உங்கள் கண்களுக்கு உயிரூட்டுங்கள்.....

29 ஏப்ரல் 2013 - பாலி - இந்தோனேசியா  




கே: குருதேவ், இறைவனின் தாய் தந்தையை பற்றி எங்களுக்குக் கூறமுடியுமா? இறைவனுக்கு எத்தனை சகோதர சகோதரிகள்?

குருதேவ்: ஆஹா! நீங்கள் டென்னிஸ் பந்து எங்கே தொடங்குகிறது என்று சொன்னால் நான் கடவுளின் தாய் தந்தை யார் என்று கூறுகிறேன். பிறப்பு இறப்புக்கு ஆளாகும் ஒன்றை நீங்கள் கடவுள் என்று அழைக்கமாட்டீர்கள். இறைவன் ஒளி, இறைவன் ஒரு மெய்யுணர்வு, அதற்கு பிறப்பு இல்லை.

பிரபஞ்சத்தில் மூன்று விஷயங்கள் சிரஞ்சீவியானது. ஒன்று பிரபஞ்சம், எப்போதும் இருப்பது. இரண்டாவது ஆத்மா; ஒரு தனிப்பட்ட ஆத்மா சிரஞ்சீவியானது. மூன்றாவது, ஆகப் பெரிய மனம், அல்லது கடவுள்; எப்போதும் இருப்பது. இல்லையென்றால் அது கடவுள் என்று அழைக்கப்பட மாட்டாது. கடவுள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்தார், இப்போது இல்லையென்றால் அது கடவுளில்லை. அல்லது கடவுள் எதிர்காலத்தில் வருவார் என்றாலும் அது கடவுள் இல்லை. கடவுள் என்பவர் முன்பு இருந்தார், இப்போது இருக்கிறார், எதிர்காலத்திலும் இருப்பார்; அது எங்கும் எப்போதும் இருப்பது. கடவுள் ஒரு மனிதரல்ல. அது ஒரு சக்தி, அது ஒரு வெளி. உபநிஷத்தில் ஒரு அழகான கதை உண்டு.

ஒரு எட்டு வயதுச் சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான், ‘அப்பா, கடவுள் எப்படி இருப்பார்?’ எனவே, தந்தை தன் மகனை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று, அவனிடம் கேட்டார், ’இந்த கட்டிடம் கட்டுவதற்கு முன்பு இங்கே என்ன இருந்தது?’அந்தச் சிறுவன் சொன்னான், ‘ஒரு வெட்ட வெளி. ’அந்தத் தந்தை கேட்டார், ‘இந்தக் கட்டிடம் எங்கே நிற்கிறது?’அந்தச் சிறுவன் பதலளித்தான், ‘வெட்ட வெளியில்.’‘அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டால்அங்கு என்ன இருக்கும்?’ அந்தச் சிறுவன் கூறினான், ’வெட்ட வெளி’ அந்தத் தந்தை கூறினார், ‘எனவே வெட்ட வெளி என்பது எப்போதும் இருப்பது அல்லவா?’அந்தச் சிறுவன் கூறினான், ’ஆம்.’அந்தத் தந்தை கூறினார், ‘அது போலத்தான் கடவுள் இருப்பார்.’

எல்லாமே அங்கு வரும், எல்லாமே அங்கு இருக்கும், எல்லாமே அங்கு கரைந்து போதும் ஒரு வெளி போலத்தான் கடவுளும். அதை அழிக்கவே முடியாது. மேலும் அது எப்போதும் இருப்பது. அதிலிருந்து நீங்கள் தப்பிக்கவே முடியாது. கடவுளை விட்டு நீங்கள் எங்கும் போகவே முடியாது. முடியவே முடியாது!

அப்படியென்றால் ஒரு கேள்வி வருகிறது, ‘கடவுள் நன்மையே நிரம்பியவர் என்றால் தீயவர்கள் எப்படி கடவுளாக முடியும்? நல்லவர்களும் இருக்கிறார்கள், தீயவர்களும் இருக்கிறார்கள், எப்படி எல்லோரையும் கடவுள் என்று சொல்ல முடியும்?’ வேறு ஒரு உதாரணம் தர விரும்புகிறேன்; ஒரு திரைப்படம் எப்படி காட்டப்படுகிறது?

ஒரு திரைப்படச் சுருளின் பின்னிருந்து ஒளிக்கற்றையை பாய்ச்சி திரைப்படம் காண்பிக்க படுகிறது, இல்லையா? திரைப்படம் காட்டும் கருவியை (Projector) பார்த்திருக்கிறீர்களா, எப்படி படச்சுருள் ஓடுகிறது, எப்படி ஒளி அதன் பின்னிருந்து பாய்ச்சப்படுகிறது என்பதை பார்த்திருக்கிறீர்களா? அந்த ஒளியினால் திரைப்படம் திரையில் விழுந்து நமக்குத் தெரிகிறது. எந்த திரைப்படமாயிருந்தாலும், அது கதாநாயகன் வந்தாலும் சரி எதிர் நாயகன் (வில்லன்) வந்தாலும் சரி, வரும் ஒளி அதே தான், இல்லையா? அந்த ஒளிதான் கடவுள், கதாநாயகன், எதிர்நாயகன், நீங்கள் பார்க்கும் நல்லவை தீயவை, நடக்கும் மற்றவை, என எல்லாமே வெறும் நிகழ்வுகள் தான். அதற்கும் ஒளிக்கும் ஒன்றுமே இல்லை. அந்த ஒளியினால் தான் நம்மால் அதை பார்க்க கூட முடிகிறது. உங்களுக்கு இது புரிகிறதா?

நீங்கள் உணமையிலேயே கடவுள் என்றால் என்ன இயற்கை என்றால் என்ன, என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் விஞ்ஞானியாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு இயற்பியல் வல்லுனராயிருந்தால், உங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்களால் குவாண்டம் இயற்பியலை புரிந்துகொள்ள முடிந்தால், உங்களால் ஆன்மீகத்தை நன்கு புரிந்துகொள்ள முடியும், கடவுளையும் நன்றாக புரிந்துகொள்ள முடியும்.

கடவுள் எங்கும் இருக்கிறார் என்றால், இங்கே இருக்கிறாரா? ஆம். கடவுள் எல்லோருக்குமானவர் என்றால், அவர் உங்களுடையவரா? ஆம். கடவுள் எங்கும் இருப்பவர் என்றால், அவர் இங்கும் இருக்கிறாரா? அவர் எப்போதும் இருந்து வருகிறார் என்பதால் எங்கே இப்போது இருக்கிறார்! அவர் எல்லோருக்குமானவர் என்பதால் அவர் என்னுடையவரும் கூட. எல்லாம் நடப்பதற்கான தளம் அவர்; அவர் எதையும் செய்யது முடிக்கக்கூடியவர், அதனால் எனக்குத் தேவையான எதையும் நிறைவேற்ற முடியும். இந்த நான்கும் தெரிந்திருந்தால் அதுவே போதும். வேறு எதுவும் உங்களுக்குத் தேவையில்லை. எனவே நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியது என்னென்ன?

