உன் வாழ்க்கையே, ஒரு சாதனை தான்.......


25
2012...............................
பெங்களூர் ஆச்ரமம்
மே


கே: குருஜி! “என் பிறப்பு மற்றும் செயல்கள் இரண்டுமே தெய்வீகமானவை“ என்று பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார். அதை விளக்கிச் சொல்லுங்கள்??

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: உனக்கு ஆத்ம ஞானம் கிடைக்கும் போது, உன் பிறப்பு, செயல்கள் இரண்டும் தெய்வீகமானவை என்று உணர்வாய். அப்பொழுது அதைப் புரிந்து கொள்வாய். கட்டுப்பாடும், நற்குணங்களும் உன்னிடம் அமையும் போது, நீ தவறு இழைக்க முடியாது. ஒரு கெட்ட வார்த்தை கூட உன் வாயிலிருந்து வராது. யாரையும் வெறுக்க முடியாது. ஏனென்றால் எல்லோரும் உன்னைச் சேர்ந்திருப்பதாக உணர்வாய். இது அன்பின் சிகரம். இதைப் பற்றி நீ நன்கு அறியும் போது நீ உன் ஆத்மாவை அறிவாய். இதைத் தான் பகவத் கீதையில் “தத் ஸ்வயம் யோக ஸம்ஸித்தஹ காலேன் ஆத்மனி விந்ததி” என்று சொல்லப் படுகிறது.

“நான் செய்வது எல்லாம், இது வரை நான் செய்தது எல்லாம் இறைவனின் சித்தப்படி தான் நடந்திருக்கிறது. இந்தச் செயல்கள் இறைவனுக்கு அர்ப்பணமாகி விட்டன” என்பதை நீ வாழ்க்கையில் புரிந்து கொண்டால் போதும். அதற்காக நீ தவறான காரியம் செய்ய வேண்டும், உன் குறைகளைப் பார்க்கத் தேவை இல்லை என்று அர்த்தம் அல்ல. ஏதோ ஏக்கத்தினாலோ, இச்சையினாலோ ஒரு தவறு செய்திருந்தாலும், அதைத் திருத்துவதற்கு வழி கண்டு பிடிக்க வேண்டும். அப்படியே செய்து வந்தால், ஒரு நாள் அன்பின் சிகரத்தைத் தொட்டு, செய்யும் எல்லாச் செயல்களும் இறைவனின் சித்தப்படி என்று உணரலாம்.

கே: குருஜி! நான் உங்கள் உடலைத் தாண்டி உங்களை எப்படி அறிவது? குருவை எப்படிப் புரிந்து கொள்வது? அதை என் சக்திக்கு மீறிய செயலாக நினைக்கிறேன்.

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: உன் சக்தியால் குருவை முழுதும் அறிய முடியாது என்று நினைப்பதே போதும். நன்றாக ஓய்வெடுத்து உன் ஆத்மாவைக் காண முயற்சி செய். இது தான் அன்பு என்பது. அன்பு என்பது என்ன? வித்தியாசம் இல்லாதது. நான் அவரிடமிருந்து வேறு பட்டவன் இல்லை. அவர் என்னிடமிருந்து வேறு பட்டவர் இல்லை என்று அறிந்து கொள்.

யாரோ ஒருவர் குழந்தையைத் திட்டும் போது, குழந்தையின் தந்தை என்ன சொல்வார்? நீ என் குழந்தையைத் திட்டுவது என்னைத் திட்டுவதற்குச் சமமானது. அல்லது நீ யாரோ ஒருவரின் தாயையோ, தந்தையையோ திட்டினால், அவரின் குழந்தை என்ன சொல்லும். என் பெற்றோர்களை இழிவு படுத்துவது என்னை இழிவுபடுத்தியது போலாகும் என்று எதிர்ப்பு தெரிவிப்பார் அல்லவா? அதற்கு அர்த்தம் அவர்களில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறார்கள். அது தான் அன்பின் அடையாளம்.

