நாம் அனைவரும் சமமானவர்கள்

டிசம்பர் 05, 2013

பெங்களூரு, இந்தியா

இன்று ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகின்றது. நான் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போது நிகழ்ந்தது. எங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணியுடன் அவளது மகளும் வருவதுண்டு. இருவரும் சேர்ந்தே வருவது வழக்கம். அப்பெண்மணி வீட்டு வேலைகளான பாத்திரங்களை கழுவுதல், துணிகளை துவைத்தல், தரையைப் பெருக்குதல் ஆகிய வேலைகளை செய்து கொண்டிருக்கும் போதுஅவளது மகளும் உடன் இருப்பாள். அச்சிறுமிக்கு என் தங்கை பானுவின் வயது இருக்கும்.''என் சகோதரி பள்ளிக்குச் செல்வது போன்று ஏன்  அச்சிறுமி செல்வதில்லை என்று நான் அடிக்கடி கேட்பேன்.அப்பருவத்தில்,அவளது தாயையோ, என்னுடைய பெற்றோரையோ இவ்விஷயத்தில் ஈடுபடச் செய்ய என்னால் இயலாமல் இருந்தது.அக்காலத்தில் அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.  நான் கூறுவது 45 -50 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள நிலை. அச்சிறுமி அந்த தாயைப் போலவே செய்து கொண்டே, உடன் நடந்து கொண்டிருப்பாள் அல்லது அமர்ந்திருப்பாள். தாய் அவளை ஒரு கணம் கூட பிரிந்திருக்க மாட்டாள்.

அக்காலத்தில் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது தடை செய்யப் பட்டிருந்தது. அச்சிறுமியின் தாய், "அவள் வீட்டு வேலை செய்வது தான் சரி.  அதை தான் அவள் செய்ய வேண்டும்" என்று கூறுவதுண்டு. சிறுமி கற்றுக் கொண்டதெல்லாம், நாங்கள் சொல்லி கொடுத்தது மட்டும் தான். என்னுடைய பெற்றோர், எனக்கு உயர்ந்த ஆடைகளும், என் சகோதரிக்கு பட்டுப் பாவாடையும் வாங்கும் போது,சிறுமிக்கு சாதாரண நூல் பாவாடை வாங்குவார்கள்.நான் அவளுக்கும் பட்டுப் பாவாடை வாங்க வேண்டும் என்று வற்புறுத்துவதுண்டு.

அது போலிப்பட்டானாலும் சரி, நல்ல பளபளப்பான பாவாடை அச்சிறுமிக்கு வாங்க வேண்டும் என்று மிக வற்புறுத்தியதால்,என் தந்தை அதற்கு இசைந்து அவளுக்கு ஒன்று வாங்கித் தந்தார். பிற்காலத்தில் பிதாஜி (குருதேவின் தந்தை) எங்கள் கிராமத்திற்கு சென்று நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகளுக்கு கல்வியும், சம உரிமையும், தற்சார்பும் பெற உதவும் பணியில் முழுமையாக ஈடுபட்டார்.

கர்நாடகத்தின் இப்பகுதியில், முதல் முறையாக பெண்கள் ஆட்டோ வண்டி ஓட்டுனர்களாக பயிற்சி பெற்றிருக்கின்றனர்.அதன் மூலம் பொருளாதார தன்னிறைவை பெற்றிருக்கின்றனர். மத்திய கர்நாடகப் பகுதியில், இன்றும் விஸ்டா அமைப்பின் மூலம் இந்தப் பணி, சிர்சி, சித்தாப்பூர் ஆகிய பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றது.பெண்கள் பொருளாதார தன்னிறைவை அடைய பயிற்றுவிக்கப் படுகின்றனர். என் சகோதரி பானு பெண் குழந்தைகளுக்கான மேம்பாட்டுத் திட்டத்தை வழி நடத்திக் கொண்டிருக்கின்றாள். வாழும் கலை செய்து வரும் இப்பணிகள் பெருங்கடலில் ஒரு சிறு துளி போன்றதாகும். இப்பணி ஒவ்வொரு அரசு சார்பற்ற நலப்பணி அமைப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

