருதேவ்: அறியாமையை ஞானத்தின் மூலம் நீக்கலாம். அறியாமையின் காரணம் என்ன? அது மேலாணை. ஏன் அறியாமை ஏற்படுகின்றது என்று நீங்கள் கேட்கலாம். அது அப்படித் தான்.

வானம் ஏன் இவ்வளவு பறந்திருக்கின்றது என்று கேட்பது போன்று தான். ஆம் வானம் பறந்திருக்கின்றது, அது அப்படித்தான். அல்லது ஏன் சூரியன் ஒளி வீசுகின்றது என்பது போன்றது. சூரியன் ஒளி வீசும், அது அப்படித் தான்.
கேள்விகளுக்கும் ஒரு வரம்பு (இதி) உண்டு. நீங்கள் கேட்டுகொண்டே இருந்தாலும் ஓரளவிற்கு மேல் விடை கிடையாது.

கே: உபவாஸ் (உண்ணாவிரதம்) என்பதன் பொருள் என்ன? அவ்வாறு உபவாசம் செய்யும் நாட்களில் என்ன வகையான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்? பல்வேறு இடங்களில் மக்கள் வித்தியாசமானவற்றை மக்கள் உட்கொள்ளுகிறார்கள்.

குருதேவ்: நாம் அதிகமாக உணவு உட்கொள்ளும் போது தூக்கம் வருகின்றது. சோம்பலாக உணருகின்றோம். உபவாஸ் என்பதன் பொருள் அருகில் வாழ்தல் ( உப-அருகில், வாஸ்- வாழ்தல்) யாருக்கு அருகில்? தெய்வீகத்திற்கு அருகில். தெய்வத்திற்கு அண்மையில் அமர்ந்திருப்பது என்று பொருள். எப்போது உங்களால் தெய்வீகத்திற்கு அருகில் அமர முடியும்? உங்கள் வயிறு அதிக அளவில் நிரம்பி இருக்காத போது. உண்ணாவிரதம் என்பது வயிற்றுக்கு ஒய்வு தருவதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது.

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் " நாடி அசந்தாஸ் துயோகோ ச்டினகிகண்டமனச்னத்ச்" என்று கூறுகின்றார். இதன் பொருள் பசியுடன்  இருப்பது நல்லதல்ல. தர்மசாஸ்திரங்கள் இதை விலக்குகின்றன. கிருஷ்ணர், யோகா என்பது உணவருந்தாதவனுக்கு உரியது அல்ல. அது போன்று அதிகமாக உண்பவனுக்கும் உரியதல்ல என்று கூறுகின்றார்.. எனவே எவ்வாறு விரதம் மேற்கொள்ள வேண்டும்? பழ உணவு அருந்தி மேற்கொள்ள வேண்டும்.

பழங்கள் சாப்பிடுங்கள்.அவை 20 முதல் 25  நிமிடங்களில் ஜீரணித்து விடும்.ஆகவே எளிதாக செரிக்கக் கூடிய உணவை எடுத்துக் கொள்ளுங்கள். வழக்கமான அளவை விடக் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள், மேலும் எத்தனை நாட்கள் முடியுமோ அத்தனை நாட்கள் மட்டுமே விரதம் மேற்கொள்ளுங்கள்.உங்கள் உடல் கூறுவதைக் கவனியுங்கள்.

நீங்கள் கடவுளுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை. உண்ணா நோன்பு ஆத்மாவிற்கும், உடல் சுத்திகரிப்புக்குமானது. உண்ணாவிரதத்தின் மூலம் கடவுளை மகிழ்விப்பதாக எண்ணினால் நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். உண்ணாவிரதம் என்பது கடவுளை மகிழ்விப்பதற்கு அல்ல, அது ஒருவனது மனம், உடல், உள்ளத்தின் அடியுணர்வு தளம் இவற்றை சுத்திகரிப்பதற்கானது.

கே: தேவி சண்டிகாவின் வாகனமாக சவம் (உயிரற்ற உடல்) காட்டப் படுகின்றது. அதன் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்:  நீங்கள் உயிரற்ற உடல் என்று கருதுவது கூட முற்றிலும் அசைவற்றது அல்ல. அதிலும் அதிர்வு, விழிப்புணர்வு சக்தி இருக்கலாம். விழிப்புணர்வு என்பது ஓரளவிற்கு மேல் இல்லை என்றாலும் முற்றிலும் சக்தியற்றது என்று கூறுவது சரியல்ல. கல்லிலும் கூட சக்தி உண்டு. இந்தக் கருத்தைத் தெரிவிக்கும் பொருட்டு, உயிரற்ற உடல் சண்டிகையின் வாகனமாக காட்டப்பட்டுள்ளது. 

ஒன்று அடங்கும் போது மற்றொன்று எழுகின்றது. தமோகுணம் அழிக்கப்படும் போது சத்வகுணம் மலருகின்றது. உயிரற்ற உடல் என்பதாக குறிப்பிடப்படும் செயலின்மை நீங்கும் போது தெய்வீகத் தன்மை மலர்கின்றது .    

