உன்னுள் இருக்கும் இறைத்தன்மையை வணங்கு

21 ஆகஸ்ட் 2013 - பெங்களூர் - இந்தியா


இன்று ரக்‌க்ஷா பந்தன் பண்டிகை. அதைப் பற்றிப் பேசலாம். இன்றைய தினம் சகோதரி தன் சகோதரர்களின் கையில் ஒரு பட்டுக் கயிற்றைக் கட்டி, தன்னை எப்போதும் காக்க வேண்டும் என்று கேட்பது வழக்கம். இதை பற்றி எல்லோரும் கேட்டிருப்பீர்கள். இல்லையா? ஆனால் ரக்க்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடுவதின் முக்கிய அர்த்தம் இது இல்லை. உண்மையான இரகசியம் சகோதரி தன் சகோதரர்களின் கையில் பட்டுக் கயிற்றை கட்டி “நான் எப்போதும் உன்னைக் காப்பேன்” என்று சொல்வது போல் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் பாதுகாப்புக்காக இறைவனை ப்ரார்த்திக்கும் தினமே ரக்க்ஷா பந்தன் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

அதே போல் ஷ்ராவன் உபகர்மா, ஆண்கள் தங்கள் பூநூலை மாற்றும் தினம். முதல் முதலாக பூநூல் உபநயனத்தின் போது அணிவிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அதை மாற்றும் சடங்கு நடைபெறும். இச்சடங்குகளின் போது காயத்ரி மந்திரம் உச்சரிக்கப் படும். காயத்ரி என்றால் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் ஐந்து முகமுடைய தேவி அல்ல. இப்படி பாரம்பரியமான ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

காயத்ரி மந்திரம் பொது நன்மைக்காகச் சொல்லப்படும் ஒரு மந்திரமாகும். உச்சரிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்கும் நன்மை அளிக்கும். இதன் கடைசி வரியில் “தியோ யோ ந ப்ரசோதயாத்” என்று சொல்கிறோம். இதன் பொருள், எல்லோருடைய அறிவையும் உன் ஒளியால் ப்ரகாசமாக்கு என்று இறைவனை ப்ரார்த்திக்கிறோம். இந்த மந்திரம் ஒருவருடைய அறிவை மட்டும் ப்ரகாசமாக்க உச்சரிக்கப்படுவதில்லை. எல்லோருக்கும் பொதுவான ப்ரார்த்தனை. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எதிர்மறை குணங்களிலிருந்து விடுபட வேண்டும். இறை ஒளியால் அறிவு ப்ரகாசிக்க வேண்டும். எல்லோருடைய நன்மைக்காகவும் சொல்லப் படும் இந்த மந்திரத்தில் “பர்கோ தேவஸ்ய தீமஹி” என்ற வரியின் பொருள் பின் வருமாறு. “என்னுடைய சிறிய மனத்தால் ஏற்படும் எல்லா பாவங்களும் எரிந்து சாம்பலாகட்டும். உன் ஒளியால் எங்கள் அறிவு ப்ரகாசிக்கட்டும்”. இது தான் காயத்ரி மந்திரத்தின் பெருமை.

இது உண்மையிலேயே மகத்துவம் வாய்ந்த வேண்டுதலாகும். இது நாம் காணும் உலகிலும், காண முடியாத சூட்சும உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் நன்மை அளிக்கும் ப்ரார்த்தனை. நம் உடலிலேயே பல சூட்சும உலகங்கள் இருக்கின்றன. ஏழு லோகங்கள் உள்ளன. (இவை சிருஷ்டியின் ஏழு சொர்க்கங்கள் என்றும் சொல்லப்படுகிறது. பூ, புவஸ், ஸ்வர். மஹஸ், ஜனஸ், தபஸ் மற்றும் சத்ய லோகம் என்பவை). நம் உடலில் ஏழு சக்தி சக்கரங்கள் உள்ளன. ஒவ்வொரு சக்கரமும் ஒரு லோகத்தை குறிக்கிறது. நம் இருப்புக்கு ஏழு நிலைகள் உள்ளன. காய் பழுப்பதற்கு பல நிலைகள் உள்ளது போல ஞானமடைவதிலும் ஏழு நிலைகள் இருக்கின்றன. காயத்ரி மந்திரம் சொல்வதால் நாம் இந்த ஏழு நிலைகளில் முன்னேற்றம் அடைந்து இறை ஒளியைக் காண முடியும். ஒவ்வொரு நிலையிலும் பூரணத்துவத்தையும், திருப்தியையும் பெற முடியும். இப்ப்ரார்த்தனை இறை தன்மையை ஏற்று அதில் கலக்க வழி செய்கிறது.

