மரணத்திற்கு அருகில் சென்ற அனுபவம்

31 ஜூலை 2013 - பாட் அன்டகஸ்ட், ஜெர்மனி



கே: பிறப்பதற்கு முன் ஜீவனும் ஆத்மாவும் எங்கே இருந்தது? ஜீவனுக்கும் ஆத்மாவுக்கும் இடையே என்ன வித்தியாசம்? ஜீவன் எப்படி பிறக்கிறது, எங்கே இருந்து வருகிறது?

குருதேவ்: இரண்டும் ஒன்று தான். கருவுரும் போது உடம்புக்கு உயிர் வருகிறது, சில சமயம் பிறக்கும் நேரத்தில் கூட வருகிறது. கருவுரும் போதோ அல்லது பிறக்கும் போது ஆத்மா உடம்புக்குள் நுழைகிறது. சில நேரங்களில் பிறக்கும் வரை ஒரு ஆத்மா தங்கி இருந்து பிறக்கும் போது வேறு ஒரு ஆத்மா வருகிறது. பொதுவாக ஒரே ஆத்மா தான் கருவுற்றதிலிருந்து முழுதுமாக இருக்கும்.

ஐந்து இரகசியங்களில் இது ஒன்று. இறப்பின் இரகசியம், பிறப்பின் இரகசியம் மற்றும் இராஜங்க இரகசியம். இவை ஐந்து இரகசியங்களில் சில. இவற்றை என்னுடை ஞானப் பேழை புத்தகங்களில் கூறியுள்ளேன். இவற்றை படித்துக் கொள்ளலாம்.

ஏழு பகுதிகளாக வெளிவந்த ‘ஞானம் தேடுபவருக்கு’ என்ற நூலை உங்களில் பலர் இன்னும் படிக்கவில்லை. இந்த ஏழு பகுதிகளையும் படியுங்கள். ஏழு வருடங்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு ஞானத் தாள் கொடுத்து வந்தேன். ஒவ்வொரு புதன் கிழமையும் உட்கார்ந்து ஏதாவது புதிதாக எழுதினோம். இவற்றையெல்லாம் தொகுத்து இந்த ஏழு பாகங்களாக ‘ஞானம் தேடுபவருக்கு’ என்ற நூல் தொகுப்பு வெளியிடப்பட்டது.

நீங்கள் படிக்க வேண்டிய மற்றொரு புத்தகம் ‘யோக வசிஷ்டா’ (இராமபிரான் ஆழ்ந்த துயரத்தில் இருந்த போது வசிஷ்ட முனிவரால் இராமருக்கு அளிக்கப்பட உரை). ஒரு முறை படிப்பதால் உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். அதை மறுபடி மறுபடி  படிக்க வேண்டும். என்ன புரிந்தாலும் அதை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். என்ன புரியவில்லை என்றாலும் அப்படியே விட்டு விடுங்கள். ‘ஓ, இதுதான் அது’, என்று ஒரு நாள் நீங்கள் சொல்வீர்கள்.

அமெரிக்காவில், மூளை அறுவை சிகிச்சை செய்யும் ஒரு மருத்துவர் இருந்தார். அவர் ஏழு நாட்கள் கோமாவில் இருந்தார், எல்லோரும் அவர் இறந்து விட்டார் திரும்ப வரமாட்டார் என்றே நினைத்தனர். ஆனால் திடீரென்று ஏதோ நடந்து அவர் திரும்ப வந்துவிட்டார். அவர் ‘சொர்கத்தின் நிரூபணம்’ (Proof of Heaven) என்ற புத்தகம் எழுதினார். அவர் ஒரு கிருத்துவர், அவருக்கு கிழகத்திய ஞானம் எதுவும் அறிமுகமில்லை. அதைப் பற்றி அவர் ஏதும் படித்திருக்கவில்லை. அவர் உயிர் பெற்றபின் அவர் என்ன எழுதினார் என்பது பேராச்சரியமான ஒன்று. பகவத் கீதையில் என்ன அறிவுறுத்தப்பட்டிருக்கிறதோ அதையே எழுதினார்.

உடம்பை விட்டபின், ஒரு பெரிய இருப்பை உணர்ந்ததாகவும், அந்த இருப்பின் பெயர் ‘ஓம்’ என்றும் எழுதியிருக்கிறார். அதை அவர் ‘ஓம்’ என்று அழைக்கிறார். பொன் முட்டை பற்றியும், மற்றும் உள்ளகம் (Core) பற்றியும் சொல்கிறார். உள்ளகம் என்றால் சுயம், ஆத்மா. மேலும் அவர் சொல்கிறார், வேர் மேலே இருக்கிறது, குருத்து உள்ளே இருக்கிறது. இதைத் தான் பகவத் கீதை சொல்கிறது. வேர்கள் மேலே வானத்தில் இருக்கும் ஒரு மரம் இருக்கிறது.

உடம்பை விட்ட பின் தாம் வேர்கள் வழியாகச் சென்று அந்தப் பக்கத்திற்கு சென்றதாக கூறுகிறார். மங்கலான இருட்டான வெளி வழியாக அவர் செல்ல வேண்டி இருந்ததாம். இதை தான் நம் புராணங்கள் முழுமையாகக் கூறுகிறது. இது அப்படியே பண்டைய புராணம் நவீன மொழியில், அறிவியல் மொழியில் இருக்கிறது. இது அதையே தான் சொல்கிறது; மொழியே இல்லாமல் தொடர்பு கொள்ளுதல். ஒரு தேவதை வழிகாட்டியாக வந்து ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது.

வாழ்க்கையில் ஏன் ஒரு குரு வேண்டும்? இறந்த பின் நீங்கள் பார்க்கப் போகும் முதல் ஆள் குரு தான். அந்த இடத்திலிருந்து உங்களை ஒரு வழிகாட்டியை போல அழைத்துச் செல்லப் போவதும் குரு தான். விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் உங்களை வரவேற்று வாகனத்திற்கு அழைத்துச் செல்ல யாராவது வருவது போலத் தான் இது. அதனால் தான் குரு என்பவர் முக்கியம்.
இப்படி பண்டைய விஷயங்களைத்தான் இந்த மருத்துவர் எழுதியிருக்கிறார். இது மிக சுவாரசியம். ஒரு சுரங்கப் பாதையின் அடுத்த பக்கத்தில் ஒரு அன்பான ஒளியைக் கண்டது – இது போன்ற அனுபவங்களைத் தான் இப்படி மரணத்திற்கு அருகில் சென்றவர்கள் கண்டிருக்கிறார்கள்.

நரகத்திற்குச் செல்வதோ அல்லது அதைப் போன்றவற்றையோ அல்ல. இந்த அனுபவங்களைப் படிப்பது உங்கள் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வைக்கும். நரகத்தைப் பற்றிய பயத்தையோ அல்லது சொர்கத்தைப் பற்றிய தூண்டல்களையோ மறந்து விடுங்கள். இந்தியாவில் கூட இப்படி உண்டு. ஆசிரமத்திற்கு தவறாமல் வரும் ஒருவர் உண்டு. அவரும் இதைப் போன்ற அனுபவங்கள் தனக்கு ஏற்பட்டதாக கூறினார். அவர் காப்பாற்றப்படுவதற்கு முன் ஏழு நிமிடங்கள் இறந்த நிலையில் இருந்துள்ளார்.

அவர் பிழைத்தவுடன், சிலர் வந்து தன்னை ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு அழைத்துச் செல்ல வந்தார்கள் என்று தன் பயண அனுபவத்தைக் கூறினார். வெள்ளை நிற உடையணிந்து, தாடியுடன் ரிஷிகளைப் போல சிலர் இருந்ததாக கூறினார். அந்த ரிஷிகள் அவரை அழைத்து வந்தவர்களிடம் கூறினார்கள், ‘ஏன் இவரை அழைத்து வந்தீர்கள்? தவறான ஒருவரை அழைத்து வந்து  விட்டீர்கள். இவர் இன்னும் பூமியில் இருக்க வேண்டியிருக்கிறது.’

