27
2012...............................
பெங்களூரு ஆசிரமம்
பெங்களூரு ஆசிரமம்
மே
புத்திசாலிகளின் அடையாளம்,
தீயவர்களிடமிருந்தும் நல்ல குணங்களை வெளிகொணர்வது. அறிவிலிகளின் அடையாளம் என்பது
புனிதர்களைக் கூட குற்றவாளிகளாய்க் காண்பது. அவர்கள் நல்லவர்களிடம் கூட குற்றம்
குறை காண்கிறார்கள். ஆனால், புத்திசாலிகள், குற்றவாளிகளில் கூட வால்மீகியை ( இராமாயணத்தை எழுதியவர்) காண்கிறார்கள். உங்களை
நீங்களே சோதனை செய்து கொள்ளுங்கள், எவ்வளவு புத்திசாலியாய் இருக்கிறீர்கள்,எவ்வளவு
அறிவிலியாய் இருக்கிறீர்கள், எத்தனைமுறை மற்றவர்களிடமிருந்து நற்குணங்களை
கொண்டுவந்தீர்கள்,எத்தனை முறை அவர்களிடம் குறை கண்டீர்கள்?
கேள்வி: கடவுள் எப்படி பிறந்தார்?
ஸ்ரீ ரவிஷங்கர்: பிறந்திருந்தால் அவர் கடவுளே அல்ல. கடவுள்
என்பவருக்கு பிறப்பும், இறப்பும் இல்லை.
கே: என் மகன் பல பயிற்சிகள் எடுத்த பின்னும் கூட
மாறவில்லை, பல முறை சொன்னால் கூட கிரியா செய்வதில்லை. நான் என்ன செய்ய
வேண்டும்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: ஆம், பருவ வயதில் குழந்தைகளை மாற்றுவது
சற்று கடினமே. பொறுமையாய் இருக்கவேண்டும். மாற்றமே இல்லை என்று சொல்ல முடியாது.
இந்த பயிற்சிகள் எல்லாம் எடுத்த பின்னர் நிச்சயமாய் ஏதாவது மாற்றம் இருக்கும்.
கே: ஆர்ட் எக்சல் மற்றும் எஸ் வகுப்புகள்
நடத்தி இருக்கிறோம், ஆனாலும் குழந்தைகள் வீட்டில் தினசரி கற்றுத்தரப்பட்ட அந்த
பயிற்சிகளை செய்வதில்லை என பெற்றோர்கள் புகார் செய்கிறார்கள். இதை எப்படி சரி
செய்வது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: தொடர்ச்சிப்பயிற்சி வகுப்புகள் அடிக்கடி தேவை.
அவர்களை விளையாட செய்ய வேண்டும்.
முடிந்த அளவு உங்களளவில் நீங்கள் எல்லா முயற்சிகளையும் செய்து விடுங்கள். நீங்கள்
விதைத்த விதை, நன்றாக வளர்கிறதா என்று பார்க்க வேண்டாமா?
கே: இயற்கை விதிகளை மீறி அற்புத அதிசயங்கள்
நடக்க இயலுமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: ஆம். ஏராளமாய் நடக்கிறது. பலர் தங்கள்
வாழ்க்கையில் இதை அனுபவித்திருக்கிறார்கள்.
கே: பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம்
வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து விட்டன. மாணவர்களுக்கு இந்த தேர்வுகள் மிக
முக்கியமானவை. மாணவர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: இதில் தேர்வு பெற்றவர்கள்,
உற்சாகமாய் மேலே செல்லுங்கள். தேர்வு பெறாதவர்கள் உங்கள் மகிழ்ச்சியையும்
உற்சாகத்தையும் இழக்காதீர்கள்.நீங்கள் பெரிதாக எதையும் இழந்து விடவில்லை.
ஒரு தேர்வில் தோல்வியடைவதால் மாணவர்கள்
மனதளவில் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள். தேர்வில் தோல்வியுற்றதால் மட்டுமே
பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செல்கிறார்கள்.
தேர்வு பெறாதவர்களுக்கு என் அறிவுரை: இது பெரிய விஷயமே அல்ல. ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு தோல்வி
ஒளிந்திருக்கும் மற்றும் ஒவ்வொரு தோல்விக்கு பின்னாலும் ஒரு வெற்றி
ஒளிந்திருக்கும்.எனவே கவலைவேண்டாம்,மறுபடி படித்து மேலே செல்லுங்கள். ஒரு
வருடம் வீணாகிவிட்டதே என்று நினைக்காதீர்கள். அது பெரிய விஷயமே இல்லை. தேர்வில்
தோல்வி அடைந்ததாலேயே காலம் வீணாகி விட்டதாக நினைக்க வேண்டாம். வாழ்கையே ஒரு
கல்விதான், ஒரு கலை.வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், நாம் பாடம் கற்றுக்கொள்கிறோம். தோல்வியிலிருந்தும், வெற்றியிலிருந்தும்
கற்றுக்கொள்ளுங்கள், மனதை சமனமாய் வைத்துக் கொள்ளுங்கள், உற்சாகம் இழக்காமல் மேலும்
முன்னேறி செல்லுங்கள்.
