புண்பட்டவர்களை நோக்கும் நான்கு வழிகள்

நவம்பர் 26, 2013  - பெங்களூரு, இந்தியா



கே: எதிர்பார்ப்பே இல்லாமல் எப்படி அன்பாய் இருந்து கொண்டிருப்பது? அன்பு செய்வதில், எதிர்பார்ப்புகள் எழுகின்றன, அது நிறைவேறவில்லை என்றால் காயப்படுத்துகிறது.

குருதேவ்: ஆம், இது போன்ற குட்டிக்கரண சாகசங்களை நீங்கள் கடந்து சென்றாக வேண்டும். உங்களுக்கு ஞானமிருந்தால், இதைக் கற்றுக்கொள்ள இந்த அவஸ்தைகளை படவேண்டிய அவசியம் இல்லை. ஞானமில்லாத போது, இந்த வலிகளை நீங்கள் கடந்தாக வேண்டும், ஆனால் கொஞ்ச காலத்தில் இதிலிருந்து மீண்டு விடுவீர்கள், கவலை வேண்டாம். ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒரு பெரிய அர்த்தம் இருக்க வேண்டும் என்பதின் காரணம் இது தான். ஒரு பெரிய அர்த்தம் இருக்கும் போது, இப்படிப்பட்ட சின்னஞ்சிறு விஷயங்கள் உங்களை உண்மையில் பாதிப்பதில்லை. சமுத்திரத்தின் மேலே எழும் அலைகளைப் போன்றது, அவை எழும் விழும்; ஏரியின் பரப்பில் ஏற்படும் நீர் வளையங்களைப் போல, காற்றடிக்கும் போது அவை எழும், காற்றடிக்காத போது அந்த வளையங்கள் இல்லை.

எனவே, இன்னும் பெரிய அர்த்தம் கொள்ளுங்கள். அதாவது ஆத்மஞானம் (சுயத்தைப் பற்றிய அறிவு; எதுவும் என்னை அசைக்க முடியாது, உணர்சிகளை விட நான் மிகப் பெரியவன், என்னை சுற்றியுள்ள உலகத்தை விட மக்களை விட நான் மிகப் பெரியவன். அவர்களுடைய புகழுரைகளோ, ஏச்சுக்களோ எனக்குப் பொருட்டல்ல. இவை எல்லாவற்றையும் விட நான் மிகப் பெரியவன்! இந்த விழிப்புணர்வு நம்மை மேலே உயர்த்துகிறது, பிறகு ஒருவர் உணர்சிகளின் சமுத்திரத்தில் மூழ்குவதில்லை, காயமடைவதில்லை.புண்பட்டவர்களை நான்கு விதமாகப் பார்க்கலாம்.

உங்களை புண்படுத்தியவர் வலி வயப்பட்டிருக்கிறார். அவர்களுக்கு தழும்புகள் உள்ளது, அவர்கள் மகிழ்ச்சியின்றி பரிதாபமான நிலையில் உள்ளார்கள். அவர்களிடம் உள்ளதை  தான் அவர்களால் பகிர்ந்து கொள்ள முடியும். அவர்கள் காயம் பட்டிருக்கிறார்கள், அந்த காயத்தைத் தான் அவர்களால் பகிர்ந்து கொள்ள முடியும். உங்களை காயப்படுத்துபவர்களிடம், உங்களுக்கு வலி தருபவர்களிடம், அவர்கள் வேண்டுமென்றே அதை உங்களுக்கு செய்வதாக நினைத்தாலும், உண்மையில் அவர்களிடம் மகிழ்ச்சி இல்லை என்பதே காரணம். அவர்களிடம் அமைதி இல்லை. வலி கொண்டிருக்கிறார்கள், காயம் பட்டிருக்கிறார்கள், எனவே அவர்கள் உங்களை காயப்படுத்துகிறார்கள். எனவே காயம் பட்டவருக்கு என்ன தேவை? பரிவு. எனவே உங்களை காயப்படுதுபவர்களிடம் நீங்கள் பரிவாய் இருக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் அடிபட்டு புண்பட்டிருக்கிறார்கள். இது ஒன்று.

உங்களைக் காயப்படுத்துபவர் அறியாதவராயிருக்கிறார். அவர்களுக்கு வாழ்கை பற்றிய விசாலமான பார்வை இல்லை. அவர்களுக்கு தம்மைப் பற்றியே தெரியவில்லை மற்றும் தாம் என்ன செய்கிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் அறியாதவர்களாகவும் அகங்காரம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை கண்டு நீங்கள் வருத்தம் கொள்ள மட்டுமே முடியும், என்றாவது ஒரு நாள் அவர்கள் புத்திசாலியாவார்கள்  என்று நம்பிக்கை வைக்கலாம். தம்முடைய செயல்கள் மற்றவர்களை காயப்படுத்துகிறது என்று தெரியாமல் இருக்கிறார்கள், அவர்கள் இந்த உணர்வுகளை பெற வேண்டும் என்று பிரார்த்தித்து கொள்ளுங்கள்.

