தீவிரமான அக உள்நிலை மாற்றம்...


செப்டம்பர் 22 - 2012  - ஆச்சேன் - ஜெர்மனி 



இன்று நமது தலைப்பு ஐ டி - புதிய கோணங்கள்




என்னை பொறுத்த வரையில் ஐ டி என்றால் அக உள்நிலை மாற்றம். (Inner Transformation). நீங்கள் ஐ ஐ டி என்று குறிப்பிடுவது,தீவிரமான அக உள்நிலை மாற்றம் (Intense Inner Transformation). நமது உடல், மனம், மூச்சு எல்லாமே ஒரு தொழில் நுட்ப இயல்தாம்.நமது உடல் ஒரு இயந்திரம். விழிப்புணர்வு நிலை தான் அதை இயக்குகிறது. உடல் உருவாவதற்கும் இந்த விழிப்புணர்வு நிலையே காரணம்.நாம் அதை இன்று அலட்சியப் படுத்தி விட்டோம்.அதை சற்று கவனித்தால் வாழ்வில் ஒரு புதிய கோணத்தைக் காணலாம்.

விழிப்புணர்வு நிலையால் தான் இன்று உலகில், தொழில் நுட்பம்  உருவாகி  இருக்கிறது. ஒரு சிலரின் மனதில் புதிய எண்ணங்கள் தோன்றி அவை தொழில் நுட்பமாக உருவெடுக்கின்றன. அத்தகைய எண்ணங்கள்  எவ்வாறு  தோன்றின? அந்த எண்ணங்கள் எவ்வாறு தொழில் நுட்பமாக  உருவெடுத்தன? விழிப்புணர்வு மூலமாகத்தான்.

இன்று நம்மிடம் கை பேசிகள் உள்ளன. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கை பேசி என்பதே கிடையாது.எப்படி கை பேசிகள் உருவாயின? யாரோ ஒருவரின் விழிப்புணர்வில் கை பேசியை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. அதே விழிப்புணர்வு அந்த எண்ணம் வளர்ச்சியடைய உதவிற்று.அல்லவா? இந்த விழிப்புணர்வுதான் எல்லா விதமான படைப்பாற்றல், அறிவியல் கண்டுபிடிப்புகள், இசை வடிவங்கள், கலைகள், நாகரீக நடை உடை பாவனைகள், திரைப்படங்கள் மற்றும் உங்கள் கருத்தை கவரும் மற்ற எல்லாவற்றுக்கும் காரணமானது.

அறிவியல் கண்டுபிடிப்புகள்,கலைகள் ஆகியவற்றுக்கு அடிப்படையான இதே விழிப்புணர்வு நிலை தான் ஆனந்தத்திற்கும் நிலைக் களஞ்சியமாகும். மேலும் விழிப்புணர்வு தான், ஆரோக்கியம், அன்பு, கருணை ஆகிய அனைத்துமாக வெளிப்படுகின்றது. நமது மூளையில் உருவாகும் இந்த விழிப்புணர்வு நிலை, நமது உடலில் பல பகுதிகளிலும் இயங்கி பல்வேறு திறன்களை வெளிப்படுத்துகின்றது. இது தவிர இவ்விழிப்புணர்வு நிலை, அறிவுபூர்வமான தர்க்கம், உணர்ந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், உருவாக்குதல், ஆகியவற்றையும், அன்பு, கருணை, அமைதி மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை ஒரு கைபேசியின் நிகழ்ச்சி அமைப்புத் திட்டத்தை போன்று  வெளிப்படுத்தவும் செய்கிறது.

ஒரு கைபேசியின்  நிகழ்ச்சி அமைப்புத் திட்டத்தை பாருங்கள் அதில் ஒளிப்படக்கருவி,
(குருதேவ் கூடியிருக்கும் மக்களைப் படமெடுக்கிறார்) Twitter, (உங்களுக்கு என் twitter முகவரி தெரியுமா?@srisrispeaks) குறுந்தகவல், தொலைபேசி எண்கள் தொகுப்பு, கடிகாரம், இசை இயக்கி, (குருதேவ் கைபேசியில் பாடல் ஒன்றை இயக்கிக் காட்டுகிறார்). இப்போது இதை எவ்வாறு நிறுத்துவது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும் ! (ஒரு பொத்தானை அழுத்தி இசையை நிறுத்துகிறார்)  சில சமயங்களில் நமது மன எண்ண ஓட்டங்கள் இயங்கிக் கொண்டே இருக்கிறது அதை எப்படி நிறுத்துவது என்பதே தெரியவில்லை அல்லவா?

கைபேசியில்  நிகழ்ச்சி அமைப்புத் திட்டத்தை போன்றே நமது மூளையிலும் செயல்பாடுகள் உள்ளன. ஒன்றல்ல பல செயல்பாடுகள்.நமது விழிப்புணர்வு நிலையை இவை ஒவ்வொன்றிற்கும் திறந்து  நாம் செயல்படலாம். கலை அல்லது இசைக்கு மட்டுமே செயல்படுத்தினால் வாழ்வு முழுமை பெறாது.அறிவியல் தர்க்கம் இவற்றிற்கு மட்டுமே  செயல் படுத்தினாலோ அல்லது கேளிக்கைகளுக்கு மட்டுமே செயல் படுத்தினாலோ  வாழ்க்கை முழுமை அடையாது. ஒரு கை பேசியை இயக்கி அதன் பல்வேறு அமைப்பு  இயக்கங்களைப் பயன்படுத்துவது போல, இயற்கை அளித்துள்ள எல்லாத் திறன்களையும் இயக்கி செயல்படுத்த வேண்டும்.

நமக்குள் ஒரு எளிமை இருக்கிறது.நாம் அனைவரும் பிறக்கும்போது களங்கமில்லா எளிமையுடனேயே பிறந்திருக்கிறோம்.ஆனால் வளரும் போது அதை எங்கோ தொலைத்து விட்டோம்.நாம் வளரும் போது, புன்முறுவல், எளிமையாக இயல்பாக இருத்தல்  ஆகிய அனைத்தையும் நிறுத்தி  விட்டோம் அல்லவா?