உதாரணத்துக்கு காற்று எப்போதும் இருக்கிறது. நீ ஆழ்ந்த மூச்சை உள்ளிழுக்கும் போது காற்றை ஏற்றுக் கொள்கிறாய். அதே போல் பரமாத்ம சக்தி எப்போதும், எல்லா இடங்களிலும் உன்னை சுற்றிலும் பரந்து இருக்கிறது. காயத்ரி மந்திரத்தின் மூலம்,முழு கவனத்துடனும், மரியாதையுடனும் உச்சரிப்பது மூலம், நீ பரமாத்ம சக்தியுடன் ஒன்றாக முடியும். இம் மந்திரத்தால் உன் பாவங்கள் எரிந்து சாம்பலாகி விடும். நீ தூய்மையானவனாகலாம். “பர்கோ” என்பதற்கு அர்த்தம் எல்லா பாவங்களையும் நீக்குதல் என்பதாகும்

காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் போது “இறைத் தன்மையை உயர்வாக மதித்து எப்போதும் அதன் ஒளியால் என் அறிவை ப்ரகாசிக்க வேண்டும். அதனால் என் மனதில் உயர்வான நன்மை தரும் எண்ணங்கள் எழுந்து நான் நற்காரியங்கள் செய்ய வேண்டும்” என்று ப்ரார்த்தனை செய்கிறோம். இது தான் காயத்ரி மந்திரத்தின் மகிமை.

காயத்ரி தேவியின் படத்துக்கு முன் அமரும் போது அவள் ஒரு தேவி என்று மட்டும் நினைக்க வேண்டாம். உன் ஆத்மாவை நினைவில் கொண்டு, நீயே எப்போதும் ப்ரகாசிக்கும் இறை ஒளி என்று தெரிந்து கொள். சூரியனை கடவுளாகக் கருதுகிறோம். ஆனால் அது அப்படி அல்ல. காயத்ரி மந்திரத்தில் “தத் சவிதுர் வரேண்யம்” என்று சொல்கிறோம். “சவிதுர்” என்ற வார்த்தை ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட 12 ஆதித்யர்களில் ஒன்றான சவித்ர தேவதையைக் குறிக்கிறது. சவித்ர தேவதை தான் சூரியனுக்கு ஒளி கொடுக்கிறது.

இங்கு “சவித்ர” என்றால் : “எது எல்லாவற்றுக்கும் ப்ரகாசம் அளிக்கிறதோ, எல்லோரையும் தூய்மைப் படுத்தி அவர்களுடைய பாவங்களை நீக்குகிறதோ, அந்த பரமாத்மா” என்று அர்த்தமாகிறது.  எனவே இங்கு சவிதுர் என்பது பரப்ரம்மமான கடவுளை குறிக்கிறது.

கே: நிர்குணத்துக்கு (உருவமற்றதற்கு) செல்வது எப்படி ?

குருதேவர்: எந்த உருவமும் உருவமற்ற பரம்பொருளின் வெளிப்பாடு தான். இவ்வுடல் உருவத்தால் / குணங்களால் அடையாளம் காணப் படுகிறது. சத்வம், ரஜோ மற்றும் தமோ குணங்களால் பாதிக்கப் படுவது உடல். ஆனால் ஆத்மா உருவமற்றது. தியானத்தின் மூலம் நாம் ஆத்மாவை அடையலாம். சகுணத்துக்கு உருவம், பரிமாணம், பெயர் எல்லாம் உண்டு. இது உருவமற்ற ஆத்மாவிலிருந்து தோன்றியது.

கே: சிவபெருமான் என்றும் உருவம் எடுத்ததில்லை. துர்கா தேவி, சரஸ்வதி தேவி, காயத்ரி தேவி யாரும் உருவம் எடுத்ததில்லை என்று சொல்லப்படுகிறது. இவ்வுருவங்கள் ஒரே சக்தியிலிருந்து வந்ததா? இவைகளுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன?

குருதேவர்: எல்லாமே ஒன்று தான். பெயருக்கேற்ப ஒவ்வொன்றும் ஒரு சக்தியைக் குறிக்கின்றன. எல்லாமே ஒரே சக்தி தான்.