அவரை அழைத்துவந்தவர்கள் பதில் கூறினார்கள், ‘இல்லை, இவர்தான் சரியான் ஆள்’, என்றவாறு அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அவரைத் திரும்ப அழைத்து வந்து அவர் உடலின் மூக்கருகே அவரை விட்டுவிட்டனர் என்று தன் அனுபவத்தை விவரித்தார். அவர் சொன்னார், ‘என்னை நானே அறுவை சிகிச்சை மேஜை மீது பார்த்தேன். என்னை நானே பார்த்தேன் மற்றும் எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். மருத்துவர் என்னை பிழைக்க வைக்க முயன்று கொண்டிருந்தார் ஆனால் நானோ போய்விட்டேன். நான் ஒரு மெல்லிய கையிற்றால் இணைக்கப் பட்டிருந்தேன். என்னை அந்த மெல்லிய கயிற்றுடன் இணைத்து விட்டு மூக்கருகே விட்டுவிட்டுச் சென்றனர். மிக மெதுவாக நான் சுவாசிக்க ஆரம்பிக்க, எனக்கு உயிர் வந்தது. உயிர் பிழைத்த பலருக்கு இதைப் போன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறது.

நாம் நினைப்பதை விட வாழ்கை மிக அதிகம். என்னுடைய 17 வயதில் கன்னடத்தில் நான் ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதையில், நான் எங்கும் இருக்கிறேன், திடீரென்று ஒரு ஒளியைப் போல பூமிக்கு வந்து விட்டேன் என்று எழுதினேன். இதேயே தான் அந்த மருத்துவரும் தன் நூலில் மிகச் சரியாக எழுதியிருந்தார்!

கே: மன நல மருத்துவர்கள் நினைப்பது போல நம்முடைய பெரும்பாலான பிரச்சினைகள் பெற்றோரிடம் உள்ள உறவால் வந்ததாக நினைக்கிறீர்களா?

குருதேவ்: இல்லை, பெரும்பாலான பிரச்சினைகள் உங்களுடைய மனதினால் தான் வருகிறது. பாவம் பெற்றோர்கள், அவர்களுடன் இதை இணைக்க வேண்டாம்.

சில வருடங்களுக்கு முன் ஒரு இளம் பெண் தன் பெற்றோர்களுடன் வந்தார். அந்தப் பெண்ணிற்கு பதின் வயதைத் தாண்டி ஒரு 21-22  வயதிருக்கும். தன் பெற்றோர்களிடம் அவ்வளவு நல்ல உறவு வைத்திருந்தார். மன நல மருத்துவர்கள், பெற்றோர்களினால் தான் அந்தப் பிரச்சினை என்று அந்தப் பெண்ணிடம் சொல்ல, தன் பெற்றோரிடம் அவர் வைத்திருந்த உறவே முறிந்து போனது. அதற்கு முன் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்கவில்லை.

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து, அதில் வரும் பாதிக்கப்பட்டவர்களிடம் தன்னைப் பார்கிறார்கள் இந்தக் குழந்தைகள். அதில் வரும் பலவந்த படுத்தப்பட்ட குழந்தைகளைப் பார்த்து விட்டு திடீரென்று, ‘எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போது, என் தந்தை என்னை பலவந்தப் படுத்தினார்,’ என்றெல்லாம் நினைக்கத் தொடங்குகின்றனர்.

அந்தப் குழந்தையின் தந்தை சொன்னார், ‘நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன், இது சத்தியம், ஆனால் என் குழந்தை நான்  அவளை பலவந்தப்படுத்தினேன் என்று  கூறுகிறாள்.’ அவர்கள் இப்படியே இடிந்து போய்விட்டனர். அவர்கள் இருவரும் நரக வேதனைப்பட்டனரே ஒழிய வேறேதும் சொல்லவில்லை. அந்தக் குழந்தை அப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டது. இரண்டு வயதுக் குழந்தை எப்படி நினைவில் வைத்துக் கொள்ள முடியும்? இரண்டு வயதுக் குழந்தையாக உங்களை யார் தொட்டிலில் போட்டார்கள் என்று நினைவுகூர முடியுமா? அவர்கள் அப்படியே நான்கு வயது வரை உங்களுடன் இருந்தார்கள் என்றால் சரி, உங்களுக்கு நினைவிருக்க வாய்பிருக்கிறது. ஆனால், இரண்டு வயதில் யாரேனும் ஏதாவது செய்தால் அது நினைவிலிருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? தனிப்பட்ட முறையில் நான் அப்படி நினைக்கவில்லை.

சரி, அப்படியே நடந்திருந்தால், 25 அல்லது 30 வருடங்களுக்குப் பிறகு தன் ஐம்பதுகளின் இறுதியில் இருப்பவரை குற்றம் சாட்டி அவர் வாழ்கையை குலைப்பதால் என்ன பயன்? ஆம், நீங்கள் பாதிக்கப் பட்டவராய் இருந்தால் நீங்கள் பேச வேண்டும். ஆனால் சில நேரம் தனக்கு எதுவும் நடக்கவில்லை என்றாலும் தான் பாதிக்கப்பட்டதாக சிலர் நினைத்து விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவரை தன்னோடு பொருத்திக் கொள்கிறார்கள்; சிலர் இப்படிச் செய்கிறார்கள்.

இது ஒரு பெரும் பிரச்சினை. நம் பாரம்பரிய ஞானத்திலிருந்து நவீன மனநலவியல் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். மிக ஆழத்தில் உங்களுக்கு ஏதோ வலி இருக்கிறது என்று சொல்லக் கூடாது. மிக ஆழத்தில் உள்ளே சென்றால் அங்கு வலியே இல்லை, அங்கு பேரானந்தம் தான். நீங்கள் உங்களுக்குள் ஆழமாய்ச் சென்றதே இல்லை.

கே: பல நல்ல கொள்கைகளை நான் இங்கு கற்றுக் கொண்டேன். என்னுடைய தினசரி வாழ்க்கையில் இவற்றை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது? என் தொழிலில் நான் சற்று ஆவேசமாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டியிருக்கிறது. வெறும் தியானம் போதாது.

குருதேவ்: சரிதான்! மனநிலையை நீங்கள் உருவாக்க வேண்டிய தேவையில்லை. இங்கே நீங்கள் அமரும் போது கால்களை மடித்து அமர்கிறீர்கள். நீங்கள் அலுவலகம் செல்லும் போது, இப்படி அமரத் தேவையில்லை! வேலையில் இருக்கும் போது, வேலை செய்யுங்கள்.

நீங்கள் குளிருக்கான மேல் சட்டையை எப்போதும் அணிந்து கொண்டிருப்பதில்லை. இந்த தட்ப வெப்ப நிலையில் குளிருக்கான மேல் சட்டையை அணிந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். உங்களால் தாங்க முடியாது. குளிர்காலத்தில் மட்டுமே அதை அணிந்து கொள்ள முடியும். அதைப் போலவே குளிர்காலத்தில் கோடை உடை அணிந்திருக்க முடியாது.
உங்கள் சட்டையை மாற்றுவது போல, உங்கள் மன நிலையை, உங்கள் நடைமுறைகளை மாற்றிக் கொள்ளும் திறன் உங்களுக்கு உண்டு. ஒரே நடை முறையில் நீங்கள் எப்போதும் இருக்கத் தேவையில்லை. எப்போதும் நல்ல முகம் காட்டிக் கொண்டு இருக்க முடியாது. நீங்கள் தொழிலில் இருக்கும் போது தொழில் மன நிலையில் இருங்கள். மெதுவாக இல்லாமல் வேகமாக சுறுசுறுப்பாக உங்கள் செயல்களைச் செய்யுங்கள்.

