ஞானத்தின் வெளி

31 மே 2013 - பெங்களூரு, இந்தியா - இரெண்டாம் பகுதி 

பிரத்யக்ஷாவகமம் தர்ம்யம் சு-சுகம் கர்த்தும் அவ்யயம் (9.1)

ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரிடம் கூறுகிறார், ‘நேரடியாய் அனுபவிக்க கூடியது இந்த ஞானம். இதை இப்போது பின்பற்றினால், பின்னர் பல வருடங்கள் கழித்து இதன் பலனை அடையலாம் என்பது அல்ல! ஞானத்தின் பலனை உடனடியாக அடையலாம். எப்படி? வலி அல்லது பசியை எப்படி அனுபவிக்கிறாயோ, அப்படியே இதையும் நீயே அனுபவிக்கலாம்’. உனக்கு தூக்கம் வருவது போல இருந்தால், யாரிடமாவது சென்று தூக்கம் வருகிறதா என்று அதை சோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன? உனக்கு காலிலே வலி ஏற்பட்டால், யாரிடமாவது சென்று நிஜமாகவே வலி இருக்கிறதா இல்லையா என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? உன் அனுபவத்தின் மூலம் வெளிப்படையாக அறிந்துகொள்கிறாய். அதைப் போலவே, இந்த ஞானமும் அனுபவித்து உடனடியாக அறிந்து கொள்ளும் அளவு வெளிப்படையானது என்பதைக் காண்பாய்.



நீங்கள் சுதர்சனக் க்ரியா, பிரணாயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றை பயிற்சி செய்து வருகிறீர்கள். இது உங்களுக்குப் பலனை தருகிறதா என்பதை வேறு யாரிடமாவது கேட்க வேண்டுமா என்ன? தியானம் செய்யும் போது அதன் பயனை அனுபவிக்கிறீர்கள். சுதர்சனக் க்ரியா செய்யும் போது அதன் பலனை உடனடியாக அனுபவிக்கிறீர்கள், இல்லையா? அதைப் போலவே நீங்கள் பசியாய் இருக்கும் போது அது உங்களுக்கு உடனடியாக தெரிகிறது.

நீங்கள் தியானம் செய்யும் போது, அந்த ஆனந்தத்தையும் அமைதியையும் உடனடியாக அனுபவிக்கிறீர்கள். அந்த கணத்திலேயே உங்கள் மனம் அமைதியடைகிறது. எனவே அதைப் போல, ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரிடம் கூறுகிறார், இந்த அறிவை செயல்முறையில் நீயே அனுபவிக்கலாம். இந்த ஞானம் உன்னை துயரத்திலிருந்து விடுவித்து மகிழ்ச்சியை அளிக்கிறது. மற்றும் இந்த ஞானம் பின்பற்றத் தகுதியானது. இதை எளிதாகப் புரிந்துகொண்டு பயிற்சி செய்யலாம், அதே நேரத்தில் இந்த ஞானம் காலத்தால் அழியாதது மற்றும் எப்போதும் மாறாதது.’

ஒரு முறை தியானம் செய்தாலும், அதன் பலன் காலத்தால் அழியாதது, நிரந்தரமானது. நல்ல காரியம் செய்தால் அதன் பலன் உங்களிடமேயே இருக்கும். எனவே இந்த ஞானம் காலத்தால் அழியாதது மற்றும் நிரந்தரமானது. இந்த ஞானத்தை ஒருமுறை பெற்று விட்டால் பின்னர் அது உங்களிடம் எப்போதும் இருக்கும். ஒரு முறை மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொண்டு விட்டால், பின்னர் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்கிறது அல்லவா, அதைப் போலத்தான். நீங்கள் மறுபடி கற்க வேண்டியதில்லை. அதைப் போலவே, நீங்கள் ஒரு முறை அல்வா செய்யக் கற்றுக் கொண்டால், உங்கள் வாழ்நாள் முழுதும் அது தெரிந்திருக்கிறது. அதை திரும்பத் திரும்பக் கற்றுக் கொள்வது தேவையில்லை. ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், ‘நான் உனக்குத் தர இருக்கும் இந்த ஞானம் முடிவில்லாதது மற்றும் காலத்தால் அழியாதது.’

பிறகு அவர் அடுத்த வரிகளைக் கூறுகிறார், ‘அசரத்ததானாஹ் புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப. அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யு-சம்சார-வர்த்மநி. (9.3)

‘உனக்கு வெளிப்படுத்த இருக்கும் இந்த ஞானத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களால் என்னை அடைய முடியாது.’ அப்படிப்பட்டவர்கள் தங்கள் சுயத்தை அறிய முடியாது என்பது இதன் பொருள்.‘அப்படிப்பட்ட நம்பிக்கை இல்லாதவர்கள், என்னை அடைய முடியாமல் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் மறுபடி பறுபடி செல்வார்கள்.’

பாருங்கள், இந்த ஞானப் பாதைக்கு வராதவர்கள் உலகத்தின் கவனச் சிதறல்களில் மாட்டிக் கொண்டு அதிலேயே இருக்கிறார்கள். இது உண்மையில்லையா? அந்த அளவு வாழ்கையின் தினசரி போராட்டங்களில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள்.அதே புகார்கள், பிரச்சினைகள்; அதே கதை ஒவ்வொரு தினமும் மறுபடி பறுபடி நடக்கிறது. யார் ஒருவருடைய வாழ்கை ஞானமில்லாமல் இருக்கிறதோ; யாருக்கு அறிவியல் பார்வை இல்லையோ; அல்லது யாருக்கு ஒரு உயர்ந்த இலட்சியம் இல்லையோ, அவர்களால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது.

அவர்கள் என்ன செய்கிறார்கள்? மற்றவர்களிடம் தாம் கொண்டுள்ள வேட்கையிலோ அல்லது துவேஷத்திலோ சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் அன்பாய் இருப்பவர்களிடமே சண்டை போடுகிறார்கள்சண்டை போடுபவர்களிடமே அன்பாய் இருக்கிறார்கள்.நண்பர்களே எதிரிகளாகிறார்கள், எதிரிகளே நண்பர்களாகிறார்கள். நீங்கள் தவறு செய்வில்லை என்றாலும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் எதிரிகளாவதைப் பார்த்திருப்பீர்கள். இங்கிருப்பவர்களில் எத்தனை பேர் இதை அனுபவித்திருக்கிறீர்கள்? (பலர் கைகளை உயர்த்துகிறார்கள்)

பாருங்கள், ஏறக்குறைய எல்லோரும் கைகளை உயர்த்துகிறார்கள்! எனவே, மக்கள் வாழ்நாள் முழுதும் இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக சந்தித்து இறுதியில் இறப்பைச் சந்திக்கிறார்கள். பிறப்பு இறப்பு சுழற்சியில் மறுபடி சிக்கி துயரம் அடைந்து, எந்த விதமான நீங்கா இன்பத்தையும் காணமுடிவதில்லை. இந்தப் பொருள் உலகில் நிஜமான இன்பம் என்று கண்டுபிடிக்க எதுவும் இல்லை. எவ்வளவு அதிகம் இன்பத்தை தேடுகிறீர்களோ அவ்வளவு அதிகம் துயரத்தைத் தான் காண்பீர்கள். ஞானத்தில் நம்பிக்கை இல்லாதவர், எந்த வித பக்தியும் இல்லாத வாழ்கை உடையவர், அவர்களுக்கு வேறு என்ன தான் இருக்கிறது?