கே: குருஜி! கருடபுராணத்தில் மரணத்துக்குப் பின் என்ன நேரும் என்பதற்கு ஒரு பயங்கரமான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்களோ “மரணம் என்பது அழகான ஆழ்ந்த உறக்கம் போன்றது” என்கிறீர்கள்.தயவு செய்து இதை விளக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: ஆம். நாம் மரணத்தைப் பற்றி பின்னால் பேசலாம். இப்போது வாழ்க்கையைப் பற்றிப் பேசலாம். இந்த வாழ்க்கையை நிறைவாக ஆரம்பித்து, திருப்தியாக மரணம் அடைந்தால் எல்லாமே நன்றாக நடக்கும்.ஆனால் நம் கடைசி காலத்தில், வருத்தத்தோடு மற்றவர்களைச் சபித்து, திட்டி, கோபமாக உயிர் துறந்தால் அது ஒரு பிரச்சினை தான். அதனால் நம் கடைசி காலத்தில்– சொல்லப் போனால், கடைசி க்ஷணத்தில் திருப்தியாக, மகிழ்ச்சியுடன் இந்த உடலை விட்டு நீங்க வேண்டும். ஆனால் கடைசி க்ஷணம் எப்போது வரும் என்று எப்படி அறிவது? அதனால் வாழ்க்கை முழுதும் திருப்தியாக மகிழ்ச்சியாக இரு!

கே: ஆத்மா என்பது காலத்தைக் கடந்ததா, இல்லையா? ஏன் நாம் பூமியின் நூறு ஆண்டுகளை, நம் முன்னோர்கள் உலகின் ஒரு நாள் என்று குறிப்பிடுகிறோம்...

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: அது அப்படித்தான். நம்முடைய நூறு ஆண்டுகள் நம் முன்னோர்களின் ஒரு நாளுக்குச் சமம். நம்முடைய பழைய புத்தகங்களில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. நாம் அனைவரும் முன்னோர்கள் உலகம் சென்று திரும்பியிருக்கிறோம். அதை மறந்து விட்டோம். எவ்வளவு சமயம் நீங்கள் அங்கே கழித்திருப்பீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை. நம்முடைய பழைய புத்தகங்களில் எழுதியிருப்பதை நம்புகிறோம்.

கே: குருஜி! நீங்கள் சிவனைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறீர்கள்.சிவனை நாம் லிங்க வடிவில் ஏன் வணங்குகிறோம்?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: லிங்கம் ஒரு அடையாளச் சின்னம்.அதன் மூலம் உண்மை என்ன என்று நாம் கண்டு கொள்ளலாம்.எது நம் கண்ணுக்குத் தெரிவதில்லையோ, ஆனால் வடிவில் உருவகப்படுத்த முடிகிறதோ அதைத் தான் நாம் லிங்கம் என்று வழிபடுகிறோம். ஒரு குழந்தை பிறக்கும் போது அது ஆணா பெண்ணா என்று எப்படித் தெரிந்து கொள்கிறாய்? உடலில் உள்ள ஒரு உறுப்பை வைத்துதான், அது ஆண் அல்லது பெண் என்கிறாய்.அந்த ஒரு உறுப்பு பின்னால் வரப் போவதைச் சொல்கிறது. அதனால் தான் பிறப்பு உறுப்பையும் லிங்கம் என்று சொல்கிறார்கள். அதே போல் இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்தவரை எப்படி அடையாளம் காட்டலாம். அவருக்கு ஒரு உருவம் கிடையாது, அடையாளம் கிடையாது. அவரைக் குறிப்பதற்கு ஒரு சின்னம் தேவைப்பட்டது. அதனால் ஆண், பெண் இரண்டு பிறப்பு உறுப்புகளையும் சேர்த்து சிவலிங்க உருவில் இந்த ப்ரம்மாண்டத்தில் பரவி நிற்கும் இறைவனை அடையாளம் காட்டுகிறோம்.

“நமாமி சமிஷான நிர்வாண ரூபம் விபும் வியாபகம் ப்ரம்ம தேவ ஸ்வரூபம், நிர்வாண ரூபம் – அவருக்கு ஒரு உருவமோ, உடலோ இல்லை. விபும் – அவர் எல்லா இடத்திலும் பரவி இருக்கிறார். ப்ரம்ம தேவ ஸ்வரூபம் – அவர் உத்தமமான ஞானத்தை அடக்கியவராக இருக்கிறார். எப்படி இண்டர்நெட் வேலை செய்கிறது என்று பார். எப்படி தொலைபேசி வேலை செய்கிறது. இடைவெளியில் எல்லா அணுக்களிலும் ஞானம் அடங்கியிருக்கிறது. இங்கே, தற்சமயம், நாம் உட்கார்ந்திருக்கும் இடத்தில், உலகத்தின் பல சேனல்கள் ஓடுகின்றன. எத்தனையோ அதிர்வலைகள் இருக்கின்றன. எத்தனையோ இ-மெயில்கள் இருக்கின்றன. அதனால் தான் நீங்கள் உங்கள் கம்ப்யூடரைத் திறந்து இ-மெயில் பெட்டியைத் திறந்தால் எல்லா இ-மெயில்களும் உங்கள் கம்ப்யூடரில் வந்து அடைகின்றன.