பல பெரிய தொழிலதிபர்கள் முதல் நிலையில்
தேர்வு பெற்றவர்கள் அல்ல. இரண்டாம் வகுப்பு கூட
தேர்வு பெறாதவர்கள் மிகப் பெரும் தொழில் செய்கிறார்கள்.நான் சூரத்
(இந்தியா) சென்றிருந்த போது, எட்டு தொழிலதிபர்கள்– அனைவரும் சகோதரர்கள்,என்னை பாத பூஜைக்கு அழைத்தார்கள். அவர்கள் குடும்பத்தில் ஒருவர் கூட எட்டாம்
வகுப்புக்கு மேல் படித்ததில்லை என்று சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் இரண்டு
அல்லது நான்காம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்தார்கள். உலகில் விற்கப்படும்
பத்து வைரங்களில் ஒன்பது வைரங்கள் குஜராத்தில் தயாரிக்கப்பட்டவை என்று அவர்கள்
சொன்னார்கள்.அவர்கள் பெரிதாக எதுவும் படிக்க வில்லை, ஆனால் அவர்கள் தொழில்
நிறுவனத்தை நடத்திக்கொண்டு, ஆயிரத்துக்கும் மேல் வேலைவாய்ப்பு அளித்துக்கொண்டு
ஆனந்தமாய் இருக்கிறார்கள். எனவே தேர்வில் தோல்வியுற்றதால் மட்டுமே எந்த விபரீத
முடிவுக்கும் செல்ல வேண்டாம்.கடந்த சில மாதங்களில் இருபது நகரங்கள் மற்றும்
பதினான்கு நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். ஜப்பானுக்கு சென்றிருந்த போது, ஜப்பான்
பிரதமமந்திரியை சந்தித்தேன். ஒவ்வொரு வருடமும் சுமார் முப்பதாயிரம் இளைஞர்கள் தங்கள்
நாட்டில் தற்கொலை கொள்கிறார்கள் என்றார். அவ்வளவு அதிக அளவில் தற்கொலைகள் அங்கு நடக்கிறது.அவர்களிடம் பணம் இல்லாமல் இல்லை. ஏராளமாய் பணம் இருக்கிறது. எல்லோரும்
தொலைக்காட்சி, வாகனங்கள் என போதுமான அளவு செல்வம் கொண்டவர்கள். அப்படிப் பட்ட
இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.அவர்கள் ஏழைகளாய் இருந்தால் அது
வேறு விஷயம். அப்படியும் இல்லை.பணக்காரர்களே தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே,
நான்தான் இதில் ஏதாவது செய்ய முடியும் என்று கூறினார்.
இந்தியாவின் ஆன்மீக அறிவு
மட்டுமே அங்கு ஒரு மகிழ்ச்சி அலையை ஏற்படுத்த முடியும் என்று அவரிடம்
சொன்னேன். எனவே அந்த நாட்டின் பல பகுதிகளில், வாழும் கலை முதல் நிலை
பயிர்ச்சிகளும், நவ சேத்னா ஷிபிர்களும் நடத்திக் கொண்டிருக்கிறோம். பல நாடுகளில்
இதே பிரச்சினை இருக்கிறது. நம் நாட்டில் இந்த பிரச்சினை அவ்வளவு பெரிதாக
இல்லாததின் காரணம் நம் நாட்டில் உள்ள ஆன்மீக நாட்டத்தின் விதை மற்றும் மனித
மதிப்புகளும் தான். ஆனாலும் அதை காப்பதும் அது வளர்வதை உறுதி செய்வதும் நமது
கடமையாகும். உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். தேர்வில் தோல்வியடைந்தால் அது
பெரிய விஷயம் இல்லை. நாம் நன்கு படிக்க வேண்டும், படிப்பில் நாட்டம் வேண்டும்,
வாழ்வில் வளமுடைய வேண்டும்.
