பக்தியின் நிறங்கள்....


5 - அக்டோபர் - 2012. பெங்களூர், இந்தியா

நேர்மை ஒரு மனிதனின் இயல்பான குணம்.

ஒருவர் நேர்மையானவரானால், அவர் வீட்டிலும் நேர்மையானவராக, வேலை செய்யும் இடத்திலும் நேர்மையானவராக இருப்பார். கணவனோ அல்லது மனைவியோ ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பார்கள். அவர்கள் எங்கு சென்றாலும், அவர்களின் நடத்தையில் நேர்மை இயல்பாகப் பிரகாசிக்கும்.

பக்தியும் அப்படித்தான். இறைவனிடம் பக்தியுள்ளவர், நாட்டிலும் பற்றுள்ளவராக, நாட்டை, இந்த உலகை நேசிப்பவராக இருப்பார்.அவர்களின் அன்பும், பக்தியும் அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதிபலிக்கும்.பொதுவாக கடவுளின் பக்தர் எப்படி தேச பக்தியுள்ளவராக இருக்க முடியும் என்று கேட்கலாம். கட்டாயம் அது சாத்தியம். ஒருவர் தன் நாட்டின் மீது பக்தியுள்ளவராக இருக்கிறார் என்றால் மற்ற நாடுகளின் மீது  பகை என்று நினைக்கக் கூடாது. 

தேசபக்தி என்பதை குறுகிய கண்ணோட்டத்தோடு பார்த்து (தவறாக) புரிந்து கொண்டிருக்கிறோம்.
பொதுவாக தேசப்பற்றை நாம் எவ்வாறு விவரிக்கிறோம்? மற்றொரு நாட்டின் மீது பகைமை பாராட்டி,அந்த நாட்டை எதிர்த்து நமக்கு உள்ள தேசப் பற்றைக் காட்டுகிறோம். ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது, அவர்களை எதிர்த்து நின்றவர்களை தேசபக்தர்கள் என்று அழைத்தோம். இப்பொழுது, பாகிஸ்தானை எதிர்த்து நீ பேசினால் தேச பக்தியுள்ளவன் என்பார்கள்.அது சரியல்ல. உன் தேசபக்திக்காக மற்றொரு தேசத்தை எதிர்ப்பதும், அதை மட்டம் தட்டுவதும் அவசியமில்லை.
அமெரிக்காவில் உள்ள தேச பக்தர்களைப் பார்த்தால்,அவர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள். மற்ற தேசங்களை எதிர்ப்பதில்லை. எனவே,ஒரு தேசபக்தர், தன் நாட்டை மிகவும் நேசிப்பவர், உலகம் முழுவதையும் நேசிக்கலாம். விஸ்வாத்மாவிடம் பக்தியுடன் இருப்பவர் இறைவனிடம் பக்தி செலுத்துவதிலும், தன் நாட்டின் மேல் பக்தி செலுத்துவதிலும் எந்த வித்தியாசத்தையும் பார்ப்பதில்லை.

நீ உன் குடும்பத்தினரை அன்புடன் வளர்ப்பதால், அக்கம் பக்கத்தில் இருப்பவரிடம் அன்பாக இருக்க முடியாது என்பதில்லை. அவர்கள் உன் விரோதிகளாக வேண்டிய அவசியமும் இல்லை. உன் குடும்பதினரிடம் அன்பு செலுத்துவது போல்,அவர்களிடமும் அன்பாக இருக்க முடியும். அவர்களையும் உன் குடும்பதினரில் ஒருவராகப் பார்க்கலாம்.

ஒரு தாய் தன் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவது போல், பக்கத்தில் இருக்கும் குழந்தைகளிடமும் அன்பாக இருக்க முடியும். தன் குழந்தையின் மீது அன்பு செலுத்துவதற்காக, மற்ற குழந்தைகளின் மேல் அன்பாக இருக்கக் கூடாது என்று நினைக்க வேண்டாம்.அப்படி நினைத்தால் அது அன்பு, பக்தி இல்லை.