நீங்கள் அனுப்பும் எல்லா எழுத்துக்களும், அனுப்பும் எஸ்.எம்.எஸ் களும் இந்த அண்ட வெளியில் தங்கும். நீ யார் மீதாவது கோபப்பட்டால், அதுவும் இந்த அண்ட வெளியில் தங்கும். நீ யாரையாவது வாழ்த்தினால்,அது இந்த அண்ட வெளியில் தங்குகிறது. அவை அப்படித்தான் மற்றொரு கை பேசியை சென்றடைகிறது. ஆகவே இந்த ஆகாய தத்துவத்தில் ஞானம் இயற்கையாகவே இருக்கிறது. இன்றைய ஞானம் மட்டுமல்லாமல் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஞானமும் இருக்கிறது. அடுத்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் வரப்போகும் நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். எல்லாம் அண்டவெளியில் எழுதி, பதிவாகியிருப்பதால் நீ அதைப் பார்க்க்கலாம்.

ஆகாய தத்துவத்தை எப்படி அடையாளம் கண்டு கொள்வது? பழங்கால மனிதர்கள் ப்ரபஞ்சத்தை இந்த அண்டவெளியைப் படைத்தவரை ஒரு வட்டமான கல்லை வைத்து நினைவு கூர்ந்தார்கள்.
கே: குருதேவ்! அறிவுக்கும், பக்திக்கும் என்ன உறவு. அறிவில்லாத பக்தி பலன் கொடுக்குமா?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: உனக்கு ரசகுல்லா பிடிக்கும் என்று வைத்துக்கொள். அப்போது தான் அதை உண்ண உனக்கு ஆசை வரும். நீ அறியாத பொருளை அடைய ஆசை எப்படி வரும்? அதன் மேல் எப்படி ஆசைப் படுவாய்? பக்தி என்பது ஆசைப் படுவது. நீ எதை விரும்புவாய்? அதைப் பற்றி சிறிது முன்பே தெரிந்திருக்கும். அதைப் பற்றி தெரிந்திருப்பது அதைப் பற்றிய அறிவு.ஒரு பொருளின் மீதோ, ஒருவர் மீதோ நீ ஆசைப்பட்டால் அதைப்பற்றி, அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள முயற்சி செய்வாய்.

ஒரு கணவன் மனைவியிடம் இது பொதுவாகக் காணப்படும். திருமணத்துக்கு முன்னே ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். திருமணத்துக்குப் பின் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்ள முயல்கிறார்கள். ஒருவர் எங்கு செல்கிறார். என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்வார்கள். இரண்டு பேரும் வேறு வேறு நகரத்தில் இருந்தாலும் டெலிபோன் மூலம் என்ன செய்கிறாய்? என்ன சாப்பிட்டாய்? என்று விசாரித்துக் கொள்வார்கள்.

ஒரு தாயும் தன் குழந்தைகள் வேறு ஊருக்குப் போன பின் இவ்வாறு விசாரித்துத் தெரிந்து கொள்கிறாள். என்ன சாப்பிட்டாய். எங்கு போனாய். என்ன உடை உடுத்தினாய்? நீ அன்பு செலுத்துபவர் தூரத்தில் இருந்தால், அவர் என்ன செய்கிறார், என்ன உடை உடுத்தியிருக்கிறார் என்று அறிய ஆவல் உண்டாகிறது. அவர் மீது அன்பிருக்கும் காரணத்தால் அவரை பற்றி எல்லாவற்றையும் அறிய முயல்வாய். சில சமயம் கணவனோ அல்லது மனைவியோ மற்றவர் தன் மீது சந்தேகப்பட்டு உளவு பார்க்கிறாரோ என்று நினைப்பார்கள். இது இயல்பாக நடப்பது தான்.அறிவு இருக்கும் இடத்தில் அன்பு மலர்ந்து மேலும் மேலும் கூடும். ஒரு வான் வெளி விஞ்ஞானி இந்தப் ப்ரபஞ்சத்தைப் பற்றிப் படிக்கப் படிக்க அவருடைய விருப்பம் அதிகமாகி அவருடைய ஆராய்ச்சியில் மூழ்கி விடுவார். எனவே அறிவையும் பக்தியையும் பிரிக்க முடியாது. முதலில் அறிவு இருக்கும்போது அன்பும் (பக்தியும்) தொடர்ந்து வரும். எனவே அறிவையும் பக்தியையும் இரண்டு வேறு பாதைகள் என்று என்றுமே நினைக்க வேண்டாம்.