கடவுள் எங்கும் எப்போதும் இருப்பவர், எனவே அவர் இங்கு இப்போது இருக்கிறார். அவர் என்னுடையவர், அவர் என்னுள் இருக்கிறார், என்னிடம் இல்லாதவற்றை நிறைவேற்ற அவர் இருக்கிறார். அவ்வளவு தான். தியானத்தில், ‘நான்’ கரையும் போது, அறிவு கரைகிறது. (உங்களிடம் உள்ள அறிவு மிகக் குறைவு என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே அறிவு கரைய வேண்டும். ஆழ்ந்த உறக்கத்தில் என்ன நடக்கிறது? அறிவு கரைகிறது) அறிவு கரையும் போது, ‘நான்’ என்ற உணர்வு கரையும் போது, பிறகு என்ன எஞ்சி இருக்கிறதோ அதுவே இருக்கும். அதுதான் நிஜமான உண்மை, அதுதான் ‘ஷிவா’, மற்றும் அதுதான் ‘பைரவா’ ‘பைரவா’’ நிலையில் தான் நீங்கள் ‘ஷிவா’’ உடன், ‘ஷிவோஹம்’ உடன் ஒன்றாகிறீர்கள், அங்கு நான் கரைகிறது, அறிவு கரைகிறது, ஆனாலும் எல்லாம் இருக்கிறது.

இதை எப்படி அடைவீர்கள்? இதை பற்று, பற்றின்மை மற்றும் அருள் (அல்லது கருணை) மூலம் அறியலாம். சாதகம் செய்வதில் ஆழ்ந்த பற்று, மற்ற எல்லாவற்றிலும் பற்றில்லாமல் இருப்பது, மற்றவர்கள் மீதும் உங்கள் மீதும் அருளோடு இருப்பது – இவை தான் அந்த மூன்றும். சில சமயம் பிறர் மீது அருளோடும் தங்கள் மீது கடுமையாகவும் நாம் இருப்போம்; அதுவும் நல்லதல்ல. (அருள் – Compassion)

கே: உடல் உறுப்பு தானம், ஒரே பாலினத்தில் திருமணம், இரத்த தானம், கருக் கலைப்பு இவற்றைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?

குருதேவ்: உடல் உறுப்பு தானம் சரிதான், நீங்கள் செய்யலாம்; அதில் ஏதும் தவறு இல்லை. இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வெகுவாக தொடர்புடைய விஷயங்கள். இதை நீங்கள் நல்லவை, கேட்டவை, எனக்கு வேண்டும், வேண்டாம் என்று குறிப்பிட்டு பெயரிட வேண்டாம். நீங்கள் என்ன தேர்வு செய்தாலும், கவலை வேண்டாம், அது பரவாயில்லை. ஆனாலும், இந்தச் சிறு சிறு நிகழ்வுகளை விட வாழ்கை மிக அதிகமானது என்பதை நீங்கள் மறக்கக் கூடாது, அது தான் முக்கியம். இந்தப் பொருள் உலகை விட மேலான ஏதோ ஒன்றில் சில கணங்கள், ஒரு சதவீதமேனும் அதில் நம்பிக்கை, நீங்கள் உயர்வடைய இதுவே போதும். நீங்கள் நீரில் இருக்கும் போது, பெருங்கடலில் இருக்கும் போது, உங்களுக்குத் தேவையானதெல்லாம் ரப்பர் மிதவைகள் மட்டுமே; அதுவே போதுமானது. அப்படித் தான் நீங்கள் நீந்தக் கற்கிறீர்கள் அல்லவா? அதைப்போல, எல்லாவற்றிலும் மேலான ஒன்றில் சிறிதேனும் நம்பிக்கை போதும்.

சமஸ்க்ருதத்தில், ஷ்ராத் என்ற வார்த்தை உண்டு, சிரத்தையுடன் இருப்பது, அதாவது நம்பிக்கை. யாராவது இறந்துவிட்டால், நீங்கள் அவர்களை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள், அவர்கள் இருந்தார்களா இல்லையா என்று சந்தேகம் கொள்வதில்லை. அவர்கள் உங்களுடன் இருந்தார்கள் என்பதும் அவர்கள் போய்விட்டார்கள் என்றும் உங்களுக்குத் தெரியும். அவர்கள் சென்ற அந்த தினத்தில் அவர்களை ஞாபகம் கொள்கிறீர்கள், அதுதான் சிரார்த்தம், அப்படியென்றால் நம்பிக்கை.

அவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதில் நம்பிக்கை. மற்றும் என்ன செய்கிறீர்கள்? சிறிது எள்ளை எடுத்து, நீர் விட்டு, ‘திருப்தியடையுங்கள், திருப்தியடையுங்கள், திருப்தியடையுங்கள். உங்கள் மனதில் ஏதேனும் ஆசைகளிருந்தால், இந்த எள்ளைப் போல அவையெல்லாம் மிகச் சிறியவை, அவற்றை விட்டுவிடுங்கள். உங்கள் ஆசைகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன். நீங்கள் திருப்தியாய் மேலே செல்லுங்கள், நிறைவாய் இருங்கள்.’ என்ற தகவலை அவர்களுக்கு அளிக்கிறோம்.

இறந்து சென்றவர்களுக்கு அவர்கள் குழந்தைகள் இதை தான் சொல்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் தான் இதைச் செய்ய வேண்டும் என்பதில்லை, யார் வேண்டுமாலும் செய்யலாம், அவர்களுடைய நண்பர்கள், யாராவது சொந்தக்காரர்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்தச் சடங்கு இங்கு பாலியிலும் முக்கியமாக செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சடங்கில், ஐம்புலன்களும் திருப்தியடையச் செய்யப்படுகிறது; சுவைக்கு உணவு, நுகர்வதற்கு ஊதுவத்தி, ஓசைக்கு பாடல்கள் மற்றும் பார்ப்பதற்கு விளக்கு. இறந்து அந்தப் பக்கம் சென்றவர்களுக்கு நன்றியை காட்ட இது ஒரு வழி. இது ஒன்று மட்டுமல்ல, இதையும் தாண்டி வேறு ஒரு உலகம், இன்னொரு ராஜ்ஜியம், இருப்பதற்கு இன்னுமொரு இடம் இருக்கிறது என்பதை நமக்கு ஞாபகப்படுத்தவும் இந்தச் சடங்குகள் செய்யப்படுகிறது. உங்கள் கண்கள் திறக்கப்படுகிறது.

கே: குருதேவ்,போன பிறவியில் நாங்கள் என்ன செய்தோமோ, இந்த பிறவியில் எங்களுக்கு நீங்கள் அவ்வளவு தருகிறீர்கள். நாங்கள் ஆசைப்படுவதற்கு முன்னேயே எங்களுக்கு அது கிடைக்கிறது. எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி.

குருதேவ்: மிக்க நன்று. நாம் எவ்வளவு அதிகமான நன்றியோடு இருக்கிறோமோ அவ்வளவு பரிசுகள் நம் வழி வருகிறது. உங்களில் எத்தனை பேர் இதை அனுபவித்திருக்கிறீர்கள். நீங்கள் என்னவெல்லாம் ஆசைப்படுகிறீர்களோ, அவையெல்லாம் உண்மையாகிறது. உங்களுக்கு ஏதேனும் வேண்டுமானால், அவையெல்லாம் நடக்கிறது. அவ்வளவு தான்! உங்களுக்கு என்ன வேண்டுமோ அது கிடைக்கிறது; அதுதான் நம் பாதையின் அழகு. சில சமயம், சில குறும்புகளும் செய்ய வேண்டும்; அதிக கடினமான மனநிலைக்குச் செல்லாமலிருக்க. இந்த அழகிய ஞானம் மிக ஆழமாய் இருந்தாலும் கூட, அதை நாம் விளையாட்டாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்; அதாவது மிக கடுமையான மன நிலையோடு அதில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் இது லீலை என்று அழைக்கப்படுகிறது. அப்படியென்றால் விளையாட்டு அல்லது நாடகம், அதாவது இறைவனின் லீலை; ராம லீலை, கிருஷ்ணா லீலை. எனவே, இந்த முழு பிரபஞ்சமும் ஒரு விளையாட்டு மற்றும் மெய்யுணர்வின் ஒரு காட்சி, கடவுளின் விளையாட்டு.

