ஞானம், உங்களுக்குள் இருக்கும் ஒரு விதை....


23
2012...............................
பெங்களூர் - ஆஷ்ரம்
மே

நம் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அது நம்மிடம் ஏற்கனவே இருக்கிறது, என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.‘எனக்கு வேண்டியது என்னிடம் ஏற்கனவே  இருக்கிறது’, என்ற மனப்பாங்குடன்  நாம் வாழ்ந்தால் நாம் விரும்புவது எளிதாகக் கனியும்.
‘என்னிடம் இருக்கிறது’ என நினைப்பது ஒரு விதையை விதைப்பது போல.விதை விதைத்த பின், தண்ணீரும்எருவும் போட்டால் அது முளைத்து வளர்ந்து விடும். அதே வழியில், வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் இலட்சியம்,  உங்களிடம் இருக்கிறது.  உங்களிடம் இல்லை என்று நினைக்கும் போது தான்இல்லாமை வளர்கிறது. இந்த காரணத்தால் தான் பணம் இருப்பவரிடம் அது அதிகமாகிறது. பணம் இல்லாதவரிடம் அது குறைகிறது; ‘என்னிடம் இல்லை! என்னிடம் இல்லை!’ என்பதால் அது அவர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே மனம் இல்லாமையின் திசையில் செல்கிறது.
உங்களுக்கு தெரியுமா, வீட்டில் ஏதாவது இல்லாத  போது அல்லது நாங்கள் மிட்டாய் கேட்கும் போதோ, என் பாட்டி எப்போதும் சொல்வது என்னவென்றால்,‘நிறைய இருக்கிறது, ஏராளமாய் இருக்கிறது, நாம் கடைக்கு போவோம்’. இதை கேட்பவர்களுக்கு ஏதோ அர்த்தமில்லாமல் சொல்வது போல தோன்றும். நம்மிடம் இல்லையென்று அவர் சொல்லி நாங்கள் கேட்டதே யில்லை.
எனவே ‘இல்லாமை’ என்ற உணர்வு போக வேண்டும். மேலும் நீங்கள் அபரிமிதமாய் இருப்பதை உணர வேண்டும். நீங்கள் எந்த இலக்கை அடைய விரும்பினாலும், நீங்கள் அதை அடைந்து விட்டீர்கள்  என்றே நினையுங்கள்.  பின்னரே அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
முயற்சி செய்தாக வேண்டும், ஆனால் முயற்சி மட்டுமே வேலை செய்யாது. முயற்சி செய்வதற்கு முன், இலக்கின் விதையும் இருந்தாக வேண்டும். எனவே, இலக்கு ஆன்மீகப் பாதையில் இருப்போரிடம் ஏற்கனவே இருக்கிறது. இலக்கு எங்கோ வெளியில் இல்லை,  இறுக்கம் நீங்கி தளர்வாகுங்கள்; இலக்கு இப்போதே இங்கேயே இருக்கிறது.
எனவே ஞானம் உங்களிடம் இருக்கிறது. அது உங்களிடம் இல்லாமலிருப்பதாக நினைத்தீர்கள் என்றால் அதை நீங்கள் அடையப் போவதே இல்லை.உங்களிடம் அது ஒரு விதையாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஒரு யோகி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் மேலும் யோகம் செய்தவாறு இருக்க வேண்டும், அதில் நீங்கள் முழுமையும் நிறைவும் காண்பீர்கள். நீங்கள் யோகியல்ல என்று நீங்கள் நினைத்து, பின்னர் யோகத்தில் முழுமை காண முயன்றால் அது நடக்காது. எனவே விதை ஏற்கனவே இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு வியாபாரியாக வேண்டும் என்றால்,‘நான் ஒரு வியாபாரி’ என்று மனதில் விதை போடுங்கள், பிறகு அதற்கான முயற்சி எடுங்கள். இது அர்த்தமில்லாதது போல தோன்றும். வழக்கமாக மக்கள் நினைப்பது என்னவென்றால், ‘என்னிடம் இல்லை, எனவே இதை நான் அடைய வேண்டும்’, ஆனால் அவர்கள் அதை அடைவது அரிது. வெற்றியின் ரகசியம், அதை அடைய விரும்புவரிடம் ஏற்கனவே அந்த இலக்கு இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதுதான்.
