எவ்வாறு வழிபட வேண்டும்?

டிசம்பர் 25, 2013

பூன், நார்த்  கரோலினா 

டேவிட் என்ற பெயர் குறிப்பிடப்பட்ட போது அந்த பெயருக்கென்று ஆங்கிலத்திலோ அல்லது ஹெப்ரூவிலோ ஏதேனும் அர்த்தம் இருக்குமோ என்று தோன்றியது.  டேவிட்  என்பதன் பொருள் என்ன? (பார்வையாளர்கள் ஞானத்தின் அரசன் என்று சொல்கின்றனர்). சமஸ்கிருதத்தில் டேவிட், அதாவது தேவ்-வித், என்றால் இறைவனை அறிந்த ஒருவன் என்று பொருள். தேவ் என்றால் இறைவன் வித் என்றால் அறிந்து கொள்வது.

இறைவனுக்கு வடிவம் இல்லை. ஆனால் அவன் எல்லா வடிவங்களிலும் இருக்கின்றான். இறைவனுக்கு கண்கள் இல்லை, ஆனால் அவன் எல்லா நேரமும் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். இறைவனுக்கு காதுகள் இல்லை, ஆனால் உங்களுக்கு ஒரு எண்ணம் உண்டாவதற்கு முன்னரே அவன் உங்களை கவனிக்கின்றான்.அவன் குறிப்பிட்ட மொழியில் பேச வேண்டியதில்லை. நேரடியாகத் தொடர்பு கொள்ளக் கூடியவன்.  

நீங்கள் ஏதேனும் ஞானத்தினை கேட்கும் போது உங்களது மூளை அதனை  முறைப்படுத்திய பிறகே நீங்கள் அதைப் புரிந்து கொள்கின்றீர்கள். முதலில் வார்த்தைகள் உங்கள் காதுகளுக்குள் சென்று உணரப்பட்டு பிறகு புரிந்து கொள்ளப்படுகின்றன. இறைவன் இவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை.  இறைவனால் பேச்சு என்ற ஒன்று இல்லாமலேய உங்களுக்கு புரிய வைக்க முடியும். இது மிகவும் அற்புதமானது இல்லையா?

சமஸ்கிருதத்தில் "விருபாக்ஷா" என்று அழகான பெயர் ஒன்று உள்ளது.  கண்களில்லாத ஒரு வடிவம் என்பது அதன் பொருள் ஆகும். ஆம். இறைவன் கண்களில்லாமலேயே அனைவரையும் பார்க்கின்றான். 'அக்ஷா' என்றால் கண்கள்.  'விருபா' என்றால் வடிவமற்றது. வடிவமற்ற கண்கள் என்பதே விழிப்புணர்வு.  நீங்கள் கண்களை மூடிக்கொள்ளும் போது என்ன உணர்கின்றீர்கள்?  விழிப்புணர்வை உணர்கின்றீர்கள் இல்லையா? அந்த அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலே விருபாக்ஷா; அதுவே சிவதத்துவம்; அதுவே தெய்வீகம்.  

'சிவா' என்பதற்கு கண்கள் இல்லாமலேயே அனைத்தையும் காண்கின்றவன் என்று பொருள். வடிவமற்றவன், ஆனால் ஒவ்வொரு வடிவத்திலும் இருப்பவன்.  அவனில்லாமல் ஒரு வடிவமும் இருக்க முடியாது. அற்புதம் இல்லையா?  

இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒரு செய்தியை அளிக்கின்றன.  கிறிஸ்துமஸ் மரம் ,"கிறிஸ்துமஸ் மரத்தினை போன்று எப்போதும் பசுமையாக இருங்கள்" என்ற செய்தியை சொல்கின்றது. நம் வாழ்க்கை கிறிஸ்துமஸ் மரம் போன்று ஒருமித்த மனநிலையோடு இருக்க வேண்டும். கோடைகாலமோ, பனிக் காலமோ,இலையுதிர் காலமோ, இளவேனிற் காலமோ எதுவாக இருந்தாலும் கிறிஸ்துமஸ் மரம் ஒரே மாதிரி இருக்கும். நீங்களும் அதே போல் வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களிலும் உங்களை பசுமையாக வைத்திருங்கள்.  

