ஸ்வதர்மா என்பது என்ன ?

07 ஜூன் - 2013 – பெங்களூரு - இந்தியா.



கே: குருதேவ்! ஸ்வதர்மா என்பது என்ன? என்னுடைய ஸ்வதர்மம் என்ன என்பதை எப்படி அறிந்து கொள்ளுவது?

குருதேவ்: உங்களுடைய இயல்புபடி ஏற்படும் செயல்முறை தான் ஸ்வதர்மா என்பது. உங்களுடைய திறமை, சாமர்த்தியம், உங்களது இயற்கையான ஆற்றல் மற்றும் உங்களது கடமை (கர்மா) இவற்றுக்கேற்ப செயல்படுவது. எந்த செயல் உங்களுக்கு பயத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தாமல் இருக்கின்றதோ அது தான் ஸ்வதர்மம். அதற்காக, இதை தவறாக புரிந்து கொண்டு, "நான் மது அருந்தாமல் இருந்தால் அமைதியின்றி இருக்கிறேன்" என்று கூறாதீர்கள். தவறு. அது முற்றிலும் தவறு. எல்லா சமயங்களிலும், ஸ்வதர்மத்தின் காரணமாக நீங்கள் அமைதியின்றி இருப்பதில்லை. ஸ்வதர்மத்தை கடைப்பிடிக்காவிடில், அமைதியின்மை காணப்படும். பகவத் கீதையில்,"ஸ்வதர்மே நிதானம் ஸ்ரேயாஹ் பரதர்மோ பயாவஹாஹ்" (3.35)பிறரிடம் பெருமையாகக் காட்டிக்  கொள்வதற்காக உண்மையல்லாத ஒன்றை செய்யும் போது பயத்தை உணருகின்றோம்; ஏனெனில் அது மெய்யல்ல, இதய பூர்வ மானதல்ல. ஆனால், இதயபூர்வமான, மெய்யான ஒன்றைச் செய்யும் போது பயம் ஏற்படுவதில்லை. ஒருவர் பொய் பேசும் போது, நிச்சயமாக உள்மனதில் பயத்தை உணருகின்றார். அதுவே உண்மை பேசும் ஒருவர் ஒரு போதும் பயப்படுவதில்லை.உண்மை பேசுவதும், உண்மைக்கு இணங்கி இருப்பதும், மிகுந்த பலத்தை அளிக்கின்றது,அல்லவா? அது தான் ஸ்வதர்மா என்பது.

வாழ்வில் எது நம்மிடம் இயல்பாக வந்தடைகிறதோ, அது நமக்கு நிறைவையும், வளத்தையும் அளிக்கின்றது. நம்முடைய இயல்புடன் ஒத்து செயல்படும் போது, நம்முள்ளேயே நாம் வளர்கின்றோம். எது நம்மை மேம்படுத்துகின்றதோ அதுவே நமது ஸ்வதர்மம். தர்மம் என்பது, நமது மனம், அறிவு, நினைவாற்றல், மற்றும் உள் ஆத்மா இவற்றை இணைத்து, ஒத்திசைய செய்வது. ஸ்வதர்மத்தை கடைப்பிடிக்கும் போது அது வளர்ச்சி அடைகின்றது.

கே: குருதேவ்! பகவத் கீதையில், கடவுள் ஒவ்வொரு இடத்திலும் இருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். இதை அன்றாட வாழ்வில் ஒருவர் எப்படி உணருவது?

குருதேவ்: பாருங்கள்! ஞானத்திற்கு இரண்டு கோணங்கள் உள்ளன. ஒன்று போதா-ஞானமே, மற்றொன்று அதை நடைமுறையில் பொருள் புரிந்து கொண்டு உணருவது. உங்கள் வீட்டிலுள்ள கதவுகள், மேஜைகள், நாற்காலிகள் அனைத்தும் மரத்தினால் செய்யப்பட்டவை என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் நாற்காலிக்குப் பதிலாக மேசையையோ, கதவுக்குப் பதிலாக நாற்காலியையோ பயன்படுத்த முடியாது.அல்லவா?கட்டில் மேஜை, நாற்காலி அனைத்துமே ஒரே பொருளினால்(மரம்) செய்யப்பட்டிருந்தாலும், ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றை உபயோகப்படுத்த முடியாது. ஏனெனில் ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டவை,தனித்தனிப் பயன்பாட்டிற்கு உரியவை. அது போன்று, இளைஞர், முதியவர் அனைவரிடமும் ஒரே கடவுள் குடிகொண்டிருக்கிறார். 

