வெளியேற ஒரே வழி

ஆகஸ்ட் 13, 2013 பெங்களூரு, இந்தியா

தெய்வீகத்தின் உருப்படிவம் சத்சித்ஆனந்தம். தெய்வீகத்தின் அண்மைக்கு செல்லும் போது உள்ளூரப் பேரானந்தத்தை அடைகின்றோம்..

கே: குருதேவ்! பொது இடங்களில் ஒலிநாடாக்கள் மூலம் காயத்ரி மந்திரம் ஒலிபரப்பப் படுவதை கேட்டிருக்கின்றேன். அதற்கு தீட்சை எடுத்துக் கொள்ளுவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

குருதேவ்: நாம் இத்தகைய விபரங்களுக்கு பிறிதொரு சமயம் செல்லுவோம். கா-ய- த்ரி - மூன்று விதமான துன்பங்கள் இருக்கின்றன. மூன்று விதமான உடல்கள் இருக்கின்றன -தெரியக்கூடிய உடல், நுண்ணிய உடல், மற்றும் முறைமைப்படாத உடல். இந்த மூன்று நிலைகளிலுமே துன்பங்கள் உள்ளன.மனித வாழ்வில் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும். இது தான் காயத்ரியின் பொருள். காயத்ரியை பண்ணிசைப்பவர்கள் துன்பக் கடலைக் கடந்து பேரின்பத்தை அடைகின்றனர்.

கே: குருதேவ்! சமஸ்ருதத்தில் ஒரே சொல் தண்ணீர் மற்றும் அன்பைக் குறிக்கும் என்று கூறினீர்கள். அதன் தொடர்பில், சிவலிங்கத்திற்கு நீர் சமர்ப்பிப்பதில் ஏதேனும் முக்கியத்துவம் இருக்கின்றதா?

குருதேவ்: ஆம்! அது ஒரு குறியீடு. முன்காலத்தில், இரு கைகளிலும் நீர் ஏந்தி, சூரியனை உற்று நோக்கி நீர் சமர்ப்பிப்பார்கள். சூரியனை நோக்குவது மிக நல்லது. ஏனெனில் நமது கண்கள் ஒளி உணர்வுள்ளவை. சூரியனை உற்று நோக்குவதன் மூலம் சூரியனின் சக்தி, நமது உடலுக்குக் கிடைக்கும். இப்போது உலகெங்கிலும் சூரியனை உற்று நோக்குவது பற்றித் தெரிய வந்துள்ளது. மனிதர்கள் சூரியனை உற்று நோக்குவதால் பசி குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.

அன்போ,வலியோ பெருகும்போது உலகெங்கிலும் அதை வெளிப்படுத்த ஒரு சொற்றொடர் பயன்படுத்தப் படுகின்றது. அது என்ன சொற்றொடர்?என் மனதிலிருப்பதை கொட்ட விரும்புகின்றேன்" வெளியே கொட்டுதல் என்பது உங்களுக்குள் ஒரு அர்ப்பணிப்பு உணர்வை ஏற்படுத்துகின்றது. எனவே, சிவலிங்கத்திடம் நீரை அற்பணிக்கும் போது," என்னிடம் இருப்பவை எல்லாவற்றையும், நான் என்னவோ அவையெல்லாவற்றையும் உன்னிடம் அர்பணிக்கின்றேன் இறைவா" என்று உணருவதாகும். இது தான் பிரார்த்தனை" நமஹ் ந மஹஹ்" என்னுடையது என்று எதுவுமில்லை. வாழ்க்கை என்னுடையதில்லை. எல்லாமே உன்னுடையது"

ஆகவே, எல்லாவற்றையும் வெளிக்கொணருவது என்னும் குறிப்புணர்த்தும் முறையில், தண்ணீரை (சமஸ்ருதத்தில் அன்பு தண்ணீர் இரண்டுக்கும் ஒரே சொல்) சிவனுக்கு அற்பணிக்கின்றோம்.சிவனுக்குத் தண்ணீர் தேவை என்பது பொருள் அல்ல.

கே: குருதேவ்! வேதஞான பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் காயத்ரி மந்திரம், சந்தியாவந்தனம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். தாங்கள் சற்று விளக்கிக் கூற முடியுமா?