கிருஸ்த்துமஸ் மரம் அனைவருக்கும் பரிசுப் பொருட்களை தாங்கி நிற்கின்றது.  அதே போல் வாழ்வில் உங்களுக்குக் கொடுக்கப்பட்டவை அனைத்தும் மற்றவர்களுக்காக உங்களிடம் அளிக்கப்பட்டவை. நீங்கள் வைத்திருக்கும் பரிசுப்பொருட்கள் எல்லாம் உலகம் முழுவதிற்குமானது. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள திறமைகள் எல்லாம் மற்றவர்களுக்கு உதவி புரிவதற்காகவே ஆகும். எனவே சேவை செய்யுங்கள். புன்னகையோடிருங்கள்; வாழ்க்கையை கொண்டாடுங்கள். இதுவே இயேசு கிறிஸ்துவின் செய்தி ஆகும். 

உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றி எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள அன்பை உணருங்கள்.  
நீங்கள் இரண்டு நிலைகளில் இருக்கலாம். ஒரு நிலையில் நீங்கள் ஞானத்தை   வாழ்வில் கடைபிடிக்கக் கூடியவராக இருக்கலாம். ஞானத்தை உங்கள் வாழ்வில் கடைபிடிக்க இயலும் போது அது குறித்து நீங்கள் தற்பெருமை கொள்ள வேண்டாம்.  அவ்வாறு கடைப்பிடித்து வாழ நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஞானம் நிறைந்தவராக உங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளும் போது அது உங்களுக்குள் தான் என்னும் அகம்பாவத்தையோ ஆணவத்தையோ ஏற்படுத்திவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தன்னடக்கம் மிகவும்  அவசியமானது. நீங்கள் சிறந்த பேச்சாளராகவோ அல்லது ஒரு அமைப்பாளராகவோ  அல்லது பல வழிகளில் சிறந்தவராகவோ இருக்கலாம். ஆனால் மற்றவரையும் விட சிறந்தவராக விளங்கச் செய்யும் அந்த ஞானம் உங்களை கடினமானவராகவும், விரைப்பானவராகவும், திமிர் பிடித்தவராகவும் மாற்றிவிட அனுமதிக்காதீர்கள்.  


அவ்வாறுல்லாமல் இரண்டாவது நிலையில் நீங்கள் மிகவும் பலவீனமானவராகவும்   தன்னம்பிக்கை குறைந்தவராகவும் பழையனவற்றில் சிக்கி அல்லல் படுபவராகவும்  ஆதரவு அற்றவராகவும் உணர்ந்தால் பிரார்த்தனை செய்யுங்கள்.


"இறைவா! என்னால் இயலவில்லை. இதிலிருந்து விடுபட உன்னால் மட்டுமே உதவ முடியும்" என்று வழிபடுங்கள். 

ஞானம் பெற்றிருக்கும் போது அடக்கமும், நன்றியுணர்வும் கொண்டிருக்க வேண்டும்.  அது இல்லாத போது அதன் வலியை உணர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.  இந்த இரண்டு நிலைகள் தவிர மூன்றாவதாக வேறெதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இருந்தால் சொல்லுங்கள் நானும் அறிய விரும்புகின்றேன். எனவே, பலவீனமாக உணரும் போது அதன் வலியை உணர்ந்து இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள். ஞானத்தினால் வலிமை மிக்கவராக உணரும் போது நன்றி உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். ஞானம் பன்மடங்கு பெருகி வரும். வாழ்க்கை இந்த   இரண்டு நிலைகளுக்கு இடையே ஆடும் ஊஞ்சல் போன்றது. அந்த ஊஞ்சல் ஆடுவது நிற்கும் போது நீங்கள் வாழ்வில் விடுதலை அடைந்துவிட்டீர்கள் என்று பொருள். "இனி இங்கும் அங்கும் ஆடும் ஊஞ்சல் நிலை இல்லை. நான் விடுதலை அடைந்து விட்டேன்" என்று 
நீங்கள் சொல்லிக் கொள்ளலாம். உங்களுக்கு யாரும் இதற்கான சான்றிதழ் வழங்கத் தேவையில்லை.       