இது வினைப் பயன். நீங்கள் புண்பட வேண்டியிருப்பது உங்கள் வினைப் பயன், இவரில்லாவிட்டால் மற்றொருவர் இதை உங்களுக்குச் செய்திருப்பார். நாம் முற்காலத்தில் யாரையாவது காயப்படுதியிருப்போம், எனவே இயற்கை நமக்கு இப்போது அதை திருப்பித் தருகிறது. செய்த வினையின் பயன் தான் திரும்பக் கிடைக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்போது, நீங்கள் சாந்தமடைகிறீர்கள் அல்லவா?

உங்களை மேலும் உறுதியாக்க இது செய்யப்படுகிறது. நீங்கள் இன்னும் வலிமையாக வேண்டும் என்று இயற்கை இதை உங்களுக்கு அளிக்கிறது; உங்களிடம் உள்ள வலிமையையும் ஆற்றலையும் நீங்கள் கண்டு கொள்ள வேண்டும் என்ற நோக்கமே காரணம்.பந்தல் (துணி அல்லது தென்னங் கீற்றினால் ஆன தற்காலிக நிழற்கூடங்கள்)  கட்டும் போது, அதில் உள்ள மூங்கில் கம்பங்களை வேகமாய் அசைத்துப் பார்பார்கள். அதன் நோக்கம் அது உறுதியாய் இருக்கிறதா இல்லையா என்று பரிசோதிப்பதே. காயம் என்பதும் அதுவே தான், உங்களுக்குள் நீங்கள் சரியாக நிறுவப்பட்டிருக்கிறீர்களா இல்லையா, நீங்கள் ஞானத்திலிருக்கிறீர்களா இல்லையா என்று சரி பார்ப்பது.

ஒவ்வொரு காயமும் நீங்கள் உறுதியாய் இருக்கிறீர்களா இல்லையா என்று உங்களை அசைத்து பார்க்க முயல்கிறது. உங்கள் உறுதியை சோதனை செய்கிறது. இது உங்களை மேலும் உறுதியாக்க  தான். ஒரு அறிவாளி அல்லது யாரோ ஒரு புத்திசாலி உங்களை புண்படுத்துகிறார் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் நன்றியுணர்வு கொள்ள வேண்டும், ஏனென்றால் அதில் ஒரு நல்ல பொருள்  உள்ளது. நீங்கள் வலிமையாக வேண்டும் என்று விரும்புகிறார்கள். உங்களுடைய தாயார் உங்களை திட்டுகிறார் என்றால், ஒரு தீய நோக்கோடு அதைச் செய்யவில்லை. உங்கள் தந்தை உங்களைத் திட்டுகிறார் என்றால், ‘ஓ என் தந்தை என்னைக் காயப்படுத்துகிறார்! என் தாய் என்னைக் காயப்படுத்துகிறார்!’ என்று நீங்கள் கூற முடியாது.
உங்கள் பெற்றோர் உங்களை காயப்படுத்துவதில்லை; அவர்கள் உங்கள் மீதுள்ள கொண்டுள்ள அக்கறையினாலும் கவலையினாலும் அதைச் செய்கிறார்கள். அவர்கள் அன்பினாலும், தமக்குள்ள அளவான புரிதலினாலும் அதைச் செய்கிறார்கள் என்று நீங்கள் உணர வேண்டும்.

நீங்கள் காயமடையும் போது உணரும் இரண்டு முக்கியமான விஷயங்கள் – தகவல் தொடர்புக் குறைபாடு அல்லது புரிதல் குறைபாடு. காயமடைவதற்கு மற்றொரு காரணம் – தொடர்பில்லாத தற்காலிகமான விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படுவது. நிகழ்வுகள் எல்லாம் தற்காலிகமானவை, அவை எல்லாம் நகர்ந்துகொண்டே இருக்கிறது. எல்லாமும் மாறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவது தேவையில்லை, ‘ஒ அவன் இதை என்னிடம் சொன்னான், அவள் இதை என்னிடம் சொன்னாள்!’கன்னடத்தில் ஒரு பழமொழி உண்டு, ‘கடவுள் நாக்கில் எலும்பை வைக்கவில்லை; நாக்கு சுழல்கிறது, எல்லாத் திசைகளிலும் அது நகரும்.’ மக்களுடைய வாயிலிருந்து என்ன வார்த்தைகள் வருகிறது என்பதைக் கண்டுகொள்ளாதீர்கள்.