அன்பின் வடிவமும், படைப்பில் உள்ள எல்லாவற்றிற்கும் உயிர் அளிப்பதுமான மாபெரும் சக்தியிடம் நம்பிக்கை இல்லாதவரின் வாழ்க்கையில் வேறு என்ன தான் மீதம் இருக்கும்? அவ்வளவு வறட்சியாய் இருக்கும் அவரது வாழ்கை. அவர், எதையாவதைத் தேடி தன் ஆசைகளின் பின்னே எப்போதும் ஓடிக் கொண்டிருப்பார். அவர் தேடியது கிடைக்கவில்லை என்றால் துயரம் அடைகிறார், அது கிடைத்தாலும் துயரம் அடைகிறார். மிருத்யு-சம்சார் என்பதின் பொருள் இதுதான். (இது பொருள் உலகைக் குறிக்கிறது. இங்கு உள்ள அனைத்தும் தற்காலிகமானது, எப்போதும் மாறிக்கொண்டிருப்பது மற்றும் இறப்புக்கு ஆளாகும் தன்மை கொண்டது)

ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘நம்பிக்கையும் பக்தியும் தன் வாழ்கையில் இல்லாத ஒருவரால் என்னை அடையவே முடியாது. அவர்களால் காலத்தால் அழியாத இறையை, அதாவது என்னை அடையவே முடியாது. மரணத்தைக் கொண்ட இந்த உலகத்திற்கு திரும்பத் திரும்ப வருகிறார்கள் (அதாவது, எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் இந்த பொருள் உலகிற்கு).’

அடுத்த இரண்டு சுலோகங்களில், அவர் கூறுகிறார், ‘மயா ததம் இதம் சர்வம் ஜகத் அவ்யக்த-மூர்த்தினா. மத்-ஸ்தானி சர்வ-பூதானி ந சாஹம் தேஷ்வ்-அவஸ்திதஹ்’.  (9.4)
‘ந ச மத்-ஸ்தானி பூதானி பஷ்ய மே யோகம் ஐஷ்வரம். பூதப்ருந்ந ச பூத-ஸ்தோ மமாத்மா பூத-பாவனஹ்’ (9.5)

ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘ஓ அர்ஜுனா, இந்த முழு படைப்பும் என்னுடைய வெளிப்பாடு. ஆனாலும் நான் வெளிப்படாமல் வடிவமற்றவனாக இருக்கிறேன். இந்த முழு படைப்பும் (வடிவம் கொண்டது) என்னிலிருந்து (சூட்சுமமான வடிவமற்ற இறையிலிருந்து) வந்தவை. இந்தப் படைப்பில் நீ பார்ப்பவை எல்லாம் என்னிடமிருந்து வந்தவை. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வெளி என்று இருக்கும் இந்த ஐந்து பூதங்களும் என்னிடம் வசிக்கின்றன, அவை என்னிடமிருந்து தோன்றியவை. ஆனாலும் நான் அதில் இல்லை’.
இது நீங்கள் சொல்வது போல, ‘இந்த உடை என்னுடையது ஆனால் நான் அந்த உடையல்ல’. பாருங்கள், அந்த உடைகளுக்குள்ளே தான் நீங்கள் இருக்கிறீர்கள், உடை உங்களைச்  சுற்றி இருக்கிறது, ஆனாலும் அந்த உடையை அணியும் நீங்கள் அந்த உடையல்ல.

அதை போல ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘இந்த பஞ்ச பூதங்கள் அனைத்தும் என்னிடமிருந்து பிறந்தவை, என்னில் வசிப்பவை, ஆனாலும் நான் அதிலில்லை. (பகவான் இறைப் பேருணர்வாக இருப்பதினால், இயற்கையின் இந்த ஐந்து கூறுகள் தன்னிடமிருந்து வந்தாலும், அவைகளுக்குள் அடங்கிவிடாமல் அல்லது அதுவாக இல்லாமல் இருக்கிறார் என்பதே இதன் பொருள்.) இதை தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் இங்கு கூறுகிறார், மேலும் இது ஒரு மகா ரகசியம்.

இவர் என்ன கூறுகிறார் என்றால், ‘பார்க்க முடியாத வடிவமற்ற தன்மையுடைய நான், நீங்கள் பார்க்கும் எல்லாவற்றையும் விஞ்சியவன்’. உதாரணமாக ஒரு மரம் இருக்கிறது, அதன் அடித்தண்டின் உள்ளே திரவமான சாறு இருக்கிறது. உங்களால் அந்த மரத்தை மட்டும்தான் பார்க்க முடியும் அந்த திரவத்தை அல்ல.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘இந்தப் படைப்பில், பல்வேறு வடிவங்கள் தரும் அந்தச் சாறு (இறை) நான்தான். எல்லா மரங்கள், அதிலுள்ள இலைகள், அதிலுள்ள பழங்கள் என எல்லாவற்றிற்கும் பின்னே உள்ள காரணம் நான்தான். அதை போலவே, ஒருவரின் இயல் உடம்பை வேண்டுமானால் நீங்கள் பார்க்கலாம், ஆனால் அதன் ஆத்மாவை அல்ல. அந்த ஆத்மா வடிவமற்றது மேலும் அந்த ஆத்மாதான் நான்’.

நம் இருப்பின் ஒவ்வொரு துகளிலும் அந்த உயிர்-விசை இருக்கிறது. அந்த உயிர்-விசை ஒருவருடைய உடம்பை விட்டு நீங்கிய அடுத்த கணம் அவர் இறந்ததாக அறிவிக்கப் படுகிறார். உதாரணமாக, உங்கள் உடலில் உள்ள  தோலில் ஒரு சிறு பகுதி எரிந்து போனால் அந்த செல்கள் மெதுவாக இறந்து அங்கு உணர்வுகள் மரத்துப் போய்விடும். அந்தப் பகுதியில் உங்களுக்கு எந்த உணர்ச்சியும் இருக்காது, ஏனென்றால் அங்கு உள்ள செல்களில் உயிர்-விசை இருப்பதில்லை.


இந்தப் படைப்பில் உயிர் இருப்பதின் காரணம் பேருணர்வு. எனவே ஸ்ரீ கிருஷ்ண பகவான்  கூறுகிறார், ‘எல்லா உயிர்களையும் வாழவைக்கும், உயிர் தரும் பேருணர்வாக நான் இந்தப் படைப்பில் வெளிப்படுகிறேன். இந்த பெரும் இரகசியத்தை நீ கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.’

ஒரு கச்சிதமான பார்வை

31 மே 2013 - பெங்களூரு, இந்தியா

பகவத் கீதையின் ஒன்பதாவது அத்தியாயம் ராஜ-வித்யா யோகம் அல்லது ராஜ-குஹ்யா வித்யா என்று அழைக்கப்படுகிறது (மிக மிக உயர்ந்த மற்றும் இரகசியமான ஞானம்).