பலவீனமான ஆதரவற்ற ஒவ்வொரு நொடியும் உங்களை பிரார்த்தனையோடு வழிநடத்தி செல்கின்றது. வழிபாடு உங்களை எதிர்மறை அலைகளிலிருந்து காக்கின்றது. மன அழுத்தத்தில் அமிழ்ந்து விடாமல் தடுக்கின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் நீங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் போதெல்லாம் மன அழுத்தம்  உண்டாகின்றது. இல்லையா? நீங்கள் எப்போது மன அழுத்தம் அடைகின்றீர்கள்? ஞானம் அறிந்திருந்த போதிலும் அதை வாழ்வில் கடைபிடிக்க முடியாத போது நீங்கள் மன அழுத்தம் கொள்கின்றீர்கள். மனம் தளராதீர்கள்.  பிரார்த்தனை செய்யுங்கள். இயேசு கிறிஸ்துவின் செய்தி முழுவதுமே இதுதான்.  வழிபாட்டு நிலையில் இருங்கள். வழிபாடு செய்வது/எப்படி? இயேசு கிறிஸ்து வழிபாடு செய்யும் வழியை நமக்குக் காட்டியுள்ளார். 

அவர் சிலுவையில் அறையப்பட்ட இறுதி நேரத்தில் கூட பிரார்த்தனை செய்தார்.  அவர் ஆதரவற்றவராக உணர்ந்த அந்த நிலையில் "பரமபிதாவே! நீங்களும்  என்னை கைவிட்டு விட்டீர்களா? "என்று சொன்னார். இறைவன் கைவிட்டு விட்டதாக உணர்ந்த அந்நிலை உடனே பிரார்த்தனையாக மாறியது. "இறைவா! அவர்களை மன்னியுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை" என்றார். சீடர்கள் அனைவரும் விட்டுச் செற்றுவிட்ட ஒரு சம்பவம். அந்த நேரம் அவர் எவ்வளவு வேதனையும், வலியும் அடைந்திருப்பார் என்று பாருங்கள். ஆனால் அந்த ஆதரவற்ற நிலை உடனே பிரார்த்தனையாக மாறியது. ஆகவே இந்த இரண்டு சூழ்நிலைகளையும் நினைவில் கொள்ளுங்கள். வலிமையாக உணரும் போது நன்றியுணர்வோடு இருங்கள், பலவீனமாக உணரும் போது வழிபாட்டு நிலையில்  இருங்கள். கோபம் கொள்ள வேண்டாம்.  

நீங்கள் பலவானாக உணரும் போது கோபம் கொள்வதில்லை. பலவீனமாகவும் ஆதரவற்று இருக்கும் போது தான் கோபம் அடைகின்றீர்கள். விரக்தியடைகின்றீர்கள்  உங்களுக்கு எங்கே செல்வது என்ன செய்வது என்று தெரியவில்லை. உங்களை நீங்களே அறைந்து கொள்ள வேண்டும் போல் தோன்றுகின்றது. இதுவே நீங்கள் பிரார்த்தனையில் கரையக்கூடிய நேரம்.
உங்கள் வாழ்வில் கோபமும் வருத்தமும் இல்லாமல் அதிக ஆற்றலுடன் இருந்த நாட்களை சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள். யாராவது ஏதேனும் தீங்கு உங்களுக்குச் செய்தால்,'' இது ஒன்றும் இல்லை. என்னால் இதை சமாளிக்க முடியும். இது கால் தூசு போன்றது. நான் இதைப் பற்றி கவலைப்படவில்லை" என்று உணருகின்றீர்கள்.