எனவே, இன்று உங்களுக்கு ஒரு பெரிய ரகசிய அறிவு கிடைத்தது.
கே: அன்பு குருஜி, இன்றைய காலத்தைவிட மகாபாரத காலத்தில் தொழில்நுட்பம் வெகுவாய் முன்னேறி இருந்தது என்கிறார்கள். என்ன நடந்தது? அந்த முன்னேற்றங்கள் ஏன் காணாமல் போனது? எப்படி நாம் அதை திரும்பப் பெறுவது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இயற்கையில் இது ஒரு சுழற்சி. எல்லாம் ஒரு சுழற்சியில் நடக்கிறது. ஒரு காலத்தில் டைனோசார்கள் இருந்தது. பயிற்றுவிக்கக் கூடிய மிகப் பெரிய பறவைகள் இருந்தன. அவற்றின் மீது பெரிய மண்டபங்கள் கட்டி அதில் மக்கள் ஒரு இடம் விட்டு ஒரு இடம் செல்ல பயன்படுத்தினார்கள். பெரும் பறவைகள், ஏறக்குறைய நம் காலத்திய விமானம் அளவு பெரியவை டைனோசார்கள் காலத்தில் இருந்தது. அதைப் பற்றிய ஆவணப் படங்கள் பார்த்திருக்கிறீர்களா? சில பறவைகள் சுமார் 3000 கிலோ எடையில் இருந்தன, அவற்றின் மீது அறைகள் கட்டி பறந்தார்கள்.
இராவணன் எவ்வாறு சீதையைக் கொண்டு சென்றான், அப்போது ஜடாயு என்ற பெரிய பறவை எப்படி தடுத்தது, பின்னர் இராவணன் அதன் சிறகுகளை வெட்டியது ஆகியவை இராமாயணத்தில் எழுதப் பட்டிருக்கிறது. எப்படி இவற்றை இழந்தோம் என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் இப்போது நாம் நம் சுதந்திரத்தை இழந்து கொண்டிருக்கிறோம். மிகக் கடினமாக போராடி சுதந்திரம் பெற்றோம், ஆனால் நம் நாட்டில் ஊழல் வளர்வதைப் பார்த்தால் மோசமாக இருக்கிறது. அதை நாம் சரி செய்ய வேண்டும். 
கே: அன்பு குருஜி, நான் என் வியாபாரத்தில் மிக வெற்றிகரமாக இருக்கிறேன், ஆனால் என் சொந்த வாழ்கை நாசமாகி இருக்கிறது. நான் என்ன செய்வது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ‘நான் பாழாகிவிட்டவன்’ என்ற பட்டத்தை நீங்கள் நீக்க வேண்டும். நீங்கள் பாழாகிவிட்டது என்று எப்போது உணர்ந்தீர்களோ அப்போதே சரியான திசையில் செல்லத் துவங்கிவிட்டீர்கள். நீங்கள் பாழாகிவிட்டது உங்களுக்கு தெரியாமல் இருப்பதே உண்மையில் பாழாவது. நீங்கள் பாழாவதற்கு காரணமாய் இருந்து எப்போது அதை உணர்கிறீர்களோ அப்போதே அதிலிருந்து வெளியே வந்து விடுகிறீர்கள். எனவே எந்த தடையும் இன்றி நடை போடுங்கள், கவலை வேண்டாம். 
கே: அன்பு குருஜி, உடுக்கை, சூலம், மற்றும் சிவனின் தலையில் சூடியிருக்கும் பிறைச் சந்திரன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி தயவு செய்து விளக்குங்கள்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மனம் இல்லாமலிருப்பதே சிவ தத்துவம், சந்திரன் மனதை குறிக்கிறது. மனமே இல்லாதபோது எப்படி மனம் இல்லா நிலையைச் சொல்வது, எப்படி ஒருவர் புரிந்துகொள்வது. எனவே புரிந்துகொள்ள, அனுபவிக்க மற்றும் விளக்க சிறிதளவு மனம் தேவை. உரைக்க முடியாததை உரைக்க சிறிதளவாவது மனம் தேவை. அதைத்தான் முழு நிலவாக அல்லாமல் சிறு பிறை நிலவாக குறிக்கப்படுகிறது.  