அரசன் எதை செய்வதற்கும் பெரும் பிரயத்தனம் செய்வதில்லை. அரசன் எதற்காகவாவது மிகக் கடினாமாக வேலை செய்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? எனவே இந்த ஞானத்தை பிரயத்தனம் இல்லாமல் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரிடம் கூறுகிறார். அவர் இதை ராஜ-குஹ்யா யோகம் என்றும் அழைக்கிறார், இந்த ஞானம் ஒரு பெரும் இரகசியம் என்ற பொருளில். எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்,

இதும் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்ய அநசூயவே. ஜ்ஞானானம் விஜ்ஞான-சஹிதம் யஜ் ஞாத்வா மோக்ஷயசே சூபாத்’. (9.1)

ஓ, அர்ஜுனா! நீ அனுசுயை, எனவே உனக்கு இப்போது ஒரு பெரும் இரகசியம் சொல்கிறேன்’. அனுசுயா என்பதின் பொருள் என்ன? எதிலும் குற்றம் காணாத தன்மையை அனுசுயா என்று அழைப்பார்கள்.
யாரை அசுயா என்று அழைப்பார்கள்? தன்னை சுற்றி எல்லாவற்றிலும் குறையை காண்பவரை அசுயா என்பார்கள். ஒருவருடைய பார்வை பாரபட்சமாக சிதைந்து இருக்கும் போது, தன்னைச் சுற்றி உள்ள எல்லாவற்றிலும் குறை காண்பது போல தோற்றமளிப்பார்கள். எனவே யாருடைய பார்வை பாரபட்சமாக இருக்கிறதோ அவரே அசுயா. யாருடைய பார்வை பாரபட்சமின்றி எதிர்மறை இன்றி இருக்கிறதோ அவரே அனுசுயா.

உதாரணமாக, துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் யாராவது ஏதாவது சொன்னால், தம்மை கிண்டல் செய்கிறார் என்றே நினைப்பார்கள். உங்களில் யாருக்காவது இந்த அனுபவம் எப்போதாவது நிகழ்ந்திருக்கிறதா? பிரச்சினையிலுள்ள ஒருவரை நீங்கள் புகழ்ந்தால் கூட, நீங்கள் அவரை கிண்டல் செய்கிறீர்கள் என்றே நினைப்பார். நீங்கள் ஏதாவது நன்மை செய்தால் கூட, அதிலும் ஏதாவது குறை காண்பார். அப்படிப்பட்டவருக்கு, நீங்கள் எவ்வளவு தான் நல்ல நோக்கம் கொண்டு ஏதாவது நன்மை செய்தாலும், அதில் ஏதாவது ஒரு குறையை காண்பார். எந்த ஒரு செயலிலும் தவறான நோக்கம் இருப்பதைக் காண முயல்பவரை அசுயா என்று அழைப்பார்கள்.

அனுசுயா என்றால் பாரபட்சமான பார்வை இல்லாமல் இருப்பவர். அவர், எல்லாவற்றையும் அதன் நிலையைத் தெரிந்து கொண்டு அதை அப்படியே ஏற்று கொள்வார், அதில் குற்றம் குறைகளை காணமாட்டார். எனவே யாரிடம் நீங்கள் இரகசியதைச் சொல்ல முடியும்? யார் அனுசுயாவோ அவருக்கு. யாருடைய பார்வை பாரபட்சமின்றி இருக்கிறதோ, யார் எதிலும் குற்றம் குறை காணாமல் இருக்கிறாரோ அவரிடமே நீங்கள் இரகசியதை சொல்ல முடியும். 

எங்கு சென்றாலும் அசுயா என்பவர் எல்லாவற்றிலும் குறைகளை தான் காண்பார். அவர்கள் தங்கள் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை வெளி உலகில் காண்பார்கள், பின்னர் அதற்கு மற்றவர்களே காரணம் என்றும் குற்றம் கூறுவார்கள். பாரபட்சமான பார்வை உடையவர்களுக்கு தன்னுடைய குறை தெரியாது. குற்றங்களையும் தரக் குறைவையும் மற்றவர்களிடமே காண்பார்கள். தம்மை சுற்றி உள்ளவர்களிடம் மேலும் குறைகளை காண முயன்று கொண்டே இருப்பார்கள். அவரே அசுயா. அவரை யாரும் தமது சீடராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், ஒரு குரு அவரை சீடராக ஏற்றாலும், குருவின் பாடங்களிளும் குறை காண்பார். ‘குருதேவ், நீங்கள் இதைச் சொன்னீர்கள், ஆனால் நீங்கள் கூறியதில் ஒரு தவறு உள்ளது’.

குருவை குற்றம் சொல்லி, அவருடைய போதனைகளில் குறை காண்பவர்களால், அந்த குருவிடமிருந்து எதை கிரகிக்க முடியும்? அவரால் எதையும் உள்வாங்க முடியாது. அதனால் தான் குரு என்பவரை புத்தியின் குறுகிய பார்வையால் பார்க்கக் கூடாது, ஞானத்தின் விசாலமான பார்வை கொண்டு பார்க்க வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரிடம் கூறுகிறார், ‘உன் பார்வை பாரபட்சமின்றி இருப்பதால், இப்போது நான் உனக்கு பேராச்சரியமான இரகசிய பாடத்தைக் கூறுகிறேன். இந்த அறிவை பெறுவதின் மூலம், நீ உன்னுடைய துயரங்களிலிருந்தும் எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் விடுபடலாம். இந்த அறிவு விஞ்ஞானம் மற்றும் ஞானம் என இரண்டின் அடிப்படையிலும் அமைந்ததாகும். இது என்ன?’ என்று தெரிந்து கொள்வது அறிவியல் (பொருள் உலகம் சம்பதப்பட்ட விஷயங்களில்), ‘நான் யார்?’ என்று தெரிந்து கொள்வது ஆன்மிகம். அவர் கூறுகிறார், ‘இந்த ஞானத்தை தெரிந்து கொள்வதின் மூலம், தீயவற்றிலிருந்து விடுதலை பெறுவாய், மேலும் உன்னை சுற்றி எந்த எதிர் மறையான விஷயங்களும் இருக்காது. இதைத் தெரிந்து கொண்டபின் உனக்குத் துயரமும் கெடுதலும் எப்போதும் வராது.’

அடுத்த ஸ்லோகத்தில், அவர் கூறுகிறார், ‘ராஜ-வித்யா ராஜ-குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம். ப்ரத்யக்ஷ வாகமம் தர்ம்யம் சு-சுகம் கர்த்தும் அவ்யயம்’. (9.2)

‘உன்னால் புரிந்துகொள்ள இயலாத அல்லது நடைமுறையில் செயல்படுத்த முடியாத எதையும் நான் உனக்குக் கூறமாட்டேன். அப்படிப்பட்ட ஒன்றைக் கூறுவது பயனற்றது.’ ஒரு குரு தன் சீடருக்கு ஒன்றை கூறுகிறார், ஆனால் அதை அவரால் செயலபடுத்த முடியவில்லை என்றால் அந்த விஷயத்திற்கு பயனென்ன? ஒரு சீடரால் கிரகிக்க இயலாத அளவு மிக உயர்ந்த சிக்கலான ஞானத்தை ஒரு குரு வழங்கிவருவதால் என்ன பயன்?

