மனிதனின் அறிவாற்றல் மிகவும் சிறந்தது.....


30
2012...............................                           நார்வே
Apr



நாம் உடல் மற்றும் ஆத்மாவுடன் படைக்கப் பட்டிருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும். நம் உடல் கார்போ ஹைட்ரேட், தாதுப் பொருட்கள்,புரோட்டின்களால் ஆனது. நம் ஆத்மா தூய்மையான சக்தி,அன்பு,கருணை மற்றும் காந்த சக்தியாக இருக்கிறது. இது இயற்கையின் சக்தியாகும். பண்டைய காலத்தில் இதை இரண்டு வார்த்தைகளால் அழைத்தார்கள்.ஒன்று ப்ரகிருதி (இயற்கை) இரண்டாவது புருஷா(சக்தியின் வடிவம்) அதற்கு மேல் ஒரு படி போய் இரண்டும் ஒன்றே தான் என்றார்கள்.(ஆத்மா சூட்சுமமானது. உடல் ஸ்தூலமானது.

சக்தியும் ஸ்தூலப் பொருளும் இணைந்தே இருக்கின்றன.மனம் மற்றும் உடல் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றே தான். ஆனால் ஆத்மா நான்கு வழிகளில் தன்னை வெளிப் படுத்துகிறது. ஆத்மா நான்கு வித செயல்பாடுகளை அடக்கியது. உதாரணமாக ஒருவர் அலுவலகத்தில் அதிகாரியாகவும், கடைவீதிக்குப் போகும் போது வாங்குபவராக அல்லது விற்பவராகவும், ஒரு வகுப்பில் உட்காரும் போது மாணவராகவும், வீட்டில் ஒரு தகப்பனாரகவும், ஒரு கணவராகவும், ஒரு மகனாகவும் இருப்பது போல் நம் ஆத்மா நான்கு வழிகளில் செயல் படுகிறது. 

1. மனம்: நீங்கள் இங்கிருக்கிறீர்களா? கேட்கிறீர்களா? நீங்கள் இங்கிருந்து உங்கள் மனம் வேறிடத்தில் இருந்தால், நீங்கள் கேட்க முடியாது. உங்கள் காதுகள் திறந்திருக்கின்றன. ஆனால் மனம் வேறெங்கோ இருக்குமானால் நீங்கள் கேட்க முடியாது. நீங்கள் என்னைப் பார்க்கிறீர்களா? நீங்கள் இங்கிருந்து, உங்கள் மனம் வேறிடத்தில் இருக்குமானால், கண்கள் திறந்து என்னை நோக்கி இருந்தாலும், நீங்கள் என்னைப் பார்க்கவில்லை. ஆகவே மனம் என்பது ஆத்மாவின் ஒரு வெளிப்பாடு. மனம் நமது கண், காது, மூக்கு, நாக்கு, தொடு உணர்ச்சி என்கிற ஐந்து புலன்களின் மூலம் அநுபவங்களை தருகிறது. இந்த ஐந்து அறிவு எல்லா பிராணிகளுக்கும் உண்டு. 

ஒரு கரப்பான் பூச்சிக்குக் கூட மனம் அதன் கம்பி போன்ற உறுப்பின் (ஆன்டினா) மூலம் அது இருக்கும் இடத்தை உணர்த்துகிறது. அதன் உணர்ச்சிகள் அந்த உறுப்பின் மூலம் கிடைக்கிறது. முன்பே சொன்ன மாதிரி நம் மனம் நம் உடலுக்குள் இல்லை.நம் உடல் நம் மனதுக்குள் இருக்கிறது. ஒரு தீபத்தில் திரியைச் சுற்றி சுடர் இருப்பது போல் நம் உடல் ஒரு திரியாகவும், நம் மனம் ஒரு சுடராகவும் இருக்கிறது. கிர்லியன் போட்டோ மூலம் நாம் நம்மைச் சுற்றி உள்ள சுடரின் ஒளியைப் படம் பிடிக்கலாம். மனம் என்பது அறியக் கூடியது. மனம் நம் புலன்களான காதுகள்(கேட்பது),கண்கள் (பார்ப்பது), தோல் (தொடு உணர்ச்சி),மூக்கு (நுகர்வது), நாக்கு (ருசிப்பது) மூலம் அறிகிறது. 

2. அதே ஆத்மா, புலன்களின் மூலம் உணர்ந்ததை ஆராய்ந்து இது நல்லது, இது கெட்டது, இது அழகானது, இது அவலட்சணமானது, இது சரி, இது தவறு என்று முடிவுக்கு வருகிறது. இது தான் பகுத்தறிவு (புத்தி) என்பது . இது ஆத்மாவின் ஒரு முக்கியமான வேலை.ஒன்று அறிவது. மற்றொன்று அதை புரிந்து கொள்வது, முடிவெடுப்பது,சரி, சரியல்ல என்று பிரித்துப் பார்ப்பது என்பது புத்தியின் வேலை. 

இப்போது நீங்கள் எல்லோரும் ஆம் என்கிறீர்களா? அது தான் உங்கள் புத்தி என்பது. நீங்கள் இல்லை இதை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்கிறீர்களா? பரவாயில்லை. நீங்கள் ஒத்துக் கொள்ள வில்லைஎன்று சொல்லலாம். அவ்வாறு சொல்வதை நீங்கள் அறிந்தால் அது உங்கள் புத்தியின் செயல். இரண்டாவது முக்கிய வேலை புத்தியினுடையது. மற்ற எல்லா பிராணிகளையும் விட மனிதர்களுக்கு அறிவு அதிகம். இது நமக்குக் கிடைத்த ஒரு அருமையான பரிசு.பழங்காலத்தி லிருந்து காயத்ரி மந்திரம் என்ற புனிதமான மந்திரம் வழக்கில் இருக்கிறது. அதன் படி இந்த அறிவுத் திறன் மேலும் விளங்குவதற்கு / வளர்வதற்கு, அறிவுக்கப்பால் உள்ள சக்தி இறைவன் உதவுவாராக. என் அறிவு இறைவனால் மேலும் மேலும் வளரட்டும் என்பது ஒரு பிரார்த்தனை யாகும். இதன் பொருள்: என் மனதில் தூய எண்ணங்கள் வரட்டும்.என் அறிவு மூலம் சரியான முடிவு கிடைக்கட்டும்,அதனால் நான் செய்யும் செயல்கள், திருத்தமாக, நிறைவாக (பூரணமாக) இருக்கட்டும். 