வாழ்கையும் ஒரு விளையாட்டு தான்; ஒரு நாடகம், சண்டையோ போரோ அல்ல. நீங்கள் அதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும்,அந்த விளையாட்டு முடியும், எல்லோரும் இறக்கப் போகிறார்கள். எல்லோரும் இறக்கப் போகிறார்கள். எல்லோரும் அந்த ஒளியுடன் ஒன்றிணையப் போகிறார்கள், ஒரு நாள் இல்லை என்றால் வேறொரு நாள், சில முறைகள் சுற்றிச் சுற்றி. எனவே, வாழ்கை இரண்டுமானது; ஆழமானதும் அதே சமயம் மகிழ்ச்சி, விளையாட்டு மற்றும் சந்தோஷமானதும் கூட.

கே: மகாபாரதத்தில் சிக்கியிருக்கிறோம் என்று எப்படி தெரிந்துகொள்வது? எப்படி அதிலிருந்து வெளி வருவது?

குருதேவ்: இது எப்படி இருக்கிறது என்றால், ‘எனக்கு ஜலதோஷம் பிடித்திருப்பது என்பதை எப்படி தெரிந்து கொள்வது.’ என்று கேட்பது போல இருக்கிறது. நீங்கள் ஜலதோஷத்தை உணரும் போது உங்களுக்கு ஜலதோஷம் இருப்பதை தெரிந்துகொள்வீர்கள். எனவே நீங்கள் மகாபாரதத்தில் இருக்கும் போது, நீங்கள் பெரிய சிக்கலில், சண்டையில் சிக்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தம், வெளிப்படையாகத் தெரியும், உங்கள் தூக்கம் கெடும்.

வாழ்க்கையில், நீங்கள் ஒரு சச்சரவை, சண்டையை பார்த்தால், அது ஒரு நன்மைக்காக என்று தெரிந்தால், எழுந்து நின்று சண்டையிடுங்கள் போதும். சண்டையிடுவதற்கு உகந்ததல்ல என்று தோன்றினால், அதனால் எந்த பயனுமில்லை என்று உணர்ந்தால், உங்கள் உத்தியை மாற்றிக் கொண்டு அதிலே சிக்காமல் தாண்டிச் சென்றுவிடுங்கள்.

கே: எந்தப் புள்ளியில் உயிர் உருவாக்கப்படுகிறது? பிறப்பின் போதா, கருவுரும் போதா அல்லது இதற்கிடையே எப்போதேனும் நடக்கிறதா?

குருதேவ்:இது மூன்றுமே சாத்தியம். கருவுரும் போதோ, அல்லது ஐந்தாவது மாதத்திலோ, அல்லது அரிதாக சில விஷயத்தில் பிறக்கும் போதோ கூட ஒரு ஆத்மா வரலாம். இவையெல்லாம் பிறப்பின் இரகசியம், இவற்றைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. ஐம்பெரும் இரகசியங்களுள், பிறப்பின் இரகசியமும், இறப்பின் இரகசியமும் அடங்கும், இவற்றை பற்றி எல்லாம் நாம் அதிகம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. ஆனால், நீங்கள் அதை அறியலாம்; தியானத்தில் ஆழமாய்ப் போய் அறிந்துகொள்ளலாம்.

கே: மற்ற கிரகங்களில் என்ன வகை உயிரினங்கள் இருக்கின்றன? நம்முடைய ஆன்மீக உலகம் தான் அவர்களுக்கும் உள்ளதா?


குருதேவ்: ஆம், நம்முடைய பூமியைப் போல பல உலகங்கள் இருக்கின்றன. நம்முடைய பண்டைய நூல்களின் கூற்றுப்படி, உங்களை போலவே ஐந்து உலகங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றன.

மனித வாழ்க்கை விலை மதிப்பற்றது

27 ஏப்ரல் 2013 - நுசா தூவா - பாலி  


   
                 
வாழ்க்கைக்கு மூன்று விஷயங்கள் மிகவும் அவசியம். அவை ஆசை, பற்றின்மை மற்றும் கருணை என்பவையாகும். வாழ்க்கைக்கு ஆசை அவசியம்.ஆசை அல்லது விருப்பம் இருந்தால் தான் உன்னால் ஒரு காரியம் செய்ய முடியும். ஒரு இலக்கை அடைய முடியும். வாழ்க்கைக்கு ஆசை அவசியம். வாழ்க்கைக்கு ஆசையுடன் பற்றின்மையும் தேவையாகிறது. ஆசை மட்டும் போதாது. தீவிர ஆசையுடன் பலர் வாழ்கிறார்கள். ஆனால் அந்த ஆசை அவர்களைக் களைப்படைய செய்கிறது. சீக்கிரத்தில் சோர்வடைகிறார்கள். சில சமயம் தீவிர ஆசை நிறைவேறாமல் மன அழுத்தத்தினால் வருந்துகிறார்கள். ஏனென்றால் அவர்களின் ஆசை அதி தீவிரமாக இருக்கிறது. முடிவு அவர்கள் விரும்பிய படி இருப்பதில்லை.

ஆகவே ஒருவருக்கு ஆசையுடன் பற்றின்மையும் இருக்க வேண்டும்.பற்றின்மை ஒரு பாதுகாப்பு வால்வு மாதிரி இயங்குகிறது.பற்றின்மை மன அளவில் ஒரு நடு நிலைமையை கொடுக்கும். உள்ளிழுக்கும் மூச்சு ஆசையையும், வெளிவிடும் மூச்சு பற்றின்மையையும் குறிக்கிறது. ஆசை மற்றும் பற்றின்மையோடு கருணையும் அவசியம். பற்றின்மையால் நீங்கள் தூங்க முடிகிறது. ஆசையினால் நீங்கள் விரும்பியதை அடைய முடிகிறது. கருணையால் உங்கள் தனித்தன்மை ஒளி விடுகிறது. நம் வாழ்க்கைக்குப் போதுமான அளவு ஆசை, பற்றின்மை மற்றும் கருணை இருக்க வேண்டும்.

கருணையை எங்கு காட்ட வேண்டும். எவ்வளவு காட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்வது அவசியம். உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அழும் போது கருணை காட்டுவது சரியல்ல. சரி! வீட்டிலேயே இரு என்று சொல்லக் கூடாது. குழந்தை பள்ளிக்குச் செல்வது மிகவும் அவசியம். யாராவது தவறான வழியில் செல்லும் போது, போதை மருந்துப் பழக்கம் அல்லது மது பானம் அருந்தும் பழக்கத்தில் ஈடுபட்டு வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளும் போது, நீ அவர்களிடம் கருணையுடன் இருப்பேன் என்று சொல்ல முடியாது. அவர்களுடன் கடுமையாக நடந்து கொண்டு கண்டித்து, அவர்களை கெட்ட பழக்கத்திலிருந்து விடுவிப்பது தான் நீ அவர்களிடம் காட்ட வேண்டிய கருணையாகும். இப்படிப்பட்ட கருணையை நாம் வாழ்வில் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மேலான ஒன்று உண்டு. உண்மையென்று நாம் நினைக்கும் உலகை விட ஆச்சரியமான தெய்வீகமான ஒரு சக்தி, என்றும் மாறாத பேருண்மை ஒன்று இருக்கிறது. அதை நாம் நம்பும் போது வாழ்க்கைக்கு ஒரு ஆழமான பரிமாணம் கிடைக்கிறது. அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை விட்டு உன் பார்வையை என்றும் மாறாத பேருண்மையை (பரம் பொருளை) நோக்கித் திருப்பும்.