ஒருமுறை ஒரு மகானின் உரையைக் கேட்பதற்காக ஒருவர் சென்றார். அந்த நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய பின், அவர் தன் நண்பர்களிடம் கூறினார், ‘ஓ, அந்த உரை நிகழ்ச்சி மிக அருமையாய் இருந்தது. மகான் பேராச்சரியமான ஞானத்தை வழங்கினார்.’ நண்பர்களில் ஒருவர் கேட்டார், ‘அந்த மகான் எதைப் பற்றி பேசினார் என்று எங்களுக்குச் சொல்.’ அதற்கு அவர் ,‘ஓ! அந்த ஞானம் மிக உயர்ந்ததாகும். எல்லாம் என் தலைக்கு மேலே போய்விட்டது’. எதுவும் புரிந்துகொள்ள இயலாது இருக்கும்போது அந்த உயர்ந்த ஞானத்தை கேட்டு அவருக்கு என்ன லாபம். மற்றும் அதை ஒருவர் புரிந்து கொண்டாலும் கூட, அதை நடைமுறையில் பயன்படுத்தவில்லை என்றாலும் பயனில்லை.

இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘உன்னால் புரிந்துகொள்ள முடியாத நடைமுறையில் பயன்படுத்த முடியாத எதையும் நான் கூறமாட்டேன். நான் உனக்கு அளிக்கப் போகும் இந்த ஞானம் ஞானங்களில் ஒரு அரசன் (ஆகச் சிறந்தது). இது மிக நம்பகமானது, இரகசியங்கள் நிரம்பியது; இதுதான் மிக மிக உயர்ந்ததும் மற்றும் மிக மிக புனிதமானதும் கூட.’

ஞானங்களில் அரச வகையைச் சேர்ந்ததும் இறைத்தன்மை கொண்டதுமான இந்த ஞானம் புனிதமாக இல்லையென்றால் என்ன பயன். இது ஒரு மாபெரும் இரகசியமாக இருக்கலாம், அதில் புனிதத்துவம் இல்லையென்றால் அந்த ஞானத்தை வைத்துக் கொண்டு ஒருவர் என்ன தான் செய்வது. பொதுவாக வெட்கப்படக் கூடிய விஷயங்களை தான் இரகசியமாக வைத்து கொள்வார்கள். ஆனால் இந்தியாவில் இது இப்படி இருந்ததே இல்லை. வெட்கப்படக் கூடிய விஷயங்கள் இரகசியமாய் எப்போதும் இருந்ததே இல்லை. எதிலிருந்து பெரிய விஷயங்களை சாதிக்க முடியுமோ அவை மட்டுமே இரகசியமாக வைக்கப்பட்டன. அதனால் தான் இந்த ஞானம் ராஜ-குஹ்யம் என்று அழைக்கப்பட்டது; மிக மிக இரகசியமான உச்சநிலை ஞானம். 

இந்தியாவின் சிறப்பு என்னவென்றால் புனிதமானதும்,இரகசியமானதும் எப்போதும் ஒன்றோடொன்று இணைந்தே இருந்தன. ஒரு சீடருக்கு மந்திரம் இரகசியமாக அளிக்கப்பட்டது. மந்திரங்களில் மிகச் சிறந்ததான காயத்ரி மந்திரத்தை சீடருக்கு கற்று தருவதை இரகசியமாக காதோடு சொல்லப்பட்டது. மந்திரம் சீடருக்குள்ளேயே ஒரு விதை போல இருக்க வேண்டும் என்ற நோக்கில், இரகசியத்தை யாருக்கும் சொல்லக் கூடாதென்று அந்த சீடருக்கு சொல்லப்பட்டது. ஒரு விதையை மண்ணுக்குள் விதைப்பதை போல. ஒரு விதையை விதைக்கும் போது, அதை மண்ணுக்குள் மறைத்தே வைப்பார்கள், அப்போது தான் அந்த விதை முளைத்து மரமாகும். எனவே இரகசியம் என்பது ஒரு விதை போல. வாழ்வில் தூய்மையை ஏற்படுத்தி அதனால் வாழ்கையை அற்புதமாக மாற்றுவது தான் இரகசியம்.


எனவே இரகசியங்களில் இதுதான் மாபெரும் இரகசியம் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். இது ஏதோ சாதரணமான அல்லது உபயோகமில்லாத இரகசியமல்ல. இது வெட்கப்படக் கூடிய விஷயமோ அல்லது மறைக்கப்படக் கூடிய விஷயமோ அல்ல. இதைத் தெரிந்து கொள்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் நன்மைகளையும் மட்டுமே தரும். இதைக் கைக்கொண்டவர்களுக்கு எல்லாவற்றிலுமிருந்தும் ஆகச் சிறந்ததை பெறவைக்கும் இந்த ஞானம்.

பரந்து விரிந்த சூரியனை, உங்கள் சிறு கண்ணாடியில் கைப்பற்றுங்கள்

28 மே 2013  - பெங்களூரு, இந்தியா  இரெண்டாம் பகுதி

யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர் யஸ்ய ந லிப்யதே. ஹத்வாபி ஸ இமல் லோகான்ன ஹந்தி ந நிபத்யதே. (18.17)



அவர் கூறுகிறார், ‘மாயையின் பாதிப்பில்லாத புத்தியுடைய (அலிப்த - புத்தி) ஒருவர், இந்த முழு உலகையும் அழித்தாலும் கூட அவருக்கு எந்த பாவமும் சேராமல் பிணையுமின்றி விடுதலையாய் இருப்பார். அப்படிப்பட்டவருக்கு தன் செயலால் எந்த பாதிப்பும் நேராது.’ மாயையால் சூழப்படாத அளவு விழிப்புணர்வு கொண்ட புத்தியை உடைய ஒருவர், எப்படியும் மக்களை கொல்லும் அளவு வன்முறைச் செயல்களில் ஈடுபடப் போவதில்லை. அப்படியே செய்தாலும் கூட, அவர் ஒரு போர் வீரராக இருந்து தன் கடமையின் ஒரு பகுதியாக அதைச் செய்வாரே அன்றி வெறுப்பினாலும் வேட்கையினாலும் அல்ல. அலிப்த புத்தியுடைய (மாயையால் தொடப்படாத தூய புத்தி) ஒருவர் மாயையை இனம் காணுவது மூன்றாவது நிலையாகும். அப்படிப்பட்டவர் மாயையின் வழிகளைத் தடுப்பதுமில்லை, அதனால் பாதிக்கப் படுவதுமில்லை. அந்த நிலையில் அவர் மாயையால் தொடப்படாமல் விலகி இருக்கிறார். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?

உண்மையில், இந்த நிலையில் அவர் மாயையின் வழிகளைக் பார்ப்பதிலே மகிழ்ச்சி அடைந்து அதை ஒரு கேளிக்கையாய் உணர்கிறார். அது சந்தோஷம் கொள்வதற்கான ஒரு வழியாகிறது. நாம் மலர்ந்து மூன்றாம் நிலைக்கு பரிணமிக்கும் போது, எந்த மாயை நம்மை திரையிட்டு பந்தத்திலே சிக்கித் தவிக்க வைத்தோ அதுவே மகிழ்ச்சிக்கான ஆதாரமாய்ப் போய்விடுகிறது. சந்தோஷத்திற்கும் கேளிக்கைக்கும் ஆதாரமாய் அந்த மாயை ஆகி விடுகிறது. எனவே மாயை நம்மைக் குழப்பி பந்தத்திலே சிக்க வைக்கவும் செய்கிறது, அதே மாயை நமக்கு ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது! இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணா பகவான் கூறினார், ‘தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா. மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே.’ (7.14)

அவர் ‘ஓ அர்ஜுனா! இறை குணங்களால் நிரம்பியது என்னுடைய யோக மாயை, அதை ஒருவரால் எளிதில் வெல்ல முடியாது. என்னிடம் அடைக்கலமாகி சரணடைந்தால் மட்டுமே ஒருவரால் அதை வெல்ல முடியும்.’ இந்த முழு படைப்பும் மாயையால் திரைபோட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. எங்கும் காற்று எப்படி சூழ்ந்திருக்கிறதோ அப்படியே இந்த முழு உலகமும் மாயையால் சூழப்பட்டிருக்கிறது.. ஒவ்வொரு மனிதரின் மனமும் மாயை என்ற உறையிலிருக்கிறது. 