இந்த புத்தி ஒரு தடையாகவும் மாறும். இந்த புத்தி சந்தேகத்தையும் எழுப்பும். தவறான கருத்து களையும் கொடுக்கும். சுய அறிவை மறைக்கும். உங்கள் சுய அறிவு நன்றாக இருந்து உள்மனது ஸ்வீடனில் உள்ள ஒருவரைப் பார்க்க நீங்கள் விரும்பினால், நான் ஸ்வீடனில் உள்ள அவரைப் பார்க்கப் போகிறேன் என்று நீங்கள் சொல்லலாம். உங்கள் விருப்பம் நல்லது. ஆனால் உங்கள் அறிவு அது நடக்காது என்று சொல்கிறது.அது முடியாது.உங்கள் அறிவு உள் மனதை மறைக்கிறது. இங்கு தான் நாம் தவறு செய்கிறோம். நீங்கள் ஒருவரைப் பற்றி அவர் நல்லவர் அல்லது கெட்டவர் என்று முடிவு எடுக்கிறீர்கள். ஆனால் உண்மையில் உங்கள் முடிவு படி அவர் இல்லாமல் இருக்கலாம். உங்கள் அறிவு உங்கள் உள் மனதில் குறுக்கிடாமலிருந்தால், உள் மனதில் தோன்றுவது ஆத்மாவின் இச்சையாக இருக்கலாம். அதை நாம் சித்தம் என்று சொல்லுகிறோம். 

3. மனம், புத்திக்குப் பிறகு ஞாபக சக்தி வருகிறது. பல நேரங்களில் நம் மனம் பழைய ஞாபகங்களில் அதையே நினைத்திருக்கும். ஏதோ கடந்த காலத்தில் நல்லவைகளை நீங்கள் பார்த்திருந்தால், அல்லது அவலட்சணமானவைகளைப் பார்த்திருந்தால் அதே காட்சி திரும்பத் திரும்ப உங்கள் மனதில் தோன்றும். உங்கள் ஞாபக சக்தி மனதை விட அதிக சக்தி உள்ளதாக இருந்தால் இப்படி நடக்கும். ஞாபக சக்தி அவசியம் தான். இது ஆத்மாவின் மூன்றாவது வெளிப்பாடு. 

4. மற்றும் ஆத்மாவின் நான்காவது வெளிப்பாடு நான் என்கிற தனித்தன்மை. ஆத்மாவின் இந்த நான்கு சூட்சுமமான வெளிப்பாடுகள்(மனம், புத்தி, ஞாபகம், தனித்தன்மை) அதோடு செயல் படுகின்றன. இவை எல்லாவற்றையும் விட உயர்ந்த சூட்சுமமான சக்தி வடிவமாக ஆத்மா இருக்கிறது. அதனால் தான் நாம் அதை மகத்என்று அழைக்கிறோம். அதற்கு மிக பெரிது என்று பொருள். நாம் நம் தனித் தன்மை மற்றும் ஆணவத்தைத் தாண்டிச் சென்றால் உங்களுள் இருக்கும் ஒரு மாறாத ஒன்றை எல்லா இடத்திலும் பரவியிருக்கிற ஆனால் எங்கு தேடினாலும் பார்க்க முடியாத ஒன்றை அநுபவத்தில் உணரலாம். அதை நீங்கள் அநுபவத்தில் உணர்ந்தால் மகத்” “மகாத்மாஆகலாம். 

நீங்கள் மகாத்மா காந்தியைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? காந்திக்கு மக்களால் அளிக்கப் பட்ட பெயர் மகாத்மா என்பது. எல்லா புனிதர்களும், தவ முனிவர்களும் மகாத்மா என்றே அழைக்கப் படுகிறார்கள். அதன் பொருள் அவர்கள் தனித்தன்மை, ஆணவத்தைக் கடந்தவர்கள். அவர்கள் மனம், புத்தி, ஞாபகம் மற்றும் ஆணவத்தைக் கடந்து ஒருபடி மேலே சென்று ஆத்ம அநுபூதி பெற்றவர்கள். அதன் பொருள் அவர்கள் எங்கு சென்றாலும் தன் இருப்பிடத்தில் இருப்பது போல் உணர்வார்கள். எல்லோரையும் தன்னுடையவர்களாக ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர் களுக்கும் தங்களுக்கும் வேறுபாடு இல்லை என்று உணர்ந்தவர்கள் அவர்கள். நீ ஒரு குழந்தையை ப்போல், தற்சமயத்தில் வாழலாம். எதுவுமே உங்களைக் காயப்படுத்தாது. எல்லாமே உன்னைச் சேர்ந்தவை தாம். பெருந்தன்மை மற்றும் பூரண அமைதி. நீ இந்த உடல் என்னுடையது என்று மட்டும் சொல்வதில்லை. நான் எல்லா இடத்திலும் இருக்கிறேன் என்று சொல்வாய். இது பேச்சு தான். 

நீ தொலைக்காட்சியில் ஒரு அலை வரிசையைப் பார்க்கிறாய்.பிபிசியைப் பார்க்கிறாய். நீ பிபிசியை அந்தப் பெட்டியில் பார்த்தாலும் பிபிசி அந்தப் பெட்டியில் மட்டுமா இருக்கிறது? இல்லை, பிபிசி, அந்த அலை அதிர்வுகள், அந்த அறை முழுவதும் இருக்கிறது. அது எல்லா இடத்திலும் இருக்கிறது. நீ தொலைக் காட்சிப் பெட்டியின் மின் இணைப்பைத் துண்டித்தாலும் பிபிசி அலை அதிர்வுகள் அந்த அறையில் இருக்கும். தொலைக்காட்சிப் பெட்டி அந்த அலைகளை ஏற்று, நமக்கு ஏதுவாக பிரித்து நன்றாகக் காட்சி அளிக்கிறது.அதே போல் நம் உடலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைப் போன்றது தான்.  

