பக்தி என்பது ஒரு வைரக்கல் போன்றது...........


11
2012............................... மன்ட்ரியால் ஆசிரமம் - கனடா 
May


பக்தி ஒரு பரிசு. உங்கள் பக்தியின் பலனை நீங்களே அனுபவித்து கொள்ள முடியாது. ‘நான் எவ்வளவு  பக்தியோடுருக்கிறேன்’ என்று நீங்களே கோரிக்கொள்ள முடியாது. நீங்கள் பக்தியோடு இருப்பது உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு. உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு ஆசீர்வாதம்.
பக்தி என்றால் என்ன? பக்தி என்னவென்றால் அளப்பரியா ஆனந்தம், ஆழ்ந்த அன்பு மற்றும் சித்திகள். சித்தி என்றால், நீங்கள் நினைத்தது நடக்கும், நீங்கள் விரும்பியது நடக்கும், நீங்கள் ஆசீர்வதிப்பது நடக்கும்; இவை எல்லாம் உங்கள் இருப்பினாலேயே நடக்கும். யோகசூத்ராவில் ரிஷி பதஞ்சலி கூறுகிறார், ‘சமாதி சித்திரிஷ்வர்ப்ரணிதனத்’, இறையின் மீது உள்ள பக்தி உங்கள் சமாதியை முழுமையாக்கும் அல்லது செம்மைப்படுத்தும். உங்கள் சமாதி நிலை அந்த அளவு அமைதியில் ஆழ்ந்து அதை ஒரு நிறைவுக்குக் கொண்டு செல்லும்.
எனவே நாம், ‘அஹா! நான் எவ்வளவு பக்தியோடு இருக்கிறேன்’ என்று எப்போதும் கூற முடியாது, உங்களின் பக்தி உங்களுக்கு கிடைத்த பரிசு அவ்வளவே. அது அப்படியே உங்களுடன் இருக்கவும், வேறு எதுவும் அதை சிதைக்காமல் இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள். அவ்வளவு தான்.
பக்தி ஒரு வைரக்கல், அதை எந்த சேற்றுக்கும் மாற்றிக்கொள்ள வேண்டாம். ஒரு வைரத்தை ஒரு கோப்பை சேற்றுக்கு பண்டமாற்றம் செய்யக் கூடாது. உங்கள் பக்தியை நீங்கள் எங்கே இழக்க முனைகிறீர்கள் தெரியுமா? ஏதாவது தற்காலிக விஷயங்கள் செய்து, யாருடனாவது சண்டையிட்டு, எதையாவது விரும்பி, அதாவது வேலை போன்றவற்றை விரும்பி அல்லது உங்கள் உறவு ஏதேனும் பிரச்சினையிலிருப்பது போன்ற காரணங்களால் உங்கள் பக்தி பாதிக்கப்படுகிறது.
உங்கள் வேலை போய் விட்டது அப்போது உங்கள் பக்தியும் போய்விடுகிறது. யாராவது உங்களை குற்றம் சாட்டுகிறார்கள் அப்போதும் உங்கள் பக்தி போய்விடுகிறது. ஒரு சில ரூபாய் நோட்டுக்களாலோ அல்லது சிறு விஷயங்களாலோ நாம் நம் பக்தியை இழக்கிறோம். யாருடனாவது ஏற்படும் சிறிய சண்டையில் உங்கள் பக்தி முழுவதும் இழந்ததாக நினைக்கிறீர்கள். இல்லையா? சிறு விஷயங்களிலும் சின்னஞ்சிறு ஆசைகளிலும் நாம் பக்தியை இழக்கிறோம். அப்படி அது இழப்பதற்கு தகுந்ததல்ல. இல்லையா?
பாருங்கள், நீங்கள் மருத்துவராக இருந்தால், நீங்கள் மருந்து தருகிறீர்கள். அது பல நேரம் வேலை செய்தாலும், சில நேரம் வேலை செய்வதில்லை. பல விஷயங்களை சார்ந்தி ருக்கிறது. ஒருவரின் கர்ம வினையைச் சார்ந்து இருக்கிறது. அதைப்போல உங்கள் வாழ்வில் பல விஷயங்கள் நடக்கிறது, சில விஷயங்கள் நடப்பதில்லை, ஆனால் குறைந்தபட்சம் உங்கள் பக்தியையாவது விட்டுவிடாமல் இருந்தாக வேண்டும்.
நான் மறுபடி சொல்கிறேன், சில சமயம் பக்தி உங்களை விட்டு போய்விட்டது போலவோ அல்லது குறைவது போலவோ தோன்றும். ஆனால் உங்களால் ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் இருக்கமில்லாமல் தளர்வாய், அமர்ந்து அதற்காக பிரார்த்தனை செய்தாலே போதும்.