சிவ தத்துவம் விவரிக்க இயலாதது; அதன் அடி வேரை யாராலும் காண முடியாது. இதைப்பற்றி ஒரு கதை உள்ளது. பிரம்மா தலையையும் மற்றும் விஷ்ணு கால்களையும் பார்க்க விழைந்து அது இருவருக்குமே முடியாமல் போனது. முடிவில்லாததை உணர சிறிது மனமாவது தேவை. நீங்கள் தியானத்தில் அமரும் போது வெறுமையை உணர்கிறீர்கள், ஆனாலும் அப்போது,‘நான் இந்த அழகான தியானத்தை அனுபவிக்கிறேன்’, என்ற எண்ணம தோன்றுகிறது. அதை அனுபவித்தது யார்? அதுதான் மனம். ‘ஓ! நான் நன்றாக தூங்கினேன்’ அல்லது, ‘தியானம் நன்றாக இருந்தது’, என்று அறிந்துகொள்வது மனம் தான்.
எனவே விவரிக்க முடியாததை விவரிக்க, சிறிதளவு மனம் தேவை, அதைத்தான் சிறிய நிலவு குறிக்கிறது. தலை தான் ஞானம். ஞானம் மனதிற்கு அப்பார்ப்பட்டது, ஆனால் அதை விளக்க சிறி தளவு மனம் தேவை, அது தான் தலையில் சூடியிருக்கும் பிறை நிலவு.
எப்போதும் விரிந்து சுருங்கும் தன்மையுள்ள பிரபஞ்சத்தைத் தான் உடுக்கை குறிக்கிறது. விரிந்த நிலையிலிருந்து சுருங்குகிறது பின்னர் விரிவடைவதற்காக, இது தான் படைப்பு. உங்கள் இதயத் துடிப்பை பார்த்தீர்களானால் அது நேர் கோடாக இல்லாமல் மேலும் கீழும் போகும் ஒரு லயமாய் இருக்கிறது. உலகம் முழுதும் லயம் தான், சக்தி எழுகிறது பின் விழுகிறது மீண்டும் எழுவதற்காக. இதை உடுக்கை குறிக்கிறது. உடுக்கையின் வடிவைப் பாருங்கள், விரிவிலிருந்து குறுகி மீண்டும் விரிவடைகிறது. இது ஒலியின் வடிவமும் கூட. ஒலியே லயம் ஒலியே சக்தி. இந்த முழு பிரபஞ்சமும் ஒரு அலை வடிவம், லயம் தவிர வேறில்லை.
துளிம இயற்பியல் என்ன சொல்கிறது? இதை தான் சொல்கிறது – இந்த முழு பிரபஞ்சமும் லயமன்றி வேறில்லை. எனவே இரண்டாக எதுவுமில்லை, ஒரே பொருள் தான் இருக்கிறது. அது ஒரு அலை வடிவம் மட்டுமே. இதைத்தான் ஆதிசங்கரரும் ‘ஒரு பொருள் மட்டுமே இருக்கிறது’ என்றார்.
விளக்கு,மின் விசிறி எல்லாம் வேறு வேறாக தோன்றினாலும், குழப்பம் ஏற்படுகிறது, உங்களுக்கு உண்மை தெரியவில்லை.ஆனால் உண்மை என்னவென்றால்  மின்சாரம் தான் இருக்கிறது, ஒரே ஒரு பிரதான விசைதான் இருக்கிறது, அந்த விசையை அழுத்தினால் எல்லா விளக்குகளும் எரிகிறது. அது அணைக்கப் பட்டால் எல்லா விளக்குகளும் அணைந்து விடுகிறது. எனவே எல்லாவற்றையும் இயக்குவது மின்சாரம் தான். இந்த முழு பிரபஞ்சமும் ஒரே மெய்யுணர்வு அல்லது ஒரே சக்தி. இப்போது மின்சாரம் நல்லதா கேட்டதா? இரண்டுமில்லை.