ஆகவே, நுண்மையான உணர்ச்சி மற்றும் கூருணர்வு ஆகிய இரண்டும் அவசியம்.
தர்க்கரீதியான பகுத்தறிவு அவசியம். ஒருவர்  கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம்.உங்கள் அறிவைப் பயன்படுத்தி யோசியுங்கள்.அதுவே மனிதப்பிறவியின் முதன்மையான செயல்பாடு. எது ஒன்று பகுத்தறிவுக்கு  முரண்பாடானதாக இருக்கின்றதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம்.பகுத்தறிவு என்பதே முதன்மையானது; இதுவே நுண்மையான உணர்ச்சிக்கு வழி வகுக்கும்.

நுண்மையான உணர்ச்சி மட்டும் இருந்தால் போதாது.கூருணர்வும் மிக அவசியம்.கூருணர்வு என்பது இதய பூர்வமானது.நீங்கள் தர்க்க ரீதியாக சிறப்பாக சிந்திக்கலாம், ஆனால் மற்றவர் கருத்துக்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.பல சமயங்களில் தாங்கள் சிந்திப்பதையே செயலிலும் காட்டுவார்,அதனால் அவர்கள் சரியாக செயல்பட்டாலும் மற்றவர்களைப் புண்படுத்திவிடலாம்.

மிகுந்த கோபத்தைக் காட்டும் ஒருவர் தனது  கோபத்திற்கான காரணத்தை தர்க்கரீதியாக நியாயப் படுத்தினாலும் அவரது கோபம் மற்றவரைப் புண்படுத்தலாம். பிறரை மட்டுமல்ல அவரையே அது காயப்படுத்தலாம். ஆகவே கூருணர்வு என்பது இரண்டாவது முக்கியமான விஷயம்.

அன்றொரு நாள் ஒரு நிகழ்ச்சியின் பொது ஒரு பெண்மணி, சரியாக வேலை செய்யாத மற்றொரு  பெண்ணைத் திட்டிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் " நீங்கள் திட்டுவதால் அவர் மாறி விட்டாரா?” என்று கேட்டேன். அதற்கு அவர் "இல்லை" என்று பதில் கூறினார். "அப்போது அந்தப்பெண்ணைத் திட்டுவதால் என்ன பயன்? நீங்கள் உங்கள் உருப்படிவைத் தான் குலைத்துக் கொள்கிறீர்கள். சரியான, ஆக்கபூர்வமான கருத்தை கூட பெண்ணிடம் கோபமாகத் திட்டிக்கொண்டே சொல்வதனால் அவர் அதை ஒதுக்கித்தள்ளி விடுகிறார். அவருக்கு எதை உணர்த்த வேண்டும் என்று நீங்கள் திட்டுகிறீர்களோ, அதை அடைய முடியாவிட்டால் என்ன பயன்? என்று கேட்டேன்.அதற்கு அவர் " ஆம் மிகச்சரியாகக் கூறினீர்கள். நான் என் வாழ்கை முழுவதும் இப்படியே கோபப்பட்டு என்னைச் சுற்றிப் பல எதிரிகளை அடைந்து விட்டேன் என்றார்."

அதனால்தான் ஒரு கழுதையானது  குதிரை மாதிரி ஓடும் என்று எதிர்பார்க்கக் கூடாது" என்றேன். ஒரு கழுதையின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அது குதிரையைப் போல ஓடும் என்று எதிர்பார்த்தால் அது முடியாது.ஆகவே கழுதையைக் கழுதையாகவும், குதிரையைக் குதிரையாகவும் ஏற்றுக்கொள்ளுங்கள்.அப்போது கோபம் எப்படி வரும்?இதுதான் கூருணர்வு. மற்றவர்களின் உணர்வுகளையும்,தேவைகளையும் கூருணர்ந்து கொள்ளுதல்.இது இதய பூர்வமான குணமாகும்.

மிகவும் உணர்ச்சிபூர்வமாக செயல்படும் மக்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள்  பகுத்துணர்வை இழந்து விடுகிறார்கள். உணர்ச்சி வயப்பட்டு நீரில் மிதக்கும் நூலடை போன்று ஆகிவிடுகிறார்கள். இதுவும் சரியான நிலையல்ல. அறிவுபூர்வமாக செயல்படுவதற்கும் உணர்வுபூர்வமாக செயல்படுவதற்கும் மிகச்சரியான சமநிலை இருக்க வேண்டும். என்ன? நான் கூறுவது சரியா?

(சபையோர் "ஆம் ! சரி ! என்கிறார்கள்).

ஆகவே .நுண்மையான உணர்ச்சியும் கூருணர்வும் சரியான சமநிலையில் இருக்க வேண்டும் என்பது விழிப்புணர்வுத் தொழில்நுட்பத்தின் முதல் நிலை செயற்கூறு.  அடுத்தபடியாக  சாந்தம்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஏதாவது ஒரு கால கட்டத்தில் சில நொடிகள் அல்லது மணித்துளி கலேனும் சாந்தமான மன நிலையை உணருகிறார்.அந்த நிலையில், நிசப்தம் ஆன்மீக உணர்வு ஆகியவற்றை அனுபவிப்பது சாத்தியமாகிறது. நமது கைபேசிகளில் இந்த "நிசப்தம்''என்னும் செயல்பாடு அணைக்கப்பட்டு விடுகிறது! அல்லது பயன்படுத்தப் படுவதில்லை! நமது விழிப்புணர்வு நிலையிலும் இது பயன் படுத்தப்படுவதில்லை.ஆழ்ந்த அமைதியான  சாந்த நிலை என்பதை அடையத் தான்  வாழும் கலை உதவுகிறது. உங்கள் புன்முறுவலை கூடுதலாக்கித் தொண்டுணர்வை அதிகமாக்குகிறது. 

உங்களுக்குத் தெரியுமா?  ஒரு குழந்தை ஒரு நாளைக்கு 400 முறை புன்னகை புரிகின்றது.  ஒரு இளம்வளர் பருவத்தில் இருப்பவர் ஒரு நாளைக்கு 17 முறை மட்டுமே புன்னகை செய்கிறார். பெரியவர்கள் எப்போதும் சிரிப்பதே இல்லை. மேலும் மேலும் புன்னகையுடன்  இருப்பது என்பதையே வாழும் கலை உங்களுக்கு அளிக்கின்றது. புன்னகையோடிருத்தல் பிறருக்கு சேவை செய்தல்; உணர்ச்சிவசப்படுதல்  அதே சமயம் அறிவுக்கூர்மையுடன் இருத்தல்; அமைதி, தெளிவு இரண்டையும் அனுபவித்து உணர்தல் இவையனைத்துமே வாழும் கலை. 

