பிறரை குறை கூறும் போது கருணையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும்........


10
2012............................... மாண்ட்ரியால் கனடா,
May


அன்பு தவிர்க்க முடியாதது. உன் இயல்பு. தூய்மையான அன்பாக இருக்கும் அல்லது திரிந்த நிலையில் வெளிப்படும். அன்பின் குணங்கள் எவை?கோபம்,பொறாமை,வெறுப்பு, பேராசை, தன்னுள் அடக்கி வைக்கப்படும் விருப்பம். இந்தத் குணங்கள் எதிர்மறைச் சலனங்களாகும். அன்பை தலைகீழாக்கியது போலாகும். குறை கூறுவதும் அன்பின் பரிணாமம் தான். ஒருவரை உங்களுக்குப் பிடிக்காவிட்டால் (அன்பில்லா விட்டால்) நீங்கள் அவரிடமிருந்து விலகிப் போய் விடுவீர்கள். அவரைப் பற்றி குறை சொல்வீர் களானால் அவரிடம் உங்களுக்கு அன்பு இருக்கிறது (அக்கறை இருக்கிறது) என்று பொருள். அவரை விட்டு விலக முடியாது. அதனால் தான் குறை கூறிய படி அவருடன் இருக்கிறீர்கள்.

குறை கூறுவதால் என்ன உபயோகம். நீ ஒருவரைப் பற்றி குறை சொல்லும் போது அவர் அந்தத் தவறைச் செய்திருந்தால், முதல் தடவை அந்தக் குற்றச்சாட்டு அவன் மனதில் தைக்கும். ஆனால் நீங்கள் மேலும் மேலும் அவருடைய தவறைச் சுட்டிக் காட்டினால் அவர் மனம் மரத்துப் போய் விடும்.  அவர் அதைப்பற்றிக் கவலைப் படமாட்டார். ஒருவர் உண்மையில் திருடராயிருந்து, நீங்கள் அவரை திருடன் திருடன் என்று சொன்னால் நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள். நீங்கள் சொல்வதைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. நாள் முழுதும் ஒரு கோபுர உச்சியில் நின்று அவன் ஒரு திருடன்! அவன் ஒரு திருடன்! என்று சொல்வதால் என்ன ஆகிவிடும்? அந்தத் திருடனுக்கு ஒரு பாதிப்பும் இல்லை.

எனவே உண்மையான குற்றவாளி குற்றம் சாட்டுவதால் பாதிக்கப்பட மாட்டான். அவர் குற்றவாளி இல்லாமல் நேர்மையானவராக இருந்தால், அவரை நீங்கள் குற்றம் சாட்டும்போது அது அவர் இதயத்தைத் துளைக்கும். அவர் ஆத்மாவைத் தொடும். அவர் ஆத்மா கலக்க மடையும். அவர் ஒரு யோகியாக இருந்தால் உங்கள் குற்றச்சாட்டை அவர் ஆதாயமாக மாற்றி விடுவார்.

யோகி என்றால் ஞானம் உள்ளவர். அவர் பாராட்டையும், குற்றச்சாட்டையும் சமமாக எடுத்துக் கொள்வார். எல்லோருக்கும் நன்மை செய்வார். அந்த அளவு ஞானம் இல்லாதவருக்கு குற்றச்சாட்டு இதயத்தைத் துளைக்கும். அந்த வலியின் காரணமாக உங்களைத் தாக்க முற்படுவார். அதனால் ஒருவரை குறை சொல்வதால் எந்தப் பயனும் கிடையாது. அவர்கள் இரவும் பகலும் கெட்டதையே நினைப்பார்கள். வாழும் கலையைப் பற்றி இரவும் பகலும் ஒரு சிலர் எதிர்மறையாகவே எழுதி வருகிறார்கள் என்று கேள்விப் பட்டேன். அதற்காகவாவது நம் நடவடிக்கைகளை கவனி க்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் எழுது கிறார்கள். அதைப் பற்றி நமக்குக் கவலை வேண்டாம். அவர்கள் அப்படி எழுதுவதற்கான காரணம் நமக்குத் தெரியாது. மற்றவர்கள் வாழும் கலைப் பயிற்சிக்கு வருவதைத் தடுக்க நினைக்கிறார்களா? அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்! அது மட்டும் நடக்காது. வாழும் கலைப் பயிற்சிக்கு மக்கள் எப்போதுமே வருவார்கள். எதிர்மறையாக எழுதியிருப்பதைப் படித்துவிட்டு வாழும் கலையில் என்ன இருக்கிறது என்று அறிய ஆவல் அதிகமாகி வாழும் கலைப் பயிற்சியில் சேருவார்கள். வாழும் கலைப் பயிற்சியைப் பற்றி எதிர்மறையாக எழுதுபவர்கள் தங்கள் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கிறார்கள்.