கே: குருதேவ், நிறைய தடவை திருமணம் வெற்றி பெற கணவன் மனைவியின் பங்கைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். தயவு செய்து இன்று ஒரு திருமணம் வெற்றி பெற மாமனார், மாமியார் பங்கைப் பற்றிச் சொல்லுங்கள்.

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: உன் அம்மாவும் அப்பாவும் உன்னைப் பலமுறை திட்டியிருப்பார்கள். உன் அம்மா திட்டியதை நீ சுலபமாக எடுத்துக் கொள்கிறாய். அதே உன் மாமியார் சொல்லும் போது, அது ஏதோ உன் தொண்டையில் மாட்டிக் கொண்டது போல் உன்னைத் துன்புறுத்துகிறது. உண்மையில் பார்த்தால், உன் மாமியாரோ, உன் மாமனாரோ ஏதோ சொல்வதற்கு முன் தயங்குவார்கள். உன் பெற்றோர்கள் திட்டுமளவுக்குத் திட்டவும் மாட்டார்கள். மிகவும் குறைவாகத் தான் திட்டுவார்கள். அவர்களின் பிள்ளைகளைத் திட்டும் அளவுக்கு அதிகாரத்தை மருமகள், மருமகனிடம் காட்ட மாட்டார்கள்.

ஒருவர் அதிகாரத்தோடு நடக்கும் போது ஒருவர் மேல் திட்டவோ அல்லது தகாத வார்த்தைகள் சொல்லக் கூடும். நீ அவர்களை உன்னுடையவளாகப் பார்க்காத போது உனக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கும். உன் மாமியாரை உன் அம்மாவைப் போலப் பார்த்தால் நீ வாக்கு வாதத்துக்குப் பிறகு கூட அவரை அணைத்துக் கொள்ளலாம். வேற்று மனிதராக நினைத்தால், சண்டைக்குப் பின் அவர் வந்து உன்னை அணைத்துக் கொள்ள வேண்டும், உன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர் பார்ப்பாய்.

உண்மையில் உன் மாமியாரோ, மாமனாரோ உன்னைத் திட்டினால் அது நல்லது. அவர்கள் தன் குழந்தைகளையும் உன்னையும் வேறாக நினைக்காமல் உரிமையுடன் கடிந்து கொள்கிறார்கள். நீ உன் அம்மாவிடம் ஒரு முறை கூட சண்டை போட்டதில்லையா?  ஒப்பிட்டுப் பார். இரண்டு பக்கத்தையும் பார். நீ உன் அம்மாவிடம் பலமுறை சண்டை போட்டிருக்கிறாய். பலமுறை அவள் உன்னைத் திட்டியதுண்டு. ஆனால் அது உன் இதயம் வரை சென்றதில்லை. சிறிதளவு கூட துன்புறுத்தியது இல்லை. நீ அதை உதறி விடுவாய். இன்றும் நீ உன் அம்மாவிடம் சண்டை போட்டு விட்டு சமாதானமாகி விடுவாய். ஒன்றுமே நடக்காதது மாதிரி உட்கார்ந்து பேசுவாய். மாமியாரிடமும் அப்படியே நடந்து கொள். சண்டை நடந்தால் (ஒன்’றுமே நடக்காதது போல்) உன் அம்மாவிடம் சென்று பேசுவது போல் போய்ப் பேசி சமாதானம் செய்து கொள்.மெதுவாக அவர்களும் மாறி உன் பக்கம் வருவார்கள். அவர்கள் மனமும் மாறும். அன்பினால் நீ எல்லோரையும் வெல்லலாம். உன் சங்கல்பத்தினால் அவர்கள் அன்பைப் பெறலாம். அன்பும் சங்கல்பமும் தோல்வி அடைந்தால் பிரார்த்தனை செய். கடவுள் அருளால் எல்லாம் சரியாகிவிடும்.