ஒவ்வொருவரும் மாயையில் ஆழமாய் சிக்கியிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் மனமும் ஏதோ ஒரு வகையில் மாயையின் ஆதிக்கத்திலிருக்கிறது. இங்கு அமர்ந்திருக்கும் உங்கள் அனைவரின் மனதிலும் பலப்பல வித்தியாசமான எண்ணங்கள் இருக்கின்றன. உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் என்னவெல்லாம்  ஓடிக்கொண்டிருக்கிறது என்று கொஞ்சம் கவனியுங்கள்! ஓ இறைவா! (சிரிப்பு). இதுதான் மாயை. இந்த முழு படைப்பும் மாயையால் உறையிடப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு உண்மையான பக்தர் உணர்வது, ‘ஓ என் சிவ பெருமானே, என் மனம் உன்னை பக்தி செய்வதிலேயே முழுமையாய் ஈடுபட்டு, உன் நினைப்பிலேயே மூழ்கி இருக்கிறது. உன்னை அவ்வளவு முழுமையாக சூழ்ந்திருக்கிறது என் மனம் இரவு பகலாக நினைப்பதெல்லாம் உன்னையே மற்றும் உன்னை மட்டுமே.’ இப்போது, இது எப்படி முடியும்? நம்முடைய அளவான சிறு  மனம், பரந்து விரிந்து எங்கும் விரவி இருக்கும் இறைவனை எப்படி உறையிலிட முடியும்? அளவான நம் மனதில் எப்படி இறைவனை அடக்கி வைக்க முடியும்? இது இயலுமா? ஒரு சிறு கண்ணாடியுள்ளே எப்படி ஒரு பெரிய யானையை (அதன் பிம்பம்) பிடிக்க முடியுமோ அப்படித் தான்.

உங்களால் முழு சூரியனை ஒரு கண்ணாடியில் பிடிக்க முடியுமா? சூரியன் மிகவும் பெரியது, ஆனாலும் நீங்கள் ஒரு சிறிய கண்ணாடியில் அதை கச்சிதமாகக் கைப்பற்ற முடியும். இல்லையா? அதே வழியில், நம் மனதாலும் இறைவனை முற்றிலும் கைப்பற்ற முடியும். அதனால் தான், ஒரு தூய இதயம் இருந்தால் நீங்களும் அந்த இறைவன் தான் என்று சொல்லப்படுகிறது! நீங்கள் தான் பிரம்மம். ஆனால் அது எப்போது சாத்தியம்? உங்கள் இதயக் கண்ணாடி அப்பழுக்கில்லாமல் தூயதாய் இருக்கும்போது உங்களால் இறைவனை பிடித்து உங்களுக்குள் வைக்க முடியும். அந்தக் கண்ணாடி திரையினால் (மாயை) மறைக்கப்பட்டிருந்தாலோ அல்லது அழுக்காய் இருந்தாலோ இதை செய்ய முடியாது.

புனிதர் எனப்படுபவரின் மனமும், இதயமும் தூயதாய் ஒரு கண்ணாடியைப் போல இருக்கிறது. குரு எனப்படுபவர் ஒரு தெளிந்த கண்ணாடியைப் போல பரிசுத்தமாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறார். எனவே உங்கள் மனமும் அப்பழுக்கிலாமல் தூயதாய் இருக்க வேண்டும், பிறகு பரிபூரணம் (உங்கள் மெய்யுணர்வு) உங்களுள் மலரும். பிறகு சூரியனையும் சந்திரனையும் நீங்கள் கண்ணாடியில் பிடிக்கலாம். எனவே எப்படி ஒரு கண்ணாடி பெரிய யானையை முழுமையாக தன்னிடம் பிடித்து வைக்கிறதோ அப்படி உங்கள் மனமும் இறைவனை பிடித்து வைக்கலாம். உங்கள் மனம் மாயையின் இருப்பிடமாக அல்லாமல் இறைவனின் ஆலயமாக மாற வேண்டும். மாயையால் விழுங்கப்படக் கூடிய உங்கள் மனம் இறைவனிடம் முழுமையாக சரணடையக் கூட முடியும். அழகான ஞானத்தைக் கேட்பதாலேயே உங்கள் மனம் உயர்ச்சி பெற்று தூய்மையாகிறது அல்லவா? வேட்கைகளும் துவேஷங்களும் உங்கள் மனதிலிருந்து உடனடியாக துடைக்கப்படுகிறது.

நம் முகத்திலிருக்கும் புன்னகையை நாம் ஏன் இழக்கிறோம். அதன் காரணம் வேட்கை, துவேஷம் மற்றும் மாயையில் சிக்கியிருக்கும் தன்மை. நம் மனதிலிருக்கும் இடம் வேட்கையினாலும் துவேஷத்தினாலும் ஆக்கரமிக்கப்படும் போது, மகிழ்ச்சி முழுமையாகத் தொலைந்து போகிறது.

‘ஓ, இது சரியில்லை,அது சரியில்லை!அவர் நல்லவரில்லை,சரியில்லை’, போன்ற எண்ணங்களில் பீடிக்கப்படுகிறோம். நான் சொல்கிறேன்,அந்த கணத்தில் நீங்கள் கூடத் தான் சரியில்லை! சக்தி முழுவதும் அந்த எண்ணங்களிலேயே தொலைந்து போகிறது. அப்படிப்பட்ட எண்ணங்களில் செலவழித்த பின் நீங்கள் எளிதில் பயனற்று போய்விடுகிறீர்கள்; எதையும் செய்ய முடியாது. நீங்கள் வாழ்க்கையில் உற்சாகத்தை தொலைத்த பின் வேறென்ன மீதமிருக்கும்? அப்படி சிக்கியிருப்பதால், அன்பு, புன்னகை, உற்சாகம் என உங்களுடைய எல்லாவற்றையும் இழக்கிறீர்கள். உற்சாகத்தை இழந்த பின் எல்லாவற்றையும் இழக்கிறீர்கள். பிறகு சும்மா ஒரு இடத்தில் கிடந்து கொண்டு எதுவும் செய்யாமலிருப்பீர்கள். ஏன் இதெல்லாம் நடக்கிறது? இது மாயையினால்தான். இந்த மாயை உண்மையில் மிக சுவாரசியமானது. யாரை வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு அவர்களை தன்னிஷ்டப்படி ஆட்டி வைக்கும்! பாவம் பிடிபட்டவர் ஆடிக்கொண்டேயிருப்பார்.