பழி சொல்வதால் எதுவும் கிடைக்காது. எங்கும் போகமுடியாது. பழி சொல்வதால் ஒருவரைத் திருத்த முடியுமானால் அது நல்லது. ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள். பழிசொல்வதால் ஒருவரைத் திருத்த முடியாது. அவரை அன்பு, கருணை, பேச்சுவார்த்தையால் உணர வைப்பதால் மட்டுமே திருத்த முடியும்.பழி சொல்வது பேச்சு வார்த்தையை நிறுத்தி விடும். ஒருவர் உண்மையிலேயே தவறு செய்தவராக இருந்து நீங்கள் அவரை நல்வழிப் படுத்த நினைத்தால், அவருடன் பேச்சு வார்த்தை மூலம் அதை அடையலாம். அவர் தவறு செய்யாமல் இருந்தால்,உங்கள் முயற்சி தேவையற்றது. புரிகிறதா? பழி சொல்வதால் உங்கள் முயற்சி தோல்வி அடையும்.

சொல்லுங்கள். உங்கள் வீட்டில் பொறுத்துக் கொள்ள முடியாமல், உங்களை எப்போதும் எரிச்சலடையச் செய்பவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தந்தையோ, வாழ்க்கைத் துணையோ, பிள்ளைகளோ, என்ன செய்வீர்கள்? பழி சுமத்துவீர்களா. உங்கள் மாமியார் மீது பழி சொல்வதால் உங்களுக்கு உபயோகமான எதுவும் கிடைக்காது. உங்கள் பிரச்சினைகள் அதிகமாகும். பழி சொல்வதை நிறுத்திவிட்டு, இதை நீங்கள் மனதுக்குள் சமநிலைக்கு வர ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

எல்லாமே சரியாக இருந்து, எல்லோரும் உங்களைப் புகழ்ந்து, “நான் சமநிலையிலிருப்பவள்” என்று நீங்கள் சொல்வதில் என்ன இருக்கிறது. ஒரு குழுவினரோ, அல்லது ஒரு நபரோ உங்களை பழி சுமத்தும் போது, நீங்கள் கோபப்படாமல், உணர்ச்சி வசப்படாமல் சம நிலையில் இருந்தால், நீங்கள் பாராட்டுக்குரியவர். நீங்கள் ஒரு நிலைக்கு உயர்ந்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம். நான் சொல்வது உங்களுக்கு விளங்கு கிறதா? உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைய வேண்டும். யாரோ உங்கள் மீது பழி சுமத்தும்போது அவர்கள் சொல்லும் பழி எல்லாம் வெறும் குப்பை, பொய் என்று உணர்ந்து நீங்கள் அமைதியாக அந்த பழியை எதிர் கொள்கிறீர்கள்.

ஒரு குற்றமும் அறியாதவர்கள் மீது வீண்பழி சுமத்துபவர்களுக்கு (குற்றம் சுமத்தப்பட்டவர் வாழ்த்தினாலும் கூட) ஒரு நல்லதும் கிடைக்காது. யார் மீதும் வீண் பழி சுமத்தக் கூடாது. ஆனால் சமயத்தில் ஊன்றி கவனித்து சிறு பிழைகளை எடுத்துச் சொல்லி ஒருவர் செய்ததை இன்னும் செம்மையாகச் செய்யத் தூண்டுவது அவசியம்.உங்களுக்கே எதுவும் சரியில்லை என்று தெரியும் போது, எப்போதும் நல்ல விஷயங்களை மட்டுமே சொல்வது கூடாது. ஒரு புன்முறுவலை முகத்தில் வைத்துக் கொண்டு உள்ளே கோபமாய் இருக்கிறாய். இதுவும் வேலைக்கு ஆகாது. நாம் உண்மையாக இருப்பது அவசியம். நேர்மையாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரியுமா? கோபத்தை உள்ளே அடக்கி வைப்பதும் பிரச்சினையாகக் கூடும். எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களுக்காகவும் கோபப்படுவதும் நல்ல தல்ல. வாழ்க்கையை சமமாக நோக்க வேண்டும். அதைப் பற்றிய அறிவு வேண்டும். மௌனமாக இருப்பது, தியானம் மற்றும் மூச்சு பயிற்சிகள் உன்னை அந்தத் திசையில் செலுத்தும்.