அனைவரிடமும் ஒரே தெய்வீகத் தன்மை என்பதால், குழந்தைகளின் காலில் விழுந்து வணங்கினாலோ  முதியோருக்கு ஆசி அளித்தாலோ, உங்களைப் பித்து பிடித்தவன் என்பார்கள். உங்களிடம் ஏதோ கோளாறு என்று எண்ணுவார்கள்.ஆகவே, ஒவ்வொருவருக்கும் தகுந்தாற்போல் நீங்கள் நடந்து கொள்ளும் முறை மாறுபட வேண்டும். அனைவரிடமும் ஒரே மாதிரி நடந்து கொள்ள முடியாது. ஆனால்  ஒரே சம்பாவ -அதாவது ஒரே தெய்வீகத் தன்மையை உங்களை சுற்றியுள்ள எல்லோரிடமும்,எல்லாவற்றிலும் உணர வேண்டும்.

இந்த அத்வைத ஞானத்தைப் புரிந்து கொண்டு, மனதில் இருத்திக் கொண்டால், உங்கள் ஆத்மாவில் நீங்கள் அழுத்தமாக நிலைப்படுத்தி கொள்ளலாம். அப்போது, எல்லாவற்றிலும், ஒரே விழிப்புணர்வுத் தன்மையாயினும் அவரவரை அதனனன் இயல்புக்குத் தகுந்தவாறு அணுக வேண்டும் என்று புரிந்து கொள்வீர்கள். அதாவது, சாமர்த்தியமாகப் பிரித்துணர்ந்து, உங்களைச்  சுற்றியுள்ள எல்லாவற்றிலும், உள்ள ஆழ்நிலை ஒருமை நிலையை உணருவீர்கள். 

கே: குருதேவ்!என் கணவரை மகிழ்விப்பதற்காக நான் என்ன செய்தாலும், அவர் சந்தோஷமாகவே இருப்பதில்லை. என்னைக் குறை கூறிக்கொண்டே இருக்கின்றார். நான் என்ன செய்வது?

குருதேவ்:இததான் அவரது பழக்கம் என்று அறிந்த கொண்ட பின்னர் என் சஞ்சலப் படுகிறீர்கள்? அவரை அப்படியே ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள். நீங்கள் சந்தோஷமாக இருங்கள். நீங்கள் பாதிக்கப் படாமல் இருக்கின்றீர்கள் என்றுணர்ந்து கொண்டால் ஒருவேளை, அவர் மாறி விடத் துவங்கலாம். ஒவ்வொருவரிடமும் ஏதோ சில எதிர்மறைக் குணங்கள் இருக்கும். உங்களை தூண்டி விட்டு உறுதியாக்கலாம். நீங்கள் உறுதியானவுடன் அவர்களும் மாற தொடங்குவார்கள். வாழ்க்கையில் எல்லாமே மாறிகொண்டிருக்கும். சில விஷயங்கள் மாறாமலும் இருக்கும். இவ்விரண்டையுமே நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

கே: குருதேவ்! இந்தியாவில் பசுவதை என்பது அதிகமாகிக் கொண்டே வருகின்றது. அதைத் தடுக்க பாராளுமன்றத்தில் ஏதேனும்,கடுமையான சட்டம் கொண்டு வரமுடியுமா?

குருதேவ்: நமது நாட்டில், சுதந்திரத்திற்கு முன்பு இருந்தததில் 20% பசுக்கள் மட்டுமே தற்போது இருக்கின்றன. முன்பு இருந்ததைக் காட்டிலும் விலங்குகளின் வளம் என்பது மிகவும் குறைந்து விட்டது. நாட்டின் பல இடங்களில் பால் தட்டுப்பாடு காணப்படுகின்றது. வட இந்தியாவில் சில இடங்களில் விற்கப்படும் இனிப்பு வகைகள் உண்பதற்கு ஏற்றவை அல்ல என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். யூரியா மற்றும் சில ரசாயனப் பொருட்களை சேர்த்து அவற்றைச் செய்கிறார்கள். அத்தகைய இடங்களில் பல்வேறு விதமான கலப்படங்கள் செய்யப்படுகின்றன. கோயா செய்ய, பல ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி, இனிப்பு வகைகளைச் செய்கிறார்கள். இதை வாங்கி உட்கொண்ட பலர் இறந்து விட்டார்கள், அநேக பேர், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அடிப்படைப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படும் போது, கலப்படம் செய்யத்  துவங்குகிறார்கள். தட்டுப்பாடு இல்லையெனில் கலப்படம் இருக்காது. விலங்குகளின் வளத்தை அதிகரித்து, பசுக்களின் எண்ணிக்கையை கூட்ட முயற்சிக்க வேண்டும்.