கே: பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம், எல்லோரும் என் சமமான அன்புக்குப் பாத்திரமானவர்கள் என்று சொல்கிறார். மற்றொரு இடத்தில் “ நீ தான் எனக்கு மிகவும் பிரியமானவன்” என்று சொல்கிறார். இது முன் சொன்னதற்கு முரணாக இருக்கிறது. இது எப்படி சாத்தியமாகும்?

குருதேவர்: பகவத்கீதையில் இப்படிப்பட்ட பல முரண்பாடுகளை பார்க்கலாம். ஒவ்வொரு ஸ்லோகத்திலும், அத்தியாயத்திலும் முரண்பாடுகள் உள்ளன. அதனால் தான் அர்ஜுனன் கிருஷ்ணரை வேண்டி, “பகவானே ! துன்பத்திலிருந்து விடுபட எனக்கு ஒரே வழி மட்டும் சொல்லுங்கள். சில சமயம் பக்தி யோகத்தை உத்தமமானது என்று சொல்கிறீர்கள். மற்றொரு இடத்தில் கர்ம யோகம் சிறந்தது என்று சொல்கிறீர்கள். மற்றொரு இடத்தில் துன்பத்தில் இருந்து முக்தி அடைய ஞானயோகம் தான் வழி என்று சொல்கிறீர்கள். எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. ஒரு வழியை மட்டும் சொல்லுங்கள்“ என்று கேட்கிறான்.

எனவே, அர்ஜுனனுக்கும் இந்தக் குழப்பம் இருந்திருக்கிறது. ஆனால் உண்மை அப்படித்தான் இருக்கிறது. உண்மைக்கு பல பரிமாணங்கள் உண்டு. ஒரு முகம் மட்டுமல்ல. பலமுகங்கள் கொண்ட உண்மையை பற்றி சொல்ல பலவிதமான விளக்கங்கள் தேவையாகிறது. எனவே பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனை பல ஏணிகளில், ஏணியின் ஒவ்வொரு படியிலும் கால் வைக்கும் படி சொல்கிறார். ஒரே படியில் அசையாமல் நிற்கச் சொல்லவில்லை. பகவான் அர்ஜுனனை பல ஏணிகள் மூலம் இறைத் தன்மையை நோக்கி வழி நடத்துகிறார். ஒரு ஏணியை விட்டு மற்றொரு ஏணியில் ஏன் ஏறச் சொல்கிறீர்கள். முதலிலேயே இந்த ஏணிக்கு வந்திருக்கலாமே என்று நீ கேட்கக் கூடும்.

இதையே தான் அர்ஜுனனும் கேட்கிறான். ஆனால் அது முக்தி அடையும் வழி அல்ல. அதனால் பகவான் அர்ஜுனனை பல ஏணிகளில் ஏறச் சொல்கிறார். இதுதான் பகவத் கீதையின் விசேஷம். ஒரு மகத்தான, அனுபவம் மிக்க உபதேசம் இப்படித் தான் இருக்க வேண்டும். முரண்பாடுகள் மூலம் உண்மையை அடைய முடியும் என்று பகவத்கீதை உணர்த்துகிறது. முரண்பாடுகள் இல்லாமலிருந்தாலும், அதுவும் சரி தான். அங்கு உண்மை அடிப்படை நிலையில் இருக்கிறது. முதல் நிலை படிப்பில் நமக்கு முரண்பாடுகள் எதுவும் தெரியாது. உதாரணமாக நாம் எழுத்துக்களான ஏ, பி, சி, டி… படிக்கும் போது எந்தக் குழப்பமும் இருப்பதில்லை.

ஆனால் ஒரு பழமை வாய்ந்த காப்பியத்தில் பல குழப்பங்களைக் காண முடியும். ஏன் அப்படி ? ஏனென்றால் உலகம் பல பரிமாணங்கள் அடங்கியது. இது ஒரு பந்து போல் இருக்கிறது. ஒரு நேர் கோட்டில் முதலும் முடிவும் கண்டு பிடிப்பது போல் பந்தில் முதலும் முடிவும் கண்டு பிடிப்பது கடினம்.

பல ஆண்டுகளுக்கு முன் ஈரான் நாட்டிலிருந்து ஒரு கனவான் இங்கு வந்திருந்தார். 10 – 15 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சி. அவர் ஒரு இமாம். ஆயத்துல்லா கோமேனிக்கு மிக நெருக்கமானவராக (கோமேனிக்கு அடுத்த மதத் தலைவராக இருந்தார்.) வயதானவர். 75–80 வயது இருக்கும். நான் பழைய ஆசிரமத்தில் இருக்கும் சக்தி குடிரில் தங்கியிருந்தேன். சக்தி குடிரை அடைய படிகளில் ஏறி வர வேண்டும். அந்த கனவான் படிகளில் ஏறி வந்து என்னை சந்தித்தார்.

