23 – அக்டோபர் – 2012 – பெங்களூர் - இந்தியா
(உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த பக்தர்கள் அவரவர்களின்
மொழியில் பாட சத்சங்கம் துவங்கியது. உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்தவர்களும்,
இந்தியாவின் பல்வேறு மாகாணங்களிலிருந்து வந்தவர்களும் இசையுடனும், பக்திப் பாடல்களுடனும்
இணைந்தனர்.)
அகில உலகையும் இணைப்பது நவராத்திரியின் உண்மையான விசேஷம்.
பண்டைக் காலத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேதத்தில் (ஞானத்தின் ஒரு கிளையில்) தேர்ச்சியுள்ளவர்களாக
இருப்பார்கள். நவராத்திரியின் போது அனைவரும் ஒன்று சேர்ந்து அவரவர்களின் கலாசாரத்தில்
உள்ள ஞானம், இசை, நடனம் அடங்கிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவார்கள்.
நேற்று முன் தினம், நாம் புல்லாங்குழல், கம்பி வாத்தியங்கள்,
விதவிதமான மத்தளங்கள் இசையுடன் பாடல்களைக் கேட்டோம். உலகில் உள்ள நானாவிதமான இறைவனின் படைப்புகள் ஒரே ஞானமாக,
ஒரே ஆத்மாவாக, இவ்வுலகின் ஆத்மாவாக (பரமாத்மா) ஒன்றி இருக்கிறது.
கடவுளிடம் பயப்படத் தேவை இல்லை. கடவுள் உன்னைத் தாய்
போல் பேணிக் காப்பவர். உன்னிடம் அன்பானவர். உன்னைப் போற்றுபவர். உன்னை உயர்த்துபவர்.
தாயின் எல்லா குணங்களும் கடவுளுக்கு உண்டு. பொதுவாக, “கடவுளிடம் பயப்படு. கடவுள் உன்னைத் தண்டிப்பார்”
என்று சொல்வது வழக்கம். அப்படி இல்லை! இது ஒரு தவறான கருத்து. கடவுள் எப்பொழுதும் உன்னை
தண்டிக்க மாட்டார். உனக்கு அறிவுறுத்தி உன்னை உயர்த்துவார்.
நாம் வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும்.
இப்போது தான் கேட்டோம். “லா – இலாஹ – இல்லாஹ” – இதன்
பொருள் கடவுள் ஒருவரே. அந்தக் கடவுள் மேலே எங்கேயோ சொர்க்கத்தில் இல்லை. அவர் நிலம்,
நீர், நெருப்பு, காற்று மற்றும் வெற்றிடம் என்ற பஞ்ச பூதங்களில் அடங்கியிருக்கிறார். எனவே நிலத்தைப் போற்றுவோம். நீரைப் போற்றுவோம். நெருப்பை
நல்ல உபயோகத்துக்காகப் பயன் படுத்துவோம். வெளியில் உள்ள நெருப்பை மட்டும் அல்ல. உன்னுள்
இருக்கும் நெருப்பு போன்ற சக்தியையும் நல்ல வழியில் பயன் படுத்துவோம்.
நம் எல்லோருக்குள்ளும் ஒரு (உத்வேகம்) உந்து சக்தி
இருக்கிறது. அதை சரியான திசையில் செலுத்துவோம். நெருப்பு அழிவையும் ஏற்படுத்தும் என்று
நமக்குத் தெரியும். அதே நெருப்பு ஆக்க பூர்வமான செயல்களுக்கு இன்றியமையாதது என்றும்
நமக்குத் தெரியும். நம்முள் இருக்கும் உத்வேகத்தை சரியான திசையில் செலுத்தி ஆக்கபூர்வமான
காரியங்கள் செய்வோம்.
நீர் உன்னை மூழ்கச் செய்து கொல்லவும் செய்யும். உன்
தாகத்தையும் தணிக்கும்.உலக மாதாவை நினையுங்கள்.
