அனைத்தும் தற்போதைய தருணத்திலேயே உள்ளது

செவ்வாய்கிழமை, 19 நவம்பர், 2013.

பெங்களூரு, இந்தியா

குருதேவ், தற்போதைய தருணம் என்பதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, பரந்த, முடிவில்லாத, ஆழமானது என்பது. இன்னொன்று, ஒரே தருணத்தில் பல விஷயங்கள் நிகழ்கின்றன என்பது ஆகும். வேறு பரிமாணங்கள் யாவை? தயவு செய்து விவரிக்க முடியுமா?

குருதேவ்: மிகச்சரி. நிகழும் தருணம் என்பது நேர்கோடு அல்ல. கோள வடிவமானது. அது விரிந்த ஆழமானதும் கூட. இந்த க்ஷணம் என்பதற்கு எல்லையற்ற பரிமாணங்கள் உள்ளன. தியானத்தில் ஆழ்ந்திருக்கும் போது, இதை நீங்கள் அனுபவித்து, உணர்ந்து அனைத்துமே இந்த க்ஷணத்தில் உள்ளது மட்டுமே என்று அறிவீர்கள். மௌனத்தின் ஆழம், காட்சிகளின் ஆழம், கனவுகளின் ஆழம், அனைத்தும் இந்த க்ஷணத்தில் தான். நமது விழிப்புணர்வு நிலை பரந்த மற்றும் ஆழமானது ஆகும்.

நேற்று சத்சங்கத்தில் " அந்தராத்மனி குருவே " என்னும் பாடலைப் பாடினோம். அதன் பொருள், குருதத்துவம் நமக்குள் ஆழத்தில் இருக்கின்றது. மேலும், "ஆத்மா -தமோ  ஹரி " என்பதன் பொருள்  ஆத்மாவினின்று  அறியாமை என்னும் திரையை அகற்றுகிறது என்பதாகும்.  இது மிகுந்த அழகான கவிதை. அப்பாடல், " ஒ குரு ! தாம், என்னுடைய ஆத்மாவில் ஆழமாக உறைந்திருக்கின்றீர்கள்." என்று கூறுகின்றது. குரு தத்துவம் என்ன செய்கின்றது? ஆத்மாவின் இருட்டை அகற்றுகின்றது. பாடல் மேலும், என்னுள் பல உணர்ச்சிகள் எழுகின்றன. இந்த உணர்ச்சிக்  குவியல்கள் மிகவும் சிக்கலாக இருக்கின்றது. ஆயினும் எப்படியோ அதற்குள் நீங்கள் நகர்ந்து செல்கின்றீர்" இதை எழுதும் போது கவி மிகுந்த ஆழமான அனுபவத்தை அடைந்திருக்க வேண்டும். இந்த கவிதையின் ஆழத்தை முக்கியமாக, கற்றறிந்து தர்க்க ரீதியாக இயங்கும் மனதிற்கு விளக்கிக் கூறுவது எளிதானது அல்ல. மனிதனுக்கு மனம் மட்டுமல்ல, இதயமும் அவ்வாறே. உணர்ச்சிகள் எப்போதுமே குழப்பமானதும் ஒழுங்கற்றதும் ஆகும். கவி கூறுகின்றார், " ஒ குருவே! சிக்கலான இக்காட்டிற்குள் செல்கின்றீர்கள். ஒரு ஒளிக் கீற்றினை போன்று உணர்ச்சிகள் நிறைந்த இருண்ட அடர்ந்த காடு போன்ற மனதிற்குள் செல்கின்றீர்கள்”

அடுத்த செய்யுளில், கவி கூறுகின்றார், "லட்சக்கணக்கான பிறவிகள் கடந்து விட்டன. எண்ணற்ற கருத்துப் பதிவுகள் திரண்டு சேர்ந்து விட்டன, ஆயினும் தங்களது பதிவே மிகுந்த பலமானதும் ஆழமானதும் ஆகும். “ஒ குருவே! தங்களது பதிவே எனது ஆத்மாவில் முடிவான பதிவாக ஆகி விட்டது. ஏனெனில், இப்பதிவினால் மற்ற அனைத்துப் பதிவுகளும் கரைந்து விட்டன. உங்களை பற்றிய இப்பதிவே "பரம சரம" அனைத்திலும் மிக உயர்ந்ததும் இறுதியானதும் ஆகும். இதுவே முடிவான பதிவு ஆகும். எத்தனையோ காலடித் தடங்கள் இருந்தாலும் ஒரு யானை நடந்தால் ஏற்படும் காலடித் தடம் சிங்கம் புலி போன்ற மற்ற அனைத்து பிராணிகளின் காலடித்தடங்களையும் விட பெரியதாக உள்ளது. அனைத்துத் தடங்களும் அழிந்து விடுகின்றன. வேறெந்தப் பிராணிக்கும் அத்தனை பெரிய காலடித் தடம் கிடையாது. இந்தக் வரிகள், குருவை பற்றிய இறுதியான கருத்துப் பதிவு என் மனதில் வந்துள்ளது என்று கூறுகின்றது.