குருதேவா! நீங்கள் மிகவும் கருணையுள்ளவர் என்று பெயர் பெற்றிருக்கிறீர்கள். ஒரு கேள்வி, பல ஆண்டுகளாக என்னை தொந்தரவு செய்கிறது. அதை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

உண்மை  ஒன்று தான் என்றால் அதை அடையும் வழியும் ஒன்று தான் இருக்க முடியும். இல்லையா ? ஒரு கேள்விக்கு ஒரு விடை தான் சரியானதாக இருக்க முடியும். ஒரு கேள்விக்கு 4 – 5 சரியான விடைகள் இருக்க முடியாது. உண்மை ஒன்றே என்றால் உண்மையான மதமும் ஒன்றே தான் இருக்க முடியும்.

அப்படியென்றால் உலகில் ஏன் பல மதங்கள் உள்ளன? ஒரு உண்மையான மதத்தைத் தவிர மற்ற எல்லா மதங்களும் பொய்யானதாக தான் இருக்க முடியும். உண்மையை அடையும் வழி ஒன்று தான் இருக்கமுடியும்“ என்று அவர் சொன்ன போது, அவர் என்ன சொல்ல வருகிறார் என்று நான் புரிந்து கொண்டேன்.

அவர் இஸ்லாம் ஒன்று தான் உண்மையான மதம் என்றும் அதன் மூலமே கடவுளை அடைய முடியும் என்று சொல்கிறார். மற்ற மதங்கள் எல்லாமே பொய் என்று நம்புகிறார். அடிப்படையில் இதை மனதில் வைத்துக் கொண்டு அதை வேறு வழியில் கேட்டார். மேலும் அவர் “குருதேவா! எல்லா மதங்களும் மக்களுக்கு நன்மை தருபவை என்றும் அதற்கான மரியாதையை நாம் அளிக்க தகுந்தவை என்று சொல்லப்படுகிறது. அப்படிச் செய்ய முடியாது. உண்மையான மதம் ஒன்று தான் இருக்கிறது. மற்ற மதங்கள் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. பொய்யானவை என்றார்.

நான் புன்முறுவலோடு,“முதலில் இப்படி அமருங்கள்” என்று சொல்லி ஒரு இருக்கையைக் காட்டினேன். “இங்கு ஆசிரமத்துக்கு வந்து சேர பல திசைகளிலிருந்து பல வழிகள் உண்டு. இந்த இடத்துக்கு வர நேராக வந்து வலது புறம் திரும்பலாம். மற்றொரு வழியில் வந்தால் இடது புறம் திரும்பி இதே இடத்துக்கு வர முடியும். மற்றொரு வழியோ எங்கும் திரும்பாமல் நேராக வந்து ஆசிரமத்தை அடைகிறது. எல்லாமே சரியான வழிகள் தான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். எல்லாமே தவறான வழிகள் என்று சொல்வீர்களா ? பெங்களூரில் இருந்து வருபவர் வலது புறம் திரும்பி ஆசிரமத்தை அடைகிறார். கனகபுராவிலிருந்து வருபவர் இடது புறம் திரும்பி ஆசிரமத்துக்குள் வர முடியும். பனீர்கட்டாவிலிருந்து வருபவர் எங்கும் திரும்பாமல் நேராக வர முடியும். ஆக எல்லா வழிகளுமே சரி தான். வாழ்க்கையில் நாம் எங்கு இருக்கிறோமோ அங்கிருந்து மேலே செல்லும் வழியைப் பார்க்க வேண்டும். அதே போல் எல்லா மதங்களுமே இறைவனை அடையும் வழிகள் தான்.