இந்தியப் பசுக்களின் பாலுக்கும், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட பசுக்களின் பாலுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றிய ஒரு ஆராய்ச்சியை அண்மையில் பார்த்தேன். இறக்குமதி செய்யப்பட பசுக்களின் பாலிலுள்ள ப்ரோடீன் A1 ப்ரோடீன் என்று அழைக்கப்படுகின்றது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் ஆகியவற்றுக்கு காரணமாகின்றன. A1 ப்ரொடீனினால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதே சமயம் மற்றொரு வகையான ப்ரோடீன் இருக்கின்றது, அது A2 ப்ரோடீன் என்று அழைக்கப்படுகிறது. A2 ப்ரோடீன் தாய்ப்பால், இந்தியப் பசுவின் பால் மற்றும் ஆட்டுப்பாலில் உள்ளது. எனவே தாய்ப்பால், இந்திய பசும்பால் மற்றும் ஆட்டுப்பாலில் உள்ள சேர்மம் ஒரே மாதிரியானது. இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு, பசு ஒரு தாயை போல மதிப்புடன் வணங்கப்பட்டது. இந்த உணர்வலைகள், பசுவின் DNA யில் A1 ப்ரோடீன் அல்லாமல் A2 ப்ரோடீன் சுரக்க வழி செய்தது. இந்தியப் பசுக்களின் பால் வீரியமுள்ளதாகவும், கான்சர் போன்ற நோய்களுக்கு பயன்படுத்த கூடியதாகவும் இருந்தது. ஆகவே, பசுவதை எப்படியும் தடுக்கப்பட வேண்டும். அதற்கான கடுமையான சட்டம் ஏற்பட வேண்டும். அதை விட முக்கியமாக, மக்களுக்கு, இத்தகைய செய்திகள் அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

கே: குருதேவ்! நேற்று தாங்கள் இறைமை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் என்று கூறினீர்கள். ஏன் வறுமை, வெள்ளம் இவையெல்லாம் ஏற்படுகின்றன?

குருதேவ்: எந்தப் பிரச்சினையுமே இல்லாத ஒரு உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். எந்தப் பிரச்சினையும்,பதற்றமும் இல்லாத ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒருவன் காலையில் எழுந்து, உணவருந்தி, அலுவலகத்திற்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி,உண்டு உறங்குகிறான்.திரும்பத் திரும்ப அதையே காட்டிக் கொண்டிருந்தால், அந்தப் படத்தைப் பார்ப்பீர்களா?அத்தகைய திரைப்படத்தை ரசிப்பீர்களா? எப்போது ஒரு திரைப்படத்தை விரும்பிப் பார்ப்பீர்கள்? ஒரு திரைப்படத்தில் வில்லன், பதற்றம், சில பிரச்சினைகள் என்று இருந்தால் "ஒ! இது நல்ல திரைப்படம்" என்று கூறுவீர்கள். அது போல,இந்த உலகம் என்பது கடவுளுக்கு ஒரு திரைப்படம் போன்றது. வெள்ளத்தினால் யாரும் மறையவில்லை. அவர்கள் வேறு ஒரு உடலெடுத்து மீண்டும் வருவார்கள். நமக்கும் செய்வதற்கு ஏதாவது வேண்டும்.பிரச்சினைகளே இல்லாமல், அனைவரும் உடல் நலத்துடன் மிக மகிழ்ச்சியாக இருந்தால் கருணை என்பதற்கே இடம் இருக்காது. யார் மீது கருணை காட்டுவீர்கள்? கருணை போன்ற பண்புகள் மறைந்து விடும்.  நமது பிறப்பின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்காகவே பிரச்சினைகள் இருக்கின்றன.


கே: நான் எவ்வாறு பித்துபிடிப்பதை தாண்டி வருவது? மிக எளிதாக ஒருவர் மீது அன்புகொண்டு பித்துப் பிடித்து, பின்னர் அதனால் வேதனை அடைகிறேனே?

குருதேவ்: உங்களுக்கு அதிக அளவில் ஒய்வு நேரம் இருக்கின்றது என்று நினைக்கிறேன். நீங்கள் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். நீங்கள் இத்தகைய இளம் வயதில் இவ்வாறு கசக்கப்படுவது சரியல்ல. நீங்கள் இன்னும் பூ போன்று மலர வில்லை. மொட்டாகவே இருக்கிறீர்கள். யாரையும் உங்களைக் நெருங்க அனுமதிக்காதீர்கள்.அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கின்றது. இப்போது உங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். எல்லோரையும் கவருங்கள், ஆனால் அங்கேயே தேங்கி விடாதீர்கள்,முன்னேறிச் செல்லுங்கள். அதுதான் சூத்திரம்.

கே: குருதேவ்! நான், ''ஒரு யோகியின் சுயசரிதை" என்னும் புத்தகத்தில், இமயமலையில் யோகிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்குச் செல்வதற்கு ஒரு சிறப்பு செய்முறை நுட்பத்தைக் கையாள்வதாகப் படித்தேன். உண்மையா? நாமும் அதை கையாள முடியுமா?