கே: குருஜி! “பகவான் கிருஷ்ணரே உத்தமமான ஆத்மா. அவரே தான் எல்லா பொருளிலும் இருப்பவர்” என்று பகவத் கீதை குறிப்பிடுகிறது. “சிவன் தான் எல்லாப் பொருளிலும் இருப்பவர்” என்று சிவதத்துவம் சொல்கிறது. இரண்டிலும் எது உண்மை?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: இரண்டுமே உண்மை தான். இரண்டுக்கும் வித்தியாசம் கிடையாது. எது சிவமோ அதுவே கிருஷ்ணர். அதுவே இறைவன். எங்கும் இருப்பவர். அவை இரண்டல்ல. ஒன்றே தான். ஒரு ரிஷி கிருஷ்ணரும் (ஹரி) சிவனும் (ஹரன்) வேறு என்று நம்பினார். சிலர் ஹரி என்றும் சிலர் ஹரன் என்றும் மட்டும் ஜபித்தார்கள். அதனால் இறைவனே அந்த ரிஷிக்கு பாதி ஹரியாகவும், பாதி ஹரனாகவும் காட்சியளித்து இரண்டுக்கும் வித்தியாசமே இல்லை என்று உணர்த்தினார். அதே போல் சிலர் சக்தியும், சிவனும் வேறு வேறு என்று நினைக்கிறார்கள். மகான் பிருங்கரும் இப்படித் தான் நம்பினார். ஆண் உருவம் பெண் உருவத்தை விடச் சிறந்தது என்று எண்ணினார். பல மதங்களில் பெண்களுக்கு அவர்களுக்குரிய இடத்தை அளிக்கவில்லை. அவர்களை இரண்டாம் தர மக்களாகக் கருதுகிறார்கள். ஆண்கள் மேலானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

அதனால் பிருங்க ரிஷி ஆண் உருவத்தை மட்டும் வணங்கி வந்தார். பெண் உருவத்தை மதிக்க வில்லை. சக்தியை வணங்க மாட்டார். கடவுள் அவருக்கு உணர்த்த நினைத்தார். சில சமயம் நன்கு கற்றறிந்தவர்கள் கூட தவறான பாதையில் செல்கிறார்கள்.அவர்கள் நல்லவர்கள் தான். இருந்தாலும் அவர்களின் அறிவு கரிய மேகங்களால் சூழப்பட்டு தவறான ஒன்றை சரியானதாக நினைக்கிறார்கள்.

ரிஷி பிருங்கருக்கு உண்மையை உணர்த்த இறைவன் பாதி ஆணும், பாதி பெண்ணுமாக, அர்த்தநாரீஸ்வரராக அவருக்குக் காட்சி அளித்தார். ரிஷி சிவசக்தி உருவத்தைச் சுற்றி வந்து வணங்கும்படியானது. சிவனை மட்டும் தனியாகச் சுற்ற முடியவில்லை.

பெண்ணுக்கும் ஆணுக்குக் கொடுக்கும் மரியாதையைத் தரவேண்டும். ஆணையும் பெண்ணையும் வித்தியாசமாகப் பார்க்கக்கூடாது. இன்று நாம் பெண்ணுரிமையைப் பற்றிப் பேசுகிறோம். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே அது நம் நாட்டில் இருந்து வந்தது. எனவே கடவுள் அர்த்தநாரீஸ்வரர் உருவில் பிருங்க ரிஷிக்கு ஞானம் தந்து அருளினார்.

பிருங்கி என்றால் பொன்வண்டு. இறைவனிடம் இருந்த பக்தியின் காரணமாக பிருங்க மகரிஷியின் இதயம் பொன்வண்டின் ரீங்காரம் போல் துடித்தது. வண்டு ஒவ்வொரு மலராகப் போய் அதில் இருக்கும் தேனைச் சேகரிப்பது போல் பிருங்கமகரிஷி ஒவ்வொரு மனிதரிடம் இருக்கும் சிவதத்துவத்தை எடுத்துக் கொள்வார். இந்த உலகின் எல்லாவற்றிலும் சிவதத்துவத்தையே தேடிச் சேகரிப்பார். அவர் அப்படிப் பட்ட பக்திமான். ஆனால் அவர் பெண்களுக்கு மரியாதை அளிக்காததால் கடவுள் தன் ஆண் பெண் உருவைக் காட்டி அவரைத் திருத்தினார். இது புராணக் கதை அல்லது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இதன் மூலம் அவர் ஹரியும் ஹரனும் வேறல்ல என்று அறியலாம்.