எனவே, பக்தி என்பது ஒரு பரிசு, அதன் பலனை நீங்கள் எடுக்கவும் முடியாது, அப்படி செய்யவும் கூடாது. அப்படி செய்தால் அதுதான் நாம் தியானதிலிருந்தும் பக்தியிலிருந்தும் விலகி போவதற்கான வழி. அப்படித்தான் நடக்கிறது, நாம் நம் பக்தியை உணர்ந்ததும், ‘அஹா! நான் எவ்வளவு பக்தி கொண்டிருக்கிறேன்’, என்று அதன் பலனை அடைய நினைக்கிறோம். இதை நீங்கள் உணர்ந்திருந்தால், குழந்தையை போல இருந்து அதை அப்படியே விட்டுவிட வேண்டும். நீங்கள் பக்திமானாய் இருந்தால், அதற்காக நன்றியோடு இருக்க வேண்டும், அதுவே பாதுகாப்பானது. பிறகு ஒவ்வொரு கணமும் பக்தி வளர்கிறது.
ஒரு செயலில் எப்போதும் முழுமையிருக்காது. எந்த ஒரு பெரிய செயலிலும் கூட ஒரு சதவீதம் குறையிருக்கும். இயற்கை அப்படி தான். எந்த செயலிலும், அது எவ்வளவு நல்ல தாயிருந்தாலும், எவ்வளவு பயனுள்ளதாய் இருந்தாலும் சிறிதளவு குறை இருக்க தான் செய்யும். சமாதி நிலை பக்தியினால் முழுமையாகிறது.
‘ஓ! எனக்கு பக்தி உணர்வு இல்லை, நானென்ன செய்வது?’ என்று நினைத்தால், ஒன்றும் செய்ய வேண்டாம், தளர்ந்து ஓய்வாய் இருங்கள்! உங்களிடம் பக்தி இல்லாமல் இருப்பதாக நினைக்க வேண்டாம். உங்களிடம் அது இருக்கிறது, ஆனால் அது இன்னும் வெளிப்பட வில்லை, ஆனால் அது நிச்சயமாய் வெளிப்படும். இன்னும் சிறிது புண்ணியம் சேருங்கள், கொஞ்சம் சேவை, கொஞ்சம் நற்செயல்கள் செய்ய பக்தி தானாக வெளிப்படும். மெய் ஞானத்தில் இருக்க பக்தி வெளிப்படும்.
மேலும், பக்தி மார்கத்தின் துவக்கத்தில் ஒருவரது ஜாதக நிலையும் ஒரு காரணி. ஒரு சில குறிப்பட்ட கிரக சேர்கையில் முதலில் பின்னுக்குத் தள்ளப்படுவது பக்திதான். குரு எட்டாம் இடத்தில வருவது அஷ்டமகுரு எனப்படும். ஒருவருக்கு அஷ்டமகுரு என்றால் அவர் ஒரு வருடம் மிகவும் அலைகழிப்புக்கு உள்ளாவர் என்பதை ஜோதிடர்கள் அறிவார்கள்.
அப்போது என்ன நடக்கும்? மனம் அலைபாயும், மனம் எங்கெல்லாமோ சென்று தடுமாறும், எடுக்கும் எல்லா முடிவுகளும் தவறாயிருக்கும், செய்வது எதுவும் விளங்காது, மேலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்காது. ஒவ்வொரு பனிரெண்டு வருடமும் இது நடக்கும். இது ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ, அதிகபட்சம் ஒரு வருடமோ இருக்கும். இரண்டு, நான்கு அல்லது ஆறு மாதங்கள் வரை இது அதீதமாய் இருக்கும். ஒருவருக்கு இது தெரியும்போது, ‘அஹா நாம் இப்படி இருப்பது அஷ்டமகுருவினால், அதனால்தான் என் மனம் இப்படி இருக்கிறது’, இப்போது நீங்கள் உங்கள் பிரச்சினைக்குக் காரணத்தை அறிந்து கொண்டீர்கள், ஏன் உங்கள் மனம் இப்படி இருக்கிறது என்றும் தெரிந்து கொண்டீர்கள்.
இதை நீங்கள் அறியவில்லை என்றால், ‘ஒ! என் முழு வாழ்க்கையையும் நான் இழந்து விட்டேன், பிராணயாமம் எல்லாம் நான் எதற்காக செய்தேன், எல்லாம் பயனற்றது,’ என்று நினைப்பீர்கள். எல்லாவற்றையும் நாம் நிறுத்தும்போது இது தான் நடக்கும். ஒரு வருடத்திற்கு பிறகு, ‘ஓ கடவுளே, நான் பெறிய தவறு செய்துவிட்டேன், என் அறிவு எங்கே போனது,’ என்று நீங்கள் உணர்வீர்கள்.
சடேசதி அல்லது ஏழரை நாட்டு சனி என்பதை ஜோதிடர்கள் மற்றும் இந்தியாவில் மக்கள் அறிவார்கள். இந்த நேரத்தில், பொருள் உறவுகள், பொருட்செல்வம் என எல்லாவற்றையும் இழப்பார்கள். சிலருக்கு இது மிகக் கடுமையாக இருக்கும். புற உலகில் அதாவது பொருள் உலகம் மட்டுமே அறிந்தவர்களுக்கு தம் ஆரோக்கியம் பற்றிய கவலையும் இருக்கும். ஆனால் ஆன்மீகப் பாதையில் இருக்கும் ஒருவருக்கு அதே நிலை மிகவும் மேலானதாக இருக்கும். ஒவ்வொருவரைப் பொருத்து இது மாறும்.