உங்கள் உடல் தொலைக்காட்சிப் பெட்டி. உங்கள் ஆத்மா அலை வரிசையின் ஒரு பகுதி. அது பிபிசி போல். அவள் சிஎன்என், அந்த மனிதர் ஃபாக்ஸ், அவர் பொழுதுபோக்கு அலைவரிசை. உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அலை அமைப்பு இருக்கிறது. அதற்காக நீங்கள் இங்கேயே மாட்டிக்கொள்ளப் போவதில்லை. இது பெறுவதற்கான அல்லது அனுப்புவதற்கான பெட்டி தான். ஆனால் அலைகள் எங்கும் இருக்கின்றன. நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நம் ஆத்மா எங்கும் பரவியிருக்கிறது. நேற்று சொல்லியது போல், தூய்மையான விஞ்ஞானம் இருக்கிறது. பிரயோக (கையாளும்) விஞ்ஞானம் இருக்கிறது. இரண்டுமே நமக்குத் தேவை. அவை ஒன்றை ஒன்று நிறைவு செய்பவை. தூய்மையான விஞ்ஞானம் ஆத்மாவைத் தெரிந்து கொள்வது நான் ஆத்மா” “நான் அதுதான்”. அந்த நினைவிலேயே ஓய்வு எடுப்பது. அது தான் தியானம். யோகம். ஆத்மாவில் நிலைத்திருப்பது யோகம். அது உன்னைச் சாராத ஒன்றைச் சேர்வது அல்ல. அது உன்னில் திரும்பி, ஆத்மாவில் சேர்வது தான். மறுபடியும் சேர்வது. இந்தச் சுற்றை முடிப்பது தான் யோகம். 

நீங்கள் எல்லோரும் குழந்தைகளாக இருந்த போது யோகிகாளாயிருந்தீர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு யோகி தான். நாம் எல்லா யோக நிலைகளையும் குழந்தையாக இருந்தபோது அநுபவித்திருக்கிறோம். நிகழ் காலத்தில் வாழ்ந்திருக்கிறோம். குழந்தையாக இருக்கும்போது நம் மனம் புதியதாகவும் உயிரோட்டத்துடனும் இருந்திருக்கிறது. நாம் நம் வீட்டில் அன்போடு இணைந்திருக்கிறோம். நடுவில் எங்கோ வெளிப்புறமாக, வெளிப்புறமாக, வெளிப்புறமாகச் செல்லத் துவங்கினோம். 

உபநிஷதத்தில் ஒரு ரிஷி சொன்னார். கடவுள் நம்மை உருவாக்கும்போது ஒரு பெரிய தவறு செய்து விட்டார். நம் புலன்கள் எல்லாம் வெளிப் புறமாகவே செல்கின்றன. நடுவில் எப்போதோ சில வீரமான மனிதர்கள், தங்கள் புலன்களை உட்புறமாகத் திருப்பி உண்மையை அறிந்தார்கள். அதுவே யோகம் என்கிறார். அது எவ்வளவு பெரிய உண்மை! நம் மனம் வெளி நோக்கியே செல்கிறது.ஆனால் சில சமயம் மனதை உள் நோக்கித் திருப்புவது அவசியம். இப்போது பலர் இதைக் கற்றுக்கொண்டு மிகவும் அறிவாளிகளா கிறார்கள். அவர்கள் மனதை உள்ளே திருப்புவது எப்படி என்று தெரிந்து கொண்டி ருக்கிறார்கள். அமைதி உள்ளே இருக்கிறது, வெளியே இல்லை என்பதையும் அறிவார்கள்.  

ஒவ்வொரு குழந்தையும் யோகி. நாம் பிறப்பிலேயே யோகிகள். நடுவில் அந்த கள்ளமில்லாத குணத்தை இழந்து விட்டோம். அந்த குழந்தைத் தன்மைக்குத் திரும்புவதற்கான எளிமையை நாடி நாம் யோகசாதனைகள், தியானம் முதலியவற்றில் ஈடுபடுகிறோம்.  

அந்த நிலையை அடைய பல வழிகள் உள்ளன. இப்போது அதை நான் விவரிக்கப் போவதில்லை. சுற்றுப் புறம் புதிதாகத் தொடங்கும் ஒருவரைப் பாதிக்கிறது. ஒரு நல்ல அமைதியான இடத்தில் துவங்குவது நல்லது. நாம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவதும் நல்லது. நம் மனநிலை நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது. ஆயுர்வேதம் ஒரு மகத்தான விஞ்ஞானம். ஆயுர்வேதம் யாருக்கு எந்தவிதமான உணவு பொருந்தும் என்று சொல்கிறது. உங்கள் வாதம், பித்தம், கபம் என்பதைப் பொறுத்து என்ன உணவு உட்கொள்ள வேண்டும் என்று தெரியும். அது ஒரு பூரணமான விஞ்ஞானம்.ஜெயின் பரம்பரையினர் உணவு பற்றிய ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அது முடி வில்லாதது. அதைப் பற்றி மேலும் மேலும் தெரிந்துகொண்டால், உணவு பற்றிய கவலையில் மற்ற காரியம் ஒன்றும் நடக்காது. அதனால் தான் நான் உங்களை ஒரு சம நிலையில் இருக்கச் சொல்கிறேன். அளவு மீறி எதிலும் இறங்க வேண்டாம். 

ஒரு பக்கம் சிலர் தான் சாப்பிடுவது என்ன என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் அளவுக்கு மீறி சாப்பிடுகிறார்கள். கஷ்டப்படுகிறார்கள். மற்றொரு பக்கம் சிலர் பார்த்துப் பார்த்து எடுத்து, “இதில் சர்க்கரை அதிகம், நான் இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது என்று இரவும் பகலும் எப்பொழுதும் சாப்பிடும் உணவைப் பற்றிக் கவலை. இதுவும் நல்லதல்ல. உங்கள் உடம்பில் வளையும் தன்மையும் இணக்கமும் இருக்கிறது. நீ ஒரு உணவு உனக்கு ஒத்துக் கொள்ளாது என்று ஒதுக்கி, சாப்பிடாமலே இருந்தால் உங்கள் உடல் அதை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. உடல் தன் வளையும் தன்மையையும் இழந்துவிடும். அதேபோல் எப்போதும் நீங்கள் உலர் பழங்கள் முதலியவைகளை சாப்பிடுவதும் கெடுதல் விளைவிக்கும். உலர் பழங்கள் சில சமயங்களில் நன்மை கொடுக்கும்.உங்களுக்குத் தெரியுமா? பலர் எனக்கு உலர் பழங்களைக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.என் பெட்டியில் பல உலர் பழங்கள் இருக்கிறது. நான் அதை தினமும் சாப்பிடுவதில்லை. எப்போதாவது சாப்பிடுவேன். என்சைம்ஸ், மினரல்ஸ் நல்லது என்பார் சிலர். ஆம் அவை நல்லது தான். ஆனால் அதிகமாக அவைகளை சாப்பிடுவது நல்லதல்ல என்று நினைக்கிறேன். உலர் பழங்கள் சாப்பிடுவது இன்று அவசியமாகி விட்டது. ஏனெனில் உணவு பயிரிடும் முறைகள் பழங்காலத்து (இயற்கை உரங்களிட்ட)முறைகளிலிருந்து வேறுபடுகிறது. 