நீங்கள் மின்சாரத்தில் கையை வைத்தால் உங்களை மின்சாரம் தாக்குகிறது, அது நல்லதா? ஆனால் அதே சமயம், மின்சாரம் உங்களை தாக்கியதால் அது கெட்டதா என்ன? இல்லை, மின்சாரத்தை கெட்டது என்று சொல்வது அறிவற்றது, ஏனென்றால் அது நமக்கு வசதியைத் தருகிறது – ஒளி, ஒலி, காற்று, உணவு – என எல்லாவற்றையும் தருவது மின்சாரம். அதே நேரம் மின்சாரம் மிகக் கேடானதும் கூட. அதிக அழுத்த மின் கம்பி உங்கள் வீட்டிற்கு மேலே சென்றால் அது தீமை நிரம்பிய கதிர்களை வெளியிடுகிறது. எனவே மின்சாரம் நல்லதுமல்ல தீயதுமல்ல. இதைதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் தான் நாம் சொல்கிறோம் பிரம்ம தத்துவம் அல்லது வாழ்கை நல்லது கேட்டது இவற்றிற்கு அப்பார்ப்பட்டது. நல்லதும் கேட்டதும் ஒன்றின் தொடர்பாகத்தான், இதில் தீயதும் இல்லை, நல்லதும் இல்லை, இதற்கெல்லாம் அப்பார்பட்டது, அதுதான் அந்த ஒன்று – இதுதான் தத்வ ஞானம், உண்மையான அறிவு.
கே: அன்பு குருஜி, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர், ஏழைகள் மேலும் ஏழையா கிறார்கள், தங்களிடம் இல்லை என்று நினைப்பதால்தான் இவ்விதம் என்று சொன்னீர்கள். இந்த முரணை சரி செய்ய இயற்கை ஏதும் செய்கிறதா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம், ஞானம் மூலம். அதனால் தான் நாம் எல்லோரையும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாறவும், ‘இல்லாமை’ என்ற உணர்விலிருந்து வெளி யேறவும் ஊக்கப் படுத்தவேண்டும். யாரிடம் இருக்கிறதோ அவர்கள் அதை பிறருக்கு தந்து உதவ வேண்டும். யாரிடம் இல்லையோ அவர்கள், தமக்கு தேவையானது கிடைக்கும் என்று எண்ணத் துவங்கிவிட்டு, கடுமையாய் உழைக்க வேண்டும்.
கே: எப்போது நீங்கள் குருஜியாக இருக்கக் கூடியவர் என்பதை உணர்ந்தீர்கள்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இராமயணத்தில் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. ஒரு தெரு நாய் போய்க் கொண்டு இருந்த போது யாரோ ஒருவர் அதன் மீது கல்லெறிகிறார். எனவே அந்த நாய் நீதி மன்றத்திற்கு போகிறது. இராமரின் நீதிமன்றத்தில், விலங்குகள் உட்பட அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்று சொல்வார்கள். அந்த நாய் நீதிமன்றத்திற்குச் சென்று, “தெரு எல்லோருக்கும் பொதுவானது. இது நாய்களுக்கு அல்ல என்று எங்கேயும் சொல்லப்படவில்லை. நான் தெருவில் நடந்து போகும்போது அவர் என்மீது கல்லெறிந்தார்; அவர் தண்டிக்கப்பட வேண்டும்”, என்றது. உடனே ஸ்ரீ இராமர் அந்த ஆளிடம் இது உண்மையா என்று கேட்டார். பொய் சொல்ல இயலாத அவர்! ஆம் அது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். அந்த நாட்களில், பாதிக்கப் பட்டவரிடம் என்ன தண்டனை கொடுப்பது என்று கேட்பது வழக்கம். எனவே கல்லால் அடித்தவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று அந்த நாயை கேட்டார்கள். அதற்கு அந்த நாய் சொன்னது, “ அவரை ஒரு மதத் தலைவராக்கிவிடுங்கள். அல்லது ஏதேனும் ஒரு ஆசிரமத்திற்கு குருவாய் ஆக்கிவிடுங்கள்” என்றது. உடனே மக்கள், “ஆஹா! என்ன இது புதுவிதமான தண்டனையாய் இருக்கிறதே?,” என்றார்கள்.