ஆனால் நீங்கள் கவலையுடனும், ஆதரவற்று பலவீனமாக இருக்கும் போது  கோபம், உள்ளக்குழப்பம் இவற்றால் பீடிக்கப்பட்டு தலையை உடைத்துக் கொள்ளும் அளவுக்குச் செல்லுகின்றீர்கள். அழுகின்றீர்கள். உங்களது பலவீனமான நேரத்தில் இத்தகைய தீவிர  உணர்ச்சிகள் தோன்றுகின்றன. இனிமேல் எதுவுமே செய்ய முடியாது என்று நீங்கள் உணரும் நேரம் பிரார்த்தனை செய்து கொள்ளுவதற்கு ஆற்றல் மிகுந்த நேரம். அப்ரார்த்தனையில் என்ன அடங்கியிருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியாது. பிரார்த்தனை உங்களுக்கு முழு ஆற்றலை அளிக்கின்றது. அது  ஒரு சுழற்சியைப் பூர்த்தி செய்கின்றது. பிரார்த்தனை செய்பவரும், பிரார்த்தனை செய்யப்படுபவரும் அப்ரார்த்தனையில் ஒன்றாக ஆகின்றார்கள். அது எல்லாவற்றையும் மாற்றி விடுகின்றது. விழிப்புணர்வின் ஒரு மிக அற்புதமான இயல் நிகழ்வு. மிகுந்த சுவாரஸ்யமானது.  

ஏசுநாதர் இந்த இரு நிலைகளையும் சந்தித்திருக்கின்றார். திருக்கோயிலிலிருந்து   வணிகர்களை விரட்டியபோது முழு ஆற்றலுடன் இருந்தார். ஞானத்தை அளித்த போதும் முழு ஆற்றலுடன் இருந்தார். அதே சமயம், தான் செய்ய விழைந்ததை செய்ய முடியாமல் போனபொழுது முற்றிலும் ஆதரவற்றவராகவும், பலவீனமானவராகவும் இருந்தார். சமுதாயத்தை அவரால் விரும்பியபடி மாற்ற இயலவில்லை. அவர் தாம் தெரிவிக்க விழைந்தவற்றை மக்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை. பல வகையான வழிகளில், கதைகள் மூலம் தெரிவித்தாலும், மக்கள் புரிந்து கொள்ளவில்லை. 

நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்து ஒரு முக்கிய பாடத்தை கற்றுக்கொடுக்கும் போது  ''நான் மூக்கினால் மூச்சு விட வேண்டுமா அல்லது வாய் மற்றும் காது வழியாக சுவாசிக்க வேண்டுமா'' என்று கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நீங்கள் "அட கடவுளே! மூச்சுப் பயிற்சிகள் இத்தனை நீண்ட காலம் கற்றுக் கொடுத்த பின்னும் நாக்கு எங்கிருக்க வேண்டும் என்று கேட்கின்றாயே?" என்றே கூறுவீர்கள்.

இது போன்ற ஒரு சூழ்நிலைதான் யேசுநாதருக்கும் ஏற்பட்டது. அவரது நெருங்கிய சீடர்கள் வெகு காலத்திற்கு அவரை சந்தேகித்துக் கொண்டே இருந்தார்கள். புனித தாமஸ் அவர்களில் ஒருவர் ஆவார். நீங்கள் ஒருவரிடம் பற்பல முறைகள், அதோ சமையல் அறை உள்ளது. அங்கு உணவு தயாராக இருக்கின்றது என்று கூறியும் நம்பவில்லை என்றால், நீயே சென்று  பார்த்துக் கொள். என்றே கூறுவீர்கள். அது போன்றே ஏசுநாதரும், என்னை நீங்கள் நம்பவில்லை என்றால், வேறு யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார். அதுவே புனித தாமசுக்கு நிகழ்ந்தது. சுநாதர், "நீங்கள் இந்தியாவிற்கே சென்று நேரிடையாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார். ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டவுடன் தாமஸ் இந்தியாவிற்கு சென்றார். அங்கேயே இறந்தார்.  உங்களுக்குத் தெரியுமா? தாமஸ் இந்தியாவிற்குச் சென்றதும் கேரளாவை அடைந்தார். தன்னுடைய சொந்தக் கோயில் ஒன்றை ஏற்படுத்தினார். அது புனித தாமஸ் தேவாலயம் என்று அழைக்கப்படுகின்றது. மார் தோமா என்று அழைக்கப் படுகின்றது.இன்றும் அவர்கள் காவியுடை அணிகின்றார்கள். வெள்ளை அங்கிகளை பயன்படுத்துவதில்லை.  அங்குள்ள பிஷப் காவி அங்கியும்,ருத்ராக்ஷ மாலையும் அணிகின்றார். ஹிந்து சன்யாசிகளின் வழிமுறைகள் பலவற்றை பின்பற்றுகின்றனர்.  கத்தோலிக்கர்களுடன் சம்பந்தப் பட்டவர்கள் அல்லர். தங்களுக்கென்று மார் தோமா கிறிஸ்தவர்கள் என்னும் ஒரு தனி அடையாளத்தை கொண்டுள்ளனர்.  கி பி 62 ஆம் ஆண்டிலிருந்து இத்தேவாலயங்கள் இருந்து வருகின்றன. 
சென்னையிலுள்ள மயிலாப்பூரில் புனித தாமஸ் இறந்தார். இங்கு தான் ஏசுநாதர் 12 ஆண்டுகள் வேதாந்த, மற்றும் உபநிஷதங்களைப் பயின்றார். பின்னர் புனித தாமஸ் அவற்றைப் பயின்று பல யோகிகளைச் சந்தித்தார். இன்றும் அத்தேவாலயமும், அங்கு அவரது உடலும் உள்ளன. ஒரு சிறு குன்றின் மீது ஏறி அங்கமர்ந்து தியானித்து ''நானும், எனது தந்தையும் ஒருவரே! அதுதான் நான்! ஸோ ஹம்! அதுதான் ஸோ ஹம் என்பது ஆகும். நானும் என் தந்தையும் ஒருவரே!  இந்த ஞானத்தை அங்கு அவர் அடைந்தார்.