பஞ்ச பூதங்களில் உள்ள இறைத் தத்துவத்தையும் மற்றும் ஆத்மாவையும் நினையுங்கள். ஆத்மாவுடன்
நிலைத்து அமைதி அடைவது தான் உண்மையான கொண்டாட்டம்.
கடவுள் என்னை மிகவும் விரும்புகிறார் என்ற நம்பிக்கை
இருக்க வேண்டும். வேறு எந்தக் கேள்வியும் சந்தேகமும் வேண்டாம்.
உன்னை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதே. இது மிகவும்
முக்கியம். “ஓ! அவர் நன்றாகப் பாடுகிறார். என்னால் பாட முடியாது. அவர் மிகவும் அறிவாளி.
நான் அவ்வளவு அறிவுடையவன் அல்ல” என்று நினைக்காதே. அப்படி இல்லை! உனக்குள் வேண்டியது
அனைத்தும் இருக்கிறது. வேறு வேறு சமயங்களில், வேறு வேறு குணங்கள் (தகுதிகள்) வெளிப்
படும். பொறுமையாய் இரு.
“நமக்குக் கொடுத்து வைக்க வேண்டும். (ஆசிர்வாதம் வேண்டும்).
இறைவன் அருள் வேண்டும்” என்று சொல்கிறோம் இல்லையா? ஆசிர்வாதம், இறைவன் அருள் மிக மிக
இருக்கிறது. உன் பாத்திரம் சிறியதாக இருக்கிறது. பிறகு என்ன செய்வது?
குருதேவர் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து, நீ இவ்வளவு
சிறிய கிண்ணத்தைக் கொண்டு வந்து எனக்கு 2 லிட்டர் பால் இந்தக் கிண்ணத்தில் கொடுங்கள்
என்று கேட்டால், இவ்வளவு சிறிய கிண்ணத்தில் எப்படி 2 லிட்டர் பால் கொள்ளும்? உன் கிண்ணம்
சிறியது. நீ அதிக அளவு கேட்கிறாய். நீ 3 லிட்டர் அளவு கொள்ளும் பாத்திரத்தைக் கொண்டு
வந்தால், நீ வேண்டியபடி, நான் 2 அல்லது 3 லிட்டர் பால் கொடுக்க முடியும்.
உனக்கு வேண்டிய அளவு கிடைக்கும் என்பதை நினைவில் கொள்.
அதற்கு மேல் வேண்டும் போது பொறுமையாக இருந்து உன் யோக்யதையை வளர்த்துக் கொள். நம் யோக்யதை
அதிகரிக்கும் போது கட்டாயம் அதிகமாகக் கிடைக்கும். பலர் துக்கமாக இருப்பதற்குக் காரணம்,
அவர்கள் ஒரு சிறிய கிண்ணத்தை வைத்துக் கொண்டு எனக்கு 1 லிட்டர் பால் கொடுங்கள் என்று
சொல்கிறார்கள். கிண்ணம் வழிந்து விடும். இதைப் புரிந்து கொள்வது அவசியம்.
வாழ்வில் எரிச்சல் வருவது சகஜம்.ஓ! இந்த மனிதர் நல்லவர்
இல்லை. நான் இந்த மனிதர்களுடன் இருக்க முடியாது. அவர்கள் என்னை இகழ்கிறார்கள். மனதில்
இப்படிப் பட்ட எண்ணங்கள் வருகின்றன. நீ தியானத்தில் அமரும் போது இவ்வகை எண்ணங்கள் உன்னைப்
பாதிக்கின்றன. இல்லையா?