கற்பனை செய்து பார். இந்த சந்திரன் இங்கு பல கோடி ஆண்டுகளாக இருக்கிறது. இந்த பூமி 1900 கோடி ஆண்டுகளாக இருப்பதாகத் தெரிய வருகிறது. நீ எவ்வளவு ஆண்டுகளாக இங்கிருக்கிறாய்? மிகவும் குறைவான காலமே நீ இங்கிருந்திருக்கிறாய். இருக்க போகிறாய். ஒரு வேளை 50 அல்லது  60 ஆண்டுகள் இருந்திருப்பாய். இன்னும் எவ்வளவு ஆண்டுகள் இருக்கப் போகிறாய்? 30 அல்லது 40 ஆண்டுகள். அவ்வளவு தான். வாழ்க்கை முடிந்து விடும். இருந்தாலும் நம் மனம் சொல்கிறது. நான் எப்போதுமே இந்த இடத்தில் இருந்திருக்கிறேன் என்று சொல்கிறது.

நாம் குழந்தைகள் வளர்வதைப் பார்க்கிறோம். ஆனாலும் நாம் வளராமல் அப்படியே இருப்பதாக உணர்கிறோம். இந்த அனுபவம் எவ்வளவு பேருக்கு இருக்கிறது? குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். நான் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறேன். எனக்கு வயதே ஆக வில்லை என்று நினைக்கிறோம. இது உண்மை தான். உனக்குள் இருக்கும் ஒன்று, நீ பிறந்திருக்கிறாய். ஒரு நாள் இறக்கப் போகிறாய் என்பதை ஒத்துக் கொள்வதில்லை. உங்களைச் சுற்றி எல்லாமே மாறினாலும், உன் ஆழ்மனதில் ஒன்று (உன் ஆத்மா) என்றுமே மாறாமல், வயதால் பாதிக்காமல் இருக்கிறது. உன் ஆத்மா நீ பிறப்பதற்கு முன்பிருந்தே இருக்கிறது. இந்தப் பிறவி மட்டுமல்ல. நாம் பல முறை பிறந்திருக்கிறோம்.

யாரோ ஒருவர் தன் ஒரு நாள் நிகழ்ச்சிகளை மட்டும் நினைவில் வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள். அடுத்த நாள் அவர் முந்தைய நாளில் நடந்த நிகழ்ச்சிகளை மறந்து விடுகிறார். ஒருவரின் ஞாபக சக்தி மிகக் குறைவு. காலையிலிருந்து இரவு வரை நடந்த சம்பவங்களை மட்டும் நினைவில் வைக்க முடிகிறது. நேற்று நடந்த எதுவும் அவருடைய நினைவில் இல்லை. அல்லது நாளை வரவே வராது என்று நினைத்துக் கொள்.“அம்னீசியா” என்ற மறதி வியாதி வந்தவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள். நம்முடைய நிலைமையும் இது போலதான் இருக்கிறது. ஒருவர் அளவுக்கு மீறிக் குடித்திருக்கும் போது நடந்தவை அவருடைய நினைவில் இருப்பதில்லை. அதே போல் நாம் நம்முடைய முந்தைய பிறவிகளைப் பற்றிய அனுபவங்களை மறந்து விட்டோம். மீண்டும் பிறவி எடுப்போம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இருந்து வருவோம். இந்த உண்மையை நாம் அறியும் போது வாழ்க்கை என்பது ஒரு மகத்தான பரிமாணமுடையது என்பது தெளிவாகும். 

இங்கு “பாலி”யில் சிறிய சிறிய கோவில்களைக் காண்கிறீர்கள். இந்தக் கோவில்களில் எந்த உருவச் சிலைகளும் இல்லை. ஏன் என்று தெரியுமா? இவை நம் முன்னோர்களுக்காக கட்டிய கோவில்களாகும். கோவில்களில் சிறிய பீடம் மட்டும் அமைத்திருக்கிறார்கள். இது நம் முன்னோர்களின் ஆத்மாவுக்காக அமைக்கப்பட்டது. கடவுளர்களுக்கான கோவில்களும் இருக்கின்றன. பல கடவுள்களை வழி படுகிறார்கள். பல கடவுள்கள் வருகிறார்கள். இந்த பீடங்களில் அமர்கிறார்கள். உங்களை ஆசிர்வதிக்கிறார்கள். உங்களைக் காக்கிறார்கள்.மக்கள் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இது நம்பிக்கை மட்டும் அல்ல.உண்மையும் அது தான்.

உண்மைக்குப் பல நிலைகள் உள்ளன. முதல்நிலை ஒளி. எல்லாவற்றிற்கும் மேலான தெய்வம். ஒரே கடவுள். பல அல்ல. ஒன்றே தான். அது தான் பரமாத்மா என்று அழைக்கப் படுகிறது. பரமாத்மாவுக்கு அடுத்த நிலையில் பல தேவதைகள், சக்திகள் அல்லது ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள் இருக்கின்றன. இந்த தேவதைகளுக்கு அடுத்த நிலையில் பல கண்ணுக்குத் தெரியாத ஆவிகள் இருக்கின்றன.

அடுத்த நிலை நாம் காணும் உலகம். எனவே நாம் காண்பது எல்லோராலும் பார்க்க முடிந்த உலகம். அதற்கு மேல் சுட்சுமமான கண்ணுக்குத் தெரியாத (நல்ல மற்றும் கெட்ட) சக்திகள் இருக்கின்றன. அதற்கு மேல் நம் முன்னோர்கள், தெய்வங்கள் இருக்கிறார்கள். அதற்கு மேல் பரமாத்மா, எல்லாவற்றுக்கும் மேலான, ஒரே கடவுள் இருக்கிறார். அதை நீ எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.

இவ்வுலகம் பல உறைகள் உள்ள உண்மையாகும். நீ இவ்வுடலை விட்டுப் போகும் போது உன் ஆவி (உயிர்) மற்றொரு இடத்துக்குப் போய் சில காலம் தங்கும். இன்னொரு உடலில் மீண்டும் சென்றடைந்து பிறக்கும். மனிதப் பிறவி அடைவதற்கு அரியது. ஏனென்றால் மனிதப் பிறவியில் தான் பேரொளியான பரமாத்மாவுடன் நாம் கலக்க வாய்ப்பிருக்கிறது. மனித வாழ்க்கையில் நீ அன்பை வெளிப்படுத்த முடியும். மனித உடல் கிடைத்தற்கு அரிய ஒன்று.