அடுத்த வரியில்,கவி கூறுகின்றார், "வாழ்க்கை நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் நிறைந்தது ஆகும். நல்லவைகளும் குறைகளும் நிறைந்தது ஆகும்.” இது இறைமையின் லீலை ஆகும். கவி இதை லலித ருத்ர லீலா என்று கூறுகின்றார். அதாவது இது இனிமையான மற்றும் விரும்பத் தகாத அல்லது பயங்கரமான நாடகம் ஆகும். ஆயினும் அனைத்தும் நாடகமே. இனிமையான மகிழ்விக்கும் ஒன்று அல்லது சோகமான பயங்கரமான ஒன்று. ஒருவன் பயன்கள் இழப்புகள்  நன்மைகள் தீமைகள் அனைத்தையும் வாழ்வில் அனுபவிக்கின்றான்.

ஆனால் முடிவில் அனைத்தும் நாடகமே. இந்த நாடகத்தில் தாம் (குரு) சில சமயங்களில் ஒரு உருவத்திலும்,சில சமயங்களில் உருவமற்றும் காணப்படுகின்றீர்கள். கவி கூறுகின்றார்," ஒ குருவே! சில சமயங்களில் ஓர் உருவில் என்னுடன் இருக்கின்றீர்கள், சில சமயங்களில் உருவற்றுத் தோன்றுகின்றீர்கள். மற்றும் அனைத்து சமயங்களிலும் ஆத்மாவின் இருட்டைக் களைகின்றீர்கள்."

குருதேவ், முதன் முறையாக விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் ஆழத்திலிருந்து ஒலிகளை கண்டு பிடித்து அவற்றைப் பதிவு செய்திருக்கின்றார்கள். அந்த ஒலிகள் அதிகாலை நேரப் பறவைகளின் கீச்சிடும் ஒலி போன்றும், மற்றும் சூரியனினின்றும் வரும் ஒலி கலந்தது போன்றும் உள்ளன. இவையனைத்தும் மனங்கவரும் வகையில் ஆச்சர்யமானதாக உள்ளன. இது என்ன ரகசியம் என்று தயவு செய்து கூறுங்கள்.

குருதேவ்:  இயற்கை ஒரு ரகசியங்கள் நிறைந்த தங்கச் சுரங்கம். இயற்கை அன்னையின் மடியில், பல ரகசியங்கள் மறைந்து உள்ளன. நேற்று முன் தினம் ஆஸ்ரமத்திற்கு ஒரு விஞ்ஞானி வருகை தந்திருந்தார். அவர் ஆஸ்ரமத்தின் சக்தியை அளக்கும் பொருட்டு ஒரு டைட்டானியம் ராடார் (மின்காந்த இலை கருவி அமைப்பு) கொண்டு வந்திருந்தார். அவர் என்னிடம்,"நகரில் அளவு 3.5 எண்ட்ரோபி (விண்வெளியில் துகள்கள் அல்லது பொருட்களின் சீரற்ற இயக்கத்தின் அளவைக் குறிக்கும் அறிவியல் சொல்) காணப்பட்டது, ஆனால் ஆஸ்ரமத்திற்குள் வந்ததும் அது 0.5 ஆகக் குறைந்துவிட்டது. (அமைதி மற்றும் நிலையான சுற்றுச் சூழல் இருப்பதைக் குறிப்பிட்டு) என்று கூறினார் மேலும், சத்சங்கம் மற்றும் பூரண ஆஹுதி நடைபெற்ற நேரங்களில் அளவு 0 ஆகக் குறைந்து விட்டதாகவும் கூறினார். 0 என்ற அளவு இறைமையின் பிரத்யக்ஷத்தை முழுமையாக குறிப்பது ஆகும். தன்னுடைய வாழ்க்கையில் இது போன்ற ஒன்றை இதுவரையில் கண்டதே இல்லை என்றும் கூறினார். அவருக்கு இது மிகவும் ஆச்சர்யமானதாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு டைட்டானியம் ராடாருடன் அறிவியல் ஆய்வினை நடத்தினார். அவர் ஆஸ்ரமத்தின் சுற்றுச் சூழல் நேர்மறை அதிர்வலைகள் நிறைந்து மிக அமைதியாக உள்ளதாகக் கூறினார். அதே போன்று விஞ்ஞானிகள் இறைமையின் இருப்பு எங்கிருக்கின்றது என்று தீர்மானிக்கின்றார்கள். எப்படியும் நாம் இங்கே இருக்கும் போது அதை அனுபவிக்கின்றோம்.

