உங்களிடம் இருப்பதை மட்டுமே நீங்கள் கொடுக்க முடியும் !!!


மார்ச் 13 - 2013 - பெங்களூர்- இந்தியா



கே: குருதேவ். "உங்களுடைய உரிமைகளை விட்டுக் கொடுக்கும் போது சுதந்திரம் உண்டாகின்றது. மேலும் உங்களுக்கு உரிமையானவற்றை யாரும் எடுத்து சென்று விட முடியாது" என்று நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். அப்படியென்றால், என்னுடைய உரிமைகளை யாராவது பறிக்கும் போது நான் எனக்கு உரிமையானது என்னிடமே திரும்பி வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டுமா அல்லது  என் உரிமைக்காகப் போராட வேண்டுமா?

குருதேவ்: உங்கள் உரிமைகளை யாராவது பறித்து சென்று விட்டனர் என்று நீங்கள் நினைத்தால் முதலில் நீங்கள் உங்களது எண்ணத்தை திருத்திக் கொள்ள வேண்டும்.  அது உங்களுடைய உரிமையாக இருந்தால் யாரும் உங்களிடமிருந்து அதை பறித்து செல்ல முடியாது. நீங்கள் துணிந்து நின்று உங்கள் உரிமைகளை நீங்களே எடுத்துக் கொள்ள வேண்டும்.

எதன் மீதும் உங்களுக்குள்ள அதிகார உணர்வை விட்டு விடுங்கள். எதன் மீதாவது உங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று நீங்கள் நினைத்தால் அதை விட்டுவிடுங்கள்.  அதிகாரம் என்பதே சரியான வார்த்தை. உங்களுக்கு நான் சொல்வது புரிகின்றதா?  உங்கள் அதிகாரத்தை நீங்கள் மிகவும் நேசிப்பவரிடம் கொடுத்தால் அது நிச்சயம் உங்களிடமே திரும்பி வரும். பொதுவாக நாம் பிறரை கட்டயாப்படுத்தி நம் அதிகாரத்தை செலுத்த விரும்புகின்றோம்.

உங்கள் மனைவியிடம் உங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் நீங்கள் அதனை உபயோக்கிக்காமல் அதிகாரத்தை மனைவியிடமே விட்டுக் கொடுத்து விட்டால்  அது சுதந்திர உணர்வை உண்டாக்கும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகின்றதா? உங்கள் குழந்தைகளிடம் உங்களுக்கு அதிகாரம் உள்ளது. நீங்கள் அதனை பயன்படுத்தாமல் அதிகாரத்தை குழந்தைகளிடமே விட்டு விடும் போது  அது அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கின்றது. நாம் நேசிப்பவர்களிடம் அதிகாரத்தை   கட்டாயமாகத் திணிக்காத போது அது சுதந்திர உணர்வை உண்டாக்குகின்றது.

நீங்கள் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தால், நிச்சயமாக உங்களுக்கு அந்தப் பள்ளிக் குழந்தைகளின் மீது அதிகாரம் உள்ளது. உங்கள் அதிகாரத்தை பிரயோகித்தால் குழந்தைகள் உங்களை விட்டு விலகி ஓடுவார்கள். பொதுவாக அப்படித்தானே நடக்கின்றது? அதே போல் உங்கள் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் மீது நீங்கள் அதிகாரம் செலுத்தினால் வேலை செய்யுமிடம் அவர்களுக்கு இதமானதாக இருக்காது. ஆகவே இங்கே நீங்கள் உங்கள் அதிகாரத்தையும் உரிமையையும் விட்டுக் கொடுக்க வேண்டும்.

அதிகாரத்தை யார் விட்டுக் கொடுக்க முடியும்? முழு அதிகாரத்தையும் தன்னிடம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விட்டுக் கொடுக்க முடியும். அது தானம் அளிப்பதை போன்றது. ஆனால் அதிகாரம் பறிக்கப்படுவதென்பது உங்களிடம் இல்லாத பணத்தை பிறருக்கு கொடுக்க முயற்சி செய்வது போன்றது. முதலில் உங்களிடம் பணமே இல்லாத போது நீங்கள் எப்படி கொடுக்க முடியும்? உங்களுடையது என்று நன்றாக தெரிந்த உரிமைகளை மட்டுமே விட்டுக் கொடுக்க முடியும். அது அன்பினால் உண்டாகும் ஒரு செயல். அவற்றை யாராவது பறிக்க நினைத்தால் நீங்கள் எதிர்த்து நின்று போராட வேண்டும். திரும்பிப் பெற வேண்டும் புரிகின்றதா? இப்போது நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? உங்கள் உரிமைகளை திரும்பி பெற காத்துக் கொண்டு இருக்கின்றீர்களா?