இன்றைய உலகில் இது ஒரு பெரும் பிரச்சினை. பல நோய்களுக்கும் முரண்பாடுகளுக்கும் மூல காரணம், நமக்கு வாயில் என்ன போடுவது என்று தெரியவில்லை, வாயிலிருந்து என்ன வர வேண்டும் என்பது தெரியவில்லை! மக்கள் எல்லாவிதமானவற்றையும் வாயில் அடைத்துக் கொள்கிறார்கள். இந்தச் சின்னஞ்சிறு துளையில் டன் டன்னாக (ஒரு டன் = நூறு கிலோ) உணவு உள்ளே செல்கிறது, வண்டி வண்டியாய் குப்பை வெளியே வருகிறது; இதுவே இந்த உலகின் துயரம். மறுபடி, கன்னடக் கவிஞர் ஒருவர் கூறினார், ‘மக்கள் கொள்ளும் எல்லா மகிழ்ச்சியும் வார்தைகளினால் மட்டுமே!’

விகடங்களும் சிரிப்புகளும் வார்த்தைகளால் நடக்கிறது, எல்லா முரண்பாடுகளும் வெறுப்புகளும் பேச்சினால்தான் ஏற்படுகிறது. பேச்சே உங்களை மகிழ்விக்கிறது, உங்களை சிரிக்க வைக்கிறது, அந்தப் பேச்சே சமூகத்தில் பிளவையும் மக்களிடையே வெறுப்பும் ஏற்படுத்துகிறது. எல்லாவிதமான செல்வமும் உங்களுக்கு உங்கள் பேச்சினால் கிடைக்கிறது. பேச்சே உலகில் உண்மையான பொக்கிஷம். எல்லாவிதமான காயங்களும் பேச்சினால்தான். சில வார்த்தைகள் வெளி வருகிறது, பிறகு யாரவது சொல்கிறார்கள், ‘ஓ, நான் காயப்பட்டுவிட்டேன்!’

இப்போது, உங்களை யாராவது உடல் ரீதியாக காயப்படுத்த முயன்றால், எச்சரிக்கையாய் இருந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளுங்கள். உங்களைக் காயப்படுத்த யாராவது வந்தால், உடனே நீங்கள் அவர் காலில் விழுந்துவிடுங்கள் என்று நான் சொல்லவில்லை. இல்லை, நீங்கள் புத்தியோடு இருந்து, உங்களை காத்துக் கொள்ளுங்கள்; குறிப்பாக சிறுமிகளும் பெண்களும், நீங்கள் தனியாக இங்கும் அங்கும் செல்லக் கூடாது.

பிரச்சினை என்னவென்றால், மதுவின் பயன்பாடு மூன்று மடங்கு அதிகரித்துவிட்டது, அதன் நேர் விகிதமாக உலகில் வன்முறையும் அதிகரித்துவிட்டது. ஆண்கள் தீயவர்கள் அல்ல, ஆனால் அவர்களை தீயவராக்குவது மது. இந்தியாவில் உள்ள ஆண்கள் அனைவரும் தீயவர்கள் என்று எண்ண வேண்டாம். பலப்பல தீய நிகழ்வுகள் பெண்களுக்கு நடந்துகொண்டிருக்கிறது; அது மதுவின் ஆதிக்கத்தால் தான். ஒருவர் செய்யும் ஒரே தீய செயல் மது அருந்துவது மட்டுமே. ஒருவர் மது அருந்திய நிலையில், அவர் அவராக இருப்பதில்லை, மற்றும் மது அருந்தியவருக்கு அருகில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதில்லை. பெண்கள் இந்த மது வியாபரங்களையெல்லாம் மூடுவதற்கு முயசிகள் எடுக்க வேண்டும்; மாறாக பெண்கள் கைகோர்த்து அவர்களும் சேர்ந்து மது அருந்துகிறார்கள்!