‘ஏழு வருடமாக ஒன்றுமே விளங்கவில்லை, எதைச் செய்தாலும் தோல்வியில் முடிகிறது’, என்பதை கேட்டிருப்பீர்கள். சனி கிரகத்தின் நிலையால் இது ஏழரை வருடங்களுக்கு இருக்கும். ஆனால் இது முப்பது வருடத்திற்கு ஒருமுறைதான் வரும். எனவே ஒருவரின் வாழ்நாளில் இருமுறையோ அல்லது அதிகபட்சம் மூன்று முறையோதான் வரும். ஆனாலும் இதுவே அவர்களை வறுத்தெடுக்கப் போதுமானது. பொதுவாக, ஒருவரின் சிறுவயதில், அதாவது பதினைந்து அல்லது இருபது வயதிற்குள் வருவது அவ்வளவாய் பாதிக்காது. ஆனால் நடு வயதில் வரும்போது பாதிப்பு அதிகமாய் இருக்கும். ஐம்பது வயதுக்கு மேலே வருவதும் அவ்வளவாய் பாதிக்காது.
எனவே இந்த பனிரெண்டு வருடங்கள் ஒருவரை நன்றாக பாதிக்கும். ஒரு விதத்தில் இது ஒருவரை உள்நோக்கி பார்க்க வைக்கும். ஆன்மீகத்திற்கு வந்தவர்களைப் பார்த்தால் தெரியும், நீங்கள் பிரச்சினைகளுக்கு உள்ளாகி அதனாலேயே தீர்வு தேடி ஆன்மீகத்திற்கு வந்திருப்பீர்கள். எத்தனை பேர் பிரச்சினையினால் வந்தீர்கள்? இதைதான் சனி கிரகம் செய்கிறது. அது ஏற்படுத்தும் சூழ்நிலை தாங்காமல் புற உலகு வெறுத்து நீங்கள் உள்நோக்கி பார்ப்பீர்கள். ஒரு விதத்தில் இது நல்லது.
ஆனால் பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை வரும் அஷ்டமகுருவினால் உங்கள் நம்பிக்கையே அசைக்கபடுகிறது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று சந்தேகமே தோன்றும். எதுவுமே பயனுள்ளதாக தோன்றாது. எதுவும் ருசிக்காது, எல்லாமும் திசையற்றதாய் தோன்றும், எல்லாம் சலிப்பாய் இருக்கும், குழப்பம் ஏற்படும். ஆனால் இது குறைந்த கால அளவு மட்டுமே.
நீங்கள் சத்சங்கத்தில் இருக்கும்போது, அந்த கணமே நீங்கள் உயர்தப்படுகிறீர்கள். எல்லாம் விலக்கப்படுகிறது. அதனால்தான், குருவின் முன்னிலையில் சத்சங்கத்தில், மற்றும் உங்கள் சாதனைகளில் (சத் பயிற்சிகளில்) கிரகங்களின் பாதிப்பு வெகு குறைவாய் இருக்கும். அது உங்களை பாதிப்பதில்லை; அவ்வளவே. பலர் இதை மறுபடி மறுபடி அனுபவித்து இருக்கிறார்கள். நம் பாரம்பரியத்தில் இதற்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. எவ்வளவு நன்றாக இதை மரபாக அமைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் வியப்பு தான் மிஞ்சுகிறது.
கே: குருஜி, நமக்கு தோன்றுவது வெறும் நினைப்பா அல்லது உள்ளுணர்வா என்பதை எப்படி அறிந்துகொள்வது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: காலமே அதற்கான பதிலை சொல்லும்.
கே: படைத்த இறைவன் உண்மையென்றால், இந்த படைப்பு மட்டும் ஏன் மாயை என்கிறோம்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மாயை என்றால் என்ன? பார்ப்பதற்கு அப்படி இருக்கிறது என்பது பொருள். ஒரு ஹோலோக்ராமில் பல உருவங்கள் தெரிகிறது அதில் வரும் கதிர்கள் எல்லாம் உண்மை, ஆனால் அதில் தெரியும் உருவங்கள் தற்காலிகமானவை. அவை உண்மையான இருப்பு அல்ல. நான் சொல்வது புரிகிறதா?
உண்மையில் ‘மாயா’ என்பதன் அர்த்தம், எது மாறுகிறதோ அது, எது அளக்கப்பட முடியுமோ அது. அளவுகளும் நிலையாய் இருப்பதில்லை. இங்கு ஒரு கிலோ அளவு இருக்கும் ஒரு பொருள் வட துருவத்தில் வேறாகவும், சிங்கப்பூரில் வேறாகவும் இருக்கிறது. நிலாவில் இதே பொருள் ஒன்றில் ஆறு பங்குதான் எடை இருக்கிறது. இந்த ஞானம் நம் முன்னோர்களிடம் இருந்தது. எனவேதான் அவர்கள் இந்த பிரபஞ்சம் முழுதும் அளக்கப்படக்கூடியது, அந்த அளவும் உண்மையல்ல என்றார்கள்.
