ஞானத்தின் நிலைகள்

(கன்னட ராஜ்ய உற்சவத்தின் போது பேசியது)

1 நவம்பர் 2012 - பெங்களூர்               

                

கன்னட மொழி தெரியாதவர்கள் நல்ல இலக்கியங்களையும், கவிதைகளையும் படிக்கக் கொடுத்து வைக்கவில்லை என்று எப்போதும் எனக்குள் ஒரு உணர்வு உண்டு. கன்னடம் ஒரு எளிமையான, இனிமையான மொழியாகும். ஆனால் தற்போது மக்கள் இம்மொழியை மறந்து விடுகிறார்கள்.

40-45 வருடத்துக்கு முன் நான் பஸ்ஸில் பள்ளிக்கூடம் செல்லும்போது, ஒரு பஸ் கண்டக்டர் கன்னடத்தை தவிர எந்த மொழியையும் பேசமாட்டார். ஒரு விழாவில் அவரை அழைத்து கௌரவித்தோம். அவர் அப்படி தூய்மையான கன்னட மொழி பேசுவதை மக்கள் மிக விரும்பினார்கள்.இது மாணவர்களை, இளைஞர்களை, பெரியவர்களை, எல்லோரையும் ஊக்கப்படுத்தியது. அடுத்ததாக கண்டக்டர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்போடு, பஸ்ஸில் பயணம் செய்த அனைவரும் மலர்ந்த முகத்தோடு காத்திருப்பார்கள்.

நம் கலாசாரத்தைக் காப்பது எப்படி நம் கடமையாகிறதோ, அவ்வாறு நம் மொழியை காத்து மேலும் அதை பரப்ப நாம் கடமைப்பட்டிருக்கிறோம். உங்களுக்குத் தெரியுமா? இன்றும் நான் கன்னடத்தில் தான் எண்களை நினைவில் வைக்கிறேன். எத்தனையோ நாடுகளுக்குச் சென்றாலும், ஆங்கிலத்தில் எண்ணுவதில்லை. என் எண்ணங்களும், எண்ணிக்கையும்  கன்னட மொழியில் தான் ஆரம்பமாகும். நேரத்தையும் நான் கன்னட மொழியில் தான் கணக்கிடுகிறேன். ஏனென்றால் நான் சிறு வயதிலேயே தாய்மொழியில் தான் படித்தேன். நான் படிப்பது எழுதுவது எல்லாம் கன்னட மொழியில் இருந்தது.

ஆங்கிலத்துடன் என் அனுபவம் என்னுடைய ஏழாம் வகுப்பில் தான் துவங்கியது. ஆங்கில எழுத்துக்கள் நாம் உச்சரிப்பது போல் இருப்பதில்லை. நான் வார்த்தைகளை உச்சரிப்பது போல் எழுதுவதில்லை. உதாரணத்துக்கு “know” என்பதை நாம் “நோ” என்று உச்சரிக்கிறோம். இது மிகவும் குழப்பமாக இருந்தது. கன்னட மொழியில் எழுதுவதிலும் உச்சரிப்பிலும் வேறுபாடு கிடையாது. இது கன்னட மொழியின் சிறப்பு. தமிழ் மொழியில் இப்படியில்லை என்று கேட்டிருக்கிறேன். நான் தமிழ் பேசுவேன். ஆனால் தமிழ் படிப்பதிலும் எழுதுவதிலும் எனக்கு அதிக அனுபவம் இல்லை.

தமிழ் மொழியில் “ka” என்பதற்கும் “Ga” என்பதற்கும் “க” என்று தான் எழுதுவார்கள். "Kanapathi” மற்றும் “Ganapathi” இரண்டையும் “கணபதி” என்று தான் எழுத முடியும். ஆனால் கன்னடத்தில் ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு எழுத்து உண்டு. கன்னட மொழி கற்றவர்கள் மற்ற மொழிகளை பேசவும் புரிந்து கொள்ளவும் முடியும்.

நான் 6 கோடி கன்னட மக்களுக்கு சொல்ல விரும்புவது இது தான். உங்கள் குழந்தைகளுடன் தாய் மொழியான கன்னடத்திலேயே பேசுங்கள். முடிந்தவரை 5 அல்லது 6 வகுப்புகள் வரை குழந்தைகளுக்கு தாய் மொழியிலேயே கல்வி கற்பிக்க வேண்டும். தற்சமயம் நாம் “Baa Baa Black Sheep” என்ற குழந்தைகளுக்கான ஆங்கிலப் பாட்டை மிகச் சிறிய குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம். குழந்தைகள் மற்ற மொழிகளில் எண்ணிக்கையை கணக்கு வைக்கும் போது அவர்களுடைய அறிவு வளர்ச்சி குறைவாகவே இருக்கும். 