மெதுவாகச் செய்யும் அசைவு நிலைத் தியானத்தை (பயிற்சியில் கற்றுத் தரப்படும் ஒரு வகை தியான நுட்பம்) இங்கு செய்யலாம், சாப்பிடும் கூடத்தில் அல்ல. இதை சாப்பிடுமிடத்தில் செய்தால் உங்கள் மதிய உணவு இரவு உணவாகிவிடும். இங்கு நீங்கள் கற்றுக் கொண்டதெல்லாம் உங்களுக்குள், உங்கள் அகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த. மனதளவில் ஒரு கோட்பாட்டை ஏற்படுத்த அல்ல. இவை எல்லாம் உங்களின் ஒரு பகுதி. உண்மையில், நீங்கள் உங்களின் தினசரி வாழ்க்கையில் இதை நடைமுறைப்படுத்த முயல வேண்டாம். நீங்கள் சாதாரண மனிதராக இயல்பான மனிதராக இருங்கள். இந்த ஞானம் தானாகவே உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும். அது அந்த ஞானத்தின் கடமை. இதை நடைமுறைபடுத்த எந்த முயற்சியும் தேவையில்லை. இது சுயமாக தானாகவே வெளிப்படும்.

கே: ஆசையை எப்படி சமாளிப்பது? எனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, பல முறை முயன்றும் இன்னும் நிறைவேறவில்லை.

குருதேவ்: ஆசை நிறைவேறுகிறதோ இல்லையோ, மகிழ்ச்சியாய் இருந்து கொள்ளுங்கள். ஒரு ஆசையையே பிடித்துக் கொண்டிருக்காதீர்கள். ஏனென்றால், ஒரு ஆசை நிறைவேறிய பின் அந்த ஆசை வருவதற்கு முன் நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்களோ அங்கேயே உங்களை விட்டுவிடுகிறது. எல்லா ஆசைகளும் நிறைவேற முடியாது. சில நிறை வேறுகிறது சில நிறைவேறாது. ஆனால் நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். எந்த நிலைப்பாடு என்று உங்களுக்குத் தெரியுமா? என்ன வந்தாலும் சரி, நான் மகிழ்ச்சியாய் இருக்கப் போகிறேன். நீங்கள் விரும்பினால் உங்களுக்குத் திருமணமாக நிறைய வாய்புகள் உள்ளது. உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தாலும் சரிதான். அப்படியும் மகிழ்ச்சியாய் இருங்கள். உங்களுக்குக் குழந்தை இருக்கிறதோ இல்லையோ மகிழ்ச்சியாய் இருங்கள்.

வாழ்க்கையில் நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு என்னவென்றால், ‘எந்த ஒரு சூழ்நிலையும் என் மகிழ்ச்சியை குலைக்க அனுமதிக்க மாட்டேன்.’ புரிந்ததா? நீங்கள் அந்த முடிவை எடுத்தாக வேண்டும், வேறு யாரும் அந்த முடிவை உங்களுக்காக எடுக்க முடியாது.

கே: உங்கள் கருத்துப்படி, இறப்பிற்கு பின் என்ன இருக்கிறது? மறுபிறப்பில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

குருதேவ்: மறு பிறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது இருக்கிறது என்று தெரியும். உங்களுக்குத் தெரியாததைத் தான் நம்ப வேண்டும். எனக்கு அது இருக்கிறது என்று தெரியும் போது நான் ஏன் நம்பவேண்டும்? ‘என் கார் வெளியே இருக்கிறது என்று நம்புகிறேன்’, என்று நீங்கள் சொல்வதில்லை. உங்கள் காரை வெளியே நிறுத்தியிருந்தால், ‘என் கார் வெளியே இருக்கிறது’, என்று சொல்வீர்கள். புரிந்ததா?
நம் எல்லோருக்கும் இருக்கும் விசாலமான வாழ்கையின் ஒரு சிறு அங்கம் தான் இந்த வாழ்கை. இந்த வாழ்கை ஒரு சிறு துளிதான்.

கே: நான் உங்கள் ட்விட்டர் கணக்கை பின்பற்றுகிறேன், உங்கள் ட்வீட்களை நீங்களே எழுதுகிறீர்களா? (ட்விட்டர் – சிறு வாசகங்களை பதிவு செய்ய வலைப்பின்னலில் இருக்கும் ஒரு மென்பொருள் வசதி, இதில் உங்கள் கணக்கை பின்பற்றுபவர்களுக்கு அந்த வாசகங்கள் கிடைக்கும்)
குருதேவ்: ஆம், இன்று காலை கூட நான் மூன்று ட்வீட்களை அனுப்பினேன். என் ட்வீட்களை நானே தான் அனுப்புகிறேன். சில சமயம் என் உதவியாளரையோ அல்லது வேறு சிலரையோ செய்யச் சொன்னாலும் பெரும்பாலும் 95% நானே அனுப்புவேன். நீங்கள் எல்லோரும் என் ட்விட்டர் கணக்கில் இருக்கிறீர்களா? உங்களில் எத்தனை பேர் இன்னும் என் ட்விட்டர் கணக்கில் இல்லை. கொஞ்சமும் தாமதிக்காமல், இப்போதே அதில் சேருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். தினசரி கொஞ்சம் ஞானம் படிப்பது நல்லது.

கே: பல வருடங்கள் நான் மன அழுத்தத்திற்கான மருந்தை உட்கொண்டிருந்து வந்தேன். கடந்த இரண்டு வருடங்களாக ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. தினசரி சுதர்ஷனக் கிரியா செய்து வருகிறேன், ஆனாலும் என்னுடைய கவனம் மற்றும் தூக்கம் சரியாக இல்லை, இது என் வேலையை பாதிக்கிறது. அந்த மருந்தை எடுத்துக் கொண்டிருந்த போது நன்றாக இருந்தது என்று சில நேரம் உணர்கிறேன். என் வேலை ஆபத்தில் இருப்பதால், மருத்துவரின் ஆலோசனைப் படி நான் அந்த மன அழுத்தத்திற்கான மருந்தை உட்கொள்ளலாமா அல்லது என்ன ஆனாலும் சரி என்று அதை தவிர்ப்பதா?

குருதேவ்: என்ன ஆனாலும் சரி அதை தவிர்த்து விடுங்கள் என்று சொல்ல மாட்டேன், ஆனால் நீங்கள் அதை தவிர்க்க முயல வேண்டும். மேலும், யோகாசனம் செய்யுங்கள். காலை வேளையில் ஒரு மணிநேரம் உடம்பை நீட்டி சமன் செய்து பயிற்சி செய்யுங்கள். இன்று காலை செய்த யோகப் பயிற்சி நன்றாக இருந்தது அல்லவா? எத்தனை பேர் அதை அனுபவித்து மகிழ்ந்தீர்கள்? அதைச் செய்தால் உங்கள் கவனம் மற்றும் எண்ணக் குவிப்பு மேம்படும். அதனால்தான் நான் உங்களுக்கு கண் திறந்தவாறு செய்யும் தியானப் பயிற்சி அளித்தேன். கண்களை மூடினால் பல சமயம் உங்கள் மனம் எங்கோ சஞ்சரித்து காற்றிலே கோட்டை கட்ட ஆரம்பித்து விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். பிறகு உங்கள் கண்களை திறக்க நான் ஞாபகப்படுத்த வேண்டும்.

எனவே, சில நிமிடங்கள் இதைப் போன்ற தியானம் செய்வது உங்கள் கவனத்தை திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். என்னைப் பாருங்கள், மக்கள் ஒவ்வொரு நாளும் அவ்வளவு கேள்விகள் கேட்கிறார்கள், உங்களுக்கு அது எவ்வளவு என்று தெரியாது. இந்த வகுப்பு சிறியது, ஆனால் கனடாவில் 3000 பேர், அமெரிக்காவில் 3000 பேர், ஒவ்வொருவரும் நான் வரும் போதும் போகும் போதும் அதே கேள்வியை பல முறை கேட்கிறார்கள், நான் அதே பதிலை ஒவ்வொரு முறையும் கூறுகிறேன். அவர்கள் ஐந்து முறை கேட்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், எனவே நான் அதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்! நான் எல்லோரையும் பார்த்து விடுவதில் நிச்சயமாய் இருக்கிறேன், ஒருவரை நான் பார்க்காவிட்டால் கூட, ‘என்னை தவிர்த்து விட்டீர்கள், என்னை உங்களுக்குப் பிடிக்கவில்லை, உங்களுக்கு என் மீது அன்பு இல்லை,’ என்றெல்லாம் அவர் எழுதிவிடுவார்.