அதற்காக என்னிடம் “நான் பல காலமாக தியானம் செய்கிறேன். இருந்தாலும் கோபம் வருகிறது” என்று சொல்லாதே. முன்பு ஒரு நாளில் 100 முறை கோபம் வந்தால் இப்போது 10 முறை வரும். முன்பு பத்து முறை கோபம் வந்திருந்தால் ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை வரும். எப்போதுமே அது குறைகிறது. தியானத்தால் கோபம் குறையவே இல்லை என்று சொல்ல முடியாது. ஒருவர் மேல் பழி சொல்லும் போது, எதற்காகப் பழி சொல்கிறாய் என்று எண்ணிப் பார். அவரைச் சரிப்படுத்த வேண்டும் என்றா? அதனால் தான் பழி சொல்கிறாயா? அல்லது உன் உள்ளிருக்கும் மனக் கொதிப்பைக் கொட்டு வதற்காகப் பழி சுமத்துகிறாயா? உன் நிலை என்ன? ஏன் அப்படிச் செய்ய விரும்புகிறாய்? நம் மனக் கொதிப்பை வெளிப்படுத்துவதும், பழி சுமத்துவதும் நீ எவ்வளவு அநுபவமில்லாமல் இருப்பதையும், உன் பொறாமையையும், உன் மனத்தின் மீது கட்டுப்பாடு இல்லாததையும், உனக்கு இன்னும் எவ்வளவு தியானம் அவசியம் என்பதையும் குறிக்கும். சரி தானா?

கன்னட மொழியில் ஓர் அழகிய பாடல் இருக்கிறது. பள்ளியில் நான் படித்தது. நீ ஒரு வீட்டை காட்டின் மத்தியில் கட்டிவிட்டு, காட்டு விலங்குகளிடம் எனக்கு பயமாக இருக்கிறது என்று சொன்னால் நான் உனக்கு என்ன சொல்வேன்? கடற்கரையில் வீட்டைக் கட்டிவிட்டு, அலைகளுக்கு நீ பயந்தால் நான் என்ன சொல்வது? நகரத்தின் மத்தியில் வீட்டைக் கட்டிவிட்டு, ஒரே சத்தமாக இருக்கிறது என்றால் என்ன சொல்வேன்? அதேபோல் மலை உச்சியில் வீட்டைக் கட்டிவிட்டு, இனிய காற்று வீசுவது எனக்கு பிடிக்க வில்லை, காற்றைப் பார்த்து பயமாக இருக்கிறது என்றால் என்ன சொல்வேன்? அதேபோல் இந்த சமுதாயத்தில் வாழும் போது பழிச் சொல்லுக்கும், பாராட்டுக்கும் பயந்தால், என்னை யாரும் பழி சுமத்தவோ, பாராட்டவோ வேண்டாம் என்றால் நான் உனக்கு என்ன சொல்வேன்? என்னுடைய இறைவன் பாதத்தில் சரணடைந்து எங்கிருந்தாலும் சுகமாக இருக்கிறேன். சுகம் இறைவன் பாதத்தில் மட்டும் தான் இருக்கிறது. என்ன அழகு? என்ன சுகம்? பயம் இல்லாத இடம் எது? என்னுடைய இறைவன் பாதத்தில் சரண் அடையும் போது தான்.

பள்ளியில் படிக்கும் போது இந்தப் பாடல்களைப் படித்துவிட்டு சிரிப்போம். இப்போது அப்படிப்பட்ட பாடல்களை புத்தகத்திலிருந்து எடுத்து விட்டார்கள். ஆகவே இவை எங்களுக்குப் பாடமாக இருந்தது. பாராட்டோ, பழிச் சொல்லோ இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதைப் பற்றி கவலையில் மூழ்க வேண்டாம். பிழை கண்டுபிடிப்போரை எதிர் கொள்ளுங்கள்.