உங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு இருந்து அதனை சில குண்டர்கள் உங்களிடமிருந்து பறித்து விட்டால், வீட்டின் மீதான உங்கள் உரிமையை விட்டு கொடுத்து விட வேண்டுமா? இல்லை. எதிர்த்து நின்று காவல் துறையினரிடம் சென்று  நல்ல வக்கீல் ஒருவரையும் பார்த்து உங்கள் உரிமையை திரும்பப் பெறுவதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஆனால் அந்த சொத்தின் மீதான உரிமையை நீங்கள் இறப்பதற்குமுன் யாருக்காவது கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அது யாராலும் உரிமை கோரப்படாத சொத்தாகி விடும் அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமாகி விடும். இந்த கிரகத்தை விட்டு செல்வதற்கு முன்பு சொத்தின் மீதான உங்கள் உரிமையை யாருக்காவது மாற்றிக் கொடுத்து விடுங்கள்.

கே: எனக்கு அடிக்கடி இரவில் கெட்ட கனவுகள் தோன்றுகின்றன. எனக்கு பயமாக இருக்கின்றது. தயவு செய்து உதவி செய்யுங்கள் குருதேவ்.

குருதேவ்: பயப்படத் தேவையில்லை. ஓம் நமசிவாய என்றோ அல்லது ஜெய் குருதேவ் என்றோ அல்லது இரண்டையுமே இரவில் உறங்கச் செல்வதற்கு முன் உச்சாடனம் செய்யுங்கள். நம் நாட்டிலும் உலகின் பிறநாடுகளிலும் குழந்தைகள் பிரார்த்தனை செய்ய பழக்கப்படுத்தப்பட்டு இருந்தனர். இப்போதும் அதைப் பின்பற்றுகின்றனரா? உங்களில் எத்தனை பேர் இதனை செய்கின்றீர்கள்?  (சிலர் கைகளை உயர்த்துகின்றனர்) பாருங்கள், இங்குள்ள சிலரே பின்பற்றுகின்றனர். உறங்க செல்வதற்கு முன் நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும், குழந்தைகளையும் பிரார்த்தனை செய்ய பழக்கப்படுத்த வேண்டும்.ஒரு ஸ்லோகமோ அல்லது நீங்கள் வணங்கும் இறைவனின் நாமத்தையோ உச்சாடனம் செய்யுங்கள்.  அல்லது அந்த நாளை உங்களுக்கு அளித்தமைக்காக இறைவனுக்கு நன்றியை தெரிவியுங்கள். சமஸ்கிருதத்தில் தான் பிரார்த்தனை செய்யவேண்டும் என்றில்லை. இறைவனுக்கு சமஸ்கிருதம் மட்டுமின்றி எல்லா மொழிகளும் புரியும். மொழி முக்கியமில்லை. வழிபடும் உணர்வே முக்கியமானது.

எனவே, உறங்க செல்வதற்குமுன் கைகளைக் குவித்து இறைவனை வணங்குங்கள்.  "இறைவா! இந்த நாளை அளித்தமைக்காக மிக்க நன்றி. இந்த இரவு நான் நன்றாக உறங்க வேண்டும் என்றும் நாளை மிகவும் நல்ல நாளாக அமைய வேண்டும் என்றும் ஆசீர்வதியுங்கள்."

இது போன்ற சில வரிகளை உச்சாடனம் செய்யலாம் அல்லது இறைவனை நினைத்து உங்களுக்குத் தெரிந்த இறைவனின் நாமங்களை உச்சாடனம் செய்யலாம்.  உங்கள் இஷ்ட தெய்வம் அல்லது உங்கள் குரு அல்லது ஒரு முனிவரின் நாமத்தினை உச்சரிக்கலாம். பிரார்த்தனை செய்து பின் அனைத்தையும் அவர்களிடம் அர்ப்பணம் செய்து விட்டு உறங்கச் செல்லுங்கள்.  