கே:  குருதேவ், ஒழுக்கம், சுதந்திரம் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சமன்பாட்டை  ஏற்படுத்திக் கொள்வது எப்படி?

குருதேவ்: அவை இரண்டும் எதிர்மறையானவை போல் தோன்றினாலும் இரண்டும் ஒன்றை ஒன்று முழுமைப்படுத்துபவை. ஒழுக்கம் நமக்கு சுதந்திரத்தை கொடுக்கின்றது.குழந்தைப் பருவத்திலிருந்து ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் பல் தேய்த்தல் என்று நாம் கடைப்பிடித்து வந்த ஒழுக்கம் பல்வலி பற்சிதைவு  போன்றவற்றிலிருந்து நமக்கு விடுதலை அளித்திருக்கின்றது. இல்லையா? தவறாமல் மிதி செக்குருளை  பயிற்சி செய்யும் ஒழுக்கம் உங்களுக்கிருந்தால், உங்களுக்கு அதிகப்படியான கொழுப்பு மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து விடுதலை அளிக்கும்.

கே:  அனைத்துமே அமைதியான பின் என்ன  ஏற்படும்? அது மரணத்திலிருந்து எவ்வாறு வேறுபடும்?

குருதேவ்: மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அமைதி என்பது அனைத்து படைப்புத் திறனுக்கும் அன்னை போன்றது. அழகு, அன்பு ஆகியவற்றின் பிறப்பிடமும் அமைதிதான்.  உள்ளுணர்வு, புதிய கண்டுபிடிப்புகள், கவிதை  போன்ற அனைத்துமே அமைதி  நிலையிலிருந்து உருவாகின்றவை தான். சுதர்ஷன கிரியா கூட மௌனத்திலிருந்து உருவானது தான். உங்களில் பலர் சுதர்ஷன கிரியாவை அனுபவித்திருக்கின்றீர்கள். அதன் அருமையான பலன் உங்களுக்குத் தெரியும். 

இந்த முறை சுற்றுப்பயணத்தில் நான் தென்னிந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமேரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களுக்குச் சென்றேன். ஒரு மாதத்திற்கும் குறைவான நேரத்தில் நான் எல்லா இடங்களுக்கும் சென்றிருந்தேன்.   பிரேசில், அர்ஜென்டினா ஆகிய இடங்களில் இருந்த சிறைச்சாலைகளுக்கு நான் சென்றிருந்தேன். அர்ஜென்டினாவில் 5200 சிறைக் கைதிகள் வாழும் கலைப்பயிற்சியும்  சுதர்ஷன கிரியாவும் செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும்  கண்ணீர் நிறைந்திருந்தது. கண்ணீர் இல்லாமல் வறண்ட கண்களுடன் ஒருவர் கூட இல்லை. அவர்களது வாழ்க்கையில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியினை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். அவர்கள் சொன்னார்கள், " நாங்கள் முன்பு வெளியே இருந்தோம்.  ஆனால் சுதந்திரமாக இல்லை. இப்பொழுது நாங்கள் சிறைச்சாலைக்கு உள்ளே இருந்தாலும்  சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றோம். மிகவும் நன்றி. இந்த பயிற்சி எங்கள் வாழ்க்கையை முழுமையாக மாற்றி உள்ளது.

உங்களுக்குத் தெரியுமா? என்னுடன் சிறைச்சாலையை பார்வையிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வந்திருந்தனர். அவர்கள், "குருதேவ், இங்கே  நடந்திருப்பதை நம்பவே  முடியவில்லை. இதே போல் எல்லா சிறைச்சாலைகளிலும் நடக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்" என்று சொன்னார்கள். இந்த மறுமலர்ச்சியினைக் கண்டு அந்தப் பல்கைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. ஒரே நாளில் நான் அந்தப் பல்கலைக்கழகத்தின்  பழைய மாணவர்களில் ஒருவனாகி விட்டேன். நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் நம்மால் ஒரு வன்முறையில்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும். வன்முறையில்லாத சமுதாயம்,  நோயற்ற உடல், குழப்பமில்லாத மனம், தங்கு தடையற்ற அறிவு, துயரமில்லாத ஆன்மா ஆகியவையே  என்  நோக்கங்கள் ஆகும்.    

இன்று உலகில் என்ன பைத்தியக்காரத்தனங்கள்  நடக்கின்றன என்று பார்த்தீர்களா?  யாரோ ஒருவர் தயாரித்த திரைப்படத்தின் விளைவாக நாடுகள் பற்றி எரிகின்றன. ஏன்?  ஏனென்றால் அவர்களுக்கு மிகவும் அவசியமான கல்வியறிவு, வன்முறையின்மை பற்றிய அறிவு அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. 

கே: ஒரு குருவைப் பின்பற்றுவது என்பது இன்றும் அவசியமா?

குருதேவ்: இந்தக் கேள்வி எதற்கு? இதைக் கேட்பதன் மூலம் நீங்களாகவே ஒரு பொறியில் அல்லது வலையில் சிக்கிக் கொள்ளுகின்றீர்கள். நான் இக்கேள்விக்கு ஒரு பதில் அளித்து அதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நீங்கள் ஏற்கெனவே குருவைப் பின்பற்றுவதாக அர்த்தம்.  நான் குருவைப் பின்பற்றுவது அவசியமில்லை என்று சொல்லி  நீங்கள் அதனை ஏற்றுக்கொண்டு "சரி  நான் பின்பற்ற மாட்டேன்" என்று சொன்னால் நீங்கள் என் சொல்லை பின்பற்றுவதாக அர்த்தம். நான் சரி  குருவைப் பின்பற்றலாம் என்று சொல்லி நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் குருவை பின் பற்றியதாக அர்த்தம். ஆகவே நான் "இல்லை, வேண்டாம்" என்று சொல்வதே மேலானதாக இருக்கும். மிகவும் சுவாரசியமான கேள்வி.