நான் சொன்னது போல் இங்கு உருவ சிலைகள் இல்லாத பல சிறுசிறு கோவில்கள் உள்ளன, கடவுளுக்கு உருவம் இல்லை என்பதை இவைகள் உணர்த்துகின்றன.அதே சமயம் தெய்வங்கள் இந்தக் கோவில்களில் இருப்பதை நாம் உணர முடியும். இது நம்முடைய ஞாபக சக்தி போலிருக்கிறது. நீ உன் முன்னோர்களைப் பற்றி நினைக்கும் போது (இறந்து போனவர்களை பற்றி நினைக்கும் போது) உன் மனதில் அவர்கள் இன்றும் வாழ்கிறார்கள். இல்லையா? அவர்கள் இன்னும் உன்னோடு இருப்பது போல் நீ உணர்கிறாய். அவர்களோடு கழிந்த நிகழ்ச்சிகள் உன் நினைவுக்கு வருகிறது. அதே போல் பல விதமான தேவதைகள் (ஆண், பெண் தெய்வங்கள்) நம் உடலின் பல பாகங்களில் இருக்கிறார்கள்.

உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒரு தெய்வத்தால் ஆளப்படுகிறது. அத்தெய்வங்களின் நினைவு நமக்கு வரும்போது உடலின் அந்த பாகத்தில் உணர்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நம்பிக்கை உலகின் பல்வேறு பாகங்களில் இன்றும் இருக்கிறது. தென் அமெரிக்கா, மெக்ஸிகோ, ஆசியா, மங்கோலியா வரை இப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கிறது. வெறும் நம்பிக்கை மட்டும் போதாது.

நீ தியானம் செய்யும் போது என்ன நடக்கிறது என்று உனக்குத் தெரியுமா? நீ உண்மையின் அடுத்த நிலைகளைத் தொடுகிறாய். உன் மனம் சலனமில்லாமல் இருக்கும் போது, தியானம் நிகழும் போது, உன் உடலில் உள்ள எல்லா செல்களையும் தூய்மைப்படுத்துவது மட்டுமல்லாமல், உன்னைச் சுற்றி ஆக்க பூர்வமான சக்திகளைப் பரப்புகிறாய். உன் தியானத்தின் மூலம், இறந்துபோன முன்னோர்களின் ஆத்மாவுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.


நீ மௌனத்தில் இருக்கும் போது, இவ்வுலக விஷயங்களில் உன் மனம் செல்லாமல் அமைதியாக இருக்கும். உடலும் மனமும் தூய்மையடையும். இந்த சமயத்தில் உன் மனதில் சில எண்ணங்கள் எழும். கடந்த கால நிகழ்ச்சிகளின் நினைவு உன்னை பாதிக்கக் கூடும். கவலை வேண்டாம். பயப்பட வேண்டாம். நீ தியானத்தில் அமர்ந்திருப்பதே போதும். எது நிகழ்ந்தாலும் அது நல்லதே. பழைய நினைவுகள் உன்னைத் தொந்தரவு செய்தால் வருந்த வேண்டாம். அவை வந்த மாதிரியே போய் விடும். எது எப்படியானாலும் மௌனம் காப்பது மிக மிக விலை மதிப்பில்லாதது. உனக்கு மட்டுமல்லாமல் கண்ணுக்குத் தெரியாத சூட்சும உலகுக்கும் நல்லது. நீ மௌனமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், தியானத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், உன்னால் பரவும் ஆக்க பூர்வமான சக்திகள் உலகுக்கு நன்மை அளிக்கும். பௌர்ணமி அன்று சமுத்திரத்துக்கு அருகில் தியானம் செய்வது மிகவும் நல்லது. மனம் பல விதமான எண்ண அலைகளால் சஞ்சலமாக இருக்கும் போது, மீண்டும் மீண்டும் நீ உலக காரியங்களிலிருந்து விடுபட்டு அமர்ந்து தியானத்தில் மூழ்கும் போது, கலக்கம் மறைந்து, மனம் தெளிவடையும். அமைதி கிடைக்கும். 

சுவர்கத்திற்கான கதவு

26 ஏப்ரல் 2013 - பாலி, இந்தோனேசியா


இந்த பிரபஞ்சம் அவ்வளவு அழகாக இருக்கிறது. இங்கு பலவிதமான பூக்கள், பழங்கள், மரங்கள், மிருகங்கள், மனிதர்கள் இருக்கின்றனர்; நீங்கள் சந்தோஷமாக இருக்க இத்தனை வகைகள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. ஆனால் மனிதனின் மனம் இருக்கும் விதமானது உங்களை சந்தோஷமாக இருக்க விடுவதில்லை. மிகச் சிறந்த இடங்களில் கூட, மனம் கடந்தகால நினைவுகளோடு ஐக்கியமாகி விடுகிறது, இதுதான் அவ்வளவு வியப்புக்குறிய விஷயம். மனம் மிகப் பெரிய புதிர். உங்களுடைய மனதே உங்களுடைய மிக நல்ல நண்பன் அல்லது மிக மோசமான விரோதி. நம்முடைய சந்தோஷத்திற்கும், துயரத்திற்கும் மனமே பொறுப்பு.

மனம் இத்தருணத்தில் இருக்கும்போது,எல்லாமே அழக்காகத் தோன்றுகிறது. ஆனால், மனம் குழம்பி இருக்கும் போது, மிகச் சிறந்த இடத்திலும் கூட, துயரத்துடன் இருக்க ஆயிரம் காரணங்களைக் காண முடியும். மனதிற்கு ஐந்து ஏற்ற இறக்கங்கள் உண்டு.

முதலில், மனம் எல்லாவற்றிற்கும் நிரூபணத்தைக் கேட்கிறது. எவ்வாறு உங்களுக்கு எல்லாவற்றிற்கும் நிரூபணம் கிடைக்கும்? முடியாதது!

இரண்டாவதாக, மனம், இருப்பவைகளை,உண்மையாக அவைகள் இருப்பது போலவே புரிந்து கொள்வதில்லை,வேறு மாதிரியாக சிந்திக்கிறது. நீங்கள் ஒன்றை நினைத்தீர்கள்; சிறிது நேரம் கழித்து அது உண்மையில் அவ்வாறல்ல என்று கண்டுபிடித்தீர்கள்;சிறிது நேரம் கழித்து, கருத்துப் படிவம் சிதைகின்றது. இது விபர்யாயா என்று சொல்லப்படுகிறது.

மூன்றாவதாக, மனதிற்கென்று அதனுடைய கற்பனா சக்தி உள்ளது; - அது போன்று ஒன்று உண்மையில் இல்லாத போது.

நான்காவதாக, மனம் தூங்கி விடுகிறது. அது எதைப் பற்றியும் சிந்திக்க வில்லையென்றால்,அது தூங்கிவிடுகிறது.