உண்மையில் நான் யாரையும் பார்க்காமலிருப்பதில்லை. நான் பார்க்கும் போது அவர்கள் எங்காவது பார்த்துக் கொண்டிருப்பார்கள்! ஆனால் அவர்கள், ‘நீங்கள் என்னைப் பார்த்து சிரிக்கவில்லை,’ என்பார்கள். நான் ஒவ்வொருவரையும் கவனித்து விடுகிறேன், 100 சதவீதம். உங்களாலும் அப்படிச் செய்ய முடியும்.

கே: அன்பு குருதேவ், நம் பூமி நான்காவது பரிமாணத்திற்குள் நுழையப் போகிறது என்று கடந்த சில வருடங்களாகப் பலர் கூறிவருகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

குருதேவ்: எந்த பரிமாணத்தையும் இங்கே தெரிந்து கொள்ளும் வரை, இந்தப் பேச்சுகளில் திசை திரும்பாதீர்கள். இது திகைப்பான ஒரு உணர்வைத் ஏற்படுத்த ஒரு வழி. டிசம்பர் 2012 ல் உலகம் முடியப் போகிறதா என்ற கேள்வியை பல்லாயிரம் முறைகள் என்னிடம் கேட்டார்கள், அதைப் போலத்தான். ஓ கடவுளே! எங்கே போனாலும், பூமி முடியப் போகிறதா என்பதையே கேட்டேன். நான் சொன்னேன், ‘இது உண்மையல்ல, எல்லாம் எப்போதும் போல சரியாகவே இருக்கும்’.

எல்லாம் மூடிவிடப் போகிறார்கள் என்று ஆறு மாதத்திற்கு தேவையான பால் பவுடர், மளிகைப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி மக்கள் தங்கள் வீட்டு நிலவறையில் சேமித்து வைத்தார்கள். இதெல்லாம் மக்கள் சிறு சிறு சிலிர்ப்பான உணர்வுகள் வேண்டி அவ்வப்போது இப்படியான கற்பனைகளை கொண்டு வருவார்கள். எல்லா பரிமாணங்களும் இங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள், கவலை வேண்டாம், ஆனந்தமாய் இருங்கள்.

மதத்திலிருந்து ஆன்மீகத்திற்கு

ஜூலை – 30 – 2013 - பேட் ஆண்டோகஸ்ட் - ஜெர்மனி



கே: மதம் என்னுடைய வாழ்க்கையில் ஒரு தடையாக இருப்பதனால் என்னால் முன்னேற முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: கவலைப்பட வேண்டாம். மதத்திலிருந்து ஆண்மீகத்திற்கு செல்லுங்கள். நீங்கள் ஒரு ஆன்மீகவாதி என்பதே போதும். ஒவ்வொரு மதத்திலும் நல்ல விஷயங்கள் இருக்கின்றன. எல்லா மதங்களிலிருந்தும் கொஞ்சம் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து செல்லுங்கள். எதிலும் தடைப்பட்டு நிற்க வேண்டாம்.  

நீங்கள் அனுமதிக்காத வரையில் எதுவுமே தடையாக இருக்க முடியாது. தடையாக இருப்பது நீங்கள் தான், உங்கள் மனம் தான். கடவுளுக்கு எதிராக பாவம் செய்வதாக ஒரு குற்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுவதே காரணம். ஆன்மீகத்திலிருப்பது எப்படி ஒரு பாவமாக முடியும்? எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது, அன்பாக இருப்பது, உலகில் நல்லனவற்றையே செய்வது, சலனமற்று அமைதியாகவும் பக்தியுடனும் இருப்பது எவ்வாறு பாவமாகும்? 

பாவம் செய்து விடுவோம் என்கின்ற குற்ற உணர்வும் பயமும் மக்களின் மனதில் திணிக்கப் பட்டுள்ளது. இதை செய்யாதீர்கள், அதை செய்யாதீர்கள் செய்தால் கடவுள் தண்டிப்பார் என்றெல்லாம் சொல்லப்படும் போது விரக்தியும் பலவீனமும் உண்டாகின்றது. நீங்கள் வைரம் போன்றவர்கள். அன்பு மற்றும் ஆனந்தத்தின் உள்ளுணர்வு. நீங்கள் யோகப்பயிற்சி மற்றும்   தியானம் செய்ததற்காக கடவுள் உங்கள் மீது கோபம் கொள்ளமாட்டார். கிழக்கத்திய நாடுகளின் செயல்கள் சாத்தானின்  செயல்கள். அவற்றால் கடவுள் உங்கள் மீது கோபம் கொள்வார் என்று மூடத்தனமான கருத்துக்களை சிலர் பரப்பி வருகின்றனர்.

யாரோ ஒருவர் நேற்று என்னிடம் சொன்னார். "குருதேவ், என்னுடைய சக மாணவன் ஒருவன் மதம் மாறி ஞானஸ்நானம் பெற்று விட்டான். இப்பொழுதெல்லாம் அவன் என் வீட்டிற்கு வரும் போது இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட பிரசாதத்தினை சாப்பிட மறுக்கின்றான். கோவிலில் நடைபெறும் திருமணத்திற்கு அழைத்தால் என்னுடன் கோவிலுக்கு வர மறுக்கின்றான்.கோவிலுக்கு வந்தால் கிறிஸ்துவுக்கு துரோகம் செய்வதாக நினைக்கின்றான். இறைவனுக்கு படைக்கப்பட்ட உணவை கையால் தொடவும் மறுக்கின்றான். இது போன்ற தவறான மூடத்தனமான கருத்துக்கள் மூலமாக குற்ற உணர்வும் பயமும் மக்களிடம் உண்டாக்க படுகின்றது. இது மிகவும் தவறு. நாம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும்.அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். இதனால் இறைவன் உங்கள் மீது கோபம் கொள்ள மாட்டார் என்று நான் உறுதி அளிக்கின்றேன். நீங்கள் நரகத்திற்கெல்லாம்  செல்ல மாட்டீர்கள். இது போன்ற தவறான கருத்துக்களை திணிக்கும் மனிதர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நம்பிக்கையோடு செயல்படுங்கள். 

கே: இது எனக்கேற்ற சரியான இடம் தானா? இயல்பான சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி செல்ல வழியில்லை. என்னை மிகவும் நேசிக்கும் என் கணவர் கூட என்னுடைய வாழும் கலைப் பயிற்சி செயல்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்குப் பித்து பிடித்துவிடுமென்று பயப்படுகின்றார். 

குருதேவ்: எல்லாவற்றையும் சமன்படுத்தி செல்லுங்கள். யாரையும் பயமுறுத்த வேண்டாம்.  மற்றவர்களுக்குப் புரிய வையுங்கள். வாழ்க்கையில் அனைத்தையும் சமாளித்து சமன்படுத்தி செல்ல வேண்டியது மிகவும் அவசியம். இந்த வாழும் கலைப் பயிற்சி என்பது இயற்கைக்கு மாறானது அல்ல. மகிழ்ச்சியாக வாழ்வது, சலனமற்று அமைதியாக வாழ்வது, ஆனந்தத்தை எங்கும் பரப்புவதென்பது இயல்பானதே. நாம் நம்முடைய வெளிப்படுத்தும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.  

கே: நான் ஏன் இங்கே இருக்கின்றேன்? இந்தப் பயிற்சியினை ஏன் செய்தேன்? நான் இயல்பாக இருக்கின்றேனா? 