கைகளை உயர்த்தி என்னிடம் உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள்
தியானம் செய்ய அமரும் போது, இப்படிப் பட்டவைகளைப் பற்றி எண்ணுகிறீர்களா? – ஓ! என் கணவர்
இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும். ஓ! என் குழந்தை நான் சொல்வதைக் கேட்பதே இல்லை
– பக்கத்து வீட்டுக் காரரைப் பற்றிய எண்ணம். நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள்
– இந்தச் சின்னச் சின்ன நெருடல்கள் – எரிச்சல் வந்து கோபத்தை உண்டு பண்ணும். சலிப்பு
மற்றும் எரிச்சல் வரும்.
இதை எப்படி எதிர் கொள்வது?
நீ அவசியமான காரியம் செய்யும் போது உன் மேல் ஒரு ஈ
வந்து உட்கார்ந்தால், அந்த ஈ யினால் எவ்வளவு பாதிப்பு அடைவாய்? அதனால் பாதிக்கப் படாமல்
நீ அதை விரட்டி விட்டுக் காரியம் செய்வாய். இல்லையா?
மேல் சொன்ன விஷயங்களும் இந்த ஈ யைப் போன்றது தான்.இந்தச் சின்னச் சின்ன எரிச்சல்கள் உன்னுள் ஏற்றுக்
கொள்ளும் குணத்தை கொண்டு வர உதவும். எரிச்சல் என்றால் ஏற்றுக் கொள்ளாத குணம். ஏற்றுக்
கொள்ளாமல் இருப்பது உன் முட்டியைத் திறக்காமல் வைப்பது. ஏற்றுக் கொள்வது என்பது உன்
முட்டியைத் திறந்து வைப்பது. எரிச்சல் உன் தசைகளை இறுக வைக்கும். எரிச்சல் அடையும்
போது இறுக்கமாக உணர்கிறாய் இல்லையா?
ஏற்றுக் கொள்வது திறந்த மனத்தைக் குறிக்கும். உன்
கை திறந்திருக்கும் போது எல்லாமே உன் கையில் அடங்கி விடும். வானமே எல்லையாக இருக்கும்.
(குருதேவர் கையை விரித்துக் காண்பிக்கிறார்.) கை மூடியிருக்கும் போது (குருதேவர் கையை
மூடிக் காண்பிக்கிறார்.) அக் கைக்குள் ஒன்றும் இல்லை.
எனவே தளர்வாக, ஓய்வாக எதையும் ஏற்றுக் கொள்ளும் குணத்தோடு
இருப்பது மிகவும் அவசியம்.
இப்போது இந்தக் கேள்வி உன் மனத்தில் வரும். நான் தளர்வாக
ஓய்வாக இருந்தால் காரியம் செய்வது எப்படி?
யாரோ உனக்குக் கெடுதல் செய்கிறார். “ஓ! குருதேவர்
ஏற்றுக்கொள்வது பற்றிப் பேசினார். அதனால் அந்தக் கெடுதலை நான் ஏற்றுக் கொள்வேன்” என்று
சொல்லாதே.பார். உன்னுள் அந்த உத்வேகம் இருக்கிறது. அதை சரியான
திசையில் செலுத்து. எரிச்சலோடு ஒரு காரியத்தை செய்வது எதற்கும் உதவாது. முதலில் ஏற்றுக்கொண்டு முறையோடு காரியத்தைச் செய்யவேண்டும். இதற்கு தைரியமும் பொறுமையும் தேவை.
மற்றொரு பிரச்சினை அவமானப்படுவது. அவமானப்படுவது
நல்லது என்று நான் சொல்வேன். அவமானப்படுவதால் உன் தகுதி (யோக்யதை) அதிகமாகும். உன்
பாத்திரத்தை பெரியதாக்கும். அவமானம் அகந்தையைக் கரைத்து விடும். உன் அகந்தை போய்விடும்.
நீ ஒரு குழந்தை போல் ஆகி விடுவாய். உனக்குத் தெரியுமா? நீ ஒரு குழந்தையை அவமானத்துக்கு
உள்ளாக்க முடியாது. ஏனென்றால் அது வெற்றிடம் / காலியிடம் போல் இருக்கிறது.