ஒருவரின் சிறு பிழைகளைத் திருத்தி அவர் முன்னேற வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அவருக்கு அன்போடும் கருணையோடும் ஆக்க பூர்வமாக அதைச் சொல்லி பிழைகளைத் திருத்தலாம். கோபம், பொறாமை,வெறுப்பின் காரணத்தால் பழி சொல்வதால் நன்மையில்லை. அதனால் நல்ல முடிவு கிடைக்காது.

கே: இப்பொழுது இருக்கும் கல்விமுறை மாணவர்களுக்குக் கெடுதல் விளைவிப்பதாக நினைக்கிறேன். ஒருவரோடு ஒருவர் போட்டி போடச் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவ அல்ல. நல்ல மதிப்பெண்கள் பெறவும் நல்ல வேலையைப் பெறவும் ஊக்குவிக்கப் படுகிறார்கள். கற்றுக் கொள்ளும் மகிழ்ச்சிக்காகவும், கற்றவைகளைப் புரிந்து கொள்வதற்காகவும் அல்ல. நம்முடைய போக்கில் கற்றுத் தேர்ச்சி அடைவதைவிட குறுகிய காலத்தில் எல்லா வகையான புள்ளி விவரங்களையும் தெரிந்து கொள்வதில் முனைந்திருக்கிறார்கள். குருஜி! நீங்கள் என்ன வழி காட்டுவீர்கள்? தேர்வு முறை இல்லாத, ஒரு வரையறைக்குள் இல்லாத பாடதிட்டதைப் பள்ளிகளில் கொண்டு வரலாமா?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: கல்வித் திட்டம் மிகத் தேர்ந்ததாக இல்லாவிட்டாலும், அதை ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அப்போது தான் உங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். அவர்களுடைய படிப்புக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும். மருத்துவ விஞ்ஞானத்தில் கூட மிகப் பழங்காலத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் இன்றும் பாடதிட்டத்தில் இருக்கின்றன. இன்றைய நவீன மருத்துவ முறைகள், பழைய முறைகளை தேவையில்லாமல் ஆக்கி விட்டன. இருந்தாலும் நாம் பழைய பாட புத்தகங்களை இன்னும் படிக்கிறோம்.

நேற்று தான் அறிந்தேன். நம் இதயக் கோளாறுகளுக்கு 43 வகையான ஜீன்கள் காரணமாக இருக்கின்றன என்று. நம் மருத்துவப் புத்தகங்கள் 5 அல்லது 6 ஜீன்களைப் பற்றித் தான் அறிந்திருக்கின்றன. மாணவர்கள் அதை மட்டும் தான் படிக்கிறார்கள். மற்ற ஜீன்களைப் பற்றி அறிய வில்லை.விஞ்ஞானம் ஒவ்வொரு நாளும் புது ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளால் முன்னேறுகிறது. புதிய கண்டுபிடிப்புகள் பல நாட்களாக வழங்கி வந்த உண்மைகளை மாற்றி அவைகளை தேவையற்றதாகச் செய்கிறது. விஞ்ஞான முன்னேற்றம் வெகு விரைவாக இருந்தாலும் பாட புத்தகங்கள் பழையதாகவே இருக்கின்றன. மாணவர்கள் புது ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிய நீண்ட நாட்கள் ஆகிறது. பாட திட்டங்களை மாற்றி அமைக்க கால தாமதம் ஆகின்றது.

உதாரணத்துக்குச் சொன்னால், சரித்திர பாடத்தில் ஆரியர்கள் இந்தியாவைப் படையெடுத்ததாக நம்பினார்கள். ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்து நம் நாட்டைப் பிடித்ததாக நம்பப் பட்டது. இப்போதைய ஆராய்ச்சியாளர்கள் அது தவறு என்று நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் சரித்திர பாட புத்தகங்கள் அதை மாற்றி எழுத வில்லை. அதற்கு இன்னும் 10 ஆண்டுகள் தேவையாக இருக்கலாம். மாணவர்களும் வேறு வழியில்லாமல் புத்தகத்தில் இருப்பதையே எழுத வேண்டும். மாற்றி எழுதினால் (புது ஆராய்ச்சியின் படி) தேர்வில் தேர்ச்சி அடைய முடியாது. வேலை கிடைக்காது. ஒருவருக்குப் பட்டம் கிடைக்கா விட்டால் உண்மையிலேயே அவர் அறிவாற்றல் மிக்கவராக இருந்தாலும் அவரைப் படித்தவராகவே கருத மாட்டார்கள்.