குருதேவ்: இயல்பான தன்மைக்கு பல நிலைகள் உள்ளன. கீழ் நிலையிலிருந்து பார்க்கும் போது நீங்கள் இயல்பாக இல்லாதது போல் தோன்றலாம்.ஆனால் சற்று மேல் நிலையிலிருந்து பார்க்கும் போது நீங்கள் இயல்பானவர். அதற்கும் மேலான நிலையிலிருந்து பார்க்கும்போது நீங்கள் இயல்பானவராக இல்லாமலிருந்தால், நீங்கள் மேலும் முன்னேற வேண்டியது அவசியமாகின்றது. இயல்பாக இருப்பதென்பதன் பொருள் என்ன? அது நிலைகளுக்கேற்ப மாறுபடும். நீங்கள் ஏன் இங்கே இருக்கின்றீர்கள்? இந்தக் கேள்வியை நீங்கள் ஒரு பெரிய கோணத்திலிருந்து கேளுங்கள். நான் ஏன் இந்த பூமிக் கிரகத்தில் இருக்கின்றேன் என்ற கேள்வி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கேள்வியை உங்களிடமே விட்டு விடுகின்றேன். உங்களை நீங்களே மீண்டும் கேட்டு கொள்ளுங்கள். அது உங்களை பெரிய தத்துவ மேதையாக்கும்.    

கே: என் சக ஊழியர்கள் எப்போதும் ஏதோ ஒரு வகையில் என் சக்தியை எடுத்து சென்று விடுகின்றனர். அவ்வாறு சக்தியை இழக்காமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: கவலைப்பட வேண்டாம். அவர்களுக்கு நிறைய சக்தியை கொடுங்கள். அவர்கள் எல்லோரும் உங்களிடமிருந்து எடுக்கக்கூடிய சக்தியை விட மிக அதிகமான சக்தி உங்களிடம் உள்ளது. சூரியனும் சந்திரனும் 'நீங்கள் என்னிடமிருந்து வெளிச்சத்தை கொண்டு சென்று விடுகின்றீர்கள்' என்று ஒருபோதும் சொல்வதில்லை. நீங்கள் சக்தியின் பிறப்பிடம். நான் உங்களுடன் இருக்கின்றேன். நான் உங்களுக்கு வற்றாமல் சக்தியை வழங்கிக் கொண்டிருக்கின்றேன். கவலைப்பட வேண்டாம். உங்கள் கவனத்தை அங்கே கொண்டு செல்ல வேண்டாம். உங்கள் கவனத்தை இங்கே என்னிடம் வைத்தால்  நீங்கள் அதிக சக்தியை பெறுவீர்கள். அப்படியில்லாமல் உங்கள் கவனத்தை அங்கே வைத்தால் உங்கள் சக்தியை இழந்துவிட்டது போல் உணர்வீர்கள்.

கே: நான் என்னுடைய கோபத்தை அடக்க வேண்டுமா அல்லது வெளிப்படுத்த வேண்டுமா?

குருதேவ்: கோபத்தை சில சமயங்களில் வெளிப்படுத்த வேண்டும். சில சமயங்களில் அடக்க வேண்டும். இதற்கு நேரிடையான ஒரே பதில் கிடையாது. எல்லா நேரங்களிலும் கோபத்தை வெளிப்படுத்த முடியாது. நீங்கள் உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுவீர்கள். அதே சமயம் நீங்கள் எல்லா நேரங்களிலும் அடக்கி வைக்கவும் கூடாது. சில நேரங்களில் வெளிப்படுத்த வேண்டும், இல்லையென்றால் நீங்கள் வெடித்து விடக்கூடும். சரியான சமன்பாடு உங்களிடம் வேண்டும். கோபத்தை எப்போது வெளிப்படுத்துவது எப்போது அடக்குவது என்பதை அறிந்து கொள்வதே ஞானம். 

கே: ஏற்கெனவே இருமுறை தோல்வியுற்ற உறவுகளின் நினைவுடன் மறுபடியும் இன்னும் ஒரு உறவை தேடும் ஆசையிலிருந்து எவ்வாறு வெளிவருவது? கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்வியினால் மறுபடியும் ஒரு துணையை தேடும் எண்ணத்தில் எனக்கு ஒரு குற்ற உணர்வு ஏற்படுகின்றது.

குருதேவ்: நீங்கள் இரண்டு விஷயங்களை செய்யலாம். ஒன்று, உறவு முறை உங்களுக்கு ஏற்றதல்ல என எண்ணினால் ஒரு சிங்கத்தை போல தனியாகவே வாழலாம். இரண்டு, உங்களுக்கு உண்மையிலேயே உறவு தேவைப்படுகின்றது என எண்ணினால் மறுபடியும் முயற்சி செய்து வெற்றி கொள்ளலாம். நீங்கள் கல்லறை செல்லும்வரை முயற்சி செய்யலாம்.  வெற்றி பெற்றே ஆக வேண்டும் என உறுதியுடன் இருந்தால் சொர்க்கம் சென்ற பின்பும் முயற்சி செய்யலாம்.

இப்போது சந்தோஷமாக இருங்கள். உங்களது உறவுகள் சரியாக அமையவில்லை என்பதற்காக நீங்கள் உங்களை ஏன் மேலும் துன்பப்படுத்திக் கொள்ளுகின்றீர்கள்? அதற்குரிய வயதை கடந்து விடும் போது அதை விட மேம்பட்ட விஷயங்களில் கவனத்தை செலுத்தலாம். உறவு என்பது இடைப்பட்ட ஒரு சில வருடங்களுக்கே தேவைப்படும். உங்களுடைய வளர் இளம் பருவத்தில் உங்களுக்கு இத்தகைய உறவுகள் ஏதும் தேவைப்பட்டதில்லை.உங்களுக்கு எந்த தொல்லையும் இருந்ததில்லை. நீங்கள் சந்தோஷமாக இருந்தீர்கள். எழுவது வயதிற்குப் பின்பும் உங்களுக்கு அத்தகைய உறவுகள் இருக்காது. அப்படியே இருந்தாலும் சண்டை செய்வதற்காகவே இருக்கும். அதன் பிறகு உங்களுக்கு உறவு முறை ஏதும் இருக்காது. வெறும் தோழமை உறவாகவே இருக்கும் எனவே, அதைப் பற்றி அதிகம் நினைக்க வேண்டியது இல்லை. 

இடைப்பட்ட காலத்தில் உங்களுக்கு ஒரு உறவுமுறை தேவைபடுகின்றது என்றால் நீங்கள் அதை ஏற்படுத்திக் கொள்ளலாம். அது முடியவில்லையென்றால் தொடர்ந்து தனியாகவே இருக்கலாம். மறுபடியும் தோன்றினால் மற்றொரு நபரிடம் முயற்சி செய்யலாம். அது நிறைவேறினால் நல்லது இல்லையென்றாலும் நல்லதே எப்படியிருந்தாலும் நல்லதே. 

கே: குருதேவ், இறந்தபின் உடல் உறுப்புகளை தானம் செய்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? 

குருதேவ்: அது நல்லதே. நாம் நமது உடல் உறுப்புகளை தானம் செய்யலாம். நம்முடைய உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு உபயோகப்படும் போது நாம் மகிழ்ச்சி அடையலாம். கண்களையோ அல்லது மற்ற உடல் உறுப்புகளையோ தானம் செய்யலாம். நீங்கள் இங்கு இல்லையென்றாலும் உங்கள் கண்கள் வேறு யாராவது ஒருவருக்கு உதவி செய்து கொண்டிருக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு உங்கள் ஞானத்தைக் கொடுத்தால் நீங்கள் இல்லாத போதும் அந்த ஞானம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். பல தலைமுறைகள் மக்கள் அந்த ஞானத்தை அனுபவிப்பார்கள். உடல் உறுப்புகள் ஞானத்தை போல பல வருடங்கள் இவ்வுலகில் இல்லா விடினும் குறுகிய காலம் அவைகள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். உயிரோடு இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ நாம் மற்றவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவியாக இருக்க முடியுமென்றால் நாம் அதை செய்வதே இந்த வாழ்க்கையின் நோக்கம் ஆகும். 
 