பெண்களின் பாதுகாப்புக்காகவே இந்தப் பெரிய விஷயம் நடந்தது; மதுவிற்குத் தடை விதிப்பதைப் பற்றியோ அல்லது மது தயாரிப்புக்குத் தடை விதிப்பதைப் பற்றியோ யாரும் பேசவில்லை. மதுவிற்குத் தடை இருக்கும் மாநிலங்களில், தடை இல்லா மாநிலங்களை விட குற்ற விகிதம் குறைவாக உள்ளது.
ஏன், கடவுள்கள் கூட மக்களை பாதுகாக்க ஆயுதங்கள் வைத்திருக்கின்றன. ஸ்ரீ இராமபிரான் வில் ஏந்தியிருக்கிறார், ஸ்ரீ கிருஷ்ணர் சக்ராயுதம் ஏந்தியிருக்கிறார். எனவே வெகுளியாக, எங்கும் சுற்றிவர வேண்டாம். குறிப்பாக தேர்தல் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் மதுவின் பயன்பாடு அதிகரித்து வருகிறது, மக்கள் அதிகம் குடிக்கிறார்கள், இந்த நாட்களில் எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும்.

கே: குருதேவ், நான் மிக அதிகமாய் விரும்புபவை எனக்குக் கிடைப்பதில்லை. என்னுடைய இந்த விருப்பம் ஒரு பலவீனமா?

குருதேவ்: பொறுமையாய் இருங்கள். நீங்கள் விரும்புவதை அடைய மூன்று விஷயங்கள் தேவை.
உண்மையான நோக்கம் – நீங்கள் விரும்புவது உங்களுக்கு ஒரு உண்மையான தேவையாக இருக்க வேண்டும். நம் விருப்பங்கள்  மாறிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அது தேவையாய் இருக்கும்போது அது கிடைக்கிறது. நம் விருப்பம் நமது தேவையாய் இருக்க வேண்டும்.

சுய முயற்சி – உங்கள் எந்த விருப்பத்தை அடையவும் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். சும்மா உட்கார்ந்துகொண்டு, ‘எனக்கு இது வேண்டும், எனக்கு இது வேண்டும்!’ என்று ஆசைப்பட்டுக் கொண்டே இருக்க முடியாது. அதற்காக நீங்கள் முயற்சி எடுத்தீர்களா? உங்கள் விருப்பம் தேவையாக மாறியதா? அதற்காக நீங்கள் உழைத்தீர்களா? உங்களுடைய 100% பங்களிப்பைச் செய்தீர்களா? இது அவசியம்.
நேரம் அல்லது வினைப் பயன் – அதற்கான வினைப் பயன் இருந்தால், நேரம் சரியாக இருந்தால், 

உங்களுக்குக் கிடைக்கும்! இந்த இருண்ட இரவில் நிலவைக் காண விருப்பம் கொள்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் எவ்வளவு முனைந்தாலும் எப்படி நிலவைப் பார்க்க முடியும்? முழு நிலவைப் பார்க்க நான் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும். அமாவாசையன்று முழு நிலவைப் பார்க்க விழைந்தால் நீங்கள் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும்.மாதுளை கன்றை நட்டு வைத்துவிட்டு, ‘இல்லை, எனக்கு இப்போதே பழம் வேண்டும்!’ என்று சொன்னால்? நீங்கள் மூன்று வருடம் காத்திருக்க வேண்டும் அல்லவா! மாதுளை மரம் இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலத்திற்கு பிறகே பழம் தர ஆரம்பிக்கும். எனவே காலம் அல்லது வினைப் பயன் ஒரு காரணி.

கே: வடிவம் அற்றதை அடைய நாம் ஏன் வடிவு உள்ளதை அன்பு செய்ய வேண்டும்? இந்தக் கொள்கை முழுதும், உண்மையைத் திரித்துவிட்டு மக்களுக்கு அவர்களுடைய பாதையைக் காட்டாமல் ஒரு தவறான கருத்தை அல்லவா உருவாக்கி இருக்கிறது?

குருதேவ்: உணர்ச்சிகள் வடிவத்தை நோக்கியே பாய்கிறது. வடிவம் அற்றதின் மீது உணர்ச்சிகள் இருக்காது. பாருங்கள், நீங்கள் என்னிடம் மட்டுமே பேச முடியும், எனக்கு பக்கத்தில் உள்ள வெறுமையான இடதினோடு உங்களால் பேசமுடியாது. நான் காலி இடத்துடன் பேசுவேன் என்று நீங்கள் சொன்னால், பிறகு ஏதோ தவறாய் இருக்கிறது என்று பொருள். ஒரு வடிவத்தை மட்டுமே உங்களால் பார்க்க, தொட, முகர, சுவைக்க, தொடர்புகொள்ள மற்றும் உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். எந்த உணர்ச்சிகளின் நிறைவும், முழுக்க முழுக்க வடிவமே இல்லாத ஒரு இடத்தை, எல்லா வடிவங்களின் ஆதாரத்தை / மூலத்தை நோக்கியே உங்களை அழைத்துச் செல்லும்.