பக்தி என்பது எங்கிருந்தாலும், ஒரு மலர் போல் அதன் மணத்தைப் பரப்பக் கூடியது. ஒரு பூவை எடுத்து எங்கு வைத்தாலும் அது நறுமணத்தை அதைச் சுற்றி உள்ள இடங்களில் பரப்புகிறது. மல்லிகைப் பூவை சமையல் அறையில் வைத்தாலும், குளியல் அறையில் வைத்தாலும் தன் மணத்தைத் தரும்.

அந்தப் பூ நான் என் நறுமணத்தை இங்கு தான் தருவேன், இங்கே தர மாட்டேன் என்று சொல்லி மறுப்பதில்லை. அதே போல் நீ பக்தியை எதன் மேல் வைத்தாலும் அது அங்கு பரவும். நன்கு மலர்ந்து அதற்கான பலனைத் தரும். எனவே நீ உன் அலுவலக வேலையின் மீது பக்தி, சிரத்தை வைக்கலாம்.

பெயர் பெற்ற கன்னட குரு ஒருவர் “காயகாவே கைலாசம்” என்று சொன்னார். அதன் அர்த்தம்,“யார் ஒருவர் தன் வேலையை பக்தியுடன் செம்மையாகச் செய்கிறாரோ, அதில் அவர் பேரின்பத்தைக் காண முடியும்”. சமஸ்கிருத மொழியிலும் பல நூல்களில் இவ்வாறு சொல்லப் பட்டிருக்கிறது.
உண்மையான பூஜை மக்களுக்கு சேவை செய்வது தான். பூஜைக்கும் சேவைக்கும் வித்தியாசம் கிடையாது. ஏன்? பூஜைக்கும் சேவைக்கும் ஆதாரம் பக்தியும் அன்பும் தான். சேவையின் மூலம் கிடைப்பது அன்பும் நேசமும் தான். அகங்காரமும் அப்படித்தான். எதன் மீதாவது நீ அகங்காரத்தைக் காட்டினால், அது அந்தப் பொருளின் மீது இணைந்து விடும். அந்தப் பொருளைப் போலவே ஆகி விடும்.

நீ உன்னை ப்ரம்மம் என்று நினைத்தால் நீ உன்னை ப்ரம்மம் என்று தெரிந்து கொள்வாய். (அஹம் ப்ரம்மாஸ்மி) “அஹம்” என்றால் “நான்” என்று ஒரு சிறிய வரையரைக்குள் இருக்கும் நிலை. “ப்ரம்மாஸ்மி” என்றால் “நான் பரமாத்மா, எல்லாவற்றையும் அடக்கியவன்” என்ற நிலை.
எனவே நீ உன்னை பரமாத்மாவாக உணர்ந்தால்,உன்னுடைய சிறிய வரையரைக்குள் இருக்கும் “நான்” என்பதைக் கடந்து பரமாத்மாவுடன் இணையலாம்.

உன் அகம்பாவத்தை சிறிய முக்கியமற்ற விஷயங்களில் காட்டினால், நான் முக்கியமானவன், நான் அமைச்சர், நான் ஒரு பாவி, நான் ஒரு புண்ய ஆத்மா, நான் அறிவாளி, நான் முட்டாள் என்ற) குறுகிய வரையரைக்குள் இருப்பாய்.

நீ என்னவாக உன்னை நினைக்கிறாயோ, அந்த குணம் பெரிதாக வளர்ந்து நீ அப்படியே ஆகலாம். எனவே அகம்பாவம் மிகப் பெரிதாக வளரக் கூடியது. பக்தியும் மிகச் சிறப்பாக வளரக் கூடியது. 
யோக வித்யாவில் இப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது.

“தஸ்ய பூமிஷூ விநியோகஹ” (விபூதி பாடம் # 6, பதஞ்சலி யோக சூத்திரம்)
யோக சித்திகளையும் (யோகத்தால் அடையக் கூடிய சிறந்த அதிசயமான திறமைகள்), இடைவிடாத யோக சாதனையின் பலனால் அடைந்த உயர்ந்த ஆத்ம ஞான சித்திகளையும், இந்த பூமிக்கும், சமுதாயத்துக்கும் பயனுள்ள காரியங்களில் உபயோகிக்க வேண்டும்.