நாம் நம்மைப் பற்றி ஒரு கருத்து வைத்திருக்கும் போது, ஒரு
பதவியை வகிக்கும் போது அவமானப்பட்டால் அதன் வேதனையை உணருகிறோம். இங்கே வராதே அல்லது இப்படிச் செய்யாதே என்று யாரோ
சொன்னார்கள். இந்த விஷயங்கள் உன்னைப் பாதிக்கின்றன. அதனால் தான் இதை “மாயா” என்று சொல்கிறோம்.
ஏனென்றால் இதை ஒரு பொருட்டாக மதிக்க அவசியம் இல்லாத போது, நம் மனம் இவற்றால் இழுத்துச்
செல்லப்படுகிறது.
“இதுவும் என்னுடையதில்லை” என்று நீ சொன்னால் அது
“மஹா மாயா” என்றாகும். இது கடவுளின் விளையாட்டு. அவமானத்தை எதிர்த்து நீ போரிட ஆரம்பித்தால், அது உனக்கு
மேலும் அவமானத்தைத் தரும். அது ஒரு காட்ச் 22 சூழ்நிலை போல் ஆகி விடும். அந்த விவகாரத்தில்
நீ மாட்டிக் கொண்டு உழல்வாய். ஆகவே அவமானத்தினால் வெட்கப் படாதே. அவமானம் ஏற்பட்டால்
அது தவமாகும். (தவம் – சூடு). இந்து மதத்தில், இதை ஆத்மாவின் வருத்தம், மன மடிவு, தவம்
என்று அழகுபடக் குறிப்பிடுகிறார்கள்.
“சரி, இந்த அவமானம் ஒரு தவம். நான் இதைத் தாங்கிக்
கொள்வேன். ஏற்றுக் கொள்வேன்.”
தவம் உன்னை பலசாலியாக,அழகானவனாக மாற்றும்.“ஞானிநாம்பி, சேதான்சி தேவி பகவதி ஹிசா பலாதா க்ருஷ்ய
மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி” என்று நாம் நேற்று பாடிய “துர்கா சப்த சதி” யில் எழுதப்
பட்டிருக்கிறது.
மாயையின் சக்தி, அஞ்ஞானத்தின் சக்தி அவ்வளவு பலமானது.
அதிக புத்திசாலிகளும், அறிவு ஜீவிகளும் மாயையின் சக்தியால் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.மாயை – அவள் எல்லோரையும் ஆட்டுவிப்பவள். ஆகவே “ஓ!
என் அன்பான அன்னையே, நீ எங்கள் மனத்தில் மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி எங்களை அலைக்கழிக்கிறாய்”
என்று சொல்கிறோம்.
முக்கியத்துவத்துக்கு மதிப்பில்லாத விஷயங்களுக்கு
நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம். கண நேரத்துக்கு இருக்கும் நிலையில்லாத பொருள்களுக்கு
அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். அவைகள் வந்து போகின்றன. அதனால் தான் அதை நாம் மஹா
மாயா என்று அழைக்கிறொம்.
“யா தேவி ஸர்வ பூதேஷு ப்ராந்தி ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ” என்று
நான் நேற்று சொன்னேன்.
ஆத்மா மாயையிலும் இருக்கிறது. ஆத்மாவின் வெளிப்பாடு
அமைதியில் மட்டும் அல்ல, சக்தியிலும் இருக்கிறது. அது பசியிலும், குழப்பத்திலும் மாயை
போல் காட்சி அளிக்கிறது.
இதை நீ கவனித்தால் மனத்தின் விளையாட்டைப் பார்த்து
சிரிக்கலாம். உன் சிறிய மனம் விளையாடும் போது, நீ அதை கண்டுகொள்ளாதே. அதைக் கடந்து
செல்லும்போது உனக்கு நிலையான அமைதி கிடைக்கும். (சிர சாந்தி). ஆத்மாவில் ஒன்றிய மனம்
அசைக்க முடியாத அமைதியில் இருக்கும். இதை அடைவது தான் வாழ்க்கையின் பயன். அதற்காக இந்த
வாழ்த்துக்கள் (ஆசிர்வாதம்) அவசியம்.