பொழுது போக்காகவோ, மகிழ்ச்சிக்காகவோ, அறிவாற்றலைப் பெருக்குவதற்கு மட்டும் படிக்க வேண்டும் என்றால் உங்களுக்குப் பட்டம் அவசியமில்லை. ஆனால் ஒரு தொழிலுக்காகவோ, வேலைக்குச் செல்ல வேண்டுமென்றால் நீங்களும் அந்த நீரோட்டத்தோடு சென்று ஒரு பட்டம் பெறுவது அவசியம். கடந்த காலத்தில், பல அறிவாளிகள் இதைச் செய்திருக்கிறார்கள். பலர் இதைப் பரிசோதித்திருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெறுவோமா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. எத்தனை மாணவர்கள் அவ்வாறு தானே படித்து தம் அறிவை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறினார்கள் என்று தெரியவில்லை. சிலர் முன்னேறியிருக்கலாம். ஆனால் அது ஒரு பெரிய கேள்விக்குறி.

வீட்டிலிருந்து படிப்பது அமெரிக்காவில் இருக்கிறது. பலர் வீட்டிலிருந்து படித்து நன்றாகத் தேர்ச்சி பெறுகிறார்கள். அப்படி முடியாது என்று நான் சொல்லவில்லை. அதைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஒரு தொழில் இருந்து, அதை நடத்த கல்லூரிப் பட்டம் அவசியமில்லை. உங்கள் குழந்தைகள் உங்கள் குடும்பத்தொழிலில் ஈடுபட்டு அதை நன்கு நடத்துவார்கள். அவர்கள் விரும்புவதைச் செய்ய முடியும்.

கே: உயிர் பிரியும் தருவாயில் ஜபிக்க எந்த மந்திரம் நல்லது? எந்த படத்தை நினைவில் கொள்ளலாம். பண்டைய நூல்களின் படி, நீ சரியாகச் செய்தால் மோக்ஷம் அடையலாம் என்கிறார்கள். குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் இறக்கப் போகும் நபருக்கு மோக்ஷம் கிட்ட என்ன மந்திரம் ஜபிக்கலாம். (சத்தமாகவோ, மனதுக்குள்ளோ)

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: “ஓம்” நமசிவாய என்று தான் சொல்லுவேன். “ஓம்” நமசிவாய அல்லது “ஓம்” நமோ நாராயணாய அல்லது ஹரி “ஓம்”; ஏதாவது.

கே: ஆத்மா ஒன்றா அல்லது பலவனவா? ஒன்றாக இருந்தால், எது ஒருவருடைய கர்ம பலனை ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு எடுத்துச் செல்கிறது? ஒருவர் ஞானமடைந்த பின்னும் எது அவருடைய தனித்தன்மையை தக்க வைக்கிறது? ஞானம் அடைந்த ஆத்மா ஒன்றா அல்லது பலவனவா?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: நீ கேட்ட கேள்விக்குப் பதிலாக ஒரு புத்தகமே எழுதலாம். அதை மற்றொரு சமயம் பேசலாம். இப்பொழுது அதைப் பற்றி சிந்தனை மட்டுமே செய்.

கே: உங்களின் தொடர்பை என்னிடமிருந்து எது துண்டிக்கிறது? பல சமயம் அப்படி நேர்ந்து பிறகு தொடர்பு இணைக்கப்படுகிறது. இதை விளக்குவீர்களா? இது ஒரு நாள் மாறுமா?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: சிலசமயம், கறுத்த மேகங்கள் வானில் தோன்றும் போது, நீல வானம் தெரிவதில்லை. நீல வானம் எங்கும் செல்லவில்லை. சில நொடிகளில் கறுத்த மேகங்கள் நகர்ந்து காணாமல் போய்விடும். வானம் எப்போதுமே இருக்கிறது. மேகம் வருவதற்கு முன்னும்,மேகம் மறைந்த பின்னும், மேகம் இருக்கும் போதும் வானம் இருக்கிறது. அதே போல் நம் தொடர்பு எப்போதுமே இருக்கிறது. தொடர்பு துண்டித்திருப்பது போல் தோன்றுவது ஒரு மாயத் தோற்றமாகும்.