குருதேவ்: வாழ்கை என்பது மூன்று நிலைகளிலுள்ள விழிப்புணர்வாகும்- விழித்திருக்கும் நிலை, கனவு நிலை, உறக்க நிலை. விழித்திருக்கும் நிலை முடிந்து  கனவு நிலை துவங்கும் போது, கனவு நிலை முடிந்து உறக்க நிலை துவங்கும் போது ,உறக்க நிலை முடிந்து  விழிப்பு நிலை துவங்கும் போது ஏற்படும் சந்திப்பு நிலைகளில், அற்புதமான ஒன்று நிகழ்கின்றது. அது என்ன? இந்த மூன்றுமல்லாத ஒரு க்ஷண நேரத் தோற்றம்.
மனம் இந்த மூன்று நிலைகளை மட்டுமே அனுபவித்து அறிய முடியும். ஆனால் அதன் இடை நிறுத்தத்தில்,விழிப்பு,கனவு,உறக்கம் இவை மூன்றுமல்லாத ஏதோ ஒன்றை எங்கோ உணருகிறீர்கள்.அது தெய்வீகமானது. அது தான் படைப்பிற்கே அடித்தளமானது. க்ஷண நேரத் தோற்றமான அந்த நிலைதான் யோகா என்பது.

அது என்ன செய்கின்றது? பயங்களை எல்லாம் அகற்றி, வாழ்க்கைக்குப் பெரிய பரிமாணத்தை தருகின்றது. நாம் வாழ்கை என்பது உடல், மனம் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.இல்லை. வாழ்க்கை அதற்கும் அப்பாற்பட்டது. எண்ணங்கள், உணர்வுகள் இவற்றையெல்லாம் கடந்து ஒரு அசையா நிலைக்கு செல்வதன் பெயர் சந்தியா - வந்தனம் என்பது அத்தகைய உள்நிலையைப் போற்றுவது.

எப்போது சந்தியாவந்தனம் செய்கிறீர்கள்? நிலைமாற்றம் செய்கிறீர்கள். சூரியன் உதிக்கும் போது படைப்பெல்லாம் நிலை மாற்றத்தை அடைகின்றன. சூரியன் மறையும் போதும் நிலை மாற்றம் ஏற்படுகின்றது. எனவே வழக்கமாக, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் மற்றும் நண்பகல் வேளைகளில்,அமர்ந்து தியானித்து பிராணாயாமம் செய்கிறீர்கள். காயத்ரி மந்திரம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த மிகச் சிறந்த பிரார்த்தனைகளில் ஒன்று.
அது என்ன கூறுகின்றது? தெய்வீகத்திலேயே நான் திளைக்கட்டும், இறைமை என் குற்றங்களை எல்லாம் அழிக்கட்டும்.தெய்வ ஒளி என் பாவங்களை எல்லாம் பொசுக்கட்டும், தெய்வீக ஒளியினைப் போற்றி அதிலேயே அமிழ்ந்திருக்கின்றேன். என் அறிவை தெய்வம் உயிர்ப்பூட்டட்டும். நமது செயல்கள் எல்லாமே அறிவின் மூலமே நடக்கின்றன அல்லவா? எண்ணங்கள் தோன்றுகின்றன, பின்னர் நீங்கள் செயல்படுகின்றீர்கள்.

ஆகவே, நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளு கிறீர்கள். "என்னுடைய அறிவினை முழுவதுமாக ஏற்று நடத்தி, அதற்கு உயிர்ப்பூட்டுங்கள்," தியோ யோனப் பிரஜாயதாத் " தி என்றால் அறிவு."என் அறிவு உன்னால் (தெய்வீகம்) உயிர்ப்பூட்டப்பட்டு, வழி நடத்தப் படட்டும்" எண்ணங்கள் சரியானவையாக இருந்தால், செயல்கள் சரியானவையாகவே இருக்கும்.உள்ளுணர்வுடன் கூடிய எண்ணங்கள் ஏற்பட்டால் உங்கள் செயல்கள் பயனுள்ளவையாக இருக்கும்.எனவே நல்ல எண்ணங்கள் ஏற்படப் பிரார்த்திகின்றோம்." என் மனம் என்னுடைய முழு உயிர்சக்தி அனைத்தும் தெய்வீகத்தில் திளைத்திருக்கட்டும்" இதுதான் காயத்ரி மந்திரம்.