சமஸ்க்ருதத்தில் இரண்டு அழகான வார்த்தைகள் இருக்கிறது, விருபாக்ஷா மற்றும் விஸ்வரூபா. விருபாக்ஷா என்றால் வடிவம் இல்லாத கண்கள் என்று பொருள்; பலர் இதை ஒரு பெயராகவே உபயோகப்படுத்துகிறார்கள். விருபா என்றால் வடிவில்லாதது என்று பொருள், அக்ஷா என்றால் கண்கள் என்று பொருள், அதாவது வடிவம் இல்லாத கண்கள். இன்னும் ஆழமாகச் சென்றால், நம் மெய்யுணர்வு கண்களே இல்லாமல் பார்ப்பதையும், தோல் இல்லாமல் உணர்வதையும், நாக்கில்லாமல் சுவைப்பதையும் மற்றும் காதில்லாமல் கேட்க முடிவதையும் காணலாம்; இதுவே யோக சமாதி. ஆழ்ந்த சமாதியில், கனவைப் போலவே இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. ஐந்து புலன்களும் இல்லாமல், நுகரவும், சுவைக்கவும் அனைத்தையும் கனவில் செய்ய முடிகிறது அல்லவா? எனவே, விருபாக்ஷா என்பது வடிவே இல்லாமல் கண்கள் கொண்ட மெய்யுணர்வு.

விஸ்வரூபா என்றால் ஒவ்வொரு வடிவத்திலும் இருப்பது. இந்தப் பிரபஞ்சமே இறை வடிவம்; இறைவன் மரங்கள், மலைகள், ஆறுகள் வடிவாக இருக்கிறார். இந்த முழுப் பிரபஞ்சமே இறைவனின் வெளிப்பாடு; இறைவனின் உடல். இந்தப் படைப்பை விட்டுவிட்டு இறைவன் எங்கோ சொர்கத்தில் அமர்ந்திருக்கவில்லை, அவரே படைப்பு.

இறைவனும் படைப்பும் வேறு வேறு அல்ல. எள்ளின் உள்ளே எண்ணெய் இருப்பதைப் போல, அதை போலவே, இந்தப் படைப்பின் ஒவ்வொரு அணுவிலும், மெய்யுணர்வு உள்ளது. ஆடுபவரையும் ஆடலையும் எப்படி பிரிக்க முடியாதோ அப்படி. நீங்கள் ஆடலைப் பார்த்துக் கொண்டிருந்தால், ஆடுபவரையும் பார்க்கிறீர்கள். ஆடுபவரைப் பார்க்காமல் ஆடலைப் பார்க்க முடியுமா? எனவே இந்தப் பிரபஞ்சமே ஆடல், யார் அதை ஆட்டுவிப்பது? அந்த ஆடுபவர்!

ஒவ்வொரு மரத்திலும், ஒவ்வொரு மிருகத்திலும், ஒவ்வொரு மனிதரிலும் இருக்கும் உயிர் என்ன? அதுவே இறைவன்! இறைவன் பஞ்சபூதாத்மிகா, பஞ்ச பூதத்தில் இருக்கிறார். அவரே நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாசம்; அவரே இந்த ஐந்து பூதங்களின் ஆத்மா. இறைவன் ஐந்து பூதங்களாகவும், மெய்யுணர்வாகவும் இருக்கிறார். இறைவன் எங்கோ சொர்கத்தில் அமர்ந்திருக்கிறார் என்பது சரியானதல்ல.
மற்றொரு எளிமையான உதாரணம், எங்கும் நிறைந்திருக்கும் காற்று. இப்போதும் கூட காற்று இருக்கிறது. காற்று இல்லாமல் நீங்கள் இருக்க முடியாது. ஆனாலும், சில நேரங்களில் வெம்மையாக புழுக்கமாக உணரும்போது காற்று இருப்பதை நீங்கள் உணரவில்லை, ஆனால் காற்று இருக்கிறது. காற்றே இல்லை என்று நீங்கள் சொல்ல முடியாது. ஆனாலும், ஒரு குளிர்விப்பான் முன்னே அல்லது மின் விசிறியின் முன்னே நீங்கள் அமரும்போது காற்றை உணர முடிகிறது. தியானத்திலோ, சாமதியிலோ அல்லது ஞானத்திலோ அதுதான் நிகழ்கிறது.