கிருஷ்ணர் சரித்திரப் படி பெரிய மகான். ஆனால் சிவன் எப்பொழுதும் பிறக்கவே இல்லை. அதனால் தான் அவர் சுயம்பு என்று அழைக்கப்படுகிறார். அவர் பிறக்கவே இல்லை. முகம்மதிய மதத்திலும் அல்லா எப்பொழுதும் பிறக்கவே இல்லை என்று சொல்கிறார்கள். அதே தான் சிவனுக்கும் சொல்லப்படுகிறது. அவர் தானாகவே தோன்றினார். அவரே காலத்துக்கும் அதிபதி. காலன் அவரைத் தொட முடியாது. சீக்கிய மதத்திலும் கடவுள் காலத்துக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. –“ஏக் ஓம்கார் சத்நாம் கர்த்தா பூரக் நிர்பவ் நிர்வைர் அகால் மூரத்”. எல்லா மதங்களும் இதே தத்துவத்தைச் சொல்கின்றன. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்வதும் இதே தான். “அவ ஜானதி மம முத மனுசிம் தனும் அஸ்ரிதம், பரம் பவம் அஜநந்தோ மம புத மகேஷ்வரம்”

என்னுடைய வியாபகமான எல்லாம் கடந்த தன்மையை அறியாத மூடர்கள் என்னை ஒரு உருவமாகப் பார்க்கிறார்கள். மக்கள் என்னை ஒரு உருவமும், மனதுமாக எண்ணுகிறார்கள். மூடர்களால் என்னை அறிய முடியாது. நான் மனித உருவில் இருந்தாலும் என் ஆத்மா தான் பரமாத்மா. ஓ அர்ஜுனா என்னில் உள்ள தெய்வீகத்தை மட்டும் பார். அதனால் தான் கடவுளிடம் மனித குணத்தையோ அறிவையோ பார்க்க வேண்டாம் என்கிறார்கள். ஏனென்றால் நீ எப்படிப் பார்க்கிறாயோ, அதே போல் உனக்குக் காட்சியளிக்கும். ஒரு சிலையை நீ கல்லாகப் பார்த்தால் அது உனக்குக் கல்லாகத் தான் தெரியும். ஆனால் அந்தச் சிலையில் தெய்வீகத்தைப் பார்த்தால் அது உனக்குக் கடவுளாகக் காட்சி தரும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரிடமும் தெய்வீகத் தன்மையையும் அன்பையும் பார்க்கலாம். நம்மைச் சுற்றியிருக்கும் அனைவரிடமும் ஒரு ஒற்றுமையைக் காணலாம். ஏனென்றால் எல்லோருமே அதே கடவுளிடமிருந்து தான் வந்திருக்கிறோம். மனித அறிவு என்பது வரையரைக்குள்ள வெளித் தோற்றத்தை மட்டும் பார்க்கும். ஆனால் நாம் எங்கும் எல்லோரிடமும் வியாபித்திருக்கும் தெய்வீகத்தை உணர வேண்டும்.

கே: குருதேவ்! எப்படி ஞானத்தை அடைவது போல, அதை இழக்கவும் முடியுமா?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: ஞானத்தை முழுவதும் இழக்க முடியாது. பூரண ஞானம் அடைந்த பின் அதை இழப்பதென்பது முடியாது. அரை குறை ஞானம் அடைந்த ஒருவர் அதை முழுவதும் அறிந்து கொள்ளாமல் முன்னும் பின்னும் போகலாம்.

கே: நான் தியானத்தில் (யோக பயிற்சி) அமரும் போது மனம் இங்கு மங்கும் அலைகிறது. மனதை அடக்க என்ன செய்யலாம்?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: உன் வாழ்க்கையையே யோகப் பயிற்சியாக நினைத்துக் கொள்.உன் வாழ்க்கையே ஒரு யோகப் பயிற்சி தான். உன் மனம் எங்கு அலைகிறது? எங்கு திருப்தி கிடைக்கிறதோ அங்கு செல்கிறது. அடுத்த முறை இப்படி நடக்கும் போது உன் மனதைக் கவனி. உன் மனம் திருப்திக்காக அலைகிறதா? நீ அப்படிக் கவனித்து அதற்கான காரணத்தைப் பார்த்தால் உன் மனம் அங்கில்லை. பிறகு உன் மனம் சாந்தி அடையும். அலைவதை விட்டு அடங்கி விடும். மனம் ஆத்மாவில் லயித்து விடும். அதனால் தான் பல தியான பயிற்சிக்கான முறைகள் சி.டி. யில் பதிவு செய்து கொடுக்கப் பட்டிருக்கின்றன. தியானம் செய்து கொண்டே இரு. ஆனால் தியானம் மட்டும் போதாது. ஞானத்தோடு கூடிய தியானம் மனதை அடக்க உதவும்.