கே: உண்மையிலேயே நம்மால் மற்றொருவரை வெறுப்பதை நிறுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? 

குருதேவ்: வெறுப்பதை நிறுத்த வேண்டாம் வெறுப்பதை தொடரலாம். உங்களுக்கு எது சுலபம் எனத் தோன்றுகிறதோ அதை செய்யலாம். நீங்கள் செய்யும் ஒரு செயல் உங்களை தொல்லை படுத்துகிறது என்றாலோ, அவ்வாறு செய்வது மிகவும் கடினமாகவும் உள்ளது என்றாலோ அதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்? மிகவும் கடினமான ஒன்றை செய்துவிட்டு துன்பகரமான நிலையில் நீங்கள் வாழ்வதில் என்ன பயன்? எது உங்களுக்கு சுலபமாக உள்ளதோ, எது உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறதோ அதை மட்டும் செய்யலாம். நான் உங்களுடைய மகிழ்ச்சியை பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன். நீங்கள் மற்றொருவரை வெறுப்பது உங்களுக்கு மகிழ்ச்சியையும் பேரானந்தத்தையும் தருகிறது என்றால் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் அதை செய்யலாம்.

கே: உண்மையிலேயே நம்மால் மற்றொருவரை வெறுப்பதை நிறுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

குருதேவ்: வெறுப்பதை நிறுத்த வேண்டாம். வெறுப்பதை தொடரலாம். உங்களுக்கு எது சுலபம் எனத் தோன்றுகிறதோ அதை செய்யலாம். நீங்கள் செய்யும் ஒரு செயல் உங்களை தொல்லை படுத்துகிறது என்றாலோ, அவ்வாறு செய்வது மிகவும் கடினமாகவும் உள்ளது என்றாலோ அதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்? மிகவும் கடினமான ஒன்றை செய்துவிட்டு துன்பகரமான நிலையில் நீங்கள் வாழ்வதில் என்ன பயன்? எது உங்களுக்கு சுலபமாக உள்ளதோ, உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறதோ அதை மட்டும் செய்யலாம். நான் உங்களுடைய மகிழ்ச்சியை பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன். நீங்கள் மற்றொருவரை வெறுப்பது உங்களுக்கு மகிழ்ச்சியையும் பேரானந்தத்தையும் தருகிறது என்றால் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் அதை செய்யலாம்.

கே: என் மீதும் மற்றும் தெய்வீகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை அதிகமாக்கி கொள்வது எப்படி?

குருதேவ்: இதை மறந்துவிடுங்கள்.நம்பிக்கையை அதிகமாக்க முயற்சி எதுவும் செய்ய வேண்டாம். நம்பிக்கையை அதிகமாக்கச் செய்வது ஒரு தொல்லையே. உங்களுக்கு தேவையான அளவு நம்பிக்கை உள்ளது என அறியவும். உங்களிடம் எவ்வளவு பெரிய கோப்பை உள்ளதோ அதில் முழுவதுமாக உள்ளது. அதைவிட அதிகமாக உங்களால் வைத்துக் கொள்ள முடியாது. பல சமயங்களில் என்னிடம் ஆசீர்வாதம் கேட்கின்றனர். என்னுடைய ஆசீர்வாதங்கள் எப்போதுமே உள்ளதாக நான் அவர்களிடம் கூறுவேன். ஆனால் அதை பெற்றுக்கொள்ளும் உங்களுடைய திறனை பார்க்க வேண்டும். நீங்கள் என்னிடம் ஒரு சிறிய கோப்பையுடன் வந்து 10 லிட்டர் பால் வேண்டும் எனக் கேட்டால் என்னால் எப்படிக் கொடுக்க முடியும்? நீங்கள் 10 லிட்டர் கொள்ளக் கூடிய கோப்பையைக் கொண்டு வர வேண்டும். ஒரு தேநீர்க் கோப்பையில் உங்களால் 10 லிட்டர் பாலை எடுத்துச் செல்ல இயலாது. அதனால் உங்களுடைய கொள்ளளவை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். என்னிடம் தேவையான அளவு உள்ளது என நினைக்கும்போது அது தானாகவே கிடைத்து விடும். எனக்கு நம்பிக்கை இல்லையே எனக் கூற வேண்டாம். உங்களிடம் தேவையான அளவு உள்ளது. 

குப்பைத் தொட்டியில் ஒரு வைரம்

27 ஜூலை 2013 – போன் வட கரோலினா


வாழ்கை ஒரு கொண்டாட்டம். ஒவ்வொரு நாளும், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் விட்டுவிடாமல், கொண்டாடி நன்றியுடன் இருங்கள். கொண்டாட்டம் எவ்வாறு நிகழும்? கொண்டாட்டம் என்பது மலர்களையும் பலூன்களையும் வைத்து மட்டும் நிகழாது, அது உள்ளிருந்து நிகழ வேண்டும். கொண்டாட்டம் நிகழ, என்னன்ன தகுதிகள், நிலைமைகள் தேவை என்று தெரியுமா? அதைப் பற்றிச் சிந்தித்திருக்கிறீர்களா? இது கேட்ச் 22 போன்றது. 

கொண்டாடினால் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்,மகிழ்ச்சியாக இருந்தால் கொண்டாடுகிறீர்கள். நீங்கள் பயத்துடன் இருக்கும் போது கொண்டாட முடியாது. அன்பும் சார்புணர்வும் வேண்டும். ஆம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி உணவு, பசியுடன் இருந்தால் கொண்டாட முடியாது. கவனியுங்கள்! உணவைப் பரிமாற்றம் செய்து கொள்பவர்கள் உண்மையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா? கொண்டாடுகிறார்களா? அவர்கள் முகத்தை கவனியுங்கள். பின்னர் தூய்மையாக உணருதல் தேவை. நீங்கள் தூய்மையாக உணரும் போது கொண்டாடலாம்.அழுக்காக உணரும்போது கொண்டாட முடியுமா?

நீங்கள் கழிவு நீர் அமைப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒருவர் "வாருங்கள் நாம் கொண்டாடலாம்" என்றால் நீங்கள் "இல்லை, நான் அழுக்காக இருக்கின்றேன். குளித்து விட்டு வருகிறேன், பிறகு கொண்டாடலாம்" என்று கூறுவீர்கள் அல்லவா?. ஆகவே கொண்டாட்டத்திற்கு என்ன தேவை? தூய்மையாக உணருவது - சுத்தம். நீங்கள்  உள்ளும் புறமும் தூய்மையாக எப்போது உணருகிறீர்களோ அப்போது தான்  கொண்டாட்டம். தங்களை கொடிய பாவம் செய்தர்வர்களாக எண்ணுபவர்களால் கொண்டாட முடியாது. ஏனெனில் அப்பாவமும், குற்ற உணர்வும் அவர்களைத் தின்று விடும். ஆகவே, உள்ளும் புறமும் தூய்மை உணர்வு தேவை.
இந்த குருபூர்ணிமா தினத்தில், நீங்கள் அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன். நீங்கள் ஒரு வைரம். ஒருவேளை அது குப்பைத் தொட்டியில் இருக்கின்றது. 

நீங்கள் உங்களைத்  தூய்மையற்றவ்ராக எண்ணும் போது நீங்கள் ஒரு வைரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஒரு வைரம் தூய்மையற்றதாக இருக்க முடியாது. ஒரு வேளை அது குப்பைத் தொட்டியில் கிடக்கலாம். குப்பைத் தொட்டியிலுள்ள வைரத்தைத் தூர எரிந்து விடுவீர்களா? இல்லை அதை எடுத்து சுத்தப்படுத்துவீர்கள். நீங்கள் செய்யும் பயிற்சிகள் எல்லாம் சுத்தப்படுத்தும் முறை தான்.