கே: குருதேவ், எனக்கு என்னதான் உண்மையில் வேண்டும் என்று குழம்பியிருக்கிறேன். நான் ஆசைப்படும் பொருட்களை கேட்க ஆசிரமத்திற்கு வருகிறேன், ஆனால் இங்கு வந்து அருட் பேரானந்ததையே கேட்டு வீட்டிற்கு எடுத்துச் செல்கிறேன். அருட் பேரானந்தம் நன்றாகவே இருக்கிறது, ஆனால், இதனால் எனக்கு வாழ்க்கையில் எந்த பொருள் ரீதியான விஷயங்களும் கிடைக்காதா?

குருதேவ்: எனக்கு ஏதாவது வேண்டும் என்று பலமுறை சொல்கிறீர்கள், பிறகு உங்கள் ஆசைகளை குறைத்துக் கொள்கிறீர்கள், ‘இல்லை, எனக்கு இது வேண்டாம்!’ என்று கூறிவிடுகிறீர்கள். உங்களுடைய சங்கல்பங்கள் (உறுதியான விருப்பங்கள்) உங்களுடைய விகல்பதினாலேயே (சந்தேகங்கள்) குறைக்கப்படுகிறது.  நீங்கள் உண்மையாகவே ஏதேனும் நடக்க வேண்டும் என்று விரும்பினால், அது நிச்சயம் நடக்கும். நீங்கள் ஆசீர்வாதங்களை வேண்டினால் அது நிச்சயம் நடக்கிறது.

மகாபாரதப் போரில், ஸ்ரீ கிருஷ்ண பகவான் மூன்று முறை துரியோதனனைச் சந்தித்துக்  கூறினார், ‘சண்டை போடாதே, இந்தப் போர் நமக்கு வேண்டாம். அமைதியானப் பேச்சுவார்த்தைக்கு வா. உட்கார்ந்து அமர்ந்து பேசி ஒரு முடிவை ஒத்துக் கொள்வோம்.’ இந்தப் போர் நிச்சயம் நடக்கும், அதிலிருந்து கீதை பிறக்கப் போகிறது என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்குத் தெரியும், ஆனாலும் அமைதியை வேண்டி மூன்று முறைகள் சென்றார். ஏன்? ஏனென்றால் ஒரு கால கட்டத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தாக வேண்டிய தேவை இருக்கிறது.

மகாபாரதத்தில், துரியோதனன் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்கள் தருவதாக ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் ஒத்துக் கொண்டிருந்தால், அந்தச் சூழ்நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள். கீதையே இருந்திருக்காது! ஏன் மகாபாரத நூலே இருந்திருக்காது! யாராவது கேட்கிறார்கள், ‘இந்தச் செயல் எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை என்று தெரிந்துகொண்டே ஏன் அதைச் செய்கிறாய்?’ அதற்கு விடை, ‘ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பெரிய நோக்கம் இருக்கிறது, அது அந்தச் செயலினால் விளையும் பயனோடு தொடர்புடையது அல்ல. இதிலிருந்து எனக்கு என்ன கிடைக்கிறது என்பதல்ல கேள்வி; அந்தச் சூழ்நிலையில் நான் செயல்பட்டேனா என்பதுதான் கேள்வி.’

மருத்துவமனையில், நோயாளி உயிர் பிழைக்க முடியாது என்று நன்றாகத் தெரிந்தும் பல முறை மருத்துவர்கள் தங்களால் ஆன எல்லா முயற்சியையும் எடுக்கிறார்கள். இவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று தெரிந்த அந்தக் கணமே தங்கள் சிகிச்சையை நிறுத்தி விடுகிறார்களா என்ன? இல்லை! இதனால் எந்தப் பயனுமில்லை என்று தெரிந்தாலும் கூட, இதயத் துடிப்பு இருக்கும்வரை, மூச்சு இருக்கும்வரை ஒரு நோயாளியை மருத்துவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள். எனவே சில விஷயங்கள் நடக்க வேண்டும் எனும்போது நடந்தாக வேண்டும் என்ற பிரபஞ்சத் தத்துவத்தின் ஒரு உதாரணமே இது. ‘நடக்கட்டும்; எப்படியும் பிறக்கும் ஒவ்வொருவரும் இறந்துதான் ஆகவேண்டும். நோயாளியோ அல்லது ஆரோக்கியமானவரோ எப்படியும் ஒருவர் இறந்துதான் ஆகவேண்டும், பிறகு ஏன் ஒருவரை யாராவது பார்த்துக் கொள்ள வேண்டும்? அமைதியாக இருந்து விடுவோம்.’ என்று நாம் சொல்ல முடியாது. இது செய்வதற்கு சரியான விஷயமல்ல, நாம் அதை கவனித்தாக வேண்டும்.