உலக அளவில் பல மனோ தத்துவ நிபுணர்களின் கருத்துப் படி, குழந்தைகளுக்கு தங்கள் தாய் மொழியில் கல்வி கற்பித்தால் அவர்கள் மிகச் சிறந்த முறையில் அறிவு வளர்ச்சி அடைய முடியும்.

நான் பள்ளி சென்ற போது கன்னட மொழியில் கல்வி கற்பித்தார்கள். நான் கன்னட மக்களுக்குச் சொல்ல விரும்புவது :“கன்னட மொழியைப் பற்றிப் பெருமைப்படுங்கள். குழந்தைகளுக்கு கன்னட மொழியைக் கற்றுத் தாருங்கள். வீட்டில் தாய் மொழியையே பேசுங்கள். கன்னட மொழியில் வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்கள் அடங்கிய இலக்கியங்கள் உண்டு. கன்னட மொழியில் “வேதம் பொய்யாகலாம். ஆனால் கன்னட மொழியில் உள்ள பழமொழிகள் பொய்யாக முடியாது”. என்று ஒரு பழமொழி உள்ளது. இன்று மக்கள் பழமொழிகளை மறந்து விட்டார்கள். குழந்தைகள் பழமொழி என்பதையே அறிவதில்லை. அப்படியிருக்கும் போது குழந்தைகள் நன்னெறிகளை எப்படி அறிய முடியும்.

குழந்தைகள் தங்கள் தாய் தந்தையை “மம்மி”, “டாடி” என்று அழைப்பதை தவிர்த்து அம்மா அப்பா என்று அழைக்க வேண்டும். மற்ற மொழிகளை கற்கக் கூடாது என்று சொல்ல வில்லை. மற்ற மொழிகளுக்குத் தகுந்த மரியாதையை அளிக்க வேண்டும். அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வுலகில் உள்ள 700 கோடி மனிதர்களில், 6 கோடி கன்னட மக்கள் தங்கள் மொழியைக் காக்காவிட்டால், சிறிது சிறிதாக அது மறைந்துவிடக் கூடும். ஆகவே உங்கள் எல்லோருடைய பொறுப்பு மிகப் பெரியது.

உலக மக்கள் தொகையில் (700 கோடி) கன்னட மக்களின் ஜனத்தொகை (6 கோடி) ஒரு சதவிகிதம் கூட இல்லை. இந்த 6 கோடி மக்களும் கன்னடம் பேசுவதில்லை. மைசூரில் பேசப்படும் கன்னடமே மிக இனிமையானதும், சிறப்பானதுமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் கன்னட தேசத்திலேயே தொன்மையான நகரம் மைசூர் தான். மங்களூரில் பேசப்படும் கன்னடம் சிறிது மாறுபட்டது. அதற்குரிய இனிமையும் உண்டு. வட கன்னட தேசத்தில் பேசப்படும் கன்னடமும் இனிமையானதே. இப்படிப் பல விதமான உச்சரிப்புகள், பேசும் முறைகள் உள்ளன. அனைத்தையும் காக்க வேண்டும். நம் தாய் மொழியைக் காத்து, அதை மக்களிடையே பரப்பி, அதன் ஆன்மீக நறுமணத்தை வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டும்.

கே : குருதேவா! புத்தர், ஜனக மகாராஜர் இருவருமே ஞானிகள். இருந்தாலும் ஜனக மகாராஜர் செல்வ சுகபோகங்களோடு வாழ்ந்தார். புத்தர் ஒரு சந்நியாசியாக வாழ்ந்தார். இந்த வித்தியாசம் ஏன்? ஞானம் அடைவதிலும் வித்தியாசமான நிலைகள் உண்டா?