கே: ஐன்ஸ்டீனின் சிறப்பு தத்துவமான தொடர்புத் தத்துவம் கூறுவது E=MC2. அதன் அடிப்படை, ஒளியின் வேகம் எப்போதும் மாறாது என்பதே. அதைப் பற்றி நீங்கள் ஏதேனும் கூறமுடியுமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இருட்டுப் பொருள், மற்றும் இருட்டு சக்தி (dark matter and dark energy) ஆகியவற்றை கண்டுபிடித்தபின் அதிக அளவு வித்தியாசம் இருப்பதாக கூறுகிறார்கள். ஒளியின் வேகத்தை அளப்பது கூட ஒன்றை தொடர்புப் படுத்திதான், அது ஒரு முழுமையான அளவல்ல.
ஒருவிதத்தில், அன்பு, ஒளி போன்றவை அளக்க முடியாதவை, இறையின் ஒரு பாகம், மாயை அல்ல.ஆனால் அறிவியலின் இப்போதைய கண்டுபிடிப்பான இருட்டுப் பொருள் மற்றும் இருட்டு சக்தி சுவாரசியமானவை. இதைதான் ரிக் வேதத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதியில் பிரபஞ்சம் இருட்டான சக்தியாய் இருட்டால் சூழப்பட்டு இருந்தது என்று சொல்லப் பட்டிருக்கிறது. மக்களுக்கு இது புரியவில்லை; இது ஏதோ கிறுக்குத்தனமாகவும் அர்த்தமில்லாமலும் இருப்பதாக கூறினர். ஆனால் ‘நசதிய சூக்தத்தில்’ (படைப்பின் கீதம் எனப்படுகிறது), ‘இதுவுமில்லாமல், அதுவுமில்லாமல், எல்லாமே இருட்டான சக்தியாகவும் இருள் சூழ்ந்ததாகவும் இருந்தது’, என்று கூறப்பட்டிருக்கிறது.
அறிவியலின் சமீபத்திய கண்டுபிடிப்பு இதற்கு அழகாய் பொருந்துகிறது. பார்ப்பதற்கு சம்ஸ்க்ருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது போலவே இருக்கிறது. மேலும் அதில் பால் வீதி (Milky way) பற்றி கூறப்பட்டுள்ளது என்னவெனில், எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் வெறும் வாயு மற்றும் நீராக இருந்தது. அண்டவெளியிலிருந்து வாயுவும், ஒளியும் பிறந்தது. வாயுக்கள் உராய்ந்ததால் ஒளி பிறந்தது, ஒளியிலிருந்து நீரும், நீரிலிருந்து பூமியும் தோன்றியது. பிரபஞ்சத்தைப் பற்றி அப்படி ஒரு அழகான விரிவுரை. 
கே: குருஜி, மந்திரத்திற்கு பதில் உங்கள் மேல் தியானம் செய்யலாமா? தியானித்து உங்கள் சக்தியோடு ஒன்றாக கலந்து நீங்களாகவே மாறிவிட சிறந்த வழி என்ன?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இப்போது மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, விட்டு விடுங்கள், வேறு எதுவும் செய்ய வேண்டாம்.
கே: என் பள்ளியில், ஏறக்குறைய எல்லா மாணவர்களும் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். நான் அதை பேசாமல் கட்டுப்படுத்துவது எப்படி? மற்றவர்களும் அதை பேசாமல் இருக்க நான் எவ்வாறு அவர்களுக்கு உதவ முடியும்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களுக்கு அந்த சக்தி இருக்கிறது. நீங்கள் ஒரு சூப்பர் மேன். ‘நான் எந்த கெட்ட வார்த்தையும் பேச மாட்டேன்,’ என்று உறுதியாய் இருங்கள்.
உங்களுக்குத் தெரியுமா, நான் இத்தனை ஆண்டுகளாக எந்த கெட்ட வார்த்தையும் பேசியதில்லை. எனவே என்னால் செய்ய முடியும்போது உங்களாலும்  செய்ய முடியும். நான் வருத்தப் படும்போது கூட இப்படி பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றியதே இல்லை. நான் பேசிய மோசமான வார்த்தை ‘அறிவிலி’ (Stupid) என்பது மட்டுமே. அதற்கு மேல் எதுவுமில்லை, சபிப்பது இல்லை, ஒரு கெட்ட வார்த்தை கூட இல்லை, எப்போதுமே.
கே: ஆன்மீகப் பாதை ஏன் கடினமாக இருக்கிறது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கடினம்?! இல்லை! இதுதான் கடினமில்லாத, இடரற்ற, கடின முயற்சி தேவையில்லாத எளிதான ஒன்று. மற்ற வேலைகள் எல்லாம் மிகக் கடினம். நான் உலகிலேயே எளிதான வழியில் செல்கிறேன். உங்கள் வழியில் நீங்கள் புன்னகையோடும் ஆடிப்பாடியும் செல்லலாம், இது அவ்வளவு வசதியும் அவ்வளவு எளிமையும் கொண்டது. இந்த உலகில் உள்ள மற்ற வேலைகள் தான் கடினம். உங்கள் ஆசையை பூர்த்தி செய்வது அவ்வளவு கஷ்டம். ஆனால் ஆன்மீகத்தில் ஆசையை விடுவது வெகு எளிது. அதை விட்டுவிட்டு மறந்து விடலாம்.