நம் முன்னோர்கள், மகான்கள், ரிஷிகள் இதை நன்கு அறிந்திருந்தார்கள். அவர்கள் சொன்னபடி சென்றவர்கள் ஒரு மதத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்து மதத்தின் சநாதன தர்மம் என்பது உண்மையை அடைய பல வழிகளை நமக்குத் தருகிறது. இதுவும் சரிதான். அதுவும் சரிதான் என்ற பரந்த மனப்பான்மையைக் கொண்டது. ஏதாவது ஒரு மதத்தில் இறைவனை அடைய பலவழிகள் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் அது இந்து மதம் மட்டுமே. ஏனென்றால் அது ஒரு ரிஷியாலோ, ஒரு மனிதராலோ துவக்கப்பட்டதல்ல. ஆயிரக் கணக்கான மகான்கள் சநாதன தர்மம் தழைத்தோங்க காரணமாக இருந்திருக்கிறார்கள். தங்களுடைய அனுபவங்கள், ஞானத்தை உலக மக்களில் நன்மைக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள். இப்படிப் பல மகான்களின் தவத்தால், ஞானத்தால் வளர்க்கப்பட்டது சநாதன தர்மம் என்ற இந்து மதம்.

இந்த விளக்கத்தைக் கேட்ட இமாம் மகிழ்ச்சியோடு சொன்னார். என் கேள்விக்கு விடை கிடைத்து விட்டது என்று சொல்லி விடை பெற்றார். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், முரண்பாடாக தெரியும் கருத்துகளிலும் உண்மையைக் காண முடியும்.

கே: மன்னிப்பதை தானம் கொடுப்பது என்றும் சொல்கிறார்கள். ஏன் அப்படி? (க்ஷமா தான் என்று சொல்லப்படுகிறது.)

குருதேவர்: இந்த வார்த்தைகளின் வலையில் சிக்க வேண்டாம். இது வார்த்தைகளின் விளையாட்டு. பலர் பலவிதமாக தாங்கள் சொல்ல விரும்புவதைச் சொல்கிறார்கள். மன்னிப்பது என்றால் மன்னிப்பது. அவ்வளவு தான்.

கே: குருதேவா! பிரம்மதேவர், பகவான் விஷ்ணு, சிவபெருமான் தங்கள் பணிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்வது உண்டா? ஒரே பணியைச் செய்வதால் சலிப்புத் தட்டாமல் இருக்குமா ?

குருதேவர்: ஒரு சமயம் எல்லோரும் ஒன்றாகக் கூடி பகவான் தத்தாத்ரேயராக (இறைத் தன்மையின் மூன்று குணங்களும் அடங்கியவர்) உருவெடுத்தார்கள். மூன்று பேருமே குருக்கள்.

கே: குருதேவா! பல மதங்கள் மறுபிறவி உண்டு என்பதை  ஏற்றுக் கொள்வதில்லை. அந்த மதங்களை பின்பற்றுபவர்கள் முக்தி அடைய முடியுமா ?

குருதேவர்: ஒருவர் நம்புகிறாரோ, இல்லையோ உண்மை மாறாது. உண்மை என்றும் நிலையானது. ஒருவர் நம்பவில்லை என்றால் அவர் விருப்பம். உண்மைக்கு ஏதும் குறைவு ஏற்படாது. இன்றைய விஞ்ஞானிகள் மறுபிறவி உண்டு என்று நிரூபித்திருக்கிறார்கள். சில மதங்கள் பூமி ஒரு இடத்தில் அசையாமல் இருப்பதாகவும், சூரியன் பூமியைச் சுற்றி வருவதாகவும் நம்பியிருந்தன. சில விஞ்ஞானிகள் இந்த மத நம்பிக்கை பொய் என்று நிரூபித்தவுடன், அவ்விஞ்ஞானிகளை வேட்டையாடி உயிரோடு தீயில் எரித்துக் கொன்றார்கள்.

இது உண்மையில் நடந்த நிகழ்ச்சி. (ஸ்பானிஷ் இன்க்விசிஷன்). ஸ்பெயின் நாட்டில் விஞ்ஞானிகளை சாத்தானின் தூதர்கள் என்று பெயரிட்டு தண்டனை அளித்தார்கள். பல விஞ்ஞானிகள் கொல்லப்பட்டார்கள். மிகவும் பழங்காலத்தில் அல்ல.100 -200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இதையெல்லாம் மீறி நாம் முன்னேற்றம் அடைகிறோம். ஆனால் இன்று நம் நாட்டில் பயங்கரமான சூழ்நிலையில் வாழ்கிறோம். விலைவாசி மிக வேகமாக அதிகரிக்கிறது. ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக மிகவும் வீழ்ச்சி அடைந்து விட்டது. சிலர் வெட்கமில்லாமல் லஞ்சம் வாங்குகிறார்கள். சில காலத்துக்கு முன்  லஞ்ச ஊழல் கண்டுபிடிக்கப்பட்டால், அத்துறையின் தலைமை அதிகாரி, மற்றும் அமைச்சர்கள் தங்கள் பதவியை விட்டு விலகி, லஞ்ச ஊழலுக்கு எதிராக தங்கள் ஆதரவைத் தெரிவிப்பது வழக்கமாக இருந்தது. இன்று பல துறைகளில் லஞ்ச ஊழல் மிக மலிந்து விட்டது. காமன் வெல்த் விளையாட்டுகளின் போது நடந்த ஊழல் காரணமாக பல அதிகாரிகளும் அமைச்சரும் சிறைக்கு சென்றனர்.