குருதேவர்: இல்லவே இல்லை. வேறுபாடு ஞான நிலையில் இல்லை.மனம் நாம் உடுத்தும் உடையைப் பொறுத்து மாறாது. நீ வெளியில் என்ன உடுத்தினாலும், உள்ளே நீ மாறுவதில்லை. ஞானம் என்பது ஆழ்மனத்தின் விழிப்புணர்வு ஆகும். வெளித் தோற்றத்துக்கும் ஞானத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் மகாராஜாவும் சந்நியாசியும் ஒன்றே. புத்தர் சந்நியாசியாகி மற்றவர்களையும் சந்நியாசிகளாக்கினார். அந்த நாட்களில் இந்தியா மிகச் செல்வம் பெற்ற நாடாக இருந்தது. ஒரு பிச்சைக்காரர் கூட கிடையாது. அதனால் தான் புத்தர் மற்றவர்களையும் சந்நியாசிகளாக 
செல்வத்தின் மேல் பற்றில்லாதவர்களாக இருக்க ஊக்கப்படுத்தினார். அவர்கள் தங்கள் உணவுக்காக மற்றவர்களிடம் கையேந்தும்படி சொன்னார். இதைவிட அகந்தையை அழிக்க சிறந்த வழி கிடையாது.

ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுப்பது அவன் இயல்பு என்று சொல்லலாம். ஆனால் ஒரு செல்வந்தர் தன் உணவுக்காக பிச்சை எடுப்பது, அவரால் செய்ய முடியாத செயலாகும். அப்படிச் செய்வது அவர் அகந்தையைத் துன்புறுத்தும். புத்தர் மக்களைப் பற்றில்லாதவர்களாக மாற்றுவதற்காக செல்வந்தர்களையும் சந்நியாசிகளாக்கினார்.

ஜனக மகாராஜாவின் கதை வேறு. ஜனகர் ஏற்கனவே பற்றில்லாதவராக வாழ்ந்தவர். பற்றில்லாமல் ஒரு ராஜ்யத்தை ஆள்வது ஒரு தவத்தைப் போன்றது. அர்ஜுனனும் சந்நியாசியாக மாறி காட்டுக்குப் போக விரும்பினான். போரிட விரும்பவில்லை. “ஒரு பிரச்சினையிலிருந்து விடுபட இது சிறந்த வழியில்லை என்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உணர்த்தி அவனை போரிடச் செய்தார்.

“யோகஸ்த குரு கர்மாணி சங்கம் த்யாகத்வா தனஞ்ஜய சித்தயத்யோஹ சமா பூத்வா சமத்வம் யோக உச்யதே

தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை சமமாக பாவித்து தொழிலைச் செய். நடுநிலையே யோகம் எனப்படும்.

ஞானத்தில் உயர்ந்த நிலை, தாழ்ந்த நிலை உண்டு என்று நினைக்காதே. மகரிஷி சுகதேவர் ஞானம் பெறுவதற்காக ஜனக ராஜரிடம் சென்றார். அவர் மூன்று நாட்கள் ஜனகராஜருக்காக வாயிற்படியில் காத்திருந்தார். எனவே ஆச்ரமத்தில் இருப்பதால் நிறைய ஞானம் இருக்கிறது என்று அர்த்தம் அல்ல. ஒரு பிரம்மச்சாரி ஒரு சாதுவை விடக் குறைந்த ஞானமுடையவர் அல்ல. மிக மிகப் பெரிய மகான்கள் கூட ஒரு குழந்தையிடமிருந்து / பிரம்மச்சாரியிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும். சில சமயம் அப்படிக் கற்றுக் கொள்வது அவசியம்.ஆத்ம ஞானிக்கு வெளியில் உள்ள சூழ்நிலைகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

கே : குருதேவா! உள்ளிருக்கும் உலகம் அழகானதாக இருக்கும் போது, ஆத்மா வெளி விவகாரங்களை நோக்கி ஈர்க்கப்படுவதன் காரணம் என்ன?

குருதேவர் : நம் புலன்கள் வெளிநோக்கி ஈர்க்கப்படுவது இயற்கை. வெளி உலகம் நம் புலன்களுக்காகவே படைக்கப்பட்டது.. கண்களைக் கவரும் காட்சிகள், நாசிக்காக நறுமணம் கமழும் மலர்கள், காதுக்கேற்ற இசை, நாக்குக்கேற்ற ருசி வாய்ந்த தின் பண்டங்கள், தொடு உணர்ச்சிக்கேற்ற பொருட்கள் உலகில் இருக்கின்றன.