நான் படித்திருக்கிறேன். இன்றைய வாழைப் பழத்தில் உணவுச்சத்து 19 ம் நூற்றாண்டின் பழத்தை விட 12 ல் ஒரு பகுதி தான் இருக்கிறது. இன்றைய காய்கறிகள், பழங்கள் அளவில் பெரிதாக இருக்கின்றன. ஆனால் சக்தி மிகவும் குறைவாக உள்ளது. இயற்கை உரத்தில் விளைவதில்லை. மண்ணில் பலமும் இல்லை. பஞ்சாபில் ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சிப் படி, கோதுமையில் வேண்டிய அளவு ஃபோலிக் அமிலம் இல்லை. சில வருடங்களுக்கு முன் விளைந்த கோதுமை யில் நம் உடலுக்குத் தேவையான ஃபோலிக் அமிலம் இருந்தது. இன்று பலர் இருதய நோயால் பாதிக்கப் படுகிறார்கள். வேண்டிய அளவு ஃபோலிக் அமிலம் இல்லாததால் மற்ற வியாதிகளுக்கு ள்ளாகிறார்கள். உலர் பழங்களில் தேவையான ஃபோலிக் அமிலம் இருப்பதால் அதை சாப்பிடலாம். அதற்காக எப்போதும் அவைகளைச் சாப்பிடுவதும்,அதைப் பற்றிய கவலையில் மூழ்குவதும் நல்லது அல்ல. நம் மூளை, நம் உடல் உறுப்புகள் நமக்குத் தேவையானவைகளை உருவாக்கும் சக்தி படைத்தது. 

கேள்வி: குருஜி! இந்த ப்ரபஞ்சத்தில் மிக உச்ச சக்தி என்ன? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: மிக உச்ச சக்தி எளிமையான சக்தி தான். எங்கும் அணுத்துளிகள் இருக்கின்றன. சரியா? பிரபஞ்சம் அணுக்கலால் சூழப்பட்டது.ஒரு அணு மின் சக்தி நிலையம் வித்தியாசமானது. அதேபோல், மிக உச்சசக்தி எளிமையானது. எளிதில் கிடைக்கிறது. இந்த ப்ரபஞ்சத்தின் மூல காரணமே அது தான்.அது ஒரு வெட்டவெளி போன்றது. அலைக்கதிர் வீசும் இடம். பூமியில் காந்த சக்தி எங்கிருக்கிறது என்று கேட்டால், அது எங்கும் இருக்கிறது. உச்ச சக்தி காந்த அலை வீச்சை விட சுட்சுமமானது. அது எங்கும் எப்போதும் பூரண சக்தியுடனும் இருக்கிறது.எங்கோ தனி யிடத்தில் இருப்பதில்லை. உச்ச சக்தி என்று அழைப்பதை விட்டு, இந்தப் ப்ரபஞ்சத்தின் உயிர் சக்தி என்று அழைக்கலாம். பழங்காலத்தில் அதை அப்படித்தான் அழைத்தார்கள் உயிர் சக்தி / ப்ராண சக்தி. சத்என்றால் எது இருக்கிறதோ,‘சித்தாஎன்றால் எல்லாம் அறிந்து இருக்கும் ஆத்மா. ப்ரபஞ்சத்துக்குக் காரணமான உச்ச சக்தியை நீங்கள் எப்படி அநுபவத்தில் உணர முடியும்? மௌனமாக நம் மனத்தை உள் நோக்கி அனுப்புவதால் பேரானந்தம் மேல் மட்டத்தில் தோன்றும்.  

கேள்வி: குருஜி! சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் மற்ற கிரகங்கள் நம் மனத்தை பாதிக்குமா? ஆம் என்றால் அது எப்படி? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: சந்திரன் சமுத்திரத்தை பாதிக்கிறது என்று அறிவாயா? பௌர்ணமி (முழுநிலா) அன்று கடல் அலைகள் உயர்கின்றன. சந்திரன் நீரைப் பாதிக்கிறது. நம் உடலில் 60 % நீர் தான். அதில் கடல் நீர் போல் உப்புத் தன்மையும் இருக்கிறது. எனவே உன் உடல் ஒரு கடல் நீரின் சிறிய மாதிரி தான். நீர்ச்சத்து உடலிலிருந்து குறைந்தால்., உடல் சுருங்கி விடும். நீ கடல் நீர் அடங்கிய ஒரு பை. சில இடங்களில் சிவப்பு, சில இடங்களில் நீலம்.சில இடங்களில் வேறு நிறம். எல்லாம் ஒரு பையில் நிரப்பியிருக்கிறது.ஆகவே சந்திரன் உன் உடலைப் பாதிக்கிறது. உடல் பாதிக்கப் படும் போது மனமும் பாதிக்கப்படும். அதனால் தான் பைத்தியக்காரர்களை ஆங்கிலத்தில் லூனாடிக்என்று அழைக்கிறார்கள். அதேபோல் மற்ற கிரகங்களும் நம் உடல் மற்றும் மனத்தைப் பாதிக்கிறது.சக்தியின் கதிர் வீச்சு மிகவும் ருசிகரமான விஷயமாகும். ஒரு ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவின் உள்ளே பார்த்தால் சில மின் கம்பிகள், சில உலோகங்களுடன் வரைபடத்துக்கேற்ப இணைக்கப் பட்டிருக்கும்.அதில் செல்லும் அலைக்கதிர்கள் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி நமக்கு உபயோகமாக இருக்கிறது. இல்லையா 

உங்கள் செல் ஃபோனில் இருக்கும் சிப்பார்த்திருக்கிறீர்களா.அதில் ஒரு குறிப்பிட்ட வரைபடம் இருக்கும்.சிப்வேறு மாதிரி இருந்தால் அது வேறு எண்ணுக்குப் போகும். ஒவ்வொரு சிறிய வரைபடமும் குறிப்பிட்ட மின் அணுசக்தியைக் கொடுக்கும்.குறிப்பிட்ட அலைக்கதிர்களை (அதிர்வுகளை) இயக்கும். அதேபோல் நம் உடலும் ஒரு எலெக்ட்ரானிக் கருவி போல் பிரபஞ்சத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறது. பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்து இணைக்கப் பட்டவை. 