கே: நமக்கு மிகவும் விருப்பமானவர்கள் நம்மை விட்டுப் பிரியும் போது (இறக்கும் போது), அவர்களை நாம் எவ்வாறு திருப்பி நம் வாழ்வில் கொண்டு வர முடியும்.?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: பிரிந்தவர் சரியான இடத்துக்குச் சென்றிருக்கிறார். நமக்கு மிகவும் பிரியமானவர் நம்மை விட்டு விலகுவது, “வாழ்வு ஒரு நாள் முடியக் கூடியது, எதுவும் நிரந்தரமானது அல்ல” என்பதை நமக்கு உணர்த்துவதற்காகத் தான்.

நானும் ஒரு நாள் பிரிய வேண்டியது தான். நீயும் எல்லாவற்றையும் விட்டு விட்டுச் செல்லப் போகிறாய். இந்தச் சமயங்களில் வருத்தமடைவது சகஜம். அதனால் தான் தியானம், யோக சாதனைகள், சத்சங்கம் இருக்கின்றன. அதில் ஈடுபடுவது உன்னுடைய துக்கத்திலிருந்து மீள வழி செய்யும்.

கே: குருஜி! நான் ஆச்ரமத்தில் இருக்க விரும்புகிறேன்...

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: சரி. ஆச்ரம நிர்வாகத்தினரோடு பேசு. நான் சொன்ன மாதிரி இந்த உலகம் முழுவதுமே ஆச்ரமம் தான். நீ எங்கிருந்தாலும் மக்களிடம் அன்போடு இரு. உதவி செய். ஞானம் சம்பந்தமானவற்றைக் கற்றுக் கொடு. அது தான் ஆச்ரமம். ஒவ்வொரு வீடும் ஆச்ரமம் தான். ஆச்ரமம் என்றால் என்ன? ஆச்ரமத்தில் ஒரு முயற்சியும் இல்லாமல் உன் மனம் ஆழ்ந்த ஓய்வு பெறுகிறது. ஞானம் கிடைக்கிறது. ஆத்மா அமைதி அடைகிறது. வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாகிறது. 

கே: ஆத்மா இறப்பதில்லை என்றால் உலகத்தில் ஜனத்தொகை ஏன் அதிகரிக்கிறது?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: எத்தனையோ விலங்குகள் இப்போது இந்த பூமியிலிருந்து மறைந்து விட்டன. பாம்புகள், பூச்சிகள், சிங்கங்கள்… பூமியிலிருந்து மறைகின்றன. கழுதைகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. முன்பு பார்த்த அளவு குரங்குகள் இப்போது காண்பதில்லை. எல்லா இடங்களிலும் காடுகள் அழிந்து நகரங்களாகின்றன. குரங்குகள் எங்கே போகும்? அதனால் அவை வீடுகளிலும், அடுக்கு மாடி குடியிருப்புகளிலும் புகுந்து விட்டன.

கே: வெடிகுண்டு விபத்திலோ, விமான விபத்திலோ சிறு குழந்தைகள் இறப்பதைக் கண்டு நான் மிகவும் துக்கத்தில் ஆழ்கிறேன். இறப்புக்குப் பின் அவர்கள் நன்றாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அவர்களையும் பார்த்துக் கொள்கிறீர்களா?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: ஆம் கவலைப் படாதே. துக்கப் படுவது இயற்கை தான். மற்றவர்களின் வலியை உணர்வது நீ ஒரு மனிதாபிமானி என்பதை நிரூபிக்கிறது. மற்றவர்களின் வலியை உணராத இதயம் இருந்து என்ன பயன்? ஆனால் நீ ஒரு வேலையும் செய்யாமல் துக்கத்தில் ஆழ்ந்தால் பயனில்லை. இந்த துக்கத்தை மறந்து, சேவை செய்வதில் ஈடுபடு.