வைரத்தை சுத்தப்படுத்த எவ்வளவு நேரமாகும்? அதை மிகக் கடினமாக அழுத்தித் தேய்க்க வேண்டுமா?  இல்லை.சிறிது தண்ணீர், சிறிதளவு சோப்பு இருந்தால் போதும். அது போன்று "சோஹம்! சோஹம்! "அவ்வளவுதான்.வைரம் மீண்டும் சுத்தமாகி விட்டது. நீங்கள் "நித்ய சுத்தோஹம்" "நான் எப்போதும் தூய்மையானவன்" என்பதை அறிந்து கொண்டால் உங்கள் வாழ்வில், கொண்டாட்டம் என்பது எப்போதுமே இல்லாமல் போகாது. உள்ளார்ந்த அக நிலையில்இயல்பாகவே நாம் தூய்மையானவர்கள். எந்த க்ஷணத்தில் இத் தூய்மையை உணர்ந்து, இதய தூய்மையை அறிந்து கொண்டு இப்பிரபஞ்சத்தில் யாருக்கும் தீமையை நினைக்காமல் இருக்கின்றீர்களோ அப்போது நீங்களே அன்பு எனப்படுவதாக இருக்கின்றீர்கள். எப்போது நீங்கள் தூய்மையாகவும், அன்பாகவும் உணருகின்றீர்களோ அப்போது நீங்கள் மலருகின்றீர்கள் விழிப்புணர்வு உங்களுக்குள் ஏற்படுகின்றது.

நீங்கள் எப்போதுமே தூய்மையானவர். மௌனம் தான் தூய்மையின் நறுமணம். மௌனமும், தான் தூய்மையானவர் என்று உணறுதலுமே கொண்டாட்டம் மௌனத்தின் வழியாக வரும் கொண்டாட்டம் உள்ளிருந்து வருவதால் மிகுந்த நிலைநிறுத்தப்பட்ட ஒன்று. நீங்கள் தண்ணீரும் சோப்பும் (வாழும்கலை பயிற்சிகள்) கொண்டு வைரத்தை சுத்தப்படுத்தி விட்டதால், வைரம் இப்போது பிரகாசிக்கின்றது.அதுவே கொண்டாட்டம். உங்களிடம் உள்ள ஒவ்வொன்றும்,மெய்யானது, உங்களது புன்சிரிப்பும் மெய்யானது. சிலரது புன்முறுவலைப் பார்த்திருக்கிறீர்களா? அது உள்ளிருந்து வருவதில்லை. அது ஒப்பனைப் புன்முறுவல். சிலர் நல் வரவு கூறுவார்கள், அது ஒப்பனை நல்வரவு! சிலர் மிக்க நன்றி என்பார்கள், அது ஒப்பனை நன்றி. வெளிப்புறமாகக் கூறுவது. மனதில் மௌனம் இல்லை. மனதினுள் கொந்தளிப்பும், தூய்மையின்மையும், குற்ற உணர்வும் கொதித்துக் கொண்டு இருக்கின்றன. மனித வாழ்கை கொண்டாட்டத்திற்குறியது. நமக்குள் வீணாக சேகரித்து வைத்திருக்கும் அனைத்தையும் விட்டு விடலாம்.

நாம் குப்பையை நகைப்பெட்டியில் வைத்திருக்கிறோம். குப்பைத் தொட்டியில் நகைப் பெட்டியல்ல நகைபெட்டியில் குப்பையை வைத்திருக்கிறோம். அதை அப்புறப்படுத்த வேண்டும். நீங்கள் தான் உண்மையான அன்பு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நாம் பாவம் செய்தவர்கள், குற்றமுள்ளவர்கள் என்றே வரையறுக்கப்பட்டு விட்டதால், நம் மீதே நாம் கடினமாக இருக்கின்றோம். அவ்வாறு நம்மைக் கடினப்படுத்திக் கொள்ளுவதால், நமக்கு பரிசாக அளிக்கப்பட்ட, நம்மிடம் உள்ள நல்ல பண்புகள் மற்றும் குணங்களை நாம் அடையாளங்கண்டு கொள்வதில்லை. இந்த பூமிக்கு வந்துள்ள நாம்  ஒவ்வொருவரும், பல அழகான குணங்களுடன் வந்துள்ளோம். ஆனால் அதை அடையாளங்கண்டு கொள்வதில்லை.

குரு பூர்ணிமா என்பது உங்களது  அழகை நீங்கள் அடையாளம் அறிந்து கொள்ளும் கொண்டாட்டம். எப்போது இந்த அழகை உணர்ந்து, உங்களுக்கு அளிக்கப்பட பரிசுகளை அடையாளங் காண்கிறீர்களோ, அப்போது நீங்கள் மிகுந்த நன்றியை உணருவீர்கள். இத்தகைய நன்றியறிதலை,குரு பாரம் பரியத்திற்கு செலுத்தி வெளிப்படுத்துதலே, குரு பூர்ணிமா. அது உண்மையான ஒரு கொண்டாட்டம்.

நாம் இப்போது மௌனத்திலிருந்து ( வாழும்கலை முது நிலை தியானம் - மௌனம் பயிற்சி) வெளி வந்து விட்டோம். ஆயினும் மௌனமாகவே இருந்து கொண்டு இருக்கின்றோம். இப்போது நீங்கள் ஒரு வைரம் என்று உணருங்கள், அது குப்பைத் தொட்டியில் இருக்கலாம். பரவாயில்லை.
அதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது, கோபப்படக்கூடாது, இப்போது செய்வதையெல்லாம் செய்யக் கூடாது என்பதெல்லாம் இல்லை. எப்போதும் நல்லவராகவே இருக்க வேண்டும், பிறரை இகழக் கூடாது என்பதெல்லாம் கூட இல்லை! எல்லாமே செய்யலாம். உங்கள் அன்றாட வாழ்க்கையில் என்ன செய்கிறீர்களோ அவற்றையெல்லாம் செய்யலாம்!

ஆயினும், உங்களது செயல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் நீங்கள் என்று உணருங்கள். உங்கள் சூழ்நிலைகள்,சுற்றுப்புறம், உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்ச்சிப்போக்குகள் இவற்றுக்கெல்லாம் மேம்பட்டவர்  நீங்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நீங்கள் எண்ணிக் கொண்டிருப்பதை விட நீங்கள் மேம்பட்டவர். மீண்டும் மீண்டும், "நான் ஒரு வைரம். துரதிருஷ்ட வசமாக குப்பைத் தொட்டியில் விழுந்து விட்டேன்.அதிலிருந்து எழுந்து கொண்டிருக்கிறேன். என்னை சுத்தபடுத்திக் கொண்டு இருக்கின்றேன் என்று எண்ணிக் கொள்ளுங்கள். அத்தகைய சுத்தப்படுத்துதல் ஓராண்டுக்கொரு முறையாக இருக் கலாம், ஆண்டுக்கு இரு முறையாக இருக்கலாம், அப்போது நீங்கள் "உங்களுக்குள் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பதெல்லாம் நீங்கள் அல்ல என்று உணருவீர்கள். நீங்கள் எப்போதுமே தூய்மையானவர். இதை நம்புவது கடினமாக இருக்கின்றதா? நீங்கள் தூய்மையானவர் அற்புதமானவர், தெரிந்து கொள்வதற்காகவே, சுதர்சன் க்ரியா மற்றும் பல பயிற்சிகள் செய்கின்றோம்.உங்களில் எத்தனை பேர் நீங்கள் அற்புதமான வைரம் என்பதை நம்ப கஷ்டப்படுகின்றீர்கள்? (சிலர் கை தூக்குகிறார்கள்)

அப்படியா? அப்படியானால் நீங்கள் இன்னும் இரு முதிர்நிலை தியான  வகுப்புகள் செய்ய வேண்டும். இன்னும் ஒன்று செய்தால் கூடப் போதும். எத்தனை பேர் இதை உணர்ந்து கொண்டீர்கள்? (சிலர் கை தூக்குகின்றார்கள்) ஓ! பரவாயில்லை. சில பேராவது நான் கூறுவது என்ன என்று உணர்ந்து கொண்டீர்கள். நல்லது.