கால் பந்தாட்டம் விளையாடுவதற்கு ஒரு பயிற்சியாளர் தேவை. உதை பந்தாட்ட வீரர் ஒவ்வொருவருக்கும் ஒரு பயிற்சியாளர் தேவை எந்த இசை எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் பயிற்சியாளர் தேவை. பள்ளிக்குச் செல்லும்போது நீங்கள் ஏதேனும் பாடத்தில் பலவீனமாக இருந்தால் ஒரு பயிற்சியாளர் அவசியம். அதே போல் தியானம் செய்தல், ஆன்மிகம் கற்றல் ஆகியவற்றின் ஆரம்ப நிலையில் ஒரு சிறிதளவு வழிகாட்டுதல் அவசியம். இல்லையா? ஆகவே தான் குருவைப் பின்பற்றுதல் அவசியம். நீங்கள் அவசியமில்லை என்று உணர்ந்தால் அது உங்கள் விருப்பம்.

கே: நான் செய்த ஒரு தவற்றின் குற்ற உணர்விலிருந்து என்னை விடுவித்துக்கொள்வது எப்படி? 
குருதேவ்:  தியானத்தின் மூலம் தான்.

கே: இங்கே ஐரோப்பாவில் தீர்த்து வைக்கப்பட வேண்டிய மிகப்பெரிய பிரச்சினை எது?

குருதேவ்:  ஐரோப்பாவில் 30 முதல் 40 சதவீதம் மக்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றார்கள் என்று நான் கேள்விப் பட்டிருக்கின்றேன். பலர் Prozac மருந்துகளைப்  பயன்படுத்துகின்றனர். பல சிறுவர்கள் ஆடிசத்தினால் (autism)  பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது மிகவும் வருத்தமளிக்கும் ஒரு விஷயம்.நாம் இதனை கவனிப்பது மிகவும் அவசியம். 

ஆகவே தான் தியானம், சுதர்ஷன் கிரியா,போன்றவை அவசியம். அவற்றை வாழ்க்கையில்  கடைபிடிக்கும்போது மகிழ்ச்சிகரமான ஒரு சமுதாயம் உருவாகும். இவற்றின் மூலம் ஒரு சந்தோஷ அலையை உருவாக்க முடியும் என்பது நிச்சயம். 

கே: நான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறேன். அதனால் என் மூச்சு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. அப்படியிருக்க, வாழும் கலை பயிற்சி எந்த விதத்தில் சிறப்பானது?  இந்தப் பயிற்சி எனக்கு அளிக்கக்கூடியதை உடற்பயிற்சி அளித்துவிடும் என்று நான் நினைக்கின்றேன்.  இந்தப் பயிற்சி எனக்கு எந்த விதத்தில் உதவக்கூடும் என்று தயவு செய்து விளக்குகின்றீர்களா? 

குருதேவ்: இந்த பயிற்சி உங்களுக்கு பல வழிகளில் உதவக்கூடும். அதனால் தான் இது இத்தனை பிரபலமாக இருக்கின்றது. உலகில் பல கோடி மக்கள் இப்பயிற்சியினை  செய்கின்றார்கள் என்றால் அதில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். 

அது மிகவும் ஆழ்ந்த, பரந்த, செறிவான அதே சமயம் மிகவும் எளிமையான ஒரு பயிற்சி.
இது வெறும் உடற்பயிற்சி மட்டுமில்லை.இது நம் சக்தியின் ஆன்மீக மேம்பாட்டுடன் கூடிய ஒரு  உடற்பயிற்சி. நீங்கள் இந்த பயிற்சி முடிந்து வெளியில் செல்லும்போது ஒரு பெரிய புன்னகையுடனும் மனதில் பெரும் திருப்தியுடனும் வாழ்க்கையில் ஒரு புதிய கோணத்தில் செல்வீர்கள் என்பது நிச்சயம்.   

நம் மனதில் நிறைய பாரபட்சங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். நாம் அவற்றை விட்டுவிட வேண்டும். நாம் உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் உணவை ஏற்றுக் கொள்கின்றோம். உலகின் அனைத்துப் பகுதியிலிருந்தும் இசையை ஏற்றுக்கொள்கின்றோம்.  ஆனால் அறிவு, மானுடம் சார்ந்த ஞானம் என்று வரும்போது மட்டும் பாரபட்சம் பார்கின்றோம். நாம் இந்த பாரபட்சங்களை வென்று வர வேண்டும். ஒவ்வொருவரும் என்னைச் சேர்ந்தவர்கள், இந்த உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்று உணர வேண்டும்.


விநாயகர் சதுர்த்தி


 

கணேசர் உருவம் எதைக் குறிக்கிறது?

கணேசா என்றால் உருவமில்லாத இறைவனைக் குறிக்கிறது. அடியவர்களின் நன்மைக்காக மகத்தான உருவத்தை உள்ளடக்கியது. “கண” என்றால் குழு என்று பொருள். இந்த உலகம் விதவிதமான சக்தியுள்ள அணுக்களின் குழுக்களால் ஆனது. இவ்வளவு வித்தியாசமான சக்திகளை உடைய குழுக்களை ஆள மிக மேன்மையுள்ள சட்டம் இல்லாவிட்டால் இவ்வுலகம் குழப்பத்தில் இருக்கும். இவ்வளவு சக்தி வாய்ந்த அணுக்களின் குழுக்களுக்கு, எல்லா சக்திகளையும் மீறிய தலைவன் “கணேசர்” (விநாயகர்) அவர் தான் எங்கும் வியாபித்திருக்கும் மிக மேன்மையான ஆத்மா (பரமாத்மா) ஆதி சங்கரர் கணேசரின் குணங்களை (சாரத்தை) அருமையாக விவரித்திருக்கிறார்.

“அஜம் நிர்விகல்பம் நிராகார மேகம்”

இதன் பொருள் கணேசர் என்பவர் பிறக்காதவர். குணங்களால் விவரிக்க முடியாதவர், உருவமில்லாதவர். அவர் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவின் இலட்சணம். இவ்வுலகம் தோன்றக் காரணமான சக்தியே கணேசர். இந்த சக்தியிலிருந்து தான் யாவும் வெளிப்படுகிறது. எல்லாமே அதில் போய் கலந்து விடும்.

கணேசர் எப்படி யானை முகத்தவர் ஆனார் என்ற கதை நம் எல்லோருக்கும் தெரியும். பார்வதி சிவனைக் கொண்டாடும் போது, தான் அழுக்கடைந்து விட்டதை உணர்ந்து, அந்த அழுக்கை திரட்டி ஒரு சிறுவனை உருவாக்கினாள். அச் சிறுவனை காவல் வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றாள்.