மாயையினால் இந்த முழு உலகமும் பாதிக்கப்படுகிறது. எனவே இதனால், மக்கள் பலர் மாயையை விமர்சித்துவிட்டு மாயையின் லீலைகளை வெறுத்து ஒதுக்குகிறார்கள். ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘இந்த மாயை இறை குணங்கள் நிரம்பியது, மேலும் அது என்னிடமிருந்து பிறந்தது. எனவே அதை நீங்கள் மதித்து மரியாதை செய்ய வேண்டும்.’ஸ்ரீ கிருஷ்ண பகவான் மட்டுமே அப்படிக் கூற முடியும், வேறு யாருமல்ல. இது எப்படி என்றால், ஒரு திரைப்படத்தின் இயக்குனர்,‘எல்லாம் எனக்குச் சொந்தம். நாயகன் மற்றும் எதிர்நாயகன் இருவருமே எனக்குச் சொந்தம்.’ என்று சொல்வதைப் போல ஆகும்.

ஒரு கதா நாயகன், தன் எதிர் நாயகன் தனக்குச் சொந்தம் என்று சொல்ல முடியுமா? இல்லை, அப்படி இருக்க இயலாது. ஒரு கதா நாயகனால் எதிர் நாயகனை எதிர்நாயகனாக  மட்டுமே கருத முடியும். ஆனால் அந்தத் திரைப் படத்தின் இயக்குனர் சொல்லலாம், ‘கதாநாயகன் மற்றும் எதிர் நாயகன் இருவரும் எனக்குச் சொந்தம். நான்தான் இந்தப் படத்தில் வேலை செய்ய அவர்களுக்குச் சம்பளம் கொடுத்தேன். எனவே நான்தான் அவர்களுக்கு இடையே பிரச்சினை வருமாறு கதை வடிவமைத்தேன் நான் தான் அந்தக் பிரச்சினையின் முடிவையும் எழுதினேன்.’ இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘இந்த மாயை என்னிடமிருந்து பிறந்தது. நான் தான் இதை பரப்பினேன், மேலும் என்னுடைய இறை அருளினால் மட்டுமே உங்களால் இதை வெல்ல முடியும். நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும், உங்கள் முயற்சியினால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியாது. என்னிடம் அடைக்கலம் பெற்றால் மட்டுமே உங்களால் மாயை என்னும் பெருங்கடலை கடக்க முடியும்.’ எனவே உங்களுக்குள் ஆழமாய்ப் போனால் மட்டுமே உங்களால் மாயையை வெல்ல முடியும்.

மனப் பரிணாமத்தின் மூன்று நிலைகள்

28 மே - 2013 - பெங்களூரு – இந்தியா

மனப்பரிணாம வளர்ச்சிக்கு  மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை மாயையில் இருத்தல். அது மாயை என்பது கூடத் தெரியாமல் அதில் கட்டுண்டு இருத்தல். உதாரணமாக, ஒருவர்  ஒரு பிரமையில் சிக்குண்டு அது தவறான கருத்து என்பதைக் கூட அறியாமல் அதையே உண்மை என்று நம்பிக் கொண்டிருத்தல். இது முதல் நிலை,

இரண்டாவது நிலை, ஒருவர் தான் மாயா மயக்கத்தில் கட்டுண்டு இருக்கிறோம் என்று தெரிந்தே அதில் கட்டுண்டு இருப்பது. தான் முழுவதுமாக மாயையில் சிக்குண்டு இருப்பதை உணர்ந்து அதற்காக வருந்தும் நிலை. மூன்றாவது, மாயையிலிருந்து முழுவதுமாக விடுபட்டு அதனால் பாதிக்கப் படாமல் இருக்கும் நிலை. மாயையால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றுணர்ந்த நிலையே மூன்றாவது நிலை.

இவை தாம் மூன்று நிலைகள். முதல் நிலையில் தான் ஒருவன் தன்னுடைய மனதினாலேயே துன்பத்தை அனுபவிக்கிறான்.  அமைதியாக அமர்ந்திருக்கும் போது கூட, பல விதமான எண்ணங்கள் சூழ்ந்து கொள்கின்றன.

இது சரி, இது சரியல்ல, நான் இதைச் செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும், இப்படிப்பட்டவர், அப்படிப்பட்டவர், எனக்கு என்ன ஆகும், ஆகாது என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றி கொண்டிருக்கின்றன.எங்கிருந்தெல்லாமோ வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நொடி கூட மன அமைதி இல்லை. மனம் முழுவதும் இத்தகைய எண்ணங்கள் நிரம்பி மாயமயக்கத்தில் வீழ்ந்து அது மாயை என்று கூட உணராமல் இருக்கின்றது. இது தான் முதல் நிலை.

சரி! நம்மை ஒரு நொடி ஒதுக்கி வைப்போம். நாமெல்லோரும் யாரேனும் ஒருவர் மாய மயக்கத்தில் கட்டுண்டு இருப்பதைப் பார்த்திருக்கின்றோம். அப்படிப்பட்ட ஒருவரைக் காணும் போது நீங்கள் ,'' சரி! இவர் மாயமயக்கதில் சிக்குண்டு உண்மையை உணராமல் இருக்கிறார்'' என்று நினைத்திருக்கிக்கிறீர்கள்.எத்தனை பேர் இவ்வாறு நினைத்திருக்கிறீர்கள்? கை உயர்த்துங்கள் (பலர் கையுயர்த்துகிறார்கள்) 

சிலர் இந்த உலகமே தனக்கு எதிராக செயல்படுவதாக தவறாக எண்ணுகிறார்கள்.முதலில், உலகில் உள்ளோருக்கு இவர் யார் என்று கூடத்  தெரியாது. யாருக்கும் இவரைப் பற்றி நினைக்கக் கூட நேரமில்லை. இருந்தும் இவர் இவ்வுலகம் தனக்கு எதிரானது என்று எண்ணுகிறார். ஒவ்வொருவரையும் தனது எதிரியாகவே கருதுகிறார். மாயையினால் தான் இந்த மயக்க நிலை. மற்றும் சிலர் எல்லோரும் தன்னையே கவனித்து வருவதாக உணருகிறார்கள். "ஓ! எல்லோரும் என்னைப் புகழுகிறார்கள்'' என்கிறார்கள். இவர்களும் மயக்க நிலையிலேயே இருக்கிறார்கள், அப்படியே இருந்து இறந்து விடுகிறார்கள்.

பல முறைகள், மற்றவர்களின் மருட்சியை  நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது, ஆனால் தன்னுடைய மயக்கத்தை புரிந்து கொள்ள முடிவதில்லை, மருட்சி மயக்கத்தை  உண்மை என்றே நம்புகிறார்கள். மற்றவர்களுடைய மயக்கத்தை உணர்ந்து புரிந்து கொள்ள முடிகிற அளவுக்குத், தான் மாயையில் சிக்கிக் கொள்ளும் போது அது மாயை என்று உணராமல் இருக்கின்றோம்."அவன் அப்படிப்பட்டவன், அவள் அப்படிப்பட்டவள், இது சரி, அது தவறு என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். எப்போதும் எதையோ எண்ணிக் கொண்டு ஒரு நொடி கூட அமைதியின்றி இருக்கிறோம்.சத்சங்கத்தின் போது கூட மனம் மாயையின் காரணமாக எண்ணச் சுழற்ச்சியில் சிக்குண்டு விடுகிறது. இதுதான் மாயை என்றுணராமல் அதில் சிக்குண்டு மனத் துன்பத்திற்கு ஆளாகும் முதல் நிலை.