அந்த நாய் சொன்னது, “ஏன் கேட்கிறீர்கள்? அவரை அப்படி ஆக்கிவிடுங்கள், அவ்வளவே. நானும் முன் ஜென்மத்தில் குருவாகத் தான் இருந்தேன், இப்போது பாருங்கள் என்ன ஆனது! அப்போது நான் இறக்கும் முன், குருவாய் இருப்பதை விட தெரு நாயாய் இருப்பது மேல் என்று நினைத்தேன். அதனால் தான் நான் இப்போது நாயாய் இருக்கிறேன். எனக்கு அவ்வளவு பிரச்சினைகள் இருந்தது. அதனால் அவரை குருவாக ஆக்கினால் வாழ்க்கையில் பிரச்சினை என்றால் என்ன, வலி என்றால் என்ன, கஷ்டம் என்றால் என்ன, என்று எல்லாவற்றையும் தெரிந்துகொள்வார்.” இராமாயணத்தில் வரும் ஒரு சிரிப்பான கதை இது.
‘நான் தான் குரு’ என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் குருவாக முடியாது. யார் ஒருவர் தன்னை குருவாக சொல்லிக் கொண்டிருப்பதில்லையோ அவரிடம் தான் குரு தத்வம் வியாபிக்கிறது. நீங்கள் கூட அவ்வபோது சிலருக்கு நல்ல அறிவுரைகளை கூறுவது உண்டல்லவா? அன்பையும் மகிழ்ச்சியையும் உங்களை சுற்றி இருப்போரிடம் பரப்பு கிறீர்களல்லவா? நாம் என்ன செய்ய வேண்டும்? எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அன்பு செய்ய, சேவை செய்ய வேண்டும். இது முக்கியம்.
பொதுவாக நாம் நினைக்கிறோம், நான் எவ்வளவு அன்பு செலுத்தினேன், எனக்கு என்ன திருப்பி செய்தார்கள். இப்படியாக, ஒருவர் மீது அன்பு செலுத்திவிட்டு, அவருக்கு நாம் ஏதோ பெரிதாய் செய்துவிட்டது போல ஒரு உணர்வை அவருக்கு வரவழைக்க முயற்சிக்கிறோம். இதை நாம் செய்யவே கூடாது. அன்பு நம் இயல்பு. உண்மையான அன்பு, ‘ஓ, நான் உன்னிடம் அன்பாய் இருக்கிறேன்’, என்று சொல்லிக் கொண்டிருப்பதில்லை. இல்லை! சுய மரியாதையாய், இயல்பாய், தயையோடு, எளிமையாய் செயல்படவேண்டும். மேலும் இந்த குண நலன்கள் பிறவியிலேயே நமக்கு உண்டு. சில நேரங்களில், உறுதியாய் இருக்க வேண்டிய சமயத்தில் உறுதியாய் இருக்க வேண்டும். கொஞ்சம் அன்பு இருக்கும் இடத்தில் தான் கோபப்பட முடியும்.
எப்படியிருந்தாலும், உங்கள் எல்லா குணங்களையும் அர்ப்பணித்து விட்டு வெறுமையாய் காலியாய் ஆகுங்கள். குரு தத்துவத்தின் அருகிலிருப்பதற்கு – எல்லாவித நல்ல மற்றும் தீய குணங்களை அர்ப்பணித்து விட்டு ஆனந்தமாய் இருங்கள்.