கே: உங்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட ஒருவர், அதை மேலும் காண்பிக்காமல் விட்டுவிட்டால், அவர்கள் இன்னும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று  நம்புவது எப்படி, அவர்கள் மீது கோபப்படாமல் இருப்பது எப்படி?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அவர்களுக்கு சற்று நேரம் கொடுக்க வேண்டும், இடைவேளை விட்டு தங்களை தாங்களே மறு பார்வை செய்து அவர்கள் அக்கறையை திரும்ப காட்டட்டும். மக்களுக்கு தங்களை தாங்களே மறு சக்தியூட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
நீங்கள் எவ்வளவு நாள் அவர்களிடமிருந்து அன்பையும் அக்கறையையும் பெற்றீர்கள். அவர்கள் மறு சக்தியூட்டிக்கொள்ள சற்று நேரம் தேவைப் படுகிறது. அவர்கள் தங்கள் பாட்டரிகளை ரீசார்ஜ் செய்துகொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் யாரையாவது உங்கள் மீது அன்பு செலுத்தக் கேட்டுக்கொண்டால், அது நடக்காது. அதற்கு முரணாக வேண்டுமானால் நடக்கலாம். எனவே அன்பை கேட்டு பெறுவதும் அதை பற்றி கேள்வி கேட்பதும் கூடாது, ‘என்னிடம் ஏன் அன்பு செலுத்தவில்லை?’ என்று கேட்காதீர்கள்.
உண்மையில் நீங்கள் வேறு மாதிரி சொல்ல வேண்டும்,‘என்னிடம் ஏன் இவ்வளவு அன்பாய் இருக்கிறாய்? எனக்கு அந்த தகுதி இல்லை. என்னிடம் அளவுக்கதிகமாய் அன்பாய் இருக்கிறாய், என்னால் இதற்கு மேல் தாங்க முடியாது.’ இப்படிச் சொல்லவேண்டும், பிறகு அவர்களிடம் மாற்றத்தைக் காணலாம். உங்களுக்குத் தெரியுமா, ஒருவர் உங்கள் மீது அன்பாய் இருப்பதை உங்களுக்கு நிரூபிப்பது, பெரிய பாரம். யாரவது ஒருவர் உங்களிடம், “நீ என்னிடம் அன்பாய் இருப்பதாய் நினைக்கவில்லை, இதை எனக்கு காட்டு பார்க்கலாம்,’ என்று கூறுகிறார் என வைத்துகொள்வோம். ‘ஓ கடவுளே! நான் உண்மையில் அன்பாயிருக்கிறேன் என்பதை எப்படி நிரூபிப்பது’ என்று அல்லவா நீங்கள் நினைப்பீர்கள். இது அவ்வளவு சுமையானது, இந்த சுமையை தலையில் சுமக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.
ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வந்தவுடன் உங்கள் வாழ்கைத் துணை மீது அன்பாய் இருப்பதாய் நிரூபிக்க வேண்டும். எப்படி இருக்கும். இல்லை! வேண்டாம்! உங்கள் துணை உங்கள் மீது அன்பாக தான் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்கள் அவர்கள் அன்பை நிரூபிப்பதற்கான பொறுப்பை அவர்களிடம் தரவேண்டாம்.
கே: புத்தர் ஞானமடைந்தவர், ஆகையால் மற்ற ஞானிகளின் அனுபவங்களை அவர் உணர்ந்திருப்பார். ஆனாலும் அவர் கடவுளைப் பற்றிப் பேசியதில்லை. இதனால் சிலர் புத்தரை நாத்தீகர் என்று கூட சொல்வதுண்டு. இதைப்பற்றி நீங்கள் பேசமுடியுமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நல்லது, புத்தரின் காலத்தில் கடவுளைப் பற்றி பல தத்துவங்கள் இருந்தன.
ஏசுவின் சீடர்களைப் போல மீன் பிடிப்பவர்களாகவோ சாதாரண எளியோர்களாகவோ புத்தரின் சீடர்கள் இல்லை, அவர்கள் எல்லோரும் அறிவு ஜீவிகள் என்பதை மறக்கக் கூடாது. புத்தரின் சீடர்கள் மெத்தப் படித்தவர்கள், எனவே அவர்களுக்கு கடவுளைப் பற்றித் தெரியும்; பிரம்மனைப் பற்றித் தெரியும்; ஆத்மாவைப் பற்றித் தெரியும்; அவர்களுக்கு எல்லாவற்றைப் பற்றியும் தெரியும். அந்த தளத்தில் தான் உரையாடல் எல்லாம் இருக்கும். அப்போது பல தத்துவங்கள் இருந்ததால், புத்தர் அதில் ஏதேனும் ஒன்றை ஒத்துக் கொண்டால், பின்னர் மற்ற தத்துவங்களைச் சார்ந்தவர்கள் அதை மறுப்பார்கள், ‘இல்லை அது வழி அல்ல’ என்பார்கள். புத்தரை விட்டு விலகி விடுவார்கள். புத்திசாலியான புத்தர், ‘இருக்கும் பல தத்துவங்களைப் பற்றி நான் பேச மாட்டேன். ஆனாலும் மக்கள் வருவார்கள் வந்து ஆனந்தம் அடைந்து அவர்களே உண்மை எது என்று தெரிந்து கொள்வார்கள்’, என்றார். ஏனென்றால் அவர்கள் பெரிய பல்கலைக்கழகங்களில் படித்து படித்ததிலேயே தேங்கி இருந்தனர். அப்போது பெரும் பல்கலைக்கழகங்கள் இருந்தன, அவற்றில் அவர்கள் பல தத்துவங்கள், கோட்பாடுகள், பண்டைய நூல்கள், மருத்துவம் என எல்லாவற்றையும் படித்தனர். இந்தியா அப்போது உச்சத்தில் இருந்தது.