கே: கேள்விகள் படிக்கப்படும்போது, உங்களுக்கு கூட்டத்தில் அந்தக் கேள்வியைக் கேட்டது யார் என்று தெரியுமா?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: நீ பதிலைக் கேட்டால் நல்லது. பதில் யாருக்கோ என்று நினைக்காதே. அந்த கேள்வி உன்னுடையது. அந்த பதிலும் உனக்காகத் தான்.

கே: “ஓம்” என்றால் என்ன? அதை மூன்று முறை ஜபித்தால், நம்முள் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: பாஸ்டனில் கனெக்டிகட் பகுதியில் ஒரு பெண்மணி, இரண்டாயிரத்து பத்து குரு பௌர்ணமி அன்று “ஓம்” என்ற ஒலியை, பதிவு செய்து கம்ப்யூடரில் ஆராய்ந்த போது அதன் ஒலி வேகமும், பூமி தன் அச்சில் சுற்றும் வேகமும் ஒன்றாக இருந்ததாம்.எனவே ஒரு விதத்தில் பூமி “ஓம்” என்று சொல்வதாகக் கொள்ளலாம். இது ஒரு ருசிகரமான தகவல் இல்லையா?“ஓம்” என்பது ஓம்காரத்தில் எழும்பும் ஒலி.“ஓம்” என்பது எப்போதுமே இருக்கும் ஒலியாகும். “ஓம்” என்கிற ஒலியின் அதிர்வுகள் இந்த பிரபஞ்சத்தில் எப்போதுமே இருக்கிறது.

நம் பெரியோர்கள், சாதுக்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது கேட்ட ஒலி “ஓம்”. “ஓம்” என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதற்கு அன்பு, நித்தியம், தூய்மை, அமைதி என்று பல பொருள் கொள்ளலாம். “ஓம்” என்பது பல தாதுக்கள் அடங்கியது. ஆ, ஊ, ம. ஆ என்பதற்கு பத்தொன்பது அர்த்தங்கள் உள்ளன. “ஓம்” என்பதற்கு பல ஆயிரம் அர்த்தங்கள் சொல்லலாம். எல்லா அர்த்தங்களும் “ஓம்” என்பதைக் குறிக்கும். “ஓம்” என்பதை இந்த சிருஷ்டியின் விதையாகக் கொள்ளலாம்.

பைபிளில் கூட சொல்லப்பட்டிருக்கிறது. முதலில் ஒரு வார்த்தை தோன்றியது. அந்த வார்த்தை இறைவனிடம் இருந்தது. அந்த வார்த்தை தான் இறைவன். அது தான் “ஓம்”. அவர்கள் அது என்ன வார்த்தை என்று சொல்லவில்லை.அந்த வார்த்தை தான் “ஓம்”. அது எல்லா மதங்களிலும் இருக்கிறது. சிறிது வேறு பாட்டுடன் சொல்லப் படுகிறது. அது தான் உண்மையின் பெயர். ஒரு “ஓம்” காரம். அது உண்மையின் பெயர். “ஓம்” என்றால் உண்மை. அது முடிவற்ற எல்லையில்லாத இறைவனைக் குறிக்கிறது. “ஓம்” என்றால் அன்பு. இந்தப் பிரபஞ்சத்தின் துவக்கம் “ஓம்”. குரு கிரந்தத்தில் ஒரு அருமையான பாடல் இருக்கிறது. இப்படி ஆரம்பிக்கிறது. “ஒரு “ஓம்”காரம் உண்மையான பெயர். எல்லாவற்றையும் நிறைவு செய்யும்.” “ஓம்” லிருந்து எல்லாமே வந்தது. “ஓம்” மில் எல்லாமே அடங்கியிருக்கின்றன. “ஓம்” மில் ஸ்தூலமான உடல் முதல் சூட்சுமமான ஆத்மா வரை எல்லாமே கரைந்து விடும்.

“ஓம்” மிக நல்லது. ஒரு பூரணமான அலையதிர்வு. “ஆ” உடலின் கீழ் பகுதியையும், “ஊ” உடலின் மத்திய பகுதியையும், “ம்” உடலின் மேல் பகுதியையும் அதிர்வலைகளால் பாதிக்கிறது. பிராண சக்தி முழுவதும் “ஓம்” என்ற மந்திரத்தால் வெளிப்படுகிறது. பிறப்பதற்கு முன் நாம் “ஓம்” மில் அடங்கியிருந்தோம். இறப்புக்குப் பின் “ஓம்” என்ற ஆத்மாவின் ஒலியில் கலந்து விடுவோம். அதனால் “ஓம்” பற்றி பல விஷயங்களைச் சொல்லலாம். மாண்டுக்ய உபநிஷதம் முழுதும் “ஓம்” பற்றி விளக்குகிறது.