ஐந்தாவதாக, மனம் கடந்தகால நினைவுகளில் சிக்குகிறது அல்லது எதிர்காலத்தை பற்றி கவலையுறுகிறது. ஐந்து ஏற்ற இறக்கங்கள்,ஒருவரை,இத்தருணத்தில் வாழ்ந்து, அனுபவிப்பதை தடுக்கின்றன.யோகா மாறுதலை உண்டாக்குகிறது; அது உங்களுக்கு மனதின் ஏற்ற இறக்கங்களைக் கடக்க உதவுகிறது. இது எப்படி சாத்தியமாகிறது? முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது, நீங்கள் அனைத்தையும் இங்கே விட்டுவிட்டு போகப் போகிறீர்கள். இவ்வுலகை விட்டு நீங்கள் செல்லும்போது, நீங்கள் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. என்னுடையது, என்னுடையது, என்னுடையது! என்று விடாமல் பிடித்துக்கொண்டிருப்பதே துயரத்திற்குக் காரணம். நான், பலமுறை கூறியுள்ள ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

ஒரு முறை நான் கானடாவில் இருந்தபோது, 60 வதுகளில் இருந்த ஒரு பெண்மணி நான் தங்கியிருந்த வீட்டுக் கதவை தட்டி வந்தார். இரவு 11.30க்கோ அல்லது 12 மணிக்கோ வந்து அவர் உடனே என்னைப் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தினார். நான் அவரைப் பார்க்க கீழே வந்தபோது,பள்ளி சிறுவர்களின் திட்டத்திற்காக என்னிடம் $100க்கு ஒரு காசோலையைக் தந்தார். நான் அவரை ஏனந்த அவசரம்,மறு நாளைக்குக் கொடுத்திருக்கலாமே என்று கேட்டேன். “குருதேவ், நான் யாரை வேண்டுமானாலும் நம்பலாம், ஆனால் என் மனதைத் தவிர” என்று பதிலளித்தாள். அவர் ஒரு மணி நேர தொலைவு தள்ளி வசித்தாள், முக்கால்வாசி தூரம் சென்ற பின்னர் திரும்பி வந்து காசோலையைத் தந்தார்.

‘எனக்கு அந்த எண்ணம் வந்தபோது, நான் உடனே அதைச் செய்ய வேண்டுமென்று எண்ணினேன் ஏனெனில் மறு நாள் என் எண்ணம் மாறக் கூடும். மறு நாள் நான் எதையும் கொடுக்க வேண்டாமென்றும் நினைக்கலாம். அல்லது அது வெறும் $10 ஆகக் குறையலாம்.’ என்றார் அவர். பின்னர் அந்த நள்ளிரவில், எனக்கு ஒரு கதையை கூறினார்.

ஒரு முறை ஒரு வணிகர் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்தார். படகில் இருந்த ஒரு செம்படவனைக் கூப்பிட்டார்.‘என்னை எப்படியாவது காப்பாற்று,நீ காப்பாற்றினால்,என்னுடைய செல்வமனைத்தையும் கொடுப்பேன்’ என்று செம்படவனிடம் கூறினார். ஒன்றும் பேசாமல் செம்படவன், வணிகரை தன்னுடைய படகில் ஏற்றினான். அவன் படகில் ஏறியதும், வணிகர் ‘இதோ பார், நான் என்னுடைய முழு செல்வத்தையும் கொடுக்க முடியாது ஆனால் உனக்கு அதில் பாதி கொடுக்கிறேன். எனக்கு ஒன்றும் வேண்டாம், என் மனைவியும், குழந்தைகளும் முழுவதையும் கொடுக்கவிட மாட்டார்கள்; அவர்களுக்காகவும் நான் கொஞ்சம் விட்டுச் செல்ல வேண்டும்”

செம்படவன் சிரித்தான், அவன் எதையும் சொல்லவில்லை. படகு கரையை அடையும் சமயம், வணிகர் மீண்டும் “இதோ பார், உனக்கு நான் பாதி கொடுத்து விட்டால், நான் என்ன செய்வேன்? நான் மறுபாதியை என்னுடைய மனைவிக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டேன். முடிந்தால் உனக்குக் கால்பங்கு கொடுப்பேன். ”பின்னர், படகு கரையை நெருங்க நெருங்க, கொடுக்கப்படும் தொகை மேலும் மேலும் குறைந்து கொண்டிருந்தது. அவர்கள் கரையை அடைந்தவுடன்,வணிகர், செம்படவனுக்கு $5 கொடுத்தார். “என்ன,உங்கள் மதிப்பு $5 தானா?” என்றான் செம்படவன். “என்னை இங்கே அழைத்து வர எவ்வளவு ஆகிறது? $3 மட்டும் தான்; நான் அதற்கு மேல் உனக்குக் கொடுத்துள்ளேன்” என்றார் வணிகர். மனம் மாறுகிறது! நீ நல்லதைச் செய்ய ஆசைப் படும் போது, உடனடியாகச் செய்ய வேண்டும், இல்லையென்றால் மனம் மாறுகிறது..

நல்லவற்றை செய்ய நாம் தள்ளிப் போடுகிறோம்,ஆனால் கெட்டதையும் உடனே செய்கிறோம். நாம் நமது கோவத்தை வெளிப்படுவதை ஒரு வாரமோ அல்லது ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ கூட தள்ளிப் போட்டாலும், நீங்கள் அதை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. நீங்கள் ஒருவரை அழைத்து சப்தம் போட நினைக்கிறீர்கள், அதை இரண்டு மணி நேரம் தள்ளிப் போட வேண்டும். அப்போது அதன் வேகம் தணிந்துவிடும். அப்பெண்மணி சொன்னது இதுதான், “இதன் காரணமாகத்தான் நான் உடனே வந்தேன். நான் எனக்காகவும்,என் நகைக்காகவும், உணவு மற்றும் இன்பத்திற்காகவும் செலவழிக்க யோசிப்பதில்லை; ஆனால் நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும்போது யோசனை வருகிறது.’ அவ்வாறு நடக்கக் கூடாது. நாம் பகிர்ந்து கொள்வது தான் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது நம்முடன் வருகிறது. பிணைப்பிலும், சுதந்திரத்திலும் செயல்பட மனதிற்கு ஒரு முக்கியமான பாத்திரம் உள்ளது.

நரகத்திற்கு மூன்று கதவுகள் உள்ளன என்று பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ளது. முதல் கதவு கோபம். கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது? அதை வெளிப்படுத்து வதைத் தள்ளிப் போடுங்கள். பேராசை நரகத்தின் இரண்டாவது கதவு. மூன்றாவது கதவு, விடாப்பிடியாக இருப்பது, அடங்கா ஆசை. மனம் ஆசையில் விடாப்பிடியாக இருக்கிறது,மற்றவர்களை லக்ஷியம் செய்வதில்லை.;அது மிகுந்த தொல்லைகளை உண்டாக்குகிறது.

சுவர்கத்திற்கான கதவுகள் என்னென்ன? கடந்த காலத்திலிருந்து அனைத்தையும் ஜீரணிக்கும் விசாலமான மனம், மற்றவர்கள் செய்யும் தவறுகளை ஜீரணிக்கக் கூடிய அளவிற்கான விசாலமான மனம். அதை மனதில் வைத்துக் கொண்டு அசை போடாமல் இருப்பது. இது வைராக்கியம் அல்லது அமைதியான மனநிலை எனப்படுகிறது. 

யானையைப் போல இருப்பது. யானைகள், இலைகள், மரப் பட்டைகள், பழம் ஆகியயவைகளைச் சாப்பிடுகின்றன; தென்னை ஓலையிலிருந்து, மூங்கிலிலிருந்து, வாழைப்பழங்கள் வரை. வாழைப்பழம் அவ்வளவு மென்மையானது, மூங்கில் அவ்வளவு கடினமானது, இருந்தும் யானைகள் அவைகளை சாப்பிட்டு ஜீரணிக்கின்றன. அது போன்று, வாழ்வில், பல மகிழ்ச்சியளிக்கிற, மகிழ்ச்சியில்லாத விஷயங்கள், நல்லவர்கள், தீயவர்கள் இருக்கின்றனர்.(என்னுடைய வாழ்வில், தீயவர்கள் கிடையாது. சமயங்களில் மோசமாக நடந்துகொள்ளும் நல்லவர்களே இருக்கிறார்கள்) ஆகவே, நடந்தது நடந்துவிட்டது, அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள். கடந்த காலத்தை பொறுத்துக்கொள்வது, நிகழ் காலத்தில் சந்தோஷத்தையும், நிவாரணத்தையும் அளிக்கிறது.