கே: வேதங்களின் படி இந்த நட்சத்திரக் கூட்டங்கள் அடங்கிய உலகமே மாயை என்கிறார்கள். என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப் பற்றி விவரித்துச் சொல்லுங்கள்.

குருதேவர்: ஆம். இது உண்மை தான். தொகை பௌதீகத்தின் படி (க்வாண்டம் ஃபிஸிக்ஸ்) அது உண்மை தான். பொருட்களின் பெயர் மற்றும் தோற்றம் உண்மையானது அல்ல. அவை எல்லாம் ஒரு அலைத் தன்மை உடையது என்பது தான் உண்மை. எல்லாமே ஒரே சக்தியினால் ஆனது. வேதாந்தமும் இதைத் தான் சொல்கிறது.

மாயை என்றால் என்ன? அது இல்லவே இல்லை என்பதில்லை. மாயை என்றால் அது மாறும் தன்மை உடையது. இங்குள்ள ஒவ்வொரு பொருளும் மாறிக்கொண்டே இருக்கிறது. எது மாறிக் கொண்டே இருக்கிறதோ அது மாயை. எதை அளக்க முடியுமோ அது மாயை. மாயையை பொய் என்று சொல்வது சரியல்ல. மாயை மாறும் தன்மை உடையது.

தற்காலத்திய ஒரு சிறந்த பேராசிரியர் டாக்டர் ஹன்ஸ் பீட்டர் டர் என்பவர், சில ஆண்டுகளுக்கு முன் ஆசிரமத்துக்கு வந்த போது சொன்னார். என்ன சொன்னார் தெரியுமா? குருதேவா! நான் 35 ஆண்டுகளாக ஜடப் பொருள்களைப் பற்றி படித்து ஆராய்ந்து வருகிறேன். முடிவில் அவை இவ்வுலகின் ஆதாரப் பொருள்கள் இல்லை என்று தெரிந்து கொண்டேன். சக்தி மட்டும் தான் இவ்வுலகின் ஆதாரமாக இருக்கிறது என்று அறிந்தேன்.நான் இதைச் சொல்லும் போது ஏதோ கிழக்கு நாடுகளின் ஆன்மீக தத்துவம் போலிருக்கிறது. இன்றைய நவீன விஞ்ஞானிகள் சொல்வதை, நம்முடைய ஆன்மீகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறது.

ஆகவே,எது இருப்பது போல் தோன்றுகிறதோ, அது அப்படி அல்ல. இந்தக் குடுவை (ஃப்ளாஸ்க்) ஒரு திடப் பொருள் போல் தோற்றம் அளிக்கிறது. பௌதீக விஞ்ஞானியைக் கேட்டால், அது அணுக்களால் ஆனது என்பார். ஒரு படி மேலே போய் அது வெறும் சக்தி தான் என்று சொல்வார்.
ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளே (அணுக்களின் உள்ளே) நிறைய வெற்றிடம் இருக்கிறது. நாம் பார்க்கும் பொருள் திடமாகத் தோன்றினாலும் அது அப்படி அல்ல. நாம் நம் உணர்ச்சி உறுப்புகளை உபயோகித்து (பார்ப்பது, கேட்பது, நுகர்வது, ருசிப்பது, தொடு உணர்ச்சி) அறிய முயல்கிறோம். விஞ்ஞானிகள் ஒரு படி மேலே போய் உண்மையை அநுமானிக்கிறார்கள். அணு கண்களால் பார்க்க முடியாதது. சக்தியையும் நாம் பார்க்க முடியாது. ஆனால் அது இருப்பது நமக்குத் தெரியும்.
எனவே, இவ்வுலகம் மாயை என்று சொல்வதன் பொருள் இதுதான். விழித்துக் கொள். பார்! கடந்த காலம் இப்பொழுது உள்ளதா? இல்லை. அது ஒரு ஞாபகம் தான். காலத்தின் ஓட்டத்தில் நிகழ்ச்சிகள் கரைகின்றன. கடந்து போன நிகழ்ச்சிகள் தற்சமயம் இல்லை. தற்சமயம் நடப்பது, இந்த நொடியில் நடப்பதும் அடுத்த நொடியில் இருக்கப் போவதில்லை. அதுவும் சென்று விடும். ஓடும் ஆற்றில் ஒவ்வொரு நொடியிலும் நீர் புதிதாக வருவது போல் இயற்கையும் மாறிக் கொண்டே இருக்கிறது. எது மாறுகிறதோ அது மாயை என்றழைக்கப் படுகிறது. எதை அளக்க முடியுமோ, அது மாயை என்றழைக்கப் படுகிறது. ஒரு நீரோட்டம் போல் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அது உண்மை அல்ல.