நமது நாட்டிலும், இவ்வுலகிலும், ஆயிரக்கணக்கான அரசு சார்பற்ற அமைப்புக்கள் இருக்கின்றன. அவைகள் அனைத்தும் சிறுமியரின் கல்விக்காக பணி புரிய வேண்டும்.  
ஊட்டச் சத்துக் குறைவு என்பது அடுத்த பெரிய பிரச்சினை. நான் கூறிய கதையில் உள்ளபடி, நாங்கள் எங்கள் வீட்டு வேலை செய்யும் பெண்மணியின் மகளுடன் எங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ளுவதுண்டு. எங்களுக்கு சாக்லேட் கிடைக்கும் போது அவளுக்கும் தருவோம். நாம் சமூகத்தின் எப்பிரிவினரானாலும், பகிர்ந்து கொள்ளுதல் என்னும் பண்பை கடைப்பிடிக்க வேண்டும்.

என்னுடைய பயணங்களின் போது நான் பெரிய மனிதர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றேன். தம் குடும்பத்தினருக்கு நல்ல தரமான உணவு தயாரித்துக் கொண்டு, பணியாளர்களுக்கு தனியாக சாதாரண உணவும் சமைப்பது வழக்கம்.  தங்களுக்கென்று தயாரித்த தரமான உணவு சிறிது மிஞ்சி விட்டாலும் அதை பணியாளர்களுக்கு தருவதில்லை. காரணம், அவர்கள் சுவையான உணவுக்கு பழக்கப்பட்டு விடுவார்கள் என்பது தான். பணியாளர்களுக்குப் பாசுமதி அரிசியில்லாமல், சாதாரண மட்ட ரக அரிசியிலேயே உணவு தயாரித்துக் கொடுப்பார்கள். இத்தகைய எண்ணப் போக்கு சரியல்ல. இது சமுதாயத்தை பிரித்து வைக்கும். நாம் எப்போதுமே மற்றவருடன் பகிர்ந்து கவனித்துக் கொள்ள  வேண்டும்.  அவர்களிடம் நம்மைக் காண வேண்டும். நமது சமுதாயத்தில், பாலின அடிப்படையில் ஏற்படும் தீங்குகள் மறைய வேண்டும்.

ஊட்டச் சத்துகுறை என்பது தற்போது பெரும் பிரச்சினை. உணவு இல்லை என்பதல்ல பிரச்சினை, எதை உண்ண வேண்டும் எதை உண்ணக் கூடாது என்று தெரியாமல் இருப்பதே பிரச்சினை.சில இடங்களில் குழந்தைகளுக்கு சப்பாத்தி, சாதம் உருளைக்கிழங்கு இவற்றைத் தருகிறார்கள். ஆயினும் அவை ஊட்டச் சத்துக் குறைந்தே காணப்படுகின்றன. ஊட்டச்சத்து பற்றி நன்கு கண்டறிந்து சமூகத்தில் அதை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும். பழங்கால உணவு முறை நம் நாட்டிலேயே மிகச் சிறந்ததாக இருந்து வந்தது. 

மீண்டும் எனது சிறு வயது அனுபவங்களை நினைவு கூறுகின்றேன். எனது பாட்டி எத்தகைய உணவு வகைகள் எந்தெந்த நாட்களில் எவ்வாறு தயாரித்து அளிக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பார்கள். பழங்கால முறையில் உணவு தயாரித்து அளிப்பார்கள். உணவு வாழை இலையில் பரிமாறப்படும். சிறிது கீரை, சிறிது பருப்பு அல்லது பயறு, காய்கறிகள் அடங்கிய கூட்டு, இவை கட்டாயம் இருக்கும். எப்போதுமே பருப்பு, சாதம், நெய் ஆகியவை இருக்கும். சாதம் மட்டுமோ, பருப்பு மட்டுமோ தனியாக உட்கொள்ளப் படாது. தவிர தயிரில் சில காய்கள் அடங்கிய பச்சடி (தென் இந்திய உணவு வகை) எப்போதும் இருக்கும். மேலும் பாகற்காய் போன்ற கசப்பு வகை உணவுடன் சேர்ந்து இருக்குமாறு உறுதி செய்து கொள்ளுவார்கள். இதுவும் தவிர மூலிகை மற்றும் கீரை வகை சேர்த்து அரைக்கப் பட்ட சட்னியும் இருக்கும்.மதிய உணவில் கீரை நிச்சயம் இருக்கும். ஆகையால் நாம் பழங்கால உணவு முறைக்குத் திரும்பினால் ஊட்டச் சத்துக் குறைவு என்பதே இருக்காது.