எனவே புத்தர் சொன்னார், ‘நான் இந்த வாதத்திற்குள் நுழைய விரும்பவில்லை. அவர்களுக்கு இந்த சிறிய நுட்பத்தை சொல்லி தரவே விரும்புகிறேன்.’ நாம் செய்வது போலவே. நாம் எந்த ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையைப் பற்றியோ, மதத்தையோ பேசுவதில்லை. நாம் சொல்வதெல்லாம், ‘சுதர்சனக் க்ரியா செய்யுங்கள்’, எல்லோரும் செய்கிறார்கள் – முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்துவர்கள், இந்துக்கள், புத்தமதத்தினர், எல்லோரும் செய்கிறார்கள், வெறுமை மற்றும் காலியாய் இருப்பதின் உண்மையான அனுபவத்தை காண்கிறார்கள். எனவே தான் புத்தர் சொன்னார், ‘இல்லை, நான் கடவுளைப் பற்றி பேசப் போவதில்லை.’ அந்த கால கட்டத்தில் அதுதான் சரியான செயல்.
ஆனால் ஏசு வேறு வகை, அந்த காலகட்டத்தில், அவர் இருந்த கிராமத்தில், அவர் உரையாற்றிய இடத்தில, ஒரே ஒரு தத்துவம் தான் இருந்தது. அவர்கள் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாய் இருந்தார்கள். ஜூடாயிசம் என்ற ஒரு தத்துவம் தான் இருந்தது, மக்கள் அனைவரம் அந்த ஒரு புத்தகத்தை மட்டுமே நம்பினார்கள். எனவே அவர் அந்த கடவுளை பற்றி பேசி அந்த தத்துவத்தை மறுக்காமல், அவர்களுக்கு ஞானத்தை போதித்தார்.
நான் சொல்வது புரிகிறதா?
மேலும் அவரை பின்பற்றியவர்கள் மிகவும் எளிய மக்கள். பல புத்தகங்களை ஆழ்ந்து படித்தவர்களும் அல்ல. எனவே மிகவும் எளிதாய் இருந்தது, ‘அன்பே கடவுள்’ என்ற போதனை எளிதாய் அவர்களுக்கு பிடித்து பின்பற்றினர்.
புத்தர் பிரான் அவர் காலத்தில் என்ன செய்யதாரோ அது முழுக்கச் சரியாய் இருந்தது. பிற்காலத்தில், ஆதி சங்கரர் மற்றும் மற்ற புனிதர்கள் வந்த போது, அவர்கள் புத்தர் சொன்னதுக்கும் உபநிஷத்துக்களில் உள்ளவற்றிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை என்பதனை கண்டனர். எனவே இந்தியா ஒரு போதும் புத்த மத நாடாக மாறவில்லை, ஏனென்றால் புத்தரின் கொள்கைகள் ஏற்கனவே இருந்து வந்தது.
புத்தர் எந்த மதத்தையும் புதிதாய் தோற்றுவிக்கவில்லை; அவர் ஒரு ஹிந்து முனிவராகவே வாழ்ந்தார். அவர் ஹிந்து முனிவராய் மாறி, ஹிந்து முனிவராகவே இறந்தார். ஆனால் அதற்குப் பிறகு புத்தமதம் என்ற மதமாய் மாறியது. பண்டைய ஹிந்து சனாதன தர்மத்தை மறுமலர்ச்சி மட்டுமே செய்தார் புத்தர். அது ஒரு மதமாகக் கூட அழைகப் படவில்லை, அது ஒரு வாழ்கை வழிமுறையாக மட்டுமே இருந்தது. நம் புராதன வாழ்கை முறையின் ஒரு பகுதியாகவே இருந்தது, பின்னர் இந்தியாவை விட்டு வெளியே சென்ற பின்னேரே அது மதமாக மாறியது.
உபநிஷத் மற்றும் பிற எல்லவற்றையும் மறக்குமளவு புத்தரின் போதனைகள் மக்களை அவ்வளவு பாதித்தது. பின்னர் மரபுவழி வந்த ஆதி சங்கரர், யோகம் மற்றும் வேதாந்தத்தை மறு நிர்மாணம் செய்தார். ஆதி சங்கரர் ஒரு சிறு மாற்றம் மட்டுமே செய்தார். அதுவே எல்லவற்றையும் மாற்றிபோட்டது. புத்தர் எல்லாமே வெறுமை என்றார். ‘நான் தியானத்தில் உள்ளே ஆழ்ந்து தேடினேன், ஆனால் என்னால் ஆத்மாவையோ சுயத்தையோ காணமுடியவில்லை’, என்றார். அதுவே அவர் கடைசியாக சொன்ன வாக்கியம்.