நிறையப் பேர் என்னிடம், ஆஸ்ரமத்திற்குள் அடியெடுத்து வைத்தவுடனேயே அவர்களது மனநிலை நேர்மறையாக மாறிவிடுவதாகக் கூறியிருக்கின்றார்கள். அது போன்று இங்கு எத்தனை பேர் அனுபவம்) அடைந்திருக்கின்றார்கள்?(பலர் கை உயர்த்துகின்றார்கள்) எனவே இயற்கை மிகவும் மர்மமானது

அன்புள்ள குருதேவ், ஏன் நான் துன்பத்தில் மகிழ்ச்சி அடைகின்றேன்? அதை விட்டுவிட  என் மனதில் விருப்பமின்மை ஏன் ஏற்படுகின்றது?

குருதேவ்: இது நான் உங்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. துன்பத்தில் மகிழ்ச்சி காண்பது இயல்பானது அல்ல. சாதரணமான மனநிலையை பிரதிபலிக்க வில்லை. அது ஆரோக்கியமானதும் அன்று. அதைத் தாண்டி வருவது மிகவும் சிரமமானதும் அல்ல. இந்த மன நிலையைக் கடப்பது கஷ்டமானது என்று எண்ணாதீர்கள்.

அன்புள்ள குருதேவ், என்னுடைய விருப்பமானது அன்றி, எனக்குத் தேவையான பாதையில் நான் செல்ல வழி நடத்துவீர்களா?

குருதேவ்: உங்களுக்கு என்ன தேவையோ அது நிச்சயம் உங்களுக்கு வழங்கப்படும் என்னும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் வாழ்விலிருந்து சோம்பலை விரட்டி விடுங்கள். இந்த இரண்டும் தேவையானவை ஆகும். சோம்பலாக இருந்து கொண்டு, எனக்கு என்ன தேவையோ அது கிடைக்கும் என்பது சரி அல்ல. தேவையானவற்றை அடைவதற்கு பயந்து கொண்டிருப்பதும் நல்லதல்ல. சோம்பல் கூடாது, தேவையானது கிடைக்கும் என்னும் நம்பிக்கை வேண்டும்.

குருதேவ், நான் ஞான அறிவொளி  பெற்றாலும், தொடர்ந்து என் பணிகளை செய்து வர வேண்டுமா?

குருதேவ்: ஆம், நிச்சயமாக. சாதரணமாகவே இருந்து வர வேண்டும். நீங்கள் மிக சிறப்பானவராக எண்ணிக் கொண்டால் அது ஞானஒளி அல்ல.

அன்பு மிக்க குருதேவ், பல மக்களிடையே இருந்தாலும் தனிமையாக உணர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: அது மிக நல்லது என்றே நான் கூறுவேன். தனிமையாக உணரும்போது அனைத்தும் ஒரு கனவு என்றே எண்ணிக் கொள்ளுங்கள். அடுத்தபடி, நீங்கள் எல்லாமே உங்களுடையது என்று கண்டறிவீர்கள். இந்த தனிமை உணர்வு என்பது விரிவாக்கப்பட்ட உணர்வு நிலையை நோக்கி  அடியெடுத்து வைப்பது ஆகும்.

சில சமயங்களில் சாதனா, மற்றும்  பயிற்சிகள் அனைத்தும் செய்தாலும் மனதின் அரட்டை நிற்பதில்லை. எவ்வாறு அதை நிறுத்துவது? எவ்வாறு அமைதியாக இருப்பது?

குருதேவ்: மனதின் அரட்டையை நிறுத்துவதற்கு ஒரே வழி சாந்தம் (வைராக்யா) அனைத்தும் ஒரு கனவே என்று தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். விரைவில் அது முடிவிற்கு வந்து விடும்.
மன நெருடல் என்பது எப்போதுமே ஒரு பொருள், ஒரு தலைப்பு அல்லது ஒரு தேவையைப் பொறுத்தே இருக்கும்.கவலைகளும் தேவைகளுமே மன நெருடல்களுக்குக் காரணம். உங்கள் கவலைகளையும், தேவைகளையும் கைவிடுங்கள்.அதுதான் வைராக்யா என்று அழைக்கப் படுகின்றது.

குருதேவ், என்னுடைய இப்போதைய வாழ்வில், என்னுடைய கடந்த காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் மறந்தது போன்று உணருகின்றேன். சில நிகழ்வுகளை நினைவில் கொண்டு வர முயற்சித்தாலும், என்னால் முடியவில்லை. என் மனம் அமைதியாக இருக்கின்றது. என்னுடைய கடந்த காலம் அழிக்கப்பட்டு விட்டது போன்று உணருகின்றேன். இது பரவாயில்லையா?


குருதேவ்: இது உண்மையில் மிக நல்லது. சில காலத்திற்கு பின் கடந்ததை (எதையும் பிடித்து வைத்துக் கொள்ளாமல்) மறந்து விட வேண்டும். ஆனால், வீட்டிற்குத் திரும்பச் செல்லும் வழி மற்றும் உங்கள் கார் சாவி இவற்றை மறந்து விடாதீர்கள் ! (சிரிப்பு )