ஆனால் தியானத்துக்காக நாம் “ஓம்” மட்டும் மந்திரமாக எடுத்துக் கொள்வதில்லை என்ற கேள்வி வரும். தியானத்துக்காக எதற்காக மற்ற மந்திரங்களை நினைவில் கொள்கிறோம். தியானத்துக்கு முன் “ஓம்” ஜபித்து உடலில் அதிர்வு அலைகளை உருவாக்குகிறோம்.  ஆனால் தியானத்துக்கு வேறு மந்திரங்கள் இருக்கின்றன. “ஓம்” மட்டும் தனியாக உபயோகிப்பதில்லை. ஹரி “ஓம்”, “ஓம்” நமசிவாய அல்லது “ஓம்” கூட வேறு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையைத் துறந்தவர்கள், உலகத்தில் எதுவும் செய்ய விரும்பாதவர்கள், அல்லது மிக வயதானவர்கள் மட்டும் “ஓம்” மந்திரத்தைத் தனியாக உபயோகிக்கலாம். உலக வாழ்க்கையோடு சேராமல் தனித்து இருப்பவர்கள் மட்டுமே “ஓம்” தனியாக உபயோகிக்கலாம். அது கூட செய்யத் தகுந்ததல்ல.

கே: ஞானம் அடைவது தியானத்தின் மூலம் தானா?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: தாகம் தீர்வது நீரினால் மட்டும் தானா? பசி, உணவு மூலம் தான் தீருமா? அல்லது நடனமாடி நீ உன் பசியைப் போக்கிக் கொள்ள முடியுமா? என்ன சொல்கிறாய்? சேவை, தியானம், அவசியம் தேவை..

கே: என் வாழ்வில் நான் என்ன செய்வது என்று தெரிய வில்லை. உங்களைக் கேட்க விரும்புகிறேன். என்ன கேட்பது என்று தெரியவில்லை. எனக்கு என்ன தேவை என்பதே தெரியவில்லை. எந்த வேலையிலும் சிறிது நேரத்துக்குப் பின் அலுப்பு வருகிறது. என் மனநிலை அடிக்கடி மாறுவதை உணருகிறேன். எந்தக் காரியம் செய்தாலும் திருப்தி ஏற்படுவதில்லை. இந்த மனநிலையில் நான் எப்படி வாழ முடியும்?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: நீ அதிக சுகத்தை விரும்புகிறாய். இந்த சுகத்தின் எல்லையிலிருந்து வெளியில் வா.  உன் வசதியையும், மகிழ்ச்சியையும் பற்றி மட்டும் நினைக்கிறாய். அதனால் தான் உன் மன நிலை இப்படி இருக்கிறது.

நீ இங்கு இருப்பது மற்றவர்களுக்கு உதவுவதற்குத் தான். மற்றவர்களுக்கு ஏதாவது உபயோகமான காரியம் செய்யத்தான் நீ இங்கு இருக்கிறாய். உனக்கு அலுப்பு எப்படி வரக்கூடும்? அலுப்பு ஏற்படும் போது மற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய். நீ எப்போதும் உன்னைப் பற்றியே நினைத்து “எனக்குப் பிடித்தால் மட்டும் அதைச் செய்வேன் என்று நினைத்தால் அது சேவை ஆகாது. அது உனக்குத் திருப்தி அளிக்காது. நான் சொல்வது உனக்குப் புரிகிறதா?

“நான் மக்களைச் சந்திக்க விரும்பவில்லை.” ஆனால் நீ மற்றவர்களைச் சந்திப்பது உனக்காகவா அல்லது மற்றவர்களுக்காகவா? நீ மற்றவர்களின் காரியத்துக்காக அவர்களைச் சந்தித்தால் உன் வாழ்க்கை நிறைவாக, திருப்தியாக இருக்கும்.