ஆதிசங்கரர் அதை வேறு விதமாக, சுயத்தை ஒரு பொருளாய் உருவகப்படுத்தினார். ஆதிசங்கரர் அதை மாற்றிச் சொன்னது இதுதான். ‘சுயத்தை யாரால் காணமுடிய வில்லையோ அவரே சுயம், அந்த சுயம் பேரானந்தமானது,அது வெளி அல்லது ஆகாயம்’.
அதற்குப் பிறகு, இந்த மரபை, ஞானத்தை, தத்துவத்தை மறு நிர்மாணம் செய்தார். அந்த புள்ளி வரை இரு தத்துவங்களும் அதையே தான் சொல்கிறது – நான் உடம்பல்ல, நான் மனமல்ல, நான் இதுவல்ல, நான் அதுவல்ல – பின்னர் மையத்திற்கு போகும்போது, புத்தர் சொன்னார், ‘அங்கு எதுவுமே இல்ல’. ஆதிசங்கரர் சொன்னார், ’அங்கு எல்லாமும் இருக்கிறது. இதுதான் ஆத்மா, இதுதான் மெய்யுணர்வு, இந்த மெய்யுணர்வுதான் இங்கும் இருக்கிறது எல்லாவிடத்திலும் இருக்கிறது.’
சுருங்கச் சொன்னால், ஏசுவைப்போல, ஆதிசங்கரரும் முப்பத்திரண்டு ஆண்டுகள் தான் வாழ்ந்தார், அந்த முப்பத்திரண்டு ஆண்டுகளில் இன்று இந்தியாவாக இருக்கும் இந்தத் நிலப் பரப்பின் குறுக்கேயும்  நெடுக்கேயும் பல முறை பயணம் செயதார்.
அந்த நாட்களில், வாகனங்கள், கைபேசி போன்ற எதுவும் இல்லை. ஆதி சங்கரர் எந்த திசையில் சென்றாலும் அங்கு ஜெயம் தான் கொண்டாட்டம் தான் என்று சொல்வார்கள். ஏனென்றால், புத்தருக்கு பின் ஐநூறு ஆண்டுகளில் மக்கள் மிகவும் எதிர்மறையாய் போய்விட்டனர். மக்கள் எதிலேயும் சுவாரசியம் இல்லாமல் இருந்தார்கள் என்று சொல்லப் பட்டது. அவர்கள் ‘வாழ்வே எப்படியும் ஒரு துயரம், சோக மயம், எனவே நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை.’
எனவே, போர்ப் படை இல்லை, அரசர்கள் ஊக்கமிழந்திருந்தனர், கொண்டாட்ட நிலை அறவே இல்லை. மக்கள் ‘அநித்திய’ நிலை பற்றியே பேசிக்கொண்டிருந்தனர் – எல்லாமே வெறுமை மற்றும் காலியாக மட்டுமே இருக்கிறது. இந்த ஒரு வாக்கியத்தை மட்டுமே அவர்கள் சொல்லி வந்தனர். ஆனால் ஆதிசங்கரர் சொன்னார், ’வாருங்கள், நிரந்தரமில்லை தான், ஆனால் ஏதோ ஒரு நிரந்தரமானதும் இருக்கிறது, எனவே எல்லோரையும் கொண்டாட ஆட பாட விடுங்கள்.’ பிறகு பஜகோவிந்தம் ஆரம்பித்தார், பின்னர் இசை, ஆடல், கலாசாரம் என எல்லாவற்றையும் மறு அறிமுகம் செய்தார் ஆதிசங்கரர்.
கே: என்னுடைய கோபத்தினாலும் அறியாமையினாலும் என் அன்பான அக்கறையான மனைவி, குழந்தைகளை மிகவும் கொடுமை படுத்தியிருக்கிறேன். இப்போது எனக்குப் புரிகிறது. அவர்கள் மனம் ஆறுதலைடைய நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு குற்றயுணர்ச்சி மேலிடுகிறது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யுங்கள், பின்னர் இறுக்கமில்லாமல் ஓய்வாய் இருங்கள். சரியா? 
கே: எனக்கு பல வருடங்களுக்கு முன் உபநயனம் நடந்தது, ஆனால், அந்த பூணூல், சந்தியாவந்தனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவில்லை. விளக்க முடியுமா? சுதர்சனக் க்ரியா போதுமல்லவா, ஏன் சந்தியாவந்தனம்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம், கிரியா செய்யுங்கள் அது போதும். பிறகு உங்களுக்கு உபதேசம் நடந்திருந்தால் காயத்ரி ஜெபம் செய்யுங்கள்.
‘காயத்ரி ஜெபம்’ என்றால் என்னுடைய புத்தியை இறை வழி நடத்தட்டும் என்பதே!!
இறைவன் நம் வாழ்வில் முழுமையாக வியாபிப்பதை தடுப்பது புத்தி தான். எனவே, பிரார்த்தனை என்னவென்றால், ‘எல்லாம் வல்ல சக்தி என் வாழ்வை என் புத்தியை வியாபிக்கட்டும்.’ மேலும் உபனயனத்தில் உங்களுக்கு அணிவிக்கப்படும் பூணூல், உங்களுக்கு அளிக்கப்படப் போகும் ஞானத்தின் மீது உள்ள பொறுப்பு, மற்றும் உங்கள் பெற்றோர்களிடம் உங்களுக்கு உள்ள பொறுப்பு, சமூகத்தின் மீது உங்களுக்கு உள்ள பொறுப்பு ஆகியவற்றின் அடையாளம் தான் அந்த பூணூல். அந்த பொறுப்பு உங்கள் தோள்களில் இருப்பதை குறிக்கிறது பூணூல்.