ஆனால் மனத்தை தன் போக்கில் செல்லாமல் புலன் இன்பத்தை நாடாமல், எண்ணங்களின், உணர்ச்சிகளின் மூலத்தை நோக்கிச் செலுத்தும் சக்தி மனிதனுக்கு இருக்கிறது. மனம் தன் போக்கில் செல்லாமல் இருக்க, அதன் மூலத்தை நோக்கிச் செல்ல அறிவு (புத்தி) உதவும். அறிவில்லாமல் அது முடியாது. அறிவு தான் இது சரி, இது சரியல்ல என்று முடிவுக்கு வர உதவுகிறது. புலன் இன்பத்தை அனுபவித்தாகி விட்டது. அது போதும். உள் நோக்கிச் செல்லலாம் என்று தீர்மானிப்பது அறிவு. 

பவித்திரமான மந்திரங்களில் ஒன்றான காயத்ரி மந்திரத்தில் சொல்லப் படுவது : “தியோ யோ ந ப்ரசோதயாத்”. இதன் அர்த்தம் : என் அறிவு இறை அருளால் ப்ரகாசிக்கட்டும். (ஒளி விட வேண்டும்.). என் அறிவு இறைத் தத்துவத்தில் மூழ்க வேண்டும். இறை உணர்வு (உள்ளுணர்வு) என் அறிவில் பாய்ந்து ஓட வேண்டும். இது இந்தியாவில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் ப்ரார்த்தனையாகும்.

மற்றவைகளை பின்னால் பார்க்கலாம். என் அறிவு ப்ரகாசிக்கட்டும்.

கே : குருதேவா! நான் பல நிறுவனங்களிலும், பல இடங்களிலும் வேலை செய்திருக்கிறேன். பல மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் என் வாழ்வில் ஒரு சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சலிப்பிலிருந்து வெளி வருவது எப்படி?

குருதேவர் :மன உறுதியோடு (கமிட்மெண்ட்) இருக்கும் போது சலிப்பு மறைந்து விடும். உன் சுகத்திலேயே நாட்டமிருக்கும் போது சலிப்பு ஏற்படும். நீ உன்னை பற்றியே நினைத்துக்கொண்டு, இன்னும் எப்படி சுகத்தை அதிகரிக்க முடியும் என்று எண்ணும் போது சலிப்பு ஏற்படும். ஆனால் உன் இதயம் மற்றவருக்காக துடிக்கும் போது, ஒரு உயர்ந்த காரியத்துக்காக நீ சேவை செய்யும் போது, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழும் போது சலிப்பு ஏற்படாது.

வாக்குறுதியை(கமிட்மெண்ட்) நிறைவேற்றும் அளவு நம் உற்சாகத்தையோ, சலிப்பையோ காட்டுகிறது. கமிட்மெண்ட் குறைவானால் சலிப்பு ஏற்படும். கமிட்மெண்ட் அதிகமாகும் போது சலிப்பு நம்மை அணுகாது. எப்போதும், எந்த இடத்திலும் சலிப்பு உன்னைத் தொல்லை செய்யாது.

கே : குருதேவா! ஐந்து பிராணன்கள் யாவை? 

குருதேவர் : ஐந்து விதமான ப்ராணன்கள் நம் உடலில் ஓடுகின்றன. அவை ப்ராணா, அபனா, உதனா, சமனா மற்றும் வ்யானா எனப்படும்.
ப்ராணா என்பது உடலில் மேல் (இதயத்துக்கு மேல்) பகுதியில் இருக்கும் சக்தி. ப்ராணா சமனில்லாமல் அதிகமாக இருக்கும் போது உன்னால் தூங்க முடியாது. 

அபன வாயு உடலில் கீழ் பகுதியில் உள்ள சக்தியாகும். அபனா அதிகமாகும் போது மந்த நிலை உண்டாகும். உனக்குத் தூக்கம் வரும். மிகவும் சோர்வாக இருக்கும்.

சமன வாயு வயிற்றுப் பகுதியில் இருக்கும். ஜீரணத்துக்கு உதவும்.

உதன வாயு மார்பின் மேல் பகுதியிலும் தொண்டையிலும் இருக்கும். இது நம் உணர்ச்சிகளுக்கும், மன எழுச்சிக்கும் காரணமாகும். உதன வாயு சமநிலையில் இல்லாவிட்டால், உனக்கு உணர்ச்சிகளே இருக்காது. கல் போல் ஆகி விடுவாய். மிகவும் பலவீனமடைவாய்.