இரண்டாவது நிலை என்பது, நடப்பதெல்லாம் மாயையினால் ஏற்படும் மயக்கம் என்று உணர்ந்தாலும் அதை கடந்து வெளி வரமுடியாத நிலை. இந்த இரண்டாவது நிலையில்  நீங்கள் மாயை மயக்கத்தில் இருப்பதை உணருவீர்கள். அவரைப் பற்றி இவரைப்பற்றி என்றெல்லாம் நீங்கள் எடுத்த தீர்ப்பு பொய்யானதாக மாறுவதை  அறிந்து கொள்ளுவீர்கள். அவர்களெல்லாம் நீங்கள் முடிவெடுத்தபடி அல்ல என்பதை அறிந்து கொள்ளுவீர்கள். நீங்கள் செய்து கொண்ட கருத்துப் பதிவுகள் அனைத்தும் தவறானது என்பதைக் கண்டு கொள்வீர்கள். அவை அனைத்தும் மயக்கம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஆயினும் அம்மயக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் இருப்பீர்கள். மயக்க நிலையை உணர்ந்தாலும் வெளிவர முடியவில்லை. இதை எவ்வாறு கடப்பது?

மாயையின் மயக்கத்தில் சிக்குண்டு அதை உணராமல், பிறரால் துன்புறுகிறோம். இது முதல் நிலை. ஆனால் இவை எல்லாம் நமது மன மயக்கத்தினால்தான் என்று உணரும் போது நம் மீதே கோபம் வருகிறது. எத்தனை பேர் இதை அனுபவத்திருக்கிறீர்கள்? நீங்கள் துன்புறுவது உங்களாலேயே தான் ,மற்றவரால் அல்ல என்றுணர்ந்து வருந்துகின்றீர்கள். இது இரண்டாவது நிலை. முதல் நிலையில் ஒருவன் இது தான் மாயை என்றுணராமல் அதில் சிக்குண்டு மனத் துன்பத்திற்கு ஆளாகி, அத்தகைய சூழ்நிலைக்கு தானே தான் காரணம் என்று அறியாமல் உலகைப் பழிக்கிறான். உலகிலுள்லோரைத் திருத்த முடியாததால், செயலற்ற நிலையில் கோபமடைகிறான்.  அவனிடம் வன்முறை மனோபாவத்தை அதிகப்படுத்துகிறது. முதல் நிலையில் இருப்பவர்களை விட, தனது மாயா நிலையை உணர்ந்து கொண்டவர்கள் சற்று புத்திசாலிகள். அவர்கள் தங்களது சூழ்நிலைக்கும் துன்பத்திற்கும் உலகைக் குறை கூறுவதில்லை. தங்களையே நொந்து கொள்கிறார்கள். இக்குற்ற உணர்வில்  அவர்கள் தடைப்பட்டு அந்நிலையிலேயே நின்று விடுகிறார்கள். 

மூன்றாவது நிலை இந்த இரண்டு நிலைகளை விட மேலானது. அதில் ஒருவன் மாயையினால் பாதிக்கப்படாத நிலையில் இருக்கிறான். நடப்பெதெல்லாம் மாயையினால், மனத்தினால் என்று உணர்ந்து, அதில் சிக்கிக் கொள்வதில்லை. அவன், இது மனத்தின் இயல்பு, மருட்சி என்பது மாயையின் இயல்பு என்பதை நன்கறிந்து கொள்கிறான். ஆயினும், மனம் என்பது தான் அல்ல, அது போன்று  மருட்சியில் (மாயை) சிக்கிக்கொண்டிருப்பதும் தான் அல்ல என்பதையும் அறிந்தவன் ஆகிறான். அவன் மனதின் இயல்பைத் தடுக்கவோ, குறுக்கிடவோ முயலுவதில்லை, அதே நேரம் மாயையில் சிக்கிக் கொள்வதுமில்லை. இரண்டையுமே அவற்றின் போக்கில் விட்டு விடுகிறான். நல்லறிவாளன்  மனம் பல காரணக் கூறுகளினால் பாதிக்கப்படுகிறது என்பதை அறிந்தவன். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் நீங்கள் உண்ணும் உணவு. 'ஜைஸா அன்  வைஸா மன்' என்று ஒரு சொல்வழக்கு உண்டு. அதன் மொழிபெயர்ப்பு "உண்ணும் உணவே நீங்கள்" என்பதாகும். அதாவது, என்ன உணவு எடுத்து கொள்ளுகிறீர்களோ அது உங்கள் மனத்திலும் நடத்தையிலும் செயல்விளைவினை ஏற்படுத்தும்.

ஆகவே உங்கள் மனமானது நீங்கள் உண்ணும் உணவு, உங்கள் சுற்றுச்சூழல் மற்றும் உங்கள் வாழ்வில் நீங்கள் இருக்கும் காலகட்டம்  இவற்றைப் பொறுத்தே இயக்க விளைவுகளைப் பெறும். காலம் என்பதும் மனதில் ஒரு விளைவினை ஏற்படுத்தும். உங்கள் வாழ்வின் சில காலகட்டங்களில் மன உணர்ச்சிப்புயல்களில் சிக்கிக் கொள்ளும் நிகழ்வுகளும் உள்ளன. ஆகவே காலம்,உணவு மற்றும் சுற்றுச் சூழல் இவையால் மனம் இயக்க விளைவுகளை பெறுகின்றது. எனவே, அறிவாளி மாயை என்பது தன்னியல்புப்படி செயல்படுகிறது என்றுணர்ந்து, தன் உள்ளுயிர்த் தன்மையில் இளைப்பாறுகின்றான். இதுதான் உண்மையான ஞானம். இந்த ஞானத்தினால் மனம் பொய்த் தோற்ற அழுக்கிலிருந்து சுத்தப் படுத்தப்பட்டு, மாயையிலிருந்து விடுபடுகின்றது. இந்த ஞானத்தினால் அறிவும் சுத்திகரிக்கப்பட்டு மாயையிலிருந்து தன்னைத் தனிப்படுத்தி கொள்கின்றது. இப்படிப்பட்ட மெய்யறிவாளர்கள் தாங்கள் எது செய்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கின்றார்கள். 

ஜோதிட சாஸ்திரம் - ஞானத்தின் கண்கள்

27 மே 2013 – பெங்களூர் - இந்தியா


கே: குருதேவா! ஜோதிட சாஸ்திரப்படி நான் தற்போது ராகு மற்றும் சனி கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறேன். இதனால் மனம் உடைந்து, பலமுறை கோபம், எரிச்சலால் அவதிப்படுகிறேன். ஆன்மீக பாதையிலிருந்து விலகி, என்னை சேர்ந்தவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறேன். தயவு செய்து உதவுங்கள்.

குருதேவர்: உனக்கு இந்த ஞானமாவது இருக்கிறது. இவ்வளவு தெரிந்த உனக்கு, இந்த எதிர்மறை சக்திகளால் ஏற்படும் உணர்ச்சிகள் சில காலமே இருந்து கடந்து விடும் என்றும் தெரியும். ராகு மற்றும் சனியின் சேர்க்கையால் தான் இப்படி நடக்கிறது என்று உனக்குப் புரிகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் உதவியால் கஷ்ட காலங்களை முன்கூட்டியே கண்டறிய முடியும்.