குருபூஜையின் ஆரம்பத்தில் இந்த மந்திரத்தைக் கூறுகின்றோம்.

"அப்வித்ரப் பவித்ரோவா சர்வா வஸ்தாங்கதோபிவா யஸ்மரித்  புண்டரீகாக்ஷம் சபஹ்ய அப்யந்தர சுசிஹி

தூய்மையானவரானாலும், தூய்மையற்றவரானாலும், எப்படி இருந்தாலும் (மிகக் கீழான சாக்கடையில்  வீழ்ந்து விட்டாலும்) தாமரை மலர் போன்ற இப்பிறவியை எண்ணிக் கொள்ளுங்கள். (தாமரை மலர் களிமண்ணில் பிறந்தாலும் அம்மலர், அக்களிமண்ணில் ஒட்டிக் கொள்வதில்லை). இப்பிறவி தாமரை மலர் போன்று மலர்கின்றது (புண்டரிகா என்றால் தாமரை போன்று மலர்தல்). இப்பிறவி என்பது ஒரு சாட்சி. சாட்சி என்பதை உணர்ந்து கொண்டால், அந்த உணருதலே  வெளிப்புறத்தையும், உட்புறத்தையும் தூய்மை ஆக்கும்.

ய ஸ்மரீத் புண்டரீகாக்ஷம் என்பது தாமரை மலர் போன்ற கண்கள் உடையவனை நினைவில் கொள்வது என்பது அல்ல. இங்கே இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.ஆக்ஷம் (கண்) என்பது சாட்சி என்பதுவும் ஆகும். புண்டரிகா (தாமரை) என்பது களிமண்ணால் கறைபடாமலும், தீண்டப்படாமலும் மலருதல் என்றும் ஆகும். ஆகவே, விழிப்புணர்வு நிலை மலரும் போது, அது எதனாலும் தீண்டப்படாமலும், கறை படாமலும் மலருகின்றது. அதே சமயம் அது சாட்சியாக இருக்கின்றது. அதுதான் விழிப்பூட்டப்பட்ட விழிப்புணர்வு நிலை. இத்தகைய விழிப்பூட்டப்பட்ட விழிப்புணர்வு நிலையை நினைவில் கொள்ளுவதே உங்களைத் தூய்மையானவராக ஆக்குகின்றது. இத்தகைய ஞானமடைந்த ஆசான்களுடன் நீங்கள் தொடர்புடையவராக உணரும் போதும் திடீரென்று தூய்மை மலருகின்றது. நீங்கள் விரும்பும் ஒருவரை நினைவு கூரும்போது உங்களில் அன்பு தூண்டப்படுகின்றது. உங்களது எதிரியையோ, விரும்பாத ஒருவரையோ நினைக்கும் போது, உங்களுக்குள் இனிமையற்ற உணர்வு உண்டாகிறது. உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் கிளர்ச்சி ஏற்படுகின்றது. அது போன்று விழிப்புணர்வை அடைந்த ஞானிகளை பற்றிச் சிந்திக்கும் போது உங்களில் தூய்மை மலருவதை உணருகின்றீர்கள்.

பேராசையும், புகழார்வமும் கொண்ட ஒருவரைப் பற்றி எண்ணினால் அது போன்ற அதிர்வலைகள் உங்களில் ஏற்படுவதை உணருவீர்கள். அமைதியும் மகிழ்ச்சியும் கொண்ட ஒருவரைப் பற்றி எண்ணினால், அதே அதிர்வலைகளை உணருவீர்கள் உங்கள் விழிப்புணர்வு நிலையில் அதே மகிழ்ச்சி பிடித்துக் கொள்ளும். ஏன் யாரையும் வெறுக்கக் கூடாது? ஏனெனில் யாரை வெறுக்கின்றீர்களோ அவர் உங்கள் விழிப்புணர்வு நிலையில் பெரும் இடத்தைப் பிடித்துக் கொள்ளுவார்.

நீங்கள் யாரைப் பற்றி அதிகம் எண்ணுகின்றீர்களோ அவரது குணங்களை நீங்கள் உங்களில் உள் ஈர்த்துக் கொள்ளுவீர்கள். மேல்நிலையிலுள்ள,சாட்சி விழிப்புணர்வு மலர்ந்த ஒருவரை நினைத்துக் கொண்டால் உங்களிலும் உங்களைச் சுற்றியும் தூய்மை ஏற்படுவதை உணரலாம். இது அறிவியல் பூர்வமான உண்மை. தியானத்திற்கு ஏன் புத்தரின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரியுமா? புத்தர் உடலை விட்டு நீங்கிய பின்னர், அவரது திருவுருவச் சிலைகள் ஏற்படுத்தப் பட்டன. புத்தரின் சிலை முன்னர் அமர்ந்து தியானம் செய்யும்போது புத்தரைப் போன்றே ஆகி விடுவீர்கள். கண்களை மூடி நீங்கள் அங்கு அமரும்போது அவரைப் போன்றே அசைவின்மையை உணருவீர்கள். புத்தரின் சிலைகளை அமைப்பதற்கு இதுவே மூல காரணம். இப்போது பெரிய, விலைமதிப்புள்ள சிலைகளை எங்கும் அமைப்பது என்பது நாகரீகமாகி விட்டது.

இங்கு முக்கியத்துவம் சிலைக்கு அல்ல. அச்சிலை போன்று புன்முறுவலுடன் அசைவின்றி நீங்கள் அமர்ந்திருப்பது தான் முக்கியம். தேவையில்லாமல் நீங்கள் இறுக்கப் பிடித்துக் கொண்டிருப்ப தையெல்லாம் விட்டு விட்டு உங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள்." எப்போதும் தூய்மையான வைரம்"  என்று உணர்ந்து கொள்ளுங்கள். அக்குணங்களை உங்களுள் உள்ளீர்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொருவருடைய விழிப்புணர்வும் வளமான நற்குணங்களுடன் கூடியதாகும்.இவற்றை வெளியே எங்கிருந்தும் நீங்கள் கடனாகப் பெற வேண்டாம். உங்களுள்ளேயே அவை நிறைந்திருக்கின்றன. சற்றே அவற்றுக்கு ஊட்டமளிக்க வேண்டும், அவ்வளவு தான்.ஒரு தாமரை மலர் போன்று- எல்லா இதழ்களும் இருக்கின்றன, மலர்ந்து, இதழ் விரித்து தனது சீர்மையை காட்ட வேண்டும். அது போன்று எல்லா குணங்களும் எல்லோரிடமும் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும், குருபூர்ணிமா தினத்தன்று இத்தகைய அழகிய பண்புகளை உள்ளீர்த்து கொள்ளுகிறீர்கள் என்பதை நினைவு கூர்ந்து நன்றியுணர்வுடன் இருங்கள். அதிக நன்றியுணர்வுடன் இருந்தால் அதிக அருள் உங்கள் வாழ்வில் பெருகும். எனவே, மௌனம், தூய்மை, பகிர்ந்து கொள்ளல் இவற்றால் கொண்டாட்டம் என்பது ஏற்படும். தொண்டுக் குழுவில் உள்ளவர்கள், அத்தொண்டினால் ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். பகிர்ந்து கொள்ளுதலின் போது ஏற்படும் மகிழ்ச்சி வித்தியாசமானது. அது கொண்டாட்டம். வேறு ஏதேனும் இருக்கின்றதா? கூறுங்கள்.அதையும் சேர்த்து  கொள்ளுவோம்.


(அரங்கத்திலுள்ளவர்கள் ஆம்! கடவுளுடன் கூட சேர்ந்து கொண்டாட்டம் என்று கூறுகிறார்கள்)