வ்யான என்பது உடல் முழுதும் இருக்கும். இது மூட்டுகள் இயங்கவும், ரத்த ஓட்டத்துக்கும் காரணமாக இருக்கிறது.வ்யான ப்ராணன் சரியாக இல்லா விட்டால், ரத்த ஓட்டம் சரியாக இருக்காது. மூட்டுகளில் வேண்டிய தளர்ச்சி இல்லாமல் மிகவும் வலி ஏற்படும்.

ஐந்து ப்ராணன்கள் எல்லோருடைய உடலிலும் இருக்கும். ஒவ்வொரு நேரத்திலும் ஒரு ப்ராணன் ஓங்கியிருக்கும். ப்ராணன்கள் சமநிலையில் இல்லாமலிருந்தால், அதை சரி செய்ய ப்ராணயாமம், சுதர்சன கிரியா உதவும். அதனால் தான் சுதர்சன கிரியா செய்யும் போது சிலர் சிரிக்கிறார்கள். சிலர் அழுகிறார்கள். ப்ராணன் சம நிலைக்குக் கொண்டு வரப் படுகிறது.

ஞானம் என்பது ஒரு கற்பனைக்கெட்டாத சமுத்திரம் போன்றது. இவ்வுலகில் நிறைய ஞானம் உள்ளது. ஆனால் நாம் இதை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். நம் உடலில் ஐந்து ப்ராணன்கள் உண்டு. ப்ராணயாமம், தியானம் செய்யும் போது இவை சம நிலைப் படுத்தப்  படுகின்றன.

கே : ஒரு மனிதன் இறக்கும் போது 12 நாள் கழித்து அவன் ஆத்மா மற்றொரு உடலில் புகுந்து மறுபடியும் பிறக்கிறது என்று சொல்லப் படுகிறது. அப்படி இருக்கும் போது நாம் ஏன் முன்னோர்களின் படத்தைத் தொங்கவிட்டு வணங்குகிறோம்?

குருதேவர் : ஒரு மனிதர் மறு பிறவி எடுக்கிறார் என்று தெரியும் போது நாம் ஏன் அவருக்கு சிரார்த்தம் செய்கிறோம்? நீ சொல்வது சரி. பழங்காலத்தில் மனிதர்கள் ஆத்ம ஞானிகளாக இரூந்தார்கள். ஒருவர் எப்போது மறுபிறவி அடைந்து விட்டார் என்று தெரிந்து வைத்திருந்தார்கள். அப்போது சிரார்த்தம் செய்வதை நிறுத்தி விடுவார்கள். ஆனால் இன்று அது  உனக்குத் தெரியவில்லை. நீ ஒரு யோகி அல்ல. ஒரு மனிதர் மறு பிறவி எடுத்துவிட்டாரா? இல்லையா? என்று தெரியவில்லை. முன்னோர்களின் ஆசிர்வாதத்தை, நல் வாழ்த்துக்களை பெறுவதற்காக இந்தச் சடங்குகளை செய்து வந்தார்கள். த்ரேதா யுகத்திலும், த்வாபர யுகத்திலும் மக்கள் மறு பிறவி எடுத்ததைத் தெரிந்து கொண்டார்கள் என சொல்லப்படுகிறது. அப்படித் தெரிந்தவுடன் சிரார்த்தம் செய்வதை நிறுத்திக் கொண்டார்கள். சிரார்த்தம் என்றால் ஒருவரை முழு நம்பிக்கையோடு நினைவு கூர்வது என்று அர்த்தம்.

கே : ப்ரம்மா – படைப்பவர்; விஷ்ணு – காப்பவர்; சிவன் – அழிப்பவர். அழிப்பவரை நாம் ஏன் அதிகமாக வணங்குகிறோம்?

குருதேவர் : படைத்தவர் தன் செயலை முடித்து விட்டார். அதனால் யாரும் அவரைப் பற்றி கவலைப்படுவதில்லை. காக்கும் கடவுள் தேவை தான். ஆனாலும் எல்லோரும் அழிப்பவரை பார்த்து பயப்படுகிறார்கள். இல்லை! அப்படி இல்லை. சிவன் கடவுளுக்கெல்லாம் கடவுள். தேவர்களுக்கெல்லாம் தேவர். மகாதேவர். எனவே எல்லோரும் மகாதேவரை வணங்குகிறார்கள். ப்ரம்மா விஷ்ணுவிலிருந்து பிறந்தவர். எனவே பலவிதமான நம்பிக்கைகள் உண்டு. உனக்குப் பிடித்ததை நீ நம்பலாம்.