ஒரு சிறுவன், தன் கல்வியை ஆரம்பிப்பதற்கு முன், அவனுக்குள்ள பொறுப்பை உணர்த்துகிறது, ‘உனக்கு அந்த பொறுப்பு இருக்கிறது’. அதற்குப் பிறகே குழந்தை படிக்கச் சென்று வருகிறது. உங்கள் பொறுப்பு எல்லாம் முடிந்து ‘சந்நியாசம்’ பெறும்போது அந்த பூணூலை எடுத்து விடுவார்கள். நீங்கள் முற்றும் துறந்து, தனிமையாய் இருக்கும்போது உங்களுக்கு பூணூல் இருக்காது. இந்த அமைப்பு நெடுங்காலமாக பின்பற்றப் பட்டு வருகிறது.
கே: குருஜி, இழை கோட்பாடு (ஸ்ட்ரிங் தியரி) இன்னொரு இணை பிரபஞ்சம் இருப்பதாக சொல்கிறது. அதைப்பற்றி கூற முடியுமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம், இணை பிரபஞ்சம் பேசப்பட்டு வருகிறது. பதினாலு உலகங்கள் இருக்கிறது, அவை ஒன்றுக்குள் ஒன்றாக இணையாக இருக்கிறது. இங்கேயே பல பிரபஞ்சங்கள் இருக்க முடியும். பித்ரு லோகம் எங்கோ இல்லை, இங்கேயே இருக்கிறது. இதனால் தன் நம் உணர்ச்சிகள் வெகு சில விஷயங்கள மட்டுமே அலசுகிறது – தன்மாத்ராக்கள்.
பஞ்ச பூதங்களில் சிறிதளவு நம் புலன்களில் இருக்கிறது, அது அவ்வாறு நம்மிடம் இருப்பதால் தான் அதை நாம் பார்க்க, அனுபவிக்க முடிகிறது. நம்மிடம் உள்ள ஒளி தன்மாத்ராவும் ஆந்தையின் தன்மாத்ராவும் வேறானவை. அதனால் தான் நம்மால் இரவில் காண முடியாதவை, ஆந்தையின் கண்களுக்குத் தெரிகிறது.
வௌவாலின் தன்மாத்ரா முற்றிலும் வேறானது. உங்களால் ஒன்றையும் பார்க்க முடியாத போது வௌவால் எல்லவற்றையும் பார்க்க முடிகிறது. அதன் கிரகிக்கும் தன்மை முற்றிலும் வேறு. உங்கள் அறையில் இருட்டில் செல்ல உங்களுக்கு விளக்கு தேவை, ஆனால் ஒரு பூனைக்கு இருட்டிலும் தன் வழியில் போக முடியும். நம் புலன்களின் மூலம் நாம் அறிபவை நம்மிடம் உள்ள தன்மாத்ராவின் அலைவரிசைப்படியே அமைகிறது.
நாம் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் அமைக்கப்படிருகிறோம், ஆனால் பிரபஞ்சம் எண்ணற்ற அலைவரிசைகளைக் கொண்டது.
கே: இன்றைய நிலையில், நான் மன பிறழ்வுக்கான ஒரு மருந்தை சாப்பிட ஆரம்பித்துள்ளேன். உங்களிடமிருந்து என்னை ஊக்கப்படுத்த சில வார்த்தைகள் கேட்க விரும்புகிறேன். நான் உங்களை மிகவும் விரும்புகிறேன், உங்களின் ஒரு பாகமாகவே என்னை உணர்கிறேன். ஆனால் இப்போது நான் ஒரு தோல்வியாகவே உணர்கிறேன். என் திறமைகள் திரும்பக் கிடைக்காது என்று கவலையோடு இருக்கிறேன். ஆனால் அதை எதிர்த்து நான் போராடிக் கொண்டிருக்கிறேன், உங்களிடமிருந்து சில வார்த்தைகள் எனக்கு மிகவும் உதவியாய் இருக்கும்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை, போராடாதீர்கள். உங்கள் உடம்புக்கு மருந்து தேவை, அதை எடுத்துக்கொண்டு இறுக்கமற்று தளர்வாய், மகிழ்வாய் இருங்கள். ஆன்மீகத்தில் அடியெடுத்து வைத்துள்ளீர்கள் என்றால், நீங்கள் ஞாபகத்தில் கொள்ள வேண்டியது – எந்த நிலையிலும் நான் மகிழ்ச்சியோடிருப்பேன், எங்கே இருந்தாலும், எப்படி இருந்தாலும் நான் மகிழ்ச்சியாய் இருக்க விரும்புகிறேன். நான் மகிழ்ச்சியாய் இருப்பேன், புன்னகை பூத்தவாறு இருப்பேன், கடுமையான கால கட்டத்திலும் – அதை புன்னகையோடு கடப்பேன் – இந்த ஒரு எண்ணம், இந்த ஒரு உறுதி உங்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும்.