காந்தி ஜெயந்தி அன்று குருஜியின் சொற்பொழிவு

அக்டோபர் 2, 2013



என் ஆசிரியருக்கு 116 வயது ஆகிறது. அவரைப் பற்றி உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாத்மா காந்தி திரும்பி வந்த பின் இவர் தான் மகாத்மாவுக்கு பகவத் கீதை கற்பித்தவர். பகவத் கீதையின் படி ஒருவர் நடுநிலையில் இருக்க வேண்டும். என் ஆசிரியர் மகாத்மாவை பற்றிச் சொன்னது பின் வருமாறு.

யெரவாடா சிறைச்சாலையில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய் காந்தி மற்றும் என் ஆசிரியர் இருந்த போது நடந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர் சொன்னார். அன்று கஸ்தூரிபாய் காந்தியின் வாழ்வின் இறுதி நாள்.

கஸ்தூரிபாய் மரணப் படுக்கையில் இருந்தார். அவர் இருந்த அறையிலிருந்து மகாத்மா காந்தி வெளியில் வந்து என் ஆசிரியரிடம் “பெங்களூரி, இன்று என் வாழ்நாளில் ஒரு சோதனை தினம். இன்று நான் எப்படி நடுநிலையில் இருப்பேன் என்று பார்க்க வேண்டும். எல்லோரையும் எப்படி ஒன்றாகப் பார்க்க முடியும்?” இன்று எனக்கு ஒரு சோதனையான தினம்” என்று சொல்லி விட்டு என் ஆசிரியரை பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தைப் படிக்கச் சொன்னார். அவர் இரண்டாம் அத்தியாயத்தைப் படித்த போது, மகாத்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அன்று கஸ்தூரிபாய் காந்தி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

அப்போது மகாத்மா காந்திக்கு “ தான் எப்போதும் தன் மனைவியை தன் விருப்பப்படியே நடக்கச் சொல்லியதும், கஸ்தூரிபாய்க்கு தன் சொந்த விருப்பங்களை எடுத்துச் சொல்லவும் வாய்ப்பு அளிக்காமல் இருந்ததும்” புரிந்தது. கஸ்தூரிபாய் ஒரு சந்நியாசி போல் வாழ்ந்து, தன் கடைசி மூச்சு வரை எனக்கு சேவை செய்து வந்தாள்” என்று மகாத்மா காந்தி சொன்னார். இது யெரவாடா சிறைச்சாலையில் நடந்தது.

பகவத்கீதை மகாத்மாவுக்கு மிகவும் பிரியமான ஒன்றாக, வழிகாட்டியாக இருந்தது. காந்திஜி மத மாற்றத்தை எதிர்த்து நின்றார். ஆனால் இன்று யாரும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. அவர் மது அருந்துவதை எதிர்த்தார். இன்று அது பற்றி யாரும் பேசுவதில்லை. ஆடு மாடுகளை கொன்று தின்பதை எதிர்த்தார். அவர் மிகவும் கருணையுள்ளவராக வாழ்ந்தார். எல்லோரும் அஹிம்சையை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பசும்பால் கூட குடிக்க மறுத்தார். கன்றுக்குட்டிக்கு தான் பசுவின் பால் சொந்தம் என்று சொல்வார். ஒரு முறை பால் கறப்பதை பார்த்த போது ஒரு சொட்டு ரத்தம் வந்ததைப் பார்த்தார். பால் கறப்பவர் மிகவும் கடுமையாக பால் கறந்ததின் விளைவாக இப்படி நடந்தது. அன்றிலிருந்து பசும் பால் குடிப்பதை நிறுத்தி விட்டார். ஆட்டுப் பாலையே குடித்தார்.

மகாத்மா காந்தி இப்படிப் பட்ட அஹிம்சாவாதியாக இருந்தார். ஆனால் இன்று இந்தியா மாட்டு இறைச்சியை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 78 லட்சம் மாடுகள் இறைச்சிக்காகக் கொல்லப்பட்டன.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். ஆனால் அவர் சொன்னவற்றைப் பின் பற்றுவதில்லை. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். இந்திய இளைஞர்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். அஹிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும். மகாத்மாவின் கருணையை  பின்பற்ற வேண்டும். பிராணிகளிடம் கருணை காட்ட வேண்டும். மது அருந்தக் கூடாது. சத்சங்கங்களில் கலந்து கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி ஒவ்வொரு நாளும் சத்சங்கம் நடத்தினார். அதை பின்பற்றுவதே நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாகும். மத மாற்றங்கள் கூடாது. மக்களை பிற மதங்களுக்கு மாற்றுவதை மகாத்மா காந்தி எதிர்த்து வந்தார்.  ஆனால் இன்று பிராணிவதை, மதுப்பழக்கம் மற்றும் மதமாற்றம் முதலியவை இந்தியாவில் நடந்து வருகின்றன.