கே: 2012ஆம் ஆண்டு எல்லோருக்கும் நல்ல ஒரு ஆண்டாக
இருக்கும் என்று கூறினீர்கள்,ஆனால் நான் என் அம்மாவை இழந்து விட்டேன்.இதில் என்ன
நல்லது இருக்கிறது? எனக்கு புரியவில்லை.
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: வாழ்வும் இறப்பும் தவிர்க்க முடியாதவை.இறப்பு தவிர்க்க இயலாதது.சில நேரங்களில் அது முன்பாகவே வந்து விடுகிறது.அது
நடக்கும் போது நிச்சயமாய் வலி நிறைந்தது. எனவே, நாம் துயரத்தில் இருக்கும் போது அதன்
காரணத்தை கண்டுபிடிப்பதை விட்டு விட்டு, பிரார்த்தனையில் ஆழ்ந்து மன அமைதியோடு
இருப்பதே சிறந்தது.
‘இது ஏன் நடந்தது? கடவுள் ஏன் எனக்கு இப்படி
செய்தார்? கடவுளுக்கு ஏன் கருணை இல்லை?’ இதை போன்ற கேள்விகளுக்கு பதிலும் இல்லை
அர்த்தமும் இல்லை. படைப்பில், இதைப் போன்றவை, எல்லா நேரமும் நடந்துகொண்டு தானிருக்கும்.
இதை போன்ற மிகத் தேவையான தருணங்களில், நம்
நம்பிக்கையை வலுப்படுத்துவதை விட்டு விட்டு, நம் நம்பிக்கையையே
கேள்விக்குள்ளாக்குவது, பயனளிப்பதில்லை. மன அழுத்தம், மனக்கிளர்ச்சி, ஓய்வற்றதன்மை மற்றும் அமைதியின்மைக்கு
நம்மை கொண்டு செல்லும். எனவே, அப்படியில்லாமல்
இது தவிர்க்க முடியாதது என்று ஏற்றுகொள்ள வேண்டும்.
கே: என்னிடம் உங்களைப்பற்றி ஒரு புகார்
இருக்கிறது. நான் என்ன கேட்டாலும் உடனே அருள்கிறீர்கள். இது என்னை பாழாக்குமா
என்று கேட்க விரும்புகிறேன்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: நல்லது. நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்
என்று இப்போது தெரிந்து விட்டதால், சிறிய விஷயங்களை கேட்காமல் பெரிதாய் கேளுங்கள்.
உங்களுக்கென எதையும் கேட்காமல் நாட்டுக்காக கேளுங்கள், எல்லோருக்குமாக
கேளுங்கள். தர்மம் வளர்ந்து அதர்மம் குறைய
வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். நீதி வளர்ந்து அநீதி குறைய வேண்டும்,
இல்லாமை குறைந்து வளமை பொங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். எல்லோருடைய
நலத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
கே: முற்பிறவியில் நாம் செய்த கர்ம வினைகள் தான்
எல்லாவற்றையும் நிர்ணயிக்குமா? இப்போது செய்பவை நம் வாழ்வில் எந்த விளைவும்
ஏற்படுத்தாதா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: யார் அப்படி சொன்னார்கள்? போக்குவரத்து
விதிகளை மீறினால் அதன் விளைவை உடனடியாக எதிர்கொண்டாக வேண்டும். நீங்கள் நெருப்பில்
கை வைத்தால் உடனேயே சுடும்.
கே: மனிதப்பிறவி எடுத்த பின்னும்,நாம் ஏதேனும்
அடைய வேண்டுமா? அதை அடைபவர்களுக்கு என்ன கிடைக்கும் அடையாதவர்களுக்கு என்ன
கிடைக்காது? ஒவ்வொரு மனிதருக்கும் இலக்கு தேவையா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: இலக்கு இல்லா வாழ்கை மகிழ்ச்சியாக
இருக்காது. இலக்கு இல்லாமல், மனமும் புத்தியும் நல்ல திசையில் செல்லாது. எனவே,
வாழ்க்கையில் இலக்கு தேவை. இலக்கு என்பது நமக்கு முன்னேற்றம் தருவது மற்றும்
பிறருக்கு நன்மை அளிப்பது.
கே: பெங்களூரு ஒரு குளிர்சாதன வசதி செய்யப்பட்ட
ஒரு நகரம். ஆனால் இப்போதெல்லாம், கோடைக் காலத்தில் மிக வெம்மையாக இருக்கிறது.
இப்படியே போனால், எதிர்காலம் எப்படி இருக்கும்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: நானும் அதைப் பற்றி கவலை படுகிறேன். நான்
படிக்கும் காலத்தில் மின் விசிறிகளே தேவைப் படவில்லை.1980 ஆம் ஆண்டு,வட இந்தியா,வெளி நாடுகளில் இருந்து சிலர் வகுப்புகளில் பங்குபெற வந்திருந்தனர்.