சில நாட்களுக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தங்கள் பதவிகளுக்குத் திரும்பி விட்டனர். பார்லிமெண்ட் விவாதங்களில் பங்கேற்கின்றனர். 2 ஜி ஊழலில் மாட்டியவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜெயிலுக்குச் சென்றிருந்தாலும் அவர்கள் உடல் நலம் முன்பை விட நன்றாகத் தேறியிருக்கிறது. சிறைச் சாலையிலும் அவர்களுக்கு ஒரு வசதிக் குறைவும் இல்லை. ஒரு வேளை அவர்கள் சாப்பிட்டதை (பணம்) ஜீரணிக்கச் சிறை சென்றார்களோ என்னவோ? (சிரிப்பு) இப்படிப்பட்ட அதிகாரிகள் / அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட கோப்புகள் (ஃபைல்கள்) அரசு அலுவகங்களில் தீக்கிரையான சம்பவங்களைப் பற்றி செய்திகள் வருகின்றன. காணாமல் போகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் இப்படி நடந்திருக்கிறது. மற்ற இடங்களிலும் நடக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மக்களின் இதயம் எரிகிறது. அரசு அலுவகங்களில் முக்கியமான ஃபைல்கள் வைக்கப் படும் அறைகளில் தீப்பிடிக்காமல் இருக்க பல ஆயத்தங்கள் செய்யப் பட்டுள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? நிலக்கரி ஊழல் சம்பந்தமான 175 ஃபைல்கள் ஒரு நாள் திடீரென்று காணாமல் போய் விட்டதாகச் செய்தி வந்தது. சம்பவங்கள் நம் நாட்டில் நடந்ததே கிடையாது இன்று பகலிலேயே திருடி விட்டு அதன் தடயங்களை அழித்து விடும் வழக்கம் வந்திருக்கிறது. இந்த நிலை நம் நாட்டில் இருப்பது உண்மையிலேயே மிகவும் வருந்தத்தக்கது. மக்கள் ஒன்று சேர்ந்து ஊழலை எதிர்க்க வேண்டும். அதற்கான வேளை வந்து விட்டது. இல்லையா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

கே: குருதேவா ! சோம்பேறித்தனத்தை எப்படி போக்கலாம்? இந்தக் கேள்வியைக் கேட்க நினைத்து எனக்கு ஒரு மாதமாகி விட்டது !

குருதேவர்: அடுத்த வருடம் இதற்கு விடை சொல்வேன். (சிரிப்பு). உனக்கு விடையளிக்க நான் ஏன் அவசரப்பட வேண்டும் ? உடனடியாக விடையளித்தாலும் உனக்கு ஒரு பயனும் கிடையாது. எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சோம்பேறியாக இரு. ஒரு நாள் உனக்கே அலுத்து போய் விடும். மனிதனுக்கு சுலபமாக சலிப்பு ஏற்படுகிறது, உனக்கு போதும் என்று தோன்றுகிறதோ, புது வழிகள் தென்படும். நான் ஏன் என் தொண்டையை வாட்டிக் கொள்ள வேண்டும்? உன் விடையை சொல்லும் நாளை நான் தள்ளிப் போட்டுக் கொண்டேயிருப்பேன்.