நமது பழங்கால உணவு முறையில், அமாவாசை அல்லது பௌர்ணமி முடிந்து 12 வது நாளில் ஒரு குறிப்பிட்ட மரத்தின் இலைகளை (அகத்திக்கீரை) உண்பது கட்டாயமாக்க பட்டிருந்தது. அது நமது உள் உறுப்புக்களை சுத்தம் செய்வது. அது போலவே முருங்கைகாய். நமது குடலுக்கு நல்லது. பணத்தை செலவழித்து ஊட்டச் சத்துக் குறைவை விரட்ட வேண்டிய தேவை இல்லை. என்ன தேவை என்றால், சரியான கல்வியறிவும், சரியான உணவு பற்றிய புலனுணர்வுத் திறனும் ஆகும்.   தக்காளி, உருளைக்கிழங்கு கத்தரிக்காய் இவற்றை மட்டுமே உண்பது உதவாது.

தற்போதெல்லாம் ஒரு பொறியல் அல்லது கூட்டு செய்வதென்றால் வெங்காயம் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு இவை மட்டும் இருந்தால் போதும், நாம் நன்றாக சாப்பிட்டோம் என்ற எண்ணம் நமக்கு தோன்றுகிறது. அல்லது நாம் மற்றவர்களுக்கு நல்ல உணவை படைத்தோம் என்று தோன்றும்.இதற்கும் மேலாக நாம் செய்யும் அனைத்து உணவுகளிலும் அதிகம் சர்க்கரையை உபயோகப்படுத்துகின்றோம்.

அமெரிக்காவில் சர்க்கரை வெண்ணிற விஷம் என்று அழைக்கப்படுகிறது இந்தியாவில் நாம் பெரும்பாலும் பலகாரங்கள் மற்றும் உணவுகளில் இனிப்பு ஏற்படுத்த வெல்லமே உபயோகித்து வந்திருக்கின்றோம்.

வெல்லத்தில் இரும்புச் சத்து, கால்சியம்,துத்தநாகம் போன்ற கனிம சத்துக்கள் உள்ளன. ஆனால் நாம் இவ்வாறு உடல் நலத்தை உண்டாக்கும் வெல்லத்தை உபயோகிப்பதை விடுத்து சர்க்கரைக்கு மாறி விட்டோம். இந்த மாற்றம் கடந்த 200 ஆண்டுகளில் அல்லது அதற்குள்ளாகவே ஏற்பட்டது. பிரிட்டிஷ்காரர்கள் இங்கு  வருவதற்கு  முன் யாருக்குமே இந்த சர்க்கரையை தெரியாது. வெல்லம்  தயாரிக்க உபயோகப்படுத்தும் கரும்பு சாற்றில் நல்ல ஊட்டச்சத்து உள்ளது, பல நோய்களை குணப்படுத்த கூடியது. சர்க்கரைக்கு பதிலாக கரும்புச்சாறு மற்றும் வெல்லம் உபயோகப்படுத்த ஆரம்பித்தால் ஊட்டச்சத்தின்மை என்ற பிரச்சினையை சரி செய்து விடலாம்.

முன்பெல்லாம் நம்முடைய மத சடங்குகளில் கூட நாம் எப்போதுமே வெல்லம் தான் உபயோகித்து வந்தோம். சர்க்கரை அல்ல. அத்தகைய நாட்களில் ஊட்டச்சத்தின்மை என்பது இருந்ததே இல்லை. ஏன் என்றால் வெல்லத்தில் அந்த அளவு இரும்பு சத்து உள்ளது. நம் பெண்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்தனர். 95 வயதிலும் என்னுடைய பாட்டி நல்ல உடல் நலத்துடன் இருந்தார்கள். ஆனால் என் அம்மா அவ்வாறு இல்லை. பாரம்பரிய உணவுகள் உண்பதால் கிராமங்களில் உள்ள வயதான மூதாட்டிகள் கூட நல்ல உடல் நலத்துடன் இருப்பதை நாம் இன்றும் காணலாம். முருங்கை கீரை மிகவும் நல்லது. வெண்ணையில் இருந்து நெய் காய்ச்சும் போது இறுதியாக அதில் முருங்கை கீரையை போட்டு வதக்கி உண்பதை நாம் இன்றும் கிராமங்களில் காணலாம். மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் முருங்கை கீரையில் உள்ளது. அது இரத்தத்திற்கு சமமானதாக  கருதப்படுகிறது.   
  