சிவபெருமான் திரும்பிய போது, அச் சிறுவனுக்கு அவரை அடையாளம் தெரியாததால், அவரை உள்ளே செல்ல அனுமதி மறுத்து விட்டான். எனவே சிவபெருமான் கோபமடைந்து அச் சிறுவனின் தலையை வெட்டி விட்டு, உள்ளே சென்றார். தலை வெட்டப்பட்ட சிறுவனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்வதி, சிவபெருமானிடம் முறையிட்டாள். அச் சிறுவன் தங்கள் பிள்ளை என்று தெரிவித்து எப்படியாவது அவன் உயிரைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டாள்.

சிவபெருமான் தன் உதவியாளர்களை அனுப்பி, யார் வடக்கு திசையில் தலை வைத்து தூங்குகிறாரோ, அவரின் தலையை வெட்டி எடுத்து வரும்படி சொன்னார். அவர்கள் அப்படியே சென்று ஒரு யானையின் தலையை எடுத்து வந்தார்கள். சிவபெருமான் அச் சிறுவனின் உடலில் யானையின் தலையைப் பொருத்தி அவனை உயிர்ப்பித்தார். கணேசர் பிறந்த கதை இது தான்.

இக் கதை நம்பும் படி இருக்கிறதா? ஏன் பார்வதியின் உடலில் அழுக்கு இருக்க வேண்டும்? எல்லாம் அறிந்த சிவபெருமானுக்கு தன் பிள்ளையை அடையாளம் தெரிய வில்லையா? அமைதியை தன்னுள் அடக்கிய சிவபெருமான் அப்படி முன்கோபத்தால் அவருடைய சொந்தப் பிள்ளையின் தலையை வெட்டினாரா? பின் ஏன் கணேசர் யானைத் தலையுடன் காட்சியளிக்கிறார்?

இதற்கெல்லாம் ஒரு ஆழமான பொருள் இருக்கிறது. பார்வதி என்பது சக்தியைக் குறிக்கிறது. கொண்டாட்டத்துக்கான சக்தியைக் குறிக்கிறது. அவள் அழுக்கடைந்து விட்டாள் என்று சொல்வது அதிகமான கொண்டாட்டம் மிக எளிதில் ராஜசிக் சக்தியாக மாறி, அந்த ஜுர வேகத்தில் உன்னை உன் மையத்திலிருந்து வெளியே தள்ளக் கூடும். அழுக்கு என்பது அஞ்ஞானத்தைக் குறிக்கிறது. “சிவா” என்றால் மிக மேன்மையான கள்ளமில்லாத தன்மை, அமைதி மற்றும் ஞானத்தைக் குறிக்கிறது.

கணேசா என்ற சிறுவன் சிவனைத் தடுக்கிறான். அஞ்ஞானம் ஞானத்தைத் தடுக்கிறது. அஞ்ஞானம் தலையின் குணம். ஞானத்தை அறிய வில்லை. அப்படியானால் ஞானம் அஞ்ஞானத்தை அழிக்க வேண்டும். அது தான் குறிப்பாக சிவபெருமான் சிறுவனின் தலையை வெட்டுவதாகச் சொல்லப் பட்டது. யானையின் தலை ஏன்? யானை ஞானசக்தி, கர்மசக்தி இரண்டையும் வெளிப்படுத்துகிறது.

யானையின் உன்னதமான குணம் ஞானமும், எதையும் (பெரு முயற்சியில்லாமல்) எளிதாகச் செய்யும் வல்லமையும். யானையின் தலை பேரறிவையும், ஞானத்தையும் குறிக்கிறது.யானைகள் தடையைச் சுற்றி நடப்பதில்லை. தடங்கி நிற்பதும் கிடையாது. தடையைத் தகர்த்து (உடைத்து) மேலே செல்லுகின்றன. தடைகளை வெல்ல பெருமுயற்சி தேவையில்லாததை இது குறிக்கிறது. எனவே கணேசரை வழிபடும் போது, நம்முள் இருக்கும் யானையின் குணங்கள் (சக்திகள்) தூண்டப்படுகின்றன. கணேசரின் பெரிய வயிறு உதார குணத்தைக் குறிக்கிறது. (தயாள குணம், தரும குணம்). எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் குறிக்கிறது.

கணேசரின் தூக்கிய கை, எதையும் காப்பதைக் குறிக்கிறது. பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன் என்பது போல. அவருடைய தாழ்த்திய கை, உள்ளங்கை வெளிநோக்கிக் காண்பிப்பது முடிவில்லாமல் கொடுப்பதையும், வணங்குவதற்கு அழைப்பதையும் தெரிவிக்கிறது. நாம் இந்த மண்ணில் ஒரு நாள் கலந்து விடுவோம் என்பதையும் குறிக்கிறது. கணேசரின் ஒற்றைத் துதிக்கை மனத்தை ஒருநிலைப் படுத்துவதை சிறப்பாகக் குறிப்பிடுகிறது. கணேசரின் ஆயுதங்களுக்கும் உள்ளடங்கிய பொருள் இருக்கிறது. அவர் கையில் இருக்கும் “அங்குசம்” விழிப்புணர்ச்சியைக் குறிக்கிறது. “பாசம்” கட்டுப் படுத்துவதைக் குறிக்கிறது. விழிப்புணர்ச்சியால் நிறைய சக்தி வெளிப்படுகிறது. சரியான கட்டுப்பாடு இல்லாவிட்டால் அச்சக்தி வீணாகி விடும்.

ஏன் கணேசர், யானை முகக் கடவுள், ஒரு சிறிய எலியின் (மூஞ்சூர்) மேல் பிரயாணம் செய்கிறார்? அது பொருத்தமில்லாமல் தோன்றவில்லையா? இதற்கும் ஒரு ஆழமான குறிப்பு இருக்கிறது. எலி தன்னைச் சுற்றிய வலையைக் கடித்துக் குதறிவிடும். எலி ஒரு மந்திரம் போல் நம்மைச் சுற்றிய அஞ்ஞானத்தின் பல உறைகளை வெட்டி, ஞானத்தை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது. அதுதான் யானை முக கணேசர்.

நம் ரிஷிகள் மிகவும் அறிவுடையவர்களாக இருந்தார்கள். இறைவனை வார்த்தைகளால் விவரிக்காமல் குறிப்புகளால் உணர்த்தினார்கள். வார்த்தைகளின் பொருள் காலப் போக்கில் மாறுகின்றன. ஆனால் சித்திரத்தினாலோ, குறிப்புகளாலோ உணர்த்தினால் அவை மாறாமல் இருக்கும். இந்த ஆழ்ந்த குறிப்புகளை மனதில் கொண்டு, யானை முகக் கடவுளின் ரூபத்தில், எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை உணர்ந்து, கணேசர் நம்முள்ளும் நிறைந்திருப்பதை அறிந்து கொள்வோம்.