சுனாமி ஏற்பட்டபோது, சுவாமி சத்யோஜதாவும் நானும் இலங்கைக்குச் சென்றிருந்தோம். நம்முடைய வளைகுடா நாட்டு மையம் துணிகள், மருந்துகள் என்று பல பொருட்களை  அனுப்பி இருந்தனர், நம்முடைய தொண்டர்களும் இருந்தனர். இராணுவத்தைச் சேர்ந்த சிங்கள விமானி ஒருவர் இருந்தார், அவர் இலங்கையின் தென் கிழக்குப் பகுதியில் பல உதவிகளைச் செய்துவந்தார். அவர் ஒரு வருத்தமான பாவ மன்னிப்பை தெரிவித்தார். தமிழர்கள் இருக்கும் பகுதியில் சுமார் 600 குழந்தைகள் படிக்கும் பள்ளிப் பகுதியில் வெடி குண்டுகள் போட அவருக்கு ஆணையிடப்பட்டது. அவர் கூறினார், ‘அந்த வேலையைச் செய்தாக வேண்டிய தருணத்தில் என் இதயமே இடிந்தது, நான் என் வேலையைத் துறந்து விட்டேன்.’
பிறகு, அவர் சுதர்ஷன்க் கிரியா பயின்றார். தன் வேலையைத் துறந்தபின், தன் முழு வாழ்க்கையைத் தொண்டு செய்ய அர்பணித்தார். குழந்தைகள் வாழ்வு மேம்படவும், அநாதை இல்லங்களிலும் சேவை செய்துவருகிறார். அந்த ஒரு நிகழ்வு, வேறு வழி இல்லாமல் தன்னுடைய மேலதிகாரிகளின் கட்டளைக்கு கீழ் படிய வேண்டி இருந்த அந்த ஒன்று, அவருடைய வாழ்க்கையே மாற்றிவிட்டது.

புத்தமதத்தைச் சார்ந்த அவருக்கு, வன்முறை எவ்வளவு பாவச் செயல் என்பது தெரியும். பல வருடங்களாக அது அவருக்குக் கடுமையாய் இருந்தது. சுனாமி நிகழ்ந்தபோது, அவர் வாழும்கலை நிறுவனத்துடன் சேர்ந்து அவ்வளவு சேவைகள் செய்தார். அந்த அதிர்சியிலிருந்து மீள்வதற்கு சிலருக்கு நீண்ட காலம் ஆகிறது. ஆனால் ஞானத்தின் துணை கொண்டு, அஷ்டவக்கிர கீதா, கிரியா மற்றும் தியானத்தின் பயனால் இவர் கூறினார், ‘முதல் முறையாக என்னால் புன்னகைக்க முடிகிறது; என் வாழ்வில் ஆனந்தம் திரும்பிவிட்டது.’
இந்த அறிவு, இந்த ஞானம், அளப்பரிய மதிப்புடையது.  இது அளவில்லா அழகுடையது மற்றும் இது அளவில்லாத சக்தி உள்ளது. இது மக்களை ஆழ்ந்த தழும்புகளிலிருந்தும், குற்றவுணர்விலிருந்தும், காயங்களிலிருந்தும் மற்றும் வலிகளிலிருந்தும் விடுவிக்க வல்லது; புதிய ஒளியை அளித்து ஒருவருடைய ஆன்மாவை மேலே உயர்த்த வல்லது. இது அந்த அளவு மனதைத் தொடுவதாக இருக்கிறது.

முன்பெல்லாம், அஷ்டவக்ர கீதா பொதுமக்களுக்கு அளிக்கப்படவில்லை. இந்தியாவில் கூட, இரண்டு மூன்று ஒளி நாடாக்களே ஒவ்வொரு மையத்திலும் இருந்தது, சற்று முன்னேறியவர்களுக்கு மட்டுமே இந்த வகுப்புகள் எடுக்கப்பட்டன. பிறகு, மக்கள் அந்த நிலை அடையும் வரை காத்திருக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும், எங்கே இருந்தாலும், ஒரு சில வரிகளே அவர்களின் வாழ்க்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்த வல்லது. இதற்குப் பிறகே எல்லோரும் அஷ்டவக்ர கீதா கேட்க அனுமதிக்கப்பட்டனர்; நாம் அதைத் திறந்து விட்டுவிட்டோம்.