பழங்கால மனிதர்கள் இதை அறிந்திருந்தார்கள். அவர்கள் எப்படி அணுத்துகள்களையும், அண்ட வெளியையும் அறிந்து அவைகளுக்குள்ள இணைப்பை அறிந்திருந்தார்கள் என்பது ஒரு பெரிய ஆச்சரியமாகும். சூரியனுக்கு கண்களோடும், மனதுக்கு சந்திரனோடும், செவ்வாய்க்கு கல்லீரலோடும், சனி கிரகத்துக்கு பற்களோடும் தொடர்பு இருப்பதை அறிந்திருந்தார்கள். எனவே உடலின் வேறு வேறு உறுப்புகள் வேறு வேறு கிரகங்களின் அலை அதிர்வுகளுக்குப் பொருத்தமாக இருக்கின்றன. அவைகள் குறிப்பிட்ட தானியங் களுடனும், குறிப்பிட்ட நிறம் மற்றும் பறவைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளன. உதாரணமாக செவ்வாய் கிரகம் நம் உடலின் கல்லீரலோடும், செம்மறி ஆட்டோடும், கொண்டை கடலையோடும் தொடர்பு உள்ளது. நம் பழங்கால மனிதர்கள் அணுத்துகள் களுக்கும் அண்ட வெளிக்கும் உள்ள தொடர்பை அறிந்திருந்தார்கள். இது ஒரு ஆச்சரியமான விஞ்ஞானம்.ருசிகரமானது.நீங்கள் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதே போல் சனி கிரகத்துக்கும் எள்ளுக்கும் தொடர்பு உள்ளது. அது காக்கையோடும் நம் பற்களோடும் தொடர்பு கொண்டது. இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!

நீங்கள் வண்ணத்துப்பூச்சி விளைவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.தென் அமெரிக்க மழை க்காடுகளில் ஒரு வண்ணத்துப் பூச்சி தன் இறக்கைகளை அடிக்கும் போது அதன் அலைகள் சைனாவின் மேல் உள்ள மேகத்தை பாதிக்கின்றது. ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகளின் அசைவு, சைனாவின் மேகத்தில் வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது. எவ்வளவு ஆச்சரியம்! எனவே சமஸ்கிருதத்தில் யத் பிண்டே தத் ப்ரம்மாண்டேஎன்ற பழமொழி இருக்கிறது.அதன் பொருள், இந்த ப்ரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் ஒரு மிகச் சிறிய பெட்டகம் போல் இருக்கின்றன.  

உன் உடல் ஒரு சிறிய ப்ரபஞ்சம் போல். உடலில் உள்ள அனைத்தும் ப்ரபஞ்சத்தோடு தொடர்பு ள்ளது. நீ ஒரு தனித் தீவு அல்ல. நீ சமுதாயத்தோடு தொடர்புள்ளவன். அகில உலகத்தைச் சார்ந்தவன். நீ விரும்புகிறாயோ இல்லையோ! நீ ஒத்துக்கொள்கிறாயோ இல்லையோ!அதைப் பற்றிக் கவலையில்லை. நீ ஏற்கனவே இணைக்கப் பட்டிருக்கிறாய். 

கேள்வி: குருஜி! அவித்யை(அஞ்ஞானம்) மற்றும் மாயையைப் பற்றி விளக்குவீர்களா? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: எதை அளக்க முடியுமோ அது மாயை.ஆங்கிலத்தில் மெஷர்என்பது சமஸ்கிருத மாயாவிலிருந்து வந்தது.மியதே அனய இதி மாயா”.“மியதேஎன்றால் அளக்க வேண்டும் என்று பொருள்.ஐந்து பூதங்கள் அளக்கக் கூடியது. பூமி,நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை எல்லாமே அளக்க முடியும்.ஆகவே ஐம் பூதங்களால் ஆன இந்த ப்ரபஞ்சம் ஒரு மாயை.  

எதை அளக்க முடியாது? கருணை அன்பை அளக்க முடியாது.உண்மை அளக்க முடியாதது. அழகு அளக்க முடியாதது.அன்பு, அழகு, கருணை, உண்மை, நேர்மை, நாணயம் இந்த ஆத்மாவின் குணங்களை அளக்க முடியாது. அதனால் அவை மாயை அல்ல.அவை மகேஷ்வரா” – ஆத்மாவின் இயல்பு. மாயை என்பது மாறும் பொட்களைக் குறிக்கும். எது மாறுகிறதோ, அளக்கக் கூடியதோ அது மாயை. உலகில் எல்லாமே மாறக் கூடியவை. மாயையின் ஒரு அர்த்தம்.உலகில் எல்லாமே மாறுகின்றன”. உலகில் உள்ள எல்லா வற்றையும் அளக்க முடியும்இது மற்றொரு அர்த்தம். எது மாறாமல் இருக்கிறதோ,எதை அளக்க முடியாதோ அதுவே ஆத்மா.(செல்ஃப்), ப்ரம்மம் அல்லது ப்ரபஞ்சத்தின் சக்தி(ப்ராண சக்தி) என்பதாகும். அவித்யை” “அஞ்ஞானம்என்பது மாறுபவைகளைக் கவனிப்பது. பொருள்களை அளப்பது.

வித்யை” (ஞானம்) அவித்யை” (அஞ்ஞானம்) என்று இரண்டு இருக்கின்றது. வித்யை ஆத்மாவைப் பற்றி அறிவது. அவித்யை என்பது உலகத்தில் உள்ள மாறும் பொருட்களைப் பற்றி அறிவது. 

கேள்வி: குருஜி! மோட்சம் என்பது என்ன? ஏன் மனிதர்கள் மோட்சத்தை நாடுகிறார்கள்? எதிலிருந்து விடுபட்டு மோட்சம் அடைய விரும்புகிறார்கள்? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: உன்னை இந்த நாற்காலியில் 10 மணி நேரம் உட்கார வேண்டும் என்று ஆணை இட்டால்,நீ என் கால்கள் மறத்துப் போய் விட்டன என்று சொல்வாயா மாட்டாயா? அது தான் மோட்சத்தை நாடுவது. 