சற்று நிதானித்துப் பாருங்கள் ! வாழ்கை எங்கே போகிறது?



 லீமா - கிழக்கு ஆப்ரிக்கா - 14 செப்டம்பர் 2012

இன்று நாம் என்ன விவாதிக்கலாம்? 

நான் பேச்சாளரின் பங்கை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கவனிப்பவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் எதைப்பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று அறிய விழைகிறேன். என்ன தலைப்பு என்று யோசியுங்கள். நமக்கு விருப்பமானதைப் பேசும்போது நாம் இயல்பான சூழ்நிலையில் இருப்பது நல்லது. முறை சார்ந்த, கட்டுப்படுத்தப்பட்ட சூழல் மெய்யறிவுக்கு உகந்ததல்ல. நான் எப்போதுமே இயல்பாகவே எதையும் செய்ய முற்படுவேன். ஆகவே நாம் அனைவரும் நம்மை சுற்றி -முன்னால், பின்னால் மற்றும் அருகில் அமர்ந்திருப்பவர்களை  வாழ்த்தி அவர்களை அறிமுகம் செய்து கொள்வோம். 

இப்போது ஒன்று கேட்க விரும்புகிறேன்? 

உண்மையாகவே நீங்கள் சுற்றி இருப்போர்க்கு  வாழ்த்தை தெரிவித்தீர்களா  அல்லது ஒரு சம்பிரதாயத்திற்காக செய்தீர்களா? இதை  நீங்கள் உங்களைச் சுற்றி இருப்போர்களிடம் ' நான் சம்பிரதாயத்திற்காகவே வாழ்த்தினேன் என்று கூற வேண்டாம். உங்களை நீங்களே நான் உண்மையாகவே வாழ்த்தினேனா என்று   கேட்டுக் கொள்ளுங்கள்.  விமானத்திலிருந்து இறங்கும் போது விமானப் பணிப்பெண் "இந்த நாள் நல்ல நாளாக அமையட்டும் " என்று வாழ்த்துகிறாள். அது உதட்டளவே ஆகும். ஆனால் நமது அன்னை, சகோதரி அல்லது நெருங்கிய நண்பர் இதையே கூறும்போது அதில் அதிர்வலைகள் உள்ளன. ஒருவர் அன்பைப் பற்றி இரண்டு மணி நேரம் பேசலாம். அதுவே ஒரு குழந்தையோ, நாயோ பேச்சு எதுவும் இன்றி அதிர்வலைகள் மூலமே அன்பை உண்மையில் வெளிப்படுத்த முடியும்.
 

மன அழுத்தத்துடன் இருக்கும் மக்களிடையே நீங்கள் சென்றமர்ந்தால் உங்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுவது போன்று இருக்கும்.அது போல்  மகிழ்ச்சியுடன் இருப்போர் மத்தியில் நீங்களும் மிகுந்த சந்தோஷமாக இருப்பீர்கள். உலகம் முழுமையும் அதிர் வலைகள் நிரம்பியது. நமது மனம், உடல், எண்ணங்கள் உணர்வுகள் அனைத்துமே அதிர்வலைகளை கொண்டவை ஆகும்.ஆனால் இந்த அதிர்வலைகள் மூலம் நமது நேர்மறை  உணர்வை அதிகரித்துக் கொள்ள நாம் எதுவுமே செய்வதில்லை. அல்லவா? எது  நமது அதிர்வலைகள் நேர்மறை உணர்வுகளை தூண்டுகிறது?  தியானம். மூச்சுப் பயிற்சியினால் தியானம் நிலைப்படுகிறது. தியானம் செய்ய மலைப்பகுதி களுக்கோ, இமாலயத்திர்க்கோ செல்ல வேண்டும் என்பதில்லை. உங்கள் வீட்டிலேயே செய்யலாம்.
 
 
 
தியானத்தின் பயன்கள் என்ன? ஏன் செய்ய வேண்டும்? நான் ஏற்கனவே கூறிய படி அதிர்வலைகள் நேர் மறை உணர்வுகள்  ஆகின்றன.
சில சமயங்களில் நாம் சிலரை சந்திக்கும்போது ஒரு எதிர்ப்புணர்வு ஏற்பட்டு அவர்களுடன் பேசுவதைத் தவிக்க விரும்புகிறோம். இதை கவனித்திருக்கிறீர்களா? வேறு சிலரை சந்திக்கும் போது, விருப்பத்துடன் அவர்களிடம் நிறைய அளவளாவ விழைகிறோம். இதுவும் அதிர்வலைகளினால் தான். அது போலவே சில சமயங்களில் சரியான எண்ணங்களும் சில சமயங்களில் முற்றிலும் தவறான சிந்தனைப் போக்கும் ஏற்படுகின்றன. அல்லவா? நமது விழிப்புணர்வு நிலையை அறிந்து கொள்ளாமலே இருளில் நடப்பது போன்ற நிலையில் இருக்கிறோம்.  உங்கள் உள்ளுணர்வுகளை அறிந்து கொண்டால் வாழ்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும், ஆரோக்கியம் மேம்படும், உறவுகள் பலப்படும், வன்முறை உணர்வுகள் குறையும். விருப்பங்கள் ஈடேறும்.
 

நான்கு வகையான மக்கள் இருக்கிறார்கள். முதல் வகை ஆசைகள் மேலும் மேலும் வளர்ந்து எதுவுமே நிறைவேறாமல் இருப்பவர்கள்.

இரண்டாவது வகை விருப்பங்கள் நிறைவேற அதிகம் உழைத்து நீண்ட காலத்திற்குப் பின்னர் அவை நிறைவு அடைவதைக் காண்பவர்.

மூன்றாவது, அதிக உழைப்பின்றி உடனடியாக தங்கள் ஆசைகள் நிறைவேறுவதைக் காண்பவர்.

நான்காவது, ஆசைகள் என்று ஆரம்பிக்கும் போதே அவை ஏற்கனவே நிறைவேறிய நிலையில் இருப்பதைக்  காண்பவர். 