அஷ்டவக்ர மகரிஷி, “சோம்பேறியைப் போல மகிழ்ச்சியானவன் வேறு யாரும் இல்லை” என்று சொல்கிறார். சோம்பேறித்தனத்தை புகழ்கிறார். “உன் மனதில் எந்த ஆசையும் வராத அளவு சோம்பேறியாக இரு. பசியெடுத்தால் தான் நீ சமையலறைக்கு செல்வாய்” என்று சொல்கிறார். நான் சொல்கிறேன். அதுவும் வேண்டாம். இன்று பசி எடுத்தால், சாப்பிடுவதை ஒரு நாள் தள்ளிப் போடு. நாளைக்குச் சாப்பிட்டு கொள்ளலாம். அல்லது ஒரு மாதம் கழித்துச் சாப்பிட்டு கொள்ளலாம். உனக்குத் தாகம் எடுத்தால் தாகத்தைத் தணித்துக் கொள்ள, நீர் பருக  என்ன அவசரம்? பின்னால் பார்த்துக் கொள்ளலாம். தண்ணீர் தானாக உன் வாய்க்கு வரும் வரை ஓய்வாகப்படுத்திரு. (சிரிப்பு)

அதே போல் கோபம் வரும் போதும், யாரையோ சபிக்க விரும்பினாலும் சோம்பேறித்தனமாக இரு. பேராசையால் தவறான காரியம் செய்ய வேண்டும் என்று தோன்றும் போது சோம்பேறியாக இரு. ஆனால் இப்படிப்பட்ட நேரங்களில் உனக்கு சோம்பேறித்தனம் இருப்பதில்லை. சொல்லப் போனால் மிக விரைவாகச் செய்கிறாய். யாரையோ சபிக்கத் தோன்றினால் சில நொடிகள் கூட தாமதிப்பதில்லை. உடனே சபிக்கிறாய். இல்லையா ? வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் 100 % சோம்பேறித்தனமாக இருந்தால் நீ உண்மையில் அறிவாளியாகலாம். நிஷ்காம கர்ம யோகியாக மாறி விடலாம். (செய்யும் காரியத்தில் பலனை எதிர்பார்க்காதவர்) ஆனால் அப்படி இருப்பது மிக மிகக் கடினம். 100 % கடவுளை நம்பாமல் இருக்க முடியாது. அதே போல 100 % சோம்பேறியாகவும் இருக்க முடியாது.

கே: குருதேவா ! நான் ஒரு பத்திரிக்கையாளன். ஒரு நல்ல பத்திரிக்கையாளருக்கு தேவையான குணங்கள் என்ன என்று தயவு செய்து விளக்குங்கள்?

குருதேவர்: மக்களுக்கு உண்மையை பக்குவமாக எடுத்துரைப்பது முதல் குணம். சில சமயம் உண்மை மிகவும் கசப்பானதாக, மக்களின் இதயத்தை பிளப்பது போலிருக்கக் கூடும். அவர்கள் உற்சாகத்துக்கு முற்றுப் புள்ளி வைப்பது போலிருக்கலாம். அவர்கள் அந்தச் செய்தியைக் கேட்டு, பயத்தின் பிடியில் சிக்கி, பாதுகாப்பில்லாதவர்களைப் போல் உணர்வார்கள். உண்மையை வெளியிடும் போது மக்களுடைய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் குலைக்கக் கூடாது. வரப் போவது, இப்போது இருக்கும் நிலையை விட உயர்வாக இருக்கும் என்று மக்கள் நம்ப வேண்டும். செய்தியை உண்மைக்குப் புறம்பில்லாமல் வெளியிட வேண்டும். அதே சமயம் மக்களுடைய நம்பிக்கைக் கிரணங்களைத் தூண்டும் படி, எப்போதும் ஒளிவிடும் படி இருக்க வேண்டும்.

அப்படி செய்யாவிட்டால் மக்கள் மன நோய்களுக்கு இரையாகி, மன உளைச்சலால் (டிப்ரஷன்) வருந்துவார்கள். உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் மன உளைச்சல் என்ற நோய் இருந்ததே இல்லை. அதனால் தான் ஹிந்தியிலோ, சமஸ்கிருதத்திலோ அதற்கான வார்த்தை இல்லை. இந்திய மருத்துவ முறைப்படி டிப்ரஷன் என்ற நோயே கிடையாது. இதிலிருந்து நம் பாரம்பரியம், கலாசாரம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தது என்பதை அறியலாம்.

கே: குருதேவா! இன்று தூக்கமின்மை என்ற வியாதியால் பலர் அவதிப்படுகிறார்கள். பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் இது அதிகமாகக் காணப்படுகிறது. யோக சாதனை மற்றும் தியானத்தால் இந்த வியாதியை தீர்க்க முடியுமா? எனக்கும் இந்த அனுபவம் இப்போது வர ஆரம்பித்திரூக்கிறது.