கே: குருஜி, அந்தக் காலத்தில் பல வருடங்களாக சமாதியில் இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்றைய காலத்தில் 20 நிமிடத்தில் வேலை முடிந்து விடுகிறது. அவை உண்மையா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம், எப்படி ஒருவர் நெடுங்காலமாக தவத்தில் அமர்ந்தார் அவர் மீது புற்று கட்டியது என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். அது அப்படியல்ல. அது குறிப்பால் உணர்த்துவது என்ன என்றால், ஒருவர் தியானத்தில் அமரும்போது உடல் முழுவதும் எறும்பு ஊருவது போல  உணர்வு ஏற்படும். ஒரு நல்ல ஆசான் இருந்தால் ஒருவர் எளிதாக சாமாதி நிலை செல்லலாம். குரு இல்லாமல் சமாதி நிலை அனுபவிக்க முடியாது. 
கே: குருஜி, குண்டலினி என்பது என்ன? அதை எப்படி எழுப்புவது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ‘குண்டா’ என்றால் உடம்பு, ‘குண்டலினி’’ என்றால் உடம்பிலிருக்கும் சக்தி உணர்வு. நம் வாழும் கலை மேல் நிலை வகுப்புகளில் நடப்பது எல்லாம் குண்டலினி தான். இதை அறிய வேறு வழிகள் இல்லை. தியான நிலை ஏற்பட்டால், அது குண்டலினியை எழுப்பாமல் முடியாது. தியானத்தில் நீங்கள் ஆழ்ந்தீர்கள் என்றால், உங்களிடம் குண்டலினி எழுப்பப்பட்டு விட்டது என்று பொருள்.
கே: குருஜி, நீங்கள் சொன்னது போல், வாழ்க்கையில் நாம் விரும்புவது ஏற்கனவே நம்மிடம் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும். என் வாழ்க்கையில் நான் விரும்பும் மனிதருக்குக் கூட இப்படி நினைக்கலாமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம், அது நடக்கலாம். ஆனால் அது இந்த பிறவியிலேயே நடக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அடுத்த பிறவியிலேயோ அல்லது பத்து பிறவிகளுக்கு பின்னாலோ நடக்கலாம். அதனால் தான், ஒரு முனைப்பு கனிந்து வர அதற்கான காலம் வர வேண்டும் என்று சொல்கிறேன்.
கே: குருஜி, எனக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்திருக்கிறது, நல்ல பதவியில் இருக்கிறேன், நல்ல உறவுகள் இருக்கின்றன, எனவே நான் மிக திருப்தியாக இருக்கிறேன், கடவுள் என்னுள் இருக்கிறார் என்பதை அறிவேன். இதற்கு மேலும் நான் தியானம் செய்ய வேண்டுமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பாருங்கள், தியானம் என்பது உங்கள் நிலையை தக்க வைப்பது. உங்களுக்கு எல்லாம் நல்லபடி நடந்துவருகிறது, அது அப்படியே இருக்க வேண்டாமா? உங்கள் உடல் ஆரோக்கியம், நல்ல உறவுகள் அப்படியே தொடர வேண்டாமா? அப்படியென்றால் நீங்கள் தியானம் செய்துதான் ஆக வேண்டும்.
தியானம் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது, இல்லையென்றால் அழுத்தம் அதிகமாகி ஐந்து அல்லது பத்து வருடங்களில் நீங்கள் வெடித்து விடுவீர்கள். தியானம் உங்களை சரியான மன நிலையில் வைக்கும் மேலும் உங்களிடம் இருப்பனவற்றை தக்க வைக்கும்.
அதனால் தான் அதை ‘யோகக்க்ஷேமம்’ என்று அழைக்கிறார்கள்; ‘யோகம்’ உங்களிடம் இல்லாததை அடைவதற்கு, மற்றும் ‘க்ஷேமம்’ உங்களிடம் இருப்பதை தக்க வைப்பதற்கு. எல்லாம் ஏற்கனவே இருந்தால், அதை தக்க வைத்துக் கொள்ள தியானம் அத்தியாவசியம். உங்களிடம் ஏதேனும் இல்லாமலிருந்தால் அதை அடைவதற்கும் தியானம் தேவை.