“குருஜி! நீங்கள் அதைச் செய்யலாம். நான் எப்படிச் செய்வது. என்னால் இது முடியாது.” என்று நீ சொல்லலாம். நான் செய்வதைப் போல் செய்யத் தேவை இல்லை. சிறிதளவாவது, பத்து அல்லது  ஐந்து சதவீதம் செய். நான் தனித்திருக்கிறேன். ஆனாலும் தனியாக இருப்பதில்லை. என் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகளால் கழிகிறது. நீங்கள் எல்லோரும் இங்கு சத்சங்கத்துக்கு வந்திருக்கிறீர்கள். “எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை. என் மனம் சரியில்லை. நான் ஷாவ்னிகன், ட்ரையோஸ் ரிவேரா போக விரும்புகிறேன்” என்று சொல்லி ஒரு காரைக் கூப்பிட்டு இங்கிருந்து போய் விட்டால் எப்படி இருக்கும். நீங்கள் எல்லோரும் குருஜிக்காக காத்திருந்தால், குருஜி எங்கே போய் விட்டார்? என்று நினைத்தால் எப்படி இருக்கும்.

எனக்கு இதைச் செய்யப் பிடிக்காவிட்டாலும் முன்னூற்று  அருவத்தைந்து நாட்களும் இதைச் செய்கிறேன். நீங்கள் கேட்கும் கேள்வி களுக்கு பதில் சொல்ல வேண்டும். என்னைக் கேட்கிறார்கள். குருஜி எனக்கு ஒரு நல்ல கணவரைத் தேடித் தாருங்கள். எனக்கு ஒரு மனைவியைத் தேடிக் கொடுங்கள். எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும். இதைச் செய்யுங்கள். அதைச் செய்யுங்கள். என்னோடு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னைக் கவனிக்கிறதே இல்லை. உங்கள் தயவில் தான் எல்லாம் கிடைக்கிறது. எல்லா விதமான கதைகளும். இதெல்லாம் கேட்டு நான் அலுப்படை கிறேனா? முப்பது வருடமாக இதைச் செய்து வருகிறேன். வாழும் கலை ஆரம்பிப்பதற்கு முன்னிருந்தே நாப்பது ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். நான் ஒரு இடத்துக்குப் போக வேண்டும் என்று சொல்ல முடியாது.

எனவே மற்றவர்களுக்காக ஏதாவது நல்லது செய். உங்கள் ஒவ்வொருவரின் நேரமும், உழைப்பும் எனக்குத் தேவை. உனக்குப் பிடிக்கறதோ இல்லையோ கவலைப் படாமல் செய். பிறகு பார். ஆரம்பத்தில் சேவை செய்வது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதன் பலன் உனக்குக் கிடைக்கும். சேவை எப்பொழுதும் உன்னை உயர்த்தும். அதன் பயன்  உனது கற்பனைக்கப்பால், நல்லது நடக்கும். சேவையைக் குறைவாய் மதிப்பிடாதே. அல்லது, நீ செய்யும் காரியங்கள் எல்லாம் உன்னுடைய திருப்திக்காக மட்டுமே என்றால், உனக்கு சீக்கிரமே அலுப்பு வந்து விடும். உலகத்தில் உள்ள எந்தப் பொருளாலும் உனக்கு திருப்தி கிடைக்காது. நீ இவ்வளவு சீக்கிரம் அலுப்பு அடைந்தது அதிர்ஷ்டவசமே.நீ அதிர்ஷ்டக்காரன். ஞானம் தேடுவதற்கு சரியானவன். நீ உன்னை உயர்த்திக் கொள்வதற்கான குணங்கள் உன்னிடம் இருக்கிறது. நீ அலுப்படைவது இந்த உலகத்தில் இருக்கும் பொருட்களால் தான்.

இப்போதெல்லாம் சிறு குழந்தைகள் சீக்கிரமே அலுப்படைகிறார்கள். எது கிடைத்தாலும் மேலும் மேலும் எதையோ தேடி வெறுப்படைகிறார்கள். வெறுப்புக்குப் பதிலாக அவர்கள் தங்கள் சக்தியை வேறு வழியில் செலவழித்து மேலும் வளர வேண்டும். நல்ல விஷயங்களில் நேரத்தை செலவிட வேண்டும். சேவையில் ஈடுபட்டு உயர வேண்டும்.

கே: கல்யாணம் ஆன ஆண்கள் உபநயனம் (புனித நூலணிவது) சடங்கில் பங்கேற்கலாமா?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: ஆம். நிச்சயமாக.