இன்று நாம் “ரிஷி ஹோமம்” செய்தோம். எத்தனையோ ஆண்டுகளாக
இந்த ஞானம் பல முனிவர்களால் காக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய நம்பிக்கையின் படி பராஷர
மஹாமுனிவர் (ரிக்வேத மகரிஷி, பல நூல்களை இயற்றியவர்) பூஜை செய்வதில் சிறந்து விளங்கினார்.
குரு பூஜை செய்யும் போது, நாம் “நாராயணம் பத்மபவம்
வசிஷ்டம் ஷக்திம் சதத் புத்ர பராஷரம் ச” என்று பாடுகிறோம். குரு பாரம்பரியத்தில் ஐந்தாவது
குரு பராஷரர். அவர் அன்புக்கும், பக்திக்கும் இருக்கும் முக்கியத்துவத்தை பூஜை செய்வதன்
மூலம் வெளிப்படுத்தினார். “பூஜாதிஷு அனுராக இதி பராஷர்யஹ”.
இன்று கூட நாம் “ஆயுத பூஜை” செய்கிறோம். நாம் உபயோகிக்கும்
எல்லா உபகரணங்களையும் பூஜையில் வைத்து மரியாதை செலுத்தி வணங்குகிறோம். நாளை நீங்கள்
நகரத்தில் சென்று பார்த்தால் எல்லா வாகனங்களிலும் சந்தனம், குங்குமம், பூக்களாள் அலங்கரித்திருப்பதைக்
காணலாம். மக்கள் தங்கள் வாகனங்களை நன்றாக சுத்தம் செய்து அலங்கரித்திருப்பார்கள்.
ஒரு ஊசியிலிருந்து தூண் வரை இறைவன் எங்கும் நிறைந்திருப்பதை,
உலகில் உள்ள எல்லாவற்றிலும் இறைவன் இருப்பதைக் குறித்து நாம் நம் உபகரணங்களை பூஜை செய்கிறோம்.
சின்னச் சின்ன பொருட்கள், ஊசிகள், கத்திகள், கத்தரிக்கோல்கள்,
ஸ்க்ரூ ட்ரைவர்கள், ஸ்பேனர்கள் எல்லாவற்றையும் பூஜை செய்கிறோம். உலக மாதா எல்லா உபகரணங்களிலும்
இருப்பதாகச் சொல்லப் படுகிறது. அவளை நாம் வணங்குகிறோம்.
தொழிற்சாலைகளிலும் இன்று எல்லா இயந்திரங்களையும் சுத்தம்
செய்து (ஆண்டில் ஒரு முறை) பூஜை செய்வது வழக்கம்.இந்த இயந்திரங்களுக்கும், மற்ற உபகரணங்களுக்கும்,
வாகனங்களுக்கும், பேருந்து, மோட்டார் கார் எல்லாவற்றுக்கும் நன்றி செலுத்தும் வகையில்
பூஜை செய்கிறோம். ஏனென்றால் இறைதத்துவம் எங்கும் நிறைந்திருக்கிறது. ஆயுத பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. நாளை 10 ம் நாள் விஜய தசமி. வெற்றிக்கான
நாள். எனவே, மாயை நம் மனத்தைச் சூழும் போது கவனம் செலுத்தி,
மனத்தின் மாயையைப் புரிந்து கொள். இந்த மனம் எல்லா இடங்களுக்கும் சென்று எல்லாவற்றையும்
செய்ய வைக்கிறது. அதை அறிந்து ஓய்வாக இரு. இதைத்தான் நவராத்திரியின் போது அறிந்து
கொள்கிறோம்.