குருதேவ்: இல்லை, அப்படி எதுவுமில்லை. நீங்கள் இமாலயத்தில் எங்கு சென்று பார்த்தாலும் அப்படி ஒரு நுட்பத்தைக் காண முடியாது.

கே: குருதேவ்! சில அதிவேகக் கேள்விகள் கேட்கலாமா?

குருதேவ்: சரி கேளுங்கள்.

தாங்கள் யார்?

உங்களையே  கேட்டுக்கொள்ள சரியான கேள்வி.

முற்பிறவியில் நீங்கள் யார்?

அது ரகசியம். பிறிதொரு சமயம் கூறுகிறேன்.

கடவுள் என்பது என்ன? யார்?

எது மற்றும் யார் கடவுள் இல்லையோ அது.

கடவுளை எப்படி உணருவது?

அமைதியாக இருங்கள்.அவரைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். அவர் உங்களைப் பற்றிக் கவலைப்படட்டும்.

எவ்வாறு வன்முறையற்ற, அழுத்தமற்ற உலகம் இருக்க முடியும்?

வாழும் கலையை பரப்புவதன் மூலம்

பூமியின் எதிர்காலம் என்ன?

உங்களைப் போன்றவர்கள் போலப் பிரகாசமாக 

சமயம் என்பது என்ன?

சமயம் என்பது உங்களை சரியான வழியில் நடத்திச் செல்லக் கூடியது.

உண்மை என்பது என்ன?

எது விவரிக்க முடியாததோ,எது தவிர்க்க முடியாததோ அது.

எது நேர்மறை? எது எதிர்மறை?

உங்களை உயர்த்துவது நேர்மறை, உங்களை வீழ்த்துவது எதிர்மறை

குரு என்பவர் யார்?

யார் இந்தக் கேள்விக்குப் பதில் கூறுகிறாரோ அவர்.

மனம் என்பது என்ன?

எது கேள்வி கேட்கிறதோ அது.

நீங்கள் படிக்கும் போது பதற்றம்  ஏற்பட்டால் உங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். எல்லா மாணவர்களும் கட்டாயம் காரட் சாப்பிடவேண்டும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள். உங்களுக்குத் தேவை வைட்டமின் A.  அது காரட்டில் அதிகம் இருக்கின்றது. ஆகவே அதிகம் காரட் எடுத்துக் கொள்ளத் துவங்குங்கள். சரியான உணவு மிக அவசியம். சரியான உணவு எடுத்துக் கொண்டால் நோயற்று இருப்பீர்கள். சரியாகச் சாப்பிடாமல் இருப்பதாலேயே உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. பல சமயங்கள் உடலுக்குச் சரியான உணவு என்பதை விட வாய்க்கு ருசியான உணவு என்பதையே உண்ண விரும்புகிறோம். உடலுக்கு நன்மை தரும் உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இரண்டு நீம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது வயிற்றிற்கும் நரம்பு மண்டலத்திற்கும் மிக நல்லது. உங்களுக்குத் தெரியுமா? மகாத்மா காந்தியின் ஆஸ்ரமத்தில் தினமும் நீம் சட்னி செய்து வைப்பார்கள். ஏனெனில் அது மனம், உடல் வயிறு அனைத்திற்கும் நல்லது.உடல் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். திரிபலாவும் மிக நல்லது. உடலில் உள்ள சமமின்மை சரிப்படுத்தும். ஆகவே, நாம் உடலுக்கு நன்மை தரும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.தவிர பண்ணிசைக்க வேண்டும்.

இன்று ஒரு கட்டுரையில் "ஓம் என்பது வெறும் மந்திரமல்ல அது மருந்தும் கூட" என்று படித்தேன். ஒரு நாளில் மூன்று முறையாவது "ஓம்" என்று ஜபிக்க வேண்டும். "ஓம் நமோ நாராயணாய " அல்லது "ஓம் நமசிவாய" என்று தினமும் ஜபிக்க வேண்டும். இவை மகாமந்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றைத் தினமும் பண்ணிசைத்துக் கூறுவது மிக அவசியம். நல்ல உணவை எடுத்து கொள்ளுங்கள், ஆயுர்வேத மருந்துகளை உபயோகியுங்கள், தினமும் பண்ணிசையுங்கள், எப்போதும் புன்முறுவலுடன் இருங்கள்.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் என்பவை இருக்கும். அவை வரும், போகும்.எந்தப் பிரச்சினையும் எப்போதும் தங்கி இருக்காது. எனக்குத் தேவையானது எனக்குக் கிடைக்கும் என்னும் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்.