குழந்தைகளின் கடைசி தேர்வு முடிந்தவுடன்,அவர்கள் வீடு திரும்பி தங்கள் புத்தகங்களை வீசி எறிந்துவிட்டு, தொலைக்காட்சியைப் பார்ப்பார்கள். எப்படி இருக்கிறாய் என்று கேட்டால் ஆ! விடுதலை! (புத்தகங்களிலிருந்து) முடிந்து விட்டது!என்று சொல்வார்கள். மோட்சம் (விடுதலை) என்பது ஒரு உணர்வு. நான் என்ன செய்ய வேண்டுமோ செய்து முடித்து விட்டேன்.!பூரண திருப்தி!பூரண விடுதலை! வேறு ஏதும் செய்ய வேண்டியதில்லை. செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை. உள்ளே மோட்சத்தை உணருகிறேன். மோட்சம் என்பது பந்தபாசம் இணைந்தது. அதிலிருந்து விடுபடுவதே மோட்சம். நாம் நம் மனதுடன், ஆசைகளுடன், தீவிர ஆசைகளுடன், தீவிர வெறுப்புகளுடன் பிறந்திருக்கிறோம். தீவிர ஆசைகள் மற்றும் தீவிர வெறுப்புகள் மறையும் போது உள்ளே மோட்சத்தை உணரலாம். அது மிகவும் எளிது. 

எல்லோரும் ஒரு மட்டத்துக்கு மோட்சத்தை அநுபவித்திருப்பார்கள்.அதுவே வாழ்க்கையில் நிலைத்திருந்தால், உங்கள் சக்தி பூரணமாகிறது. யாரும் உங்கள் மகிழ்ச்சியை புன் முறுவலைத் தடுக்க முடியாது.நான் சொல்வது விளங்குகிறதா? இல்லாவிட்டால் சிறு சிறு விஷயங்களுக்காக யாராவது உங்கள் பொத்தான்களை அழுத்தி உங்களை வருத்துவார்கள். எதுவும் சரியாக நடக்காது. 

கேள்வி: என் காதலன் மிகவும் பொறாமையுடன் இருக்கிறார். அவரை நான் மூச்சுக் கலைப் பயிற்சியில் (பார்ட் 1) சேர்த்தேன்.ஆனால் மறுபடியும் அவர் பொறாமை அதிகரித்திருக்கிறது. ஒரு நாள் இரவு என்னை அடித்து விட்டார். நான் 1 மாதம் அவருடன் பேசவில்லை. இப்போது 1 மாதம் கிரியா செய்து மாறி விட்டதாகச் சொல்கிறார்.அ வர் மௌனக்கலை பயிற்சியிலும் (பார்ட் 2) சேர்ந்திருக்கிறார். மாறி விட்டதாகத் தான் தெரிகிறது. அவர் என்னை மற்றொரு வாய்ப்பு கொடுக்கும்படிக் கேட்கிறார். நான் என்ன செய்யலாம்? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: கட்டாயம் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இந்தப் பயிற்சி  ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். எல்லாரிடமும் நல்ல குணங்கள் மறைந்திருக்கும். மன அழுத்தமும் அஞ்ஞானமும் அந்த நல்ல குணங்களை மறைக்கிறது. எனவே இங்கு வெற்றிடம் காலியிடம் தியானப் பயிற்சி செய்த பின் மூடி இருக்கும் நல்ல தன்மைகளை வெளியே கொண்டு வருகிறோம். அவை மலர்ந்து பூக்களை அளிக்கும். 

கேள்வி: என் தந்தையின் எதிர்மறை எண்ணங்களை நீக்கி உதவி செய்ய விரும்புகிறேன். இந்த சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும்.அவரோடு வேலை செய்யும் போது இந்தக் குழப்பத்தை எப்படி ஏற்றுக் கொள்வது? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: இது கடினமான காரியம். வேறு வேறு தலை முறைகள் வேறு விதமாகச் செயல் படும்.உனக்கு நிறைய பொறுமை அவசியம். அவரோடு ஈடு கொடுக்க ஒரு தனித் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிலசமயம் பெரியவர்கள் இளைய தலைமுறையை நம்பி ஒரு வேலையை ஒப்படைக்க மாட்டார்கள். பூரணமான முடிவை எதிர் நோக்கி அவர்களே அதை செய்து முடிக்க விரும்புவார்கள். இளைய தலைமுறைக்கு இது ஒரு பிரச்சினை. நீ ஒன்று செய்யலாம்.அவர் எதிர்மறையாகப் பேசும்போது வாக்கு வாதம் செய்யாமல் அந்த இடத்தை விட்டுப் போய்விடு. இந்த சமயத்தில் வாக்குவாதம் வேலை செய்யாது. நீ சரியாகச் சொன்னாலும் அவர் அதை ஏற்க மாட்டார்.அவர் பிடித்த பிடியை விடமாட்டார். இது கடினம்.தனித் திறமையோடு உன் எண்ணங்களை அவருக்கு உணர்த்த வேண்டும். அதற்கு ஒரு தனித்திறமை தேவை. மௌனம் எல்லா திறமை களுக்கும் தாய். நீ, நான் எதற்காக இங்கு வந்து 3 நாட்கள் மௌனமாக இருக்க வேண்டும். அதில் என்ன இருக்கிறது? நான் பேசினால் என்ன ஆகிவிடும்? நீ மௌனமாக இருக்கும் போது, தனித்திறமைகளை நாடுவாய். அவை உன்னை வந்தடையும். 