“உலகம் என்பது பெயர்களும்,உருவங்களும் அடங்கியது. பெயரோ, உருவமோ நிலையானவை அல்ல”. இதைத் தெரிந்து கொள்ளுங்கள். பெயர்கள் பலவிதமானவை. இந்த நாட்டில் ஒரு பொருளுக்கு ஒரு பெயர் இருக்கிறது. அதே பொருள் வேறு நாட்டில் வேறு பெயரால் அழைக்கப் படுகிறது. மற்றொரு நாட்டில் அதற்கு வேறு பெயர் வைத்து அழைக்கிறார்கள். பெயர் நிலையானது இல்லை. அது ஒரு வசதிக்காக வைக்கப் பட்டது. உருவமும் அதே போல் நிலையானது இல்லை.

கே: உண்மைக்கு பல்வேறு பரிமாணங்கள் இருப்பதாகச் சொல்வதன் அர்த்தம் என்ன?

குருதேவர்: ஆம். உண்மையே அதைச் சொல்கிறது. இந்த இடத்துக்கு வர நேராகப் போய் இடது புறம் திரும்பவேண்டும் என்று ஒருவர் சொல்லியிருப்பார். நான் அதை சரி என்று சொல்வேன். மற்றொருவர் சொல்வார். நேராகப் போய் வலது புறம் திரும்பு என்று. அதுவும் சரி என்று சொல்வேன். மூன்றாவது நபர் நேராகப் போய் இடது புறம் திரும்பி வலது புறம் திரும்பு என்பார். அதுவும் சரி என்று நான் சொல்வேன்.

இப்போது ஒருவர் சொல்லிய வழிதான் சரி. ஒரு இடத்தை அடைய ஒரு வழி தான் உண்டு; மூன்று வித்தியாசமான வழிகள் இருக்க முடியாது என்று சொன்னால், உண்மைக்கு பல்வேறு பரிமாணங்கள் இருக்கிறது என்று நான் சொல்வேன். இந்த இடம் பல பரிமாணங்களுடையது. இந்த இடத்தை அடைய பல உபதேசங்களும், பல வழிகளும் கிடைத்திருக்கும். எல்லாமே சரி தான்.

கே: இறைவன் இவ்வுலகைப் படைத்ததின் நோக்கம் என்ன?

குருதேவர்: விளையாட்டுப் போட்டிகளின் நோக்கம் என்ன? (பதில்: வெற்றி பெறுவதற்காக அல்லது மக்களின் மகிழ்ச்சிக்காக). ஆம் இது ஒரு குதூகலமான பொழுது போக்கு அல்லது கேலியான விளையாட்டு. இல்லையா?