உண்மையில் ஏசுநாதர் கிறிஸ்தமஸ் தினத்தன்று பிறக்கவில்லை. எத்தனை பேருக்கு இது தெரியாது? கிறிஸ்துமஸ் தினம் ஏசுநாதரின் பிறந்த நாள் அன்று.  மார்ச் மாதம் தான் பிறந்தார். அவரது ராசி மீனம். அதனால் தான் கிறிஸ்தவ சமய சின்னம் இரு மீன்கள். தூய கருத்தரிப்பு ஜூன் மாதம் நிகழ்ந்தது. ஏசுநாதர் ஆறு மாதங்களில் பிறந்த குறைப்பிரசவக் குழந்தையல்ல.  
உண்மையில், புத்தரைப் போன்று ஏசுவும் ஏறக்குறைய ஒரே சமயத்தில், பிறந்து மற்றும் உயிர்த்தெழுந்தவர் தாம். புத்தர் ஒரே நாளில் பிறந்து, ஞானம் பெற்று மறைந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த தினம் தான் புத்த பூர்ணிமா.  ஏசுவிற்கும் அதே போன்று தான் நிகழ்ந்தது. மார்ச் மாதத்தில் பிறந்து, ஏறக்குறைய ஒரு வார காலத்தில் சிலுவையில் அறையப்பட்டார். இது மிகுந்த சுவாரஸ்யமானது. 

இது ஒரு தனி மனிதத்தன்மை அல்ல, ஒரு செய்தி, ஞானம் என்பது தான் முக்கியம் என்பதை 
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இன்று இங்கு இருக்கின்றோம், ஒரு நாள் மறைந்து விடுவோம், இவ்வுலகிற்கு என்ன செய்கின்றோம் என்பது தான் நிலைத்திருக்கும். எனவே, நாம் வீட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய செய்தி என்னவென்றால், இவ்வுலகில் நான் வாழ்ந்திருக்கும் வரை என்னன்ன நல்ல காரியங்கள் செய்து பயனுள்ளவனாக இருக்க முடியும் என்பது தான். இந்த ஒரு எண்ணம் வாரத்தில் ஒரு நாள் எழுந்தாலும் வாழ்கை நல்ல வி.த்தியாசமாக இருக்கும். இல்லையெனில் நமது நடைமுறை வாழ்விலுள்ள சிறு விஷயங்களில் மட்டுமே நமது மனம் ஆழ்ந்திருக்கும்.