 
கேள்வி: வெளிப்படுத்துதலின்(காட்சியளித்தல்) (மானிஃபெஸ்டேஷன்) பின் என்ன இரகசியம் இருக்கிறது? தியானம் செய்யும் போது என் தலை முன்னால் வளைகிறது. சில சமயம் முழு உடம்பும் வளைகிறது. அது சரியா? நான் அதைத் தவிர்த்து நிமிர்ந்து உட்காருவது அவசியமா? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: நாம் நிமிர்ந்து உட்கார்ந்து அப்படியே விட்டு விடுகிறோம். தியானத்தில் உன் தலை கீழே குனிகிறது. உடல் வளைகிறது. அதைப் பற்றி எண்ண வேண்டாம். அது பரவாயில்லை. அது நல்லது தான். இப்போது நான் எவ்வாறு காட்சியளிக்கிறேன்? நீ விரும்பும்போது, அது கட்டாயம் காட்சியளிக்கும். ஒரு விருப்பம், அதன் மேல் சிறு கவனம், விருப்பம் நிறைவேறும். அதை நீ காண்பாய். இதற்கு சங்கல்பம் என்று பெயர். வாழ்க்கையில் உனக்கு என்ன தேவை? உன் மனதில் அந்த விருப்பத்தை விதைத்து உறுதி செய். அதையே நினைத்து ஜுரவேகம் வேண்டாம். உன் விருப்பத்தை அப்படியே மனதில் விட்டு விட்டு ஓய்வெடு. அது தானாகவே நிறைவேறும். விருப்பத்துக்கும் ஆசைக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. ஆசை என்பது அதை விடாமல் பற்றி இருப்பது.

நீ இங்கிருந்து கோதென்பர்க்” (நார்வே) செல்ல விரும்புகிறாய் என்று வைத்துக்கொள். நான் கோதென்பர்க் போக வேண்டும், நான் கோதென்பர்க் போக வேண்டும்,நான் கோதென்பர்க் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், நீ கார் ஓட்டும் போது இதையே ஜுரவேகத்தில் சொல்லிக்கொண்டிருந்தால் நீ கோதென்பர்க் செல்வதை விட்டு வேறெங்கோ போய் விடுவாய். ஆனால் நீ கோதென்பர்க் செல்ல விரும்பி, காரில் கிளம்பினால் ஓரிரு இடங்களில் நிறுத்தி, மறுபடியும் பயணம் செய்து அங்கு போய் சேர்ந்து விடலாம். இது தான் விருப்பம்(சங்கல்பம்). ஆசை என்பது ஜுரவேகத்தில் அதை பற்றி இருப்பது.அது ஏமாற்றத்தைத் தரும்.

கேள்வி: நீங்கள் அருகில் இருக்கும்போது வித்தியாசமான உணர்வுகள் தோன்றுகின்றன. அமைதியாகவும் அதே சமயம் பரபரப்புடனும்,அன்பாகவும் அதே சமயம் பொறாமையுடனும் இருக்கிறேன். அது ஏன்? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: அது சரிதான். மனித வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போல மன எழுச்சி அடங்கியது.மன எழுச்சி மேலே போகும் போது அது நன்மையாகவும், அது கீழே போகும் போது எதிர்மறையாகவும் முடியும். ஆனால் அதை நீ உணர்ந்தது நல்லது தான். சாட்சியைப் போல் அவைகளை நீ பார்க்கலாம்.

கேள்வி: திட்டமிடுவதையும்,பேசுவதையும் விட்டு விட்டு அதிகமாக செயல்படுவது எப்படி? 


ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: நல்லது. நீ ஒரு தலைவன். தலைமை வகிக்கலாம். ஒரு தலைவன் செயல்பட விரும்புவான்;வெறும் பேச்சு மட்டும் அல்ல. நீ எழுந்து தலைமை வகிக்கலாம். எல்லோரையும் வழி நடத்திச் செல். மற்றவர்களை உங்கள் குழுவில் சேரத் தூண்டலாம். அவர்கள் சேராவிட்டால் தனியே சென்று காரியத்தில் இறங்கு.

இது தான் நம் கொள்கை.மற்றவர்களையும் நம்மோடு சேர்ந்து முன்னேறச் செய்வோம். யாரும் வராவிட்டாலும் பரவாயில்லை. நாம் விடாமுயற்சியுடன் தனியாக இருந்தாலும் மேலே செல்வோம். திடீரென்று திரும்பிப் பார்த்தால் பலர் உன்னைப் பின் தொடர்வதைக் காண்பாய்.

கேள்வி: கர்ம வினை பற்றி விளக்குவீர்களா? அதைப் பற்றி ஆழமாக அறிய எங்கு படிக்கலாம்? 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: கர்மவினை என்பது என்ன? கர்மவினை என்றால் செயல் என்று அர்த்தம். செயல் மூன்று வகைப் படும்.கடந்த காலத்தில் செய்தவை. நிகழ் காலத்தில் செய்பவை, வருங்காலத்தில் செய்யப் போகும் செயல். கடந்த கால செயல்கள் நம் நினைவில் பதிந்திருக்கும்.  நிகழ் காலத்தில் செய்வதை கர்மவினை என்று சொல்லலாம்.அதற்கான பயன்கள் உடனுக்குடனே கிடைக்கும். நான் சொல்வது விளங்குகிறதா? எனவே கர்மவினை என்பது கடந்த கால செயல்களின் பதிவு, ஞானம் தேடுபவர்க்குஎன்ற புத்தகத்தில், முதல் பக்கத்தில், கர்மவினை எப்படி மாற்றலாம். சில மாற்ற முடியாத அநுபவிக்க வேண்டிய கர்மவினைகள் என்ன என்பதைப் பற்றி விளக்கி யிருக்கிறேன். ஓர் எளிய உதாரணம் சொல்லுகிறேன். எவ்வளவு பேருக்கு காலை எழுந்தவுடன் காப்பி குடிக்கும் பழக்கம் இருக்கிறது. எத்தனை பேருக்கு காப்பி குடிக்கா விட்டால் தலை வலி வருகிறது. (பலர் கையை உயர்த்துகிறார்கள்). பார்த்தீர்களா இது காப்பி கர்மவினை. நீங்கள் காப்பி குடிப்பது உங்களது உள்ளுணர்வில் பதிந்து விட்டது. ஒரு நாள் காப்பி குடிக்கா விட்டால் உங்களுக்குத் தலைவலி வருகிறது.இதிலிருந்து வெளிவர இரண்டு வழிகள் உள்ளன. காப்பி குடித்து தலைவலியைப் போக்கிக் கொள்ளலாம். தலை வலியைத் தாங்கிக் கொள்ளலாம். வலித்தால் பரவாயில்லை. ஏனென்றால் கர்மவினை என்பது எப்போதும் ஒரு கால கட்டத்துக்குத் தான். உங்களுக்கு விபத்து நடந்து கர்மவினை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் ஒரு கட்டத்தில் முடியும். அந்த செயல் அந்த கால கட்டத்துக்குப் பிறகு உங்களை பாதிக்காது. நீங்கள் காப்பி குடிக்காததால் வந்த தலைவலி தண்ணீர் குடித்து சாப்பிட்டு வேறு வேலை செய்யும் போது நீங்கிய மாதிரி கர்மவினை ஒரு காலகட்டம் வரை தான். விளங்குகிறதா? இது கர்மவினையைப் பற்றிச் சொல்லும் போது ஒரு நல்ல உதாரணமாகும்.