ஆதியில் பர ப்ரம்மம் (பரமாத்மா) மட்டும் இருந்தது. பரமாத்மாவுக்குப் பொழுது போகாமல், நான் பலவாகி விடுகிறேன் என்று நினைத்து பரமாத்மா பல ஜீவாத்மாக்களாக உருவெடுத்தது. 1000 சிறு கண்ணாடிகள் பொருத்திய ஒரு பெரிய கண்ணாடியின் முன் நின்றிருப்பாய். ஒருவர் அதன் முன் நின்றால்,1000 பிரதிபிம்பங்கள் தெரியும். ஒவ்வொரு சிறு கண்ணாடியும் அவர் முகத்தைக் காட்டும்.
அக்கண்ணாடிகள், “உன் முகத்தை முதல் கண்ணாடி பிடித்துக் கொண்டதால், நாங்கள் உன் முகத்தை பிரதிபலிக்க முடியாது” என்று சொல்வதில்லை. அதே போல் பரமாத்மா கோடானு கோடி பிரதி பிம்பங்களாக பல ஜீவாத்மாக்களைப் படைத்தார். ஆனால் பரமாத்மா (உண்மை) ஒன்று மட்டுமே.

கே: திரும்பத் திரும்ப பிறவி எடுக்காமலிருக்க, பிறப்பு இறப்பிலிருந்து விடுதலை பெற, யோக சாதனைகளைத் தவிர என்ன செய்யலாம்?

குருதேவர்: திருப்தி, மனநிறைவு. எதைச் செய்தாலும் மன நிறைவோடு, மகிழ்ச்சியோடு செய். இன்றைய பணிகளை முடித்து மன நிறைவோடு இரு. நாளை வரப்போகும் பணிகளை மன நிறைவோடு செய். வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும், திருப்தியோடு மன நிறைவோடு இருந்தால் பிறப்பு இறப்பு என்ற சுழலிலிருந்து விடு படலாம்.

கே: தாங்கள் எழுதிய அஷ்டாவக்ர கீதையின் விளக்கங்களைப் படிக்கும் போது ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு நல்ல உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. நீங்கள் சொல்லிய படி தர்மா (சமுதாயத்துக்கு, சன்மார்க்கத்துக்கு செய்ய வேண்டிய கடமைகள்), அர்த்தா (பொருளாதார, செல்வச் செழிப்பை நாடுவது), காமா (பாலியல் இன்பங்களை நாடுவது), மூன்றும் நம்மைக் கட்டும் தளைகளாகின்றன. இது உண்மை தான். ஆனாலும் இந்த தளைகளிலிருந்து, பந்தங்களிலிருந்து விடுபட முடியவில்லை.

நான் புருஷார்த்தத்துக்கான மனித வாழ்க்கைக்கான (தர்மா, அர்த்தா, காமா) செயல்களைச் செய்து இருக்கிறேன். உங்கள் அருள் இருந்தால் மட்டுமே நான் மோக்ஷம் அடைய முடியும்.

குருதேவர்: அஷ்டாவக்ர கீதை “நா க்ராஹ்யம், நா த்யாஜ்யம்” என்று சொல்கிறது. நீ அதை பிடித்து வைக்கக் கூடாது. அதை கீழே போட முயற்சியும் கூடாது. வாழ்க்கையை (நிகழ்ச்சிகளை) அப்படியே ஏற்றுக் கொள். காலியாக வெற்றிடமாக உணரலாம்.

“யே த்ரிஷ்டா லபா சந்துஷ்டம்” அதன் பொருள்.

உனக்கு என்ன கிடைக்கிறதோ, எவ்வளவு கிடைக்கிறதோ அதை திருப்தியோடு, மன நிறைவோடு ஏற்றுக் கொள்.மன நிறைவு மிகவும் முக்கியமானது. ஞானம் தேடுபவர் மனநிறைவோடு, உற்சாகத்தோடு காரியம் செய்பவராக இருக்க வேண்டும்.