கே: பெண்கள் காயத்ரி மந்திரம் ஜபிக்கலாமா?

குருதேவ்: ஆம். பெண்கள் காயத்ரி மந்திரம் ஜெபிக்கக் கூடாது என்று எங்கும் கூறப் படவில்லை. துரதிருஷ்டவசமாக இடைப்பட்ட காலத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன. நமது ஆஸ்ரமத்தில், திரும்பக் கொண்டு வந்திருக்கிறோம். பல பெண்கள் கற்றுக் கொண்டு வருகிறார்கள்.

இது ஆணாதிக்க சமுதாயம். 'பெண்கள் காயத்ரி மந்திரத்தை கற்றுக் கூற ஆரம்பித்தால், அது அவர்களுக்கு அதிக சக்தியை அளிக்கும், குணப்படுத்தும் சக்தி மற்றும் சங்கல்ப சக்தியை அளிக்கும்.அவர்கள் எண்ணங்கள் ஈடேறும் ஏற்கனவே அவர்கள் சக்தியுள்ளவர்கள், இதன் மூலம் மேலும் சக்தியை அவர்கள் அடைய நாம் விடக்கூடாது என்று எண்ணிய ஆண்கள் காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் ஜபிப்பதைத் தடை செய்தார்கள்.இதனால் தான் ஒரு சிறு பிரிவைச் சார்ந்தவர்கள் இதை பாதுகாக்கப்பட்ட ஒரு ரகசியமாக கொண்டார்கள். சாதாரண மக்களுக்கு யோகாவும் ப்ராணாயாமமும் கூடக் கற்றுத் தரப்படவில்லை 

ஏனெனில் அது மனோ சக்தியைக் கூட்டும். ஒருவனின் ஆத்மபலத்தையும் அதிகரிக்கும். அதனால் தான் அச்சிறு பிரிவினர் யாரையும் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ, பயிற்சி செய்யவோ அனுமதிக்க வில்லை. ஆனால் நாங்கள் அது சரியல்ல இது மனித இனத்திற்கே உரிமையானது என்று கூறுகின்றோம்.என்ன நம்பிக்கை, என்ன சமயம் சார்ந்தவராக இருந்தாலும், ஒவ்வொருவரும், பிராணாயாமம், தியானம் , பண்ணிசைப்பு இவற்றால் பயன் அடைய வேண்டும். பல மருத்துவமனைகளில் " ஓம் " ஜபத்தைப் பயன் படுத்துகிறார்கள். சென்னையில், மருத்துவ மனைகளில் பல்வேறு விதமான நோய்களிலிருந்து விடுபட  ' ஓம் 'நாமத்தை  ஜெபிக்கிறார்கள். அது மிகவும் சக்தி வாய்ந்தது.

கே: குருதேவ், மக்கள் ஒரு பிறவியில் செய்யும் பாவங்களுக்கு இறைவன் அடுத்த பிறவிகளில் தண்டனை வழங்குவது ஏன்?தண்டனை வழங்கப்படும் போது அதற்கான காரணம் என்ன என்று தெரிந்துகொள்வது  நன்றாக  இருக்கும் இல்லையா?

குருதேவ்: கர்மாவில் பல்வேறு வகைகள் உள்ளன. சில விஷயங்கள் இப்போது செய்யப்பட்டால் உடனேயே பலனளிக்கும். நீங்கள் நெருப்பில் கை வைத்தால் அது இப்போது சுடுமா அல்லது நாளைக்கு சுடுமா? இப்பொழுதே சுடும். ஆனால் ஒரு மாங்கொட்டையை நீங்கள் அது வளர்ந்து பழம் தருவதற்காக நடுகின்றீர்கள் என்றால் அது எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்? ஆறு ஆண்டுகளுக்குப் பிறகே உங்களுக்கு பழம் கிடைக்கும். அருபலா மரத்தினை நட்டு வளர்த்தால் அது பழம் தருவதற்கு பத்து ஆண்டுகள் பிடிக்கும்.