நம்முடைய 'ஊர்ஜா' மாத்திரை இந்த முருங்கை கீரையில் இருந்து செய்யப்படுகிறது, ஏன்  என்றால் உங்களால் முருங்கைகீரையை நீங்கள் செல்லும் எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல இயலாது. முருங்கை கீரை தாய் குழந்தை ஆகிய இருவரிடமும் உள்ள ஊட்ட சத்தின்மையை குறைக்கும். அதனால் நாம் இந்த   பாரம்பரிய கொள்கைகளுக்கு திரும்ப சென்று சீரான உணவு உட்கொள்ள வேண்டும்.

நீங்கள் கவனத்தோடு பார்த்தால், இந்தியாவில் உணவுகளிலும் வறுத்த தின்பண்டங்கலிலும் கருவேப்பிலையை சேர்த்திருப்பதை கவனிக்கலாம். கருவேப்பிலை அதனுடைய வாசனைக்காக உபயோகப்படுத்துவதில்லை. அவை நம் உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கும் தன்மையையும் கொண்டவை. நீங்கள் வறுத்த அல்லது பொரித்த உணவை உட்கொள்ளும் போது, அவை உங்களுடைய   கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. ஆனால் அவைகளோடு கருவேப்பிலையையும் சேர்த்து உண்ணும் போது, அது கெட்ட கொழுப்புச் சத்து உடலில் உருவாவதையும் அதே சமயம் அதிகமாக உடலில் குவிக்கப்படுவதையும்  தடுக்கிறது. 

அதே போல், இட்லியும் அதிக சத்துள்ள ஒரு உணவு வகை ஆகும். ஆனால் அதற்கு பதிலாக நாம் என்ன செய்கிறோம்? வெள்ளை ரொட்டியை எடுத்து அதில் வெண்ணையை தடவி நம்முடைய வயிற்றில் திணிக்கிறோம். நமக்கு எதை கொடுக்கும். முழுமையாக ஒன்றுமே அல்ல. அது நம்முடைய உடலில் கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. ஆனால் நீங்கள் இட்லி சாப்பிட்டால், அதில் உங்களுக்கு புரத சத்து, மாவு சத்து மற்றும் நொதிகள் (என்ஸைம்) அனைத்தும் உள்ளது. ஏன் என்றால் அது முதல் நாளே அரைத்து, பின் புளிக்கச் செய்த அரிசி மற்றும் உளுந்து மாவில் இருந்து செய்யப்படுகிறது.        

இந்திய ஊட்டச்சத்து அறிவியல் கழகம் இட்லியை மிக அதிக ஊட்டச்சத்து உள்ள ஒரு உணவு என்று சான்றிதழ் அளித்துள்ளது. இது எந்த நேரத்திலும் எந்த வயதினரும் சாப்பிடக்கூடிய ஒரு உணவு. இது ஒரு முழுமையான உணவு. நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது. நாம் அதில் தடவி சாப்பிடும் சட்னி தேவையான நார்ச் சத்தையும் கொடுக்கிறது. அதனால், இட்லியில்  நார்ச் சத்து உள்ளது, சிறுது சேர்க்கப்படும் எண்ணெய் கொழுப்பு சத்தை தருகிறது, புரதச் சத்து உள்ளது, மாவுச் சத்தும் உள்ளது. எனவே இது நமக்கு கிடைக்கும் ஒரு முழுமையான உணவு ஆகும்.  