பண்டைக் காலத்தில் குழந்தைகள் தங்கள் தாய் தந்தையரை வணங்கிவிட்டு உறங்கச் செல்வார்கள். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோரிடம் அத்தகைய பக்தி இருப்பதில்லை. பெற்றோர்கள் தங்களுக்குள் நாள் தோறும் சண்டையிட்டு கொன்டிருந்தால் குழந்தைகளுக்கு அவர்களை வணங்க வேண்டும் என்ற உணர்வு எவ்வாறு உண்டாகும்? எப்போதும் சண்டையிட்டு கொண்டிருப்பவர்களை எப்படி கடவுளாக மதிப்பது  என்று அவர்கள் நினைக்கலாம்.

ஒரு வேளை நீங்கள் கடவுள் நம்பிக்கை அல்லது வேறு எந்த நம்பிக்கையும் இல்லாதவராக இருந்தால் பரவாயில்லை. கடவுள் நம்பிக்கை வேண்டும் என்ற கட்டாயமில்லை. அப்படியென்றால் நீங்கள் சில நிமிடங்களுக்கு அமைதியாக உங்களுடனேயே அமர்ந்து மனதை சாந்தப்படுத்துங்கள். ஆன்மா தூய்மையானது;  நிரந்தரமானது" என்று உங்களுக்கு நினைவுபடுத்தி கொள்ளுங்கள். அஷ்டவக்ர கீதையில் "அஹோ அஹம் நமோ மஹியம்" அதாவது "என்னை நானே வணங்குகின்றேன்" என்று சொல்லப்பட்டுள்ளது. நமக்குள் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாத போது மட்டுமே நாம் இவ்வாறு வணங்க முடியும். இந்த எண்ணத்தோடு  உங்களை நீங்களே தளர்த்திக் கொள்ளுங்கள். இதை மட்டுமாவது செய்துவிட்டு  சிறிது நேரம் தியானம் செய்து விட்டு பிறகு தூங்கச் செல்லுங்கள். அப்போது  உங்களுக்கு கெட்ட கனவுகள் தோன்றாமல் நல்ல உறக்கம் உண்டாகும்.

கே: வட இந்தியாவைத் தவிர வேறெங்கிலும் பிரம்மாவிற்கு கோவில்கள் இல்லாதது ஏன்?

குருதேவ்: பிரம்மா ஏற்கெனவே உலகைப் படைத்து விட்டார். அவரது வேலை முடிந்து விட்டதனால் அவருக்கென கோவில்கள் இல்லாமல் இருக்கலாம். வேலை  முடிந்து விட்டதனால் மக்கள் ஏன் அவரை வணங்கப் போகின்றார்கள்?

கோவில்கள் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன்  ஆகிய அனைத்துமே வெவ்வேறு சக்திகள். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட    லிங்க புராணத்தில், "பிரம்மா சிவோமய அஸ்து சதாசிவ" என்று சொல்லபட்டுள்ளது.

கே: குருதேவ், அரசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் என் தோழிக்கு கடந்த ஏழு  மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. இருந்தாலும் அவள் மனம் தளராமல் புன்னகையோடு இருக்கின்றாள். அவள் இதனை தங்களுக்கு தெரிவிக்கும் படியும் கேட்டுக் கொண்டாள்.

குருதேவ்: ஆம். எனக்கும் ஏற்கெனவே இது தெரியும். அரசு அலுவலகங்களில் பணி  புரியும் சிலருக்கு ஓராண்டு காலமாக சம்பளம் அளிக்கப்படவில்லை என்பது வியப்பாக உள்ளது.  தங்கள் செலவை எப்படி சமாளிக்கின்றனர்? விமானப் போக்குவரத்துப் பணியில் இருப்பவர்களும் அவ்வாறே எட்டு அல்லது ஒன்பது மாதங்களாக சம்பளம் பெறவில்லை. இது ஒரு பொறுப்பற்ற தன்மை. தங்களுக்கு   வேறு வேலை கிடைக்குமா என்று தெரியாத காரணத்தினால் அவர்கள் இந்த வேலையை விட்டுச் செல்ல முடியாது. என்றாவது ஒரு நாள் சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.  அவர்களுக்கு விரைவில் சம்பளம் கிடைக்க வேண்டுமென்று நாம் பிரார்த்தனை செய்வோம்.