குருதேவர்: ஆம் ! இவ்வியாதியை யோக சாதனைகள் மற்றும் தியானம் மூலம் குணப்படுத்த முடியும். நீ யோக நித்திரை மற்றும் யோக ஆசனங்களை தினந்தோறும் செய்யலாம். அது கட்டாயம் உதவும். அதோடு கூட சங்கு புஷ்பி, மேத்யரசாயனம் முதலிய ஆயுர்வேத மருந்துகளை உண்பதால் பலன் கிடைக்கும். கஸ்கஸ் சாப்பிடுவதும் உதவும். தமிழ்நாட்டில் இதை அதிரசம் என்று சொல்வார்கள்.  ஒன்றிலிருந்து ஒன்றரை டேபிள் ஸ்பூன் கஸ்கஸ் எடுத்து பொடி செய்து பால் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம். நன்றாக ஆழ்ந்த உறக்கம் வரும்.

நீ வேறு வியாதியால் வருந்தினால் பொதுவான வியாதிகளை குணப்படுத்தும் மருந்துகள் அடங்கிய ஆயுர்வேத மருந்துப் பெட்டியில் இருக்கும் (வீட்டு மருத்துவர் என்ற ஆயுர்வேத மருந்துகள் அடங்கிய பெட்டி) மருந்துகளிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கே: குருதேவா ! அதிக ஞானம் வருத்தத்தை உண்டாக்குமா ? என் தந்தையின் வருத்தத்துக்கு அதிக ஞானம் காரணம் என்று நினைக்கிறேன்.

குருதேவர்: இல்லை. அப்படி நடக்க முடியாது. முதலில் அதிக ஞானம் என்று ஒன்றும் கிடையாது. உதாரணத்துக்கு, மழை பெய்கிறது என்று தெரிந்து கொள்வது ஞானம். அதில் அதிக ஞானம் அல்லது குறைந்த ஞானம் என்ன இருக்கிறது? மழை விட்டு விடும் போது அதை அறிவதில் அதிகம் அல்லது குறைவு என்ன இருக்கிறது ? அதிகமான ஞானம் என்று ஒன்றும் கிடையாது. நீ உன் அறிவை மிகவும் உபயோகித்தால் (எந்த நிகழ்வையும் மிக அதிகமாக சிந்தித்துக் கொண்டிருந்தால்) வாழ்க்கை ருசியில்லாமல் எந்த உணர்ச்சியும் இல்லாமல் போய் விடும். நீ உன் அறிவை மட்டுமே உபயோகிப்பாய். இது ஒருவரை இயல்பாக வைக்காமல் உள்ளுக்குள் பாதுகாப்பில்லாமல் ஆக்கி விடும்.

கே: சில நாட்களுக்கு முன் நீங்கள் கறுப்பு கண்ணாடி அணிந்ததைப் பார்த்தேன். வாழ்க்கை என்னும் அதிக சூரிய ஒளியிலிருந்து காப்பதற்காக நீங்கள் எங்களுக்கு சுதர்சன கிரியா என்ற கறுப்பு கண்ணாடியை கொடுத்திருக்கிறீர்கள் என்று எண்ணினேன். எப்போது நான் ஆத்ம ஞானம் என்ற தொப்பியை அணிய முடியும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

குருதேவர்: ஆத்ம ஞானம் என்பது தொப்பி அல்ல. வேண்டும் போது அணிந்து கொண்டு வேண்டாத போது கழற்றி வைக்க முடியாது. அது உன் தலை முடி போன்றதும் அல்ல. வேண்டும் போது வளர்த்துக் கொள்ளவும், வேண்டாத போது நீளத்தைக் குறைத்து வெட்டிக் கொள்ளவும் முடியாது. ஆத்ம ஞானம் என்பது உனக்குள் ப்ரகாசிக்கும் ஒளி. அந்த ஒளி எப்போதும் குறைவதில்லை.  மறைவதும் இல்லை. அது அதிகமாக ஒளிர்வதும் அல்லது மங்குவதும் இல்லை. எப்போதும் மாறாமல் இருக்கும் ஒன்று. அதை நீ அறிய வேண்டும். நீ ஆடாமல் அசையாமல் ஆத்மாவில் ஒன்றியிருக்கும் போது க்ஷண நேரத்தில் அந்த ஒளியை அறிவாய்.

சமஸ்கிருத மொழியில் ஒரு பழமொழி உண்டு. “ப்ரத்ய – பிக்ய – ஹ்ருதயா “. அதன் பொருள் உள்ளேயிருக்கும் ஒளியை அறிவது. அந்த ஒளியில் லயித்திருப்பது.