கிரகங்களின் ஆதிக்கத்தினால் தான் இப்படி நடக்கிறது என்று நீ அறியாமலிருந்தால் என்ன ஆகியிருக்கும்? இவ்வுலகமே எதிர்மறை சக்திகளால் ஆனது என்று நினைப்பாய். உன்னால் எந்த ஆக்கபூர்வமான காரியமும் செய்ய முடியாது என்று நினைத்து ஆழ்ந்த துக்கத்தில் இருப்பாய். இல்லையா? அதனால் தான் ஜோதிட சாஸ்திரத்தை ஞானத்தின் கண்கள் என்று அழைக்கிறார்கள். அது உன்னை தற்போதைய சூழ்நிலையைக் கடந்து என்ன நடக்கும் என்ற பார்வையை உனக்கு அளிக்கிறது. இந்த சூழ்நிலை தற்காலிகமானது என்று நீ ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் அறியலாம். இது மாறிவிடும் என்று தெரியும். உனக்கே தெரியாமல் ஒரு மனோதிடம் உருவாகும். நீ உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும் பழி சொல்ல மாட்டாய்.

கிரகங்களைக் பழி சொல்வது பரவாயில்லை.ஏனென்றால் அவை வெகு தொலைவில் இருக்கின்றன. உன்னால் அவற்றிற்கு எந்த கெடுதலும் செய்ய முடியாது. கிரகங்கள் தங்களுடைய பாதையில், தங்களுக்கு உரிய வேகத்தில் செல்கின்றன. அவைகளை வேகமாக நகரச் சொல்ல முடியாது. ஏதாவது ஒரு காரியம் சரியாக நடக்காவிட்டால் நீ உன்னையோ அல்லது மற்றவர்களையோ குற்றம் சொல்வாய். எப்படியானாலும் உனக்குத் தான் நஷ்டம். காரியம் சரியாக நடக்காததற்கு கிரகங்களின் மேல் பழியைப் போட்டால், உன்னையோ, மற்றவர்களையோ குற்றம் சொல்லத் தேவையில்லை. ஒரளவுக்கு உன் வாழ்வில் நிம்மதி கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தினால் இப்படி ஒரு நன்மை உண்டு.

கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஒரு வழி இருக்கிறது. எப்படித் தெரியுமா? தெய்வத்தை வழிபடுவதால் சூழ்நிலைகள் உன்னை வருத்தாது. எல்லா கிரகங்களையும் ஆட்டிப்படைப்பவர் சிவபெருமான். இவ்வுலகம் சிவதத்துவத்தினால் இயங்குகிறது. “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை உச்சரிப்பதால் கஷ்டமான சூழ்நிலைகளை எளிதாகக் கடக்கலாம். எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையிலும் ஏதாவது நன்மை விளையும். நீ வெளி உலகத்திலிருந்து உன் பார்வையைத் திருப்பி ஆன்மீக வழியில் செல்ல இச்சூழ்நிலைகள் உதவும். மகிழ்ச்சியான சமயத்தில் மனம் வெளிநோக்கிச் செல்லும். அப்படி இல்லாத போது மனம் உள்நோக்கிச் செல்லும். இப்படிப்பட்ட சமயங்களில் நீ பிரார்த்தனை மற்றும் தியானத்தில் ஈடுபடலாம்.

ராகு புத்தி, சனி புத்தி,கேது புத்தி இவை ஆன்மீகப் பாதையில் முன்னேற வழி வகுக்கின்றன. சனி கிரகத்தின் நோக்கமே உன்னை ஆன்மீக வழியில் திருப்புவது தான். எப்படி செயல்படுகிறது? நீ மேலோட்டமான உலக இன்பங்களிலேயே வாழும் போது, ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தி உன் மனத்தை உள்நோக்கித் திருப்புகிறது. நீ ஏற்கனவே ஆன்மிகப் பாதையில் ஈடுபாட்டுடன் இருந்தால் சனிக்கு ஒரு வேலையும் இல்லை. உனக்கு வாழ்வில் எந்தப் பிரச்சினையும் வராது. பிரச்சினைகள் வந்தாலும் அவை கடுமையாக இருக்காது. பிரச்சினைகள் வந்த வேகத்தில் மறைந்து விடும். எனவே எந்த விதமான சூழ்நிலையிலும் ஒருவர் நன்மை அடைய முடியும்.

கே: குருதேவா! நம்மிடம் சில மின்னல் வேகக் கேள்விகள் இருக்கின்றன. கேட்கலாமா?

குருதேவர்: கேட்கலாம்!

ஞானம்?

வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.

உறவுகள்?

அன்னியோன்னியமான உறவுகளை காப்பது கடினம். இருந்தாலும் முயற்சிக்க வேண்டும்.

விசிறிகள்?

சில சமயம் சூடாக வீசும். சில சமயம் குளிர்ச்சியாக வீசும்.

தந்தரம்?

வாழ்க்கையில் எப்போதும் உண்டு. வாழும் கலையில் கண்டிப்பாக உண்டு.

எஸ்.எம்.எஸ்?

கீப் இட் ஷார்ட் அன்ட் ஸ்மார்ட்.

சமஸ்கிருதம்?

எல்லா மொழிகளுக்கும் தாய். அறிவாளிகள் கற்கும் மொழி.

சுற்றுச்சூழல்?

பாதுகாக்கப்பட வேண்டும்.

பணம்?

தேவை தான். ஆனால் அது மட்டும் போதாது.

சக்தி சொட்டு மருந்து?

எல்லோருக்கும் அவசியம்.

பிரார்த்தனைகள்?

இதய பூர்வமான பிரார்த்தனைகள் நிறைவேறும்.

கர்மவினை?

வாழ்க்கையில் ஒரு பகுதி. நற்கருமங்கள் மகிழ்ச்சியைத் தரும்.

பானு அக்கா?

எல்லோருக்கும் பிரியமானவர்.

உங்களின் காரியதரிசிகள்?

கடுமையாக உழைப்பவர்கள்

திருப்தி?

திருப்தி சேவை செய்வதால் கிடைப்பது.

ஆசிர்வாதம் (நல்வாழ்த்துக்கள்)?

உங்களுக்கு நிறைய இருக்கிறது.

பெங்களூர் ஆசிரமம்?

பூலோக சொர்க்கம்

பொறியியல் நுட்பம்?

வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும்.

ஆயுர்வேதம்?

அடுத்த நூற்றாண்டுக்கான மருந்து. பழங்கால மருந்து.

பொம்மைகள்?

கடவுளின் கையில் நீ ஒரு பொம்மை என்பதை நினைவுகொள். உணர்ச்சிகளின்  பொம்மையாக இராமல் கடவுளின் பொம்மையாக இரு.

தேசபக்தி?

தற்சமயம் தூண்டப்பட வேண்டியது. இந்தியாவுக்கு மிகவும் தேவை.

யோகா?

உன்னை அறிவாளியாக்கும். அறிவாளிகள் யோக சாதனை செய்கிறார்கள்.

அகம்பாவம்?

இருக்கட்டும். தொலைத்துக்கட்ட வேண்டாம்.

அன்பு?

உன் இயல்பு.

சிவா?

எல்லாமும் அடங்குகிறது. வருங்காலத்திலும் எல்லாம் அடங்கும். கடந்த காலத்திலும் 
எல்லாவற்றையும் அடக்கியது.

கடைவீதிக்குச் செல்லுதல்?

ஆன்மீகத்தை (கடைவீதியில்) தேட வேண்டாம்.

பணிவு?

அனுபவம் வாய்ந்தவரிடம் இருக்கும் குணம்.

ஆத்மா?

அழகு, உண்மை, ஞானம்.

வாழும்கலை?

இலக்கு