நடைமுறை வாழ்வு என்பது நம்மை தின்று விடும். ஏதேனும் ஒரு காலகட்டத்தில் நாம் விழித்தெழ வேண்டும். இவ்வுலகிற்கு நான் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கின்றது. ஏதாவது நல்ல காரியங்கள் நான் செய்யவேண்டும்.அப்போது என் வாழ்கை ரசமுள்ளதாக இருக்கும் என்னும் அவ்விழிப்புணர்வு ஒரு சில மணி நேரங்கள் இருந்தாலும் போதும். அவ்வாறன்றி  நடைமுறை வாழ்வில் நீங்கள் முழுவதும் மூழ்கி விட்டால் வாழ்கை பாழாகி விடும். நடைமுறை என்பதும் தேவையானது தான். அது கூடாது என்று நான் கூற வில்லை. நடைமுறை ஒழுங்கு இல்லாமல் வாழ முடியாது. தேவை தான் ஆனால் அதிலேயே 100% மூழ்கி விடாதீர்கள். மூக்காவது மூழ்காமல் காத்துக் கொள்ளுங்கள்! 

இத்தகைய கொண்டாட்டங்கள் உங்களது நடைமுறை வாழ்வில் முற்றிலும் மூழ்கி விடாமல் மூக்கையாவது வெளியே வைத்துக் கொள்ளுமாறு கூறுகின்றன.   துரதிர்ஷ்டவசமாக கொண்டாட்டங்களும் நடைமுறைப் பழக்கமாகி விட்டன.  அவ்வப்போது விழித்தெழுந்து, நடைமுறை பழக்கங்கள் சிறிய விஷயங்கள் ஆகியவற்றை விட வாழ்கை மிக விலைமதிப்பானது. மக்களுக்கு பயனுள்ளவனாக இருந்து மகிழ்ச்சியைப் பரப்புகின்றேன் என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

இச்செய்தியைத் தான் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.என்ன கூறுகின்றீர்கள்?

இந்த இரண்டு செய்திகளை நினைவில் கொள்ளுகின்றீர்களா? நான் ஆதரவ்ற்றவானகவும் பலமற்றவனாகவும் இருக்கும் போது பிரார்த்தனை செய்வேன்.  பலமானவனாக இருக்கும் போது நன்றியுணர்வுடன் இருப்பேன்.    அதுவும் பிரார்த்தனைதான்.

வினா விடைகள்:

நான் கடவுள் என்று எவ்வாறு புரிந்து கொள்வது ?

குருதேவ்: நான் கடவுள், நான் கடவுள் என்று கூறிக் கொண்டே இருக்கக்கூடாது.  மக்கள் உங்களை மனநல மருத்துவ நிலையத்தில் சேர்த்து விடுவார்கள்! அது உண்மையில் அறிவிக்கப்பட வேண்டியதே இல்லை.உள் நிலையில் ஆழ்ந்து உணரப் பட வேண்டியது.

இறைமையைத் தவிர வேறு எதுவுமே கிடையாது. பரந்தவெளியில் காற்றையும் இடத்தையும் தவிர வேறேதேனும் இருக்கின்றதா என்ன? வெட்ட வெளியில் காற்று இருக்கின்றது, நீங்களும் இருக்கின்றீர்கள். நான் வெற்றிடத்தில் இருக்கின்றேன், என்னுடைய உடலில் உள்ள ஒவ்வொரு திசுவும் வெற்றிடத்தில் இருக்கின்றது.  இதுதான் உணரவேண்டியது. ஒரே ஒன்றைத் தவிர வேறெதுவுமே இல்லை என்று அறிந்து கொள்ளுங்கள். அந்த ஒன்று என்னவென்றால் நான் இருக்கின்றேன் என்பது.  ஒவ்வொருவரும் இருப்பது. இதை உணர்ந்து அறிவதற்கு இதயம் மலர வேண்டும்.  அது பாடும் போது ஏற்படுகின்றது. அதனால் தான் நீங்கள் பாடும்போதோ அல்லது தியானத்தில் கரைந்து விடும்போதோ, பேரானந்தம் ஏற்படுகின்றது. அப்பேரானந்தம் என்பது இறைமையின் இயல்பு.

உண்மையுடன் நீங்கள் இருக்கும்போது நீங்கள் இறைவனுடன் இருக்கின்றீர்கள். பேரானந்த நிலையில் இருக்கும் போது நீங்கள் இறைமையுனுள்ளே இருக்கின்றீர்கள்.