நாம் யானையைப் போல வலிமையாக வேண்டும்; அனைத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும்; மென்மையான பழம், உறுதியான மரப்பட்டை ஆகியவைகளை. கடந்த காலத்தை ஜீரணித்து முன்னேற வேண்டும். அது அமைதியான மனநிலை எனப்படுகிறது. அமைதியான மனநிலை எந்த சந்தோஷத்தைதான் அளிக்காது? அமைதியான மன நிலையில் உங்களுக்கு அனைத்து சந்தோஷமும் வரும். மக்களுக்கு இரு விதமான மனப்பாங்குகள் இருக்கலாம்:

ஒன்று, நாம் சதா சர்வ காலமும் நினைத்துக்கொண்டிருக்கும், ‘எனக்கு’ அல்லது ‘எனக்கு இதனால் என்ன பிரயோஜனம்?’ இரண்டாவது, எங்கு நாம் நினைக்கிறோமோ, ‘நான் உலகிற்கு எவ்வாறு உபயோகமாக இருக்கலாம்? என்று. ஆகவே, முழு மனப்பாங்கையும், ‘நான் இவ்வுலகிலிருந்து என்ன எடுத்துச் செல்லமுடியும்; எவ்வளவு ஆனந்தத்தை நான் பெற முடியும்’ என்பதிலிருந்து, ‘நான் உலகிற்கு எவ்வளவு அதிகமாகச் செய்யமுடியும்; நான் எந்த அளவிற்கு உலகிற்கு உபயோகமாக இருக்க முடியும்’ என்பதற்கு மாற்றுங்கள். இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தை நீங்கள் பார்க்க முடிகிறதா?


சுயநலத்திலிருந்து, சுயநலமின்மைக்கு மாற்றுவதாகும். ஆகவே, நாம் இரண்டாவது மனப்பாங்கை ஏற்கும்போது, நம்முடைய கவலைகள் மறைந்து, அபரிமிதமான (ஆனந்தம் பாய்ந்து வரும்.) சுவர்கத்தின் கதவானது, மற்றவர்கள் செய்யும் தவறுகளை பொறுத்துக்கொள்ளக் கூடிய விசாலமான மனம். அவைகளை உங்கள் மனதில் வைத்துக்கொண்டு அவைகளைப் பற்றியே சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டிருப்பது. இது வைராக்கியம் அல்லது அமைதியான மனநிலை எனப்படுகிறது. கடந்த காலம் எவ்வாறு இருப்பினும் அதை சகித்துக் கொள்வது.

வாழ்விற்கு தேவையான மூன்று விஷயங்கள்

24 ஏப்ரல் 2013 - டோக்கியோ, ஜப்பான்

நாம் வாழ்கையை ஒரு பரந்த கோணத்திலிருந்து காண வேண்டும். நமது புலன்களின் மூலமாகவே, நாம்  வாழ்கையையும் இந்த முழு உலகத்தையும் காண்கிறோம். பார்ப்பது, கேட்பது, தொட்டுணர்வது, புரிந்து கொள்வது இவற்றின் மூலமாகத் தெரிந்து கொள்கின்றோம். இவ்வாறு ஐம்புலன்களின் மூலமாக அறிவது என்பது ஒரு நிலை. புலன்களின் மூலமாக அடையும் அறிவை விட மேலானது புத்தி பூர்வமாக அடையும் அறிவு.

புத்தி பூர்வமான அறிவு, புலனறிவை விட மேலானது. சூரியன் உதித்து மறைவதை காண்கின்றோம். ஆனால் புத்தியின் மூலமாக சூரியன் உதித்து மறைவதில்லை, பூமி சுழன்று கொண்டிருக்கின்றது என்பதை அறிகின்றோம். இந்த புத்தி பூர்வமான அறிவை விட மேலானது ஒன்றிருக்கின்றது. அதுதான் உள்ளுணர்வின் மூலமாக அடையும் அறிவு. மனிதர்களாக பிறந்த நாம் அனைவரும் உள்ளுணர்வு நிலையைத் தொட்டு அடையும் திறமை உள்ளவர்கள். உள்ளுணர்வு அறிவு தான் ஆன்மீக அறிவு.

காலத்தையும், பரப்பையும் கடந்து செல்லும் போது உண்மை என்பதை அறிந்து கொள்வீர்கள் .அறிவு ஒன்றைக் கூறும் போது உள்ளுணர்வு வேறொன்றை கூறுவதை நீங்கள் அனைவருமே வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் உணர்ந்திருப்பீர்கள். உங்களுக்கு உள்ளுணர்வு ஒன்றை உறுதியாகக் கூறும் போது, புத்தி வேறொன்றைக் கூறி, உள்ளுணர்வு அறிவுருத்தியதே நடந்திருப்பதை உணர்ந்திருப்பீர்கள். எத்தனை பேர் இந்த அனுபவத்தை அடைந்திருக்கின்றீர்கள்? (பலர் கை தூக்குகிறார்கள்). ஒவ்வொருவருக்கும் இந்த மனோசக்தி இருக்கின்றது, எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிவதில்லை.

இது எப்படியென்றால்,உங்களிடம் ஒரு பூட்டிய செல்வக்குவியல் பெட்டி இருக்கின்றது, அதற்குச் சாவி இல்லை, அப்பெட்டியை என்ன செய்வது என்று தெரியவில்லை. அது போல, ஒரு கம்ப்யூட்டர் இருக்கின்றது, ஆனால் அதற்குப் பாஸ்வோர்ட் தெரியவில்லை. கைபேசி இருக்கின்றது ஆனால் அதற்கு கீ வோர்ட் தெரியவில்லை. ஐ பாட் இருக்கின்றது அது பூட்டப்பட்டு அதன் கீ வோர்ட் மறந்து விட்டது. இது போன்றது தான் வாழ்கை. நமக்கு உண்மையின் பல அளவீடுகளைத் தெரிந்து கொள்ள வழி இருந்தாலும், அவற்றை அடையத் திறமைகள் இருந்தாலும் நம்மிடம் கீ வோர்ட் இருந்தால் மட்டுமே முடியும். இது எளிமையான, ஆனால் மிக ஆழ்ந்த விஷயம். ஒரே ஒரு பாஸ்வோர்ட், உங்கள் கம்ப்யூட்டர் இயங்க ஆரம்பிக்கின்றது. அது இயங்க ஆரம்பித்தவுடன் நீங்கள் எல்லாச் செய்திகளையும் சென்றடையலாம். நம்முள் இருக்கும் பிரபஞ்ச சக்தி, பிரபஞ்சத் திறனுடன் இணைதல் மிக அவசியம். அத்தகைய இணைவு ஏற்பட்டவுடன் உலகின் எதனாலும், உங்கள் புன்முறுவல், சக்தி,உற்சாகம்,மகிழ்ச்சி அறிவுத்திறன் ஆகியவற்றைக் குறைக்க முடியாது. ஆன்மீகப் பயிற்சிகள், உங்கள் வாழ்க்கையிலேயே உள்ள, மதிப்பு மிக்க எல்லைக்குள் உங்களை அழைத்துச் செல்கின்றன.