ஆனால் இம்மாதிரி சத்தான உணவு உண்பதற்கு பதிலாக நாம் என்ன செய்கிறோம். பிரெஞ்சு பிரை, வறுத்த உருளைக்கிழங்கு, போண்டா  போன்ற எண்ணையில்   பொறிக்கபட்ட உணவுகளை சாப்பிடுகிறோம். இம்மாதிரியான உணவுகளை உண்டு நாம் வயிற்றை கெடுத்துக் கொள்ளுகிறோம். இன்று எது வழக்கமாக (பேஷனாக) உள்ளது? பிசா மற்றும் மைதா மாவில் செய்யப்படும் பிற சிற்றுண்டி வகைகளை உண்ணுவது. வெள்ளை மாவு நம்முடைய குடல்களில் நன்றாக ஒட்டிக் கொள்வதால் அதை அவ்வளவு சுலபமாக சுத்தப்படுத்த முடிவதில்லை. ஊட்டச்சத்து என்று பார்க்கின்ற போது சர்க்கரையும் வெள்ளை மாவும்(மைதா போன்றவை) உண்ணுவதற்கு உகந்தவை அல்ல.   

பரவலான  அறியாமையினாலும் ஆரோக்யமான உணவு பழக்கங்கள் இல்லாததினாலும், இந்த நாட்டில் ஊட்டச்சத்தின்மை நிறைந்துள்ளது. நம் நாட்டில் போதுமான அளவு உணவுகள் உள்ளன. ஆனால் மக்களுக்கு நல்ல உணவு பழக்கங்களை கற்றுத் தர வேண்டியுள்ளது. நம்முடைய ஆயுர்வேத முறையில்,  நல்ல உடல் நிலையையும் உற்சாகத்தையும் தொடர்ந்து பெற எந்த எந்த  காலங்களில் எந்த மாதிரியான  உணவு வகைகளை உண்ண வேண்டும் என்றும் மிகவும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி முழுமையான அறிவுரைகள் இருந்தும் நாம் அதில் கவனமும் சிரத்தையும் கொள்ளுவதில்லை.       

நம்முடைய உணவு எவ்வாறு உள்ளதோ அவ்வாறே நம்முடைய மனதின் இயற்கையும் நிலைமையும் இருக்கும் என்று சொல்லுவதுண்டு. நீங்கள் எந்த மாதிரியான உணவு உண்டாலும், உங்களுடைய மனமும் அதே மாதிரியான இயல்பையும் பண்பையும் தான் பெரும். நீங்கள்   காலையில் எழுந்தவுடன் காரமான   உணவு எடுத்துக்கொண்டால், இரண்டு மணி நேரத்தில் எளிதில் கோபம் கொள்பவராகி விடுவீர்கள்.

பலர் காலையில் எழுந்த உடனே பரோட்டாவும் டீயும் சாப்பிடுகின்றனர். இரண்டு மணி நேரத்திலேயே மனம் மிகவும் மந்தமாகிவிடும். பரோட்டா சாப்பிட வேண்டாம் என்று நான் கூறவில்லை, ஆனால் அது காலையில் எழுந்த உடனே முதல்முதலில் சாப்பிடக்கூடிய பொருள் அல்ல. அதற்குக் பதிலாக நல்ல புதிய பழங்களை சாப்பிடலாம். உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.சிறுதுநேரம் கழித்து உங்களுக்கு என்ன விருப்பமோ அதை சாப்பிடலாம். எனவே அவ்வப்போது நாம் பச்சை காய்கறிகளையும் புதிய பழங்களையும் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் நாம் அவற்றில் உள்ள சத்துக்களை தவற விட்டு விடுவோம்.

"உங்களுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று தெரிந்திருந்தால் நீங்கள் நோயினால் பாதிக்கப்படமாட்டீர்கள். உங்களுக்கு எப்படி பேச வேண்டும் என்று தெரிந்திருந்தால் நீங்கள் பூசலில் சிக்க மாட்டீர்கள்" என்று கன்னடத்தில் சொல்லப்படுகிறது.ஒருவருக்கு எப்படி பேச வேண்டும் என்று தெரிந்திருந்தால் அவர் எந்த பூசல்களிலும் சிக்க மாட்டார். எல்லா விதமான பூசல்களுக்கும் காரணம் நம்முடைய பேசும் முறையும் நாம் மற்றவர்களுக்கு விஷயங்களை தெரிவிக்கும் விதமுமே ஆகும். நாம் தெரிவிக்கும் விஷயம் சரியானதாக இருந்தாலும், நாம் அதை தெரிவுக்கும் விதம் முக்கியமானது. 