இவற்றில் எந்த வகையில் இருக்க விரும்புகிறீர்கள்? நான்காவது ! சரியா? ஆம் இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். தாகம் என்று உணருமுன்பே தண்ணீர் தயாராக இருப்பதைப் போன்ற நிலை. இந்தியாவில்  ஒரு பழமொழி உண்டு. ''பல்லிருந்தபோது கடலை இல்லை. கடலை கிடைத்த போது பல்லில்லை''. நம்மில் பலர் இந்த நிலையில் இருக்கிறார்கள். மிக அதிகமாக உழைத்து சம்பாதித்து, பணம் அனைத்தையும் வங்கிகளில் சேமித்து,  இறந்து விடுகிறாகள்.அவர்களுடைய குழந்தைகள் தங்கள் பெற்றோர் விட்டுச் சென்ற பணத்திற்காக சண்டை இட்டுக்கொள்கிறார்கள்
 

உலகில் 70 % நீதிமன்ற வழக்குகள் சொத்துரிமை வழக்குகள் தாம். யாருமே தாம் சம்பாதித்ததை அடைய வழக்காடுவதில்லை. தங்களுடைய மக்கள் ஒருவருடன் ஒருவர் சண்டை இட்டுக் கொள்வதற்காகவே  ஈட்டிய பணத்தை வங்கியில் சேமித்து வைத்திருக்கிறார்கள். இது புத்திசாலித்தனமான செயலா? நமது ஆரோக்கியத்தின் பாதியை சம்பாதிப்பதற்காக செலவிட்டு, சம்பாத்தித்த பணத்தில் பாதியை ஆரோக்கியத்தை மீட்டுக் கொள்வதற்காக செலவழிக்கிறோம்.
 

இது சாமத்தியமும் அல்ல, சிக்கனமானதும் அல்ல. வாழ்க்கை எங்கே போகின்றது  என்று   நாம் அறிந்து கொள்வது அவசியம். புத்திசாலித்தனமான  கோமாளி  ஒருவரை பற்றி ஒரு கதை இருக்கின்றது. அவர்  ஒரு கழுதையின் மேல்  உட்கார்ந்து கொண்டிருக்க  அந்தக் கழுதை  ஓடிக்கொண்டிருந்தது. அது  பல முறை  சுற்றிச் சுற்றி அதே தெருக்களிலேயே  ஓடிக் கொண்டிருந்தது. கழுதையின் மேலிருந்த இந்தக் கனவானை  ஒருவர் " நீங்கள் மேலும் கீழும் பல முறை சென்று கொண்டிருப்பதைப் பார்க்கின்றேன். நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர் "எனக்குத் தெரியாது. கழுதையைக் கேளுங்கள்" என்று சொல்கிறார். பல நேரங்களில் நம் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கின்றது. நாம் வேலை செய்து கொண்டே இருக்கின்றோம். நோக்கம் என்ன என்பது தெரியாமலேயே பல செயல்களை செய்து கொண்டிருக்கின்றோம். இந்த இயற்கை நமக்கு அளித்திருக்கும் அனைத்தையும்  அனுபவிக்காமல் எதையோ செய்து கொண்டிருக்கின்றோம். 
 

மனம் கசப்புணர்வோடு இருக்கும் போது இந்த உலகில் எங்குமே  நீங்கள் மகிழ்ச்சியைக் காண முடியாது. ஆனால் மனம் இனிமையாக இருக்கும் போது எல்லா இடங்களிலும் இனிமையைக்  காண்பீர்கள்.  ஆகவே, நம்முள்ளே  ஆழத்தில் புதைந்திருக்கும் மகிழ்ச்சியை கண்டுகொள்வதே தியானம் என்பதாகும். அதை கண்டுகொண்டவுடன் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புவீர்கள் தெரியுமா? அந்த  ஆனந்தத்தை  எல்லோருக்கும் அளிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். 

"உங்கள் நோக்கம் என்ன?  நீங்கள் ஏன்  எல்லா நேரமும் உலகைச் சுற்றி எல்லா இடங்களுக்கும் ஓடிக்கொண்டிருக்கின்றீர்கள்? உங்களுக்கு என்ன கிடைக்கின்றது?" என்று மக்கள் என்னைக் கேட்கின்றனர். நான் அவர்களை கேட்கின்றேன்  நீங்கள் ஒரு அருமையான திரைப்படத்தைப்  பார்த்தால்  என்ன செய்கிறீர்கள்? உங்கள் அறையில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்பீர்களா, அல்லது தொலைபேசியை எடுத்து உங்கள் நண்பர்களை அழைத்து "! மிக அருமையான படம்.  நீங்கள் கட்டாயம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்" என்று சொல்வீர்களா? அப்படிச் சொல்வதனால் உங்களுக்கு என்ன கிடைக்கின்றது?  திரைப்படத் தயாரிப்பாளர்கள் உங்களுக்கு ஏதேனும் பணம்  தருகிறார்களா? அல்லது திரைப்பட நடிகர்கள் ஏதேனும் பணம் தருகிறார்களா? நீங்கள் செய்யும் தொலைபேசி அழைப்புகளிலிருந்து  உங்களுக்கு என்ன கிடைக்கின்றது? நீங்கள் ஏன் அப்படிச் செய்கின்றீர்கள் என்றால் பிறருடன்  பகிர்ந்து கொள்வதே ஆனந்தத்தின்  இயல்பு.  அதனால்தான்  அப்படிச் செய்கின்றீர்கள்.  பகிர்ந்து கொள்வதே  ஆனந்தத்தின் இயல்பு .

மகிழ்ச்சியில்  இரண்டு வகைகள் இருக்கின்றன. பற்றிக்கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி ஒரு வகை. இந்த மனப்பான்மையுடன்தான்  நாம் குழந்தைகளாகப் பிறக்கின்றோம். ஒரு குழந்தையை இங்கே விட்டால், அது சென்று அந்த மலரைப் பறிக்கும்.  இந்த தாளை  இழுக்கும்;  நாற்காலியை இழுக்கும்; அனைத்தையும்  தலை கீழாக மாற்றும்; பொருட்களைப் பற்றிக்கொள்ளும். ஒரு குழந்தை எல்லாவற்றையும் ஒரு கத்தியைக் கூடப் பற்றிப் பிடித்து வைத்துக்கொள்ளும். தன் கையைக் காயப்படுத்திவிடும் என்று தெரியாமல் ஒரு கத்தியைக்கூட  ஒரு குழந்தை பற்றிக்கொள்ளும். ஆனால் புத்திசாலித்தனமான  தாய்மார்கள் கத்தியிலிருந்து குழந்தையின் பிடியைத் தளர்த்துவதற்கென வேறு ஒரு பொருளைக் குழந்தையின் கையில் கொடுப்பார்கள். இல்லையா? 