அவர்களுக்கு குளிர் காற்றுப்பெட்டி தேவைப்பட்டது. நகரமெங்கும் தேடியும் ஒன்று கூட
கிடைக்கவில்லை. வாங்குவதற்கு ஆளில்லாமல் இதை விற்பதில்லை என்று சொல்லிவிட்டனர்
வியாபாரிகள். குளிர் சாதனப் பெட்டியோ அல்லது குளிர் காற்றுப் பெட்டியோ அப்போது
கிடைக்கவில்லை. இது வெகு காலத்திற்கு முன்பு அல்ல.
இப்போதெல்லாம், எல்லோருக்கும் குளிர்சாதனப்
பெட்டி தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. நாம் நிறைய மரங்களை வெட்டிக்
கொண்டிருக்கிறோம். ஏரிகள் காய்ந்து கொண்டிருக்கிறது. நம் ஏரிகள் உலராமல்
பாதுகாத்திருந்தால், மரங்களை வெட்டாமல் இருந்திருந்தால் இந்த சூழ்நிலை
ஏற்பட்டிருக்காது.
கே: தர்மம் என்றால் என்ன?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: தர்மம் என்பது உங்களை தாங்கி நிற்பது, கீழே
விழாமல் தடுப்பது மற்றும் மேலே வர உதவுவது.
கே: குருஜி, வாழ்கை நிரந்தரமானது, இங்கு
திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
ஒருவருக்கு குரு இருந்தால் அவருக்கு பிறப்பு இறப்பு என்ற சுழலில் இருந்து விடுதலை
கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்களோ நாம் திரும்பத் திரும்ப
வந்தாக வேண்டும் என்கிறீர்கள். எனவே நாம், திரும்ப வருவோமா அல்லது விடுதலை
அடைவோமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: இரண்டும் உண்மைதான். நான் வந்து கொண்டிருப்பேன்.
நீங்கள் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; இப்போதே விடுதலை பெறுங்கள்.
கே: நேர்மையாய் வேலை செய்பவரை ஏன் இந்த சமூகம்
திரும்பத் திரும்ப தொந்திரவு செய்கிறது? தனக்கென எதுவும் வேண்டாமல், சமூகத்திற்காக
வேலை செய்பவரை ஏன் இந்த சமூகம் தொந்திரவு செய்கிறது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: இப்போதெல்லாம் அப்படி நடக்கிறது. இப்படித்தான்
எதிர்காலத்திலும் நடக்கும் என்று எந்த விதியும் இல்லை. ஒரு பெரிய வேலை செய்வதற்கு
நீங்கள் உங்கள் பங்காக சில தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. ‘நான் நல்ல
செயலைத் தானே செய்கிறேன், ஆனால் ஏன் என்னை எல்லோரும் விமர்சனம் செய்கிறார்க?’
என்று நினைக்க முடியாது. அது அவர்கள் இயல்பு. ஒரு முள்ளின் இயல்பு குத்துவது, ஒரு
மலரின் இயல்பு மணம் வீசுவது. இந்த உலகம் முள்,மலர் இரண்டும் உடையது. ஒரு மலர்
முல்லைப் பார்த்து, ‘ஏன் குத்துகிறாய்?’ என்றால் அதன் பதில், ‘அது என் இயல்பு’
என்பதே.
கே: வியாபாரத்தை நிர்வகிப்பதற்காக என்னை
இந்தியாவிற்கு அனுப்பியுள்ளார்கள். ஆனாலும் இந்தியா வசதியாயில்லை. நான்
என்ன செய்யவது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: சில நேரங்களில் நமக்கு விஷயங்கள்
பிடிப்பதில்லை, ஆனால் அது வேலை சார்ந்ததாய் இருந்தால் செய்தாக வேண்டியிருக்கலாம்.
மனதை முன்னிறுத்தி செல்லாதீர்கள், ஏனென்றால் மனம் சில நேரம் சில வேலைகளை
விரும்பும் அல்லது விரும்பாமலும் போகலாம். உங்கள் பயிற்சிகள், தியானம், சத்சங்கம்
மற்றும் சேவை ஆகியவற்றை தொடர்ந்து பயின்று வந்தால் எந்த இடத்திலும் வசதியாய்
உணரும்படி உங்களை நீங்களே மாற்றிவிடலாம். எதிலும் தீவிர விருப்போ வெறுப்போ
இருக்கக்கூடாது. அதுவே உண்மையான யோகம்.
v