உங்களுடைய உள்நோக்கம் நல்லதே, ஆனால் அதை வாய் வழியாக வெளிப்படுத்த ஆரம்பிக்கும் போதே குண்டுகள் பொழிவதை போல இருந்தால் அது நல்லதல்ல. நான் உண்மையை தான் சொல்லுகிறேன், நான் நல்ல இதயம் கொண்டவன், நான் நல்ல நோக்கத்துடனே சொல்லுகிறேன் என்றெல்லாம் நீங்கள் கூறினாலும், குண்டுகள் பொழிவதை போல நீங்கள் அதைக் கூறினால் யாரும் அதை உங்களிடம் இருந்து எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதை திருப்பி தரவும் செய்வார்கள். அது அவ்வாறு இருக்கக் கூடாது. எனவே உங்கள் உணவின் மீது நீங்கள் கவனம்  செலுத்த வேண்டும். உபநிடதங்களில் உணவு பிரம்மா அல்லது தெய்வீகம் என்று சொல்லப்படுகிறது. எனவே நீங்கள் உணவையும் கடவுளாகவே கருதி அதற்குரிய அதிக முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். அடுத்தாற் போல், பிராணம் (உயிர்ச் சக்தி) என்பது பிரம்மா மற்றும் தெய்வீகம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, நீங்கள் பிராணனுக்கும் உங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் மனதின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உங்கள் மனதின் மீது கவனம் செலுத்தும் போது, உங்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவதில்லை என்று சொல்லப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான நடக்கும் பல குற்றங்களுக்கு காரணம் மது அருந்துதலே. இயற்கையில் இந்த நாட்டில் உள்ள அனைத்து ஆண்களுமே ஒழுக்கமற்றவர்கள், வன்முறையாளர்கள், கொடூரமானவர்கள் அல்ல. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் வன்முறையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது. நாம் அதை எதிர்த்து குரல் கொடுத்தால் மதுபானக் கடைகள் அனைத்தும் விரைவில் மூடப்பட்டு விடும். மது பானக் கடைகள் திறந்திருக்கும் வரை பெண்களுக்கான வன்முறைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். உயர்ந்த அன்புள்ளம் கொண்ட ஆண்கள் கூட மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு வரும்போது மனைவியை அடிக்கின்றனர். மறு நாள் காலை மதுபானத்தின் மயக்க வெறி குறைந்த பிறகு அவர்கள் குற்றத்தை உணர்ந்து அவர்களுடைய நடத்தைக்காக மன்னிப்பு கேட்பார்கள்.

ஒரு பெண் அன்புள்ளம் கொண்டவளாக ஏற்றுக் கொள்பவளாக இருப்பதால் அவள் அவரை மன்னிக்கிறாள். நான் இங்கு வேலை செய்யும் பல பெண்களின் முகங்களில் காயங்களைப் பார்த்திருக்கிறேன்.நான் அவர்களிடம் கேட்கும் போது "குருதேவ்! என் கணவர் என்னை அடித்து விட்டார். அவர் கெட்டவர் அல்ல. இரவில் குடித்துவிட்டு வரும் போது என்னை அடித்து விடுகிறார், ஆனால் காலையில் அவரும் மனம் வருந்தி அவருடைய நடத்தைக்காக மன்னிப்பு கேட்பார்" என்று கூறுவார்கள். எனவே ஒரு ஆண் குடிக்கும் வரை நல்லவனாகவும் குடிமயக்கம் இல்லாதவனாகவும் இருக்கிறான். ஆனால் குடித்த உடனே அவன் கையில் இருப்பதை பற்றி ஜாக்கிரதையாக இல்லாமல் அதை மனைவி மேல் எரிந்து அவளை அடிக்கவும் செய்கிறான்.ஒரு ஆண் பாதிக்கப்பட்டிருப்பது போலவே அவன் மனைவியும் பாதிக்கப்படுகிறாள்.