குழந்தைகள் நல்லவை அல்லாதவற்றை பிடித்து வைத்துக் கொள்ளும் போது நீங்கள் அவர்களுக்கு வேறு ஏதாவது ஒன்றைக் கொடுக்கின்றீர்கள். ஆக, இவ்வாறு  பெற்று, பற்றிக்கொள்வது ஒரு விதமான மகிழ்ச்சி; குழந்தைத்தனமான  மகிழ்ச்சி.
மற்றொரு விதமான மகிழ்ச்சி கொடுப்பதினால் வரும் மகிழ்ச்சி. 
இங்குள்ள பல பெண்கள், குழந்தைகளோ, அல்லது விருந்தினர்களோ வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் என்ன செய்கிறீர்கள்? பல விதமான உணவு வகைகளை சமைத்து மேசையின் மேல் அலங்காரமாக வைக்கிறீர்கள். ஒரு அன்னையாக உங்களது மகிழ்ச்சி அப்படிக் கொடுப்பதில் இருக்கின்றது இல்லையா? தாத்தா பாட்டிகள்  சிறுவர்களுக்கு  அன்போடு பரிசுப் பொருட்களை கொடுத்து மகிழ்கிறார்கள். இது ஒரு பக்குவமடைந்த மகிழ்ச்சி. கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் பெறுவதில் இருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே பெற்று நாம் வாழ முடியாது. கொடுப்பதிலிருந்து  உண்டாகும் மகிழ்ச்சியை சிறிதளவு நீங்கள் ருசித்தவுடன்  வாழ்க்கை  நிறைவானது என்பதையும் வாழ்க்கை வாழ்வதற்கே என்பதையும் அறிந்து கொள்வீர்கள். 

எனவே  மேலும் மேலும் மகிழ்ச்சியோடு புன்னகை புரியுங்கள். 

உங்களுக்குத் தெரியுமா?  ஒரு குழந்தை ஒரு நாளைக்கு 400 முறை புன்னகை புரிகின்றது.  வளர் இளம் பருவத்திலிருப்பவர்கள் ஒரு நாளைக்கு 17 முறை புன்னகை புரிகின்றனர்.  பெரியவர்கள் மிக அபூர்வமாகத்தான் சிரிக்கின்றனர். மேலதிகாரியாகவோ அல்லது அரசியல்வாதியாகவோ மாறுகின்றவர்கள் சிரிப்பை அடியோடு மறந்து விடுகின்றனர். உங்கள்  புன்னகை பறந்து போய் விடுகின்றது. மறைந்து விடுகின்றது. புன்னகை என்பது ஏதோ செயற்கைத்தனமான  ஒன்றல்ல. அது நம் உள்ளிருந்து  வர வேண்டும். நம் மனஅழுத்தங்கள் எல்லாம் மறைந்து  தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது மட்டுமே அது  உண்டாகும். 

யாராவது ஒருவர்  நான் தியானம் செய்கிறேன் என்று சொன்னால்  அவர் மேலும் மேலும் மகிழ்ச்சியுடன் புன்னகை புரிகின்றார் என்று அர்த்தம். அங்கே ஞானம், தெளிவு, அமைதி, உணர்திறன் ஆகியவை இருக்கும். இதுவே  ஆன்மீகம். ஆன்மீகம் என்றால்  இனிமை, புன்னகை, மெய்யுணர் திறன் அனைத்தும் ஒன்று  சேர்ந்ததே ஆகும்.  

கே: வெளியிலிருப்பவைகளால் மனஅழுத்தம் உண்டாகும்போது நான் என்ன செய்வது? என் கட்டுப்பாட்டில் இல்லாமல் என்னை  மீறிய ஒன்றாக  இருக்கும்போது  நான் எவ்வாறு அமைதியை நிலைநிறுத்துவது? 

குருதேவ்: அதற்காகத்தான்  நாம் மக்களிடையே மன அழுத்தத்தைக் கையாளுவது எப்படி என்ற ஞானத்தை உண்டாக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மனம் சரியில்லை என்றால் அது குடும்பம் முழுவதையும் பாதிக்கின்றது இல்லையா? நிச்சயமாக பாதிக்கின்றது. அதே போல் சமுதாயத்தில் ஒரு சிலர்  மனரீதியாக சரியாக இல்லையென்றாலும்   சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரிக்கின்றன. சிறைச்சாலையில் இருந்தாலும் "நாங்கள் வன்முறையை விரும்பவில்லை" என்று சொல்லும் மக்கள்  பலர் இருக்கின்றனர்.   சமுதாயத்திற்கு பிரச்சினைகளை உண்டாக்கும் மக்கள் பலர் சிறைச்சாலைக்கு வெளியிலும் இருக்கின்றனர். ஆகவே தான் நாம் மக்களுக்கு ஆன்மீக அறிவை வழங்க வேண்டியது  அவசியமாகிறது. 

சாந்தமாக இருப்பது எப்படி,  நம் எதிர்மறை எண்ணங்களை  கையாளுவது எப்படி,  நம் மனத்தைக் கையாளுவது எப்படி  என்பது போன்ற  ஞானத்தினை நாம் மக்களிடையே உண்டாக்க வேண்டும். ஏனென்றால்  மனத்தைக் கையாளுவது எப்படி என்று கற்றுத் தருபவர்கள் எவரும் வீட்டிலும் இல்லை, பள்ளியிலும் இல்லை.  கோபம், பொறாமை, வெறுப்பு போன்றவை உண்டாகும்போது, நீங்கள் இந்த உணர்ச்சிகளோடு வாழும்போது  நீங்கள் அவற்றின்படி செயல்படுகின்றீர்கள். அவற்றிலிருந்து வெளிவருவது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் அவற்றை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு  அவற்றின்படி நடந்து கொண்டு பின்னர் வருந்துகின்றீர்கள். இதுதான் பிரச்சினை. 

வாழும் கலை பயிற்சிகளும் இங்குள்ள ஞானமும்தான் இதற்குத் தீர்வு.