நான் எல்லோரையும் திருப்தியோடு இருக்கச் சொல்கிறேன். சிலர் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு (நமக்குக் கிடைத்தது போதும் என்று) சோம்பேறிகளாக இருக்கிறார்கள்.
அதனால் நான் அவ்வப்போது அவர்கள் செய்யும் காரியத்தில் நான் பூரண திருப்தி அடைய வில்லை என்று போலியாக நடந்து கொள்வேன். அவர்களை மேலும் அதை சரியாக செய்ய வைப்பேன். ஏனென்றால் அவர்கள் சோம்பேறித்தனமாக செய்தது போதும் என்று திருப்தி அடையக் கூடாது. எனவே மேலும் மேலும் சிறப்பாகக் காரியம் செய். மனநிறைவோடு இரு. இது மிகவும் முக்கியம்.
சிலர் எல்லா நேரங்களிலும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு மனநிறைவு ஏற்படுவதில்லை. மற்றும் சிலர் மனநிறைவோடு இருப்பார்கள். ஆனால் சோம்பேறித் தனத்துக்கு இடமளிப்பார்கள். செய்யும் காரியத்தில் ஈடுபாடு இருக்காது. அது சரியல்ல.
நாம் இரண்டுக்கும் நடுவில் உள்ள வழியில் செல்ல வேண்டும். உற்சாகத்தோடு காரியத்தில் ஈடுபட்டு செவ்வனே செய்ய வேண்டும். செய்த காரியத்தை மனநிறைவோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். இது ஒரு தனித் திறமை.

சில சமயம் “குருஜி ஏன் இப்படி நடந்து கொள்கிறார் (இதைச் செய் அதைச் செய் - - - - ஏன் மனநிறைவோடு ஏற்றுக் கொண்டு ஒன்றும் செய்யாமலிருக்கச் சொல்வதில்லை) என்று ஆச்சரியமடைவார்கள்.

ஆனால் நடப்பதை நான் கவனித்து வருவேன். யார் எதைச் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு 
வழியையும் காண்பிப்பேன். யார் படபடப்போடு இருக்கிறார்களோ, அவர்களை சாந்தமாக ஓய்வெடுக்கச் சொல்வேன். யார் சாந்தமாக, தயக்கத்தோடு இருக்கிறார்களோ, அவர்களைக் கூப்பிட்டு எழுந்திரு, ஏதாவது வேலை செய். இதைச் செய். அதைச் செய்! பார், அவர் எவ்வளவு நன்றாகச் செய்திருக்கிறார். நீ உட்கார்ந்து கொண்டு ஒரு வேலையும் செய்யாமலிருக்கிறாய் என்று சொல்லி அவர்களையும் காரியத்தில் ஈடு படச் செய்வேன்.

பகவத் கீதையிலும் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் இப்படிப் பட்ட அறிவுரைகளைத் தருகிறார். அவர் அர்ஜுனனிடம் “நீ போர் செய்ய மாட்டாயா? என்ன சொல்கிறாய்? மக்கள் உன்னைக் கேலி செய்வார்கள். பல மக்களின் கேலியையும், பழிச் சொற்களையும் கேட்டு வருந்துவதை விட இறப்பதே மேல்” என்று சொன்னார். பகவான் அர்ஜுனனை போர் செய்யச் சொல்லி வற்புறுத்தினார்.
அர்ஜுனனிடம் “ஒரு கோழையைப் போல் வாழ்வது ஒரு மதிப்பையும் தராது. இப்படி வாழ்வதை விட செத்து மடிவது மேல்” என்று அவர் சொன்னார். பின்னால் பகவான் அர்ஜுனனிடம் “சர்வ தர்மான் பரித்யாஜ்ய மாம் ஏகம் சர்வாநாம் வ்ரஜ அஹம் த்வம் சர்வ – பாபேப்யோ மோக்ஷ்யிஸ்யமி மா சுகாஹ” என்று சொன்னார். (பகவத் கீதை 18-ம் அத்தியாயம்)

எல்லா தர்மங்களையும் துறந்து என்னை சரண் அடை. நான் உன்னை உன் பாவங்களிலிருந்து விடுவிப்பேன். உன் பாவங்களை நீக்க உன்னால் முடியாது. நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். எனவே நீ செய்த பாவங்களைப் பற்றிக் கவலைப் படாதே. நான் அவைகளைத் தீர்த்து வைப்பேன். நீ வருந்த வேண்டாம். நீ மகிழ்ச்சியோடு இரு.

பாருங்கள். ஞானம் என்பது பல வித்தியாசமான நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையும் ஒரு காரணத்துக்காக இருக்கிறது.