உங்களால் நம்பவே முடியாது! நமது நாட்டில் இரண்டே வருடங்களில் மது பான விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அன்றிலிருந்து வன்முறை சம்பவங்களும் குற்றங்களும் அதே அளவில் அதிகரித்துள்ளன. புது டில்லியில் நிர்பயா என்ற பெண் கற்பழிப்பு பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் குற்றம் சட்ட்டப்பட்ட ஐவருமே முழுவதுமாக குடித்திருந்தனர். நானே அங்கு சென்று பாதிக்கப்பட்ட பெண், அவருடைய தாய் மேலும் அந்த குற்றம் சாட்டப்பட்டவரையும் சந்தித்தேன். நான் எப்போதெல்லாம் பெண்களுக்கு எதிராக குற்றம் இழைத்தவர்களை சந்திக்க சென்றோனோ அப்போதெல்லாம் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக " நான் குடித்திருந்தேன், என்னுடைய நினைவிலேயே இல்லை" என்னும் பதிலை கூறுவர்.     

பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களில் 99 சதவீதம் பேர் மதுபானம் அல்லது பிற போதை பொருள்களின் தாக்கத்திலேயே அவ்வாறு செய்கின்றனர். ஒருவன் தான் என்ன செய்கின்றோம் என்ற விழிப்புணர்வு இல்லாமல் அந்த செயலை செய்யும் போது, நீங்கள் அவன் மீது பழி செலுத்தவும் முடியாது அவனை  ஒரு குற்றவாளியாக கருதவும் இயலாது. உண்மையில் நாம் யார் மீது பழி கூறுவது?  எந்த ஒரு பொருள் ஒருவனுடைய விழிப்புணர்வை களவாடியதோ அல்லது மங்கச் செய்ததோ அதைத் தான் நாம் இத்தகைய குற்றங்களுக்கு பழி சொல்ல வேண்டும். 

யுனிசெப் நிறுவனம், அனைத்து பக்தர்கள், அனைத்து ஆன்மிக தலைவர்கள், எங்கும் உள்ள ஆண்கள் பெண்கள் ஆகிய அனைவரும் இணைந்து இந்த மதுபானம் என்ற தீங்கிற்கு எதிராக திரள வேண்டும் என்று நான் முறையீடு செய்யப் போகிறேன். நாம் அனைவரும் மதுபானக் கடைகளை மூடச் செய்வதற்காக நம்முடைய குரலை எழுப்ப வேண்டும். ஒரு சிறிய கிராமமோ, நகரமோ அல்லது ஒரு திருமண விழாவோ, நீங்கள் அனைவரும் மதுபானம் அருந்துதல் மற்றும் விற்பனையை நிறுத்த செய்யும் உறுதிமொழியை எடுக்க வேண்டும். அதன் பிறகு பெண்கள் எங்கும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். நமது குழந்தைகளையும் நாம்  ஊட்டச்சத்தின்மையில் இருந்து காப்பாற்றலாம். இது ஒரு உறுதி மொழி. நாம் அனைவரும் இந்த உறுதி மொழியை எடுக்க வேண்டும். மழை பெய்யும் போது குடையை திறப்பதை போல, நமது நாட்டிற்கு வந்திருக்கும் இந்த கொடூரமான கால நிலைக்கு எதிராக நாம் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.



கே: குருதேவ்! காய் கறிகளுடன் ரொட்டி, சான்ட்விச் அல்லது நூடுல்ஸ் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாமா?



குருதேவ்: அவைகளுடன் காய் கறிகளும் சேர்த்துக் கொள்ளுவதால் பரவாயில்லை. காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவில் ஒரு குறிப்பிட்ட உணவு வகைகள் தான் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் மிகவும் கடுமையாக இருக்கவேண்டும் என்று நான் கூறவில்லை. நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது குறித்து கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்பது தான் மிக முக்கியமானது.

மைதா மாவை மிக குறைந்த அளவில் உபயோகிக்க வேண்டும். இந்தியாவில், முந்தைய காலங்களில் மைதா மாவு உபயோகிக்கப்பட்டதே இல்லை. உணவு வகைகள் செய்ய எப்போதுமே முழு கோதுமையை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். நாம் அந்த கோதுமை உமியையும் நம்முடைய உணவில் சேர்த்து வந்தோம். அதைத் தான் நாம் இப்போது செய்ய வேண்டும்.