அஷ்டவக்ர கீதா ஒரு உயர்ந்த ஞானம், உயர் நிலைக் கணிதம் கற்பதைப் போன்றது. கணிதத்தின் அடிப்படை அறிவு இல்லாமல் இதைக் கற்க முடியாது. இந்த வாதத்தைத் தான் முன்னோர்கள் கொண்டிருந்தார்கள். குவாண்டம் இயற்பியல் ஆரம்பப் பள்ளியில் கற்பிக்க முடியாது. ஆனாலும், செய்பவன் நான் என்ற நிலையிலிருந்து ஒருவரை உயர்த்தி, உண்மையை அப்படியே இருக்கும் நிலையில் பார்க்கும்படி செய்வது அஷ்டவக்ர கீதையில் கிடைக்கும் மிக மிக மதிப்புள்ள ஒரு ஞானம்.

கே: அன்பு குருதேவ், நான் மிக முக்கியமான வேலை செய்ய அல்லது படிக்க முற்படும் போது என்னுடைய மனநிலை குறுக்கே வருகிறது. என்னுடைய பெரும்பாலான செயல்களுக்கு என் மன நிலையையே நம்பியிருக்கிறேன். எப்படி இந்த மன நிலைகளிலிருந்து விடுபடுவது?

குருதேவ்: முதலில், இந்த நிலையை உணர்வதே பாதி வேலையைச் செய்துவிடுகிறது. உங்களை அலைக்கழிப்பது மன நிலை தான் என்பதை இப்போது உணர்ந்து கொண்டீர்கள், அப்படியானால் உங்கள் புத்தி விழித்துக் கொண்டிருக்கிறது என்று பொருள். அது சொல்கிறது, ‘இல்லை, நான் அப்படி மனநிலை சார்ந்தவனாக இருக்கப் போவதில்லை.’ அந்த உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனநிலை படி செயல்பட முடியாத பல தருணங்கள் வாழ்க்கையில் உள்ளது. உதாரணமாக, நீங்கள் விமானத்தில் இருக்கிறீர்கள், திடீரென்று உங்கள் பயணத்தை தொடரவேண்டாம் என்று நினைக்கிறீர்கள், உங்கள் மனநிலை பாதியில் மாறிவிட்டாலும் உங்களால் விமானத்தை விட்டு வெளியேற முடியாது! நீங்கள் அங்கே இருந்தாக வேண்டும். அது நீங்கள் ஓட்டிக் செல்லும் நான்கு சக்கர வாகனம் அல்ல, நினைத்த இடத்தில் திரும்பிச் செல்ல. ஏன் நான்கு சக்கர வாகனத்தில் கூட எங்கு வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ள முடியாது, அதற்கான வெளியேறும் வழி அல்லது குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நீங்கள் அதைச் செய்ய முடியும். எங்கு வேண்டுமானாலும் திருப்ப முடியாது.

எனவே, நீங்கள் ஞானத்தை மதிக்கவில்லை என்றால் வாழ்கை உங்களுக்குக் கடினமான பாடத்தை கற்றுத் தரும். வாழ்கை என்பது கடமையேற்றுக் கொள்வதில் இருக்கிறது உங்கள் மனநிலையைச் சார்ந்து அல்ல. மனநிலை என்பது நிலையானது அல்ல, அது வரும், அது மாறும். ஆனால், கடமையும் ஞானமும் எப்போதும் நல்ல விளைவுகளையே அளிக்கும்.

கே: குருதேவ், இறைவனால் செய்ய இயலாதது ஏதேனும் இருக்கிறதா? அது என்ன?

குருதேவ்: அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி அளிக்க முடியாது! இறைவனால் உங்களை பழிவாங்க முடியாது; அது நடக்கவே நடக்காது!

கே: ‘யோக கரம்சு கௌஷலாம்’ (செயலில் ஆகச் சிறந்தது) என்பதைப் பற்றி தயவு செய்து விளக்க முடியுமா? எப்படி அதை என் வாழ்க்கையில் செயல்படுத்துவது?

குருதேவ்: நீங்கள் ஆகச் சிறந்த திறன்களை விரும்புகிறீர்கள் என்பது இந்தக் கேள்வி உணர்த்துகிறது; அவ்வளவுதான், நீங்கள் ஏற்கனவே திறன் படைத்தவரே. நீங்கள் ஆகச் சிறந்த திறனை விரும்பினீர்கள் என்றால், நீங்கள் ஏற்கனவே திறன் பெற்றவரே, மேலே செல்லுங்கள். நீங்கள் அதைக் கற்க விரும்பினால், நீங்கள் ஏற்கனவே அதைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வாக்களிக்கச் செல்லும் போது, ஏற்கனவே வாக்களித்து விட்டீர்கள், புரிந்ததா? எனவே கற்க வேண்டும் என்று விரும்பும்போது, ஏற்கனவே பாதி நடந்துவிட்டது, கற்பது ஆரம்பித்து  விட்டது.