அதே போல் வாழ்வில் சில சமயம் மன அமைதியின்றி இருப்பாய்.என்ன செய்தாலும் உனக்கு மகிழ்ச்சியில்லை. மற்ற சில சமயங்களில் நீ மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாய்.  இப்படி உங்களுக்கு நடந்திருக்கிறதா? கவனித்துப் பார்த்தால், ஒர் ஆண்டு காலத்தில், பிப்ரவரியிலோ, டிசம்பர், ஜனவரியிலோ, எப்போதோ, எங்கோ ஒரு வாரத்தில், அல்லது மாதத்தில் அல்லது 15 நாட்கள் நீ மிகவும் வருத்தமாக இருக்கிறாய். மற்ற ஒரு சமயத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாய். ஏனென்றால் உன் மனம், நேரம், கர்மவினை ஒன்றோடொன்று தொடர்புடையது. அப்படிப் பட்ட சமயத்தில் என்ன செய்வது? அதைப் பற்றிய ஞானமே (அறிந்து கொள்வதே) அதை விட்டு வெளிவர வழி செய்யும் என்று சொல்வார்கள்.

ஓ! இது பிப்ரவரி. இந்த மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஏதாவது நிகழ்கிறது. இது எப்படியும் கடந்து விடும் என்ற ஞானம். நிறைய தியானம் செய்யலாம். சத்சங்கத்தில் பங்கு கொள்ளலாம். யோக சாதனைகள், ஞானம் சம்பந்தமான புத்தகங்கள் படிக்கலாம். பெரியவர்களின் வாக்குகளைக் கேட்கலாம். இப்படிச் செய்வதால் எதிர்மறைச் சக்திகளை மாற்ற முடியும். இப்படிப் பட்ட சூழ்நிலை ஒரு கால கட்டத்துக்குத் தான்.“சாதனாஎன்பது உண்மையான செல்வம் எனப்படும்.இது உங்களை இடம், காலம், மற்றும் கர்மவினை களுக்கப்பால் எடுத்துச் செல்லும் சக்தி படைத்தது.

கர்ம வினைகளை யோக சாதனைகள் மூலம் குறைக்க முடியும்.அதனுடைய கால கட்டத்தையும் தீர்த்து உங்கள் ஆத்மாவை மேல் நிலைக்குக் கொண்டு செல்லலாம். அதனால் தான் அதை சாதனா உண்மையான செல்வம் என்கிறோம்.எப்போது உங்களுக்கு அவசியமோ அப்போது நீங்கள் அதைச் செய்ய விரும்புவதில்லை. இது ஒரு சிக்கலான ஒன்று. இது எப்படியென்றால் ஒரு நோயாளி மருந்து சாப்பிட விரும்பவில்லை என்பது போல். குளிரில் நடுங்கும் ஒருவரைக் கூப்பிட்டு ஒரு கம்பளி ஆடையை அணியக் கொடுக்கும்போது எனக்கு கம்பளி ஆடை அணிய விருப்பமில்லை என்று அவர் மறுப்பது போல். நீங்கள் என்ன செய்ய முடியும்?

இது அப்படித்தான். எப்போது தேவையோ உங்கள் மனம் அதைச் செய்வதைத் தடுக்கிறது. நம் மனம் நமக்குச் சிறந்த நண்பனாகவும், கொடிய பகைவனாகவும் செயல் படுகிறது. உங்கள் பகைவன் வெளியில் இல்லை. உங்களுடனே இருக்கிறான். எனவே உங்கள் மனத்துடன் நல்ல சம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதைத் தான் நாங்கள் இங்கு செய்கிறோம். (பார்ட்2 பயிற்சி). தேய்த்துத் தேய்த்து மெருகேற்றுகிறோம்.

கேள்வி: நான் 10 வருடமாக இந்தப் பாதையில் செல்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு இன்னும் சில தடைகள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கீழ் உள்ள சக்கரங்களில் சக்தி குறைவாக இருக்கிறது. இது மாறி நன்மையாக முடிய வாய்ப்பு இருக்கிறதா?
ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: கட்டாயம். நீ மகிழ்ச்சியாக இருந்தால் நீ சரியான திசையில் செல்கிறாய். கீழ் சக்கரங்களின் சக்தி பற்றி கவலைப் பட வேண்டாம். அதை அதிகரிக்க ஏன் விரும்புகிறாய். அதை அப்படியே விட்டு விடு. இயற்கை அதன் வேலையைச் செய்யட்டும்.

கேள்வி: நாம் வாழும் கலையில் செய்வது எல்லாம் விழிப்புணர்வு பெற்று ஆத்ம ஞானம் அடைவதற்காகவா, அல்லது நல்லுணர்வுகளை அநுபவிக்கவா? நான் விழிப்புணர்வு பெற விரும்புகிறேன். 

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: இது ஒரு மகா சமுத்திரம் மாதிரி. எல்லாமே கிடைக்கும். நீ கடற்கரையில் நடக்க விரும்பினால் வரலாம். நீ நீரில் ஆழமாக மூழ்கி எண்ணெய் எடுக்க விரும்பினால் அதுவும் கிடைக்கும். வழி ஒரு சமுத்திரம் போல. உப்பு எடுக்கலாம். எண்ணெய் எடுக்கலாம். மீன் பிடிக்கலாம்.கோடி கோடி பொருட்கள் கிடைக்கும். கட்டாயமாக ஆத்ம ஞானமும் அடங்கியிருக்கிறது. நீ அதை நாடினால் எனக்கு மகிழ்ச்சி. எல்லா மக்களும் ஆத்ம ஞானத்தை நாடவேண்டும். நீ அதை நாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. நீ இங்கு சிறிய சுகத்தை நாடி வரவில்லை. அது மிகவும் நல்லது.

வா. நிறைய காரியங்கள் செய்வோம்.