யோசியுங்கள்! உங்கள் வாழ்கையில் உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களுக்கு மூன்று விடைகள் கிடைக்கும்.முதலாவதும் முக்கியமானதுமாக, சந்தோஷம் என்று கூறுவீர்கள். நீங்கள் ஏன் வேலை செய்ய விரும்புகிறீர்கள்? ஏன் பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்கள்? அதன் மூலம் வசதியாக, மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எண்ணுகிறீர்கள்.

இரண்டாவது அன்பு. உங்கள் வாழ்வில் அன்பு இல்லையென்றால், நீங்கள்  இந்தக் கிரகத்தில் வாழ  விரும்புவீர்களா? விரும்ப மாட்டீர்கள். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த உலகத்தில் உங்களிடம் யாரும் அன்பு செலுத்தவில்லை, நீங்களும் யாரிடமும் அன்பு செலுத்தவில்லை. அப்படியென்றால் நீங்கள் இங்கே இருக்க வேண்டிய அவசியம் என்ன? மகிழ்ச்சி, அன்பு ஆகிய இரண்டிற்கு பிறகு மூன்றாவதாக ஞானம். இங்கே ஒவ்வொருவரும் வாழ்வது முக்கியமாக அன்பு, ஆனந்தம், ஞானம் என்னும் இந்த மூன்று விஷயங்களுக்காக தான். அன்பு என்பது மறைக்க முடியாத ஒன்று. உங்கள் உள்ளத்தில் அன்பிருந்தால் நீங்கள் உங்கள் செயல்களில் அதைக் காண்பீர்கள். உங்கள் முகத்தில் அன்பு வெளிப்படும். உங்கள் கண்களில் அதை காணலாம்

உங்களது ஒவ்வொரு அசைவிலும் அன்பு வெளிப்படும். நீங்கள் யாராவது ஒருவருடைய கண்களைப் பார்த்தே அவர் கவலையாகவோ, வருத்தமாகவோ, பதட்டமாகவோ, கோபமாகவோ இருக்கின்றாரா அல்லது அன்பு மயமாக இருக்கின்றாரா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு சின்னக் குழந்தை, அல்லது ஒரு நாய்க்குட்டியின் கண்களைப் பார்த்தால் அவை அன்பை வெளிப்படுத்துவதை காணலாம்

அன்பு என்பது  மறைக்க முடியாதது. அதே சமயம் அது முழுமையாக வெளிப்படுத்தவும்    முடியாதது. யாராலும் அதை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. நீங்கள் மேலும் மேலும் அதை வெளிப்படுத்த முயலும் போது ஏதோ ஒன்று குறைவதை நீங்கள் உணர்வீர்கள். நூறு சதவீதம் அன்பை வெளிப்படுத்தவே முடியாது

அடுத்து வருவது உண்மை. நீங்கள் உண்மையை தவிர்க்க முடியாது. ஒரு நாள் நீங்கள் அதை சந்தித்தே ஆக வேண்டும். உங்கள் கண்களை மூடிக்கொள்வதால், பகல் இரவாக மாறி விடாதுஅல்லது இரவு பகலாகி விடாது. உண்மை நிலையானது. நீங்கள் அதைத் தவிர்க்க முடியாதுஉண்மையை விவரிக்கவும் முடியாது. அது விவரிக்க இயலாத அளவிற்கு மிகவும் பெரியதுமரணம் அது போன்றதே. ஒரு நாள் நாம் அனைவரும் இறக்கப் போகின்றோம். நாம் அனைவரும் முதுமை அடையப் போகின்றோம். நீங்கள் அதைத் தவிர்க்க முடியாது

மூன்றாவது அழகு. அழகு என்பதனை சொந்தம் கொண்டாடவும் முடியாது. துறக்கவும் முடியாது. இந்த உலகில் பிரச்சினைகள் அனைத்தும் உண்டாவது, இதன் காரணமாக தான்நாம் உண்மையை  தவிர்க்க முயற்சி செய்து பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளுகின்றோம்அன்பை முழுமையாக வெளிப்படுத்த முயற்சி செய்து பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றோம். அழகை சொந்தம் கொண்டாடும் முயற்சியில் பிரச்சினைகளில் சிக்கி விடுகின்றோம்

அழகை உங்களால் துறக்க முடியுமா? உங்களால் துறந்துவிட முடியுமென்றால் அது அழகே இல்லை. அழகை உங்களால் சொந்தம் கொண்டாட முடியுமா? முடியாது. இதுவே இன்றைய ஞானத்தின் சாரம். இதை நீங்கள் உங்கள் மனதில் வைத்திருந்தால் போதும். இது உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு பேருதவியாக இருப்பதைக் காண்பீர்கள்உண்மை தவிர்க்க முடியாதது. விவரிக்கவும் முடியாதது. அழகு சொந்தம் கொண்டாட முடியாதது; துறக்கவும் முடியாதது. அன்பை மறைக்கவும் முடியாது, முழுவதுமாக வெளிப்படுத்தவும் முடியாது. இந்தக் கருத்துக்களை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்உங்களுக்குள் ஞானம் மேலும் மேலும் மலரும்.

கே: நான் தற்சமயம் யோகப் பயிற்சி ஆசிரியராக இருக்கின்றேன். மக்களை எப்படி ஊக்குவிப்பது என்பது மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மக்களை ஊக்குவிப்பதற்கென   ஆசிரியர்களுக்கு அறிவுரை சொல்லுங்கள் குருதேவ்

குருதேவ்: அவர்களை மூன்று விஷயங்கள் கேளுங்கள்நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா? ஆரோக்கியமாக இருக்க விரும்புகின்றீர்கள? உங்கள் அன்றாட வாழ்க்கையில் அதிக நேரம் கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? ஆம் என்றால்  வந்து யோகப்பயிற்சி செய்யுங்கள்

நீங்கள் என்னிடம் பத்து நிமிடங்கள் கொடுங்கள். நான் பதிலுக்கு உங்களுக்கு இரண்டு மணி நேரம் தருகின்றேன். நீங்கள் பத்து நிமிடம் யோகப் பயிற்சி செய்தால், இரண்டு அல்லது அதற்கும் அதிகமான மணி நேரத்திற்கு சமமான சக்தி உங்களுக்குக் கிடைக்கும். யோகப் பயிற்சி செய்வதால் ஆழ்ந்த உறக்கம் உண்டாகும். குறைந்த அளவு நேர உறக்கமே போதும்மகிழ்ச்சியாகவும் சக்தி நிறைந்தவராகவும் உணர்வீர்கள். யோகப் பயிற்சியின் மூலம் அனைவரிடமும் அளவு கடந்த அன்பு பெருகும். உங்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்


யாரும் ஊக்கப்படுத்தப்படவில்லை, யாரும் பயிற்சிக்கு வரவில்லை என்னும் இந்த எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். இந்த எண்ணம் உங்கள் மனதில் இருக்கக் கூடாதுஅனைவருக்கும் தேவையான ஒன்று உங்களிடம் இருக்கின்றதென்று நீங்கள் உணர வேண்டும்அவர்கள் தானாக வருவார்கள். யாரும் ஊக்கப்படுத்தப்படவில்லை, யாரும் வரவில்லை என்று நீங்கள் நினைத்தால் யாரும் வரமாட்டார்கள். டோக்கியோவில் ஒவ்வொரு நாளும் புது யோகப்பயிற்சி நிலையங்கள் திறக்கப் படுகின்றன. அப்படியென்றால் மக்களுக்கு யோகப் பயிற்சி தேவைப்படுகின்றது என்று தானே அர்த்தம்!!!