ஒருவர் ஒரு இரும்புத் தொழிற்சாலையை துவங்கி நடத்தினால், லாபம் தர துவங்குவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும். லாபத்தை அவனது குழந்தைகளே அனுபவிப்பார்கள். தொழிற்சாலையை நன்முறையில் நடத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சிரமப்படுபவர், அதன் பலனை அனுபவிப்பதில்லை.அவரது அடுத்த தலைமுறையினர் அதில் வரும் லாபத்தின் பலனை அனுபவிக்கின்றனர். 

பகவத் கீதையில் "கஹனா கர்மனோ கதி', அதாவது கர்மாவின் வழிகள்  புரிந்து கொள்ள முடியாதவை' என்று சொல்லப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஒருவரின் கர்மா, கூட்டு கர்மா, ஒரு இடத்திற்கான கர்மா என்று கர்மாவில் பல வகைகள் உள்ளன.  ஒவ்வொரு இடத்திற்கும் அதற்கான கர்மா உள்ளது. இடத்தில் சுனாமி ஏற்பட்டு அங்குள்ள பலரும் இறக்கின்றனர். அந்த இடத்தில் மட்டும் ஏன் அத்தகைய அழிவு  ஏற்படவேண்டும்?அதுவே அந்த இடத்தின் கர்மா ஆகும். கர்மாவைப் பற்றிய ஆராய்ச்சியில் ஆழ்ந்து சென்றால் மிகவும் வியப்பாக உள்ளது. நமது இந்து மதத்தின் உபநிஷதத்தில் இருக்கும் 6 அத்தியாயங்களில் ஒன்று ' கர்ம மிமாம்ச ' என்ற அத்தியாயம். அதில் எல்லா வித கர்மங்களையும் பற்றி பேச பட்டிருக்கிறது.

அந்த புத்தகம் மிகவும் பெரியது. அது தெரிந்த அறிஞர்கள் இப்பொழுது யாரும் இல்லை. 35 - 40 வருடங்களுக்கு முன்பு பெனாரசில் ஒரே ஒரு பெரியவர் ,இந்த புத்தகத்தை படித்தவர் இருந்தார். இப்பொழுது இதை படித்த அறிஞர் ஒருவருமே இல்லை.அதேபோல புத்தர்களும் இதை பற்றி நிறைய படித்திருக்கிறார்கள். ஜைனர்களும் இந்த கர்மாவை பற்றி நிறைய ஆராய்ச்சி பண்ணி இருக்கிறார்கள். ஆனால் அனைத்தையும் விட உத்தமமானது பிறருக்கு சேவை செய்வது தான்.

பிறர்க்கு சேவை செய்வதாலும், யாருக்கு அமைதி தேவை படுகிறதோ அவர்க்கு உதவி புரிவதாலும் உனக்கு நல்ல கர்மா கிடைக்கிறது. அதனால் தான் கருணை காட்டுவது ஒவ்வொருவரின்  வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும், தியானம் பண்ணுவதால் கெட்டகர்மா குறைகிறது. கருணை காட்டுவதால் நல்ல கர்மா கிடைக்கிறது. இரண்டுமே ஒன்றோடு ஒன்று இணைந்து செயல் பட வேண்டும். உள் மனதின் ஆழத்தில் சென்று ஆழ்ந்த அறிவையும் அசைக்க முடியாத ஸ்திர தன்மையையும் அமைதியையும் காணுங்கள், அதனுடைய வெளிப்பாடு அபரிமிதமான அன்பு தான். வாழ்க்கையில் இரண்டு முக்கியமான விஷயங்கள் - ஆழ்ந்த அறிவும் அன்பும் தான்.

நீங்கள் இறக்கும் பொழுது இரண்டு கேள்விகள் தான் கேட்கபடும் - எவ்வளவு அறிவு அல்லது ஞானம் பெற்றீர்கள் - எவ்வளவு அன்பு கொடுத்தீர்கள் என்று கேட்கப்படும்.

கே: குருதேவ், உங்களுக்கு கனவுகள் வருமா?

குருதேவ்: என்னுடைய தேசத்திற்காக ஒரு கனவு உண்டு  -  ஒரு ஊழல் அற்ற, ஹிம்சை அற்ற, மன அழுத்தமற்ற, சந்தோஷமான  சமுதாயம் வேண்டும் என்று ஒரு கனவு உண்டு.